Saturday, March 28, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 12

இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்? இரகசிய ஆவணங்களால் பரபரப்பு!

0

கப்பலில் இருந்து மீட்கப்பட்டு இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈரானிய மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா, இந்த அழுத்தத்தை கொடுத்து வருவதாக, கசிந்துள்ள உள்நாட்டு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை, காலியில் இருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானின் ‘IRIS Dena’ போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் பல மாலுமிகள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் சிக்கியிருந்த ஈரானிய கடற்படை துணைக்கப்பலான ‘Booshehr’-ல் இருந்த 208 மாலுமிகளை இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டது.

இந்த நிலையில்,கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொறுப்பாளர் ஜேன் ஹொவெல், இலங்கை அரசாங்கத்திடம் இந்த மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

அவர்களை ஈரானுக்கு அனுப்பினால், அவர்கள் ஈரானின் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்பதால், அவ்வாறு செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் உள்ள இஸ்ரேலியத் தூதருடனான கலந்துரையாடலின் போது, கொழும்பில் தங்க வைக்கப்படுள்ள மாலுமிகளை ஈரானுக்கு அனுப்பும் திட்டம் இல்லை என்றும், அவர்களை மாற்று திட்டம் ஒன்றுக்கு ஊக்குவிப்பது குறித்து ஏதேனும் பேச்சுவார்த்தைகள் உள்ளதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் அந்த ஆவணங்கள் தெரிவிப்பதாக, ரொயட்டர்ஸ் கூறியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ள போதும் அது தொடர்பில் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்  எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களுக்கு எச்சரிக்கை!

0

நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினால் நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். 

ஹைஃபா (Haifa), நஹாரியா (Nahariya), எக்கர் (Acre), கலிலி (Galilee), அஃபுலா (Afula), கர்மேல் மலைத்தொடர் (Carmel Mountains), நாசரேத் (Nazareth), திபேரியா (Tiberias) உள்ளிட்ட வடக்கு பிராந்தியங்களில் வசிக்கும் மக்கள், லெபனான் திசையிலிருந்து வரக்கூடிய தாக்குதல்கள் மற்றும் நாட்டின் உட்பகுதிகளில் சில குழுக்களால் முன்னெடுக்கப்படக்கூடிய ஆத்திரமூட்டும் சம்பவங்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் என நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், தற்போது ஈரானில் இருந்து முன்னெடுக்கப்படும் தாக்குதல்களில் குறைவு காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

வடக்கு இஸ்ரேல் பிராந்தியத்தில் 9,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதால், அந்நாட்டு பாதுகாப்புப் படைகள், அரச ஊடகங்கள், PIBA நிறுவனம் மற்றும் தூதரகம் வழங்கும் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ஏதேனும் தாக்குதலின் போது இஸ்ரேலிய எம்புலன்ஸ் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், நீங்கள் இருக்கும் இடத்தை (Location) குறிப்பிட்டு 101 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் அச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. 

தேவையான மேலதிக அறிவுறுத்தல்களுக்கு தூதரகத்தின் WhatsApp இலக்கமான 00972-559305731 ஊடாக வாரத்தின் 7 நாட்களும் தொடர்புகொள்ள முடியும்.

தெஹ்ரானின் நிலத்தடி இராணுவப் பதுங்கு குழியை அழித்த இஸ்ரேல்!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி கமேனி பயன்படுத்திய தெஹ்ரானில் உள்ள நிலத்தடி இராணுவப் பதுங்கு குழியை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தகர்த்துள்ளன. இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளியை IDF சனிக்கிழமை பகிர்ந்துள்ளது.

‘ஆபரேஷன் ரோர் ஆஃப் தி ஹாரியர்’ (Operation Roar of the Harrier) என்ற நடவடிக்கையின் கீழ், சுமார் 50 இஸ்ரேலிய விமானப்படை போர் விமானங்கள் தெஹ்ரானில் உள்ள ஈரானிய தலைமை வளாகத்திற்கு கீழே இருந்த இந்த நிலத்தடி பதுங்கு குழியை அழித்தன. அவசர காலங்களில் போர் நடவடிக்கைகளை வழிநடத்துவதற்காக ஒரு பாதுகாப்பான இடமாக இது கட்டப்பட்டிருந்தது. கமேனியின் மறைவிற்குப் பிறகு, இந்த வளாகம் ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகளின் தளமாகச் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏழாவது நாளை எட்டியுள்ள இந்தப் போர், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் வேகமாகப் பரவி, உலகளாவிய எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரானில் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. இதனை “ஆட்சியின் உள்கட்டமைப்பை” குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது. லெபனான் மற்றும் ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ள இஸ்ரேல், போரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்போவதாக உறுதியளித்துள்ளது.

தொடர் தாக்குதல்களால் ஈரானின் சாதாரண மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நெட்பிளாக்ஸ் (Netblocks) அமைப்பின் தகவல்படி, ஈரானில் இணைய இணைப்பு ஒரு சதவீதமாகக் குறைந்துள்ளது, இது போரின் பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியேறுவதைத் தடுக்கிறது. தெஹ்ரானின் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டாலும், பாதுகாப்புப் படைகள் மக்கள் மீது கடுமையான கட்டுப்பாட்டை வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியை பாராட்டி ரிஷாட் எம்.பி நன்றி தெரிவிப்பு!

0

இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்தவர்களைக் காப்பாற்றியதோடு, ஈரானின் மற்றொரு கப்பலை இலங்கைத் துறைமுகத்தில் தரிப்பதற்கும் அதில் பயணம் செய்த 208 பேருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும் மனிதாபிமான அடிப்படையில் தீர்மானம் மேற்கொண்ட, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானத்தின் மூலம் ‘மனிதாபிமானமே எதிலும் முதன்மையானது’ என்பதை – அவர் நிரூபித்துள்ளார் என்றும், இது – இலங்கையர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் தருணம் எனவும் றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

”மத்திய கிழக்கில் நடந்து கொண்டிருக்கும் யுத்தம்  – ஈரான் மீது திணிக்கப்பட்டது. அந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள், அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தருணத்தில் ஈரானின் இரண்டு கப்பல்களிலும் பயணித்த மொத்தம் 240 ஈரானிய பிரஜைகளை, ஜனாதிபதியின் துணிவான முடிவின் மூலம் காப்பற்றக் கிடைத்தமையினால், உலக வரலாற்றில் இலங்கை உயர்ந்து நிற்கிறது” என்றும் றிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.

‘இந்த விவகாரம் தொடர்பில் பொய்யான, பயமுறுத்தும் நோக்குடனான அதிகமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நாட்டின் கௌரவத்தையும் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையிலும் நாடென்ற வகையில் சர்வதே உடன்பாடுகளுக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில்தான் நாம் இந்த தலையீட்டை செய்தோம்.

இது நாடென்ற வகையில் மிகவும் தைரியமான மனிதாபிமான முன்னெடுப்பாகும்’ என்று, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக் தெரிவித்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள றிஷாட் பதியுதீன்; “இதன் மூலம் மனிதாபிமானமுள்ள தலைமைத்துவத்தின் பண்பினை – ஜனாதிபதியிடத்தில் நான் காண்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

‘ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையினால், அவர் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள நேரிடும்’ என்று வெளியிடப்படும் குரூரமான கருத்துக்களை, தான் கடுமையாக எதிர்ப்பதாகவும், ”ஒரு நன்மையை செய்யும் போது, அதன் பின்விளைவுளை கருணையுள்ள மனிதர்கள் ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள்” என்றும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுத்தீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

”இலங்கையின் மிக நீண்டகால நண்பராக ஈரான் இருந்து வருகிறது. இலங்கை பெரும் அனர்த்தங்களில் சிக்கித் தவித்த போதெல்லாம், ஓடிவந்து ஈரான் உதவியிருக்கிறது. அந்த வகையிலும், ஈரானுக்கு உதவ – இலங்கை கடமைப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானின் கப்பல்களில் இருந்த நூற்றுக்கணக்கான மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்திய படையினரையும் பராட்டி – நன்றி தெரிவிப்பதாகவும் றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

உயரும் எரிபொருள் விலை குறித்து கவலையில்லை என டிரம்ப் அறிவிப்பு

0

ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை குறித்து தமக்கு எவ்வித கவலையும் இல்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தமக்கு ராணுவ நடவடிக்கைகளே தற்போதைய முன்னுரிமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோல் நிலையங்களில் உயர்ந்து வரும் விலைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “எனக்கு இது குறித்து எந்த கவலையும் இல்லை. போர் முடிந்தவுடன் விலைகள் மிக வேகமாக குறையும். பெட்ரோல் விலை சற்று உயர்வதை விட இந்த ராணுவ நடவடிக்கை மிகவும் முக்கியமானது,” என்று கூறினார். கடந்த மாதம் தனது உரைகளில் பெட்ரோல் விலை குறைவை ஒரு சாதனையாகப் பேசிவந்த டிரம்பின் இந்த கருத்து, அவரது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து ஒரு மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

அதிபரின் பொதுவான கருத்துக்கள் இவ்வாறு இருந்தாலும், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இந்த விலை உயர்வு குடியரசுக் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசி வைல்ஸ், விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறினால் அது தேர்தலில் “பேரழிவை” ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

நிர்வாகத்தின் திரைமறைவு நடவடிக்கைகள்

விலை உயர்வைச் சமாளிக்க வெள்ளை மாளிகையின் எரிசக்தி மற்றும் தேசிய பாதுகாப்பு குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசி வைல்ஸ் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் ரைட் ஆகியோர் எண்ணெய் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கூட்டாட்சி பெட்ரோல் வரி ரத்து மற்றும் எத்தனால் கலப்பு தொடர்பான சுற்றுச்சூழல் விதிமுறைகளைத் தளர்த்துவது போன்ற விருப்பங்கள் குறித்து அதிகாரிகள் விவாதித்து வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை போர் தொடங்கியதில் இருந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 16% உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் தேசிய சராசரி பெட்ரோல் விலை கடந்த வாரத்திலிருந்து 27 காசுகள் உயர்ந்து ஒரு காலன் 3.25 டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 காசுகள் அதிகமாகும்.

உலகின் மிகப்பெரிய அவசரகால கச்சா எண்ணெய் சேமிப்பிலிருந்து (Strategic Petroleum Reserve) தற்போதைக்கு எண்ணெயை எடுக்கப் போவதில்லை என்று டிரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், ஈரானிய கடற்படை முடக்கப்பட்டிருப்பதால், எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை நான்கு முதல் ஐந்து வாரங்கள் வரை நீடிக்கும் என்று டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்துள்ள நிலையில், போரின் இறுதி இலக்கு குறித்து தெளிவான விளக்கங்கள் இல்லை என பாதுகாப்பு நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதற்காக இனி சமாதான நீதவான் பதவி இல்லை!

0

சமாதான நீதவான் பதவி இனி அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படமாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். 

இன்று (06) பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர், ஒரு சமாதான நீதவான் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு தற்போது முறையான வழிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

அதேபோல், நாடு முழுவதிலும் உள்ள சமாதான நீதவான்களின் தகவல்கள் அடங்கிய தரவுத்தளம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் ஒரு பிரதியை அத்தாட்சிப்படுத்தும் நபர் உண்மையான சமாதான நீதவான்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். 

இனிவரும் காலங்களில் இப்பதவிக்கான நியமனங்களை வழங்கும்போது, அதிகபட்ச வயது எல்லை 75 வயது வரை மட்டுமே அமையும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இனி இந்தப் பதவி அரசியல் ரீதியாக வழங்கப்படமாட்டாது. அதேபோல், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சுய விபரக் கோவையை புதுப்பிப்பதற்கான புதிய முறையை நாம் உருவாக்கியுள்ளோம். 

கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகம் ஊடாக இதனை உறுதிப்படுத்தும் நடைமுறை பின்பற்றப்படும். 

தவறிழைக்கும் சமாதான நீதவான்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய வட்ஸ்அப் இலக்கம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை நாம் தயார் செய்துள்ளோம். 

முன்னர் நியமிக்கப்பட்டவர்களின் பதவிகளை உடனடியாக ரத்து செய்வது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. 

சிலர் 5-10 வருடங்களாக அனுபவம் பெற்றுள்ளனர். ஆனால், மிக விரைவில் தரவுத்தளம் ஒன்றை உருவாக்கும் பணியை முன்னெடுப்போம். அப்போது, எங்கு முத்திரை இடப்பட்டாலும் அவர் தகுதியுள்ள சமாதான நீதவான்தானா என்பதை எம்மால் அறிய முடியும். 

சிக்கலான ஆவணங்களை வாசித்துப் புரிந்துகொள்வதற்கு முறையான மனநிலை மற்றும் ஆரோக்கியம் இருக்க வேண்டும் என்பதால், எதிர்கால நியமனங்களுக்கான வயது எல்லை 75 என குழு தீர்மானித்துள்ளது. 

அதனை மாற்றுவதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

குவைத்தில் உள்ள தூதரகத்தை மூடும் அமெரிக்கா!

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அதற்கமைய தூதரக ஊழியர்களுக்கு அங்குள்ள முக்கிய ஆவணங்களை மாற்றவும், ரகசிய தரவுக் கட்டமைப்பில் உள்ள தரவுகளை முற்றிலுமாகத் அழிப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குவைத்தின் வான்வெளியில் ஊடுருவிய ஏவுகணைத் தாக்குதலைத் தங்கள் நாட்டு வான் பாதுகாப்புப் படை முறியடித்துள்ளதாக குவைத் இராணுவம் தெரிவித்துள்ள நிலையில், இந்த வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

87 ஈரான் மாலுமிகள் பலி – போர்க்களமாகிறதா இந்து சமுத்திரம்?

0

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டார்பிடோ (torpedo) தாக்குதலில் 87 பேர் உயிரிழந்துள்ளனர்,. இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான போரின் எல்லையை விரிவுபடுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை அதிகாலை, இலங்கையின் காலி (Galle) துறைமுகத்திலிருந்து 19 கடல் மைல் தொலைவில் IRIS Dena என்ற ஈரான் போர்க்கப்பல் அமெரிக்காவினால் மூழ்கடிக்கப்பட்டது,. சர்வதேச கடல் பகுதியில் இப்போர் கப்பல் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்த வேளையில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் இதனைத் தாக்கியதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) உறுதிப்படுத்தியுள்ளார். பென்டகன் வெளியிட்ட வீடியோ ஆதாரத்தின்படி, கப்பலின் பின்புறத்தில் ஏற்பட்ட பெரும் வெடிப்பினால் அது கடலில் மூழ்கியது தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்து இதுவரை 32 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் 87 உடல்கள் மீட்கப்பட்டு பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன,. காணாமல் போயுள்ள எஞ்சிய 10 பேரைத் தேடும் பணியில் இலங்கை இராணுவ மீட்புக் குழுவினருடன் இணைந்து இந்தியக் கடற்படையும் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை கடற்பரப்பில் உள்ள இரண்டாவது ஈரான் கப்பலில் இருப்பவர்களின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இலங்கை அரசாங்க செய்தித் தொடர்பாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்,.

இந்தத் தாக்குதல் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “அமெரிக்கா தான் செய்த இந்தச் செயலுக்காகப் கசப்பான விளைவுகளைச் சந்திக்கும்” என எச்சரித்துள்ளார். சுமார் 130 மாலுமிகளைக் கொண்டிருந்த இந்த IRIS Dena போர்க்கப்பல், பிப்ரவரி 18 முதல் 25 வரை வங்காள விரிகுடாவில் இந்தியா நடத்திய கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு செல்ல ஈரான் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதற்கான கால அவகாசம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பிராந்தியத்தில் பெரும் பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20,000 அமெரிக்கர்கள் கடும் அச்சத்தில் தாயகம் திரும்பினர்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சுமார் 20,000 அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று தொடங்கப்பட்ட இந்த வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, மேலும் பலர் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் அல்லது தற்போது நாடு திரும்பும் பயணத்தில் உள்ளனர். இதற்கான சிறப்பு விமானங்கள் மற்றும் தரைவழிப் போக்குவரத்து வசதிகளை அமெரிக்க அதிகாரிகள் ஒருங்கிணைத்து வரும் நிலையில், இந்த வெளியேற்ற நடைமுறைகளில் தெளிவு இல்லை என விமர்சனங்களும் எழுந்துள்ளன.

எண்ணெய் சந்தையில் கடும் பாதிப்பு:

மத்திய கிழக்கில் நிலவும் இந்த போர்ச் சூழல் காரணமாக, உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் பெஞ்ச்மார்க் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து ஒரு பேரல் 78.88 டாலராக எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாகும். அதேபோல், சர்வதேச அளவீடான பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலையும் 3.6 சதவீதம் அதிகரித்து ஒரு பேரல் 84.34 டாலராக உயர்ந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது:

இந்த மோதலின் ஒரு பகுதியாக, ஈரான் நாடு ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடியுள்ளது. இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் வர்த்தகம் மற்றும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஏற்றுமதியாகும் கணிசமான அளவு திரவ இயற்கை எரிவாயு இந்த குறுகிய கடல் பாதை வழியாகவே நடைபெறுகிறது.

உலகளாவிய தினசரி எண்ணெய் நுகர்வில் சுமார் 20 சதவீதம் (ஏறத்தாழ 20 மில்லியன் பேரல்கள்) இந்தப் பாதையைக் கடந்து செல்வதால், இதன் மூடல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

100 நாட்கள் கடந்தும் சின்ன நாகவில்லு மக்கள் போராட்டம்!

0

தித்வா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு முறையான தீர்வு கோரியும், தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற வலியுறுத்தியும் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட தித்வா புயல் காரணமாக புத்தளம், வண்ணாத்திவில்லு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கரைத்தீவு சின்ன நாகவில்லு பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இன்றுடன் 102 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அப்பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ள நீர் இதுவரையில் வெளியேற்றப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 26 குடும்பங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த வகையில்,

  • வெள்ள நீர் வெளியேற்றம்: நூறு நாட்களைக் கடந்தும் வடியாமல் இருக்கும் வெள்ள நீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • இழப்பீடு வழங்கல்: புயல் மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்ட சொத்து மற்றும் வாழ்வாதார இழப்புகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.
  • நிரந்தர தீர்வு: தொடர்ச்சியாக வெள்ள அபாயத்திற்குள்ளாகும் இப்பகுதி மக்களுக்குப் பதிலாக, பாதுகாப்பான வேறு இடங்களில் வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள், இறுதியில் வண்ணாத்திவில்லு உதவி பிரதேச செயலாளர் எஸ். பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் தமக்கு, அதிகாரிகள் இனியாவது விரைவான தீர்வை வழங்க வேண்டும் என்பதே சின்ன நாகவில்லு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.