Thursday, February 6, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 14

மன்னாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்!

0

மல்வத்து ஓயா படுகையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு காரணமாக, தந்திரிமலையிலிருந்து கீழ் பகுதிகளில் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை காரணமாக, வெங்கலச்செட்டிகுளம், மடு, முசலி மற்றும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த  தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் இந்த நிலை குறித்து மிகுந்த அவதானம் செலுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அறுகம்பை தாக்குதல் குறித்த ஷாக்கிங் நியூஸ்!

0

அறுகம்பை பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக கிடைத்த தகவல் குறித்து விசாரணை செய்து வரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, தற்போது இந்த விடயம் தொடர்பாக கூடுதல் தகவல்களைக் கண்டறிந்துள்ளது.

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் அறுகம்பை சுற்றுலாப் பகுதியை குறிவைத்து, சிறைச்சாலைக்குள் இருந்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நேற்று (17) நீதிமன்றத்தில் தெரிவித்தது.

குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத சதித்திட்டம் தொடர்பாக ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த விசாரணை அதிகாரிகள், விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகள் சிறையிலிருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறியுள்ளனர். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அருகம்பையில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த சந்தேகநபர்கள் திட்டமிட்டிருந்ததாகவும், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் சுற்றுலாப் பகுதியின் வீடியோ மற்றும் புகைப்படங்களைச் சேகரிக்க ஆட்களை நியமிக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாத புலானாய்வு அதிகாரிகள் நேற்று யோகராஜா நிரோஜன், சுரேஷ் ரஞ்சன மற்றும் டபிள்யூ.ஏ.தொன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இதற்கிடையில், இந்த பயங்கரவாத சதியின் முதல் சந்தேகநபரான பிலால் அஹமட், 2008 ஆம் ஆண்டு கெஸ்பேவா டிப்போவில் பேருந்து மீது குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்தியதாக சிறையில் உள்ள ஆனந்தன் சுகதரனுடன் சிறையில் தொடர்பு கொண்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரஜிந்த கந்தேகெதர, முதலாவது சந்தேக நபரிடமிருந்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அல்லது பொலிஸார் பல ஆவணங்களில் கையொப்பங்களைப் பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அப்போது, ​​சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதிலிருந்து நீதிமன்றம் அவர்களைக் கண்காணித்து வருவதாக நீதவான் தெரிவித்தார்.

சந்தேக நபர்களைக் கண்காணிக்கச் சென்றபோது, அவை குறித்து அவர்கள் ஒருபோதும் முறைப்பாடு அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

அதன்படி, இரு தரப்பினரும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கனடா பிரதமர் பதவியில் கை வைத்த இந்தியா!

0

கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரா ஆர்யா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

வட அமெரிக்க நாடான கனடாவில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சொந்த கட்சிக்குள்ளேயே, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த சூழலில், லிபரல் கட்சி தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக சமீபத்தில் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.

பதவியை ராஜினாமா செய்தாலும், அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், அக்கட்சி சார்பில் கனடா பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்பதால், கட்சித் தலைமை பொறுப்பை ஏற்க அங்கு கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரா ஆர்யா குதித்துள்ளார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்த அவர், அந்நாட்டு பார்லிமென்ட் கூட்டத்தில் தனது தாய்மொழியான கன்னடத்தில் உரை நிகழ்த்தினார்.

அவர் பேசியதாவது: நமது நாடு எதிர்கொண்டிருக்கும் கட்டமைப்பு சவால்களை சரிசெய்ய தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. நமது குழந்தைகள், பேரப்பிள்ளைகளுக்கு உறுதியான அரசியல் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கனடா மக்களுக்கு எது சிறந்ததோ, அந்த விஷயத்திற்காக உழைக்க எப்போதும் தயாராக இருக்கிறேன். லிபரல் கட்சியின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தால், என்னுடைய அறிவு மற்றும் அனுபவத்தை கொடுத்து செயல்படுவேன், என்று கூறினார்.

இந்திய வம்சாவளியான சந்திரா ஆர்யா கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், தர்வாடு மாவட்டத்தில் எம்.பி.ஏ., பட்டப்படிப்பு படித்து முடித்தார். அதன்பிறகு, அவர் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.

21 மற்றும் 22 இல் சூடு பிடிக்கவுள்ள பாராளுமன்றம்!

0

எதிர்வரும் 21 மற்றும் 22 இல் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் தொடர்பான இரண்டு நாள் சபை ஒத்திவைப்பு விவாதம்

பாராளுமன்றம் 2025 ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். கௌரவ சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்ன தலைமையில் 2025.01.10 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், மு.ப. 11.30 முதல் பி.ப. 5.30 வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்று, 22 ஆம் திகதி புதன்கிழமை இரண்டாவது நாள் விவாதத்துக்காக ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

ஜனவரி 22 ஆம் திகதி புதன்கிழமை, மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 11.30 முதல் பி.ப. 5.30 வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இரண்டாவது நாளாகவும் இடம்பெறும்.

ஜனவரி 23 வியாழக்கிழமை, மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மு.ப. 11.30 முதல் பி.ப. 3.30 வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2413/37 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் 2399/16 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2384/35 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2377/39 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அதனையடுத்து, பி.ப. 3.30 முதல் பி.ப. 5.30 வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 24 வெள்ளிக்கிழமை, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக முழு நாளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், ருக்மன் சேனாநாயக்க, ரொஜினோல்ட் பெரேரா, சிறினால் த மெல் மற்றும் மொஹமட் இல்யாஸ் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக அன்றைய தினம் மு.ப. 9.30 முதல் பி.ப. 5.30 வரை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

அத்துடன், பாராளுமன்றம் கூடும் இந்த நான்கு நாட்களிலும் மதிய உணவு இடைவேளைக்காக பி.ப. 12.30 மணி முதல் பி.ப. 1.00 மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட மூவர்!

0

பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பாராளுமன்ற பணியாளர் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்

பாராளுமன்ற பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பாராளுமன்ற பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பல கட்டங்களாக விசாரணைகள் நடத்தப்பட்டு இதன் அடிப்படையில் மூன்று பணியாளர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களின் பரிந்துரைக்கு அமைய குறித்த மூன்று பணியாளர்களையும் பணிநீக்கம் செய்வதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்கள் அண்மையில் (09) ஒப்புதல் வழங்கினார்.

2021 மற்றும் 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாராளுமன்ற பெண் பணியாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் 2023 ஜூலை 30 மற்றும் ஓகஸ்ட் 02ஆம் திகதிகளில் பத்திரிகைகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து அப்போதைய கௌரவ சபாநாயகரின் அறிவுறுத்தலுக்கு அமைய இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பாராளுமன்றத்தின் அப்போதைய நிர்வாகப் பணிப்பாளர் தலைமையில் மூவர் அடங்கிய உள்ளக விசாரணைக் குழுவை பாராளுமன்ற செயலாளர் நாயகம் 2023.08.04ஆம் திகதி நியமித்திருந்தார்.

இந்தக் குழு முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய பாராளுமன்ற பணியாளர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததுடன், குழுவின் அறிக்கை 2023.08.23ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலதிக அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக குறித்த அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இது தொடர்பான விசாரணை பொலிஸ்மா அதிபரின் ஊடாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பொலிஸ் பிரிவின் விசாரணைக்கு அமைய மற்றுமொரு பாராளுமன்ற பணியாளர் கைது செய்யப்பட்டு 2024.01.30ஆம் திகதி குறித்த பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கு அமைய இது தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதையடுத்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என குற்றஞ்சாட்டப்பட் பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் ஒழுக்காற்று விசாரணையை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன நியமிக்கப்பட்டார்.

இந்த ஒழுக்காற்று விசாரணையின் இறுதி அறிக்கை 2024.12.23ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஹானி ரோஹணதீர அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், இதனை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மூவரும் இடை நீக்கம் செய்யப்பட்ட தினத்திலிருந்து பணி நீக்கம் செய்யுமாறு கௌரவ சபாநாயகரிடம் விடுத்த பரிந்துரைக்கு அமைய இவர்களைப் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளியானது இலங்கை குறித்த முக்கிய அறிக்கை!

0

இலங்கையில் பல்வேறு வகையான நெருக்கடிகளுக்கு வழிவகுத்த பல காரணங்கள் குறித்த தகவல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 2025 உலக அறிக்கையை வௌியிட்டு வௌிப்படுத்தியுள்ளது.

546 பக்கம் கொண்ட இந்த உலக அறிக்கை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் மனித உரிமைகளை மதிப்பாய்வு செய்கிறது.

உரிமை மீறல்கள், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான பாகுபாடு, போராட்டக்காரர்களை மௌனமாக்க முயலும் சட்டங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் நடைமுறைகள் ஆகியவை இலங்கையில் பல நெருக்கடிகளுக்கு பங்களித்துள்ளன என்று அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  ஆட்சிக்கு வந்த புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நீண்டகால மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக உறுதியளித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறித்த அறிக்கையில் சுட்டிகாட்டியுள்ளது.

நியாயமான பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தவும், பயங்கரவாதத்தடைச் சட்டத்தினைத் திருத்துவதாகவும்  ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது நடத்தப்பட்ட பரந்தளவிலான மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு அவர் ஆதரவளிக்கவில்லை என உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால், உரிமைகளில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கூறினார்.

முந்தைய நிர்வாகத்தால் அடக்குமுறைச் சட்டங்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை பயன்படுத்தி தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் சமூக இடத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அரசு சாரா நிறுவன செயலகத்தில் சிவில் சமூக அமைப்புகள் பதிவு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தினாலும், அவை கட்டாயக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

முந்தைய அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்களின்படி,  2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 46 கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்கள் இடம்பெற்றதாக கூறிய போதுலும்,  இதுபோன்ற 9 சம்பவங்கள் மட்டுமே நடந்ததாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதன் உலக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டுகிறது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக  2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யுக்திய நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டதாகவும், 2024 மே மாதத்திற்குள் பல சந்தர்ப்பங்களில் எந்தவொரு  தெளிவான ஆதாரங்கள் இல்லாமல்  சுமார் 100,000 பேர் கைது செய்யப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிடுகிறது.

இவ்வாறான நிலையில், புதிய ஜனாதிபதி இலங்கையின் பல மனித உரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடங்குவார் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 2025 உலக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

நாகவில்லுவில் இலவச மருத்துவ முகாம்!

0

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை ஏற்பாட்டில் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் இன்று 18.01.2025 சனிக்கிழமை புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி ஜம்மிய்யதுல் உலமா மற்றும் எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா புத்தளம் கிளையின் பூரண அனுசரணையுடன், புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலையின் ஒத்துழைப்புடனும் குறித்த இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இவ் வைத்திய முகாமில் ஆயுர்வேத வைத்திய குழாம் மூலம் பொதுமக்களுக்கு வைத்திய இலவச வைத்திய ஆலோசனைகளும், மருந்துகளும்  வழங்கி வைக்கப்பட்டதுடன் தொற்று நோய்கள் தொடர்பாக நோயாளிகளுக்கு விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு விஷேட மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதுடன், முன்னூறுக்கும் மேற்பட்ட மக்கள் குறித்த வைத்திய முகாமில் இலவச மருத்துவ உதவிகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இலவச வைத்திய முகாமிற்கு ஊரின் சிவில் அமைப்புக்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் தமது பூரண பங்களிப்பை வழங்கி இருந்தமை சிறப்பம்சமாகும்.

அமெரிக்காவில் டிக்டொக் யிற்கு தடை!

0

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

‘டிக் டாக்’ எனப்படும், மொபைல்போன் செயலி உலகளவில் பிரசித்தம். இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிக்காட்டும் களமாக இது இருப்பதால் வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர். சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது.

அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்த தடை இந்த வார இறுதியில் அமலுக்கு வருகிறது.

இதை எதிர்த்து, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிக் டாக் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை எனக்கூறியுள்ளது.

இதனால், இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்த செயலிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த அரசாங்கத்தினால் மக்களுக்கு மனவருத்தம்!

0

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்கு முன்னர் வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் அரசாங்கம் நிறைவேற்றாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாக வேலுசாமி இராதாகிருஸ்ணன் கூறினார். 

அரசாங்கத்தின் முதிர்ச்சியின்மையே சவால்களை முகங்கொடுக்க முடியாமல் உள்ளமைக்கு காரணம் எனவும் அரசாங்கத்தை நடத்துவதற்கு புதுமுகங்கள் மாத்திரம் போதாது எனவும் குறிப்பிட்டார். 

எனவே முதிர்ச்சியடைந்தவர்கள் சிலரும் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார். 

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். 

கல்பிட்டியில் தொடர்ந்து சிக்கும் கடத்தல் பொருட்கள்!

0

இலங்கை கடற்படையினரால், 2025 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி கல்பிட்டி பராமுனை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் டிங்கி மூலம் கொண்டு செல்லப்பட்ட, அனுமதிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவிலான சுமார் இரண்டாயிரத்து முப்பத்தேழு (2137) ஹேக் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, 2025 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நிறுவனத்தின் கடற்படையினர், கல்பிட்டி பராமுனை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) பயணிப்பதை அவதானித்து ஆய்வு செய்தனர்.

அங்கு, குறித்த டிங்கியில் சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட பதினைந்து (15) பைகளில் அடைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அளவை விட (07 செ.மீ.க்கும் குறைவான சுற்றளவு) சுமார் இரண்டாயிரத்து நூற்று முப்பத்தேழு (2137) கையிருப்புடன் சந்தேகநபர் ஒருவர் (01) மேற்படி டிங்கியில் சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட ஒரு (15) தோள்பட்டை பையில் அடைக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட அளவை விட (சுற்றளவு 07 செ.மீ.க்கும் குறைவான) இரண்டாயிரத்து நூற்று முப்பத்தேழு (2137) கையிருப்புடன் சந்தேகநபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்பிட்டி மண்டலக்குடா பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர், ஹக் சங்குகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.