இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் வீதி விபத்துகளினால் 965 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜனவரி 1 முதல் மே 13 வரை நாடு முழுவதும் இடம்பெற்ற வீதி விபத்துகளினால், மேற்படி நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காலப்பகுதியில் 902 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக 1,842 பாரிய விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிகளின் கவனக் குறைவு, மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் முறையற்ற வாகன பராமரிப்பு ஆகியவையே பல விபத்துகளுக்குக் காரணம் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்காக நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டத்தை செயல்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளதோடு, இதனூடாக சாரதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அல் வஹ்தா நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில் நடைபெறும் கூட்டு உழ்ஹிய்யா (குர்பானி) விநியோகம் தொடர்பாக,
புத்தளம் எருக்கலம்பிட்டியில் வருடா வருடம் இடம்பெறும் கூட்டு குர்பானி (உழ்ஹிய்யா) கடமை, இம்முறையும் அல் வஹ்தா நலன்புரி அமைப்பினால் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்னுலாப்தீன் அபுல்ஹைர் தெரிவித்துள்ளார்.
அல் வஹ்தா நலன்புரி அமைப்பினால் புத்தளம் எருக்கலம்பிட்டியில் நீண்ட காலமாக கூட்டு குர்பானி (உழ்ஹிய்யா) கடமை பல சிரமங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டு வருவதினாலும், ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நேர்த்தியாக குர்பானி இறைச்சி பகிரப்பட்டு வந்தமையாலும் ஊர் மக்கள் அனைவரும் அல் வஹ்தா நலன்புரி அமைப்பை இன்றுவரை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இம்முறையும் குறித்த கூட்டு குர்பானி (உழ்ஹிய்யா) கடமையை நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளதாகவும், உழ்ஹிய்யா பிராணியான மாடுகளை நேரடியாக தர விரும்புபவர்கள் தந்துதவுமாறும், அறுப்பு கூலியாக ரூபாய் 13,000/- தை செலுத்துமாறும் குறித்த அமைப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாடுகளை நேரடியாக பெற்றுத்தர முடியாதவர்கள் ஒரு மாட்டுக்கான முழுத்தொகை மற்றும் அறுப்புக் கூலியுடன் 190.000/- ரூபாவை செலுத்த முடியும் எனவும், 7 பேர் சேர்ந்து கூட்டாக வழங்க விரும்பினால் ஒரு பங்கிற்கான தொகை 27,000 ரூபாவை செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் உழ்ஹிய்யா கடமையை கூட்டாக நிறைவேற்ற பூரண ஒத்துழைப்பு வழங்கி எமது மக்கள் நன்மையடைய பாரிய பங்களிப்பு செய்தமைக்காக குர்பானி கடமைக்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் தமது தூய்மையான நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அல் வஹ்தா நலன்புரி அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்ஷா அல்லாஹ் வழமை போன்று இம்முறையும் உழ்ஹிய்யாக் கடமையை கூட்டாக செய்ய முன்வந்துள்ளமையால் தங்களின் உழ்ஹிய்யா பிராணியான மாடுகளை ரூபாய் 13,000 கூலியுடன் நேரடியாக தந்துதவுமாறும் அல்லது அதற்கான பணம் கூலியுடன் 190.000 ரூபா அல்லது 7 பேர் சேர்ந்து கூட்டாக வழங்க விரும்பினால் ஒரு பங்கிற்கான பணம் 27,000 ரூபாவை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 31.05.2025 திகதிக்கு முன்னர் சங்க உறுப்பினர்களிடம் ஒப்படைத்து இச்சேவைக்கு உதவுமாறும் அல் வஹ்தா நலன்புரி அமைப்பு வேண்டிக்கொண்டுள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 84 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த சூழலில், ‘போரை நிறுத்தும் சூழ்நிலை இருக்காது. ஒரு தற்காலிக போர் நிறுத்தம் நடக்கலாம். வரும் நாட்களில் ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழைகிறது’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார்.
இந்நிலையில் காசாவில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் 25 பேர் உற்பட 84 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதில் மருத்துவமனைகள் மற்றும் அகதிகள் முகாம்கள் மீதான தாக்குதல்களும் அடங்கியுள்ளதுடன், உணவு விநியோகங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் வேண்டுமென்றே தடுப்பதன் மூலம் காஸா மக்களின் பட்டினியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்று ஐ.நா. உதவித் தலைவர் டாம் பிளெட்சர் கவலை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல், ஹமாஸ் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தி இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மோதல் தொடங்கியதிலிருந்து காசாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 90% பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் இனப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படுகின்றமை தொடர்பில் கண்டனம் தெரிவிப்பதாகவும் வௌிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (14) கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து, ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அத்தகைய நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதிக்கு இலங்கை அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார்.
இத்தகைய நடவடிக்கைகள், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்கி, குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த சில தினங்களாக நாட்டில் பேசும் பொருளாக மாறியுள்ள கனடாவில் இனப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றமையை அடுத்து குறித்த அவசர சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிர் நீத்த மக்களை நினைவுகூர்ந்து இம் மாதம் 18 ஆம் திகதி வரை வட மாகாணத்தின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களில் நான்காவது நாள் கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா அவர்களினால் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி இன்றைய தினம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இருநூற்று பதினெட்டு (218) கிலோகிராம், எண்ணூறு (800) கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகும் கடந்த 11 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின், இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தினால் பேசாலை கடற்கரை பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று அவதானித்து சோதனை செய்யப்பட்டது.
குறித்த டிங்கி படகில், எட்டு (08) பொதிகளில் பொதிச்செய்யப்பட்டிருந்த இருநூற்று பதினெட்டு (218) கிலோகிராம், எண்ணூறு (800) கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றபட்டது.
கடற்படையின் நடவடிக்கைகளால் டிங்கி படகை கரைக்கு கொண்டு வர முடியாததால், கடத்தல்காரர்கள் பேசாலை கடற்கரையில் டிங்கி படகுடன் கேரள கஞ்சாவினை கைவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றதோடு, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு எண்பத்தேழு மில்லியன் (87) ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு (01) ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
உப்பளத்தின் முகாமைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டன.
எமக்கான ஒரு தொழிற்சங்கத்தை இயங்க விடுவதில்லை, ஊழியர்களின் நலனுக்காக யாராவது குரல் கொடுத்தால் அவரை பிடித்து அடித்து வெளியே துரத்துங்கள் என கூறுவார்கள். இது அரச நிறுவனம் போல் இல்லாது முதலாளித்துவத்துடன் கூடிய தனியார் நிறுவனம் போலவே செயற்படுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்களின் நலனுக்காக யாராவது அதிகாரி இங்கு குரல் கொடுத்தால் உடனே அவரை இடமாற்றம் செய்கின்றனர். பல வருடங்கள் இங்கு பணியாற்றியவர்களுக்குக் கூட மதிப்பதில்லை. இங்கு பணிபுரியும் முகாமையாளர் உள்ளிட்ட பலர் உப்பு தொடர்பான அடிப்படை அறிவற்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஏற்கனவே இங்கு பணியாற்றியவர்களின் அனுபவங்களை கூட அவர்கள் கேட்பதில்லை. அப்படி கூறினாலும் அதனை தட்டிக்கழிக்கின்றனர் என ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்ததாவது,
இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை ஹம்பாந்தோட்டை, மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு வைத்து பொதியிட்ட பின்னர் மீண்டும் எமது பகுதிகளுக்கு கொண்டுவந்து விநியோகம் செய்கின்றனர்.
இதனால் இரண்டு போக்குவரத்து செலவு காரணமாக உப்பின் விலையை அதிகரித்து விற்பனை செய்கின்றனர். எமது பகுதியில் விளையும் உப்பினை இங்கேயே வைத்து பொதியிடக்கூடிய வசதி இருந்தும் ஏன் வெளி மாவட்டம் கொண்டு செல்ல வேண்டும்?
மழை பெய்தால் எம்மை வேலைக்கு வரவேண்டாம் என கூறுகின்றனர். ஆனால் மழை பெய்தாலும் இங்கே செய்வதற்கு பல வேலைகள் உள்ளன. ஒரு தொழிற்சாலைக்கு இலாபம் வரும்போது நாங்கள் வேலை செய்கின்றோம், அதுபோல அந்த அந்த தொழிற்சாலைக்கு நஷ்டம் ஏற்படும்போதும் அந்த தொழிற்சாலை அதனை தாங்கிக்கொண்டு எமக்கு வேலையை வழங்கத் தான் வேண்டும். ஆனால் இங்கே அவ்வாறான நடைமுறைகள் காணப்படுவதில்லை.
ரஜ உப்பு என்ற பெயரை தற்போது மாற்றம் செய்து மீண்டும் ஆனையிறவு உப்பு என்ற பெயரில் இயங்குவதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை பொதி செய்த உப்பு பைகளில் ரஜ உப்பு என்றே காணப்படுகிறது. ஆனையிறவு உப்பு என்ற பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.
பெண் ஒருவர் தினமும் 65 அந்தர் (3250 கிலோ) உப்பு அள்ள வேண்டும் என கூறி அவர்களை மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர்.
இலாபத்தை பகிர்ந்து அளிப்பதாக அமைச்சர் கூறியிருந்தார் ஆனால் அதனை பகிர்ந்து வழங்குவதற்கு யாரும் தயாராக இல்லை, அந்த இலாபத்தை எமக்கு பகிர்ந்தளிக்கின்றனர் இல்லை.போன்ற குற்றச் சாட்டுகளை முன்வைத்தே போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் பொலீஸாருடன் சென்று உப்பள முகாமையாளரை சந்தித்து உரையாடிய, பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது உப்பள தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் உரிய மட்டத்தின் கவனத்திற்கு விடயத்தை கொண்டு செல்வேன் எனத் தெரிவித்தார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று புர்கினா பாசோ. இந்ந நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
பயங்கரவாத அமைப்புகள் சில ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வடக்கு புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 130க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அல் கொய்தா பின்னணி கொண்ட பயங்கரவாத அமைப்புகள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நூலகம் ஒன்று எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இன்று உங்கள் பாடசாலைக்கு நன்கொடையாக அமைத்து வழங்கப்பட்டுள்ள நூலகத்தை உரிய வகையில் பயன்படுத்தி உங்கள் கிராமத்துக்கும் – சமூகத்துக்கும் நற்பெயரைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மாணவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ‘மாணிக்கம் பூமணி ஞாபகார்த்த நூலகம்’ இன்று செவ்வாய்க்கிழமை (13.05.2025) திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் ந.வில்லியம் சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் சிறப்பு விருந்தினராகவும், தீவக வலய கல்விப் பணிப்பாளர் தி.ஞானசுந்தரன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
ஆளுநர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி நூலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்து நினைவுக் கல்லையும் திரை நீக்கம் செய்தார்.
இதன் பின்னர் மேடை நிகழ்வுகள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றன. இதன்போது ‘நெய்தலின் ஊற்று’ என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், நூலகத்தை கட்டுவதற்கு அன்பளிப்புச் செய்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர். 2021ஆம் ஆண்டு நூலகத்துக்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டு அண்ணளவாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபா செலவில் குறித்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தனது பிரதம விருந்தினர் உரையில் ஆளுநர் தெரிவித்ததாவது,
இந்தப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த பின்னர் கட்டுமானங்கள் எல்லாம் சீர்குலைந்துபோனது. இடப்பெயர்வுடன் பலர் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். அப்படிச் சென்றவர்கள் இன்று எமது கிராமமும், சமூகமும் முன்னேற வேண்டும் என்பதற்காக இத்தகைய அளப்பெரிய உதவியைச் செய்திருக்கின்றார்கள்.
நான் எல்லா இடங்களிலும் ஒரு விடயத்தை திரும்பத் திரும்பக் கூறிவருகின்றேன். தலைமைத்துவம் எங்கு சரியாக இருக்கின்றதோ அந்த நிறுவனம் உயர்வை நோக்கிச் செல்லும். இது அரசாங்க நிறுவனத்துக்கு மாத்திரமல்ல தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
சில பாடசாலைகளின் அதிபர்கள் கணக்குகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையையுடன் நடந்துகொள்வதில்லை. அவ்வாறான அதிபர்களின் தலைமைத்துவக் குறைபாட்டால் அந்தப் பாடசாலைக்கு உதவிகளைச் செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. அதனால் பாடசாலை பௌதீக ரீதியிலோ எந்தவொரு வகையிலுமோ வளர்ச்சியடைய முடியாத நிலைமை இருக்கின்றது. ஆனால் உங்கள் பாடசாலையின் அதிபர் மீது நம்பிக்கை வைத்து புலம்பெயர் சமூகம் பல உதவிகளைச் செய்திருக்கின்றது. இதைப் பயன்படுத்தி நீங்கள் முன்னேற வேண்டும்;.
பாடசாலைக்கான வகுப்பறையின் தேவை உள்ளிட்ட சில விடயங்களை அதிபர் கோரியிருந்தார். உங்களின் கல்வித் தரம் உயர்வதற்கு எங்களாலான முயற்சிகளைச் செய்வோம். அடுத்த ஆண்டிலாவது உங்களின் கோரிக்கைளை நிறைவேற்றுவதற்கு நாம் நிச்சயம் முயற்சிப்போம், என்றார் ஆளுநர்.
மேடை நிகழ்வுகளைத் தொடர்ந்து பாடசாலையில் புலம்பெயர் சமூகத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடமும் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களுக்கிடையில் கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற அணிக்கு 11 பேர் பங்குபற்றிய, மட்டுப்படுத்தப்பட்ட 6 ஓவர்களைக் கொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் 2013 ஆண்டு அணி சாம்பியன் ஆனது.
சுமார் 25 அணிகள் பங்குகொண்ட சீசன் 2 சுற்றுத்தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி 2013 ஆண்டு அணி வெற்றிபெற்று மகுடம் சூடிக்கொண்டது.
தொடரின் ஆரம்பம் முதல் அபாரமான திறமையை வெளிப்படுத்திய 2005 ஆண்டு அணி மற்றும் 2013 ஆண்டு அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தியது.
இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 2013 ஆண்டு அணியினர் நிரணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் அபாரமாக துடுப்பெடுத்தாடி 83 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 2005 ஆண்டு அணியினர் 6 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 36 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை சந்தித்ததுடன், தொடரின் இரண்டாம் இடத்தையும் தட்டிப்பறித்தது.
தொடரில் சாம்பியன் ஆன 2013 ஆண்டு அணியினருக்கு 50 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும், வெற்றிக்கேடயமும் வழங்கப்பட்டதுடன், இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட 2005 ஆண்டு அணியினருக்கு 30 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும், கேடயமும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் நடப்பு சாம்பியனான 2004 ஆண்டு அணியினர் இம்முறை 2003 ஆண்டு அணியுடன் மோதி தோல்வியை சந்தித்து தொடரை விட்டு வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.