Friday, September 12, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 23

மருமக்களை காப்பாற்றிய மாமா மரணம்!

0

வேல்ஸ் நாட்டில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தன் சகோதரியின் மகள்மாரை காப்பாற்றுவதற்காக அருவி ஒன்றிற்குள் குதித்து, பிள்ளைகளை மீட்டுக் கரை சேர்த்த நிலையில், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

உயிரிழந்தவர் Swanseaயில் வசித்து வந்த மோகன நீதன் முருகானந்தராஜா என்ற 27 வயதுடையவர் ஆவார். 

அவர் தனது உறவினர்களுடன் Brecon Beacons என்னுமிடத்துக்குச் சென்றுள்ளார். 

அவரது குடும்பத்தினர் பலர் அங்குள்ள அருவியில் விளையாடிக்கொண்டிருந்த, சிறிது நேரத்தில் அவரது சகோதரியின் மகள்மார் இருவர் நீரில் மூழ்கியுள்ளனர். 

தன் சகோதரியின் மகள்மாரை குறித்த நபர் மீட்டுக் கரை சேர்த்துள்ளார். 

பின்னர் அவர் நீரில் மூழ்கியுள்ளார். 

நீரில் மூழ்கிய மோகனை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிய, மறுநாள் அவரது உடலை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

செயற்கை சிறுநீரகம் அறிமுகம்!

சிறுநீரக நோய்கள் உலகளவில் கோடிக்கணக்கான மக்களைப் பாதித்து வருகின்றன. 

இந்நிலையில், மருத்துவ உலகில் முக்கியமான மைல்கல்லாக செயற்கை சிறுநீரகம் (Artificial Kidney) உருவாக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவையும், தென்கொரியாவையும் சேர்ந்த விஞ்ஞானிகள் குறித்த செயற்கை சிறுநீரகத்தை உருவாக்கியுள்ளனர். 

குறித்த செயற்கை சிறுநீரகம் உண்மையான சிறுநீரகத்தைப் போலவே 90% செயற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை!

0

பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அதன்படி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

மஹிந்த கொழும்பில் உள்ள இல்லத்திலிருந்து வெளியேறுவார்!

0

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ஒழிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், தனது தந்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவார் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த சொத்துக்கள் எதுவும் பலவந்தமாக அபகரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதிகள் ஆட்சியில் இருந்தபோது எடுக்கப்பட்ட சில முடிவுகள் பின்னர் அவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பக்கூடும் என்றும், ஜனாதிபதி எடுக்கும் இந்த முடிவுகள் எதிர்காலத்தில் அவருக்கு ஒரு தடையாக மாறக்கூடும் என்றும் நாமல் ராஜபக்ஷ கூறினார்.

கொழும்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு அமைப்பாளர் குழுவிற்கு நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர், பத்திரிகையாளர்களுடனான கேள்வி பதில் அமர்வின் போது அவர் இவ்வாறு கூறினார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ஒழிக்கும் மசோதா குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் தினும் அமுனுகம, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பிலிருந்து அனுப்பினால், மக்கள் அவருக்கு நூறு வீடுகள் பத்திரங்களுடன் வழங்க முன்வருவார்கள் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மஹிந்தவுக்கு அதிகாரப்பூர்வமற்ற ஜனாதிபதி மாளிகைகளை கட்ட மக்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

களைகட்டிய தலவில 263 வது ஆண்டு திருவிழா!

0

இலங்கை தேசத்திற்கு ஒரு அற்புதமான வரமாகக் கருதப்படும் புத்தளம், கல்பிட்டி, தலவில புனித அன்ன முனீஸ்வரியா தேசிய ஆலயத்தின் 263 வது ஆண்டு விழா நிகழ்வு, கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிலாபம் பிஷப் விமல் சிறி ஜெயசூரியவின் தலைமையில், தலவில மீசம் நிர்வாகியும் ஆலய நிர்வாகியுமான அருட்தந்தை ஜெயந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ், சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு மாலை ஆராதனை நடைபெற்றதுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு தெய்வீக வழிபாட்டின் மகத்தான பாடலின் கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளும் பங்கேற்றனர். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு முக்கிய விழாக்களான, சதுரிகா மற்றும் மகா மாங்கல்யம் ஆகியவை நடத்தப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் யாத்திரையில் பங்கேற்கின்றனர்.

இந்த ஆண்டும் மட்டும் 05 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பாதுகாப்பு, தண்ணீர், கழிப்பறைகள், மின்சாரம் மற்றும் தங்குமிடம் போன்ற தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாட்டுக் குழு விரைவாக வழங்கியது.

புத்தளம் மாவட்டச் செயலாளர் எச்.எம். சுனந்த பிரியதர்ஷன ஹேரத்தின் வழிகாட்டுதலின் கீழ், மாவட்டத்தின் அனைத்து அரசு நிறுவனங்களும் அதிகாரிகளும் இந்த விழாவை வெற்றிகரமாக நடத்த மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.

தலவில புனித அன்னேயின் சிலை, தலவில ஆலயத்திற்கு அப்பால் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. தலவில அருகே உள்ள கல்பிட்டியின் நாவக்கடுவா கடற்கரையில் (1696) ஒரு உடைந்த கம்பம் காரணமாக சிக்கித் தவித்த போர்த்துகீசிய வணிகக் கப்பலின் மாலுமிகள் குழு, இன்று தேவாலயம் இருக்கும் இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டதன் காரணமாக புனித அன்னேயின் சிலை இந்த இடத்திற்கு வந்தது. அவர்கள் கப்பலில் இருந்து மரச் சிலையை அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு கொண்டு வந்து ஒரு பெரிய ஆலமரத்தில் வைத்து வழிபட்டனர்.

கப்பலை பழுதுபார்த்த பிறகு, கடற்படை குழு காலிக்குச் செல்வதற்கு முன்பு ஒரு சபதம் எடுத்தது.

வர்த்தகம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு கப்பல் திரும்பினால், இந்த இடத்தில் புனித அன்னேவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தேவாலயம் கட்டப்படும். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கப்பல் உரிமையாளர் பிலிப் டி குவார்டி மற்றும் கேப்டன் ஜுவான் மதேரா தலைமையிலான மாலுமிகள் இந்த சம்பவத்திற்குப் பிறகு, காலிக்குத் திரும்பும் பயணத்தில் தலவிலவுக்குச் செல்ல மறக்கவில்லை. தேவாலயத்தின் ஆரம்பகால மேம்பாட்டுப் பணிகளும் அவர்களின் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன.

டச்சு ஆளுநர் தாமஸ் வான் ரீயின் நாட்குறிப்பில் கல்பிட்டியில் (1696) விபத்துக்குள்ளான போர்த்துகீசியக் கப்பல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் கெரிட் டி ஹீர் (1697) இன் கவுன்சில் அறிக்கையிலிருந்த தகவலும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

காலியில் உள்ள கிறிஸ்தவர்கள் குழு ஒன்று அன்றிலிருந்து இன்றுவரை தலவிலாவில் நடந்த இந்த மாபெரும் தெய்வீக தியாகத்தில் பங்கேற்று வருகிறது என்பது இன்றுவரை எஞ்சியிருக்கும் ஒரு வரலாற்று நிகழ்வின் மற்றொரு சான்றாக பதிவு செய்யப்படலாம்.

புத்தளம் பகுதியில் புனித அன்னாள் பக்தி மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது, ஏனெனில் மாந்தோட்டை (மன்னாய்), திருகோணமலை (கோகன்னா) மற்றும் சிலாபம் வரையிலான கடற்கரை கி.பி. முதல் நூற்றாண்டு வரை நீண்டு செல்லும் கிறிஸ்தவ வரலாற்றைக் கொண்டுள்ளது. கிறிஸ்தவத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே மாலுமிகள், வணிகர்கள், படையெடுப்பாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் ஆய்வாளர்கள் இந்தியா வழியாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த நாட்டிற்கு வருவதை நன்கு அறிந்திருப்பதே இதற்குக் காரணம்.

SLMC உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் செயலமர்வு!

0

“உள்ளூராட்சி மன்றங்களில் எங்கள் உறுப்பினர்களின் வகிபாகம்” என்ற தொனிப் பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் வதிவிட செயலமர்வு, இன்று (02) சனிக்கிழமை, மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் உள்ளூராட்சிமன்றங்களில் செயற்படவேண்டிய முறைகள் குறித்தும், எவ்வாறான முறையில் சேவைகளை பெற்றெடுக்க முடியும் என்பது பற்றியும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

உள்ளூராட்சிமன்றங்களின் ஊடாக மக்களுக்கு செய்யப்படவேண்டிய சேவைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் ஊடாக பெற்றெடுக்கவேண்டிய உதவிகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

35வது தேசிய ஷுஹதாக்கள் தினம் அனுஷ்டிப்பு!

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி, காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் 103 முஸ்லிம்கள் மரணமடைந்தனர். இந்தக் கொடூரச் சம்பவத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் “தேசிய ஷுஹதாக்கள் தினம்” அனுஷ்டிக்கப்படுகிறது.

முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டுமென காத்தான்குடியில் இன்று (03) அனுஷ்டிக்கப்பட்ட 35வது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 03ம் திகதி ஹுஸைனியா பள்ளிவாயலிலும், மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் நடந்த படுகொலைச்சம்பவங்களில் ஷஹீதாக்கப்பட்ட 103 ஷுஹதாக்கள் நினைவாக இன்று துஆப்பிரார்த்தனை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலாமா சபை மற்றும் ஊர் ஜமாஅதார்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

அத்துயர நினைவுகளை மீட்டிக்கொள்வதற்கும் ஷுஹதாக்களுக்காக பிரார்த்தனை செய்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாக இது வாய்த்ததையிட்டு பெருமகிழ்வுறுகிறோம்.

இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சம்பவங்களின் படிப்பினைகளை சரிவர உணர்ந்து இனங்களுக்கிடையிலான உறவை மீளக்கட்டியெழுப்புவதில் எமது கட்சியும், கட்சித்தொண்டர்களும் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும்.

அத்திடசங்கர்ப்பத்தை நாம் இந்த ஷுஹதாக்கள் நினைவு நாளில் உறுதி பூணுவது மாத்திரமல்லாமல், இத்துன்பியல் சம்பவங்கள் குறித்த வரலாற்றையும் சரிவர தொடர்ந்தும் மனதிலிருத்தி முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும் எனத்தெரிவித்தார்.

காசா உதவி மைய கூட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழப்பு!

காசா உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பாலஸ்தீனர்கள் 48 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல்- ஹமாஸ் படையினர் இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவ தாக்குதலில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர்.

காசா உதவி மையங்களில், நிவாரண பொருட்களுக்காக காத்திருந்த 1000க்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை கொல்லப்பட்டதாகவும், இஸ்ரேல் பசி, பட்டினியை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் ஐநா குற்றம்சாட்டி உள்ளது.

இஸ்ரேல் தாக்குதல் ஒரு பக்கம், மறுபக்கம் காசாவில் உள்ள ஜிகிம் கிராசிங்கில் உள்ள உதவி மையத்தில் ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் சிக்கி, பாலஸ்தீனர்கள் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் 12க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

காசாவின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஜூன் மாதத்திலிருந்து குழந்தைகள் 89 பேரும், வயதானவர்கள் 65 பேரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளனர். சர்வதேச நாடுகள், காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தோரை மீண்டும் உயிருடன் கொண்டு வர புதிய திட்டம்!

சாகாமல் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். இது தொடர்பான ஆய்வுகளும் கூட உலகெங்கும் நடந்தே வருகிறது.. இதற்கிடையே பிரபல ஐரோப்பிய நிறுவனம் ஒன்று, எதிர்காலத்தில் உயிரிழந்தோரை மீண்டும் உயிருடன் கொண்டு வர புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாழ்வில் பிறப்பு என்று ஒன்று இருந்தால் நிச்சயம் இறப்பு இருக்கும். ஆனால், இந்த இயற்கை விதியை மாற்றவே உலகெங்கும் ஆய்வுகள் நடந்து வருகிறது. இதுவரை உயிரிழந்தோரை வெற்றிகரமாக மீட்க முடியவில்லை என்றாலும் கூட இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்தே வருகிறது. இதற்கிடையே ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான டுமாரோ பயோ வினோதமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒருவர் உயிரிழந்த பிறகு அவர்களின் உடல்களைப் பாதுகாப்பதாக அறிவித்துள்ளனர். எதிர்காலத்தில் மனித அறிவியல் வளர்ச்சியால் உயிரிழந்தோரை மீண்டும் உயிருடன் கொண்டு வர முடிந்தால் இது அவர்கள் மீண்டும் உயிர் பெற வாய்ப்பு தருவதாக இருக்கும். இதன் கட்டணம் கொஞ்சம் அதிகம் தான். இதற்காக $200,000 (ரூ.1.74 கோடி) கட்டணமாக வசூலிக்கப் போகிறார்களாம்.

உயிரிழந்தோர் உடலை மிகக் குறைந்த வெப்பநிலைக்கு விரைவாகக் குளிர்விப்பதன் மூலம் முழு உடல் கிரையோப்ரிசர்வேஷனை வழங்குகிறது. இது செல் சேதம் மற்றும் சிதைவைத் தடுக்க உதவுகிறது. எப்போதும் உடலைச் சேமிக்க நேரம் மிக முக்கியமானது. கொஞ்சம் லேட் ஆனாலும் உடலைப் பாதுகாக்க முடியாமல் போய்விடும். இதனால் சட்டப்பூர்வ மரணத்திற்குப் பிறகு உடனடியாக செயல்முறையைத் தொடங்குவதே டுமாரோ பயோவின் திட்டம். இதற்காக 24X7 செயல்படும் அவசர காத்திருப்பு குழுவையும் வைத்திருக்கிறார்கள். எதிர்கால மருத்துவ வளர்ச்சியால் ஒரு நாள் இந்த உடல்களுக்கு மீண்டும் உயிர் தர முடியும் என்பதே இவர்கள் நம்பிக்கை.

இதெல்லாம் யார் செய்வார்கள். அதுவும் கட்டணம் இவ்வளவு அதிகமா இருக்கு என நீங்கள் கேட்கலாம். உண்மையில் அந்த ஊரில் இதற்கு மவுஸ் அதிகமாகவே இருக்கிறது. இதுவரை, 650க்கும் மேற்பட்டோர் இந்த சேவைக்குப் பதிவுசெய்துள்ளனர். மரணத்தில் இருந்து சயின்ஸ் தங்களைக் காக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உடலைப் பாதுகாக்க முடிவெடுத்துள்ளனர். ஐரோப்பாவில் இதுபோன்ற சேவையை வழங்கும் முதல் நிறுவனம் டுமாரோ பயோ ஆகும். இதுவரை அந்த நிறுவனம் 3 அல்லது 4 பேரின் உடல்களைப் பராமரித்து வருகிறதாம். மேலும், 5 செல்ல பிராணிகளின் உடல்களையும் பராமரித்து வருகிறதாம். 700க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ள நிலையில், வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயரவே கூடும். மேலும், விரைவில் அமெரிக்காவிலும் இந்த சேவையை அறிமுகப்படுத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுவரை கிரையோபிரசர்வேஷனுக்குப் பிறகு யாரும் வெற்றிகரமாக உயிர் பெறவில்லை.. ஒருவேலை அவர்கள் உயிர் பெற்றாலும் கூட, அவர்களுக்கு மூளை கடுமையாகச் சேதமடைந்தே இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மனிதர்களைப் போன்ற சிக்கலான மூளை அமைப்புகளைக் கொண்ட உயிரினங்களை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்பதால் சிலர் இதை “அபத்தமானது” என்றும் சாடுகிறார்கள். அம்பலப்படுத்துகிறது என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் நரம்பியல் பேராசிரியர் கிளைவ் கோயன் கூறுகிறார்.

தற்போதைய கல்வி முறைமை அனைவருக்கும் சமனானதல்ல!

வடக்கு மாகாணத்தில், அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம். எங்கள் திறமையான இளைஞர்கள், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் எங்கள் மக்களின் உறுதியுடன், இலங்கையின் கல்விக்கான புதிய அத்தியாயத்தில் வடக்கு மாகாணம் ஒரு வெற்றியின் முன்மாதிரியாக இருக்கும் என நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பிலான மாகாணமட்டக் கலந்துரையாடல் பிரதமரும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை (02.08.2025) நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய ஆளுநர், நாட்டின் பெருமைமிகுந்த மற்றும் மீள்தன்மை கொண்ட எங்கள் பிராந்தியத்துக்கு உங்களை வரவேற்கின்றேன். தேசிய ஒற்றுமை, சம வாய்ப்பு மற்றும் எந்த மாணவனும், எந்தப் பாடசாலையும், எந்த மாகாணமும் பின்தங்கியிருக்காத எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புக்கான உங்கள் செய்தி மிகப்பெரியது.

இன்று, வடக்கு மாகாண மாணவர்களுக்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் நம்பிக்கையைத் தரும் ஒரு துணிச்சலான கல்வி சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் உங்கள் தொலைநோக்குத் தலைமையை நாங்கள் பாராட்டுகின்றோம்.

ஒவ்வொரு மாணவனும் தங்கள் கல்வியை முடிக்கவும், அவர்கள் விரும்பும் எதிர்காலத்தைத் தொடரும் வாய்ப்புக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலான ஒருங்கிணைந்த தொழில் மற்றும் கல்விப் பாதைகளுடன் கல்வி முறையை மறுசீரமைத்தல் சிறப்பானது.

பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடுகளை பரீட்சைப்புள்ளிகளுடன் சமநிலைப்படுத்தும் மிகவும் நெகிழ்வான மதிப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்துவது, மாணவர்கள் மீதான தேவையற்ற போட்டி மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

எண்ணிமப்படுத்தலை (டிஜிட்டல் மயமாக்கல்) புகுத்துவதன் மூலம் வடக்கு மாகாணம் போன்ற கல்வி இடைவெளிகள் அதிகமாகவுள்ள மாகாணங்கள் மிகப்பெரிய நன்மையடையும்.

இந்தச் சீர்திருத்தங்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவை கொள்கை மாற்றங்களை மட்டும் பிரதிபலிக்கவில்லை. நீதி, உள்ளடக்கம் மற்றும் சமமான வளர்ச்சிக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் சமூகங்களுக்கான நம்பிக்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, என்றார் ஆளுநர்.

இங்கு உரையாற்றிய பிரதமர் அவர்கள், இந்தக் கலந்துரையாடலை ஒழுங்குபடுத்திய வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் அவர்தம் நிர்வாகக் கட்டமைப்பினருக்கு முதலில் நன்றிகளைக் கூறுகின்றேன்.

கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. ஏனெனில் வலிகள் நிறைந்த காலத்திலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் நீங்கள். வடக்கு மாகாணம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. ஏன் இந்த நிலைமை என்று சிந்திக்கவேண்டும்.

தற்போதுள்ள கல்வி முறைமை எல்லோருக்கும் சமனானதாகத் தெரியவில்லை. பணம் சார்ந்த சுமைகளை பெற்றோருக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. பரீட்சை மையக் கல்வியானது மாணவர்களை முடக்கியுள்ளது. எனவே, அவசியமான இந்தக் கல்விச் சீர்திருத்தம் கட்டம் கட்டமாகவே மேற்கொள்ளப்படும். 2026ஆம் ஆண்டு தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் எல்லோரும் யாழ்ப்பாண நகரத்தில் வேலை செய்வதற்கு ஆசைப்படுகின்றார்கள். ஏனைய மாவட்டங்களுக்கும் அதுவும் குறிப்பாக எல்லை நிலையிலுள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயறப்படவேண்டும், என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து கல்வி சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், நிரல் கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவேவா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண கல்விப் பணிப்பாளர், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.