Home Blog Page 170

இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை!

அக்கறையான் போலீஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சங்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை

கிளிநொச்சி, அக்கறையான் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்கந்தபுரம், ஈச்சங்குளம் பகுதியில் முற்பகை காரணமாக 24 வயது மதிக்கத்தக்க அதே பகுதியைச் சேர்ந்த கௌரிராஜன் கஜன் என்ற ஒரு பிள்ளையின் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைவாக சடலத்தின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அக்கறையான் போலீசார் தெரிவித்துள்ளனர்

இச்சம்பவம் தொடர்பாக அக்கறையான் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடப்பில் இடம்பெற்ற வாணி விழா!

(உடப்பு குறூப் நிருபர்)

உடப்பு இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் “வாணி விழா” நிகழ்வு உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபர் திரு.பி. சுகந்தன் தலைமையில் கடந்த (16) வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சிலாபம் ஶ்ரீஜெயனிதா நகை மாளிகை உரிமையாளர் திரு.வி.சுதானந்தம், அருள் நாகநாதன் அறக்கட்டளை நிதியஸ்தாபகர் திரு.ஏ.நாகநாதன், உடப்பு இந்து ஆலய பரிபாலனசபைத் தலைவர் திரு.வி.கந்தசாமி, அத்துடன் உடப்பு முன்னாள் ஆலய பூசகர் எம். பரந்தாமன்(ஜோதிடர்), கலாபூஷணம் மற்றும் ஊடகவியலாளரான திரு.வி.வீரசொக்கன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் கடந்த காலங்களில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் தங்கப் பதக்கங்களும் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் கலந்து கொண்ட பிரதம அதிதிகளுக்கும் பொன்னாடைகளும் போர்த்தி கௌரவமும் அளிக்கப்பட்டது.

அதிகரிக்கும் டெங்கு அபாயம்!

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக அதன் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார். 

இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 40,392 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், 22 பேர் உயிரிழந்தனர். 

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டெங்கு நுளம்புகள் பரவுவதைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பிரஷீலா சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா பயணமான பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல்!

பாராளுமன்ற ஒன்றியங்களுக்கிடையிலான (IPU) 151வது அமர்வு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று 19-23, 2025 அன்று நடைபெறுகிறது.

குறித்த அமர்வு இன்று 19.10.2025 தொடக்கம் 23.10.2025 வரை இடம்பெறவுள்ளது.

ஆளும் குழு, நிலைக்குழுக்கள், நாடாளுமன்றங்களின் உறுப்பினர்களின் மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் மத்திய கிழக்கு கேள்விகள், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் மற்றும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் உள்ளிட்ட அனைத்து பாராளுமன்ற ஒன்றியங்களுக்கிடையிலான சட்டப்பூர்வ அமைப்புகளும் இந்த சந்தர்ப்பத்தில் பங்கேற்கின்றன.

“மனிதாபிமான விதிமுறைகளைப் பாதுகாத்தல் மற்றும் நெருக்கடி காலங்களில் மனிதாபிமான நடவடிக்கையை ஆதரித்தல்” எனும் கருப்பொருளில் இந்த அமர்வு இடம்பெறுவதுடன், பாராளுமன்ற பிரதிநிதிகள் இந்த பகுதியில் விவாதிக்க, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகளைத் ஊக்குவிக்க இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் குறித்த அமர்வில் பங்கேற்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் அவர்களும் இலங்கைக்கான குழுவில் இணைந்து ஜெனீவா பயணமாகியுள்ளார்.

பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வடகல அடங்கிய ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற விவகார அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்குகொள்ள ஜெனீவா பயணமாகியுள்ளனர்.

சர்வதேச ரிதியாக கைவிடப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை அங்கீகரித்தல் மற்றும் ஆதரித்தல், இந்த நடைமுறையைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது என்ற தலைப்பில், அவசரகாலப் பிரச்சினை மற்றும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் நிலைக்குழுவால் பிரச்சினை குறித்த தீர்மானங்களை சட்டமன்றம் நிறைவேற்ற உள்ளது.

ஒட்டுமொத்த விவாதத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகின்ற முடிவை ஆவணபடுத்தி ஏற்றுக்கொள்வதன் மூலம் குறித்த சட்டமன்ற அமைவு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹட்டனில் இடம்பெற்ற தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வுகள்!

புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் நோர்வூட் பிரதேச செயலகம் ஆகியன ஏற்பாட்டில் 2025ம் ஆண்டுக்கான தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வுகள் இன்று (19) ஹட்டனில் இடம்பெற்றுள்ளது. 

ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலையத்தில் விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்ட அதிதிகள் ஹட்டன் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஹட்டன் மல்லியப்பு சந்திவரை பேரணி ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். 

பின்னர் அங்குள்ள தனியார் மண்டபம் ஒன்றில் தேசிய தீபாவளி தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கோலாட்டம், மழையகத்தின் பாரம்பரிய கலையான காமன் கூத்து, அருச்சுனதவசு போன்ற வரலாற்றை பிரதிபிலிக்க கூடிய பல்வேறு கலை நிகழ்வுகளும் இன்றைய பேரணியை அலங்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் பகுதியில் கடை திறப்பு விழாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஜூட் சமந்த

புதிதாக திறக்கவிருந்த ஒரு வணிக ஸ்தாபனத்தை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

புத்தளம், சேனகுடியிருப்புவைச் சேர்ந்த நவோத் கிம்ஹான் (வயது 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளம், ரத்மலை பகுதியில் கடந்த 17 ஆம் தேதி இந்த விபத்து நிகழ்ந்தது.

புத்தளம், ரத்மலை பகுதியில் புதிதாக திறக்கவிருந்த ஒரு வணிக ஸ்தாபனத்தை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​மின்சாரம் தாக்கி அந்த இளைஞர் உயிரிழந்தார். புதிய வணிக ஸ்தாபனத்திற்கு மின்சார இணைப்பு வழங்கப்படாததால், அருகிலுள்ள கடையில் இருந்து தற்காலிகமாக மின்சாரம் பெற நடவடிக்கை எடுத்தனர்.

மின்சாரம் பெற பயன்படுத்தப்படும் கம்பியை தயார் செய்யும் போது, ​​அந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் காயமடைந்த இளைஞரை சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹஷிஸ் போதைப்பொருளுடன் சிக்கியவர் குறித்து அதிர்ச்சி தகவல்!

ஜூட் சமந்த

அண்மையில் வென்னப்புவ பகுதியில் வைத்து போதைப்பொருள் தொகையுடன் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க மாரவில நீதவான் வென்னப்புவ பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

அடியம்பலம – வல்பொலவில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட கொன்வேவ, நாகொல்லாகமவில் தற்போது வசிக்கும் 37 வயதுடைய சந்தேக நபரையும், ரத்மலை, தெற்கு, நாகொல்லாமில் வசிக்கும் 25 வயதுடைய சந்தேக நபரையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியில் பயணித்த சந்தேக நபர், வென்னப்புவ நகரில் உள்ள பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையின் கோனஹேன முகாமின் அதிகாரிகளால் கடந்த 17 ஆம் தேதி இரவு 500 கிராம் 11 மில்லிகிராம் ஹஷிஷுடன் கைது செய்யப்பட்டார்.

சோதனையை நடத்திய அதிகாரிகள், சந்தேக நபரின் கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் தொகையை கண்டுபிடித்தனர். இந்த போதைப்பொருள் நாகொல்லாகம பகுதியைச் சேர்ந்த இமேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து பெறப்பட்டதாகவும், நீர்கொழும்பில் வசிக்கும் ஒருவரிடம் ஒப்படைக்க எடுத்துச் செல்லப்பட்டதாகவும் சோதனையை நடத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான மணிக்கூகே நூரேஷ் சுபுன் தயாரத்ன அல்லது ஹீனட்டியன மகேஷ் என்பவருடன் தொடர்பில் இருந்தவர் என்றும், இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் நீண்ட நாட்களாக ஈடுபட்டவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜூன் 17, 2023 அன்று மினுவங்கொட – போரகொட வணக்கத்திற்குரிய சுகத்சீவ மாவத்தை அருகே இரண்டு நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்களுக்கு மோட்டார் காரை வழங்கியதாகவும் பாதுகாப்பு புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளன.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த காலத்தில் மினுவங்கொட பகுதியில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர், நாகொல்லாகம பகுதியில் தற்காலிகமாக வசித்து போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருவதாகவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அதன்படி, சந்தேக நபரை கண்காணித்து வந்த காவல்துறை சிறப்புப் படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபருடன் கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர், அவருக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபரிடமும் போலீசார் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

வென்னப்புவ தலைமையக காவல் ஆய்வாளர் திலின ஹெட்டியாராச்சி மற்றும் பிற அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மதவக்குளம், ஆண்டிகம பகுதியில் இடம்பெற்ற கோர சம்பவம்!

ஜூட் சமந்த

தனது மகனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் எல்லை மீறி சென்றதை அடுத்து மகனை ஏர் ரைஃபிள் துப்பாக்கி மூலம் சுட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பல்லம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று 18 ஆம் தேதி இரவு 10.00 மணியளவில் ஆனமடுவ, ஆண்டிகம, கடையந்தலுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மதவக்குளம், ஆண்டிகம, கடையந்தலுவ பகுதியைச் சேர்ந்த முகமது ரஷிக் முகமது (வயது 17), ஆனமடுவ மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சம்பவத்தில் தொடர்புடைய தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருவதாகவும், நேற்று 18 ஆம் தேதி இரவு ஏற்பட்ட இதே போன்ற வாக்குவாதமே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு சந்தேக நபர் பயன்படுத்திய ஏர் ரைஃபிள்ரக துப்பாக்கியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆனமடுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் 6 வான் கதவுகள் திறப்பு!

ஜூட் சமந்த

பெய்துவரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

இன்று 19 ஆம் தேதி அதிகாலை நிலவரப்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகள் தலா 02 அடி மற்றும் மேலும் 02 வான்கதவுகள் தலா 04 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன.

திறக்கப்பட்டுள்ள 04 வான்கதவுகளில் இருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 8100 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்றும் நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் தலா 06 அடி வீதம் 06 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

திறக்கப்பட்டுள்ள இந்த வான்கதவுகளில் இருந்து கலா ஓயாவிற்கு வினாடிக்கு 7206 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றன.

இதற்கிடையில், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 02 தானியங்கி வான்கதவுகளும் தலா 05 அடி திறக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து கலா ஓயாவிற்கு வினாடிக்கு 2940 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் கலா ஓயா மற்றும் தெதுரு ஓயாவிற்குள் பாயும் என்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக செயல்படுமாறு புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

இது காட்டுமிராண்டித்தனமான செயல் – ரஷீத் கான்!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே எல்லைத்தாண்டிய தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில் பொதுமக்கள் கொல்லப்படுவதுடன், பலர் காயமடைந்து வருகின்றனர்.

அந்தவகையில் ஆப்கானிஸ்தானின் உர்குன் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய எல்லைத்தாண்டிய தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

5 உள்ளூர் மக்கள் கொல்லப்பட்டதில் 3 கிரிக்கெட் வீரர்கள் இறந்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தானில் நடக்கவிருந்த முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது எல்லைத்தாண்டிய வான்வழி தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தான் நடவடிக்கையை காட்டுமிராண்டித்தனம் என குறிப்பிட்டிருக்கும் ரசீத் கான், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைக்கு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டிருக்கும் அவர், “சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. உலக அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கனவு கண்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆர்வமுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களின் உயிரைப் பறித்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைப்பது முற்றிலும் ஒழுக்கக்கேடானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது. இந்த அநீதியான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாகும்.

பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கான ACB-ன் முடிவை நான் வரவேற்கிறேன். இந்த கடினமான நேரத்தில் நான் நமது மக்களுடன் நிற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.