பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
இதன்படி பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் வேனுடன் மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த காலப்பகுதியில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாகனங்கள் வீதியோரத்தில் முறையாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விழிப்புணர்வு நாட்டில் உள்ள சகல பிரதேச செயலகங்களின் ஊடாக கடந்த 4 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் காட்டுப்பகுதியில் இன்று மாலை 7 மணி அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், வீதியை குறுக்கறுத்து செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதி ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நபர் மீது வீதியால் பயணித்த மற்றுமொரு வாகனம் ஏறி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
புது குடியிருப்பு ஒன்பதாம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் சானுசன் என்பவரே குறித்த விபதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர் தர்மபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக புது குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்கும், குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவினால் கொண்டுவரப்பட்ட நிலையில் மித்தெனியவில் கண்டறியப்பட்ட ஐஸ் போதைப்பொருள் சம்பவத்துடன் தொடர்புடைய 2 கொள்கலன்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. உட்லர் இதனைக் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் சம்பவத்தில் கண்டறியப்பட்ட 2 கொள்கலன்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள எண்களுக்கும், துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள எண்களுக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் 323 கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டமை தொடர்பில் சமூகத்தில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. ஆனால் இந்த இரண்டு கொள்கலன்களும் அதனுடன் தொடர்புடையவை அல்ல. ஏனென்றால் அந்த கொள்கலன்களின் எண்களை நாங்கள் ஆராய்ந்தோம்.
காரணம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அந்த 323 கொள்கலன்கள் தொடர்பாக விசேட விசாரணை நடத்தி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்களுக்கு வெளியே வேறு இரண்டு கொள்கலன்களைக் கண்டறிந்தது.
எனவே, இந்த இரண்டு கொள்கலன்களுக்கும் அந்த 323 கொள்கலன்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக கூற முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கற்பிட்டி பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி நிதியத்தின் முதலாவது உதவித் திட்டம் வழங்கி வைப்பு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
ஜனாதிபதி நிதியத்தின் உதவித் திட்டம் பிரதேச மட்டம் வரையான வேலைத்திட்டத்தின் ஊடாக கற்பிட்டி பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பயனாளிக்கான உதவி வழங்கும் நிகழ்வு கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் பல்வகைப்படுத்தலில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில் முதலாவது பயனாளியாக பள்ளிவாசல்துறை கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் ஏ.ஏ.எம். ஹாலிடீன் தெரிவு செய்யப்பட்டு அவருக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் (250,000) ரூபா காசோலை கற்பிட்டி பிரதேச செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எஸ் மர்ஜானா மற்றும் சமூக சேவை பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எஸ் பானு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வானது ஜனாதிபதி நிதியத்தின் பணிகள் பிரதேச மட்டத்திற்கு வெற்றிகரமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதற்கான சான்றினை உறுதிப்படுத்துகின்றது, மேலும் தகுதியான குடிமக்களுக்கு நேரடியான மற்றும் பரவலாக்கப்பட்ட ஆதரவை வழங்குவதனை நோக்காக கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள “சட்டப்படி வேலை செய்யும்” தொழிற்சங்க நடவடிக்கை இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
எந்தவொரு ஊழியரும் தன்னார்வ ஓய்வு திட்டத்திற்கு உடன்படவில்லை என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.
“முதற்கட்டமாக, சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை செப்டம்பர் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பில் தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல்முறைகள் காரணமாக இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்பட்டது.நேற்று அமைச்சருடன் இது குறித்து கலந்துரையாடினோம். ஆனால், இதன்போது திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜயசுந்தர மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோர் பிரதி பொலிஸ்மா அதிபர்களாகப் பதவியேற்க உள்ளனர்.
இவர்களில் மூவர் 1997 ஆம் ஆண்டு பயிற்சி உப பொலிஸ் பரிசோதகர்களாக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்தனர்.
இந்தப் பதவி உயர்வுகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட இந்த நான்கு பெண் பொலிஸ் அதிகாரிகளில், தர்ஷிகா குமாரி தற்போது பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
மேலும், அந்தத் தலைமையகத்தில் முதல் பெண் கட்டளை அதிகாரியாகப் பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.
பத்மினி வீரசூரிய தற்போது களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக உள்ளார். இதன் மூலம், இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஒரு மாவட்டத்திற்கு பொறுப்பேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ரேணுகா ஜயசுந்தர, பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராகவும், நிஷானி செனவிரத்ன ஆராய்ச்சி மற்றும் தகவல் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நால்வரில் மூத்த அதிகாரியான நிஷானி செனவிரத்ன, அரச புலனாய்வு சேவையில் நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 2,205ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தத் தொடர் நில அதிர்வுகளால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கங்கள் மக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, நாட்டின் உள்கட்டமைப்பையும் கடுமையாகப் பாதித்துள்ளன. இந்த நிலையில், இன்று காலை உள்ளூர் நேரப்படி சுமார் 6 மணியளவில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், ஜலாலாபாத் நகரில் இருந்து சுமார் 41 கிலோமீட்டர் வடகிழக்கே மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு மிகவும் வலுவாக இருந்ததால், பீதியடைந்த மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் அல்லது உயிர்ச்சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணங்களில் கடந்த வாரம், ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம், ஏராளமான கிராமங்களைத் தரைமட்டமாக்கியதுடன், ஆயிரக்கணக்கானோரை இடிபாடுகளில் சிக்க வைத்தது.
குறிப்பாக, குனார் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதி கிராமங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இடிபாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், பலி எண்ணிக்கை தற்போது 2,200ஐ கடந்துள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
பலியானோரின் எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளதாக தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவ கமாண்டோக்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கூடாரங்கள், முதலுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இருப்பினும், நிலச்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ள கரடுமுரடான மலைப்பாதைகள் மீட்புப் பணிகளுக்குப் பெரும் தடையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாட எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் இன்று (05) காலை மன்னாரிற்கு வருகை தந்தனர்.
மன்னார் தீவில் காற்றாலை அமைக்கப்படவுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எரிசக்தி அமைச்சர் தலைமையிலான குழு மன்னார் மாவட்டத்திற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (05) வருகை தந்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் 35 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதியில் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் காற்றாலை, கணிய மணல் போன்ற அழிவு திட்டங்கள் மன்னார் மாவட்டத்தில் இனியும் வேண்டாம் என்று ஒருமித்த குரலுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சௌத்பார் பகுதியில் 2 காற்றாலை கோபுரங்களும், தாழ்வு பாட்டில் 2 காற்றாலை கோபுரங்களும், தோட்டவெளியில் 2 காற்றாலை கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளது.
குறித்த 5 காற்றாலை கோபுரங்களும், 20 மெகா வாட் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.மேலும் ஓலைத்தொடுவாய் பகுதியில் 06 காற்றாலை மின் கோபுரங்களும், பேசாலை மேற்கில் 2 காற்றாலை மின் கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளது.குறித்த 8 காற்றாலை மின் கோபுரங்களும் 50 மெகா வாட் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் குறித்த 5 கிராமங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது குறித்து குறித்த கிராம மக்களின் கருத்துக்களை கேட்டறிய எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் மன்னாரிற்கு விஜயம் செய்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் முதலாவது கலந்துரையாடல் மன்னார் சாந்திபுரம் ,சௌத்பார் கிராமங்களை உள்ளடக்கி சாந்திபுரம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது அமைச்சருடன் அதிகாரிகள் வருகை தந்தனர்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், து.ரவிகரன், ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி அரசாங்க அதிபர் எம்.பிரதீப்,மன்னார் நகர பிரதேச செயலாளர் கா.காந்தீபன், மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்,அழைக்கப்பட்ட திணைக்கள பிரதி நிதிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மக்களுடன் கலந்துரையாடிய போதும் மக்கள் தமது கிராமங்களுக்குள் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தேவை இல்லை எனவும் குறித்த காற்றாலை மின் கோபுரங்களை அமைக்க தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் மன்னார் தீவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாலை மின் கோபுரங்களால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், மீனவர்கள் தொழிலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
மேலும் தமது கிராம மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் காற்றாலை கோபுரங்களை மன்னார் தீவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததோடு, எமது பகுதிக்குள் காற்றாலை அமைக்க ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம்.
எனினும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் மக்களுடன் கலந்துரையாடி தமக்கு சாதகமான பதிலை எதிர்பார்க்க முயற்சி செய்த போதும் கலந்து கொண்ட அனைத்து மக்களும் தமது பகுதிக்குள் காற்றாலை வேண்டாம், அமைக்க அனுமதி வழங்க மாட்டோம் என ஒருமித்து தெரிவித்தனர்.
இந்நிலையில் அமைச்சர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்து வெளியேறினர். குறித்த கலந்துரையாடல் குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கருத்து கேட்ட போதும் எவ்வித பதிலும் வழங்காது அங்கிருந்து வெளியேறினர்.
கற்பிட்டி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி மத்தியஸ்தர் சபையின் புதிய தலைவர், உப தலைவர் தெரிவும் புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை 9.00 மணிக்கு கல்பிட்டி பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் அதிதிகளாக மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவின் பயிற்சி உத்தியோகத்தர் ஜே.எச். திமுத் இசுர , கற்பிட்டி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ். மர்ஜானா, கற்பிட்டி பிரதேச செயலகத்தின் நிர்வாக கிராம அதிகாரி பீ.எம்.எம். பைனஸ், புத்தளம் மாவட்ட செயலகத்தின் மத்தியஸ்தர் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் என். அருனராஜ், கற்பிட்டி பிரதேச செயலக மத்தியஸ்தர் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.டீ. பெர்ணாந்து ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கற்பிட்டி மத்தியஸ்தர் சபையின் தலைவராக எதிர்வரும் மூன்று (2025 – 2028) வருட காலத்திற்கு கடந்த 35 வருடங்கள் மத்தியஸ்தர் சபையின் உறுப்பினராகவும் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக உப தலைவராக கடமையாற்றிய கற்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் அதிபர் டபள்யூ.பீ. சகீலா தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உபதலைவராக கற்பிட்டி பிரதேச செயலகத்தில் திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் ஜீ.வீ. அனூசா தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக நேசிக்கும் பெருமானார் நபி முஹம்மத் ﷺ அவர்கள் மனித சமூகத்துக்கு ஒரு விடிவாக சத்திய மார்க்கத்தையும், சமூக விடுதலையையும், சுய மரியாதையையும், அமைதியையும், சுபீட்சத்தையும் சுமந்தவர்களாக இப்பூமியில் வந்துதித்தார்கள்.
அதனால் தான் அல்லாஹு தஆலா நபி ﷺ அவர்களை பற்றி அல்-குர்ஆனிலே குறிப்பிடும் போது “உலக மக்களுக்கு அருட்கொடையாகவே அன்றி உம்மை நாம் அனுப்பி வைக்கவில்லை.” என சிறப்பித்துக் கூறுகிறான். (சூரா அல்-அன்பியா : 107)
மேற்படி அல்-குர்ஆனின் கூற்றுப் படி, அகிலத்தாருக்கு அருளாக அனுப்பப்பட்ட நபிகள் பெருமானார் ﷺ அவர்கள் ரபீஉல் அவ்வல் மாத்தித்திலே தான் பிறந்தார்கள் என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். உண்மையில் ‘ரபீஉன்’ என்றால் வசந்தம் என்று பொருளாகும். வசந்த காலத்தில் தான் தாவரங்கள் பூத்துக் குலுங்கி பூமிக்கு பசுமையையும், செழிப்பையும், அழகையும், ரம்மியத்தையும் ஏற்படுத்துகின்றன. அதுபோலவே ரபீஉல் அவ்வல் மாதத்தில் பிறந்த எமது உயிரிலும் மேலான நபி முஹம்மத் ﷺ அவர்கள் மனித சமூகத்துக்கு சத்திய மார்க்கத்தையும், இறையருளையும், சர்வதேசத் தூதையும் சுமந்து வந்தார்கள்.
அல்லாஹு தஆலாவினால் இவ்வுலகிற்கு அனுப்பட்ட அத்தனை நபிமார்களும் ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை வாழ்வு ஆகிய விடயங்களைத்தான் மக்களுக்கு போதித்தார்கள். இறுதி இறைத்தூதரான நபிகளார் ﷺ அவர்களும் அதே பணியினை மேற்கொள்வதற்காகத் தான் அல்லாஹு தஆலாவினால் இவ்வுலகிற்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்டார்கள்.
இதனை பின்வரும் அல்-குர்ஆன் வசனங்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
“அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்.” (சூரா அல்-ஜுமுஆ : 02)
“(நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம். (சூரா அல்-பகரா : 119)
அந்தவகையில் நபி ﷺ அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதம் பல சிறப்பம்சங்களைப் பெறுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மீலாதுந் நபி தினம் எனப்படும் நபிகளார் ﷺ அவர்களது பிறந்த தினமானது உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் வெளிப்படுத்தக்கூடிய உன்னதமான ஒரு நிகழ்வுக்குரிய தினமாகும்.
அன்னார் மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்கள். அனைவருடனும் பாகுபாடின்றி, அன்பாகவும் பண்பாகவும் பழகினார்கள். மனித நேயம், சிறுவர் உரிமை, பெண்கள் உரிமை, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பவற்றுக்காக அன்னார் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். எப்போதும் எல்லா நிலைமைகளிலும் நீதமாக நடந்துகொண்டதோடு ஏழை எளியோரை, அநாதைகளை அரவணைத்து வாழ்ந்தார்கள். பல்லின சமூகங்களையும் உள்ளடக்கிய ‘மதீனா சாசனம்’ எனும் நீதமான யாப்பை அறிமுகம் செய்தார்கள். ஆன்மிகம், லௌகீகம் ஆகிய இரண்டிலும் ஒருசேர மகத்தான வெற்றியைப் பெற்றார்கள். எனவேதான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மாமனிதராக அண்ணல் நபி ﷺ அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
நபி ﷺ அவர்கள் மூலம் அல்லாஹ் நபித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான். மறுமை வரைக்கும் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டும் பொறுப்பை அன்னாரிடம் ஒப்படைத்தான். எனவே எம் பெருமானார் ﷺ அவர்கள் மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழிகாட்டும் ஏக வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள். அம்மாமனிதரின் முழு வாழ்வுமே மனித குலத்திற்கான அழகிய முன்மாதிரிகளால் நிரம்பி வழிந்தன. இந்த உண்மையை அல்-குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:
“அல்லாஹ்வின் தூதரில் நிச்சயம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது”. (சூரா அல்-அஹ்ஸாப்: 21)
நபிகளார் ﷺ அவர்கள் மீது பற்றுவைத்தல் எனும்போது குறைந்தபட்சம் அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத்தும் ஸலாமும் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் – அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!) சொல்லல், அவர்களின் பெயர் கூறும் போதும் பிறர் கூறக் கேட்கும் போதும் கண்ணியப்படுத்தி ஸலவாத் சொல்லல், அவர்களது குடும்பத்தவர்கள் (அஹ்லுல்பைத்), தூய மனைவிமார்கள் மற்றும் நபித்தோழர்கள் (ஸஹாபாக்கள்) ஆகியோர் மீதும் அன்பும் கண்ணியமும் வைத்தல், ஹதீஸ்களை கற்றுக்கொள்ளல், சுன்னாக்களை பேணுதலோடு நடைமுறைப்படுத்தல், நபி ﷺ அவர்களின் ஆளுமைப் பண்புகளை புரிந்துகொள்ளவும் படித்து விளங்கவும் நேரம் ஒதுக்குதல், அறியாத மக்களுக்கு அன்னாரை அழகிய முறையில் அறிமுகம் செய்தல் மற்றும் அவர்களை தவறாகப் புரிந்து வைத்திருப்பவர்களுக்கு அப்புரிதலைக் களைந்து, சரியான புரிதலை அவர்களுக்கு வழங்கி நபிகளார் ﷺ அவர்கள் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தல் என்பன அன்னாரின் சமூகத்தினர் என்ற வகையில் எமது கடமையும் பொறுப்புமாகும்.
எம் பெருமானார் அவர்கள் கொண்டுவந்த மார்க்கமும், அவர்களின் வாழ்க்கை முறைகளும், எல்லா மனிதர்களாலும் எடுத்து நடக்க இலகுவானதாகவும், அனைத்து சூழ்நிலைகளுக்கும் பொருத்தமானதாகும் என்பது உலகம் வியக்கும் விடயமாகும்.
அன்னார் கொண்டு வந்த இஸ்லாமியத் தூது ஈருலக வெற்றிக்கும் அடிப்படையாக அமைந்திருந்தது. சாந்தியையும் சமாதானத்தையும் போதித்து நின்றது. அந்தத் தூது அநாகரிகமாக வாழ்ந்த மக்களை நாகரீகத்தின் பால் அழைத்துச் செல்லக்கூடியதாக இருந்தது.
“முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள். மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள்.” (சூரா அல்-ஹுஜ்ராத் : 02)
மேற்படி திருமறை வசனங்களின் ஊடாக அன்பு நபி ﷺ அவர்களுக்கு முன்னால் தமது சப்தத்தை உயர்த்திப் பேசுவதையும் அவர்களோடு அவமரியாதையாக நடந்து கொள்வதையும் அல்லாஹு தஆலா தடை செய்துள்ளான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
அதன்படி, நபி ﷺ அவர்களின் உத்தம தோழர்கள் அவர்களை தம் உயிருக்கும் மேலாக நேசித்ததோடு அவர்களிடம் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் பண்பாட்டோடும் நடந்துகொண்டார்கள்.
எனவே, நாமும் அதேபோன்று அல்லாஹு தஆலா வழிகாட்டியதன் அடிப்படையில் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் எமது உயிரை விடவும் மேலான நபி ﷺ அவர்கள் மீது நேசம் வைப்போம். அவர்களது வாழ்க்கையை ஆழமாகக் கற்றுக் கொள்வதோடு, எமது பிள்ளைகளின் உள்ளங்களிலும் அவர்கள் மீதான அன்பையும் பற்றையும் விதைப்போம். அல்லாஹ் எம்மனைவரையும் இறுதிநாள் வரை நபி ﷺ அவர்கள் காட்டித்தந்த வழியில் வாழச்செய்வதோடு அன்னாரோடு சுவனத்தில் ஒன்றாக வாழும் பாக்கியத்தையும் தந்தருள்வானாக!
நிறைவேற்று குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை