Saturday, November 8, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 189

இஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

0

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் பிடியிலிருந்த 6 பணயக் கைதிகளின் உடல்களை இஸ்ரேலிய வீரர்கள் கண்டெடுத்ததை அடுத்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேலிய கொடிகளை ஏந்தியிருந்ததுடன் பல கோஷங்களை எழுப்பி எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதன்போது டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் பிற நகரங்களில் கூடிய பொது மக்கள், ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்ட மீதமுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலிய அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.

தீர்மானம் குறித்து அதிருப்தி அடைந்த மாவை!

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில், இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறினார். இதன்போது கட்சியின் நிலைப்பாடு, இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இதனை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தார்.

மேலும், இது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு எனவும் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் நாடளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் பங்கேற்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும், கட்சியின் முக்கியஸ்தர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், இலங்கை தமிழரசு கட்சி, எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது என, இன்று வவுனியாவில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதில்லை எனவும் அவரை போட்டியிலிருந்து விலகுமாறு கோருவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கம்பகா மாவட்ட முஸ்லிம்களுடன் விஷேட சந்திப்பு

0

கம்பகா மாவட்ட முஸ்லிம் மக்களுடனான விசேட சந்திப்பு நகர அபிவிருத்தி மற்றும் வீடு வசதிகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நேற்று 30.08.2024 மிணுவன்கொட காஞ்சனா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

நாட்டின் தற்போது இடம்பெற்று வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட இன முறுகல் நிலை குறித்து கவலை வெளியிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சகல இன மக்களுக்கிடையில் நல்லுறவையும், சமத்துவத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் மாத்திரமே நாட்டில் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி தன்னிறைவான நாடக மாற்ற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்புவதாக தெரிவித்தார்.

குறித்த மக்கள் சந்திப்பில் ஜனாதிபதியின் பிரத்தியேக ஆலோசகர் ஆஷு மாரசிங்க, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண, அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெரும் திரளான முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு ஊடகவியலாளர்கள் பாராளுமன்றத்தில் ஆய்வு

0

மத்திய கிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் சிலர் அண்மையில் (27) பாராளுமன்றத்தில் ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது இலங்கை பாராளுமன்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாராளுமன்றக் கட்டமைப்பும் வகிபாகமும், சட்டவாக்க நடைமுறை, பாராளுமன்ற விவாதங்களின் முறைமை, பாராளுமன்றக் குழுக்களின் பணிகள் மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகளை பொதுமக்களுக்குக் கொண்டு சேர்த்தல் என்பன தொடர்பில் இதன்போது விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

விசேடமாக, தெற்காசியாவின் சூழலில் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் ஏனைய சர்வதேச உடன்படிக்கைகளை அடைவதில் இலங்கை பாராளுமன்றம் கவனம் செலுத்தும் விதம் குறித்தும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி  குமார் லோபஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுப் பயணத்தில் குவைட் இராஜ்ஜியம், எகிப்து, அல்ஜீரியா, மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

சர்வதேச ஊடகவியலாளர்களுக்கான நிலையத்தினால் (ICFJ) இந்த ஆய்வுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

இலங்கையில் பட்டங்கள் மூலம் மின்சாரம்!

0

வீட்டு உபயோகத்திற்குத் தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். 

அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

திருவிழாவின் போது நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது பொதுவானது என்றாலும், நுவரெலியாவில் இந்த நோக்கத்திற்காகப் பட்டங்களைப் பயன்படுத்துவது ஒரு புதிய முயற்சியாகும். 

இந்த யோசனை இலங்கைக்கு புதியது. 

எனினும் இது ஏற்கனவே அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

அங்கு உயரப்பறக்கும் ஒரு பட்டத்தின் மூலம் குறைந்தது 4 வீடுகளுக்கான மின்சாரம் பெறப்படுகிறது. 

இலங்கையில் இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கு, இலங்கை முழுவதும் உள்ள பட்டம் பறக்கவிடும் சங்கங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும். 

இந்த திட்டத்தின் ஊடாக 500 மீட்டருக்கு மேல் உயரத்தில் பறக்கும் பட்டங்களின் மூலம்  1,800 டெராவொட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

இதன்படி, எதிர்காலத்தில் மின்சார உற்பத்திக்கான புதிய முறைகளை அறிமுகப்படுத்தக் கொழும்பு பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகப் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

வெளியானது ஜனாதிபதி ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம்

0

வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு மாதம் 25,000 ரூபாய்

*குறைந்தபட்ச ஊதியம் 24% உயர்வு
* கற்கை நெறிகளுக்கு சம்பளத்துடன் விடுறை
* புதிய வீடுகள்
* வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி
*ஓய்வூதியம் பெறுபவர்களின் சம்பள பிரச்சினையை தீர்த்தல்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனம் அடங்கிய www.ranil2024.lk இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் மகா சங்கத்தினர் முன்னிலையில் “ஐந்தாண்டு பணி இயலும் சிறிலங்கா” என்ற கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.

https://www.ranil2024.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி இந்த விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.

அரச சேவை

2025ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி, அனைத்து அரச ஊழியர்களுக்கும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக மாதாந்தம் 25,000 ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவையின் குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் 24% ஆகவும், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் மொத்த சம்பளம் 55,000 ரூபாவாகவும்  ஏனைய அனைத்து பதவிகளுக்கான அடிப்படைச் சம்பளமும் மாற்றியமைக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*40 வயதுக்குட்பட்ட அரசு ஊழியர்களுக்கு சேவைத் திறனை மேம்படுத்த உதவும் கற்கை நெறிகளுக்காக சம்பளத்துடன் கூடிய விடுமுறை.

* பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகத்தை நிறுவுதல்.

* ஒரு மேம்பட்ட திறன் அடிப்படையிலான உயர் முறை.

* அரசு ஊழியர்களுக்கு மடிக்கணினிகள், டேப்கள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றை சலுகை அடிப்படையில் வழங்குவதன் மூலம் பொதுச் சேவையை திறமையான மற்றும் சீரான நிலைக்கு உயர்த்துதல்.

*அரசின் புதிய வீட்டுத் திட்டத்தில் வீட்டு உரிமை இல்லாத அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்தல்.

* அனர்த்த கடன் தொகையை அதிகரிக்கவும், சொத்து மற்றும் வீட்டுக் கடன்களை மீண்டும் வழங்கவும் செயற்படுவோம்.

* வீட்டிலிருந்து செய்யக்கூடிய சேவைகளை வீட்டிலிருந்து செய்ய அனுமதிக்கப்படுகிறது.

*குறிப்பிட்ட மற்றும் முறையான இடமாற்றத்தை அறிமுகம் செய்தல்.

*ஓய்வூதியம் பெறுபவர்களின் சம்பள பிரச்சினைகளை தீர்த்தல்

சிரேஸ்ட பிரஜைகள்

* நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய சிரேஸ்ட பிரஜைகள் பராமரிப்பு மையங்களை நிர்மாணித்தல்.

* சிரேஸ்ட பிரஜைகளுக்கான தேசியக் கொள்கையை 2025 இல் திருத்துதல்.

*சிரேஸ்ட பிரஜைகளின் சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கையை வளர்ப்பதற்காக பிராந்திய செயலகங்கள் மற்றும் சமூக மன்றங்களால் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல்.

சிறப்புத் தேவைகள் கொண்ட சமூகம்

* மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் 4 வது பிரிவுக்கு இணங்க, அத்தகைய நபர்களின் அனைத்து மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை முழுமையாக உத்தரவாதம் செய்ய 2025 இல் பாராளுமன்றத்திற்கு ஒரு புதிய சட்டம்.

*சைகை மொழி சட்டமூலத்தை நிறைவேற்றி, சிறப்புத் தேவையுடையவர்களுக்கான தேசியக் கொள்கையை உருவாக்குதல்.

*அவர்களுக்கான கட்டிட அணுகல் கொள்கையை அவ்வப்போது திருத்துதல்.

*ஒரு சிறப்பு வேலைவாய்ப்பு ஒதுக்கீடு.

வாழ்க்கைச் சுமையைக் குறைத்தல், தொழில் வாய்ப்புகளை வழங்குதல், வரி நிவாரணம் வழங்குதல், பொருளாதார மேம்பாடு மற்றும் ‘உறுமய’ மற்றும் ‘அஸ்வெசும’ வேலைத் திட்டங்களை செயல்படுத்தல், முதல் கட்டமாக, 100,000 தொழில் வாய்ப்பு, வருமான மூலங்களை வழங்க நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றுக்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு தெரிவித்தார்.

பாடசாலைக் கல்வியை முடித்து வெளியேறும் 50,000  பிள்ளைகளுக்கு கைத்தொழில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவுள்ளது.

ரணிலுடன்  நாட்டை வெற்றிகொள்ளும்’ ஐந்தாண்டுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கம், உயர் சம்பளம், வரிச் சுமைக் குறைப்பு, பொருளாதாரத்திற்கான திட்டம் மற்றும் ‘உறுமய’, ‘அஸ்வெசும’ வேலைத் திட்டங்களை விரிவுபடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆபாச படம் காட்டிய அதிபர். காட்டியது யாருக்கு தெரியுமா?

0

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 ஆம் ஆண்டில் கல்விகற்றுவரும் சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் காட்டி வந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று (21) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 ஆம் ஆண்டில் 3 சிறுமிகள், 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கல்விகற்று வருகின்றனர். இந்நிலையில் குறித்த மாணவர்கள் 5 ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அந்த மாணவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலையில் அதிபர் கற்பித்து வந்துள்ளார்

இதன் போது குறித்த அதிபர் மாணவர்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் இருந்து ஆபாச படங்களை காட்டிவந்துள்ள நிலையில் ஒரு மாணவி மாலை நேர வகுப்பிற்கு போகமுடியாது என பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அதற்கான காரணத்தை கேட்டபோது சிறுமி அதிபரின் இந்த செயல் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவதினமான நேற்று இரவு பெற்றோர்பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் பாதிக்கப்பட்ட 3 மாணவிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் 57 வயதுடைய அதிபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அதிபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீ.மு காங்கிரஸ் தலைவருக்கு எதிராக தடை உத்தரவு

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். அலி சாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதைத் தடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் செயலாளர் நாயகத்திற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (28) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அலி சாஹிர் மௌலானாவினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டினை ஆராய்ந்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோருக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு வரும் 11ம் திகதி வரை அமுலில் இருக்கும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கடந்த ஓகஸ்ட்மாதம்  4ஆம் திகதி கூடி தீர்மானித்தது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானித்திருந்த உயர்பீடக் கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என்றும், ஆனால் அந்த முடிவு தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், தாம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம் சுமத்தி,  எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் இன்றி தமது கட்சி உறுப்புரிமையைப் பறிக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1.2 பில்லியன்-1.3 பில்லியன் டொலர் வரை இந்நாடு இழக்கும்

0

சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான செயல்மட்டுமன்றி அது வெற்றிகரமான செயல் அல்ல என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் எதிர்வரும் டிசம்பரில் சர்வதேச நாணய நிதியம் வழங்கவிருக்கும் அடுத்த தவணை மற்றும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) வழங்கவுள்ள தவணைகளை இழக்க நேரிடும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி 2024 டிசம்பர் முதல் 2025 ஜனவரி வரை நாடு 1.2 பில்லியன் முதல் 1.3 பில்லியன் டொலர் வரை இந்நாடு இழக்கும் எனவும், அதன் காரணமாக நாடு மீண்டும் ஸ்திரமற்ற நிலைக்கு மாறுவதை யாராளும் தடுக்க முடியாது எனவும் அமைச்சர் அலி சப்ரி மேலும் சுட்டிக்காட்டினார்.

இன்று (28) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனைக் குறிப்பிட்டார்.

கழிவு குப்பைகளை திருப்பி அனுப்பிய அலிசப்ரி எம்.பி

0

புத்தளம் அறுவாக்காடு பிரதேசத்தில் கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட கழிவு குப்பைகள் மீண்டும் கொட்டப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அதிகாலை எதுவித முன்னறிவித்தலுமின்றி கொள்கலன்களில் நிரப்பப்பட்ட குப்பைகள் புகையிரதம் மூலமாக கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்டு அறுவாக்காடு பிரதேசத்தில் கொட்டப்பட்ட நிகழ்வு புத்தளத்தில் மீண்டும் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

சீன செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக கொண்டுவரப்பட்ட சுமார் 20 கொள்கலன்களில் நிரப்பப்பட்ட கழிவு குப்பைகள் ரயில் மூலம் புத்தளம் அறுவாக்காடு பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.

முதல் கட்டமாக 20 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட கழிவு குப்பைகளில் சுமார் 9 கொள்கலன் குப்பைகள் குறித்த பகுதியில் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல கழிவு கொள்கலன்கள் அடுத்த சில நாட்களில் கொண்டுவரப்பட இருந்ததாகவும் அறிய முடிகிறது.

புத்தளம் அருவாக்காடு பகுதிக்கு கழிவு குப்பைகள் கொண்டுவரப்பட்டதை அறிந்த மக்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்ததுடன், குறித்த விடயம் குறித்து புத்தளம் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.

குறித்த பிரச்சினையை ஆராய்ந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள், மேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனும், விடயத்திற்கு பொறுப்பான கெளரவ அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க அவர்களுடனும் கலந்துரையாடி உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த கழிவு குப்பைகள் கொண்டு வருவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் நாட்களில் புத்தளம் பகுதிக்கு மீண்டும் பல கொள்கலன்களில் கொண்டுவரப்பட இருந்த கழிவு குப்பைகள், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டதுடன், நேற்று கொண்டுவரப்பட்ட 20 கொள்கலன் குப்பைகளில் 11 கொள்கலன்கள் இன்று திருப்பி அனுப்படுவதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

குறித்த கழிவு குப்பைகளை மீண்டும் கொழும்புக்கு எடுத்துச் செல்ல கொழும்பிலிருந்து கொள்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது.