Saturday, March 14, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 204

இத்தாலி இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

0

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டத்திற்கு இத்தாலி ஆதரவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டெமியானோ (Damiano Francovigh) பிரான்கோவிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையின் புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் திட்டத்திற்கு இத்தாலிய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று தூதுவர் டெமியானோ பிராங்கோவிக் தெரிவித்தார்.

இலங்கையின் சுற்றுலா, துறைமுகங்கள் மற்றும் முதலீட்டுத் துறைகளுக்கு இத்தாலிய அரசாங்கம் வழங்கக் கூடிய ஆதரவு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இத்தாலியில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் இலங்கை இளைஞர்களின் விசா பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க எதிர்பார்த்திருப்பதாகவும் இத்தாலிய தூதுவர் தெரிவித்தார்.

இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்களுக்கும், இத்தாலியில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கும் சட்டப்பூர்வமான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேயும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-02-27

மக்களிடம் நல்லதொரு எண்ணம் இல்லை!

0

அரசாங்க அலுவலகங்கள் அனைத்தையும் அரசாங்க கட்டிடங்களுக்கு கொண்டுவர நடவடிக்கை

வரையறுக்கப்பட்ட நிதிக் கட்டமைப்புக்குள் இருந்தாலும் அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகளை அறிந்துகொண்டு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதால், அந்த நிதியை வினைத்திறனாகவும், பயனுள்ள மற்றும் நியாயமான முறையில் பயன்படுத்துவது அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அதன்படி செலவு முகாமைத்துவத்தின் போது அரசாங்க அதிகாரிகள் உரிய பொறுப்புடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அரசாங்க சேவைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு எண்ணம் காணப்படவில்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரச சேவைக்குள் காணப்படும் வினைத்திறன் இன்மையே அதற்கு காரணமெனவும் சுட்டிக்காட்டினார். அதேபோல் அரச ஊழியர்களிடையே காணப்படும் திருப்தியின்மையே வினைத்திறன் இல்லாமைக்கு காரணமாக அமைந்துள்ளதெனவும், அந்த பிரச்சினைகளை தீர்த்து அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட அரசியல் அதிகார தரப்பும் செலவுகளை குறைத்திருக்கும் நிலையில், அரச நிறுவனங்களின் நிர்வாகச் செலவை குறைத்தல் மற்றும் விரயத்தை குறைத்தல் என்பன அரச சேவையின் பொறுப்பாகும் என்றும் கூறினார்.

யுக்ரைனை பந்தாடும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ்!

0

உக்ரைன் நாட்டின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யும் வகையில் பொருளாதார ஒப்பந்த வரைவு தயாா் நிலையில் இருப்பதாக அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி நேற்று (பிப். 26) தெரிவித்தாா்.

இந்த நிலையில், உக்ரைனின் கனிம வளங்களைத் தோண்டியெடுக்க பிரான்ஸ் நாட்டின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

பேச்சுவார்த்தை குறித்து உறுதிப்படுத்திய ஸெலென்ஸ்கி, “பிரான்ஸின் தேவைகளுக்காக இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்” எனத் தெரிவித்தார். அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை உறுதிசெய்த அவர் அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திக்கும் முன்னர் இதனைத் தெரிவித்தார்.

பிரான்ஸ் – உக்ரைன் பேச்சுவார்த்தை இருநாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்களால் கடந்தாண்டு அக்டோபர் முதல் நடைபெற்று வருகின்றது.

”நாங்கள் செய்த உதவிக்கு கைமாறாக கனிம வளங்களைக் கேட்கவில்லை. 30 முதல் 40 ஆண்டுகளில் எங்களுடைய ராணுவ ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைக்குத் தேவைப்படும் குறிப்பிட்ட அளவு மூலப்பொருள்களைக் கேட்கிறோம்” என பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகார்னு தெரிவித்தார்.

மேலும், போர் நிறுத்தம் ஏற்பட்டால் கனிம வளங்களை விற்பதாக ஸெலென்ஸ்கியே தெரிவித்தார் என்றும் இதற்கு அமெரிக்கா மட்டுமின்றி பிரான்ஸுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

புத்தளத்தில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

0

புத்தளம் கல்லடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் நேற்று புதன்கிழமை (26) உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சம்பவத்தன்று, யுவதி தனது வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ள நிலையில், அவரது பெற்றோர்கள் அவரை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது யுவதியை சோதனையிட்டு பார்த்த வைத்தியர்கள், யுவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

யுவதியின் உடற்பாகங்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நாடுபூராக தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

0

வைத்திய ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் மேலதிக சேவைகால கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை (27)  நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளின் முன்பாக தாதியர்கள் ஒரு மணி நேர கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தற்போதைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய வரவு–செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள போதும் வைத்திய ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் மேலதிக சேவைகால கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளதாக தாதியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளின் முன்பாக இன்றையதினம்  அரச தாதியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் தாதியர்கள் ஒன்றிணைந்து நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மதிய இடைவேளையின் போதே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்ததை தொடர்ந்து கடுமையான போராட்டங்களின் பின்னர் வைத்திய ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் அரசாங்கம் இவ்வருடத்துக்கான புதிய வரவு-செலவு திட்டத்தில் சம்பளத்தை அதிகரித்து கொடுப்பனவுகளை குறைத்து நியாயமற்ற முறையில் செயற்படுவதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அரச தாதியர் சங்கத்தின் துணைத் தலைவர் நாகல ஹெட்டியாராச்சி தொழிற்சங்க நடவடிக்கைத் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் புதிய வரவு-செலவுத்திட்டத்தில் சம்பள அதிகரிப்புக்கு இணையாக சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், தர உயர்வுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 5 வருடங்களின் பின்னர் வழங்கப்படும் தர உயர்வை 10 வருடங்களாக  அரசாங்கம் நீடித்துள்ளது. கடிதம் மூலம் எமது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ள போதும், அதற்கான எவ்வித பதில்களும் இதுவரை வழங்கப்படவில்லை.

எமக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கிறோம். புதிதாக எமக்கு எதுவும் தேவையில்லை. ஏற்கனவே இருந்த சலுகைகளையும் கொடுப்பனவுகளும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தாதியர்களின் கடமைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மதிய இடைவேளையில் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டது என்றார். 

கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கம் நடாத்தும் போட்டி!

0

கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கம் நடாத்தும் 2024ம் ஆண்டுக்கான எழுத்து தேர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி நடாத்தப்பட உள்ளது.

3000ற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவுள்ள குறித்த தேர்வு 45ற்கும் மேற்பட்ட நிலையங்களில் நடாத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்க வாழ்நாள் தலைவர் வே. இறைபிள்ளை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்தார்.

மேலும் பாடசாலை மாணவர் ஒருவரை திருக்குறளின் மூலம் தாய் நாட்டிற்கும் தாய்மொழிக்கும் சமூகத்திற்கும் நல்ல பிரஜையாக உருவாக்குவதே இதன் நோக்கம் எனவும், குறித்த எழுத்து தேர்வானது. அ,ஆ,இ,ஈ,உ,ஊ என்ற பிரிவுகளில் தரம் 2 தொடக்கம் 13 வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்

தினமும் நீர் விநியோகத்திற்கு தடை?

0

தற்போதைய நாட்களில் நீர் பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாக, விநியோக அமைப்பில் அவ்வப்போது குறைந்த அழுத்த நிலைகள் அல்லது அதிக உயரமான பகுதிகளுக்கான நீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைத் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, ஒவ்வொரு நாளும் கணிசமான நேரத்திற்கு நீர் விநியோகம் தடைபடுகிறது, மேலும் சபையால் அடையாளம் காணப்பட்ட உயரமான பகுதிகளில் வசிக்கும் நுகர்வோருக்கு பவுசர்கள் மூலமாக நீரை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தற்போதைய நாட்களில் நீர் பாவனை அதிகரித்துள்ளதுடன், நீர் விநியோகம் குறைவாக இருப்பதால், வாகனங்களை கழுவுதல், தோட்டக்கலை போன்ற நடவடிக்கைகளுக்கு நீர் பயன்பாட்டைக் குறைத்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, பொதுமக்களிடம் கோரியுள்ளது. 

இதனூடாக, நீர் விநியோக அமைப்பில் நீர் அழுத்தத்தை உகந்த அளவில் பராமரிக்க முடியுமெனவும், அவசரநிலைகளைச் சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைவாக இருந்தாலும், மக்களின் நீர் நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், நீர் உற்பத்தியில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை என்றும், சாதாரண அளவை விட சுமார் 102 மடங்கு அதிக அளவில் நீர் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உப்பு நீர் ஆற்று நீரில் கலப்பதைத் தடுக்க தற்காலிக தடுப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இருப்பினும், இந்த வறட்சியான காலநிலை காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக தொடர்புடைய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

விசாரணைக்கு – 1939 மத்திய நிலையம்

பிரதமர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

0

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார். 

இன்று (27) நடைபெற்ற பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய பிரதமர், ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார். 

மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல் 2014 வரை – 3,572 மில்லியன் ரூபா 

மைத்திரிபால சிறிசேன – 2015 முதல் 2019 வரை – 384 மில்லியன் ரூபா 

கோத்தபய ராஜபக்ஷ – 2020 முதல் 2022 வரை – 126 மில்லியன் ரூபா 

ரணில் விக்கிரமசிங்க – 2023 மற்றும் 2024 வரை – 533 மில்லியன் ரூபா 

அநுர குமார திசாநாயக்க – செப்டம்பர் 2024 முதல் பெப்ரவரி 2025 வரை – 1.8 மில்லியன் ரூபா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் 2013 ஆம் ஆண்டில் அதிகளவு செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 1,144 மில்லியன் ரூபா என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றில் முழங்கிய ஹக்கீம்!

0

அரசாங்கம் பதவிக்கு வந்த பின் 70 க்கு மேல் மனிதப் படுகொலைகள்

சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்துவிட்டதாக பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் காட்டம்

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து இதுவரை 70 க்கு மேற்பட்ட மனிதப் படுகொலைகள் நடந்துள்ளதாகவும் , சட்டமும் ஒழுங்கும் சீரழிந்து, நாட்டில் நீதியின் ஆதிபத்தியம் பாரிய சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட விவாத வாக்கெடுப்புக்கு முன்னர் , செவ்வாய்க்கிழமை (24) சில முக்கிய விடயங்கள் தொடர்பில் நீண்ட உரையொன்றை ஆற்றியபோது, படுகொலைச் சம்பவங்களையும் மையப்படுத்தி அவர் கூறியிருந்தார்.

தொறந்து உரையாற்றிய அவர்,

இந்த சபையில் நீதியமைச்சரும் இருப்பதன் காரணமாக, ஒரு முக்கிய விடயத்தைப் பற்றிக் கூற வேண்டும். இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டினார். தேசிய பாதுகாப்பு என்பதைவிட , பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து மனித படுகொலைகள் 70 க்கு மேல் நடந்துள்ளன. இது சம்பந்தமாக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன ?

கனேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்டு 48 மணி நேரத்துக்குள், கைது செய்யப்பட்ட இருவரை பொலீசார் கொன்றுள்ளனர். இது மிகவும் பாரதூரமான விடயமாகும். இதுபோன்ற விடயத்தில் ஜனாதிபதி அப்பொழுது எதிர்க்கட்சியில் இருந்தபோது கூறியவை இப்பொழுது சமூக வலைத்தளங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை சுட்டு விட்ட பின்னர், சிறு பிள்ளைகள் சண்டையிடும் பொழுது மாற்றிக் கூறுவதைப் போலாவது சொல்லுங்களேன் என எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது அரசாங்கத்திற்குச் சொல்லிச் சிரித்தார். இப்பொழுது அவரது அரசாங்கத்திலேயே அது நடைபெறுகின்றது.

நேற்று, இலங்கை சட்டமன்றம் பதில் பொலிஸ்மா அதிபருக்கு வற்புறுத்தி கூறியுள்ள விடயம் என்னவென்பது நீதி அமைச்சருக்குத் தெரியுமா ?

அதாவது, கொலைகள் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்துவதற்கு சட்டத்துக்குப் புறம்பான இவ்வாறான கொலைகள் ஒரு தீர்வாக மாட்டாது என்றும், அரசாங்கம் சட்டத்தின் ஆட்சிக்கு கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே இவ்வாறான பாரிய குற்றச்செயல்களை முடிவுக்கு கொண்டு வரலாம் என்றும் இலங்கை சட்ட மன்றம், பிரதி பொலிஸ் மா அதிபருக்கு வலியுறுத்திக் கூறியுள்ளது. இந்த விடயத்தில் பாரபட்சமற்ற விசாரணையை உடனடியாக மேற்கொள்ளுமாறும் இலங்கை சட்டமன்றம் பதில் பொலிஸ் மாஅதிபரைக் கேட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்படுபவர்களின் விடயத்தில் பொலிசார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை வழங்கி உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் அந்த ஆணை ஏன் பின்பற்றப்படுவதில்லை?

எவ்வளவு பாரதூரமான குற்றச் செயலைப் புரிந்தாலும், கண்டபடி இவ்வாறு எவரையும் சுட்டுக் கொல்ல முடியாது. தப்பியோட முற்படுபவரைச் சுட்டுவிட்டு, அல்லது பதுக்கி வைத்திருக்கும் போதை பொருளை காட்டுவதற்கு அல்லது ஒளித்து வைத்திருக்கும் ஆயுதத்தை கண்டுபிடிப்பதற்கு என்று கூட்டிக்கொண்டு போய், பின்னர் தங்களிடம் இருந்த ஆயுதத்தை பறிக்க முற்பட்டார் எனக் கூறி இவ்வாறு சுட்டுத் தள்ள முடியாது.

நீதியின் ஆதிபத்தியத்திற்கு பாரிய சவால் ஏற்பட்டிருப்பதை நினைவூட்டுகின்றேன். நேற்று பிரதமர் இந்த சபையில் பேசும் பொழுது பாதாள உலகத்தினரை ஒழித்து கட்டி விடலாம் என்று கூறினார். பாதாள உலகத்தினரின் கரங்களில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதாவது இவர்களுக்குத் தெரியுமா?

எத்தனையோ குழுக்கள் வன்செயல்களில் ஈடுபட்டன. அரசாங்கத்தில் இருப்பவர்களும் ஒரு காலத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தான். தேசப்பற்றாளர்களின் மக்கள் இயக்கம் என்று கூறிக்கொண்டு ஆயுதங்களை முன்னர் பறித்தெடுத்தவர்கள் இருக்கிறார்கள்; ஆயுதக் களஞ்சியங்களில் ஆயுதங்களை கொள்ளையடித்தவர்கள் இருக்கிறார்கள் .

சட்ட பூர்வமான ஆயுதங்களை விட, சட்ட விரோத ஆயுதங்களைக் கொண்டே படுகொலைச் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அவற்றை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுங்கள் என்றார்.

இந்தியாவுக்கு பறக்கவுள்ள ரணில்!

0

உலகளாவிய நிகழ்வுகள் குறித்து விசேட உரை நிகழ்த்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) இந்தியா செல்லவுள்ளார்.

இந்தச் சொற்பொழிவு நாளை (28) புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது. 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாபர், முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்தவுள்ளனர். 

தெற்காசியா குறித்த சொற்பொழிவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்தவுள்ளமை விசேட அம்சமாகும். 

மேற்படி, இந்திய விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒரு சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. 

மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் குழுவுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். 

குறுகிய காலத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும். 

முன்னாள் ஜனாதிபதி மார்ச் 2 ஆம் திகதி நாட்டுக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.