இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பில், இலங்கை மின்சார சபையின் நிரந்தர ஊழியர்களுக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டு இலக்கம் 36 இலங்கை மின்சாரச் சட்டத்தின் 18ஆம் சரத்தின் மூன்றாவது உபசரத்தின்படி இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ், நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு பின்வருமாறு:
10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக் காலம் கொண்ட ஊழியருக்கு, முதல் 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் இரண்டு மாத சம்பளமும், மீதமுள்ள ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் ஒன்றரை மாத சம்பளமும் இழப்பீடாக வழங்கப்படும்.
10 ஆண்டுகளுக்கும் குறைவான சேவைக் காலம் கொண்ட ஊழியருக்கு, ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் 5 மாத சம்பளம் வழங்கப்படும், மீதமுள்ள சேவைக் காலத்திற்கு இழப்பீடு இல்லை.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல நிபந்தனைகள் வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.
கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபீர் முன்பள்ளி வருடாந்த கண்காட்சி இரண்டு நாட்கள் சிறப்பாக இடம்பெற்றது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த கண்காட்சி இம்முறை இரண்டு நாட்கள் பாடசாலையின் வளாகத்தில் கடந்த புதன், வியாழன் (27,28) ஆகிய தினங்களில் அதிபர் எம்.ஜே.என் பாஹீமா தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
கண்காட்சி நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸ் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
கௌரவ அதிதிகளாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எம் நிப்ராஸ், கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மில் , கிராம உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம் முசாதீக் ஆகியோர் கலந்து கொண்டனர்
சிறார்களின் திறமை மற்றும் ஆற்றல்கள் கழிவுப் பொருட்களை கொண்டு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதுடன், பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு மிகவும் நேர்த்தியாக கண்காட்சி பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் கற்பிட்டி பிரதேசத்தின் பாரம்பரிய பழமையான அன்றாட பாவனைப் பொருட்களும் காட்சி படுத்தப்பட்டு இருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுடன், அனைவரின் பாராட்டையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாணத்தின் விசேட மகளிர் சிகிச்சை மையத்தை செயற்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்திற்கான விசேட மகளிர் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக இயங்காமல் இருப்பதனை கண்டித்தும், ஆதனை விரைவாக செயற்படுத்த கோரியும், அங்குள்ள அதி நவீன மருத்துவ உபகரணங்களை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று (29) வைத்தியசாலை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் பல மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்திற்கான விசேட மகளிர் சிகிச்சை மையமானது, அதி நவீன வசதிகளுடனும் நவீன மருத்துவ உபகரணங்களுடனும் அமைக்கப்பட்டு 2024 மே மாதம் அன்றைய ஐனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த சிகிச்சை மையம் திறக்கப்பட்டு ஒரு வருடத்தினை கடந்தும் இன்று வரை எந்தவொரு செயற்பாடும் இன்றி காணப்படுகிறது. இந்த சிகிச்சை மையத்தில் இரண்டு மகப்பேறு மற்றும் பிரசவ விடுதிகள், (கர்ப்பத்திற்கு முந்திய விடுதி, பிரசவத்திற்கு பிந்திய விடுதி) பெண் நோயியல் விடுதிகள், நவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை கூடம், மகப்பேறு தீவீர சிகிச்சைப் பிரிவு, கருவள பெருக்கம் சிகிச்சைப் பிரிவு, நோயாளர் கிளினிக் வளாகம் போன்றவற்றை அமைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த சிகிச்சை மையத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்தால் இதுவரை காலமும் வடக்கு மாகாணத்தில் இருந்து மேற்படி சிகிச்சைகளுக்கு கொழும்புக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் சென்று வந்த பெண்கள் தங்களது காலடியிலேயே சிகிச்சை பெறும் சூழல் உருவாகும். வடக்கு மாகாண பெண்கள் மட்டுமன்றி மாகாணத்தின் அருகில் உள்ள ஏனைய தாய்மார்களும் இதன் பயனை பெறுவார்கள்.
செயற்கை முறை கருத்தரித்தல், கர்ப்பகாலம், பிரசவகாலம், பிரசவத்திற்கு பிந்திய காலம், கருவில் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை, குழந்தை சிகிச்சை, மார்பக புற்றுநோய், கருப்பை கழுத்து புற்றுநோய்களை கண்டறிவதற்காக நவீன மருத்துவ உபகரணங்கள் என பெண்களுக்கான விசேட சிகிச்சை மையமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பெண்களுக்கு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பது போல வடக்கு மாகாண விசேட மகளிர் சிகிச்சை மையம் காணப்படுகிறது. இந்த சிகிச்சை மையத்தை செயற்படுத்துவதற்கு தற்போதுள்ள பிரதான தடையாக ஆளனியே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தாதியர்கள் இன்மைய இந்த சிகிச்சை மையத்தை இயங்கவைக்க முடியாதுள்ளதுடன், தொடர்ச்சியாக செயற்பாடின்றி காணப்படும் பெறுமதிக்க மருத்துவ உபகரணங்கள் கூட பழுதடையக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும்.
எனவே இந்த மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு இன்மையை காரணம் காட்டி நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு இந்த உபகரணங்களை வழங்குவதற்கான முயற்சிகளும் இடம்பெறுகிறது. வடக்கு வாழ் மக்களுக்கு என வழங்கப்பட்ட இந்த மருத்துவ உபகரணங்களை எக்காரணம் கொண்டு வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்க போவதில்லை எனவும் தெரிவித்தனர்.
இவ்வார்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் வடக்கு மாகாண ஆளுநர், மத்திய சுகாதார அமைச்சர். வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தூதுக் குழுவினர் இந்தியா விஜயம்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரும், ஆளும் கட்சியின் முதற்கோலாசானும், இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான கௌரவ (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான இலங்கை பாராளுமன்ற தூதுக் குழுவினர் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அழைப்பையேற்று ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் தூதுக் குழுவில் கௌரவ பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஜீ.ஜீ.பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், ஜே.சி.அலவத்துவல, (வைத்தியர்) காவிந்த ஹேஷா ஜயவர்தன, தனுர திசாநாயக்க, ருவன்திலக ஜயக்கொடி, சுனில் பியன்வில, ரியாஸ் பரூக், கௌரவ (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்க, அம்பிகா சாமிவேல், தேவானந்த சுரவீர, சமிந்த ஹெட்டிஆரச்சி, சம்பிக்க ஹெட்டிஆரச்சி, சுதத் பலகல்ல, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி வை.எல்.ரிஷ்மியா, பாராளுமன்ற ஒழுங்குமரபு அதிகாரி ஜீ.ஜீ.சி.எல்.பி.கலன்க, பாராளுமன்ற ஆளும் கட்சி முதற்கோலாசான் அலுவலகத்தின் முகாமைத்துவ உதவியாளர் டபிள்யூ.ஆர்.ஏ.கோஷிகா சுஜீவனி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இந்தத் தூதுக் குழுவினரின் நிகழ்ச்சி நிரலில், லோக் சபா மற்றும் இரஜ்ஜ சபாக்களுக்கான விஜயம், பாராளுமன்ற நூலக விஜயம் மற்றும் இந்திய ஊடகங்களின் வகிபாகம், பாராளுமன்ற குழு முறைமை, உயர் கல்வி, பொது சுகாதாரம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த கலந்துரையாடல்கள் என்பன உள்ளடங்கியுள்ளன. இந்தத் தூதுக் குழுவினர் சுகாதார சிறப்பு மையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கங்களின் சம்மேளத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
இந்திய லோக் சபாவின் சபாநாயகர் கௌரவ ஓம் பிர்லாவுடனான சந்திப்பு முக்கியமானதாக அமைந்ததுடன், இலங்கைத் தூதுக்குழுவை இந்திய சபாநாயகர் வரவேற்றார். இத்தகைய பரிமாற்றங்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை குறிப்பாக பாராளுமன்றம், சுகாதாரம், ஊடகம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் என இருதரப்புக் கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த இந்திய சபாநாயகர் தெரிவித்தார்.
இந்தியப் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு தூதுக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற இராஜதந்திரத்தையும் மக்களிடையேயான உறவுகளையும் மேம்படுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டையும் அவர் மீளவும் வலியுறுத்தினார்.
இந்திய லோக் சபா செயலகத்தில் இலங்கைத் தூதுக் குழுவினருக்கு விளக்கமளிக்கப்படவிருப்பதுடன், இத்துடன் இந்த நிகழ்ச்சிநிரல் வெற்றிகரமாக நிறைவடைகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துரலிய ரத்தன தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த அவர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இதேவேளை இன்று காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றொரு வழக்கு தொடர்பாக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டப்பட்டிருந்தது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 20 ஆம் திகதி அழைப்பாணை விடுத்திருந்தது.
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60(1) இன் கீழ் இந்த அழைப்பாணையை விடுத்திருந்தார்.
மேலும் இன்றைய தினம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொச்சிக்கடை காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கசிப்புடன் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இரண்டு நபர்கள் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன், மற்றும் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி 256 கிலோமீட்டர் பகுதிக்கு முன்பாக பரந்தன் அரச விதை உற்பத்திப் நிலையத்துக்கு முன்பாக இன்று 29.08.2025 அதிகாலை 5.30 மணியளவில் குறித்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
ஏ9 வீதி 256 கிலோமீட்டரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரெலியா சென்ற அரச பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டபோது, பரந்தன் பகுதியில் இருந்து வேகமாக வந்த கனரக டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரச பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், அதே பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிலிள் கசிப்புடன் வருகை தந்த நபர்கள் விபத்து ஏற்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றும் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு வருகைதந்த கிளிநொச்சி பொலிஸார் 1990 அவசர நோயாளர் கவுவண்டி அறிவித்து விபத்தில் காயப்பட்ட நபரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்தில் காயப்பட்ட நபரை சுற்றி பலர் விடுப்பு பார்ப்பதும் படம் எடுக்கும் நபர்களாகவே காணப்பட்டதுடன், விபத்தில் காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல எந்த நபரும் முன் வரவில்லை. காயம் அடைந்த நபரை நோயாளர் காவு வண்டிக்கு ஏற்றுவதற்கு விடுப்பு பார்க்கும் நபர்களிடம் பொலிஸார் உதவி கோரியும் எந்த நபரும் முன் வராமல் விடுப்பு பார்ப்பதிலும் படமெடுப்பதிலும் கவனம் செலுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்பாடு தொலைந்துபோகின்ற இந்தக் காலத்தில்தான் பண்பாட்டு விழாக்கள் தேவை. காலத்தின் தேவையறிந்து இந்தப் பண்பாட்டு விழாக்களை தொடர்ந்து நடத்தவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்டச் செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பெருவிழா – நேற்று வியாழக்கிழமை காலை (28.08.2025) மன்னார் நகர மண்டபத்தில் மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக, மன்னார் மாவட்டச் செயலக நுழைவாயிலிலிருந்து கலாசார ஊர்திகளுடன் விருந்தினர்கள் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
மன்னார் மாவட்ட குரு முதல்வர் அருட்திரு தமிழ்நேசன் அடிகளார், மன்னார் மாவட்ட இந்துமத பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக் குருக்கள், மன்னார் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி அஷ்ஷேக் அஸ்லம் ஆகியோரின் முன்னிலையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு, கலாசாரம் உண்டு. ஆனால் இன்று அவை மறக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன. அவற்றை நாம் மறக்கக் கூடாது. நல்ல மாற்றங்களை உள்வாங்கி அவற்றை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
பலனை எதிர்பாராமல் இந்தச் சமூகத்துக்காக எமது பண்பாடு, கலாசாரத்தை பேணிப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மூத்த கலைஞர்களை கௌரவிப்பது சிறப்பானது. மூத்த கலைஞர்களை கௌரவிப்பதுடன் அவர்களின் அனுபவங்களை எமது அடுத்த தலைமுறைக்கும் பெற்றுக்கொடுக்கவும் வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் மன்னெழில் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்துடன் மன்இளம் கலைச்சுடர் விருது 6 பேருக்கும், மன்கலைத்தென்றல் விருது 5 பேருக்கும், மன்கலைச்சுரபி விருது 5 பேருக்கும் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டன.
பண்பாட்டு பெருவிழாவில், பல்வேறு கலைஞர்களால் பல நிகழ்வுகளின் ஆற்றுகைகள் இடம்பெற்றன.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஜ் மற்றும் மூத்த சட்டத்தரணி ஜனாப் மு.மு சபுறுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 20 ஆம் திகதி அழைப்பாணை விடுத்திருந்தது.
கையுட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60(1) இன் கீழ் இந்த அழைப்பாணையை விடுத்திருந்தார்.
இதேவேளை சந்தேக நபருக்காக நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, வழங்கப்பட்ட அறிவிப்பின்படி அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று அறிவித்திருந்தார்.
நாடு முழுவதும் சுமார் 14,834 குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (28) நடைபெற்ற மாவட்ட பல்துறை போதைப்பொருள் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நிகழ்ச்சியில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியதாவது:
“குழந்தை உரிமைகள் மேம்பாட்டு அதிகாரிகள் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்காகப் பணியாற்றி வருகின்றனர். பொலிஸ் நிலையங்களால் அடையாளம் காணப்பட்டு எங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட பல குழந்தைகள் உள்ளனர். ஆனால், மிகப்பெரிய பிரச்சனை எல்லா இடங்களிலும் ஒருங்கிணைப்பு இல்லாததுதான். குறிப்பாக, போதைப்பொருள் தொடர்பான விவகாரங்களில், அதிகாரிகளால் படோவிட்ட மற்றும் பிற பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை. குழந்தைகளை மீட்பது மட்டுமல்லாமல், குடும்பத்தை மையமாகக் கொண்ட பராமரிப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பரிந்துரைக்கிறேன்.
“இந்நிகழ்வில் பேசிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
“பொலிஸ் கூறும் தகவல்களை யாரும் சென்று ஆராய்ந்து பார்ப்பதில்லை. அந்தக் கதையை நான் ஏற்கமாட்டேன். இந்த மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இதற்கு ஒரு சுழற்சி முறையிலான வேலைத்திட்டம் தேவை. இங்குதான் பாதாள உலகம் உருவாகிறது. 15 வயது சிறுவர்கள் கூட பாதாள உலகில் உள்ளனர். குழந்தைகள் பாடசாலைக்கு செல்லாதபோது, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அவர்களைக் கடத்துகின்றனர். நாட்டில் குழந்தைகளுக்காகப் பணியாற்றும் பல நிறுவனங்கள் உள்ளன. ஆனால், பிரச்சனையை அடையாளம் காண்பது மட்டும் போதாது; உரிய நடவடிக்கைகள் இல்லை. இதற்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனமும், நிதியும் தேவை. ஜனாதிபதியிடம் கோரினால், அவர் போதுமான நிதியை வழங்குவார்.” என்றார்.
வவுனியாவிற்கு வருகை தந்த தொழில் கல்விப் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, வவுனியா மாவட்டங்களில் உள்ள தொழிற்கல்வி நிலையங்களுக்கு விஜயம் செய்து அதனை பார்வையிட்டுள்ளார்.
வவுனியாவிற்கு வருகை தந்த தொழில் கல்வி பிரதி அமைச்சர் தொழில் கல்வி நிலையங்களை பார்வையிட்டதுடன், அதன் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த அரச தொழில் கல்வி நிலையங்களில் கற்கும் மாணவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
திறந்து வைக்கப்பட்ட வீதி
அந்தவகையில், நைற்றா, வீற்றா, ஏரிஐ ஆகிய தொழில் கல்வி நிலையங்களை பார்வையிட்டதுடன், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இங்கு காணப்படும் குறைபாடுகளுக்கான நிதிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தையும் பார்வையிட்டதுடன் புதிதாக காபட் இடப்பட்ட 2 கிலோ மீற்றர் நீளமான கனகராயன்குளம் – விஞ்ஞானம் குளம் வீதியையும் திறந்து வைத்துள்ளார்.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் மற்றும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.