2 நாட்கள் வன்முறைக்கு பின்னர் நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசுக்கு எதிராக ஜென் இசட் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் கடந்த திங்கட்கிழமை போராட்டத்தை தொடங்கினர்.
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் போராட்டம் கடும் தீவிரமடைந்து வன்முறையாக மாறியது. நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் உட்பட பெரும்பாலான அரசு கட்டிடங்களை போராட்ட இளைஞர்கள் தீ வைத்து எரித்தனர். அதிபர், முன்னாள் அதிபர்கள், பிரதமர், அமைச்சர்கள் என முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள், கட்சி அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
அமைச்சர்களை போராட்டக்காரர்கள் தெருவில் ஓட ஓட விரட்டி அடித்தனர். நிலைமை கைமீறிப் போனதைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார்.
அவரது அமைச்சரவை சகாக்கள் பலரும் ராஜினாமா செய்தனர். இந்த போராட்டத்தால் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.
ஏராளமான இந்தியர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர். 2 நாள் வன்முறையால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை நேற்று முன்தினம் இரவு முதல் ராணுவம் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில், நாடு தழுவிய ஊடரங்கு மற்றும் கட்டுப்பாட்டு உத்தரவுகளை ராணுவம் நேற்று பிறப்பித்தது.
போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. தெருக்கள், முக்கிய சாலைகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் நேற்று வன்முறை சம்பவங்கள் அடங்கின. மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு ராணுவம் அறிவுறுத்தியதால் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. அத்தியாவசிய பொருட்களை ஒருசிலர் மட்டும் சாலைகளில் சென்றபடி இருந்தனர். தெருக்கள், சாலைகளில் போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட வாகனங்கள் எலும்புக் கூடாக கிடந்தன. பல அரசு கட்டிடங்கள் தீயில் கருகி காட்சி அளிக்கின்றன. ஓட்டல்கள் பலவும் எரிக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை 5 மணியுடன் ராணுவத்தின் கட்டுப்பாட்டு உத்தரவுகள் முடிவடைந்த நிலையில், புதிதாக போராட்டம் எதுவும் நடக்காததால் நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பியது. இதனிடையே நேபாள நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் என அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் இடைக்கால தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சார்லி கிர்க் இளம் வாக்காளர்களை குடியரசுக் கட்சி ஆதரவாளர்களாக மாற்றுவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
அதன்படி உட்டா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்லி கிர்க் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் கழுத்தில் குண்டு பாய்ந்து சார்லி கிர்க் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த படுகொலை சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை சுட்டுக் கொன்றவர் யார்? எதற்காக சுட்டார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும், ஸ்வாட் பிரிவு காவல் துறையினர் சுட்டுக் கொன்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.
சார்லி கிர்க்கின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி டிரம்ப், அவரது படுகொலை சம்பவம் தேசிய துக்கமாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; அமெரிக்க இளைஞர்களின் இதயத்தை சார்லி கிர்க் போல் வேறு யாரும் புரிந்து கொண்டதில்லை. அவர் மீது அனைவரும் அன்பு வைத்திருந்தனர். இன்று அவர் நம்முடன் இல்லை. அவரது குடும்பத்தினருக்கு நானும் எனது மனைவி மெலனியாவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அமெரிக்காவின் மாபெரும் தியாகி சார்லி கிர்க்கை கவுரவிக்கும் விதமாக, அவரது படுகொலையை தேசிய துக்கமாக அனுசரித்து வரும் ஞாயிறு மாலை 6 மணி வரை நாடு முழுவதும் அமெரிக்க கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட உத்தரவிட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதன்கிழமை (10), பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர்.
பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தாமை மற்றும் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கான நிதியைக் குறைப்பது போன்ற கடுமையான விடயங்கள் அடங்கிய வரவு – செலவுத்திட்டத்தை பிரான்ஸ் அரசு நிறைவேற்ற முயற்சிப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ரோன் அரசின் ‘ரினைசன்ஸ்’ கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு பிரதமர்கள் மாறியுள்ளனர். அண்மையில், வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாததால், பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு பதவி விலகினார்.
இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், செபஸ்டியன் லெகோர்னு புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இதுவும் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மக்கள் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் புதிய சட்ட விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க பாராளுமன்றில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் ஏற்கனவே அவ்வாறான உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
நேற்று (10) பாராளுமன்றில் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை சபாநாயகர் நேற்றைய தினமே சான்றுரைப் படுத்தியிருந்தார்.
இதன்படி குறித்த சட்டம் நேற்றுமுதல் அமுலுக்கு வந்திருந்தது.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.
அவர் ஹம்பாந்தோட்டை கார்ல்டன் இல்லத்திற்கு குடிபெயர உள்ளதாக இலங்கை பொதுஜன பெரமுனவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதேநேரம், முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் என்று அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒப்படைக்கப்படாவிட்டால், எழுத்துப்பூர்வமாக அறிவிக்க எதிர்பார்ப்பதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி எதிர்காலத்தில் செயல்பட எதிர்பார்ப்பதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகுர்னுவை அதிபர் இமானுவேல் மேக்ரான் நியமித்தார்.
பிரான்ஸ் நாட்டின் அதிபராக மேக்ரோன் பதவி வகிக்கிறார். இவர் கடந்த 2024 ஜூன் மாதம் பார்லியை கலைத்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அதன்படி தேர்வு செய்யப்பட்ட பார்லியில், முதலில் கேப்ரியல் அட்டல் பிரதமராக பதவி வகித்தார். அவர் 2024 செப்டம்பரில் ராஜினாமா செய்த நிலையில், மைக்கேல் பார்னியர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது பிரதமராக ஃபிரான்சுவா பேரூ பதவியேற்றார்.
பாா்னியா் பதவி விலகிய பின்னா் ஃபிரான்சுவா பேரூவை பிரதமராக மேக்ரான் நியமித்தாா். இந்நிலையில், அரசின் கடன்களை எதிா்கொள்ள அவா் முன்மொழிந்த சிக்கனமான நிதிக் கொள்கைக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.
இதனால் நாடாளுமன்றத்தில் தனக்கான ஆதரவை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பை பேரூ நேற்று முன்தினம் மேற்கொண்டாா். அப்போது அவருக்கு எதிராக 364 வாக்குகள் பதிவானதால் அவா் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இதையடுத்து நாட்டின் தற்போதைய ராணுவ அமைச்சராக உள்ள செபஸ்டியன் லெகுர்னுவை, புதிய பிரதமராக நியமித்து அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று உத்தரவிட்டார். இதன் வாயிலாக, பிரான்ஸ் நாட்டில் ஒரே ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட நான்காவது பிரதமராக லெகுர்னு திகழ்கிறார்.
கிளிநொச்சியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் பல வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் பல கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட ஏ9 வீதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள், உதயநகர் மற்றும் விவேகானந்த நகர் ஆகிய பகுதிகளில் பல கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
இதில் ஏ9 வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நள்ளிரவு வேளையில் கடையின் முன் பகுதி கதவை உடைத்து சுமார் 15 லட்சம் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாகவும், திருடர்கள் (CCTV) பாதுகாப்பு கேமராவில் சிக்கியுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று உதயநகர் பகுதியில் வீடு ஒன்றில் மூன்று திருடர்கள் முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குல் நுழையும்போது பாதுகாப்பு கேமராவில் திருடர்கள் சிக்கியுள்ளனர்.
இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த முடிவை இன்று சபாநாயகர், பாராளுமன்றத்தில் முன்வைத்த பின்னரே ரஞ்சித் மத்துமபண்டார இதனை அறிவித்தார்.
எதிர்க்கட்சியின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என்று ரஞ்சித் மத்துமபண்டார மேலும் கூறினார்.
எனினும், இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் எதிர்க்கட்சி ஒருபோதும் சபாநாயகரை தோற்கடிக்க முடியாது என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைய குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை பொருந்தாததால் மற்றும் அது உரிய முறையில் இல்லாதததாலும் அதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, நிலையியல் கட்டளைகளின் கீழ், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பிக்க சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ள சட்டமா அதிபர் மற்றும் செயலகத்தின் அறிக்கையை சபைப்படுத்துமாறு கோரினார்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சபாநாயகரின் முடிவு குறித்து தனது கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு கோரினார், ஆனால் இது ஒரு விவாதம் அல்ல என்றும் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சபாநாயகர் கூறினார்.
இதனையடுத்து பாராளுமன்றத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டதுடன், குறித்த அறிவிப்பை கவனமாகப் படிக்குமாறு சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவரிடம் கூறினார்.
பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்காலத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் வசிக்கும் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட “கோழைத்தனமான இஸ்ரேலிய தாக்குதலை” கத்தார் வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
மேலும் இந்தத் தாக்குதலை “அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் அப்பட்டமான மீறல்” என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த பொறுப்பற்ற இஸ்ரேலிய நடத்தையையும், பிராந்திய பாதுகாப்பில் அதன் தொடர்ச்சியான குறுக்கீட்டையும், அதன் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குறிவைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் கத்தார் அரசு பொறுத்துக்கொள்ளாது என்று கத்தார் தெரிவித்துள்ளது.
என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இத்தாக்குதல் குறித்து உயர் மட்டத்தில் விசாரணைகள் நடந்து வருகின்றன எனவும் மேலும் விவரங்கள் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை தோஹாவில் தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் நடத்தியதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
“ஹமாஸின் உயர்மட்ட தலைவர்களுக்கு எதிரான இன்றைய நடவடிக்கை முற்றிலும் சுதந்திரமான இஸ்ரேலிய நடவடிக்கை” என்று நெதன்யாகு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.
“இஸ்ரேல் அதைத் தொடங்கியது, இஸ்ரேல் அதை நடத்தியது, இஸ்ரேல் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சமீபத்திய காசா போர் நிறுத்த முன்மொழிவை பரிசீலிக்க ஹமாஸின் பேச்சுவார்த்தையாளர்கள் ஒன்றுகூடிய நிலையில் இந்த தாக்குதல் நடந்ததாக ஹமாஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய மத்தியஸ்தராகவும், அமெரிக்க துருப்புக்களை வைத்திருக்கும் பிராந்தியத்தின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளமான அல் உதெய்த் விமான தளத்தின் தாயகமாகவும் இருக்கும் கத்தாரில் இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதல் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட துணை பணிப்பாளர் (Senior Deputy Director of Customs) ஜனாப் ஷஹாப்தீன் லுக்மான் 1998 முதல் இலங்கை சுங்கத்துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதுடன், நாட்டின் பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
மேலும் 560 க்கும் மேற்பட்ட இருபது அடி நீளமுள்ள கண்டைனர்களில் நாட்டுக்குள் வந்த (560 TEUs) அபாயகரமான கழிவுகளை வெற்றிகரமாக திருப்பி அனுப்புவதற்கு அவர் தலைமை தாங்கியுள்ளதாகவும் ஆசிய பசுபிக் சுங்கம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இருபது அடி நீளமுள்ள 104 கண்டைனர்களில் (104 TEUs) சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பாக்குகளை பறிமுதல் செய்து மேற்பார்வையிட்டுள்ளதுடன், உள்ளூர் விவசாயத்தை வெளிநாட்டு ஆபத்தான பூச்சிகள் மற்றும் நோய்க்கிருமிகளால் ஏற்படக்கூடிய தீங்குகளிலிருந்து பாதுகாத்து சிறப்பான சேவையை வழங்கியுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை கைவைக்கப்படாத சில பகுதிகளையும் தைரியமாக விசாரணைகள் செய்துள்ளதுடன், அனுமதிக்குப் பிந்தைய தணிக்கையில் அவரது நிபுணத்துவம் மூலம் எதிர்பாராத வருவாய் இலங்கை சுங்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளள்து.
மேலும் எருக்கலம்பிட்டியை சேர்ந்த ஜனாப் ஷஹாப்தீன் லுக்மானின் முயற்சிகள், துணிச்சலாக கண்டறிதல், தொழில்முறை அணுகுமுறை, பயனுள்ள மக்கள் தொடர்பு மற்றும் விடாமுயற்சி மூலம் இலங்கையின் நலன்களைப் பாதுகாப்பதில் சுங்கத்தில் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுவதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.