Tuesday, November 11, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 158

அனுராதபுர பகுதிகளில் 21 மணி நேர நீர் வெட்டு!

0

நீர் விநியோகம் துண்டிப்பு குறித்த அறிவித்தல் – அனுராதபுரம்

அத்தியவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இன்று (29) இரவு 9.00 மணி முதல் நாளை (30) மாலை 06.00 மணி வரையில்அனுராதபுரத்தின் குறிப்பிடத்தக்க பிரதேசங்களில் 21 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நீர் விநியோகம் துண்டிக்கப்படும் பிரதேசங்கள் | அனுராதபுரம் வடக்கு நீர் விநியோக அமைப்பு

கலத்தேவ, நெலும்கன்னியா, தரியங்குளம், கல்குளம், கவரெக்குளம், வண்ணம்மடுவ, குஞ்சிக்குளம், குருந்தன்குளம், மாத்தளை சந்தி, சாலிய மாவத்தை, தன்னயன்குளம், யாழ்ப்பாண சந்தி, பண்டாரபுளியங்குளம், தெப்பன்குளம், ஜெயந்திகிராமம், சாலியபுர, மங்கடவல, லிங்கலபார, கட்டமான்குளம்.

அனுராதபுரம் புதிய நகர நீர் வழங்கல் அமைப்பு – அனுராதபுரம் கட்டம் 1

மிஹிந்தலை நீர் விநியோக அமைப்பு

கந்துவட்டபார, ருவங்கம, வெல்லமொரண, தரியங்குளம், பலுகஸ்வௌ, சட்டம்பிகுளம், அம்பதலாகம, பொலிஸ் கிராமம், மஹிந்த ராஜபக்ஷ மாவத்தை, கிரிந்தேகம, கன்னட்டிய மற்றும் குருதன்குளம்.

வெளியாகிய அத்தியாவசிய பொருட்களின் விலை!

0

பல அத்தியாவசிய பொருட்களின் மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி வெள்ளை முட்டை, பால்மா, கோதுமை மா, சீனி, பருப்பு,உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களுக்கு மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வெள்ளை முட்டையின் விலை 28-35 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் விலை 870-1,000 ரூபாவாகவும்,ஒரு கிலோகிராம் கோதுமை மா 155-163 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 228-245 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பருப்பு 275-293 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 160-180 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 210-220 ரூபாவாகவும், உள்ளூர் அரிசி 220-230 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் அரிசி 210-220 ரூபாவாகவும், நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

கையடக்க தொலைபேசிகளுக்கு தடை!

0

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் கொள்வனவு செய்ய வேண்டாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, பொதுமக்களிடம் கோரியுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் விளக்கமளிக்கையில்,

“எமது நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் வாங்க வேண்டாம் என்று பொதுமக்களை தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.”

“இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத தொலைபேசி பயன்பாட்டைத் தடுக்க விரைவில் ஒரு புதிய தானியங்கி அமைப்பை நாங்கள் செயல்படுத்துவோம்.”

“அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகளால் நமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறைத்து நாட்டில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களைப் பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.”

அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகள் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக விரோத நடவடிக்கைகளைக் குறைப்பதற்கும், கையடக்க தொலைபேசிகள் மூலம் சட்டவிரோத பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பதை மேலும் வலுப்படுத்துவதற்கும் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் சந்தையில் சட்டப்பூர்வ கையடக்க தொலைபேசிகளின் பெருக்கம் அதிகரிப்பதன் காரணமாக எதிர்காலத்தில் விலைகள் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.” என்றார்.

சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்!

0

தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக எம்.என்.எம்.யஸீர் அறபாத் சத்தியப்பிரமாணம்

மாவடிச்சேனை, பஸீர் வீதியைச்சேர்ந்த முஹம்மது நஸீர் முஹம்மது யஸீர் அறபாத் தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக இன்று (28) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹம்மட் பஷீல் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக இளங்கலைப் பட்டதாரியும், மாவடிச்சேனை மஸ்ஜித் மஸீத் ஸாலிஹ் அல் மஸீத் பள்ளிவாயலின் செயலாளரும், பத்தி எழுத்தாளரும், இளம் சமூகச்செயற்பாட்டாளருமாவார்.

மாவடிச்சேனை அல்-இக்பால் வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) என்பவற்றின் பழைய மாணவரான இவர் முஹம்மது நஸீர், மர்ஹுமா பாத்திமா தம்பதிகளின் புதல்வருமாவார்.

தேவைக்கு ஏற்ப சட்டம் மாற வேண்டும்!

0

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் மேற்கொள்ளக் கூடிய சாத்தியமான அனைத்து முடிவுகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும்

• பொருளாதாரத்தை சீராக்க சுங்கத் திணைக்களம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

• கடந்த ஆண்டில் சுங்கம் அடைந்த இலக்குகளை வரவேற்கிறேன்

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும் தற்போதைய அரசாங்கம் சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு நேற்று (27) பிற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்த வருடம் சர்வதேச சுங்க தினம் ” சுபீட்சமான தேசத்தை உருவாக்க வினைத்திறனான சுங்கத் திணைக்களம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது.

1952 ஆம் ஆண்டு 17 ஐரோப்பிய நாடுகளின் பங்கேற்புடன் சுங்க ஒத்துழைப்பு கவுன்சிலாக நிறுவப்பட்ட இந்த சர்வதேச அமைப்பில் 1967 ஆம் ஆண்டு இலங்கை உறுப்பினராக இணைந்தது. 1994 ஆம் ஆண்டில், சுங்க ஒத்துழைப்பு கவுன்சில் உலக சுங்க அமைப்பு என பெயரிடப்பட்டது.

1953 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற சுங்க ஒத்துழைப்பு கவுன்சிலின் முதல் அமர்வை நினைவுகூரும் வகையில் இந்தத் தினம் சர்வதேச சுங்க தினமாக பெயரிடப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி, உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள சுங்க நிறுவனங்கள் சர்வதேச சுங்க தினத்தைக் கொண்டாடுகின்றன.

யுகத்திற்கு ஏற்ற நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகிய நிறுவனங்களில் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

காலத்தின் சவால்களுக்கு ஏற்ப சட்டம் அல்லது நிறுவனங்கள் மாற வேண்டும் என்றும் எந்தவொரு சட்டமோ அல்லது நிறுவனமோ எக்காலமும் நிலையாக இருக்க முடியாது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்:

கடந்த ஆண்டு சுங்கத்திற்கு வழங்கப்பட்ட பொறுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை சீராக்க சுங்கம் மேற்கொண்ட முன்னெடுப்புகள் பாராட்டத்தக்கவை. கடந்த ஆண்டு சுங்கம் அடைந்த இலக்குகளை நாங்கள் பாராட்டுறோம். வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை, வருவாய் இலக்குகளை அடைவதன் மூலம் மட்டும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, வருமான விகிதத்தை அதிகரிக்க வேண்டும். பொருளாதார சரிவு காரணமாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சந்தை சுருங்கியது. சர்வதேச நாணய நிதியத்தின் அளவீடுகளின்படி நாம் அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறோம். எனவே, மேலோட்டமாகப் பார்க்கும்போது பொருளாதார தேகம் மீண்டுவிட்டதாகத் தோன்றினாலும், முழு பொருளாதார கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொருளாதார நெருக்கடியை சீராக்க நாம் கவனமாக செயற்பட வேண்டும்.

ஒரு சிறிய தவறு கூட பொருளாதாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். எனவே, சுங்கத் திணைக்களம் 2550 பில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டுவதற்கு கூட்டாகச் செயல்பட வேண்டும்.

சுங்கத்திற்கான வசதிகளை வழங்குவது தொடர்பிலும் புதிய சம்பள அளவை ஸ்தாபிப்பது தொடர்பிலும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அது குறித்து நிதியமைச்சு, திறைசேரியுடன் கலந்துரையாடி தீர்வொன்றை வழங்க எதிர்பார்க்கிறேன்.

இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது. அரச சேவையை மேலும் திறம்படச் செயற்படுத்த, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தை இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. வலுவான நிறுவன கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

முன்னைய அரசியல் தரப்பு மற்றும் அரச சேவை பொறிமுறைக்கு இடையே முரண்பாடுகள் இருந்தன. அந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்த அரசியல் தரப்பில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களை சரியான நேரத்தில் மேற்கொள்ள முடியவில்லை. சரியான நேரத்தில் நல்லதொரு நிறுவன கட்டமைப்பை உருவாக்க தவறியதால் எதிர்பார்க்கப்பட்ட பிரதிபலன்கள் கிடைக்கவில்லை. அதனால் நாம் பல விடயங்களை கையகப்படுத்தும் முன்பாக வெளியாட்கள் அவற்றை கைப்பற்றிக் கொண்டனர். இதன் விளைவாக, இலங்கையின் இயற்கையான அமைவிடத்தைப் பயன்படுத்துவதற்கான சில வாய்ப்புகளை ஒரு நாடு என்ற வகையில் இழந்திருக்கிறோம்.

எதிர்காலத்தில் இலங்கை துறைமுகத்தில் 113 இலட்சம் கொள்கலன் செயற்பாடுகளை முன்னெடுக்க தேவையான முன்னெடுப்புகள் செய்யப்பட வேண்டும். அதற்கான கூட்டு முயற்சியை ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் நாம் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல முடியாது. இந்த வருடத்தில் சுங்க திணைக்களத்திற்கு 2550 பில்லியன் ரூபா வருமான இலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, சிறப்பாக பணியாற்றிய 20 சுங்க அதிகாரிகளை பாராட்டும் விதமாக உலக சுங்க அமைப்பின் சான்றிதழ்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் இரண்டு அதிகாரிகளுக்கு தகைமை விருதுகளும் வழங்கப்பட்டன.

அதனையடுத்து சுங்கப் பணிப்பாளர் நாயகத்தினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு சுங்க நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் உட்பட சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி!

0

2025 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு கூடியது

பிரதேச மட்டத்தில் ஜனாதிபதி நிதிய சேவைகளை வழங்க அனுமதி

மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான ஜனாதிபதி நிதியிலிருந்து பணியாளர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கவும் திட்டம்

நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை கிராம மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கும் பிரதேச செயலகம் மூலம் சேவைகளை இணையவழி(ஒன்லைன் முறை) மூலம் வழங்குவதற்கும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது, ​​இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகள் உண்மையாக மக்களைச் சென்றடையும் வகையில் வினைத்திறனான சேவைகளை வழங்கும் வகையில் திட்டம் தயாரித்தல், புதிய யோசனைகள் மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலானோர் காத்திருப்பது குறித்து இதன் போது ஆராயப்பட்டது. இதற்கான தீர்வாக கடமை நேரத்திற்குப் பிறகு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கும் அந்த சேவையை முன்னெடுக்கும் பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி ஒதுக்குவது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. தற்பொழுது இந்த முறைமை கராபிடிய மருத்துவமனையில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகிறது.எதிர்காலத்தில் அதனை தேசிய மருத்துவமனை, கண்டி பெரியாஸ்பத்திரி மற்றும் ரிச்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனை என்பவற்றிலும் முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வசதிகளை வழங்குவதை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகளை மையமாகக் கொண்டு புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் தற்பொழுது முன்னெடுக்கப்படும் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொசான் கமகே, பேராசிரியர் ஜே.ஆர்.பி. ஜயக்கொடி, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் சந்திரசிறி மாயாதுன்னே மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நாமலுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

0

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இதற்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை தாக்கல் செய்திருந்த நிலையில் நாமல் ராஜபக்ஷ இந்த வழக்கில் ஒரு சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். 

பெளத்த விகாரைக்குள் கைக்குண்டுகள்!

0

பெலியத்த பொலிஸ் பிரிவின் பட்டியவெல நிஹலுவ பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றின் நிலப்பகுதி ஒன்றில் இருந்து துருப்பிடித்த இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெலியத்த பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (27) மாலை இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

நிஹலுவ பகுதியில் உள்ள விகாரையின் நிலப்பகுதி ஒன்றில் கிணறு அமைந்துள்ள பகுதியை சுத்திகரிக்க உழவு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட போது வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்டுள்ளது.

அதன்படி, அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது வெடிக்காத மற்றும் துருப்பிடித்த இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெலியத்த பொலிஸார் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் இந்த விடயத்தைப் பதிவு செய்து, இரண்டு கைக்குண்டுகளையும் செயலிழக்கச் செய்ய விசேட அதிரடிப் படை அதிகாரிகளை அழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஜும்மா நிகழ்த்த AK47 கொடுத்தவர் மர்ஹூம் Dr.இல்யாஸ்!

0

தமிழ் – முஸ்லிம் அரசியல் இரண்டறக் கலந்திருந்த காலத்தில் இன்றியமையாதவராக இருந்த ஒருவர்  டாக்டர் ஐ.எம்.இல்யாஸ் 

அனுதாபப் பிரேரணையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சபையில் தெரிவிப்பு

தமிழ் மக்களின்  அரசியலோடு தமிழ் பேசும் முஸ்லிம்களுடைய அரசியலும் இரண்டறக் கலந்திருந்த  காலப் பகுதியில் அதில் ஓர் இன்றியமையாத அங்கமாக இருந்தவர்தான் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ் என பாராளுமன்றத்தில் சென்ற வெள்ளிக்கிழமை அவரது அனுதாப பிரேரணை மீது உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ஹக்கீம் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,

 மறைந்த ஐதுரூஸ் முஹம்மத் இல்யாஸ் என்ற ஆளுமை இந்த நாட்டின் முஸ்லிம்களுடைய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தடயத்தைப் பதித்துச் சென்ற ஆளுமை என்றால் அது மிகையாகாது.

புத்தள மாவட்டத்திலிருந்து தன்னுடைய அரசியலை ஆரம்பித்தாலும், அவருடைய அரசியல் உண்மையில் 1977 ஆம் ஆண்டு  அன்று முஸ்லிம் ஐக்கிய முன்னணி ஊடாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அவருடைய முதலாவது  பிரசுரம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

 அதில் அவர் சொல்லியுள்ள விடயம் மிகவும்  முக்கியமானது.

“புத்தளத் தொகுதி வாக்காளப் பெருமக்களே, தேர்தல் களம் உங்களை அழைக்கின்றது. நீங்கள் தயார்தானா? சத்தியத்தின் காவலன், இஸ்லாமிய தமிழினத்தின் இளைய தலைவன் டாக்டர் ஐ.எம். இல்யாஸ் தமிழினத்தின் விடுதலைவேண்டி தேர்தல் களத்தில் குதிக்கும் இறுதிப் போர் நடக்கவிருக்கின்றது. அதர்மத்தின், அக்கிரமத்தின் அணிவகுப்புக்கு எதிரே ஆட்சிப் பலமும், ஆயிரம் கோடி பண பலமும் நம் எதிரே நிற்கின்றன. தந்தை செல்வாவின் அகிம்சை கொள்கை என்ற ஆயுதம் மட்டும்தான் நம்மிடமுள்ளது. கையில் காசு இல்லை; நம் நெஞ்சில் மாசும் இல்லை, கனந்து எரியும் கொள்கைக் கனல் உண்டு” என்று இப்படி மிக உற்சாகமான, புரட்சிகரமான வார்த்தைப் பிரயோகங்களோடு, “டாக்டர் ஐ.எம். இல்யாஸ் அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்த உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என்ற ஒரு தேர்தல் பிரசாரத்தோடுதான் அவருடைய  அரசியல் ஆரம்பித்திருக்கின்றது.

எனவே, தமிழ் மக்களுடைய அரசியலோடு தமிழ் பேசும் முஸ்லிம்களுடைய அரசியலும் இரண்டறக் கலந்திருந்த 1977 ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தல் காலத்திலிருந்து இலங்கை முஸ்லிம்களின் அரசியலில்  இன்றியமையாத ஓர் அங்கமாக இருந்தவர்தான் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ்.

அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினராக எங்களோடு இணைந்து கொண்டு அவருடைய பணிகளை ஆரம்பித்து,  யாழ்ப்பாணத்தின் பாராளுமன்ற உறுப்பினராக முதலில் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், புத்தளம் மாவட்டத்தில் இருக்கின்ற இடம்பெயர்ந்து வாழ்கின்ற  வன்னி  மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் அனைவராலும் மறக்கமுடியாதவர். அந்த மக்கள் 1990 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து பலவந்தமாக புலிகளால் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்ட வேளையில், புத்தள மண்ணில் அவர்கள் புகலிடம் தேடி வந்தபோது, அவர்களுக்கு அபயம் அளித்த- முன்னின்று அவர்களுக்காக உதவிக்கரம் நீட்டிய ஒருவர் அவர்  என்பதைப் பற்றிய நீண்ட வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. 

அதேபோல் அவருடைய உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் ,காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தைப் போன்றது.  இவரும் உப்பு பாத யாத்திரை ஒன்றை மேற்கொண்டு குருணாகல் வரை சென்று உப்பளத்து பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கான மிகப் பெரிய போராட்டங்களைச் செய்தவர்.

அதைவிடவும் முக்கியமாக, அவருடைய அரசியலில் அவருடைய புரட்சிகரமான பல பக்கங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் ஒரு முறை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு மதீனா நகர் என்ற பகுதியில் குத்பா பிரசங்கம் நடத்துவதற்கு, அண்மையில் எம்மைவிட்டு பிரிந்த அவருடைய ஆத்ம நண்பர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஹஸரத்  குத்பா ஆரம்பிக்கும் போது ஆசாக் கோலாகப் பயன்படுத்துவதற்கு கைப்பிடியொன்றைக் கேட்டபோது,டாக்டர் இல்யாஸ் உடனடியாக  அவரிடத்திலிருந்த ஏகே47 துப்பாக்கியைக் கொடுத்து, அந்த துப்பாக்கியை பிடித்துக் கொண்டு குத்பா ஓதிய காரணத்தினால், அடுத்தநாள் பரபரப்பாக பிரபல பத்திரிகைகள் அந்தச்  செய்தியை வெளியிட்டபோது  அது மிகப் பெரிய வில்லங்கமாக மாறி, பிறகு ரஞ்சன் விஜயரட்ன போன்ற அன்றைய பாதுகாப்பு அமைச்சர்கள் மிகக் கோபமாக எங்களுடைய மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச் எம்.அஷ்ரப்பிடம் டாக்டர் இல்யாஸை கைது செய்யவேண்டும், அப்துல்லா ஹஸரத்தை கைது செய்யவேண்டும் என்றெல்லாம் கூறிய ஒரு காலமும் இருந்தது.  

 இந்தச் சந்தர்ப்பத்தில்,மறைந்த டாக்டர் இல்யாஸ் அவர்களின்  குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ்  என்ற மேலான சுவனம் கிட்டுவதாக என்றும் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்றார்.

பயப்பட வேண்டாம் ரணில் நாட்டை மீட்பார்!

0

அநுர அரசங்கத்துக்கு முடியாமல் போனால் ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று எப்படியாவது மீட்டுத்தருவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தனதெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் தேங்காயின் விலை 300 ரூபாவுக்கு செல்லும் நிலையே இருக்கிறது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலியில் (26) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் காலி தொகுதி அரசியல் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ”தற்போதைய அரசாங்கம் 76 வருட சாபத்தை தெரிவித்தே ஆட்சிக்கு வந்தது. ஆனால் இந்த சாபம் இருந்த 76 வருடங்களும் தேங்காய் 100 ரூபாவாகும்.

ஆனால் தற்போது தேங்காய் விலை என்ன என்று கேட்கிறேன். சில இடங்களில் 250 ரூபாவுக்கே தேங்காய் விற்பனையாகிறது. எதிர்வரும் காலங்களில் 300 ரூபாவுக்கு செல்லும் நிலையே இருக்கிறது. அப்படியானால் இன்றைய நிலையை விட சாபம் இருந்த காலம் நல்லது.

கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் குரங்குகளும் இருந்தன. ரணிலும் இருந்தார். தேங்காயும் இருந்தது. அதேபோன்று பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள் 5 பேரும் இருந்தனர். நாட்டில் அரிசியும் இருந்தது. அதனால் மக்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

அதனால்தான் அனுபவம் என்பது மிகவும் முக்கியமானது என ரணில் விக்ரமசிங்க அடிக்கடி தெரிவித்து வந்தார். அனுபவம் இல்லாதவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டாம் என தெரிவித்திருந்தார்.

எனினும் மக்கள் அதனை கேட்கவில்லை. தற்போது இந்த அநியாயங்களை நாட்டு மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. பச்சை அரிசிக்கு தட்டுப்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழ் சிங்கள புத்தாண்டாகும்போது இது இன்னும் பாரிய பிரச்சினையாக மாறும். அரிசி இருந்தாலும் கடைக்காரர்கள் அதனை விற்பனை செய்ய கொண்டுவருவதில்லை.கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்தால், வியாபாரிகள் தண்டிக்கப்படுகின்றனர்.

கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலையில் வியாபாரிகள் இருந்து வருகின்றனர். சிங்கள புத்தாண்டு வரும்போது பச்சை அரிசி ஒரு கிலாே 400 ரூபா வரை செல்லும்.

அரசங்கத்துக்கு இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லாமல்போகும்போது 76 வருடங்கள் நாங்கள் ஆட்சி செய்ததன் சாபம் என எங்களை கூறிவருகிறது.

அரசாங்கம் நாட்டை எந்த திசைக்கு கொண்டு செல்கிறது என உண்மையில் எங்களுக்கு புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. அதனால் மக்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆனதன் பின்னர் 25 தடவைகள் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கிறார்கள். அவர் நாட்டை பொறுப்பேற்ற பின்னர் வீட்டில் உட்கார்ந்து இருக்கவில்லை. சர்வதேச நாடுகளுக்கு சென்று நாட்டை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அவர் செய்த அர்ப்பணிப்பு காரணமாகவே வரிசைகளில் இருந்து மக்கள் வீடுகளுக்கு சென்றார்கள். அதனால்தான் வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவர முடியுமாகி இருக்கிறது.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் ஒரு நாள்கூட அலரி மாளிகையில் நித்திரை கொண்டதில்லை. அவர் கடமை முடிந்தவுடன் வீட்டுக்கு சென்றுவிடுவார்.

அதேபோன்று ஜனாதிபதியாக இருந்த 2வருடங்களில் ஒரு நாள்கூட ஜனாதிபதி மாளிகையில் நித்திரை கொண்டதில்லை. அதனால் அரசாங்கத்துக்கு நாட்டை கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டால் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று கட்டியெழுப்புவார்.

எனினும் தற்போதைய நிலைக்கு நாங்கள் காரணமில்லை. ரணில் விக்ரமசிங்க நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்லும்போது நாட்டு மக்களே தேர்தலில் அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள்“ என தெரிவித்தார்.