Friday, November 14, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 131

கிளிநொச்சியில் சிக்கிய ஐஸ் போதைப்பொருள்!

கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கேரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 20.7 கிராம் ஐஸ் மற்றும் 5.75 கிராம் ஹெறோயின் என்பன கிளிநொச்சி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

மேலும் இதனுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நான்கு கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

மேயர் வேட்பாளராக ஹசன் அலால்டீன்!

0

சர்வஜன அதிகாரம் சார்பாக கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிட ஹசன் அலால்டீன் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஹசன் அலால்டீன் முன்னதாக சர்வஜன அதிகாரத்தின் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராகவும், ஊடகச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 

தெஹிவளை பகுதியில் நேற்று (21) மாலை முஸ்லிம் யாத்ரீகர்களுடன் நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் முன்னாள் நீதி அமைச்சர் அலிசப்ரி, பெளஸி ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய செயலியை அறிமுகப்படுத்திய தேர்தல் ஆணைக்குழு!

0

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்க தொலைபேசி செயலி இன்று (22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணைக்குழுவில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 

தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையில் EC EDR என்ற தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, 

“பொதுமக்களிடம் முறைப்பாடுகள் இருந்தால், இப்போது இந்த செயலி மூலம் அதைச் சமர்ப்பிக்கலாம். முறைப்பாட்டை அளித்த நபரும் தங்கள் முறைப்பாட்டுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியலாம். இந்த செயலி மூலம் வீடியோ மற்றும் புகைப்படத் தகவல்களை வழங்கும் வசதியும் உள்ளது.” என்றார்.

தலைமன்னார், ராமேஸ்வரம் கப்பல் சேவை ஆரம்பம்!

0

தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கு, தனுஷ்கோடியிலிருந்து 1914-ஆம் ஆண்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 

1964-ஆம் ஆண்டு டிசம்பரில் தனுஷ்கோடியை புயல் தாக்கிய பிறகு, 1965-ஆம் ஆண்டிலிருந்து ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. 

ஆனால், இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் இந்த கப்பல் சேவை 1981-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 

இந்தியா – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, 14.10.2023-ல் தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். 

அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ”ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு, ராமேஸ்வரம் கடற்பகுதியில் நான்கு இடங்களை தேர்வு செய்து தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக ஐஐடி நிபுணர்கள் குழு கடலடியில் மண்ணின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

அவற்றிலிருந்து ஒரு இடம் அக்னி தீர்த்த கடற்கரை அருகே தேர்வு செய்யப்பட்டு கப்பல் பயணிகள் இறங்குதளம் அமைய உள்ளது. 

இந்திய ரூபா 6.43 கோடி மதிப்பில் அமைய உள்ள இந்த இறங்குதளம் 119 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகமும், 6 அடி உயரமும் உடையது. 

இதன் முதற்கட்ட பணியாக நகர்வு மேடை அமைக்கும் பணி ராமேஸ்வரம்  ஓலைக்குடா கடற்பகுதியில் நடைபெற்று வருகிறது. 

இந்த நகர்வு மேடைக்கான பாகங்கள் இரண்டு வாரத்திற்குள் பொறுத்தப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரை அருகே பயணிகள் இறங்குதளம் அமைய உள்ள பகுதியில் நிறுவப்படும். 

இதனை தொடர்ந்து கரையிலிருந்து கடலுக்குள் கொங்கிரீட் தூண்கள் அமைத்து கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

62 வங்கிகளைக் கொள்ளையடித்த ஜே.வி.பி!

0

1985 ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் தான் வங்கிகளை கொள்ளையடித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார். 

பாதீடு தொடர்பான விவாதத்தின் போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார். 

1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் வங்கிகளைக் கொள்ளையடித்ததாக ரோஹினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டார். 

மேலும் இந்தக் காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினர் 62 வங்கிகளைக் கொள்ளையடித்ததாக அவர் தெரிவித்தார். 

இதன் போது வங்கிகளிலிருந்து பணத்தையும் கொள்ளையடித்ததாக ரோஹினி குமாரி விஜேரத்ன கூறினார்.

ஓய்வூதியத்தை அதிரடியாக நீக்கிய ஜனாதிபதி!

0

தனது பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) விசேட உரையொன்றை ஆற்றிய ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவதற்கு சட்டமூலம் ஒன்றை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் கொண்டு வருவதாகவும், ஜனாதிபதி சலுகைகள் சட்டத்தை திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“சில விடயங்களை நாங்கள் இப்போதுதான் தெரிந்து கொள்கிறோம். நான் ஜனாதிபதியான பிறகு, பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததற்காக எனக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. அதாவது, ஜனாதிபதி சம்பளத்திற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினரின் ஓய்வூதியமும் கிடைக்கிறது. நான் இன்று கடிதம் ஒன்றை கொடுத்தேன், எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் வேண்டாம் என்று.

இந்த நாட்டை சரி செய்ய ஆரம்பிக்க வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு அப்படி ஒரு ஓய்வூதியம் கிடைக்கும் என்று தெரியாது, பின்னர்தான் அது கிடைப்பது தெரியவந்தது. அதனால், பாராளுமன்றத்திற்கும் கடிதம் ஒன்றை கொடுத்தேன், எனக்கு ஓய்வூதியம் வேண்டாம் என்று.

அதேபோல், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சராகும்போது, பாராளுமன்ற உறுப்பினர் சம்பளமும் கிடைக்கிறது, அமைச்சர் சம்பளமும் கிடைக்கிறது. நாங்கள் ஒரு தீர்மானம் எடுத்தோம், அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை மட்டுமே பெறுவார்கள். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்துடன் அமைச்சர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு கிடைக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தின் இருந்து எரிபொருள் கொடுப்பனவையும் நீக்கி, நாங்கள் அதை வழங்கவுள்ளோம். அதேபோல், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் நீக்குகிறோம். ஜனாதிபதி சலுகைகள் சட்டத்தையும் திருத்துவோம்.” என்றார்.

வடக்கு கடற்பிரதேசங்களில் விஷேட சுற்றிவளைப்பு!

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் றமேஸ்கண்ணா தலைமையிலான விஷேட சுற்றிவளைப்பில் சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறாது அமைக்கப்பட்ட கலங்கட்டி வலைகள் என்பன கைப்பற்றப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் சங்கங்கள் வைத்த முறைப்பாட்டையடுத்து நேற்றைய தினம் கிராஞ்சி பகுதியில் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல கடற்பிரதேசங்களில் சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறப்படாது அமைக்கப்பட்ட கலங்கட்டி தொழிலில் சில மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்த நிலையில், விஷேட சுற்றிவளைப்பில் சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறாது அமைக்கப்பட்ட கலங்கட்டி வலைகள் என்பன கைப்பற்றப்பட்டன.

இதன் போது பெருமளவு தங்கூசி வலைகள் மற்றும் கலங்கட்டி வலைகள் அவற்றின் தடிகள் என்பன மீட்கப்பட்டன. இவற்றிற்கு எவரும் உரிமை கோராத நிலையில் குறித்த பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

வெடித்து சிதறிய இலங்கை ஜெட் விமானம்!

0

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானமை குறித்து விசாரணை நடத்துவதற்காக, விமானப்படைத் தளபதியால் விசேட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவால் 7 பேர் கொண்ட விசேட விசாரணைக் குழு இதற்காக நியமிக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா விமானப்படையின் கட்டுநாயக்க முதன்மை முகாமில் உள்ள விமானப்படை இலக்கம் 05 தாக்குதல் பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ள விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் K-8 வகை விமானம் ஒன்று, இன்று (21) காலை பயிற்சியின் போது வாரியபொல, பாதெனிய பகுதியில் திடீர் விபத்துக்கு உள்ளானது.

எனினும், அந்த விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேறி, குருநாகல் பாதெனிய மினுவன்கெடே கல்லூரி வளாகத்தில் பாராசூட் மூலம் தரையிறங்கினர்.

இந்த விமானத்தில் பிரதான பயிற்சி ஆலோசக விமானி மற்றும் பயிற்சி விமானி ஆகியோர் பயணித்திருந்தனர்.

அந்த அதிகாரிகள் தற்போது குருநாகல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விமானம் கட்டுநாயக்க விமானப்படை முகாமிலிருந்து காலை 7:27 மணியளவில் புறப்பட்டதாகவும், காலை 7:55 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

அ.இ.ம.கா, 13 மாவட்டங்களில் போட்டி!

0

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, 13 மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை நேற்று (20) அந்தந்த மாவட்ட செயலகங்களில் தாக்கல் செய்தது.

அந்தவகையில், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், கண்டி, மாத்தளை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தது.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரசபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றிலும், வவுனியா மாவட்டத்தில் வவுனியா மாநகர சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை ஆகியவற்றிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, கரைத்துரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து, டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச சபை மற்றும் நாத்தாண்டிய பிரதேச சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்திலும் புத்தளம் மாநகர சபை, வனாத்தவில்லு பிரதேச சபை, கல்பிட்டிய பிரதேச சபை, ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபை, சிலாபம் பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குருநாகல் மாவட்டத்தில் குருநாகல் மாநகர சபை, குருநாகல் பிரதேச சபை, நாரம்மல பிரதேச சபை, குளியாப்பிட்டிய பிரதேச சபை, ரிதீகம பிரதேச சபை, நாரம்மல பிரதேச சபை, பண்டுவஸ்நுவர பிரதேச சபை ஆகியவற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து தனது மயில் சின்னத்திலும் பொல்கஹவெல பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அநுராதபுரம் மாவட்டத்தில் ஹொரவபொத்தான பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்திலும், கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கெக்கிராவ பிரதேச சபை, கெப்பெட்டிகொல்லாவ பிரதேச சபை, பலாகல பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கண்டி மாவட்டத்தில் உடுநுவர பிரதேச சபை, பூஜாபிட்டிய பிரதேச சபை, பாததும்பர பிரதேச சபை, , பாதஹேவாஹெட்ட பிரதேச சபை, உடபலாத பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில், தனித்துப் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை ஆகியவற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில், தனித்துப் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரசபை, ஏறாவூர் நகர சபை, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை, கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை, சேருவில பிரதேச சபை, மொரவெவ பிரதேச சபை ஆகியவற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை பிரதேச சபை மற்றும் பண்டாரகம பிரதேச சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்திலும் பேருவளை நகரசபை, பேருவளை பிரதேச சபை, களுத்துறை மா நகரசபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கொழும்பு மாவட்டத்தில் கொலொன்னாவை நகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்திலும் கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்தியில்,

‘உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள் மூலமே கிராமங்களின் அபிவிருத்தியை மேற்கோள்ள முடியும். தேசிய அரசியலில் நாம் எதிர்க்கட்சியில் அமர்ந்து அரசியல் செய்த போதும், ஜனாபதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் வடக்கு, கிழக்கில் நாம் ஆதரித்த வேட்பாளர்களுக்கு, எமது கட்சி சார்ந்த உறவுகளும் பொதுமக்களும் நலன்விரும்பிகளும் அமோக ஆதரவை வழங்கியிருந்தனர்.


எனினும், ஆட்சி முறைமை மாற்றங்களினால் நாம் பின்னடைவை சந்தித்திருந்த போதும், எமது கட்சியின் வாக்குத்தளத்தில் எந்தவிதமான சரிவும் ஏற்படவில்லை.

அந்தவகையில், சமூக நலனை முன்னிறுத்தி வாக்காளர்களாகிய நீங்கள் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் வாக்களித்தால், நாம் மீண்டும் முன்னரைப் போன்று அநேக உள்ளூராட்சி சபைகளை கைப்பற்ற முடியும் என நம்புகின்றோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் கைப்பற்றப்பட்ட ஹஷிஸ் போதைப்பொருள்!

0
153 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய ஹஷிஸ் உள்ளிட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது!

இலங்கை கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் கொழும்பு 12 பகுதியில் நேற்று 2025 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையில் 19 கிலோ 348 கிராம் ஹசீஸ், 348 கிராம் ஹெரோயின் மற்றும் 4 கிராம் ஐஸ் உடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடற்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் படி, கிழக்கு கடற்படை கப்பல் ரங்கல நிறுவனம் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து நேற்று இரவு கொழும்பு 12 பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியிலுள்ள சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனையிடப்பட்டது. குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 கிலோ 348 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள், 348 கிராம் ஹெரோயின் மற்றும் 4 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 153 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானது என நம்பப்படுகிறது.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் 19 கிலோ 348 கிராம் ஹஷிஸ், 348 கிராம் ஹெரோயின் மற்றும் 4 கிராம் ஐஸ் போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.