தனது இளைய மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் தந்தை ஒருவர் சந்தேகத்தின்பேரில் மதுரங்குளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரங்குளி, முக்குதொடுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரையே இவ்வாறு போலீசார கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் ஒரு மீனவர் என்றும், அவரது மனைவிக்கு மல்லிகை பூ தோட்டத்தில் உதவி செய்து வந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனது கணவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையிலே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
நேற்று 1 ஆம் தேதி மதியம், அவரது மனைவி மல்லிகை பூ பறிக்கச் சென்றிருந்தபோது, சந்தேக நபர் தனது வீட்டிற்குள் தனது இளைய மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் தனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண் 11 வயது மற்றும் 11 மாத வயதுடைய சிறுமி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுமி, சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
மதுரங்குளிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே திசையில் பயணித்த இரண்டு பொலரோ ரக கெப் வண்டிகள் மோதிய விபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார், மேலும் மூன்று பெண்கள் புத்தளம் ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம்-அனுராதபுரம் பிரதான வீதியில் உள்ள சிரம்பியாடிய பகுதியில் நேற்று 2 ஆம் தேதி இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர் மன்னார், எருக்கலம்பிடியைச் சேர்ந்த நஸ்ருல்லா நஜீபா (வயது 55) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
35, 46 மற்றும் 80 வயதுடைய மூன்று பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
80 வயதுடைய பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கிய இரண்டு கெப் வண்டிகளில் முன்னாள் சென்றுகொண்டிருந்த வண்டியின் பின்புறத்தில் இறந்த பெண்ணும் காயமடைந்த மூன்று பெண்களும் பயணித்தனர்.
மற்ற வண்டியில் தேங்காய் ஏற்றப்பட்டு சென்றுகொண்டிருந்த நிலையில், இரண்டு வண்டிகளும் மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த மூன்று பெண்களும் ஒரே நேரத்தில் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலும் ஒரு பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்த பெண் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி இறந்துவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் தொடர்புடைய இரண்டு கெப் ரக பொலரோ வண்டிகளையும் போலீசார் தங்கள் காவலில் எடுத்து, வாகனங்களை ஓட்டி வந்த இரண்டு ஓட்டுநர்களையும் கைது செய்துள்ளனர்.
புத்தளம் காவல்துறையின் போக்குவரத்து பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
கெஹெல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அண்மையில் கண்டறிந்துள்ளது.
அவருடைய கறுப்புப் பணம், நாட்டின் பிரபல நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அதன் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் நேரடி மேற்பார்வையிலும், தலைமை பொலிஸ் பரிசோதகர் லின்டன் சில்வாவின் வழிகாட்டலிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் பலனாக, மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இன்று (நவம்பர் 1) காலை ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 13 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான வர்த்தகர் பொலிஸாரிடம், ஹினட்டியன மஹேஷ் என்ற குற்றவாளியால் தனக்கு மிரட்டல்கள் மற்றும் கொலை அச்சுறுத்தல்கள் இருந்ததாகவும், கடந்த ஆண்டு அவர் தன்னைக் கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, பாதுகாப்புக்காக கெஹெல்பத்தர பத்மேவிடமிருந்து முதலில் 5 இலட்சம் கோரப்பட்ட 13 தோட்டாக்கள் அடங்கிய கைத்துப்பாக்கியை தாம் மூன்றரை இலட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர் 48 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, கெஹெல்பத்தர பத்மேவுடன் டுபாயில் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆறு பிரபல நடிகைகளில் ஐந்து பேரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
கெஹெல்பத்தர பத்மே அந்த நடிகைகளுக்குப் பணம் வழங்கினாரா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், அந்த நடிகைகள் பத்மேவின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கினார்களா என்பது தொடர்பாகவும் விரிவான விசாரணை நடைபெறுவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்தப் பணம், குறித்த நடிகைகளால் பல்வேறு முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை முடியும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையானது நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
41 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சாவுடன் வடக்கு கடலில் 02 சந்தேக நபர்கள் கைது
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் 2025 அக்டோபர் 30 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று எண்பத்தைந்து (185) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கியுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி (01) ஆகியன கைப்பற்றப்பட்டன.
‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு மற்றும் ‘போதையில்லா நாடு – ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்க்கை’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அதன்படடி கடந்த 2025 அக்டோபர் 30 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள உள்ளூர் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணிப்பதைக் கவனித்து சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில், அந்த டிங்கி படகில் ஆறு (06) பைகளில் எண்பத்தைந்து (85) பொதிகளில் பொதி செய்யப்பட்ட நூற்று எண்பத்தைந்து (185) கிலோகிராம் (600) கிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற, இரண்டு (02) சந்தேக நபர்களும் அந்த டிங்கி (01) படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 30 வயதுடைய யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும், சந்தேக நபர்கள், கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு நாற்பத்தொரு (41) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
2025 ஆம் ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம், 5267 கிலோகிராமை விட அதிகமான கஞ்சாவை கைப்பற்றி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
முருங்கன் மகளிர் மற்றும் சிறுவர் பணியகம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.
மன்னார் – சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் காக்கும் நோக்கத்துடன், முருங்கன் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட புதிய சிறுவர் மற்றும் மகளீர் பணியகம் கடந்த 2025 அக்டோபர் 29 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இத்திறப்புவிழா வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. திலக் சி.ஏ. தனபால அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இப்புதிய வசதி ஜப்பான் அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் பொது நிதி தொகை மற்றும் இலங்கை அரசின் இணை ஒத்துழைப்புடன் வேர்ல்ட் விஷன் (World Vision) அமைப்பின் பங்களிப்பில் நிறுவப்பட்டுள்ளது.
இப்பணியகத்தின் மூலம், முருங்கன் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளிலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, ஆதரவு மற்றும் நீதியுரிமை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொலிஸ் துறையின் பிரதான நோக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக வாழக்கூடிய சமூகத்தை உருவாக்குவதே ஆகும். இத்தகைய புதிய வசதிகள், சமூக நீதி மற்றும் மனிதாபிமானப் பணிகளை நடைமுறைப்படுத்துவதில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகின்றன.
சர்வதேச கல்வி மாநாட்டிற்காக புத்தளம் கல்வியாளர் இல்ஹாம் மரைக்கார் கனடா பயணமானார்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கல்வி, சுற்றுலாத்துறை, ஏற்றுமதி இறக்குமதி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளையும் சேர்ந்த Chamber of Commerce அமைப்பின் கீழ் இயங்கும் இலங்கை கனடா வர்த்தக கவுன்சிலினால் தெரிவு செய்யப்பட்ட இலங்கை குழாம் கனடாவில் நடைபெற உள்ள சர்வதேச கல்வி மாநாட்டில் பங்குபற்ற சென்றுள்ளது.
இதன் ஊடாக இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையிலான பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதுடன் இலங்கை பல்வேறு நன்மைகளையும் அடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாடு நவம்பர் 02 ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறுவுள்ளது.
இம் மாநாட்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை குழாமில் புத்தளத்தை பிறப்பிடமாக கொண்டவரும், புத்தளம் மற்றும் கொழும்பு ஸாஹிரா கல்லூரிகளின் பழைய மாணவரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் உளவியல் பீடத்தின் பகுதி நேர விரிவுரையாளராகவும், அமேசன் கல்லூரி மற்றும் அமேசன் பல்கலைக்கழக முகாமைத்துவ பணிப்பாளராகவும் கடமையாற்றும் இல்ஹாம் மரைக்காரும் குறித்த குழாமில் இணைந்துள்ளார்.
இம் மாநாட்டின் முக்கிய அம்சங்களாக பன்னாட்டு கல்வி மற்றும் மாணவர் ஆதரவு, புதிய கூட்டண்மைகள் மற்றும் தொலைத்தொடர்பு வாய்ப்புகள், உலகளாவிய கல்வி மாற்றங்கள் குறித்த விவாதங்கள் என்பன முக்கிய அம்சங்களாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதன் 35வது ஆண்டு நினைவு நாள்
கனடா வாழ் வட புல முஸ்லீம் மக்களால் ஏற்பாடு செய்யபட்ட இந்நிகழ்வில் தமிழர்கள், முஸ்லிம்கள், தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்கள், கனடிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வு கனடா, டொரெண்டோவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த இனச்சுத்திகரிப்பு என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாத துன்பவியல் நிகழ்வு என்றும், காலம் கடந்தாலும் இம் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் ஒருவருக்கொருவர் தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கறுப்பு அக்டோபர் 2025 – புத்தளத்தில் நினைவேந்தல் ஒன்று கூடல்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
1990 ஆம் ஆண்டில் வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டோரின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருப்பு அக்டோபர் நினைவேந்தல் நிகழ்வு புத்தளத்தில் இன்று 31.10.2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது
இந்நிகழ்வை 1990 ஆம் ஆண்டில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டோரின் சங்கம் (Forcibly Evicted Association – 1990) ஏற்பாடு செய்தது. பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் வெளியேற்றப்பட்ட குடும்பங்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று, தங்களது நில உரிமைகள், மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார உரிமைகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நிகழ்வில் கலந்துகொண்டோர் பல தசாப்தங்களாக நீடித்து வரும் இந்த அநீதிக்கு விரைவான தீர்வை அரசிடம் கோரினர்.
இந்நிகழ்வில் “எங்கள் வீடுகள், எங்கள் நிலங்கள், எங்கள் உரிமைகள்” என்ற வாசகம் ஒலித்ததுடன் நிகழ்வின் முடிவில் அமைதி, நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காக பிரார்த்தனை செய்யப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.
வட மாகாணத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கண்பரிசோதனைகளை நடத்தி தேவையான மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளை வழங்கி இலங்கையில் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான செயற்பாட்டை வட மாகாணம் மேற்கொண்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக முன்பள்ளி மற்றும் அடுத்த ஆண்டு தரம் 1 இல் இணையும் மாணவர்களுக்கான கண்பரிசோதனை நடவடிக்கைகளையும் பல தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வட மாகாண பாடசாலை மாணவர்களுக்கான, ‘நகுலேஸ்வரி வாசுதேவன் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி விநியோகத் திட்டம்’ வடக்கு மாகாண சுகாதார மற்றும் கல்வி அமைச்சுக்களுடன் இணைந்து யாழ்.போதனா மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் எம்.மலரவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துக்கான நிதி அனுசரணையை அலாகா அறக்கட்டளை (மலேசியா) மூலம், அசிஸ்ட் ஆர்ஆர் (இங்கிலாந்து மற்றும் இலங்கை) ஊடாக வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கண்பரிசோதனை முன்னெடுப்பதற்காக 1,150 ஆசிரியர்கள் பயிற்றப்பட்டனர்.
அவர்கள் ஊடாக கண்டறியப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ நிபுணர் எம்.மலரவன் தலைமையிலான குழுவினர் கண்பரிசோதனைகளை மேற்கொண்டனர். வடக்கிலுள்ள 9,313 மாணவர்களில் சுமார் 4.49 சதவீதத்தினர் கண்ணாடி தேவையுடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த ஒட்டுமொத்த செயன்முறை மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய ‘தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்’ என்ற நூல் ஒன்றும் ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (31.10.2025) ஆளுநர் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
திட்டமிட்ட காலத்துக்குள் விரைவாக இதனைச் செய்து முடித்த மருத்துவ நிபுணர் மலரவன் தலைமையிலான குழுவினருக்கு ஆளுநர் நன்றிகளைக் தெரிவித்தார். இதற்கு நிதியுதவி வழங்கக் காரணமான மருத்துவர் வேலாயுதம் சர்வேஸ்வரனுக்கும் நன்றிகளை தெரிவித்ததுடன், இந்தச் செயற்றிட்டம் இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமானது எனவும் எமது மாகாணத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும் கெளரவ ஆளுநர் தெரிவித்தார்.
கண்பார்வை குறைபாட்டுடன் இருந்த எமது மாகாணப் பிள்ளைகளுக்கு இன்று புதிய உலகத்தை காணும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அவர்களது கல்வி மேம்பாட்டுக்கு வழி கிடைத்திருக்கின்றது. பல பிள்ளைகள் குறைபாடுகள் இருந்தாலும் மருத்துவமனைக்குச் செல்வதில்லை. பலருக்கு தங்கள் பிள்ளைகளுக்கு கண்ணில் குறைபாடு உள்ளது என்பதே தெரியாது. இவை எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் வகையில், பிள்ளைகளை தேடிச் சென்று நடத்திய இந்தச் செயற்றிட்டம் வெற்றியளித்திருக்கின்றது.
இந்தத் திட்டத்துக்கு அதிகாரிகள் பலர் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றார்கள். ஆரம்பத்தில் சிலர் இந்தத் திட்டம் ஏன் என்று யோசித்தவர்கள் கூட திட்டத்தின் நன்மையறிந்து பின்னர் ஒத்துழைப்பு நல்கியிருக்கின்றார்கள். மருத்துவ நிபுணர் மலரவனால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை கவனத்திலெடுத்து தொடர்ந்தும் திட்டம் நடைமுறையாக ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிச் செயலாளர்கள், பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி, மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.