Saturday, June 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 22

திறைசேரி மோசடி – அதிகாரிகளின் ‘அலட்சியமே காரணம்!

0

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடியானது ஒரு நுணுக்கமான இணையவழி தாக்குதல் அல்ல என்றும், அதிகாரிகளின் அடிப்படை அலட்சியத்தினால் ஏற்பட்ட விளைவு என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், பாரிய அளவிலான நிதிப் பரிமாற்றங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய முறையான நிதித் தணிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

மில்லியன் கணக்கான ரூபாய்களைப் பரிமாற்றம் செய்வதற்கு முன்னதாக, அந்த வங்கிக் கணக்கை உறுதிப்படுத்துவதற்காக ஒரு சிறிய தொகையை (Test Payment) அனுப்பிச் சரிபார்க்கும் வழக்கமான நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், பணப்பரிமாற்ற அறிவுறுத்தல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்கள் ஆகியவை மூல ஒப்பந்தங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இத்தகைய பாதுகாப்பு நடைமுறைகள் பொதுவானவை என்றும் அவர் வாதிட்டார்.

பொதுமக்களின் பணம் இழக்கப்பட்டுள்ள நிலையில், இதனை வெறுமனே “பணம் காணாமல் போன” சம்பவமாகத் தட்டிக்கழிக்க முடியாது எனத் தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் உரிய பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அரச நிதியைக் கண்காணிப்பது நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு என்பதால், இந்த விடயம் சபையில் முன்வைக்கப்பட வேண்டும் என்றும், அரச நிதி பற்றிய குழு இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மருதானை புகையிரத நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு!

0

மருதானை புகையிரத நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவுசெய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பு

‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, ‘Dream Destination’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மருதானை புகையிரத நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இன்று (25) முற்பகல் பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது.

புகையிரத பயணிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மருதானை புகையிரத நிலையத்தின் புராதனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகள் மாத்திரம் இவ்வாறு நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் பிரதான கட்டிடம் திருத்தப்பட்டதுடன், 05 மற்றும் 06 ஆம் இலக்க மேடைகளின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டு, சூழல் அழகுபடுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக 35 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இதற்கான நிதி அனுசரணையினை அக்பர் நிறுவனம் வழங்கியுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், NIO Engineering நிறுவனத்தின் ஆலோசனை சேவைகளுக்கமைய ஆறு மாத காலப்பகுதிக்குள் இந்த புனரமைப்பு பணிகள் முறையாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகையிரத நிலையங்களில் ஒன்றான மருதானை புகையிரத நிலையம், கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நிலையங்களில் இரண்டாவது மிகப்பெரிய நிலையமாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் செல்வதற்காக ஒன்றுகூடும் இந்த புகையிரத நிலையத்தை பல கட்டங்களின் கீழ் நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க:

கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் எவ்வித தாமதமுமின்றி ஆறு மாத காலத்திற்குள் பிரதான கட்டிடம் உள்ளிட்ட வளாகத்தில் நிலையான நவீனமயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பொது வசதிகளை முறையாகப் பயன்படுத்துவதும், அவற்றைச் பாதுகாப்பாகப் பேணுவதும் பயணிகள் மற்றும் புகையிரத திணைக்கள ஊழியர்களின் முதன்மையான பொறுப்பாகும். நாட்டின் நன்மையை விரும்பும் அனைத்து மக்களும் இவ்வாறான தேசிய சொத்துக்களைப் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும். பொதுச் சொத்துக்களுக்கு விளைவிக்கப்படும் சேதங்களுக்கு எதிராக சமூகம் அணிதிரள வேண்டும்.

கடந்த காலங்களில் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்பட்ட பின்னர், அதற்கு விளைவிக்கப்பட்ட சேதங்களுக்கு எதிராக பாரிய சமூக எதிர்ப்பு கிளம்பியதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அது அரசாங்கத்திற்கு ஒரு பெரிய சமூக பலமாக அமைந்ததாகவும், எனவே இவ்வாறான பொதுச் சொத்துக்களையும் வரலாற்று மரபுகளையும் பாதுகாப்பது ஒவ்வொரு பிரஜையினதும் பொறுப்பாகும் என்றும் மேலும் தெரிவித்தார்.

போதைக்கு எதிராகப் புத்தளம் மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம்!

0

புத்தளம் நகரில் அண்மைக்காலமாக சடுதியாக அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைக்கு எதிராக, நேற்று (வெள்ளிக்கிழமை) நாகூர் ஜும்மா பள்ளிவாசல் பகுதியில் பாரிய மக்கள் எழுச்சிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உலமாக்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

புத்தளத்தின் முக்கிய அமைப்புகளான புத்தளம் ஜம்மிய்யதுல் உலமா, புத்தளம் பெரிய பள்ளிவாசல் மற்றும் புத்தளம் மாநகர சபை ஆகிய புத்தளம் முக்கூட்டு அமைப்பு இணைந்து குறித்த போதை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

புத்தளம் நகரில், குறிப்பாக நாகூர் பள்ளிவாசல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ‘ஐஸ்’ (ICE) போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளின் புழக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக பாடசாலை செல்லும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஒரு பாதுகாப்பற்ற சூழலை உணர்வதாகவும், பெண்கள் ஒரு அச்சத்துடனே வெளியே சென்று தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய ஒரு மோசமான சூழல் உருவாகியுள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி அதிமேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் “போதையற்ற நாட்டை உருவாக்குவோம்” எனும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையிலும், புத்தளம் பொலிஸாரின் ஆலோசனைகளுக்கு இணங்கவும் இந்த எதிர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“எமது பிரதேசத்தைப் போதையில் இருந்து மீட்டெடுக்க வேண்டுமானால், சட்ட அமுலாக்கத் துறையினருடன் பொதுமக்களும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்,” என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கண்டனப் பேரணியில் புத்தளம் மாநகர முதல்வர் திரு. ரின்சாத் அஹமத், புத்தளம் ஜம்மிய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெக் மெளலவி ஜிப்னாஸ், புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர், மாநகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பிரதேச மக்கள் எனப் பெருந்திரளானோர் திரண்டு போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராகக் குரலெழுப்பினர்.

புத்தளம் மண்ணில் இருந்து போதைப்பொருள் எனும் அரக்கனை முற்றாக ஒழிக்கும் வரை இவ்வாறான விழிப்புணர்வு மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் என அமைப்பாளர்கள் இதன்போது உறுதியளித்தனர்.

கல்பிட்டியில் கடற்படை நடத்திய வேட்டையில் சிக்கிய பாரிய கடத்தல்!

0

கல்பிட்டியவில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1030 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்

2026 ஏப்ரல் 22 ஆம் திகதி கல்பிட்டியவில் உள்ள தில்லையடி கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1030 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சள் பறிமுதல் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, கல்பிட்டியவில் உள்ள தில்லையடி கடற்கரைப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இருபத்தாறு (26) சந்தேகத்திற்கிடமான பைகள் காணப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும், பைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்து முப்பத்தெட்டு (1038) கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கையிருப்பை கடற்படை கைப்பற்றியது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் இருப்பு, மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சகோதரனை காக்கச் சென்று உயிர்விட்ட பொலிஸ் அதிகாரி!

0

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த, வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

புத்தாண்டு விழா நடைபெற்ற இடத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த தனது சகோதரனை ஒரு குழுவினர் தாக்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து, அவர் தனது காரில் அந்த இடத்திற்குச் சென்றுள்ளார். 

அங்கு தனது சகோதரனைக் காப்பாற்ற முயன்றபோது, எதிர்த்தரப்பைச் சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட கூர்மையான ஆயுதத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார். 

இதனையடுத்து அவர் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கும், அதன் பிறகு கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார். 

இதன்படி, அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (24) அவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பாக வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், உயிரிழந்த அதிகாரியின் இறுதிக்கிரியைகள் நாளை (26) பொலிஸ் மரியாதையுடன் நடைபெறவுள்ளன.

12 கோடி ரூபா ஹெரோயினுடன் சிக்கிய ஒருவர் கைது!

0

சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (24) ஹோமாகமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த பிரசாத் நிஷாந்த கொலம்பகே என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இவர், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘ஹோமாகம ககன’ என்பவரின் போதைப்பொருள் கடத்தல்களை வழிநடத்தியவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவலுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

டுபாயில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ‘கொண்ட ரஞ்சித்’ என்ற ரஞ்சித் பெரேரா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி உள்ளிட்ட கடத்தல்காரர்களைக் கைது செய்ததன் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், இதுவரையில் 37 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

இதன் ஒரு கட்டமாக, டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கொண்ட ரஞ்சி’ என்பவரின் முக்கிய உதவியாளர் ஒருவரும், சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது நிர்வாக அமைச்சின் இணையம் மீது சைபர் தாக்குதல்!

0

பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சிற்குப் பொறுப்பான அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். 

அமைச்சின் செயலாளரின் தலையீட்டுடன் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் மீது அண்மையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், அதில் உள்ள தகவல்களை ஏலத்திற்கு விட்டு பணம் பெறுவதற்கு அந்த தரப்பினர் முற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இருப்பினும், இந்தத் தாக்குதலினால் அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள மிகவும் முக்கியம் வாய்ந்த தகவல்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், சில பொதுவான தகவல்கள் மாத்திரமே மற்றுமொரு தரப்பிற்கு சென்றுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார். 

இதற்கமையவே, இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

இதேவேளை, திறைசேரியின் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவின் போது 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வேறொரு தரப்பின் கைக்குச் சென்ற சம்பவம் தொடர்பாகவும் தமது நிறுவனம் தற்போது தொழில்நுட்ப ரீதியிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக தமுனுபொல தெரிவித்தார். 

இந்தச் சம்பவம் எவ்வாறான முறையில் இடம்பெற்றது மற்றும் அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்துத் தமது நிறுவனம் ஆராய்ந்து வருவதாகவும், சந்தேகநபர்களைக் கண்டறியும் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

2.5 மில்லியன் டொலர் மாயம்: ஹர்ஷ எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

0

வெளிநாட்டு கடன் தவணைக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாயமானது தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கடும் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிதி உரிய கடன் வழங்குநரைச் சென்றடையாத நிலையில், இலங்கை தொழில்நுட்ப ரீதியாக மீண்டும் ஒரு ‘கடன் தவணையை செலுத்தத் தவறிய’ நாடாக மாறியுள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறையாண்மைக் கடன் முகாமைத்துவப் பணிகள் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து திறைசேரியின் அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட போதே தாம் எச்சரித்ததாக ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய நிதிச் சந்தைகளைக் கையாளுவதற்குத் தகுதியான மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை நியமிக்குமாறு அரச நிதி பற்றிய குழு வலியுறுத்தியும், திறைசேரி அதனைப் பொருட்படுத்தவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

குறித்த வெளிநாட்டுத் தரப்பிற்கு ஐந்து கடன் தவணைகள் கிடைக்கவில்லை எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது வெறும் கவனக்குறைவு அல்ல, ஒரு பாரிய நிர்வாகத் தோல்வி என விமர்சித்துள்ளார்.

இதேவேளை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி அமைப்பிற்குள் இணைய ஊடுருவிகள் (Cyber Hackers) நுழைந்து மேற்கொண்ட திருட்டுச் சம்பவம் தொடர்பில் தற்போது விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல் ஒன்றின் போதே இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இது தொடர்பாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு, காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் மத்திய வங்கியின் நிதி உளவறிதல் பிரிவு ஆகியவற்றில் அமைச்சு முறைப்பாடுகளைச் செய்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட உள்வாரி விசாரணைகளின் அடிப்படையில், சில அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், விசாரணை முன்னெடுப்புகளுக்காகச் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தகவல்களையும் வழங்கியுள்ளதாக அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கைகளுக்கு அமைய, சர்வதேச ஒருங்கிணைப்புடன் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வெடித்த அமைச்சர் லால் காந்த மற்றும் ஹிரு ஊடக யுத்தம்!

0

விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிவிப்பு குறித்து ஹிரு செய்தி நிறுவனத்தின் செய்தி அறிக்கை தொடர்பில் அவரது சட்டத்தரணியால் அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதத்திற்கு, ஹிரு செய்தி நிறுவனத்தின் சட்டத்தரணிகள் கடும் பதிலடி கொடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அமைச்சர் லால் காந்தவின் சட்டத்தரணிக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில், அமைச்சரின் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தமது சேவைப் பெறுநரான ஹிரு நிறுவனம் முற்றாக நிராகரிப்பதோடு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளையும் நிராகரிக்கிறது.

திருத்தம் செய்யும் உரிமையை ஏற்றுக்கொண்டு, ஆசியா பிரோட்காஸ்டிங் கோர்ப்பரேஷன் (Asia Broadcasting Corporation) நிறுவனம் கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி ஹிரு டி.வி உள்ளிட்ட தனது அனைத்து ஊடகத் தளங்களிலும் உடனடியாகத் திருத்தம் ஒன்றை மேற்கொண்டதாக நிறுவனத்தின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், லால் காந்தவின் பிரகடனத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், அந்தச் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனம் சட்டத்திற்கு அமைய சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் தரப்பு தமது சேவைப் பெறுநருக்கு எதிராக ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுத்தால், ஒரு நிறுவனப் பிரஜை என்ற வகையில் தமது சேவைப் பெறுநருக்குள்ள உரிமைகளைப் பயன்படுத்துவதோடு, கட்டாய சட்ட விதிகளைத் திட்டமிட்டு மீறியமை தொடர்பிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உங்களது சேவைப்பெறுநர் பகிரங்க மேடைகளில் ஒப்புக்கொண்டபடி, அவர் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் பிரஜைகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுதல் போன்ற விடயங்களுடன் தொடர்புடையவர் என்பதால், எங்களது சேவைப்பெறுநர், சட்ட நடவடிக்கையின் போது அவர் ஒரு நற்பெயர் இல்லாத நபர் என்ற நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் முன்வைக்கப் போவதாக ஹிரு நிறுவன சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமது சேவைப்பெறுநரின் ஒளிபரப்பு உரிமைகளுக்குத் தடையாக இருக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத்தரணிகள் நிறுவனத்தின் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச விடுமுறையில் மாற்றம்!

0

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்த நாளான மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 

இதற்கமைய, முன்னதாக மே மாதம் 2ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறையைத் திருத்தம் செய்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்க, இம்முறை வெசாக் வாரம் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.