Sunday, August 3, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 121

இசைக் கச்சேரி தொடர்பில் டில்வின் பளிச் பதில்

0

அண்மையில் கல்கிஸ்ஸ ஹோட்டலில் இடம்பெற்ற இசை இரவு நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு, டெய்லி மிரர் நாளிதழுடனான கலந்துரையாடலில், இன்பத்தை அனுபவிக்கும் ஒரு நபராக இந்த சந்தர்ப்பத்தை அனுபவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா கருத்து தெரிவித்திருந்தார்.

“.. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிரதமர் ஹரினி அமரசூரிய, சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நான் மற்றும் பலரும் அழைக்கப்பட்டோம். கட்சியின் மற்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டனர். அலுவலகத்திற்கு வந்து அழைப்பிதழ் கொடுத்தனர்.

ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு அமைப்பிடம் இருந்து அழைப்பு வந்தால் அதில் கலந்து கொள்கிறோம். திருமண விழாவிற்கு அழைப்பிதழ் வந்தால் நீங்களும் தான் அதில் கலந்து கொள்கின்றீர்கள்.

அங்கே எங்களுக்கு ஒரு மேசை ஒதுக்கப்பட்டிருந்தது. டிக்கெட் 50,000 ரூபாய் என்பது உண்மைதான். ஆனால் ரூ.30,000, ரூ.15,000 மற்றும் ரூ.7,500 விலையில் டிக்கெட்டுகள் இருந்தன.

அதில் நாங்கள் கலந்து கொண்டோம். அதை நாங்கள் ரசித்தோம். நாங்கள் ரசனையுள்ள மக்கள்..” எனத் தெரிவித்திருந்தார்.

எரிபொருள் விலையை 50 ரூபாவால் குறைக்க கோரிக்கை

0

எரிபொருள் விலையை குறைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாளை மறுதினம் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் எரிபொருள் விலை திருத்தத்தின் போது எரிபொருளின் விலையை 50 ரூபாவினால் குறைக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி எரிபொருள் விலை குறைப்பு குறித்து தேர்தல் மேடைகளில் செய்த பிரசாரம் மெய்ப்பிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களைப் பற்றி பேசுவதற்காகவே தம்மை மக்கள் பாராளுமன்றிற்கு தெரிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கொடியுடன் வந்த படகில் இருந்தது என்ன?

0

இலங்கைக் கொடியுடன் இரண்டு படகுகளில் இருந்து 500 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் என்ற போதைப்பொருளுடன் சிலர் கைது செய்யப்பட்டதாக இந்திய கடற்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரபிக்கடலில் பயணித்த குறித்த இரண்டு படகுகளும் இந்திய மற்றும் இலங்கை கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டன.

சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை மற்றும் இரண்டு படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து அதிரடி தகவல்!

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில் நேற்று (27) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அந்தத் திகதியை பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான குறிப்பிட்ட திகதி தீர்மானிக்கப்படவில்லை எனவும், எதிர்வரும் நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதால், ஆணைக்குழு அதற்கு தயாராகி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 5 மத்ரசா மாணவர்களின் உடல்கள் மீட்ப்பு

0

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதில் காணாமல் போயிருந்த 6 பாடசாலை மாணவர்களில் மேலும் ஒரு மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை ஐந்து மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.எவ்வாறாயினும், காணாமற்போன ஏனைய ஒரு மாணவர், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று (26) மாலை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கி 11 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்திற்குள்ளானது.

மத்ரஸா பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

சீரற்ற காலநிலை காரணமாக அந்த பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த போதும், அதற்குள் அம்பாறை கல்முனை பிரதான வீதி மற்றும் மாவடிப்பள்ளி பாலத்தின் இருபுறமும் மழைநீர் நிரம்பியிருந்தது.

இதன் காரணமாக சம்மாந்துறை பிரதேசத்தில் வசிக்கும் சிறுவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதன்போது சம்மாந்துறை நோக்கி பயணித்த உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள் ஏறியதுடன், மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளம் சூழ்ந்த வீதியின் ஊடாக சென்று கொண்டிருந்த போது, ​​எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது.

உழவு இயந்திரத்தில் இருந்தவர்கள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இருப்பினும், அவர்களில், 5 மாணவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற முடிந்ததுள்ள போதிலும், ஏனையவர்கள் நீரில் அடித்துச் சென்று காணாமல் போயிருந்தனர்.

12 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களும், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரே காணாமல் போயிருந்த நிலையில் அவர்களில் 05 மாணவர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

ஏ.ஆர் ரஹ்மான் குறித்து பகீர் தகவல் வெளியிட்ட மோகினி டே!

0

இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடனான வதந்திகளுக்கு பேஸ் ப்ளேயர் மோகினி டே மெளனம் கலைந்துள்ளார். இது தொடர்பில் வெளியான வதந்திகளை மறுத்துள்ள அவர், தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியில், ஏ.ஆர்.ரகுமான் தனக்குத் தந்தை போன்றவர் என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிந்து வாழவிருப்பதாகக் கடந்த வாரம் அறிவித்த நிலையில், சில மணிநேரங்களிலேயே அவரது இசைக் குழுவின் பேஸ் ப்ளேயர் மோஹினி டேவும், தனது கணவரை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்தார்.

இதனைப் பலரும் தவறாக விமர்சித்ததைத் தொடர்ந்து, ரஹ்மானின் மனைவி சாய்ரா விவகாரத்துக்கான காரணம் தனது உடல்நலம் சரியில்லாமல் மும்பையில் இருப்பதுதான் என்றும், ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள் என்றும் அவர் உலகின் சிறந்த ஆண் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், ரஹ்மான் குறித்து மோகினி டே வெளியிட்டுள்ள காணொளியில், “என் வாழ்க்கையில் தந்தை போன்றவர்கள் மற்றும் முன்மாதிரியான நபர்கள் சிலர் உள்ளனர்.

அவர்களில் ரஹ்மானும் ஒருவர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். என் தந்தை போன்றவர் அவர். எனது தந்தையைவிட சில வயது மட்டுமே குறைவானவர் ரஹ்மான். அவரின் மகளுக்குச் சரியாக என் வயதுதான் இருக்கும்.

அவரது இசைக்குழுவில் 8 ஆண்டுகளாக உள்ளேன். 5 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில்தான் அவரை சந்தித்தேன்.

தயவு செய்து எங்களின் தனியுரிமையை மதிக்கவும். மிகவும் கடுமையான சூழலை வலிகளுடன் கடந்து கொண்டிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இரவு புயலை எதிர்கொள்ளவுள்ள பகுதிகள்!

0

தென்மேற்கு வங்கக்கடலில்  நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து கிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாட்டின் கிழக்கு கரையை அண்மித்து நகர்ந்து இன்று (27) அடுத்த 06 மணித்தியாலங்களில் புயலாக வலுவடையும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும் பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, மத்திய, மேல், வடமேல், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில்  பலத்த காற்றும் வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

மத்ரஸா சென்று வீடு திரும்பிய அந்த பிள்ளைகளுக்கு என்ன ஆனது?

0

அம்பாறை – காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் வெள்ளத்தில் கலப்பை அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 6 சிறுவர்கள் உட்பட 8 பேரை மீட்கும் பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது உழவு வண்டியில் 11 சிறுவர்கள் பயணித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களில் 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 6 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, குறித்த உழவு வண்டியின் சாரதி மற்றும் உதவியாளரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிந்தவூர் பகுதியில் உள்ள மத்ரஸா பாடசாலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாணவர்கள் இந்த அனர்த்தத்தை எதிர்பார்த்து காத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன குழந்தைகளை மீட்கும் பணியில் கடற்படை, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

புதிய பா.உறுப்பினர்களுக்கு ஏன் செயலமர்வு? நடந்தது என்ன?

0

பொதுமக்களின் அபிலாஷைகள் மிகவும் தீவிரமடைந்திருக்கும் நேரத்தில் அந்த அபிலாஷைகளை நிறைவேற்ற பாராளுமன்ற முறைமையைப் பிரயோகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என சபாநாயகர்  கலாநிதி அசோக ரன்வல புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசைமுகப்படுத்தல் செயலமர்வை இன்று (25) ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே சபாநயாகர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் ஊடாக மக்களுக்கு சேவையை செய்வதற்கு பாராளுமன்ற பாரம்பரியம், அரசியலமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளை போன்றவை குறித்து நல்ல புரிதலும், அறிவும் அவசியம் என்பதால் இவ்வாறான செயலமர்வை ஏற்பாடு செய்வது மிகவும் அவசியமானது எனக் குறிப்பிட்ட சபாநாயகர், இதனை ஏற்பாடு செய்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட செயலகத்தின் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இச்செயலமர்வில் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிடுகையில், நாட்டு மக்கள் மிகவும் பலமான பாராளுமன்றத்தைத் தெரிவுசெய்திருக்கும் சூழ்நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றுவதே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பிரதான எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும் என்றார். பாராளுமன்றம் தொடர்பில் மக்களின் அபிப்பிராயத்தை மாற்றும் செயற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல், சமூக பரிமாற்றம் பொது மக்கள் மத்தியில் காணப்பட்ட அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தச் செய்தியைப் புரிந்துகொண்ட நபர்கள் என்ற ரீதியில் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாரிய பொறுப்பு இருப்பதாகக் கூறினார். இதற்கு அமைய அர்ப்பணிப்புடன் பணியாற்ற இந்தச் செயலமர்வு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இம்முறை பாராளுமன்றம் இந்த நாட்டின் வரலாற்றில் தனித்துவமிக்க பாராளுமன்றம் எனவும், பெண்களின் அதிகூடிய பிரதிநிதித்துவமான 22 பெண் உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றமாக அமைவது சாதகமான முன்னேற்றம் எனவும் அவர் தெரிவித்தார்.

திறந்த பாராளுமன்றம் என்ற கருத்தை வலுப்படுத்துவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பை பிரஜைகளுக்கு நெருக்கமாக கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் பாராளுமன்ற முறைமை மற்றும் அதன் மரபுகள் தொடர்பில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 162 பேர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது பத்தாவது பாராளுமன்றத்தின் தனிச்சிறப்பு என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். பாராளுமன்ற முறைமைகள் தொடர்பில் சிறந்த அறிவும் அனுபவமும் கொண்ட அதிகாரிகளின் வளப்பங்களிப்பின் ஊடாக நடத்தப்படும் இச்செயலமர்வை அனைத்து உறுப்பினர்களும் சிறப்பாகப் பயன்படுத்துவார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு பாராளுமுன்ற முறைமைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பில் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன விளக்கமளித்தார்.

இந்தச் செயலமர்வில் பிரதிச் சபாநாயகர்  வைத்தியகலாநிதி மொஹொமட் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர்  ஹேமாலி வீரசேகர, எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச, சபை முதல்வர் அமைச்சர்  பிமல் ரத்னாயக, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர்  வைத்தியகலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம், பாராளுமன்ற செயலகத்தின் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் 10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

“எங்கே அமர வேண்டும் என்று கேட்டேன்.. அப்போது சொன்னார்கள் மறுபுறம் போய் உட்காருங்க. எந்த பிரச்சனையும் இல்லை டொக்டர், நீங்கள் எங்கே வேண்டும் என்றாலும் அமருங்கள் என்று. பிறகு நாம் முன்னே சென்று அமர்ந்தோம்.
எமக்கு கெம்பஸ் சென்று பழக்கம்.. கையை உயர்த்தி பாராளுமன்றத்துக்கு வரவில்லை. எங்கு வேண்டுமானாலும் போய் உட்காரலாம் என்று நினைத்தேன்.

அப்போது நாலு பேர் வந்து என்னுடன் பேசினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் தினமும் உட்காரும் நாற்காலி இது என்று என்னிடம் வந்து சொன்னார்கள். பிறகு மற்றைய நாற்காலியில் உட்காரலாம் என்று நினைத்தேன். நான் 8வது நாற்காலியில் போய் உட்கார எந்த காரணமும் இல்லை என்று யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்

செயலமர்வின் முதலாவது நாளான இன்று 168 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். புதிய பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்போது சம்பிரதாயபூர்வமாக மேற்கொள்ளப்படும் செயற்பாடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் செயலமர்வு நாளை (26) மற்றும் நாளைமறுதினம் (27) ஆகிய தினங்களிலும் தொடரவுள்ளது.

மீண்டும் கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

0

தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வாரம் மீண்டும் கூடவுள்ளது.

அதன்படி தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கூடுகிறது.

பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தேர்தல்கள் ஆணைக்குழு கூடுவது இதுவே முதல் முறையாகும்.

குறிப்பாக, உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இதன்போது தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்தப்படும் என அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, இத்தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனமும் செலுத்தப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு இதுவரை பணம் ஒதுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.