கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (12) அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்ற டிப்பர் லொரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்து தொடர்பாக மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் 68 வயதான வயோதிப பெண் இனந்தெரியாத நபர்களினால் இன்று மாலை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட 1/2 ஏக்கர் திட்டம், ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68 வயதுடைய பெண்னே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் வீட்டில் தனிமையில் இருந்தபோதே இன்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம் எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் அமைப்பின் அனுசரணையில் இயங்கிவரும், எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் மாதர் சங்கத்தினால் இன்றைய தினமும் புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் இலவச நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டது.
புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான இலவச நுளம்பு வலைகளே இவ்வாறு இன்று வழங்கிவைக்கப்பட்டது.
புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் 150 நுளம்பு வலைகள் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புத்தளம் எருக்கலம்பிட்டியில் வசிக்கும் மந்தக்காடு பகுதி மக்களுக்கான 30 இலவச நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டிருந்த நிலையில், புத்தளம் எருக்கலம்பிட்டி B பகுதியில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்களுக்கு எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் மாதர் சங்கத்தினால் இன்றைய தினம் இலவச நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் வருமானம் குறைந்த புத்தளம் எருக்கலம்பிட்டியில் வசிக்கும் மந்தக்காடு பகுதி மற்றும் B பகுதி தவிர்ந்த ஏனைய குடும்பங்களுக்கான நுளம்பு வலைகள் எதிர்வரும் தினங்களில் வழங்கப்பட உள்ளதாக புத்தளம் எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் அமைப்பின் தலைவர் M.J.M. சிராஜ் எமது ஊடகத்துக்கு தெரிவித்தார்.
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர், பெலவத்தையில் உள்ள கல்வி அமைச்சின் முன்பாக இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
சுமார் அரை மணி நேரம் கல்வி அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகள் பின்னர் பேரணியாக சென்று பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொண்டிருந்த கொள்கையினையும், வாக்குறுதிகளையும் தற்போது மீறியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
தற்போது நாடு முழுவதும் சுமார் 35,000 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாகவும், கொள்கை பிரகடன அறிக்கை மூலம் இந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம் அதனை மீறியுள்ளதாக அவர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.
புத்தளம் எருக்கலம்பிட்டியின் உள்ளக வீதியில் உள்ள மினகம்ப விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டு, புதிய வீதி மின் விளக்குகள் பொருத்தும் பணி இன்று புத்தளம் பிரதேசபையினால் மேற்கொள்ளப்பட்டது.
புத்தளம் பிரதேச சபையின் பொத்துவில்லு வாட்டார உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், வழிகாட்டுதலிலும் குறித்த வீதி மின்கம்ப விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.
இன்றைய தினம் புத்தளம் எருக்கலம்பிட்டியின் A பகுதியில் உள்ள சுமார் 26 மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டு, இவ்வாறு மின் விளக்குகள் ஒளிரச்செய்யப்பட்டன.
மேலும் எதிர்வரும் நாட்களில் புத்தளம் எருக்கலம்பிட்டியின் B,C மற்றும் மந்தக்காடு பகுதிகளின் உள்ளக வீதிகளில் உள்ள மின்கம்ப விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டு, தேவைப்படும் பட்சத்தில் புதிய மின்கம்ப விளக்குகள் பொருத்தப்படும் என புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸா தெரிவித்தார்.
இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் புத்தளம் எருக்கலம்பிட்டியின் பொத்துவிலுக்கான பிரதான வீதியில் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓ.பி.பி.பி கட்சியின் பொதுச்செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் 2020 இல் கடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கில் அத்துரலிய ரத்ன தேரரை தேடி வரும் பொலிஸார் அவர் தலைமறைவாகியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
அத்துரலிய ரத்ன தேரரின் ராஜகிரிய ஆலயம்,தியான நிலையங்கள் உட்பட பல இடங்களிற்கு அவரை தேடிச்சென்றதாக தெரிவித்துள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அவரை எங்கும் கண்டுபிடிக்கமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துரலிய ரத்ன தேரரை அவரது தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் அவர் நாட்டிலிருந்து தப்பியோடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவ்வேளை மேல்மாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபராக விளங்கிய தேசபந்து தென்னக்கோன் ஆகியோருடன் தொடர்புபட்ட சம்பவம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அத்துரலிய ரத்னதேரரை தேடுவதாக தெரிவித்துள்ள பொலிஸார் இருவரையும் விசாரணை செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான கையெழுத்தை பெறுவதற்கு அத்துரலிய ரத்ன தேரர் ஓ.பி.பி.பி கட்சியின் பொதுச்செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ கடத்தினார் என்ற குற்றச்சாட்டு உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அந்த ஆவணத்தில் கையெழுத்திடாவிட்டால் தன்னை கொலை செய்யப்போவதாக வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக, பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு வடக்கு கிழக்கில் உள்ள அரசியல் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 14 ஆம் திகதி இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக மன்னாரில் இன்று காலை (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 2 ஆம் கட்ட காற்றாலை கோபுரம் அமைக்கும் திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மன்னார் பசார் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள வடக்கு, கிழக்கை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், வடக்கு கிழக்கை சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
எனவே கட்சி பேதங்களின்றி, மக்கள் நலன் நலனுக்காக அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வில்பட்டு தேசிய பூங்காவின் எல்லைக்குற்பட்ட, அருவக்காடு உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் பகுதியில், முறையான அனுமதியின்றி இல்மனைட் கழுவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட ஒரு இடத்தை வாலனா பிராந்தியத்தின் மத்திய வேலைநிறுத்தப் படை சோதனை செய்ததில், ரூ.200 மில்லியனுக்கும் அதி மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைக் கைப்பற்றபட்டுள்ளது.
செயல்பாட்டு காவல் ஆய்வாளர் பிரியந்த விஜேசூரியவின் தலைமையில், மத்திய தாக்குதல் படையின் இயக்குநர், காவல் கண்காணிப்பாளர் கே.ஏ. உதய குமாரவின் மேற்பார்வையின் கீழ், பிரிவின் OIC இந்திக வீரசிங்க, காவல் ஆய்வாளர் ஜனிதா மற்றும் பிற அதிகாரிகளுடன் இணைந்து சோதனை நடத்தப்பட்டது.
முந்தைய அரசாங்கத்தின் போது இந்த இடம் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் துறைக்கு பொறுப்பான அமைச்சரின் பாதுகாப்பின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது ஒரு பாரிய சுற்றுச்சூழல் அமைப்பை அழித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட இல்மனைட் திட்டத்திற்காக நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான களுவாரா, புருதா, வீரா உள்ளிட்ட மரங்களை அழித்து 20 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குறித்த இடத்தினை முதற்கட்ட சுற்றுச்சூழல் மதிப்பீடு (EIA) கூட மேற்கொள்ளப்படவில்லை எனவும், பல அரசு நிறுவனங்களிடமிருந்து முறையான அனுமதி பெறப்பட்டிருந்தாலும், அது சட்டப்பூர்வமானது அல்ல என்பது தொடர்புடைய விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த இடம் வில்பத்து தேசிய பூங்காவின் பெரகா மண்டலத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்றும், அந்த இடத்திற்கான நீர், வில்பத்து பெரகா மண்டலத்திற்குள் அமைந்துள்ள லுனு ஓயாவிலிருந்து பம்ப் செய்யப்படுகிறது என்றும் தெரியவந்துள்ளது.
இந்த இடம் தொல்பொருள் ரீதியாக உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழலாக இருந்தபோதிலும், தொல்பொருள் துறை தலையிட்டு ஒரு நீர்த்தேக்கத்தை கட்ட அனுமதி வழங்கியுள்ளபோதிலும், அகழ்வாராய்ச்சிக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.
இருப்பினும், தொல்பொருள் பரிந்துரைகளைக் கூட கருத்தில் கொள்ளாமல், இந்த இடத்தில் 20 அடிக்கும் அதிகமான ஆழமும் இரண்டு ஏக்கருக்கும் அதி பரப்புள்ள நிலத்தில் ஒரு நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளதுடன், லுனு ஓயாவிலிருந்து பம்ப் செய்யப்பட்ட நீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளமை சோதனையின்போது உறுதிப்படுத்தியுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழலில், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு தரப்பும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே காசாவில் தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் அடுத்த மாதம் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கப் போவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார். காசா தாக்குதலை நடத்த உலக நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இது முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென ஒரு நாள் இஸ்ரேலில் புகுந்த ஹமாஸ் படை மோசமான தாக்குதலை நடத்தியது. அங்கிருந்த அப்பாவி மக்களைச் சுட்டுத்தள்ளிய ஹமாஸ் படை, பல இஸ்ரேல் நாட்டினரைப் பணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. அதன் பிறகு காசாவில் இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை நடத்த ஆரம்பித்தது. ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்தது.
இஸ்ரேல் தாக்குதலில் ஏற்கனவே ஹமாஸ் தலைவர் சின்வார் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுவிட்டனர். இதனால் மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், மோதலை முடிவுக்குக் கொண்டு வர மறுக்கும் நெதன்யாகு, காசாவை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்தில் இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் இஸ்ரேல் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா அறிவிப்பு அதேநேரம் இஸ்ரேல் மோதலை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்காக இஸ்ரேல் மீது உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தும் வருகிறது. இதற்கிடையே முக்கிய நகர்வாகக் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப்போவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது கூட்டத்தொடரில் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்தாலும் கூட இதுவரை பல நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்காமலேயே இருந்தது. இந்தச் சூழலில் தான் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தன. குறிப்பாக பிரான்ஸ் கூட சமீபத்தில் தான் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவை எடுத்தது. மேற்குலக நாடுகளில் முக்கிய நாடாக இருக்கும் பிரான்ஸ் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க எடுத்த முடிவு முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
இதுவரை இப்படி சுமார் 140+ நாடுகள் பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவும் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்தச் சூழலில் தான் அல்பானீஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “செப்டம்பரில் நடைபெறும் ஐநா பொதுச் சபையின் 80வது கூட்டத்தொடரில் பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும் என்பதை இன்று என்னால் உறுதிப்படுத்த முடியும்.
பாலஸ்தீனிய அதிகாரசபையிடமிருந்து ஆஸ்திரேலியா பெற்ற உறுதிமொழிகளின் அடிப்படையில், பாலஸ்தீன மக்களுக்கு ஒரு தனி நாடு இருப்பதற்கான உரிமையை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும். மத்தியக் கிழக்கில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும் காசாவில் நடக்கும் மோதல், துன்பம் மற்றும் பட்டினியை முடிவுக்குக் கொண்டு வரவும் இந்த இரு நாடுகள் முடிவே சிறந்த தீர்வு” என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கடந்த வாரம் தான் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைப்பேசியில் பேசியதாகவும் அல்பானீஸ் தெரிவித்தார். காசாவில் நிலைமை மோசமாகிவிட்டதாகவும் அப்பாவி உயிர்கள் பலியாகிவிட்டன என்றும் பிரதமர் நெதன்யாகுவிடம் நான் நேரடியாகக் கூறியதாக அல்பானீஸ் தெரிவித்தார்.
140+ நாடுகள் ஆதரவு
இதுவரை சுமார் 140+ நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரித்துள்ளன. குறிப்பாகச் சமீப காலத்தில் அயர்லாந்து, நார்வே, ஸ்பெயின், ஸ்லோவேனியா, ஆர்மீனியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. பிரான்ஸ், மால்டா, கனடா மற்றும் பிரிட்டன் நாடுகள் ஆஸ்திரேலியாவைப் போலவே அடுத்த மாதம் நடக்கும் ஐநா கூட்டத்தில் அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. ஜி20 நாடுகளைப் பொறுத்தவரை அர்ஜெண்டினா, சீனா, இந்தோனேசியா, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. அதேநேரம் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட மேஜர் நாடுகள் இதுவரை பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Protesters gather during a pro-Palestinian rally in Sydney, Australia, Saturday, Nov. 4, 2023, in support of Palestinians caught up in the war between Israel and Hamas. (AP Photo/Mark Baker)
மூன்று மணித்தியாலங்களுக்கு பின்பு நள்ளிரவை தாண்டி பயணித்த புகையிரதம், பயணிகள் அசெளகரியம்!
நேற்றிரவு 10.08.2025 காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதம் இயந்திரக்கோளாறு காரணமாக கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் தரித்து நின்றமையால் பயணிகள் அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது.
சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் தரித்திருந்து காத்திருந்த ரயில், காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து பிறிதொரு இயந்திரம் வருகை தந்ததைத்தொடர்ந்து ரயில் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது.
இரவு 9.45 மணிக்கு இயந்திரக்கேளாறு ஏற்பட்ட நிலையில் அதிகாலை 1.15 இற்கே குறித்த ரயில் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.