Sunday, March 15, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 196

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிரடி அறிவிப்பு!

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நழீம் தன்னுடைய பதவியை இராஜினாமாச் செய்தது முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் சரித்திரத்தில் மாத்திரம் அல்ல. இலங்கை முஸ்லிம் அரசியல் சரித்திரத்திலும் ஒரு தாக்கத்தை உருவாக்கிய நிகழ்வாகும். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், கட்சிக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றியது சம்பந்தமாக, முன்னுதாரணமாக இருந்தது மாத்திரமல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சரித்திரத்தில் அக்கட்சியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தனக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நான்கு மாதங்களுக்குள் இராஜினாமா செய்த வரலாற்றில் இது முதல் தடவையாகும் 

இக்கட்சியின் செயலாளர் என்ற வகையில் நான் மிகவும் பெருமிதமும், மகிழச்சியும் அடைந்துள்ளேன். கட்சி சார்பாக என்னுடைய நன்றிகளை அவருக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். 

மேலும், இந்த வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை எவருக்கம் வழங்கப்பட மாட்டாது. மாறாக இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முக்கியமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தங்களது பிரதேசத்துக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி தமது சபைகளை கைப்பற்றி ஆட்சியை அமைக்க வேண்டும். அதற்கான சகல எற்பாடுகளையும் செய்து பணியாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். 

இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி சுழற்சி முறையில் ஒரு வருடத்திற்கென்ற முறையில் பகிர்ந்தளிக்கப்படும். அதனை கட்சி தீர்மானித்துள்ளது. அந்த வகையில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள் தங்களது சபைகளை வெல்ல வைத்தால் கட்சி உங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத்தந்து உங்களையும், உங்களது பிரதேசத்தையும் கௌரவப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

சாணக்கியன் எம்.பி வெளியிட்ட முக்கிய செய்தி!

0

முன்னணி சோசலிசக் கட்சிக்கு அச்சமடைந்து தற்போதைய அரசாங்கம் படலந்த ஆணைக்குழு அறிக்கையை தாக்கல் செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். 

மக்கள் விடுதலை முன்னணியின் சில தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று (15) நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோர விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலி!

0

பளை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பளைகரந்தாய் பகுதியில் நேற்றைய தினம் 14.03.2025. நள்ளிரவு11.50 மணியலவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பார ஊர்தியும் கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தின் தொடர்புடைய பார ஊர்தியின் சாரதி பளை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பளை வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த 23 வயதுடைய மகேந்திரன் நிசாந்தன் என்னும் இளைஞனே குறித்த விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்க பளை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பளை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

ஆரம்பமானது வன உயிரினங்கள் கணக்கெடுப்பு!

0

விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு இன்று (15) காலை 8.00 – 8.05 மணிக்கு ஆரம்பமானது.

உங்கள் தோட்டம், விவசாய நிலம், பாடசாலை, வழிபாட்டுத் தலம் அல்லது நிறுவனத்தில் இருக்கும் குரங்குகள், அணில்கள் மற்றும் மயில்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தில் பதிவு செய்து உங்கள் பிரதேச கிராம அலுவலர் அல்லது பொருளாதார மேம்பாட்டு அலுவலர் அல்லது சமுர்த்தி மேம்பாட்டு அலுவலர் அல்லது விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரிடம் கையளிக்குமாறு விவசாய, கால்நடை வளர்ப்பு, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்துள்ளது. 

மேலும், இன்று நடைபெறவிருக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்புக்குத் தேவையான துண்டுப் பிரசுரங்கள் தற்போது நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் ஜீ.ஜீ.வீ. ஷியாமலி தெரிவித்தார். 

உணவுப் பாதுகாப்பு மற்றும் பயிர் இழப்புகளைக் குறைத்தல் ஆகிய முதன்மை நோக்கங்களுடன் இந்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம சேவையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட படிவங்களுக்கு அமைய பயிர்நிலங்கள், வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள் பொது இடங்களில் இன்றைய தினம் கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை இந்த கணக்கெடுப்பு விடயம் நாடு பூராகவும் பேசும் பொருளாக மாறி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

Click here to join our whatsApp group

வெளியாகியது பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்!

0

5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்குள் நுழைவதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டின் 5 ஆம் வகுப்புப் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு 6 ஆம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2025.03.14 முதல் மாணவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள பாடசாலைகளை https://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று பார்வையிடலாம்.

2024 ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் முடிவுகளின் அடிப்படையில் தகுதி பெற்றிருந்தாலும், இந்த வெட்டுப்புள்ளிகளின் படி பாடசாலை ஒதுக்கப்படாத வேறு நியாயமான காரணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடசாலையை மாற்ற விரும்பும் மாணவர்கள், இணையவழி (Online) மூலம் மேல்முறையீடு செய்ய விரைவில் வசதிகள் செய்யப்படும். அத்துடன் மேல்முறையீடு செய்யக்கூடிய காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும்.

அனைத்து மேல்முறையீடுகளும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சிற்கு இந்த இணையவழித் திட்டம் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் கட்டுப்பணம் செலுத்திய ஜவுபர் மரைக்கார்!

0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (2025) புத்தளம் மாநகர சபைக்கான கட்டுப்பணம் ஜவுபர் மரைக்கார் தலைமையிலான அணியினால் சற்று முன்னர் (14.03.2025) புத்தளம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள உதவி தேர்தல்கள் ஆணையாளர் காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (2025) புத்தளம் மாநகர சபைக்கான கட்டுப்பணம் மாத்திரமே தற்போது செலுத்தப்பட்டுள்ளதாகவும், புத்தளம் பிரதேச சபைக்கான கட்டுப்பணம் விரைவில் செலுத்தப்படும் எனவும் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

புத்தளம் மாநகர சபைக்கான வேட்பாளர் பட்டியல் தயார்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், புத்தளம் பிரதேச சபைக்கான வேட்பாளர் பட்டியல் தயார்படுத்தும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் சகோ. ஜவுபர் மரைக்கார், நஸ்ஹத் மரைக்கார் மற்றும் ஆசிரியர் பாரூக் பதீன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், நியமனப் பத்திரம் தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் பெற்றுகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு பிரதேச செயலகங்கள் குறித்து ஹக்கீம் காட்டம்!

0

அம்பாறை, சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுகளுக்கிடையிலான நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வை வழங்குமாறு சபையில் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

கிழக்கில் அம்பாறை மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்கிடையில் நிலவி வரும் தொடர் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வை வழங்குமாறு
அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிருவாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் மீதான செலவு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அம்பாறை பிரதேச செயலகம் அளவுக்கதிமான காணிகளை கையகப்படுத்தியுள்ளதாக கவலை வெளியிட்டார்.

1931ல் காலப்பகுதியிலிருந்து பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட மூதாதையர்களின் காணிகள் சுவிகரிக்கப்பட்டு அநீதியிழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நவகம்புர பிரதேச செயலகப்பிரிவில் இராணுவ முகாமிற்கருகிலுள்ள 1961ம் ஆண்டு ஜெயபூமி உறுதி வழங்கப்பட்ட 19 விவசாயிகளுக்குச் சொந்தமான வயல் நிலப்பிரதேசம் தற்போது பலவந்தமாக சம்மாந்துறை பிரதேச செயலகத்திலிருந்து பிரிக்கப்பட்டு அம்பாறை பிரதேச செயலக பிரிவுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்திருக்கின்றன. நீதிமன்ற ஆளுகைப் பிரதேசமும் மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அறிக்கையை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

அம்பாறை மாவட்ட செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், அம்பாறை பிரதேச பிரிவுக்கு உரித்தான குறிப்பிட்ட உறுதியின் பிரகாரம் தங்களுடைய விவசாயக்குழுவில் அங்கத்துவம் வகிப்பவர்கள் குறிப்பிட்ட காணியில் பயிரிடுவதற்கு இத்தாள் நான் அனுமதி வழங்குகிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு வழங்கப்பட்ட அக்கடிதத்தை மற்றும் ஏனைய ஆவணங்களையும் இச்சபையில் சமர்ப்பிக்கின்றேன்.

அதே நேரம், இதுவரை இவ்விவசாயிகளின் பயிர்ச்செய்கை நிலங்களுக்கு போக அனுமதி கூட கிடைக்கப்பெறவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆகவே, இவைகளைக் கருத்திற்கொண்டு அம்பாறை மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுகளுக்கிடையில் நிலவி வரும் நீண்டகாலப்பிரச்சினை தொடர்பில் அதீத கவனஞ்செலுத்தி நிரந்தரத்தீர்வு வழங்குமாறு கோருகிறேன் எனத்தெரிவித்தார்.

வடக்கில் கட்டுப்பணம் செலுத்திய EPDP!

0

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி (EPDP) கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று செலுத்தியது.

கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான வைத்தியநாதன் தவநாதன் குறித்த கட்டுப்பணத்தை செலுத்தினார்.

கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தினையே இன்றைய தினம் செலுத்தியிருந்தனர்.

கடந்த முறை போன்று இம்முறையும் தனித்து போட்டியிடவுள்ளதாகவும், பொது அமைப்புக்கள் சார்ந்தோர் உட்பட பலர் போட்டியிடவுள்ளதாகவும் சுகந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தமது கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

பூதாகரமாகிய பட்டலந்த விவகாரம்!

0

பட்டலந்த விவகாரம் போன்று எத்தனை ஆயிரமாயிரம் சம்பவங்கள் எமது மண்ணிலே நடந்திருக்கிறது. இந்தச் சம்பவங்கள் உங்களுக்கு தெரியவில்லையா? இதற்கு என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்கப் போகிறீர்கள்? என தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (13) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது.. 

“பட்டலந்த விவகாரம் போன்று எத்தனையோ ஆயிரமாயிரம் சம்பவங்கள் நம் மண்ணில் நடந்துள்ளன. இந்தச் சம்பவங்கள் உங்களுக்கு தெரியாதவையா? இவற்றுக்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? இப்போது பலரும் பேசி வரும் பட்டலந்த விவகாரம், அந்தக் காலத்திலேயே பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இளமைக் காலத்தில், இதற்கு அவருக்கும் தொடர்பு இருந்ததாகவே பேசப்பட்டு வந்தது. அந்த ஆணைக்குழு அறிக்கையும் இது போன்ற விடயங்களை உள்ளடக்கியதாகவும், அதனை உறுதிப்படுத்தியதாகவும் உள்ளது.

அவர்களைப் பொறுத்தவரை இது காலம் கடந்த விடயமாக இருந்தாலும், அதனை பகிரங்கப்படுத்தி உண்மையை வெளிக்கொண்டுவந்து, அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது சரியென்றே நான் கருதுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், பட்டலந்த படுகொலை விவகாரம் என்பது இந்த நாட்டு மக்களுக்காக அங்கு நடைபெறும் ஒரு விடயம்.

ஆனால், ஆட்சியில் இருக்கும் எந்த அரசாங்கமும் தமிழர்களுக்கு எதைச் செய்தாலும் அதனை நியாயப்படுத்துவதையே மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் செய்து வந்துள்ளன. இதுவே அவர்களது கொள்கையாகவும், நிலைப்பாடாகவும் இருக்கிறது. ஏனெனில், காட்சிகள் மாறினாலும் ஆட்கள் மாறவில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது சிந்தனையில் மாற்றம் ஏற்படுவதில்லை.

பட்டலந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியாளர்களிடம் நாங்கள் எந்தக் கோரிக்கையையும் வைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களே அதுகுறித்து சண்டையிட்டுக் கொள்வார்கள். அப்படித்தான் இப்போது நடக்கிறது. இதுபற்றி சிங்கள அரசியல்வாதிகள் பேசிக்கொள்ளட்டும். ஒரு பட்டலந்த பற்றி அவர்கள் இப்போது அங்கு பேசுகிறார்கள். ஆனால், இங்கு எத்தனையோ ஆயிரம் பட்டலந்த கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. எவ்வளவு பேர் கொடுமைப்படுத்தப்பட்டு, காயப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்கிறார்கள்? அவை அனைத்திற்கும் விசாரணை நடக்கப் போகிறதா என்றால், இல்லை.

ஆகவே, பட்டலந்த போன்ற பற்பல சம்பவங்கள் எங்களுக்கு எதிராக நடந்துள்ளதற்கு, நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? ஏன் உங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை? என்று பல்வேறு கேள்விகளை நாங்கள் எழுப்பலாம். அதைச் செய்வோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பல்கலை விரிவுரையாளர்களுக்கு பிரச்சினை!

0

ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு இடையில் சந்திப்பு.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு (FUTA) இடையிலான சந்திப்பொன்று இன்று (13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தற்போது முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், அதற்குரிய தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தற்போது இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்குள் நுழைந்திருப்பதால், அதன் பரிந்துரைகள் மற்றும் நியதிகளுக்கு அமைவாக அரசாங்கம் செயற்பட வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி வரவு செலவு கட்டுப்பாடுகளின் கீழ் முன்னுரிமைகளை அறிந்துகொண்டு இம்முறை வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதுடன், அந்த இக்கட்டான நிலைக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு பெருமளவில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

தொழில்வாண்மையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு நல்லதொரு புரிதல் இருப்பதாகவும், அது தொடர்பில் கவனம் செலுத்தி அனைவரினதும் உரிமைகளை பாதுகாக்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரினி அமரசூரிய, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அநுருத்த கருணாரத்ன, செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த.பீ.இலங்கசிங்க உள்ளிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க பிரிதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு