Tuesday, November 11, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 159

நன்கொடையாக வழங்கப்பட்ட அஷ்ரஃப் இல்லம்!

0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் ஒலுவில் இல்லம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

மர்ஹூம் அஷ்ரஃபின்  துணைவியாரான முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் மற்றும் புதல்வர் அமான் அஷ்ரப் ஆகியோர் இணைந்து இல்லத்தின் ஆவணத்தை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் யூ.எல்.அப்துல் மஜீதிடம் கையளித்தனர்.

ஒலுவில் துறைமுகம் மற்றும் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்பன மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் சாதனையாக மாகாண முஸ்லிம்களினால் என்றும் பார்க்கப்படுகின்ற முக்கிய விடயமாகும்.

அந்த வகையில் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் ஒலுவில் இல்லம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள விடயமானது, மேலும் ஒரு படி மேலே சென்று மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களை இலங்கை முஸ்லீம் மக்களின் தலைவராக மீண்டுமொரு முறை நினைவூட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இலங்கையில் பரந்துபட்ட சேவை செய்ததின் மூலம் இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் மத்தில் தேசிய தலைவராக உருவெடுத்திருந்தமை நினைவு கூறத்தக்கது!

அதிரடியாக குறைக்கப்பட்ட பேரீத்தம்பழ வரி!

0

பேரீச்சம்பழத்தின் மீதான தற்போதைய விசேட பண்ட வரியான 200 ரூபாவை 2025 மார்ச் 31 வரை கிலோவிற்கு ஒரு ரூபாவாக குறைத்து விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று  வௌியிடப்பட்டுள்ளது.

இதேவேளை ரமழான் மாதத்திற்கென இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கவென 50 தொன் பேரீச்சம்பழத்தை சவூதி அரேபியா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இந்த பேரீச்சம் பழத் தொகுதியை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி நேற்று புத்தசாசனம், சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியிடம்  கொழும்பில் கையளித்தார்.

இலங்கை முஸ்லிம்களுக்கென சவூதி அரேபியா  அன்பளிப்பாக வழங்கியுள்ள பேரீச்சம் பழத் தொகுதியை, உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வைபவம் கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்தில் இடம்பெற்றது. இந்த 50 தொன் பேரீச்சம் பழத் தொகுதியையுயும் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வகையில் ச வூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர், புத்தாசன அமைச்சர், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண நிலையத்தின் பிரதிநிதி ஆகியோர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையளித்திட்டனர்.

இவ்வைபவத்தில் உரையாற்றிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி, ‘இலங்கை சவூதியின் நீண்ட கால நட்பு நாடாகும். அந்த வகையில் இந்நாட்டின் சமூக, பொருளாதார, உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பல்வேறு உதவி, ஒத்துழைப்புக்களை சவூதி வழங்கி வருகின்றது. அதற்கேற்ப இம்முறையும் சவூதியின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண அமைப்பின் ஊடாக 50 தொன் பேரீச்சம் பழம் வழங்கப்படுவதாகவும்  குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய சமய விவகார அமைச்சர், இந்த உதவியின் நிமித்தம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ச வூதி அரேபியாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாட்டின் 2741  பள்ளிவாசல்கள் உள்ளன. அப்பள்ளிவாசல்கள் ஊடாக இவற்றைப் பகிர்ந்தளிக்க ஏற்பாடுகள் செய்வதாகக் கூறினார்.  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சர் பிமால் ரத்நாயக்க, பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலி, பிரதியமைச்சர்களான முனீர் முளப்பர், அருன் ஹேமச்சந்திரா, பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுத்தீன், காதர் மஸ்தான், முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹ்மட் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

காஸா திரும்பிய மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

0

வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் – காத்திருக்கும் அதிர்ச்சிகரமான நிலை

நெட்ஸாரிம் பாதை (Netzarim Corridor) என அறியப்படும் சாலையை வழியாக பயணிக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்பி வருகின்றனர்.

கடலோர பாதையில் பெருந்திரளான மக்கள் வடக்கு நோக்கி நடந்து செல்வதை டிரோன் காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் கார்களில் பயணிக்கும் மக்கள், சோதனைச் சாவடிகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

பாலத்தீனியர்கள் கடந்த சனிக்கிழமை அன்றே, வடக்கு நோக்கி திரும்புவதாக இருந்தது. ஆனால் பணயக்கைதியாக வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலைச் சேர்ந்த அர்பெல் யெஹுத் என்ற பெண்ணை விடுவிப்பது தொடர்பான சர்ச்சையால், இஸ்ரேல் நெட்ஸாரிம் பாதையை அடைத்து வைத்திருந்தது.

இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவிற்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

பிறகு இதில் ஒரு முடிவு எட்டப்பட்டது. யெஹுத், வரும் வியாழக்கிழமை (ஜனவரி 30) சிறைபிடிக்கப்பட்ட மற்ற இரண்டு பணயக்கைதிகளுடன் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படுவார்.

இதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பாலத்தீனியர்களுக்கு தெற்கு காஸாவில் இருந்து வடக்கு நோக்கி கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

சிலர் இந்த தருணத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்தனர். ஆனால் வடக்கு காஸாவை அடைந்ததும், அங்கு அவர்கள் கண்ட யதார்த்த நிலை அதிர்ச்சியூட்டுவதாவே இருந்தது.

காஸா நகரின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், சில இடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் போல காட்சியளிக்கின்றன.

வடக்கு காஸாவை அடைந்த குடும்பங்களில், முடிதிருத்தும் கலைஞரான முகம்மது இமாத் அல்-தினின் குடும்பமும் அடங்கும். தனது வீட்டை மீண்டும் பார்க்கும் ஆவலுடன் சென்றவருக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.

தனது வீடு முற்றிலும் எரிந்து போயிருந்ததாகவும், தனது சலூன்-அழகு நிலையம் திருடர்களால் சூறையாடப்பட்டதாகவும், அதன் பின்னர் அருகிலுள்ள கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் அது மேலும் சேதமடைந்ததாகவும் முகம்மது இமாத் பிபிசி நிருபரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

மற்றொன்று, லுப்னா நாசர் என்ற பெண்ணின் குடும்பம். அவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன், வடக்கு காஸாவில் உள்ள தனது கணவருடன் மீண்டும் இணைவதற்காக, சோதனைச் சாவடியின் நீண்ட வரிசையில் ஆவலுடன் காத்திருந்தார்.

ஆனால் தனது வீடு இருந்த பகுதியை அடைந்ததும் அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அவரது வீடு அழிக்கப்பட்ட இடத்திற்கு அருகே, அவரது கணவர் ஒரு கூடாரத்தில் வசித்து வருவதைக் கண்டார் லுப்னா.

“எங்கள் குடும்பம் மீண்டும் சேர்ந்துவிட்டது, ஆனால் அந்த சந்தோஷத்தை வீட்டை இழந்ததன் துக்கம் மறைத்துவிட்டது. இப்போது வடக்கு காஸாவில் உள்ள ஒரு கூடாரத்தில் வசிக்கிறோம்” என்று பிபிசியிடம் கூறினார் லுப்னா நாசர்.

ஹமாஸ் அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, “இதுவரை திரும்பி வந்தவர்கள் அல்லது அடுத்தடுத்த நாட்களில் வடக்கு காஸாவை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மக்களுக்கு, தங்குமிடம் அளிக்க காஸா நகரத்திற்கு 1,50,000-க்கும் அதிகமான கூடாரங்கள் தேவைப்படும்.”

வடக்கு காஸாவில் இத்தகைய நிலை உள்ளபோதிலும், தெற்கு காஸாவில் பல மாதங்களாக துன்பங்களை அனுபவித்த இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு இதுவொரு குறிப்பிடத்தக்க தருணமாகவே உள்ளது.

28 ஆண்டுகளின் பின் கூடிய சபை!

0

புதிய அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்வு” கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்ற ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்கள் சபையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் 16.1 பில்லியன் டொலர்களாக காணப்பட்ட ஏற்றுமதி வருமானத்தை இந்த ஆண்டு 18.2 பில்லியன் டொலர்களாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கும் அதேநேரம், புதிய திட்டத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டில் வருமானத்தை 36 பில்லியன் டொலர்களாக உயர்த்திக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி செய்ய, உள்நாட்டு உற்பத்தியை பலப்படுத்தி ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் அமைவிடம், மனித வளங்கள் மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி நீண்ட கால கைத்தொழில் அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதன் மூலம் வீழ்ச்சியடைந்த உள்நாட்டு உற்பத்தித் தொழில்துறைகளுக்கு புத்துயிர் அளித்தல், ஏற்றுமதித் தொழில்துறைகளில் போட்டித்தன்மை மிக்கதாக்குதல், சேவை தொழிற்துறையை ஊக்குவித்தல், புதிய கேள்விகள் மூலம் உலகச் சந்தையில் இடம்பிடித்தல், தேசியத் திட்டத்திற்கு அமைவாக வௌிநாட்டு நேரடி முதலீட்டை வரவழைத்தல், புதிய முதலீடுகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்குதல், குறைந்த செலவு, தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உள்ளீடுகள், விநியோகங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

  • இந்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு உள்ளடக்கப்படும் வரியை மீளப் பெற்றுக்கொடுப்பதற்கான (VAT REFUND SYSTEM) கட்டமைப்பை விமான நிலையத்தில் அமைக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
  • ஏற்றுமதிப் பொருட்களைப் பரிசோதிக்கும் போது ஏற்படும் தாமதம் மற்றும் வினைத்திறன் இன்மையைத் தவிர்ப்பதற்காக, Manual முறைக்குப் பதிலாக, சர்வதேச தரத்திற்கு அமைவான தானியக்க (Scanning) முறைமையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவ திட்டமிடப்பட்டது. அதற்கான ஒதுக்கீடுகளை தொழிற்துறை அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ள இணக்கம் எட்டப்பட்டது.
  • இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் புகையிரத என்ஜின் ஏற்றுமதிக்கு தடையாக காணப்பட்ட ” புகையிரத என்ஜின் பரிசோதனையை” இலங்கையில் மேற்கொள்ள அனுமதியளிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
  • ஏற்றுமதித் தொழில்துறையின் செலவை மட்டுப்படுத்த புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலாதாரங்களை அறிமுகப்படுத்தவும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செலவீனங்களை பயனுள்ளதாக்கி மின்சாரத்தைச் சேமிக்கும் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.
  • ஏற்றுமதி இலக்குகளை அடைய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த (CESS) நிதியத்தில் இருந்து ஒதுக்கீடுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
  • ஏற்றுமதித் தொழில்துறையில் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க முதலீட்டு வசதிக் குழுவை (Investment Facilitate Committee) நிறுவ தீர்மானிக்கப்பட்டது.
  • ஏற்றுமதி பெறுமதியை சரியாகக் கண்டறியும் முறைமையின் ஊடாக ஏற்றுமதி செய்யப்படும் மாணிக்க கற்கள் மற்றும் ஆபரணங்களுக்கு ஏற்றுமதி ஊக்குவிப்பு வழங்கவும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
  • உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் இலத்திரனியல் பாகங்கள் ஏற்றுமதி தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதுடன், இதற்கான மூலப்பொருட்கள் இறக்குமதியின் போது தீர்வை வரிச் சலுகைகளை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
  • மேற்கூறிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் போது, ஏற்றுமதி தொழில் தொடர்பான தரவு கட்டமைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
  • சேவை ஏற்றுமதியை ஊக்குவிக்க வங்கி உத்தரவாத எல்லையை அதிகரிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, ஏற்றுமதி தொடர்பான தற்போதைய பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு கலந்துரையாடப்பட்டது.

மேலும், ஆடை ஏற்றுமதியை சோதனையிடும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன், அனைத்து தரப்பினரினதும் இணக்கப்பாட்டுடன் அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டன.

1980 செப்டெம்பர் 11 ஆம் திகதி நிறுவப்பட்ட இந்த சபை 1992 முதல் 2020 வரை கூடவில்லை என்பதுடன், 2020 கூடியபோதும் ஏற்றுமதி துறையின் மேம்பாட்டுக்கான எந்த தீர்மானங்களும் செயல்படுத்தப்படவில்லை. எனவே, 28 ஆண்டுகளுக்குப் பின்னர் 2025 ஆம் ஆண்டில் இந்த சபை கூடி ஏற்றுமதி துறை தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்வது சிறப்பம்சமாகும்.

வர்த்தகம், கப்பல், பெருந்தோட்டக் கைத்தொழில், விவசாயம், கைத்தொழில், ஆடைத் கைத்தொழில், மீன்பிடி, நிதி, வெளிவிவகாரம், திட்டமிடல் மற்றும் கிராமிய அபிவிருத்தி ஆகிய துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் இச்சபையின் பிரதிநிதிகளாக செயற்படுவர்.

உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்க தேசிய ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கைகள் மற்றும் திட்டங்களை தயாரித்து செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

இந்திய அரசின் மிக உயரிய விருது அஜித்துக்கு!

0

நடிகராக மட்டுமின்றி துப்பாக்கி சுடும் வீரர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர், ஆளில்லா விமான வடிவமைப்பாளர் உட்பட பன்முகம் கொண்டவராக திகழ்ந்து வரும் ‘தல’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித் குமாருக்கு, இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகின்றன. பொதுச் சேவைத்துறையின் அனைத்து நடவடிக்கைகளிலும் அல்லது துறைகளிலும் சாதனைகள் செய்தவர்களை அங்கீகரிப்பதற்காக பத்ம விபூஷன் , பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்பட்ட பத்ம விருதுகள், குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்வருடமும் 07 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 19 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் நடிகர் அஜித் குமார், நல்லி குப்புசாமி, நடிகை சோபனா ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதும், அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர், ஸ்ரீநிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தம், சந்திரமோகன், இராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, ஸ்ரீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் தொடர்பில் வாய் திறந்த பைசல் எம்.பி!

0

முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் தேவையான அனைத்து வளங்களையும் எம் நாடு இயற்கையாகவே பெற்றுக்கொண்டிருக்கின்றபோதிலும் கடந்த 76 வருட காலமாக அந்த வளங்கள் முறையாகப் பயன்படுத்தப்படவில்லையென, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே. முஹம்மத் பைசல் தெரிவித்தார்.

கடந்த 23 ஆம் திகதி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டம், (2) துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டம், (3) செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டச் சட்டம் ஆகிய மூன்று சட்ட ஏற்பாடுகளின் கீழ் நான்கு கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் மீதான பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் தேவையான வளங்களை எம் நாடு இயற்கையாகவே பெற்றுக்கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் கடந்த 76 வருட காலப்பகுதியில் அந்த வளங்கள் முறையாகப் பயன்படுத்தப்படாதுள்ளன.

குறிப்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற புத்தளம் மாவட்டத்திலும் புத்தளம் தொகுதியிலும் கூட பல வளங்கள் இயற்கையாகவே காணப்படுகின்றன.

புத்தளம் மாவட்டத்தில், கடற்றொழில், உப்புக் கைத்தொழில், புத்தளம் களப்பை அடிப்படையாகக் கொண்ட இறால் மற்றும் மீன் வளர்ப்பு தொழில், விவசாயம், தென்னை, சுற்றுலா உள்ளிட்ட தொழிற்றுறைகளுக்கான வசதிகள் தாராளமாகவுள்ளபோதிலும் அவை முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

மேலும், இந்நாட்டில் காணப்படும் இல்மனைட் போன்ற சில வளங்கள் முடிவுப் பொருளாக அன்றி மூலப் பொருளாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இலங்கை பெற்றுக்கொள்ளும் வருமானம் மிகவும் குறைவாகும். அந்த மூலப் பொருளை முடிவுப் பொருளாகவும் பெறுமதி சேர் பொருளாகவும் ஏற்றுமதி செய்தால் தற்போது கிடைக்கப்பெறுவதை விடவும் பல மடங்கு இலாபத்தை இந்த நாடு பெற்றுக் கொள்ளும்.

இவை தொடர்பாக கடந்த 76 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசியல் தலைவர்களும் அரசியல் வாதிகளும் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் தங்கள் நலன்களுக்கும் கட்சி நலன்களுக்கும் தான் முன்னுரிமை அளித்து செயற்பட்டனர். நாம் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றுக்கொள்ளும் போது பொருளாதார ரீதியில் ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் இருந்தோம். அக்காலப் பகுதியில் பொருளாதார ரீதியில் இலங்கையை விடவும் பல மடங்கு கீழ் மட்டத்தில் இருந்த பல நாடுகள் இப்போது இலங்கையை விடவும் பல மடங்கு முன்னேற்றமடைந்த நாடுகளாக மாறியுள்ளன. எனினும் நாம் 76 வருடங்களாகியும் மூன்றாம் மண்டல நாடாகவும் வளர்முக நாடாகவும் இருந்து வருகின்றோம். இந்நிலையில், இந்நாட்டை ஏற்றுமதி பொருளாதார நாடாக கட்டியெழுப்புவதும் எமது அரசின் இலக்காகும். எமது ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் அந்த இலக்கை அடைந்து நாட்டு மக்களுக்கு வளம் நிறைந்த சுபீட்சமான தேசத்தை உருவாக்கிக் கொடுப்போம் என அவர் தெரிவித்தார்.

நாய்க்கு தூக்கு தண்டனை!

0

ஆடொன்றை கடித்துக் குதறிய நாய்க்கு மரண தண்டணை வழங்கி ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபை தீர்ப்பு வழங்கியுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

தனது ஆடொன்றை நாய் கடித்து குதறி விட்டதாக பொலிஸ் நிலையத்தில்,பெண்ணொருவர் முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை ஒட்டுசுட்டான் இணக்க சபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இணக்க சபையிலிருந்த நீதவான்களான மூவரும் அந்த நாயைத் தூக்கிலிடுமாறு தீர்ப்பு வழங்கினர்.

இணக்க சபையிலிருந்த நீதவான்கள் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு நாயின் உரிமையாளரும் சம்மதித்துள்ளார். அதன் பின்னர் நீதவான்கள் நாயை தூக்கில் இடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அதன் புகைப்படத்தையும் தமக்கு அனுப்புமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதன் முறை பொங்கல் கொண்டாட்டம்!

0

கடந்த 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு (24) வைபவரீதியாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன் முறையாக இலங்கை பாராளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இது கருதப்படுகிறது.

இந்நிகழ்வில் இந்துக் மதத் தலைவர்கள், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். 

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரின் முன்மொழிவுக்கு அமைய, கௌரவ சபாநாயகரின் ஆலோசனையின் கீழ், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சின் இந்து மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் இந்த வைபவம் இடம்பெற்றது. 

கௌரவ உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழ் கலாசாரம் பற்றிய புரிதலை ஊக்குவித்தல், தமிழ் சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் மரபுகளை மதித்தல், இலங்கையின் கலாச்சார பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய அடையாளத்தை வளர்ப்பது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விவசாயிகள் தமது அறுவடைக்கு ஒத்துழைப்பு நல்கிய சூரியக்கடவுள், நிலம் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இதற்கமைய தைப்பொங்கல் நிகழ்வு மதச்சடங்குகளுடன் ஆரம்பமாகியது. வண்ணமயமான கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட பாராளுமன்ற வளாகத்தில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய கௌரவ சபாநாயகர் குறிப்பிடுகையில், மனிதர்கள் இயற்கையுடன் எவ்வளவு நெருக்கமாகன தொடர்புகளுடன் இருக்கின்றார்கள் என்பதை தைப்பொங்கல் எடுத்துக் காட்டுவதாகவும், இதன் மூலம் அனைத்து இனங்களுக்கிடையேயான ஒற்றுமை மற்றும் சகவாழ்வு நிரூபிக்கப்படுவதாகவும் கூறினார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி கருத்துரை வழங்கியதுடன், அனைத்து இனக்குழுக்களுக்கிடையேயான ஒற்றுமைக்கு மொழித் தடையை கடக்க வேண்டும் என்றும், புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் இதனை அடைய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், இனம் மத பாகுபாடு இல்லாமல் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான பாராளுமன்றத்தின் முயற்சிகளைப் பாராட்டுவதாகக் கூறினார்.

தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. இந்த நிகழ்வில் பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள், பணியாளர்கள், அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தல் ஏப்ரலில்!

0

ஜனாதிபதியின் வடக்கு மாகாண விஜயத்தின்போது, அங்குள்ள மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்ட அவர் நேற்றைய தினம் அங்கு செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார். 

அதற்கமைய, எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வட மாகாண மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தமைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைகிறது. இதேவேளை, கடந்த கால அரசாங்கங்கள் தேர்தல்களை பிற்போட்டிருந்தன. 

தற்போது, உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. 

தற்போது, நீதிமன்றங்களில் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனினும் அவற்றினால் தேர்தலுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதேநேரம், ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் அல்லது நான்காம் வாரத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், தேசிய பிரச்சினைகளை 4 விதமான அணுகுமுறைகளுடன் கையாண்டு தமிழர்கள் தன்மானத்துடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

 பதின்மூன்று அல்லது சமஷ்டிக்கு மாறாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் சுமூகமான கலந்துரையாடல்கள் மூலம் தீர்ப்பதாக ஏலவே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கூறியதை போல தற்போது அதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை!

0

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட சமர்ப்பணங்களுக்கு பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அதன்படி, சந்தேகநபரை தலா 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதன்படி, சந்தேகநபரை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறும் உத்தரவிட்ட நீதவான், சாட்சிகளுக்கு அழுத்தம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும் உத்தரவிட்டார்.

நீதிபதி தனது முடிவை அறிவிக்கும் போது, ​​சந்தேகநபரை மேலும் விளக்கமறியலில் வைக்க போதுமான மற்றும் திருப்திகரமான ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்கத் தவறியதால், பிணைச் சட்டத்தின் விதிகளின்படி பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.