ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100ஆக அதிகரித்துள்ளது. காபூல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள், வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.
ஜலாலாபாத் நகரில் இருந்து 27 கிமீ தொலைவில், 8 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற குறைவான ஆழம் கொண்ட நிலநடுக்கங்களே கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், குனார் மற்றும் நங்கஹார் மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
6 புள்ளிகள் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில் அடுத்தடுத்து பல நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் பல வீடுகள் தரைமட்டமாகின. நள்ளிரவு நேரம் என்பதால் பலரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் வீடுகள் இடிந்து இடிபாடுகளில் சிக்கினர்.
இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்ரிக்க நாடான சூடானின் மாரா என்ற மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 1000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவில் அழிந்த கிராமத்தில் இருந்து ஒரே ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மேற்கு சூடானில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொட்டிய பெருமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. உள்நாட்டு போரால் சீரழிந்துள்ள சூடானில் இயற்கை பேரழிவால் மக்கள் பெருந்துயரம் அடைந்துள்ளனர்.
மீட்பு பணிகளை மேற்கொள்ள ஐ.நா., சர்வதேச தொண்டு நிறுவனம் உதவ வேண்டும் என சூடான் விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சூடானில் உள்நாட்டு போர் நடந்துவரும் நிலையில் மக்கள் மாரா பகுதியில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன இணைந்து இதனை நிறுவியுள்ளன.
சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், துறைசார் கௌரவ அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, கடற்றொலில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராசா, க.இளங்குமரன் ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
புத்தளம் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) கடமையாற்றிய வை.ஐ.எம்.சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் மாவட்ட செயலாளராக கடமையாற்றி வந்த எச்.எம்.எஸ்.பீ. ஹேரத் , களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றப்பட்டதை அடுத்து, புத்தளம் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா தனது கடமைகளை நேற்று திங்கட்கிழமை (01) தனது உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) புபுதிகா எஸ் பண்டார, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) சதுரக ஜயசிங்க, உதவி மாவட்ட செயலாளர் நிமேஷா ஜயபத்ம, பிரதம கணக்காளர் ஏ.எம்.டபிள்யூ. கே.பிரசன்ன, கணக்காளர் எஸ்.அருண் குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2004 ஆம் ஆண்டு நொச்சியாகம பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக அரச துறையில் தனது பணியை ஆரம்பித்த இவர், 2007 ஆம் ஆண்டு முதல் பிரதேச செயலாளராக பதவியுயர்த்தப்பட்டார்.
பின்னர் கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் சுங்கத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகவும், விமான நிலைய சுங்கப் பிரிவு பணிப்பாளராகவும், அரச கைத்தொழில் சபையின் (நிர்வாக) பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தரத்தை பெற்றுக் கொண்ட இவர், அதே ஆண்டு செப்படம்பர் மாதம் கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இவ்வாறு சுமார் ஒரு வருடங்களாக கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றி வந்த வை.ஐ.எம்.சில்வா, இம்மாதம் முதலாம் திகதியில் இருந்து புத்தளம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையில் கடந்த 22 வருடங்கள் அனுபவம் கொண்ட இவர், களனிப் பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமைத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளதுடன், நுவரெலியா காமினி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்சம் பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதன் அடிப்படையில் 72 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்ட நிலையில் அவற்றில் 39 சுற்றிவளைப்புகள் வெற்றியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகளவில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் பொலிஸ் திணைக்களத்தில் பதிவானதுடன், இதுவரை 17 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற அரச நிறுவனங்களில் கடமையாற்றியவர்களும் அவர்களில் அடங்குவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கடந்த காலங்களில் இலஞ்ச வழக்குகள் தொடர்பாக 27 நபர்களை நீதிமன்றங்கள் குற்றவாளிகளாக அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போட்டியில் வெற்றிபெற்ற காத்தான்குடி மாணவனை நேரில் சென்று வாழ்த்தினார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்..!
காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மது ஜனூஸ் ஆரிஸ் என்ற தரம் 8 மாணவன், 14.08.2025 அன்று வியட்நாம் நாட்டில் இடம்பெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
புதிய காத்தான்குடி 03 பகுதியைச் சேர்ந்த இவர், தனது ஆரம்பக் கல்வியை காத்தான்குடி பாத்திமா பாலிகா பாடசாலையில் கற்றதுடன், தற்போது மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்வி கற்று வருகின்றார்.
31 நாடுகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 12 மாணவர்கள் கலந்துகொண்டதுடன், அதில் 2 மாணவர்கள் மாத்திரமே இலங்கை சார்பாக வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதுடன், அதில் ஒருவராக ஜனூஸ் ஆரிஸ் வெற்றிபெற்று திகழ்கிறார்.
கடந்த ஆண்டு இந்தியாவின் லக்ணோவில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியிலும் இவர் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்மாணவன் தான் பிறந்த மண், பாடசாலை, கிழக்கு மாகாணம் மற்றும் நாடு முழுவதற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரின் இச் சாதனைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று வாழ்த்தி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
வவுனியா, மன்னார் பிரதான வீதியில் புகையிரத்துடன் பட்டா வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பட்டாவை வாகனத்தை செலுத்திவந்த தந்தை இரண்டு பிள்ளைகளையும் பட்டாவுக்குள் விட்டு விட்டு பாய்ந்து தப்பியுள்ளதுடன், இரண்டு பிள்ளைகளும் பெரும் காயங்களுடன் வவுனியா பைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ் சென்று கொண்டிருந்த ரயிளுடனே குறித்த பட்டா வாகனம் விபத்தில் சிக்கியது.
வவுனியா, மன்னார் பிரதான வீதியில் அமைந்திருக்கும் ரயில்வே கடவையின் கதவை மூடாததால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், கதவை மூடும் பணியாளர் குறித்த நேரத்தில் கதவை மூடி திறக்கும் அறையில் இருக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பட்டா வாகனத்தில் இரண்டு குழந்தைகளுடன் பயணித்த தகப்பனார், ரயில் வருவதைக் கண்டு வாகனத்தை விட்டு அவசரமாக பாய்ந்து உள்ளார்.
இரண்டு குழந்தைகளும் விபத்தில் சிக்கி கடும் காயங்களுடன் சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் மீண்டும் எந்த விதமான யுத்தமும் ஏற்படாத வகையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் பாடுபடுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடி துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் இன்று (1) கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இந்தவிடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஜனாதிபதி அடையாள ரீதியாக தொடங்கி வைத்தார்.
இதன் கீழ், வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகம் மாத்திரமன்றி, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய வசதிகள், குளிர்பதன சேமிப்பு வசதிகள், வலை தயாரிப்பு நிலைய வசதிகள், ஏலவிற்பனை மண்டப வசதிகள் மற்றும் தொடர்பாடல் பரிமாற்ற மைய வசதிகள் என்பனவும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இந்த ஆண்டு அரசாங்கம் 298 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவிக்கையில், பிளவுபட்ட மக்களை ஒன்றிணைப்பதில் வடக்கு மக்கள் ஒரு தீர்க்கமான காரணியாக கடந்த பொதுத் தேர்தலில் இருந்ததாகவும், எதிர்காலத்தில் இந்த ஒற்றுமை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கங்கள் போரை எதிர்பார்த்து பணியாற்றிய போதிலும், இந்த நாட்டில் மீண்டும் எந்த விதமான யுத்தமும் ஏற்படாத வகையில் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் பாடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த போரின் போது பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட வடக்கில் விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் மக்களுக்காக விடுவிக்கப்படும்.
நாட்டைச் சுற்றியுள்ள கடல், தீவுகள் மற்றும் காணிகளை மக்களுக்காகப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும், அதில் எந்த விதமான அழுத்தத்திற்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் 800 பேர் வரை பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில், நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைத்தொடரில் உள்ள அசதாபாத் பகுதியை மையமாகக் கொண்டு, சுமார் 29 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ளது
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800 பேர் பலியான நிலையில் 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர் மற்றும் இந்தியாவின் டெல்லி, பஞ்சாப், அரியானா, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் மற்றும் தஜிகிஸ்தானின் சில பகுதிகளிலும் கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டன.
நங்கர்ஹார் மாகாணாம் ஜலலாபாத்தை மையமாக கொண்டு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலி 6 ஆகவும், அடுத்த நிலநடுக்கம் 4.5 ஆகவும் பதிவானது. கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் பலர் சிக்கினர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.
பொது சேவையின் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில், அனைத்து அரசு நிறுவனங்களையும் இலக்காகக் கொண்டு, ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டத்தின் கீழ், இன்று (01) முதல் 04 ஆம் தேதி வரை ‘சேயிரி வாரம்’ என்ற சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம், அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்வதற்கு அமைதியான, ஆரோக்கியமான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பணிச்சூழலை உருவாக்குவதாகும். உற்பத்தித்திறன் என்ற ஐந்து மடங்கு கருத்தாக்கத்தைச் சேர்ந்த ‘சேயிரி’, ஒரு நிறுவனத்திற்குத் தேவையான மற்றும் தேவையற்றவற்றைக் கண்டறிந்து தேவையற்றவற்றை அப்புறப்படுத்துவதைக் குறிக்கிறது. அதன்படி, வரையறுக்கப்பட்ட இடத்தை உகந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் அரசு நிறுவனங்களில் குவிந்துள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவது முன்னுரிமைப் பணியாக இருக்கும்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, இந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் இரண்டு மணி நேரம் நிறுவனங்களை சுத்தம் செய்வதற்கும் ஒழுங்கமைப்பதற்கும் செலவிட வேண்டும். கட்டிடங்களின் உட்புற மற்றும் வெளிப்புற சூழலின் அழகைப் பராமரிப்பதிலும், நிறுவனத்திற்கான சாலைகளின் நுழைவாயில்கள் மற்றும் பக்கவாட்டுகளிலும், குறிப்பாக மாற்றுத்திறனாளி சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
மேலும், பயன்படுத்த முடியாத சரக்குப் பொருட்கள், பழைய மோட்டார் வாகனங்கள் மற்றும் கோப்புகளை முறையான முறையின்படி அப்புறப்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ‘சேயிரி வாரம்’ மூலம் உருவாக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட சூழலை ஒரு முறை மட்டும் செயல்படுத்தி நிறுத்துவதற்குப் பதிலாக, தொடர்ந்து பராமரிக்க ஒரு நிரந்தர முறையைத் தயாரிக்குமாறு அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.