Wednesday, November 5, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 13

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

0

2025 ஒக்டோபர் 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப.1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இளைஞர் தொழில்முனைவோரை ஊக்குவிக்க புதிய திட்டம்!

0

இளைஞர் தொழில்முனைவு குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உப குழு, இளைஞர்களிடையே திறமையான மற்றும் புதுமையான தொழில்முனைவோரை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டத்தை வகுப்பதற்கான விசேட குழுவொன்றை நியமித்தது.

குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (09) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்கவும் கலந்துகொண்டார்.

அதற்கமைய, இளைஞர் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கான திட்டத்தைத் தயாரிக்கும் குழுவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, அரச வங்கிகள், நிதியமைச்சு உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். இந்தக் குழு கூடி நாடளாவிய ரீதியில் இளைஞர் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கும், சிறந்த தொழில்முனைவோரைத் தெரிவுசெய்து அவர்களுக்கு ஒத்துழைப்பதற்கான வேலைத்திட்டத்தையும் தயாரிப்பார்கள் என குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கு தமது அமைச்சு ஏற்கனவே பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட கௌரவ பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்க, இளைஞர் தொழில்முனைவோருக்கான விசேட திட்டமொன்று தயாரிக்கப்படும் பட்சத்தில் அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க முடியும் என இங்கு தெரிவித்தார். அத்துடன், இளைஞர் தொழில்முனைவோர் தெரிவுசெய்யப்படும்போது அதற்கான அளவுகோல்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்றும், தொழில்முனைவு தொடர்பில் தெரிவுசெய்யப்படும் நபர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஏற்றுமதி சந்தையை நோக்காகக் கொண்டும், படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் தொழில்முனைவுகள் ஆரம்பிக்கப்படுவதன் அவசியம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) வி.எஸ். ராதாகிருஷ்ணன், கிருஷ்ணன் கலைச்செல்வி, சானக மதுகொட, இஸ்மாயில் முத்து முகமது மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஹஷிஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்!

0

சூட்சுமமான முறையில் 500.011 கிராம் ஹஷிஸ் போதைப்பொருளை முச்சக்கர வண்டியில் மறைத்து கொண்டு சென்ற இருவர் விஷேட அதிரடிப்படையால் கோணஹென பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் வென்னப்புவ நகரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கொன்வேவ, நாகொல்லாகமவைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணும், தெற்கு ரத்மலை, நாகொல்லாகமவைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும் ஹஷிஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

ஹஷிஸ் போதைப்பொருள், முச்சக்கர வண்டி மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்க சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திறக்கப்பட்ட தெதுரு ஓயா, ராஜாங்கனை வான்கதவுகள்!

0

ஜூட் சமந்த

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

இன்று 18 ஆம் தேதி அதிகாலை நிலவரப்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகள் தலா 02 அடி திறக்கப்பட்டுள்ளன.

திறக்கப்பட்ட இந்த வான்கதவுகளிலிருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 2800 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்றும் நீர்ப்பாசனத் துறை கூறுகிறது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலும் 04 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 02 வான்கதவுகள் தலா 02 அடி திறக்கப்பட்டுள்ளன, மற்ற 02 வான்கதவுகள் தலா 04 அடி திறக்கப்பட்டுள்ளன.

திறக்கப்பட்ட இந்த வான்கதவுகளிலிருந்து கலா ஓயாவிற்கு வினாடிக்கு 3010 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும்.

இதற்கிடையில், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 02 தானியங்கி வான் கதவுகளும் தலா 04 அடி திறக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 2384 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை கூறுகிறது.

திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் கலா ஓயா மற்றும் தெதுரு ஓயாவில் சேரும் என்று புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கூறுகிறது, எனவே அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!

தவி நீக்கம் செய்யப்பட்ட வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-1 முன் தலைமை வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்துள்ளார்.

வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது.

இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. அதேநேரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு வங்காளதேசத்தில் பதிவு செய்யபட்டுள்ளது. அவருக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே அவரை வங்காள தேசத்திற்கு திருப்பி அனுப்பும்படி அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனினும், ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

இதற்கிடையே, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில், ஷேக் ஹசீனாமீது அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடந்த கிளர்ச்சியின்போது ஏற்பட்ட மரணங்களுக்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-1 முன் தலைமை வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்துள்ளார்.

தலைமை வழக்கறிஞர் முகமது தாஜுல் இஸ்லாம், “கடந்த ஆண்டு நடந்த மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பின்னணியில் இருந்தவர் ஹசீனா. அவரது வழிகாட்டுதலின்கீழ் நடத்தப்பட்ட 1,400 கொலைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டிக்கப்பட வேண்டுமானால், அவர் 1,400 மரண தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டும்.

ஆனால் அது மனிதரீதியாக சாத்தியமற்றது என்பதால், குறைந்தபட்சம் ஒரு மரண தண்டனையாவது அவசியம் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், அது அநீதியாக இருக்கும்” என்று என்று அவர் கூறியதாக தி டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது. மேலும், உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கானுக்கும் மரண தண்டனை விதிக்க வலியுறுத்தினார்.

மடகாஸ்கர் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம்!

0

மடகஸ்கார் நாட்டின் உயரடுக்கு CAPSAT இராணுவப் பிரிவின் மூத்த நபரான கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, இராணுவம் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிவிட்டதாகவும், நாடாளுமன்றத்தின் கீழ் சபையைத் தவிர அனைத்து அரசியல் நிறுவனங்களையும் கலைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் நீண்டகாலமாக நிலவிவரும் கடுமையான மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகினர். சுமார் 3 கோடி மக்கள் வசிக்கும் மடகாஸ்கரில் நகர்ப்புற வறுமை ஒரு முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டின் 75% குடியிருப்பாளர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைநகர் அண்டனானரிவோவில் இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தைத் தொடங்கினர். ‘ஜென் இசட்’ மற்றும் ‘லியோ டெலஸ்டேஜ்’ என்ற பெயர்களில் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டம், கென்யா மற்றும் நேபாளத்தில் நடைபெற்ற இளைஞர் போராட்டங்களை பிரதிபலித்தது. போராட்டத்திற்கு பொதுமக்கள், தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகளின் ஆதரவு பெருகியது. இதனால் நாடு முழுவதும் போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது.

இதற்கிடையே, ராஜோலினாவின் 2009 ஆட்சிக் கவிழ்ப்பில் தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்த ஓர் உயரடுக்கு இராணுவப் பிரிவான CAPSATவும் போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவை வழங்கியது. அதேபோல், மடகாஸ்கரின் தேசிய துணை ராணுவப் படையான ஜென்டர்மேரியும் போராட்டக்காரர்களுடன் இணைந்தது. இப்படி, CAPSAT மற்றும் ஜென்டர்மேரி இரண்டும் எதிர்ப்பாளர்களுடன் இணைந்ததால், மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினாவின் அதிகாரம் சிதைந்தது. அவர், நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றார்.

அதேநேரத்தில், ”தாம் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் மடகாஸ்கரை அழிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” எனவும் அவர் வீடியோ வாயிலாக தெரிவித்திருந்தார். மறுபுறம், போராட்டக்காரர்கள் அதிபரின் அதிகாரப்பூர்வ ராஜினாமாவிற்கு அழைப்பு விடுத்தனர்.

இந்த நிலையில்தான் CAPSAT அதிகாரிகள் முறையான அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். உயரடுக்கு CAPSAT இராணுவப் பிரிவின் மூத்த நபரான கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, இராணுவம் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிவிட்டதாகவும், நாடாளுமன்றத்தின் கீழ் சபையைத் தவிர அனைத்து அரசியல் நிறுவனங்களையும் கலைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மடகாஸ்கரின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றம், ராண்ட்ரியானிரினாவை அதிபர் பதவி ஏற்க முறையாக அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, ஆண்ட்ரி ராஜோலினா ஆட்சி முற்றிலும் கலைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்குள் ராண்ட்ரியானிரினா பதவியேற்கக்கூடும் என்று நெருக்கமான வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளன. இராணுவத் தலைமையிலான நிர்வாகம் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும், பின்னர் இடைக்கால அரசாங்கத்தின்கீழ் புதிய தேர்தல்களை நடத்தும் என்றும் ராண்ட்ரியானிரினா அறிவித்தார்.

இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வழங்கிய உறுதிமொழி!

0

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தில், இந்தியப் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவ்ர்களை புதுடில்லியில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கல்வி சீர்திருத்தங்கள், டிஜிட்டல் முயற்சிகள் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் இரு நாடுகளும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கை பூமியைப் பயன்படுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

தனது இந்திய உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தாம் கல்வி கற்ற டெல்லி இந்து கல்லூாிக்கு விஜயம் செய்த வேளையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று (16) பல இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொண்டார். 

இந்த விஜயத்தின் ஒரு சிறப்பு நிகழ்வாக, பிரதமர் அவர் கல்வி கற்ற டெல்லியில் உள்ள இந்து கல்லூரிக்கும் விஜயம் செய்தார். 

இங்கு கருத்து தெரிவித்த கலாநிதி ஹரிணி அமரசூரிய, 

“இந்து கல்லூரி இப்போது முதலிடத்திற்கு வந்துள்ளது. அது குறித்து பெருமைப்படுகிறேன். அற்புதம். நான் முதன்முதலில் இங்கு வந்தபோது, PEPSI இந்தியாவிற்கு அப்போதுதான் வந்திருந்தது. 

அந்தக் காலத்தில் அது ஒரு பெரிய விடயமாக இருந்தது. அந்தக் காலத்தில் நாங்கள் பேசிய விதம் நினைவிருக்கிறது. வகுப்பறைகளில் மட்டுமல்ல, குறிப்பாக வகுப்பறைக்கு வெளியே புல்வெளியில் அமர்ந்து, தேநீர் அருந்திக்கொண்டே பேசியிருந்தோம். 

இந்தியாவும் இலங்கையும் பாரம்பரியம், விழுமியங்கள் மற்றும் பரஸ்பர மரியாதை என்ற பொதுவான பாரம்பரியங்களால் பிணைக்கப்பட்டுள்ளன. 

சில சமயங்களில் நாம் ஒருவருக்கொருவர் உடன்படாமல் இருக்கலாம். ஒருவருக்கொருவர் எல்லாவற்றையும் விரும்பாமலும் இருக்கலாம். அதுதான் ஒரு குடும்பத்தின் இயல்பு. 

உண்மையான உறவுகள் அப்படித்தான் இருக்கும். நீங்கள் எப்போதும் ஒன்றாக வேலை செய்யவும், வாழவும் கற்றுக்கொள்கிறீர்கள். நாள் முடிவில் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துகிறீர்கள். 

இந்தியா எப்போதும் இலங்கையின் பயண வழியில் மாறாத பங்காளியாக இருந்து வருகிறது. எமது பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்து, நெருக்கடியான காலங்களில் அத்தியாவசிய உதவிகளை வழங்கி, நாங்கள் ஸ்திரத்தன்மையையும் வளர்ச்சியையும் அடையும்போதும் எங்களுடன் நின்றது. 

2022 ஆம் ஆண்டில் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, இந்தியா எமக்கு கடன் வசதிகள், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியது. இவற்றை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். 

அவை எங்கள் மக்களின் இதயங்களில் எழுதப்பட்டுள்ளன. இது வெறும் இராஜதந்திர ஆதரவு அல்ல. கடினமான நேரத்தில் எங்களுக்கு உதவிய ஒரு உண்மையான நண்பனின் உதவி. 

இலங்கை தொடர்ச்சியாக ஒரே நிலைப்பாட்டில் உள்ளது. எமது பூமியை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பயன்படுத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 

தற்போதும் நாங்கள் அதே கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறோம். இங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் நான் கூறுவது, உங்களிடம் மகத்தான ஆற்றல் உள்ளது. நீங்கள் இந்து கல்லூரியில் பெறும் கல்வி ஒரு பரிசு. 

அதே சமயம் ஒரு பொறுப்பும் கூட. அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். பாலங்களைக் கட்ட அதைப் பயன்படுத்துங்கள், சுவர்களை எழுப்ப அல்ல. பாக் ஜலசந்தியின் ஊடாக தெற்கு திசையைப் பாருங்கள். 

இலங்கையை ஒரு அண்டை நாடாக மட்டும் பார்க்காமல், ஒரு பங்காளராகவும் பாருங்கள். நாங்கள் எண்ணங்கள் நிறைந்த ஒரு நாடு, அதேபோல் தியாக மனப்பான்மை மற்றும் தையிரியமான மக்கள் உள்ள நாடு.” என்றார். 

இதேவேளை, பிரதமர் இன்று (17) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

அத்துடன், NDTV தொலைக்காட்சியின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள 2025 NDTV உலக உச்சி மாநாட்டில் உரையாற்றவும் பிரதமர் தயாராக உள்ளார். 

இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் உள்ளிட்ட பல விருந்தினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

வடக்கில் இடம்பெற்ற முதியோர் தின நிகழ்வுகள்!

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், சர்வதேச முதியோர் தினம் மற்றும் முதியோருக்கான ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகாட்டல் முகாம் இன்று (17.10.2025) வெள்ளிக்கிழமை சிறப்புற நடைபெற்றது.

குறித்த நிகழ்வு “ஆரோக்கியமான முதுமை” எனும் தொனிப்பொருளில் காலை 9.00 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவுக் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தனுஜா லுக்ஷாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சரும் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகவாணிபமும் அமைச்சின் செயலாளர் முத்துலிங்கம் நந்தகோபாலன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். டி. எம். ஏ. கே. டிசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் இலச்சுமணன் இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் தொற்றா நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகள், ஆரோக்கியமான உணவு, தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு, உதவி உபகரணங்கள் வழங்குதல் முதலான செயற்பாடுகள் நடைபெற்றன.

மேலும் முதியவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் கௌரவிப்புக்கள் முதலான நிகழ்வுகளும் சிறப்புற நடைபெற்றன.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகங்களின் உதவிப் பிரதேச செயலாளர்கள், கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர், வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத் தின் தலைமைப் பீட உத்தியோகத்தர்கள், மாவட்ட உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் முதியோர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

56 பேருக்கு 5மில்லியன் பெறுமதியான வாழ்வாதார உதவி!

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தகவாணி அமைச்சின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 56 பேருக்கு 5மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அமைச்சின் செயலாளர் முத்துலிங்கம் நந்தகோபாலன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு திணைக்கள மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்தார்.

தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

அடுத்த வருடத்தில் மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இன்று தமிழ் கட்சிகள் ஒன்று சேர்கிறார்கள், முதலமைச்சர் பொது வேட்பாளரை களம் இறக்க உள்ளதாக எல்லாம் செய்தி வருகின்றது. இன்னும் ஒன்றையும் சொல்கின்றனர்.

தமிழர்களுக்காக போராடும் கட்சி என்று கூறிக்கொண்டவர்கள் தமிழர்களால் துரோகிகள் பட்டம் சூட்டிய கட்சிகளுடன் ஒன்று சேர்ந்துள்ளனர். மாகாண சபைக்கு முதல் நகரசபைகளை ஒழுங்காக நடாத்தி காட்டுங்கள் என அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவருக்கு கலாதினி விருது!

0

ஜூட் சமந்த

தம்பபன்னி அக்வெஸ்ஸ 3 எனும் தலைப்பில் இடம்பெற்ற புத்தளம் மாவட்டம் 2025 இலக்கிய விழா நிகழ்வு இன்று 17ஆம் திகதி மஹாவெவ முத்ராதேவி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக மற்றும் புத்தளம் மேலதிக மாவட்ட செயலாளர் புபுத்திகா எஸ்.பண்டார தலைமையில் இவ் இலக்கிய விழா நடைபெற்றது.

இந்த இலக்கிய விழாவில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 கலைஞர்களுக்கு கலாதினி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவருக்கும் குறித்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

ஊடகவியலாளர்களான எஸ்.மகாதேவன் மற்றும் ஜயரத்ன விக்கிரமாராச்சி ஆகியோருக்கும் இவ்வாறு கலாதினி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.