Thursday, July 30, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 23

புத்தளம் இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி மாணவிகளுக்கு விஷேட செயலமர்வு!

0

ரஸீன் ரஸ்மின்

உயர் கல்வி மற்றும் தஃவா பணிக்கு AI உள்ளிட்ட நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பில் புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளுக்கு தெளிவூட்டும் செயலமர்வொன்று நேற்று சனிக்கிழமை (13) மாலை இடம்பெற்றது.

புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம்.பஸ்லுல் பாரிஸ் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம்.பைரூஸ் வளவாளராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர் உட்பட இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில் கற்பிக்கும் முஅல்லிமாக்கள் மற்றும் மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, உயர் கல்வி மற்றும் தஃவா பணிக்கு AI உள்ளிட்ட நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்துவது எவ்வாறு எனும் தலைப்பில் வளவாளராக கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம்.பைரூஸ் விளக்கமளித்து தெளிவூட்டியதுடன், மாணவிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.

மேலும், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சமூக வளைத்தளங்களால் இளம் சமூகம் எதிர்நோக்கியுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் எடுத்துரைத்ததுடன், மாணவிகள் அவற்றை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்றும் விழிப்புணர்வூட்டும் தெளிவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா – ஈரான் போர் முடிவுக்கு வருமா? ஒப்பந்தம் குறித்து உலகம் எதிர்பார்ப்பு!

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் விரைவில்?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகும் என்ற தகவலை ஈரான் உறுதிப்படுத்தவில்லை. “அது நாளை நடைபெறாது, ஆனால் வரும் நாட்களில் நடைபெறலாம்” என ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதுடன், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கவும், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஈரானில் சில கடும்போக்கு ஆதரவாளர்கள் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, ஈரானின் அணு திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பின்னர் தனியாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் பிறந்தநாளில் அமைதி ஒப்பந்தமா?

சனிக்கிழமை தனது சமூக ஊடகப் பதிவில் டிரம்ப், “ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகும்” என்று தெரிவித்தார். குறிப்பிடத்தக்க வகையில், அது அவரது 80வது பிறந்தநாளாகும்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப், இரு தரப்பும் ஏற்கனவே ஒரு கட்டமைப்பு உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை மின்னணு கையெழுத்து நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இஸ்ரேல் அதிருப்தி – மத்திய கிழக்கில் புதிய அரசியல் புயலா?

இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை என்று அறிவித்துள்ளது.

மேலும், லெபனானில் ஈரானின் கூட்டாளியான ஹெஸ்பொல்லாவுக்கு எதிராக கடந்த 24 மணி நேரத்தில் 70-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனால், அமெரிக்கா அமைதியை நோக்கிச் செல்லும் வேளையில், மத்திய கிழக்கில் பதற்றம் இன்னும் முழுமையாக அடங்கவில்லை என்பதும் தெளிவாகிறது.

உலகம் காத்திருக்கும் தருணம்

பல மாதங்களாக இரத்தம் சிந்திய இந்த மோதல் முடிவுக்கு வருமா? ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? உலக எண்ணெய் விலைகள் குறையுமா? அல்லது கடைசி நேரத்தில் ஒப்பந்தம் முறியடிக்கப்படுமா?

இந்த கேள்விகளுக்கான பதிலை அறிய உலக நாடுகள் அனைத்தும் தற்போது வாஷிங்டன், தெஹ்ரான் மற்றும் இஸ்லாமாபாத் நோக்கி உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன.

கரைத்தீவு கஜூ தோட்டத்தில் கொலைக்கு பின் பதற்றம்: 100 பேர் தாக்கியதாக புகார்!

0

ஜூட் சமந்த

முந்திரி தோட்டத்தில் பதற்றம்: அறுவடைக்கு சென்றவர்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் தாக்கியதாக புகார்!

வனாதவில்லுவ, ஜூன் 14: குத்தகை அடிப்படையில் பெற்றிருந்த முந்திரி (கஜூ) தோட்டத்தில் அறுவடை மேற்கொள்ளச் சென்ற குழுவினர் மீது முரட்டுத்தனமான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வனாதவில்லுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஜூன் 13ஆம் திகதி மாலை இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் குத்தகைதாரரான மொஹமட் நிபாஸ் மொஹமட் (30) மற்றும் அவரது ஊழியர்களான ஆர்.எம். ரிஷான் (19), ஐ.எம். ருக்ஷான் (25) ஆகிய அனைவரும் கல்பிட்டி – ஏத்தாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.

காயமடைந்த மூவரும் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னணியில் கொலைச் சம்பவம்?

சிலாபம் தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான வனாதவில்லுவ – கரதீவு, பகுதியில் அமைந்துள்ள முந்திரி (கஜூ) தோட்டம், கல்பிட்டி ஏத்தாலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த நிலையில், தோட்டத்தின் பாதுகாப்பிற்காக பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 9ஆம் திகதி அதிகாலை சுமார் 1.30 மணியளவில் முந்திரி (கஜூ) சேகரிப்பதற்காக சட்டவிரோதமாக தோட்டத்திற்குள் நுழைந்ததாக கூறப்படும் ஒருவரை பாதுகாப்பு பணியாளர்கள் தடுத்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட தகராறை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சூட்டில் அதுகோரலகே பிரதீப் சுசந்த (38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார்.

“குடும்பத்திற்காக கஜூ சேகரிக்கச் சென்றார்” – கிராம மக்கள் குற்றச்சாட்டு

உயிரிழந்த பிரதீப் சுசந்த, கரதீவு ஏரிப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்றும், குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக முந்திரி (கஜூ) சேகரிக்கச் சென்றபோது முதலில் தாக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தோட்டத்தில் பணியாற்றிய நான்கு பாதுகாப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பழிவாங்கும் தாக்குதலா?

இந்நிலையில், தாம் குத்தகைக்கு பெற்றிருந்த தோட்டத்தில் முந்திரி (கஜூ) அறுவடை செய்யச் சென்றபோது சுமார் 100 பேர் கொண்ட குழுவொன்று திடீரென தாக்குதல் நடத்தியதாக குத்தகைதாரர் மொஹமட் நிபாஸ் மொஹமட் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம், முன்னர் இடம்பெற்ற உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பழிவாங்கும் நடவடிக்கையா என்ற கோணத்திலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனாதவில்லுவ பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு முந்திரி (கஜூ) தோட்டத்தை மையமாகக் கொண்டு ஆரம்பித்த மோதல், உயிரிழப்பு, கைது மற்றும் பெரும் தாக்குதல் வரை சென்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனிலவு வலையில் சிக்கிய மதப்போதகர் – புத்தளத்தில் பேரதிர்ச்சி!

0

தேனிலவு வலையில் சிக்கிய மதப்போதகர்! நிர்வாண வீடியோ மிரட்டலில் ரூ.1.85 லட்சம் பறிப்பு – புத்தளத்தில் அதிர்ச்சி ‘ஹனி ட்ராப்’ கும்பல் அம்பலம்

ஜூட் சமந்த

புத்தளத்தில் திட்டமிட்டு விரிக்கப்பட்ட ‘தேனிலவு’ வலையில் சிக்கிய இஸ்லாமிய மதப்போதகர் ஒருவரிடம் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ரூபாய் 1 இலட்சத்து 85 ஆயிரம் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் – மனைவி ஜோடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் – தில்அடியைச் சேர்ந்த 30 மற்றும் 35 வயதுடைய குறித்த தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களை ஜூன் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நட்பாக ஆரம்பித்து மோசடியாக முடிந்த சம்பவம்

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை – முதலப்பாலி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மதப்போதகர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மல்வானை பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றி வரும் அவர், கடந்த மே மாதம் புத்தளம் கொழும்பு முகத்திடல் அருகே நின்றுகொண்டிருந்தபோது குறித்த தம்பதியினருடன் தாம் அறிமுகமானதாக தெரிவித்துள்ளார்.

அறிமுகம் விரைவில் நட்பாக மாறியதுடன், தொடர்ந்து தொலைபேசி தொடர்புகளும் இடம்பெற்றுள்ளன. பின்னர் கடந்த 6 ஆம் திகதி இரவு, குறித்த பெண் தங்களது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

வீட்டுக்குள் காத்திருந்த அதிர்ச்சி

பெண்ணின் அழைப்பை நம்பி வீட்டிற்கு சென்ற குறித்த நபர், அங்கு அவரின் கண்டிப்பான வேண்டுகோளுக்கு இணங்க ஆடைகளை அகற்றிய நிலையில் இருந்தபோது, திடீரென பெண்ணின் கணவரும் மற்றொருவரும் அறைக்குள் திட்டமிட்ட வகையில் அதிரடியாக புகுந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவரிடம் இருந்த ரூபாய் 18,500 பணமும் தேசிய அடையாள அட்டையும் பறிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், அவர் அரை நிர்வாண நிலையில் இருந்த காட்சிகளை கைபேசியில் பதிவு செய்த சந்தேகநபர்கள், “கூறும் தொகையை வழங்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம்” எனவும் மிரட்டியுள்ளனர்.

அவமானத்திற்கும் சமூக மதிப்பிற்கும் அஞ்சி, குறித்த நபர் பல தவணைகளில் ரூபாய் 1 இலட்சத்து 85 ஆயிரம் வரை பணம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

20-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம்!

கைது செய்யப்பட்ட தம்பதியினரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், இது தனிப்பட்ட சம்பவம் அல்ல என்பது தெரியவந்துள்ளது.

வழியில் செல்லும் ஆண்களுடன் பழகி, பின்னர் வீட்டிற்கு வரவழைத்து, நிர்வாண அல்லது அரை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து மிரட்டிப் பணம் பறிப்பதே இவர்களின் வழக்கமான செயல்முறையாக இருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

புத்தளம் நகரைச் சுற்றிய பகுதிகளில் இதுபோன்ற சுமார் 20 சம்பவங்கள் வரை இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகின்ற போதிலும், சமூக அவமானத்திற்கு அஞ்சி பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை இரண்டு புகார்கள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், அவற்றில் ஒன்றும் பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்

இந்த மோசடி வலையமைப்பின் முழுமையான பின்னணியை கண்டறியும் நோக்கில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று ஏமாற்றப்பட்டு, மிரட்டப்பட்டு அல்லது பணம் பறிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால், அச்சமின்றி புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவை அணுகி புகார் அளிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம், சமூக ஊடகங்களையும் தனிநபர் மரியாதையையும் ஆயுதமாக பயன்படுத்தி நடைபெறும் ‘ஹனி ட்ராப்’ மோசடிகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளதுடன், அந்நியர்களுடன் ஏற்படுத்தும் தொடர்புகளில் அதிக எச்சரிக்கை தேவை என்பதையும் நினைவூட்டியுள்ளது.

பொருளாதார சுதந்திரம் பறிக்கப்படுகிறதா? ஹர்ஷ சபையில் சீற்றம்!

0
பொருளாதார சுதந்திரம் பறிக்கப்படுகிறதா? – ‘கட்டாய டாலர் மாற்றத்தால்’ முதலீட்டாளர்கள் மத்தியில் பரவும் நடுக்கம்!

கொழும்பு: “ஒரு நாட்டின் பொருளாதார நெருக்கடியை விட, அதைக் கையாள அரசு எடுக்கும் சில முடிவுகள் ஆபத்தானவை” என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இலங்க நாடாளுமன்றத்தில் அண்மையில் எழுந்த விவாதம் ஒன்று இப்போது மக்கள் மத்தியிலும் வர்த்தக உலகிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பாக “கட்டாய அந்நியச் செலாவணி மாற்றச் சட்டம்” (Force Conversion Regulation) தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பொருளாதார சுதந்திரத்தை முற்றிலுமாகப் பறிக்கிறதா என்ற காரசாரமான கேள்வி ஒன்றை ஹர்ஷ டீ சில்வா நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.

கடந்த 2022 முதல் 2024 வரையிலான கடுமையான பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் இந்த ஒழுங்குமுறை கொண்டு வரப்பட்டது. ஏற்றுமதியாளர்கள் தங்களின் உழைப்பில் ஈட்டும் அந்நியச் செலாவணியை (டாலர்களை), அவர்களின் கடன் கொடுப்பனவுகள் மற்றும் மூலப்பொருட்களுக்கான செலவுகள் போக மீதமுள்ள தொகையை கட்டாயமாக இலங்கைப் ரூபாயாக (LKR) மாற்ற வேண்டும் என்று இந்த விதி நிர்ப்பந்திக்கிறது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் குரலெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா, “இது ஏற்றுமதியாளர்களின் சுதந்திரத்தை நேரடியாகப் பாதிக்கும் செயல்” என்று சாடியுள்ளார். தங்களின் சொந்த உழைப்பில் வந்த வருமானத்தை எப்படி, எப்போது பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையை அரசு கையில் எடுப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

சபையில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா;

முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் நடுக்கம்! “அரசாங்க அதிகாரிகள் தங்கள் வணிகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று கட்டளையிடுவதை எந்தவொரு முதலீட்டாளரும் விரும்புவதில்லை. மாறாக, தங்களின் சொந்தக் கணிப்புகள் மற்றும் சந்தை அவதானிப்புகளின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்க அவர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய ‘கடுமையான’ (Draconian) விதிகள் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன, இது நாட்டின் எதிர்கால முதலீடுகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமையலாம்.” — நாடாளுமன்ற விவாதத்திலிருந்து

தற்காலிக நிம்மதியும், நிரந்தர ஏமாற்றமும்!

இந்தக் கட்டாய டாலர் மாற்றத்தினால் சந்தையில் தற்காலிகமாக ஒரு போலி அமைதி நிலவியது உண்மைதான். ரூபாயின் மதிப்பு ஆரம்பத்தில் சற்று வலுவடைந்த போதிலும், தற்போது அது மீண்டும் ஒரு டாலருக்கு 320 – 330 ரூபாய் என்ற அளவிலேயே காணப்படுகிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? இத்தகைய செயற்கையான, கடுமையான நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு ஒருபோதும் நீண்ட காலத் தீர்வாக அமையாது என்பதை சந்தை நிலவரமே அரசுக்கு உணர்த்தியிருக்கிறது.

அரசுக்கு விடுக்கப்பட்ட 3 மாத கெடு!

இந்த விவகாரம் குறித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இத்தகைய விதிகள் “பொருளாதார சுதந்திரத்திற்கும் வணிகத்திற்கும் எதிரானது” என்று கடுமையாக எச்சரித்துள்ளனர்.

மேலும், “இவை நெருக்கடி காலத்திற்கான தற்காலிக ஏற்பாடுகள் மட்டுமே என்பதையும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இவை முழுமையாக நீக்கப்படும் என்பதையும் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் பலத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியில் இருக்கும் பொருளாதாரத்தை மீட்க அரசு முற்படுவது நியாயமே என்றாலும், அது வர்த்தகர்களை மூச்சுத்திணறச் செய்யக் கூடாது. சந்தையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு இத்தகைய கடுமையான விதிகள் ஒருபோதும் உதவாது. “அதிகார மிரட்டல்” அல்ல, மாறாக அரசின் “வெளிப்படைத்தன்மை” மட்டுமே முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் வென்றெடுக்க உதவும் என்பதே தற்போதைய பொருளாதார நிபுணர்களின் ஒற்றைக் கருத்தாக உள்ளது.

அரசாங்கம் இந்த விதியை தளர்த்தி முதலீட்டாளர்களுக்கு சுதந்திரம் அளிக்குமா? அல்லது இந்த ‘டாலர் கயிறு’ மேலும் இறுக்கப்படுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23 டெங்கு மரணங்கள்!

0

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் நான்கு சிறுவர்களும் உள்ளடங்குவதாக அதன் சமூக வைத்திய  நிபுணர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த 6 மாத காலப்பகுதியில் 40,443 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் டெங்கு நோய் வேகமாக பரவும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்பு குழு தீர்மானித்துள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்று (12) கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து பதிவாகும் டெங்கு நோயாளர்களில் 25.8 சதவீதமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். இதன் காரணமாக, அந்தப் பகுதியை ‘அதி அவதானம்’ மிக்க மாவட்டமாக பெயரிட தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த காலங்களில் நிலவிய அதிக மழைவீழ்ச்சியுடனான காலநிலை காரணமாக டெங்கு பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இம்முறை டெங்கு பரவலானது வீடுகளை விட, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் அதிகமாக பதிவாகியுள்ளமை விசேடமாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, டெங்கு ஒழிப்பு வாரத்தில் பொது இடங்கள் மற்றும் வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான சிரமதான வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்தல், அதி அவதானம் மிக்க வீடுகளைப் பரிசோதித்தல் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய பின்னர் சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்?

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் அச்சம் ஓவர்நைட்டில் வழக்கம் போல் அமைதியானது, தற்போது யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தையை நோக்கி நகர்ந்துள்ளது. டிரம்ப் நேற்று, இன்று இரவு ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தப்போவதாக அச்சுறுத்தியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முடிவிலிருந்து திடீரென பின்வாங்கி, தாக்குதல்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்துள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையும், ஒப்பந்தைமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், வரும் சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமைக்குள் இந்த வரலாற்று ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த போர் முடிவுக்கு வந்தால் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சந்தையில் ஒரு மாபெரும் மறுசீரமைப்பை (Reset) உருவாக்கும்,

டிரம்ப் போட்ட புதிய பதிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு மூலம் உலக நாடுகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. “ஈரான் அரசுடனான பேச்சுவார்த்தைகள் அந்நாட்டின் மிக உயரிய தலைமையிடம் ஒப்புதலுக்குக் கொண்டு செல்லப்பட்டு அப்ரூவல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று இரவு ஈரான் மீது நடத்தத் திட்டமிட்டிருந்த அனைத்து வான்வழி மற்றும் குண்டுவீச்சுத் தாக்குதல்களையும் அமெரிக்க அதிபர் என்ற முறையில் நான் ரத்து செய்துள்ளேன்” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மெகா அமைதி ஒப்பந்தத்தின் கண்டிஷன்கள் அனைத்தும் அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மற்றும் எகிப்து உள்ளிட்ட போரில் தொடர்புடைய அனைத்து சர்வதேச நாடுகளாலும் ஒட்டுமொத்தமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தம் கையெழுத்தாகும் தேதி மற்றும் இடம் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் முஜ்தபா கமேனி இந்த ஒப்பந்தத்திற்குத் தனது தனிப்பட்ட பச்சைக்கொடியைக் காட்டியுள்ளதாக வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள 5 முக்கிய அம்சங்கள்!

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) ஈரானுக்குச் சாதகமான பல்வேறு முக்கியச் சலுகைகள் மற்றும் 5 பிரதான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன:

கடற்படை முடக்கம் நீக்கம்: இந்த அமைதி உடன்படிக்கை முறைப்படி கையெழுத்தான அடுத்த கணமே, ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்க ராணுவம் விதித்துள்ள கடுமையான கடற்படை முற்றுகை (Naval Blockade) முழுமையாக வாபஸ் பெறப்படும்.

ஈரானியத் தலைமையின் முழு ஒப்புதல்: இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளுக்கும் ஈரானில் உள்ள ஒட்டுமொத்த உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் தங்களின் அப்ரூவலை வழங்கியுள்ளனர்.

கார்க் தீவு ஆக்கிரமிப்பு கைவிடப்பட்டது: ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் ‘கார்க் தீவை’ (Kharg Island) அமெரிக்கத் தரைப்படைகளைக் கொண்டு கைப்பற்றும் அதிரடித் திட்டம் தற்போது முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளது (Off the table).

ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு: உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய நுழைவாயிலாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) முழுமையாகத் திறந்து, அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றி வான்வழி மற்றும் கடல்வழி வர்த்தகப் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் வரும் சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமைக்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலக்கெடு இல்லாத பேச்சுவார்த்தை: இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்ய அமெரிக்கா எவ்வித இறுதிக் கெடுவையும் (Deadline) விதிக்கவில்லை. ஈரான் தற்போதைய சூழலில் மிகவும் பகுத்தறிவுடனும், அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

கச்சா எண்ணெய் சரிவு.. தங்கம் மீண்டும் பாயும்!

மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதாக வந்த இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, உலகளாவிய கமாடிட்டி மற்றும் முதலீட்டுச் சந்தைகளில் வரலாறு காணாத அதிரடி மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. போர் அச்சுறுத்தலால் எகிறிக்கொண்டே சென்ற சர்வதேசக் கச்சா எண்ணெய் விலையானது, இந்த அமைதி பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் செய்தியால் முதலீட்டு சந்தையில் மாற்றங்கள் நிகழ துவங்கியுள்ளது.

எண்ணெய் விநியோகத் தட்டுப்பாடு நீங்கி சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதால், கச்சா எண்ணெய் விலை இன்று 1-2 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் மேலும் குறையும் என்று வர்த்தக வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதன் நேரடி விளைவாக, கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து வெளியேறும் பெரு நிறுவனங்களின் முதலீடுகள் அனைத்தும் மீண்டும் பங்குச்சந்தைகள் (Stock Markets) மற்றும் பாதுகாப்பான புகலிடமான தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மீது குவியத் தொடங்கும்.

இதனால் கடந்த சில வாரங்களாகச் சரிவைச் சந்தித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான முதலீடுகள் மீண்டும் அதிகரித்து, அவற்றின் சந்தை மதிப்பு மிக பிரம்மாண்டமான புதிய உச்சங்களை நோக்கிப் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளைகுடாப் போர் திங்கட்கிழமைக்குள் முடிவுக்கு வந்து, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால், அது இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைத்து ஒட்டுமொத்த விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும்.

கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்!

தெஹ்ரான்: ஈரான்-அமெரிக்கா இடையே போடப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டது. அதற்கு பதில், ஈரான் மீது போடப்பட்ட சர்வதேச பொருளாதார தடைகள் நீக்கப்பட வேண்டும். ஆனால், அமெரிக்கா இதை செய்யாமல் தொடர்ந்து அணுசக்தி விஷயத்தில் ஈரானை கட்டுப்படுத்துவதாகவும், இனி இந்த கதை நடக்காது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானிடம் அணு ஆயுதத்தை உருவாக்கும் டெக்னாலஜி இருக்கிறது என்று சொல்லிதான் அமெரிக்கா இந்த போரை தொடங்கியது. சரி அமெரிக்கா கேட்பதை போல அணு ஆயுத டெக்னாலஜியை நாங்கள் விட்டுக்கொடுக்க ரெடி என்று ஈரான் வழிக்கு வர.. அதற்கு பதிலாக, சர்வதேச அளவில் எங்கள் மீது போடப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று ஈரான் கேட்டது.

நியாயமான கேள்விதான். அமெரிக்காவும் வேறு வழியின்றி இதை ஏற்றுக்கொண்டது. முதற்கட்ட ஒப்பந்தத்தின்படி ஈரான் சொன்னதை செய்தது. ஆனால் அமெரிக்கா தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இப்படி இருக்கையில், “மேற்கத்திய நாடுகள் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஈரான் மீது தொடர்ந்து புதிய தடைகளை விதித்து வருகிறது” என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட இடைக்கால விதிகளை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் முதலில் செயல்படுத்த வேண்டும்; அதன் பிறகே அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதனால் அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் இழுபறி நீடிக்கிறது.

2015-ஆம் ஆண்டு ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையே ‘கூட்டு விரிவான செயல்பாட்டுத் திட்டம்’ (JCPOA – Joint Comprehensive Plan of Action) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. 2018-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறி, ஈரான் மீது மீண்டும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார். அதன் பிறகு இந்த ஒப்பந்தம் முற்றிலும் முடங்கியது.

அமெரிக்காவின் விலகலைத் தொடர்ந்து, ஈரான் தனது அணு உலைகளில் யுரேனியம் செறிவூட்டும் பணியை 60% மற்றும் அதற்கு மேல் அசுர வேகத்தில் அதிகரித்துள்ளது. இது அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மிக நெருக்கமான அளவாகும் என சர்வதேச அணுசக்தி முகமை எச்சரித்துள்ளது. இந்தத் திடீர் முரட்டுத்தனமான நிலைப்பாடு, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே மீண்டும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

இதுதான் அமெரிக்கா வைக்கும் வாதம். ஆனால், புற்றுநோய் சிகிச்சைக்கும் யுரேனியத்தை 60% அளவுக்கு செறிவூட்ட வேண்டும். எனவே நாங்கள் மருத்துவ பயன்பாட்டுக்குக்கு யுரேனியத்தை பயன்படுத்துகிறோம் என்று ஈரான் கூறுகிறது. மட்டுமல்லாது, எங்கள் சொந்த நாட்டின் பாதுகாப்புக்கு நாங்கள் அணு ஆயுதங்களை உருவாக்கினால் என்ன தப்பு? என்றும் கேள்வி கேட்கிறது.

ஈரானின் கேள்வியில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் அமெரிக்காதான் உலக அளவில் அதிக அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடு. அப்படி இருக்கையில் அமெரிக்கா அணு ஆயுதத்தை பற்றி பேசலமா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

நீங்க சொல்லுங்க மக்களே! அமெரிக்காவுக்கு இதைப்பற்றி பேச உரிமை இருக்கிறதா?

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் கடும் மழை!

0

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, களனி கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டங்கள் சில இடங்களில் உயர்வடைந்துள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்?

0

ஜூட் சமந்த

பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்?
65 வயது வியாபாரி கைது!

மாதம்பே பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமொன்றில், முன்பள்ளிக்குச் சென்று வரும் ஐந்து வயது சிறுமியொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டதாகக் கூறப்படும் 65 வயதுடைய வியாபாரி ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், மாதம்பே – கருகுவத்தாவ பகுதியைச் சேர்ந்த வியாபாரியென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணைகளின் படி, பாதிக்கப்பட்ட சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக குறித்த வியாபாரி நடத்தி வந்த கடைக்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தில், சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்ற சந்தேகநபர் முதலில் அவளை முத்தமிட்டு அணைத்துக் கொண்டதுடன், பின்னர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தாயார் உடனடியாக மாதம்பே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, பொலிஸார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் நீதிமருத்துவ அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறுவர்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பான சந்தேகங்கள் அல்லது தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், அவற்றை மறைக்காமல் உடனடியாக சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் அறிவிப்பது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கியமான சமூகப் பொறுப்பாகும்.