Thursday, February 6, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 13

மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதிக்கு பூட்டு!

0

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதிப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி நேற்று (19) மாலை 5.00 மணிக்குப் பிறகு கல்லேல்லயிலிருந்து மன்னம்பிட்டி வரையிலான பகுதியில் அனைத்து வாகனங்களுக்கும் முழுமையாக மூடப்பட்டுள்ளது என பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, வெலிகந்த – திம்புலாகலை மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக ரயில் சேவை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

வீதியின் நிலையை இன்று காலை பரிசீலனை செய்த பின்னர், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவில்லாத அரசாங்கம் – சஜித்

0

மக்களின் நலனுக்கான ஆட்சியை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துக்கு போதிய தெளிவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குருநாகல், கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விவசாயிகளுக்கான 25,000 ரூபாய் உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை.

இன்னும் இதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 40சதவீதம் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

25,000 ரூபாய் முழுமையான மானியம் முறையாக வழங்கப்படவில்லை.

தற்போது, நெல்லை விதைக்கும் காலம் என்பதால் உர மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

தேர்தல் காலங்களில் அழகான வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவிக்கப்பட்ட விடயங்கள் இன்று சாத்தியமில்லாது போயுள்ளன.

பேச்சுக்கும் செயலுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

1,731 கோடி செலவில் அதிபர் பதவியேற்பு விழா!

0

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளார்.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவின் முதல் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சரவை வேட்பாளர்கள் உள்பட 500 நட்சத்திர உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியும், அவரது மனைவி நீடா அம்பானியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும், இன்றிரவு நடக்கவிருக்கும் இரவு விருந்திலும் டிரம்ப் கலந்து கொள்ளவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இசை நிகழ்ச்சிகளுடன் நாளை நடைபெறவுள்ள டிரம்ப்பின் அதிபர் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், முன்னாள் அதிபர்களான ஜோ பைடன், பில் கிளின்டன், ஜார்ஜ் டபுள்யூ புஷ், பராக் ஒபாமா உள்பட ஹிலாரி கிளிண்டன், கமலா ஹாரிஸும் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், அமெரிக்காவில் டிக் டாக் செயலி ஞாயிற்றுக்கிழமை முதல் தடை செய்யப்பட்ட நிலையில், நாளை நடைபெறவுள்ள அதிபர் பதவியேற்பு விழாவில் டிக் டாக் தலைமை நிர்வாக அதிகாரி ஷோ செவ் கலந்துகொள்ள உள்ளார். டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பின்னர், டிக் டாக் சேவைகளை அமெரிக்காவில் தடையின்றி பயன்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுமென டிரம்ப் குறிப்பிட்டுள்ளதாக டிக் டாக் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள்தவிர, ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன், அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலேய், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்பதில் உறுதியில்லை.

அதிபர் பதவியேற்பு விழா, இந்திய நேரப்படி இரவு 10.30 மணியளவில் நடைபெறும். அமெரிக்க அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு அதிபரின் பதவிக்காலமும் ஜனவரி 20 ஆம் தேதியில்தான் தொடங்கப்படும். ஒருவேளை ஞாயிற்றுக்கிழமைகளில் ஜனவரி 20 ஆம் தேதி வருவதாயிருந்தால், அதற்கு மறுநாள்முதல் பதவிக்காலம் தொடங்கும்.

அதிபராகப் பதவியேற்பவரின் சத்தியப்பிரமாணம், அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையின்கீழ் மேற்கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து, அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் குறித்து, அதிபர் தனது முதல் உரை ஆற்றுவார்.

பதவியேற்பு விழாவின் தொடக்கவிழாவையடுத்து, மதிய விருந்துக்கு அழைத்து செல்லப்படுவர். மேலும், அதிபராக பதவியேற்ற நாளில், தனது முதல் பணியாக நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடுவது பாரம்பரியம்.

டிரம்ப் கையெழுத்திடப்போகும் முதல் உத்தரவுகள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், முன்னாள் அதிபர் ஜோ பைடன் ரத்து செய்த சில நிர்வாக உத்தரவுகளை மீண்டும் நிலைநிறுத்தும் உத்தரவுகளில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கையெழுத்திடும் பணியைத் தொடர்ந்து, 3 கண்காட்சிகள், அதற்கு அடுத்ததாக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் டிரம்ப் கலந்துகொள்ள உள்ளார்.

டிரம்ப்பின் பதவியேற்பு விழாவுக்கு நன்கொடையாக 200 மில்லியன் டாலர் (ரூ. 1,731.5 கோடி) பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் நிலவும் கடும் குளிரால், பதவியேற்பு விழாவை பொதுவெளியில் நடத்த இயலாது என்று கூறிய டிரம்ப், 40 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக மூடப்பட்ட திடலுக்குள் அதிபர் பதவியேற்பு விழா நடக்கவிருப்பதாக தெரிவித்தார்.

209 நெல் களஞ்சியசாலைகளில் சிரமதானப்பணி!

0

நாடு முழுவதுமான நெல் களஞ்சியங்கள் துப்பரவு பணிகளில் இராணுவம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அதிமேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ‘தூய இலங்கை’ தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்த ஏற்றதாக மாற்றவும், சிறிய பழுதுபார்ப்புகளை மேற்கொள்ளவும் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டியுள்ளதுடன் தேசிய நலனுக்காக பாதுகாப்புப் படையினர் ஆதரவு வழங்கும் வகையில், பாதுகாப்புச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தல்களின்படி, இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஜனவரி 18 முதல் 2025 ஜனவரி 27 வரை அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களாலும் நாடு முழுவதும் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதுடன் ஒரு தொடக்கமாக, நேற்று (18) இலங்கை இராணுவ படையினர் பல பகுதிகளில் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்ப்பதில் பங்களித்தனர்.

54 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

0

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் 54 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

இன்று (19) மு.ப.9.00 மணியளவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் பிரதான 73 நீர்த்தேக்கங்களில் 54 நீர்த்தேக்கங்களில் வான் பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் ( நீர் முகாமைத்துவம்) எச். எப். பி. எஸ். டி. ஹேரத் தெரிவித்தார்.

இவற்றில் அம்பாறை மாவட்டத்தின் 8, அனுராதபுரம் மாவட்டத்தின் பிரதான 10 நீர்த் தேக்கங்கள், பதுளை மாவட்டத்தின் 6 நீர் நிலைகள், மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் தலா 4 பிரதான குளங்களும், குருணாகல் மாவட்டத்தின் 5 குளங்களும், புத்தளம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தலா 2 பிரதான நீர்த்தேக்கங்களும், கண்டி மாவட்டத்தின் 3 பிரதான நீர்நிலைகளும், காலி மாவட்டத்தின் 1 நீர்த்தேக்கமும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பிரதான நீர் நிலைகளுமாக மொத்தம் 54 நீர் நிலைகளில் வான் பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் நடுத்தர அளவிலான குளங்கள் 43 இற்கும் அதிகமானவற்றில் வான் பாய்வதுடன், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்த் தேக்கங்களில் சேமித்து வைக்கக்கூடிய முழு நீரின் கொள்ளளவில் 93% வீதத்திற்கும் அதிகமானவற்றை தற்போது சேமித்து வைப்பதற்கு முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் விபரித்தார்.

ஊடகவியலாளர்களுக்கு ஓர் நற்செய்தி!

0

இலங்கையில் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஒரு ஊடக அமைப்பு நிறுவப்படஉள்ளது

இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அவர்களுக்கான ஊடக நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அண்மையில் நாரஹேன்பிட்டியில் உள்ள ஊடக அமைச்சில் இலங்கை ஊடகவியலாளர் சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்னைய அரசாங்கங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும் அது இதுவரை சாத்தியமடையவில்லை என்பது இந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் இந்த நிறுவனத்தை ஸ்தாபிப்பதே தமது நோக்கம் எனவும் இலங்கையில் ஊடகத் தொழிலில் ஈடுபடுபவர்ளை சிறந்த ஒரு ஊடகவியலாளர்களாக இந்த தேசத்திற்கு அறிமுகப்படுத்துவதே எமது நோக்கம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களின் சுதந்திரம் அத்துடன் கௌரவம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 50 வருடங்கள் பழமையான 1973 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பத்திரிகைச் சபைச் சட்டத்தை புதிய தகவல் தொடர்பு போக்குகளுக்கு ஏற்றவாறு புதுப்பிப்பது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஊடகவியலாளர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் அதில் தற்போது சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இலங்கை ஊடகவியலாளர் சபையின் முயற்சியின் கீழ் ஊடகவியலாளர்களின் கல்வித் தரம் நலன் மற்றும் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதற்கு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கான விரிவான கற்கை நெறியை ஆரம்பிக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

பள்ளிக் குழந்தைகள் மற்றும் தொடர்பாடல் பாடத்தில் ஆர்வமுள்ளவர்களை இலக்காகக் கொண்டு நடத்தும் தொடர் சிறப்புப் பட்டறைகளை நல்ல நிறுவனக் கட்டமைப்பின் கீழ் தொடரவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் என்.ஏ.கே.எல்.விஜேநாயக்க இலங்கை பத்திரிக்கை ஆணையாளர் நிரோஷன தம்பவிட்ட தற்போதைய தலைவர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க சிரேஷ்ட ஊடகவியலாளர் அரியநந்த தொம்பகஹவத்த சட்டத்தரணி மஹிஷா முதுகமுவ லெஸ்லி தேவேந்திரதா ஆகியோர் கலந்துகொண்டனர்

டைமிங்கில் செண்டிமெண்ட் பன்ச் கொடுத்த சஜித்!

0

விவசாயிகளுக்கான ரூ. 25,000 உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை. கடந்த பாராளுமன்ற அமர்விலும் இது குறித்து கேள்வி எழுப்பினேன். இன்னும் இதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 40% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 25,000 முழுமையான மானியம் முறையாக வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல், கல்கமுவ தேர்தல் தொகுதி அமைப்பாளர் பந்துல பண்டாரநாயக்க நேற்று (18) கல்கமுவ வாராந்த சந்தைத் தொகுதி வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

விதைக்கும் காலம் என்பதால் உர மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும். அன்று அழகான வார்த்தைகளைப் பயன்படுத்தி சொன்ன விடயங்கள் இன்று சாத்தியமில்லாது போயுள்ளன. பேச்சுக்கும் செயலுக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

தேர்தலுக்கு முன்னர் 33% மின் கட்டணம் குறைக்கப்படும் என கூறப்பட்ட போதும், அதனை 37% அதிகரிக்க முன்மொழிந்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார். 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என மின்சார சபை கூறியபோது, ​​பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மக்கள் ஆலோசனைகளை பெற்று, மின் கட்டணத்தை 20% குறைத்திருக்கிறது.

தேர்தலின் போது ஒரு கதையைச் சொல்லி, இப்போது இன்னுமொரு கதையைச் சொல்லி மக்களின் பலமான கோரிக்கையைக்கூட புறக்கணிக்கும் நிலையை அரசு எட்டியுள்ளது. மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் தெளிவான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை. மக்களின் நலனுக்காக எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த ரேஸ் – போர்ச்சுக்கல் செல்லும் அஜித்!

0

சமீபத்தில் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, அடுத்த பந்தயத்தில் பங்கேற்க அஜித்குமார் போர்ச்சுக்கல் புறப்பட்டுள்ளார்.

போர்ச்சுக்கலில் ‘தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025’ நடைபெற இருக்கிறது. இந்த போட்டி, தெற்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள கார் பந்தய வீரர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்போட்டிகள் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் என இரண்டு நாடுகளில் 2 நாட்கள் போட்டியாக நடக்கும். இதன் டிராக் நேரம் 6 மணி நேரமாக இருக்கும். அதிகபட்சமாக 30 கார்கள் வரை இதில் பங்கேற்கலாம். கார் பந்தயங்களில் கொடி கட்டி பறக்க விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்த போட்டி சவாலான ஒன்று.

முதல் விஷயம் இதில் பங்கேற்கும் கார்கள் உயர் தொழில்நுட்பத்தை கொண்டிருக்க வேண்டும். மற்ற போட்டிகளை விடவும், இதில் பங்கேற்க தனி சிறப்புமிக்க கார்கள் வேண்டும். தெற்கு ஐரோப்பாவில் உள்ள போர்டிமோ, எஸ்டோரில் மற்றும் பார்சிலோனா-கேடலுனியா போன்ற டிராக்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவை. இதில் ஜெயிக்க வேண்டும் எனில் துல்லியம் மிகவும் முக்கியமான ஒன்று. அதேபோல தெற்கு ஐரோப்பா நிலையற்ற வானிலைக்கு மிகவும் பிரசித்திபெற்ற பகுதியாகும். திடீரென மழை, திடீரென வெயில் என வானிலை குழப்பி அடிக்கும். இந்த வானிலை பந்தய ஓட்டுநர்களின் பொறுமையை சோதித்துவிடும். எனவே கவனமாகவும், துல்லியமாகவும் செயல்பட்டால் மட்டுமே வெற்றிப்பெற முடியும். இப்படியான போட்டியில்தான் அஜித்குமார் பங்கேற்க இருக்கிறார். இந்த போட்டியில் அவர் வெற்றிபெற்றுவிட்டால் அது மிகப்பெரிய சாதனையாக கருதப்படும்.

முன்னதாக துபாயில் நடந்த போட்டியில் அஜித்குமார் ஜெயித்திருந்தது பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றிருந்தது. திரைப்படங்களை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் வேறு ஒரு துறையில் அஜித்குமார் வெற்றிக்கொடி நாட்டியிருப்பது அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025′ போட்டியில் பங்கேற்கும் அஜித்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவசியம் ஏற்பட்டால் தாக்குவோம்-இஸ்ரேல்!

0

ஹமாஸ் அமைப்பு உடனான போா்நிறுத்தத்தை தற்காலிகமானது என்றும் அவசியம் எழும் சூழலில் தொடா்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சனிக்கிழமை தெரிவித்தாா்.

போா்நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பு நாட்டுமக்களிடம் உரையாற்றிய அவா், ‘அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. கடந்த புதன்கிழமைகூட அவரிடம் பேசினேன். லெபனான் மற்றும் சிரியாவில் இஸ்ரேலின் ராணுவ வெற்றிகளே ஹமாஸ் உடனான போா்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதற்கு காரணம். மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அடையாளத்தை இஸ்ரேல் மாற்றியுள்ளது.

சிறந்த போா்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளோம். ஹமாஸ் உடனான போா்நிறுத்தத்தை இஸ்ரேல் தற்காலிகமானதாகவே கருதுகிறது. அவசியம் எழும் சூழலில் தொடா்ந்து தாக்குதல் நடத்தும் உரிமையை இஸ்ரேல் தக்கவைத்துள்ளது’ என்றாா்.

சரமாரியாக கொட்டித் தீர்க்கவுள்ள மழை!

0

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

அத்துடன், கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, வட மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்100 மில்லிமீற்றருக்கும் மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மேலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இதேவேளை, இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.