Home Blog Page 22

கிரிக்கெட் நட்சத்திரம் ஷகிப்பின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

பங்களாதேஷில் அதிரடி: முன்னாள் பிரதமர் ஹசீனாவுடன் பேசிய சில மணி நேரத்தில் கிரிக்கெட் நட்சத்திரம் ஷாகிப்பின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

பங்களாதேஷ் கிரிக்கெட் உலகின் நட்சத்திர நாயகனும், சர்வதேச கிரிக்கெட் அரங்கின் முன்னணி ஆல்-ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசனின் இல்லத்தைக் குறிவைத்து இன்று (06) நடத்தப்பட்டுள்ள திடீர் பெட்ரோல் குண்டு தாக்குதல், அந்நாட்டு அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண நாளொன்றில் இடம்பெற்ற இந்த விபரீதத் தாக்குதலுக்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் பின்னணி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் தற்போது வலுத்துவருகிறது. ஏனெனில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் ஷாகிப் அல் ஹசன் இணைய வழியில் (Online) இணைந்து முக்கிய கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தார். அந்த உரையாடல் நிறைவடைந்து சில மணித்தியாலங்களிலேயே இந்தத் தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இருப்பினும், இத்தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் அல்லது எவரேனும் காயமடைந்தார்களா என்பது குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியை வெற்றிகரமாக வழிநடத்திய ஒரு புகழ்பெற்ற விளையாட்டு வீரரின் இல்லத்தின் மீதே இத்தகைய வன்முறை பிரயோகிக்கப்பட்டிருப்பது, அந்நாட்டு மக்களையும் உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

காலம் காலமாக விளையாட்டு வீரர்களைக் கொண்டாடும் பங்களாதேஷில், ஒரு முன்னாள் தேசிய அணித்தலைவரின் வீட்டிற்குள் புகுந்து பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்திருப்பது ஏன்? இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்கள் பொலிஸாரின் தீவிர விசாரணையின் முடிவிலேயே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவருக்கு ஐ.தே.க பாராட்டு: அரசியல் களத்தில் திருப்புமுனை!

ரணில் தலைமையிலான ஐ.தே.க செயற்குழுவில் சஜித்துக்குப் பாராட்டு: கொழும்பு அரசியலில் அதிரடி திருப்புமுனை!

இலங்கை அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அரசியல் நகர்வாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அதிரடி நடவடிக்கையைப் பாராட்டி ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) செயற்குழுவில் சிறப்புத் தீர்மானம் ஒன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில், அவரது தலைமையில் கூடிய செயற்குழு கூட்டத்திலேயே இந்த எதிர்பாராத அரசியல் நகர்வு இடம்பெற்றுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் விவகாரத்தில் அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே மேடையில் கொண்டுவந்ததே இந்த பாராட்டுக்கு முக்கிய காரணமாகும். கடந்த ஜூலை 23 அன்று கொழும்பு ஸ்ரீமத் மாக்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், நாட்டின் அனைத்து பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஒன்றுதிரட்டி சஜித் பிரேமதாச நடத்திய உயர்மட்டக் கூட்டம் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்தக் கூட்டத்தின் மூலம் எதிர்க்கட்சிகளின் கூட்டுப் பலத்தை நிரூபித்த சஜித் பிரேமதாசவின் தொலைநோக்கு நடவடிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு பாராட்டியுள்ளது. அத்துடன் நின்றுவிடாது, அன்று எடுக்கப்பட்ட தீர்மானங்களை காலந்தாழ்த்தாது உடனடியாக களத்தில் நடைமுறைப்படுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து ஓரணியில் திரள வேண்டும் என்றும் ஐ.தே.க செயற்குழு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

ஒன்றாக இருந்த கட்சி பிளவுபட்டு வெவ்வேறாக பயணித்த நிலையில், தற்போது நீதித்துறை சார்ந்த இந்த முக்கிய விவகாரத்தில் ரணில் – சஜித் தரப்புகள் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது, வரவிருக்கும் இலங்கை அரசியல் சூழலில் ஒரு புதிய மாற்றத்திற்கான புயலைக் கிளப்பியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

கொதிக்கும் தென் கொரியா: தாங்க முடியாத வெப்பத்தால் 21 பேர் பலி!

உலக அளவில் காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆசிய நாடான தென் கொரியாவில் தற்போது நிலவி வரும் கொதிக்கும் வெப்ப நிலை, அந்நாட்டு மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்குப் பதிவாகி வரும் இந்த அதீத வெப்ப அலை, தற்போது பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாங்க முடியாத இந்தச் சுட்டெரிக்கும் வெயிலினால் ஏற்பட்ட வெப்பப் பக்கவாதம் மற்றும் தீவிர நீர்ச்சத்து இழப்பு காரணமாக, அந்நாட்டில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாகத் தென் கொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல், திடீரென ஏற்பட்ட பக்கவிளைவுகள் மற்றும் தீவிர சிறுநீரகப் பாதிப்புகளுக்கு உள்ளாகியே உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும்.

உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க, இந்த வெப்ப அலையின் கொடூரம் இத்துடன் முடிந்துவிடவில்லை! நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

வெப்ப நோய்களால் பாதிக்கப்பட்ட 2,441 பேர் நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தென் கொரிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் கணிசமானோர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் (ICU) உயிருக்குப் போராடி வருவதுதான்.

நிலைமை தீவிரமடைந்து வருவதால், பொதுமக்கள் நண்பகல் வேளைகளில் வெளியில் செல்வதைக் தவிர்க்குமாறும், அதிகளவு நீர் அருந்துமாறும் அந்நாட்டு அரசு தொடர்ச்சியாக விழிப்புணர்வு எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்வி அமைச்சு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் முதலாவது கட்டக் கல்வி நடவடிக்கைகள் நாளை வெள்ளிக்கிழமையுடன் (ஆகஸ்ட் 07) உத்தியோகபூர்வமாக நிறைவடைகின்றன. மாணவர்கள் விடுமுறையை எதிர்நோக்கியிருக்கும் அதேவேளையில், முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை அட்டவணை சற்று மாறுபட்ட முறையில் திட்டமிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளைப் பொறுத்தவரை, அவற்றின் மூன்றாம் தவணையின் முதற்கட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறைக் காலம் ஆரம்பமாகும்.

நாடளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பரீட்சை நிலையங்களின் ஏற்பாடுகள் மற்றும் மாணவர்களின் ஆயத்தங்களுக்காகவே இந்த விடுமுறைக் காலம் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்திற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி மீண்டும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இவ்வாறு செப்டம்பர் 07 இல் மீள ஆரம்பமாகும் கல்வி நடவடிக்கைகள், தொடர்ந்து டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை இடைவெளியின்றி நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

விடுதிக்குள் ரகசிய ‘பிசினஸ்’: பல்கலை மாணவனுக்கு ரூ.4 லட்சம் அபராதம்!

பல்கலைக்கழக விடுதி அறைக்குள் எவரும் எதிர்பார்க்காத வகையில் மிக நீண்டகாலமாக நடந்துவந்த அதிர்ச்சி ரகசியம் ஒன்று இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயர்கல்வி கற்க வேண்டிய இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் செய்துவந்த மாணவன் ஒருவனுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு கல்வி உலகையே உலுக்கியுள்ளது.

வடமேல் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் பயிலும் 22 வயதான மாணவன் ஒருவனே இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார். பலங்கொட பகுதியைச் சேர்ந்த இந்த மாணவன், சக மாணவர்களையே குறிவைத்து விடுதிக்குள் வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளான்.

பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி (மார்ஷல்) விடுதி அறைகளில் மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே இந்த அதிர்ச்சி உண்மை அம்பலமானது. விடுதி அறைக்குள் இருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது.

குளியாப்பிட்டிய தலைமை பொலிஸ் பரிசோதகர் கமல் ரத்நாயக்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஏகநாயக்க தலைமையிலான குழுவினர் நடத்திய தீவிர விசாரணையில், மாணவன் நீண்டகாலமாக இந்த போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்தது உறுதிசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து 254 கிராம் ஹஷீஷ் மற்றும் புகையிலை வரி சட்டத்தை மீறி நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட 500 வெளிநாட்டு சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

வழக்கு விசாரணைகளுக்காக குளியாப்பிட்டிய நீதவான் மிஹில் சிரந்த சதாரசிங்க முன்னிலையில் மாணவன் ஆஜர்படுத்தப்பட்டபோது, தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான். இதனைத் தொடர்ந்து, மாணவனுக்கு ரூ. 4,10,000 அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார். இளமைப் பருவத்தில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, தனது எதிர்காலத்தையும் கல்வி வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ள இந்த சம்பவம் ஏனைய மாணவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அதிரடி அறிவிப்பு!

அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC), பரீட்சைத் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மற்றும் முன்னணி அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற அவசரக் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே பரீட்சைகளை எவ்வித தடையுமின்றி நடத்துவதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

மாணவர்களினதும் பெற்றோர்களினதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த தீர்மானத்திற்குப் பின்னணியில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் நம்பிக்கை தரும் கணிப்புகளே பிரதான காரணமாக அமைந்துள்ளன. பரீட்சை காலத்தில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மோசமான காலநிலை எதுவுமில்லை என வானிலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனாலும், மாணவர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்ய அதிகாரிகள் தயார் இல்லை. தற்போதைய காலநிலை சீராக இருந்தாலும், நிலைமைகளை தொடர்ச்சியாக 24 மணிநேரமும் தீவிரமாகக் கண்காணிக்க சிறப்பு பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை எதிர்பாராத விதமாக காலநிலை மாறினால், மாணவர்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாத வகையில் உடனடியாக மாற்று நடவடிக்கைகள் எடுக்கத் தயாராக இருப்பதாகவும் பரீட்சைத் திணைக்களம் உறுதியளித்துள்ளது. எனவே, வதந்திகளை நம்பாமல் மாணவர்கள் தங்களது பரீட்சைக்கான ஆயத்தங்களை நம்பிக்கையுடன் தொடர முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியின் பிரபல பாடசாலையில் மாணவன் போதைப் பொருட்களுடன் கைது!

கன்னொருவையில் கைதான ஏ/எல் மாணவன்: பேரதிர்ச்சியில் கண்டி!

கண்டியின் கல்விச் சமூகத்தையே உலுக்கியுள்ள அதிர்ச்சிச் செய்தி ஒன்று பேராதனை, கன்னொருவை பகுதியிலிருந்து வெளியாகியுள்ளது. எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய வயதில், பேராபத்தை கையில் ஏந்தியபடி உலா வந்த மாணவன் ஒருவனை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

பிரபல ஆண்கள் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 18 வயதான மாணவன் ஒருவனே இவ்வாறு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் அதிரடி வலையில் சிக்கியுள்ளான். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த நிலையில், அம்மாணவனின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேராதனை கெந்தகடுவ பகுதியைச் சேர்ந்த இந்த மாணவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு அதிகாரிகளையே திகைக்க வைத்துள்ளது. 5 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 15 கிராம் 900 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் அவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கன்னொருவை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நுட்பமான சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இத்தகைய போதைப்பொருள் விநியோகம் நடைபெறுகிறதா என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவல் அதிகரிக்கும் பின்னணியில், பெற்றோர்களும் சமூகமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

உங்கள் பணத்துக்கு ஆபத்து: 26 பிரமிட் செயலிகளை முடக்கியது மத்திய வங்கி!

உங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு வரும் ஒரு குறுஞ்செய்தியோ அல்லது சமூக வலைத்தள விளம்பரமோ, உங்கள் வாழ்நாள் சேமிப்பையே சுருட்டி எறியக்கூடும் என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா? அதிக வட்டி மற்றும் குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி இலங்கை மக்களைக் கவரும் சட்டவிரோத பிரமிட் திட்டங்களுக்கு எதிராக, இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகியவை இணைந்து இப்போது மிகத் தீவிரமான வேட்டையை ஆரம்பித்துள்ளன.

இந்த மோசடி வலையின் பின்னணியைக் கண்டறிந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களைப் பாதுகாக்குமாறு கொழும்பு தலைமை நீதவான், மத்திய வங்கிக்கும் CIDக்கும் கடுமையான உத்தர பிறப்பித்துள்ளார். இதுவரை 25 ஆக இருந்த தடைசெய்யப்பட்ட பிரமிட் அமைப்புகளின் பட்டியல், அண்மையில் கண்டறியப்பட்ட ‘TM App’ என்ற புதிய செயலியின் வருகையோடு தற்போது 26 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டில் நிதி பாதுகாப்பு தொடர்பான அச்சம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் எடுக்கப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றங்கள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து, எதிர்வரும் 3 மாத கால அவகாசத்திற்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் மத்திய வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83 (C) பிரிவின் கீழ், மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் திணைக்களம் இந்த விசாரணைகளை மிக தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உண்மையில், இந்த மோசடி செயலிகளின் ஊடுருவல் நேற்று இன்று ஆரம்பித்தது அல்ல. 2024-2025 காலப்பகுதியில் Beecoin, Fast Win, Pro Care போன்ற பல செயலிகள் கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, கடந்த பெப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 24 ஆகவும், ஜூலை மாதத்தில் “Infinity Rover (Pvt) Ltd” சேர்க்கப்பட்டு 25 ஆகவும் விரிவடைந்தது. இதன் உச்சகட்டமாகவே தற்போது ‘TM App’ பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான இலங்கை மக்களின் பணத்தைச் சூறையாடிய OnmaxDT, MTFE App, Qnet/Questnet போன்ற மிகப்பெரிய நெட்வொர்க்குகள், தொடர்ச்சியான விசாரணைகளின் மூலமே முற்றாக முடக்கப்பட்டு அவற்றின் கணக்குகள் முடக்கப்பட்டன. இருப்பினும், புதிய பெயர்களில் புதுப்புது செயலிகள் உருவெடுத்துக் கொண்டே இருப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை அறிவிப்பின்படி, இத்தகைய பிரமிட் திட்டங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், அவற்றை சமூக வலைத்தளங்களில் ஊக்குவிப்பது, விளம்பரப்படுத்துவது அல்லது அதற்கு நிதியுதவி செய்வதும் கடுமையான குற்றமாகும். இதில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக பாரிய அபராதங்களும் சிறைத்தண்டனையும் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இவ்வாறான கவர்ச்சி வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்துடன் தொடர்புடைய சட்டவிரோத நிறுவனங்கள் தொடர்பான பட்டியல் பின்வருமாறு, 

Tiens Lanka Health Care (Pvt) Ltd 
Best Life International (Pvt) Ltd 
Mark – Wo International (Pvt) Ltd 
V M L International (Pvt) Ltd 
Global Lifestyle Lanka (Pvt) Ltd 
Fast3Cycle International (Pvt) Ltd 
Sport Chain App and Sport Chain ZS Society Sri Lanka 
OnmaxDT 
MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka and MTFE DSCC Group 
Fastwin (Pvt) Ltd 
Fruugo Oline App / Fruugo Oline (Pvt) Ltd 
Ride to Three Freedom (Pvt) Ltd 
Qnet / Questnet 
Era Miracle (Pvt) Ltd and Genesis Business School 
Ledger Block 
Isimaga International (Pvt) Ltd 
Beecoin App and Sunbird Foundation 
Windex Trading 
The Enrich Life (Pvt) Ltd 
Smart Win Entrepreneur (Pvt) Ltd 
Net Fore International (Pvt) Ltd / Netrrix 
Pro Care (Pvt) Ltd and Shade of Procare (Pvt) Ltd 
SGO / sgomine.com 
I.C.A.N. Advertising (Pvt) Ltd and its affiliated platforms 
Infinity Rover (Pvt) Ltd TM App

பார்ளிமென்ட் ப்ரீமியர் லீக்: ஆண்கள் பிரிவில் ‘றோயல் றிசீவர்ஸ்’ அபார வெற்றி!

இலங்கை பாராளுமன்றத்தின் அத்தனை பரபரப்புகளுக்கும் மத்தியில், கோட்டே ஆனந்த சாஸ்த்ராலயா விளையாட்டு மைதானம் திடீரென ஒரு சர்வதேச கிரிக்கெட் அரங்கம் போல அதிரத் தொடங்கியது. பாராளுமன்ற பணியாளர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் வருடாந்தம் நடத்தப்படும் ‘பார்ளிமென்ட் ப்ரீமியர் லீக் 2026’ (PPL) மென்பந்து கிரிக்கெட் தொடர், இம்முறை ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உச்சகட்ட விறுவிறுப்புடன் நிறைவுக்கு வந்துள்ளது.

மைதானத்தில் தூசி பறக்க நடைபெற்ற இந்த அசாத்தியமான கிரிக்கெட் போரில், ஆண்களுக்கான பிரிவில் கயான் பெரேரா தலைமையிலான ‘றோயல் றிசீவர்ஸ்’ அணி தங்களின் அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை வீழ்த்தி, மகுடத்தை தன்வசப்படுத்தியது. அதேநேரம், களத்தில் தங்களுக்கு ஈடுஇணையே இல்லை என்பதை நிருபிக்கும் வகையில், பெண்கள் பிரிவில் கீதானி விதானபத்திரண தலைமையிலான ‘கோல்டன் ஃப்ளேம்ஸ்’ அணி தொடர்ந்து 3வது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை தட்டித்தூக்கி வரலாற்று சாதனை படைத்தது!

இறுதிப் போட்டியின் கடைசி ஓவர் வரை வெற்றிக்காக போராடிய பிரதீப் ரணதுங்க தலைமையிலான ‘தியவன்னா ரைடர்ஸ்’ அணி ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், மினோலி மதுஷிலா தலைமையிலான ‘ஒன் டு ஒன் கேர்ள்ஸ்’ அணி பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து ரசிகர்களின் கைதட்டல்களைப் பெற்றன. போட்டிகள் அனைத்திலும் ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு விக்கெட்டும் அரங்கத்தையே அதிரவைக்கும் வகையில் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்திருந்தன.

இந்த பிரம்மாண்டமான தொடரின் நிறைவு விழா மற்றும் வெற்றி பெற்ற சாம்பியன்களுக்கான கிண்ணம் வழங்கும் நிகழ்வு, கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, கௌரவ பிரதி குழுக்களின் தவிசாளர் ஹேமாலி வீரசேகர மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன, சணச நிறுவனத் தலைவர் கலாநிதி பி.ஏ. கிறிவந்தெனிய உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

இத்தொடரில் தனிநபர் திறமையால் மைதானத்தை தங்களின் வசமாக்கிய நாயகர்களும் உருவெடுத்தனர்! ‘றோயல் றிசீவர்ஸ்’ அணியின் சுரங்க விக்ரமஆரச்சி இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும், பவந்த ஷாமிக் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராகவும், ஜனித் ஆரியதிலக போட்டித் தொடரின் நாயகனாகவும் விருதை தட்டிச்சென்றனர். தியவன்னா ரைடர்ஸ் அணியின் ஏ.ஜி. சுரேஷ் சதுரங்க குமாரஜீவ சிறந்த துடுப்பாட்ட வீரராக ஜொலித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, PPL வரலாற்றிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட தொடரின் ‘சிறந்த வீராங்கனை’ என்ற வரலாற்றுப் பெருமைமிக்க விருதை ‘கோல்டன் ஃப்ளேம்ஸ்’ அணியின் ருவங்கா கமகே தனது வசம் ஈர்த்துக் கொண்டார்!

மாகாண சபை தேர்தலை உடனே நடத்துங்கள்! – இலங்கைக்கு இந்தியா அழுத்தம்!

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் பெருத்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் அதிமுக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கையில் நீண்டகாலமாக பிற்போடப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்களை தாமதமின்றி உடனடியாக நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அதிரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையின்படி, தனது உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்த விக்ரம் மிஸ்ரி, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்ய அரசியலமைப்பு திருத்தங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்துடன் இந்திய அழுத்தங்கள் நிற்கவில்லை; பெருந்தோட்டத் துறை மக்களுக்கு இந்திய நிதியுதவியின் 4ஆம் கட்டத்தின் கீழ் வாக்குறுதியளிக்கப்பட்ட 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை விரைவுபடுத்துமாறும், எல்லை தாண்டி கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுவிக்குமாறும் அவர் இலங்கை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை, பிராந்திய பாதுகாப்பை மையமாகக் கொண்டு 2024 டிசம்பர் மாத கூட்டு அறிக்கையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அளித்த “இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இலங்கை நிலப்பரப்பு பயன்படுத்தப்பட மாட்டாது” என்ற வாக்குறுதிக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மிஸ்ரி, இது இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு பங்காளித்துவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வலுவான அஸ்திவாரமாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி அநுர குமார மற்றும் இந்திய பிரதமர் மோடியின் விஜயங்களின் போது எட்டப்பட்ட ஒப்பந்தங்களை தடையின்றி முன்னெடுப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.