Saturday, June 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 23

வென்னப்புவவில் சிக்கிய 70 லட்சம் பெறுமதியான பீடி இலைகள்!

0

செய்தித் தொகுப்பு: ஜூட் சமந்த

வென்னப்புவ, வைக்காலை பகுதியில் வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 1,245 கிலோ கிராம் பீடி இலைகளை வென்னப்புவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக குறித்த வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 22) மாலை வென்னப்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லலித் சந்தசிறி தலைமையிலான குழுவினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. பொலிஸார் கைப்பற்றிய பீடி இலைகள் 35 பொலித்தீன் உரைகளில் பொதி செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சந்தைப் பெறுமதி சுமார் 70 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வேறொரு இடத்திற்கு விநியோகிப்பதற்காக இந்த வீட்டில் தற்காலிகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது பொலிஸார் இவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தச் சட்டவிரோதக் கடத்தல் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீடானது, வென்னப்புவ மதுவரி அலுவலகத்திற்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புத்தளம் மாவட்ட உதவி மதுவரி ஆணையாளர் அலுவலகம் மற்றும் வென்னப்புவ மதுவரி அத்தியட்சகர் அலுவலகம் ஆகியன அமைந்துள்ள அதே கட்டிடத் தொகுதிக்கு அருகிலேயே இந்தப் பதுக்கல் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் மற்றும் கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாத்துறையால் மீண்டும் உயிர்பெறும் மாட்டு வண்டிகள்!

0

செய்தித் தொகுப்பு: ஜூட் சமந்த

பண்டைய காலத்தில் இலங்கையர்களின் பிரதான போக்குவரத்துச் சாதனமாக விளங்கியவை ‘திரிக்கல’ (Thirikkala) அல்லது ‘டான்டு’ (Tantu) எனப்படும் மாட்டு வண்டிகள், தூர இடங்களுக்கான ஆன்மீகப் பயணங்கள் மற்றும் திருமணச் சடங்குகளுக்குக் கௌரவமான வாகனமாகப் பயன்படுத்தப்பட்டன, ஆனால் நவீன வாகனங்களின் வருகையோடு காலப்போக்கில் எமது சமூகத்திலிருந்து இது மறைந்து போயின.

இன்றும் தும்மலசூரிய – கட்டிமஹான தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்குப் பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வருகை தருவது ஒரு பாரம்பரியமாகத் தொடர்கின்ற போதிலும், அன்றாடப் பயன்பாட்டிலிருந்து இவை அற்றுப்போயுள்ளன. இந்நிலையில், அழிந்து வரும் இந்தக் கலையை ஒரு குடிசைத் தொழிலாகக் கொண்டு, மாரவில – இஹல கட்டுநேரிய பகுதியைச் சேர்ந்த டப்ளியூ. அசோக பிரியந்த குமார பெர்னாண்டோ என்பவர் இன்றும் இந்த வண்டிகளை உற்பத்தி செய்து வருகின்றார்.

தமது உற்பத்தி அனுபவம் குறித்து அவர் பகிர்கையில்:

“சிறுவயதில் எங்கள் வீட்டில் ஒரு டான்டு வண்டி இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் யாரிடமும் முறைப்படி இந்தக் கலையைக் கற்றுக்கொள்ளவில்லை. பார்த்துப் பார்த்தே அனைத்தையும் பழகினேன். இன்று என்னிடம் 60 முதல் 70 ஆண்டுகள் பழமையான வண்டிகள் உள்ளன. அதேபோன்று, நவீன காலத்திற்கு ஏற்றவாறு மிக ஆடம்பரமான வண்டிகளையும் நான் வடிவமைக்கிறேன். இலங்கையிலேயே மிக உயரமான டான்டு வண்டியும் என்னிடமே உள்ளது” என்கிறார்.

சுற்றுலாத்துறையில் பெரும் வரவேற்பு

தற்போது இந்த வண்டிகளுக்கான தேவை பெரும்பாலும் சுற்றுலாத் துறையைச் சார்ந்தே அமைகிறது. களுத்துறை, பேருவளை மற்றும் சிகிரியா போன்ற சுற்றுலாப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்குத் தேவைக்காக அசோகவின் வண்டிகள் பெருமளவில் கொண்டு செல்லப்படுகின்றன.

குறிப்பாக சித்திரைப் புத்தாண்டு காலங்களில் இடம்பெறும் மாட்டு வண்டிப் பந்தயங்களுக்காக (Race Carts) அதிக கேள்வி நிலவுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

உற்பத்தி சவால்கள்

தனது வீட்டில் மேலும் இரு பணியாளர்களின் உதவியுடன் இந்த வண்டிகளை உற்பத்தி செய்யும் அசோக, மரத்திற்கு மேலதிகமாக இரும்பு, துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) மற்றும் பித்தளை ஆகியவற்றை வண்டிகளின் உறுதித்தன்மைக்காகப் பயன்படுத்துகின்றார்.

“இதை ஒரு குடிசைத் தொழிலாகவே நான் ஆரம்பித்தேன். அனைத்து வேலைகளையும் எனது மேற்பார்வையில் மிக நுணுக்கமாகச் செய்வதால், ஒரு தரமான வண்டியை உருவாக்க அதிக காலம் எடுக்கிறது. அதனால் சந்தையில் நிலவும் கேள்விக்கு ஏற்ப விநியோகம் செய்வதில் சவால்கள் உள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.

பாரம்பரியமான ஒரு வாகனக் கலையைத் தற்காலத் தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்து, அதனை அழியாமல் பாதுகாத்து வரும் அசோகவின் முயற்சி பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

தாண்டிக்குளத்தில் கோர விபத்து: புகையிரதத்தில் சிக்கி ஒருவர் பலி!

0

பாஸ்கரன் கதீசன்

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று (23) இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி வருகின்றார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ் தேவி கடுகதி புகையிரதத்துடன், தாண்டிக்குளம் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முச்சக்கரவண்டி மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையைப் பயன்படுத்திய போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

புகையிரதத்துடன் மோதிய வேகத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்து உருக்குலைந்தது.

முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

“குறித்த பகுதியில் சைகை விளக்குகளோ அல்லது முறையான பாதுகாப்புத் தடைகளோ இல்லாததே இவ்வாறான தொடர் விபத்துகளுக்குக் காரணமாகின்றது.” – அப்பகுதி மக்கள் கவலை.

தாண்டிக்குளம் பகுதியில் உள்ள இந்தப் பாதுகாப்பற்ற புகையிரத கடவை நீண்டகாலமாக அபாயகரமான ஒன்றாகவே இருந்து வருகின்றது. அடிக்கடி இவ்வாறான விபத்துகள் நிகழ்ந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா நாளை!

0

இந்தியாவின் தேர்தல் களம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகக் கருதப்படுகிறது. தற்போது 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, பல்வேறு மாநிலங்களில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 96 கோடியைத் தாண்டியுள்ளது. இது பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம். தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான உடனேயே ‘தேர்தல் நடத்தை விதிகள்’ (Model Code of Conduct) அமலுக்கு வரும். இந்த விதிகள் முதன்முதலில் 1960-ஆம் ஆண்டு கேரள சட்டப்பேரவைத் தேர்தலின் போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்தியாவில் 1962-ஆம் ஆண்டு வெறும் 29 கட்சிகள் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டன. ஆனால் 2019-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 669 ஆக உயர்ந்தது. ஏறத்தாழ 2,200% வளர்ச்சி இதுவாகும்.

ஒவ்வொரு வாக்காளரும் 2 கிலோமீட்டர் தொலைவிற்குள் ஒரு வாக்குச் சாவடியைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதியைக் கொண்டு வர தேர்தல் ஆணையம் முயன்று வருகிறது. இமயமலையின் உயரமான பகுதிகள் முதல் அடர்ந்த காடுகள் வரை இதற்காகப் பணியாளர்கள் பயணம் செய்கின்றனர்.

அந்தவகையில் தற்போது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது, இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு முடிந்துவிட்டன.

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 234 தொகுதிகளுக்கும் சேர்த்து நாளை, ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

கடந்த 38 நாட்களாக அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் நேற்று (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தற்போது அமைதிக்காலம் (Silent Period) நிலவுகிறது. தமிழக அரசியல் களம் இந்த முறை வழக்கமான இருமுனைப் போட்டியிலிருந்து மாறி, ஒரு ஐந்து முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடையும் வரையிலான இந்த 48 மணி நேரத்தை ‘அமைதி காலம்’ எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இக்காலத்தில்:

  • பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் எவ்வித தேர்தல் விளம்பரங்களுக்கும் அனுமதி கிடையாது.
  • தொகுதிக்குத் தொடர்பில்லாத அரசியல் கட்சியினர் மற்றும் வெளிநபர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
  • திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
  • மதுக்கடைகள் மூடப்பட்டு, மதுவிலக்கு காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது

தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் சுமார் 5.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 75,644 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 423 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், பாதுகாப்புப் பணிகளுக்காக 300 கம்பெனி துணை ராணுவப் படையினரும், 83,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மார்ச் 15 முதல் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், சுமார் 1200 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம், மதுபானங்கள், தங்கம் மற்றும் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, பிரதான கட்சிகள் வாக்காளர்களுக்கு ₹1000 முதல் ₹5000 வரை பண விநியோகம் செய்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

முக்கியத் தலைவர்கள் அனைவரும் நேற்றுத் தங்களின் தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்:

  • திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்: சென்னை கொளத்தூரில் தனது பிரச்சாரத்தை முடித்தார். தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்க நினைப்பவர்களுக்குத் தான் எப்போதும் ‘டேஞ்சர்’ தான் என்று அவர் குறிப்பிட்டார்.
  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: சேலம் எடப்பாடியில் பிரச்சாரம் செய்தார். அதிமுகவின் கோட்டை சேலம் என்பதை 2021 தேர்தலிலேயே நிரூபித்துள்ளதாக அவர் பேசினார்.
  • தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்: சென்னை நந்தனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் அவர் விமர்சித்துப் பேசினார்.
  • நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: காரைக்குடியில் பிரச்சாரம் செய்து, தமிழ் தேசிய அரசியல் மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் மற்றும் 21 தோழமைக் கட்சிகளுடன் ‘திராவிட மாடல்’ ஆட்சியைத் தக்கவைக்கப் போராடுகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாக உள்ளது.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK) புதிய கட்சி, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஒரு முக்கிய ‘மூன்றாவது சக்தியாக’ உருவெடுத்துள்ளது.

சீமான் தலைமையில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, குறிப்பாகக் காரைக்குடி போன்ற தொகுதிகளில் பலமான போட்டியை அளிக்கிறது.

வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். தமிழகம் உட்பட கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளியாகியது அமைச்சரவைக் கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள்!

0

இலங்கை அமைச்சரவையின் வாராந்தக் கூட்டம் 2026.04.20 அன்று நடைபெற்றது. இதன்போது தேசிய பாதுகாப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த பல முக்கிய தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய பாதுகாப்பு மற்றும் விசாரணைப் பரிந்துரைகள்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆகியவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை முறையாகக் கண்காணிக்க இதுவரை நிலையான பொறிமுறை ஒன்று இருக்கவில்லை. எனவே, பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு இணங்க, ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான நிபுணர் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

போக்குவரத்து மற்றும் விமான சேவைகள்

  • புதிய போக்குவரத்து அனுமதிப்பத்திர நடைமுறை: மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக, தற்போதுள்ள பஸ் உரிமையாளர்களைப் பாதுகாக்கும் வகையிலும் புதிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • களனிவெலி புகையிரத பாதை நீடிப்பு: அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரை களனிவெலி புகையிரத பாதையை நீடிப்பதற்கான சாத்தியவள ஆய்வு மற்றும் விரிவான திட்டங்களைத் தயாரிக்கும் ஒப்பந்தம் M/s. Resources Development Consultants (Pvt) Ltd நிறுவனத்திற்கு 356.22 மில்லியன் ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ளது.
  • டுபாய் விமான நிலையச் சேவைகள்: டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கான தரைக்கையாளுதல் மற்றும் சரக்குக் கையாளுதல் சேவைகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வழங்க Dnata நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு

  • தேசிய வீடமைப்பு கொள்கை: 2019 ஆம் ஆண்டு இறுதியாகத் திருத்தப்பட்ட தேசிய வீடமைப்பு கொள்கையை, தற்கால சவால்களுக்கு ஏற்ப மீளாய்வு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
  • இடைநிறுத்தப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள்: 2015-2019 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட 2,562 வீடமைப்புத் திட்டங்களில் சுமார் 10,532 வீடுகள் மட்டுமே பூர்த்தியாகியுள்ளன. எஞ்சியுள்ள திட்டங்களை முடிக்க 11.26 பில்லியன் ரூபாய் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இது குறித்துப் பரிந்துரை வழங்க நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

கல்வி மற்றும் கலாசாரம்

  • புனித தாதுக்கள் அமெரிக்கா பயணம்: அம்பாறை நீலகிரி விகாரை, கங்காராம விகாரை மற்றும் மஹியங்கனை ரஜமகா விகாரை ஆகியவற்றில் உள்ள புனித தாதுக்களை 2026 மே 02 முதல் மே 10 வரை அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள மகாவிபஸ்ஸனா தியான மையத்தில் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பிக்ஷு பல்கலைக்கழகம்: இலங்கை பிக்ஷு பல்கலைக்கழகத்தின் பன்நோக்குக் கட்டடத்தின் கட்டுமானச் செலவு 663 மில்லியன் ரூபாயாகத் திருத்தப்பட்டு, அதனைப் பூர்த்தி செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டது.
  • வர்த்தகக் கல்வி: வர்த்தகக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 100 செய்முறை கற்றல் நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 25 மாவட்டங்களிலும் 25 நிலையங்கள் ஆரம்பிக்கப்படும்.

சுகாதாரம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு

  • சிறுநீரக நோயாளர்களுக்கான மருந்துகள்: சிறுநீரக நோயாளிகளின் டயாலிசிஸ் சிகிச்சைக்காகத் தேவையான 800,000 மருந்துப் பைகளை (Peritoneal dialysis solution) 889.6 மில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • புனர்வாழ்வு நிலையங்கள்: ‘நாடும் ஒன்றாக’ (Ratama Ekata) போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், சிகிச்சை மற்றும் புனர்வாழ்வுக்காக நாடு முழுவதும் புதிதாக 06 நிலையங்களை அமைக்கவும் அவற்றுக்கான பணியாளர்களை நியமிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஏனைய முக்கிய தீர்மானங்கள்

  • கைத்தொழில் அபிவிருத்திச் சபை உள்ளிட்ட பல நிறுவனங்களை ஒன்றிணைத்து ‘இலங்கை கைத்தொழில் மற்றும் புத்தாக்க அதிகாரசபையை’ உருவாக்குவதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக தற்போது பதில் கடமையாற்றும் ஈராஜ் சமிந்த பத்திரஜ அவர்கள் அந்தப் பதவிக்கு நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மே இறுதிக்குள் 5 இலட்சம் வந்து சேரும் – ஜனாதிபதி அதிரடி!

0

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்கவும் – ஜனாதிபதி!

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.

டித்வா சூறாவளியால் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை கையளிக்கும் பணிகள் தொடர்பாக இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

முழுமையாக சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்குப் புதிய வீடொன்றை வழங்குவது அல்லது வீடொன்றை கொள்வனவு செய்வதற்காக 50 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அந்த இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இன்னமும் முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு, புதிய வீடுகள் கிடைக்கும் வரை அவர்களைத் தற்காலிக வீடுகளில் குடியமர்த்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கேற்ற பொருத்தமான இடங்களைக் கண்டறிந்து, அந்தப் பணிகளை மிக விரைவாக நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

மிக ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், புதிய வீடு வாங்குவதற்கு இழப்பீடு பெறாதவர்களுக்காக வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே. ஜி. தர்மதிலக்க உட்பட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-04-22

சுகாதார அமைச்சின் அதிகாரி ஊழல் குற்றச்சாட்டில் கைது!

0

சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதம சட்ட அதிகாரி (ஓய்வு நிலை), பாரிய நிதி மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சிற்குச் சொந்தமான “மெடி ஹவுஸ்” (Medi House) எனும் கட்டிடத்திற்கான குத்தகை உரிமையைப் பெற்றுக்கொள்வது மற்றும் அது தொடர்பான ஒப்பந்தங்களை முன்னெடுப்பதில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட இரகசிய விசாரணைகளின் முடிவிலேயே இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர் சுகாதார அமைச்சின் பிரதம சட்ட உத்தியோகத்தராகப் பணியாற்றிய காலத்தில், பல மோசடிகளில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது:

அந்த வகையில் “மெடி ஹவுஸ்” கட்டிடத்தின் குத்தகை காலத்தை நீட்டிப்பதற்காக, விதிகளுக்கு முரணாக மூன்று குத்தகை ஒப்பந்தங்களைத் தயாரித்து இந்த ஒப்பந்தங்களைத் தயாரிப்பதற்கான கட்டணமாக 4,134,887 ரூபா தொகையை அவர் கோரியுள்ளார்.

கோரப்பட்ட தொகையில் முதற்கட்டமாக 2,000,000 ரூபா (20 இலட்சம்) பணத்தைப் பெற்றுள்ளதுடன், எஞ்சிய தொகையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், “QIDIO ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்” எனும் நிறுவனத்தின் பெயரில் மக்கள் வங்கியில் வழங்கப்பட்ட 500,000 ரூபா பெறுமதியான காசோலையைப் பெற்று பணமாக்கியுள்ளமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

“அரச பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காகப் பெருந்தொகை பணத்தை இலஞ்சமாகக் கோரியமை மற்றும் பெற்றுக் கொண்டமை தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன,”

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத் துறையில் உயர்மட்ட அதிகாரி ஒருவர் இவ்வாறான குற்றச்சாட்டில் சிக்கியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்கொட்டுவ பாடசாலையில் நடைபெற்ற புத்தாண்டு விழா!

0

ஜூட் சமந்த

மகாவெவ – மட்டக்கொட்டுவ கடற்கரை கனிஷ்ட வித்தியாலயம் ஏற்பாடு செய்த “சூரிய மங்கள” புத்தாண்டு விழா அண்மையில் பாடசாலை வளாகத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

சுமார் 300 மாணவர்கள் கல்வி பயிலும் மட்டக்கொட்டுவ கடற்கரை கனிஷ்ட வித்தியாலயத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், அங்கு கற்கும் அனைத்து மாணவர்களும் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதாகும். அந்தப் பாடசாலையில் பௌத்த அல்லது இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கூட இல்லாவிட்டாலும், கலாசார விழுமியங்களைப் போற்றும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆரம்பப் பிரிவு பாடத்திட்டத்தின்படி, அனைத்து மாணவர்களுக்கும் சிங்கள – தமிழ் புத்தாண்டு சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் குறித்த அறிவை வழங்குவது அவசியமாகும். இதற்காக அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலில் பாடசாலை வளாகத்தினுள் “நீல்மிணி தென்ன” மற்றும் “ரன்மிணி தென்ன” என பெயரிடப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் கலாசாரங்களை பிரதிபலிக்கும் இரு கிராமங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

புத்தாண்டு இளவரசனின் வருகையைத் தொடர்ந்து விழா ஆரம்பமானது. சுப நேரங்களின்படி அடுப்பு மூட்டுதல், உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், உணவு உட்கொள்ளுதல் மற்றும் தலைக்கு எண்ணெய் வைத்தல் போன்ற பாரம்பரிய சடங்குகள் முறையாகக் கடைபிடிக்கப்பட்டன. அத்துடன் மாணவர்கள் பாரம்பரிய ஊஞ்சல் ஆடுவதிலும் உற்சாகமாக ஈடுபட்டனர்.

மத அல்லது இன வேறுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் புத்தாண்டு சடங்குகள் மற்றும் சுப நேரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இவ்விழாவின் நோக்கம் என பாடசாலை அதிபர் கே.டி. விமலசேன தெரிவித்தார்.

இவ்விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு மகாவெவ ஸ்ரீ தர்மாராம வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எச்.எம். காமிணி அபயசிங்க மற்றும் அவரது பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். இப்பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவிலான பொதுமக்கள் இந்த கலாசார விழாவைக் கண்டுகளிக்க வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரந்தனில் கோர விபத்து: வீதியைக் கடக்க முயன்ற முதியவர் பலி!

கிளிநொச்சி, பரந்தன் சந்திக்கு அண்மித்த ஏ-9 (A9) பிரதான வீதியில் நேற்று (21.04.2026) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாகப் பயணித்த கார் ஒன்று, நேற்று இரவு 7.00 மணியளவில் பரந்தன் சந்திக்கு அருகில் வீதியை ஊடறுக்க முயன்ற முதியவர் மீது பலமாக மோதியுள்ளது. காரின் வேகம் காரணமாகத் தூக்கி வீசப்பட்ட முதியவர், படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் புன்னைநீராவி, கண்ணகைபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகக் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துத் தொடர்பாகக் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விபத்துக்குள்ளான காரின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்மை அல்லது வாகனத்தின் அதிவேகம் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

பரந்தன் சந்தி மற்றும் ஏ-9 வீதியோரங்களில் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனாத்தவில்லு கடற்கரையை மீட்கப் புறப்பட்ட அதிகாரிகள்!

0

இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளான எம்.எஸ்.சி. எலசா III (MSC Elasa III) கப்பலிலிருந்து வெளியேறிய அபாயகரமான நெகிழி மணிகள் (Plastic Pellets), தற்போது இலங்கையின் வடமேற்கு கடற்கரைப்பகுதிகளில் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புத்தளம், வனாத்தவில்லுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொங்கநத்த மற்றும் பாலுகத்துறை கடற்கரைகளில் பெருமளவிலான நெகிழி மணிகள் கரை ஒதுங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளை முறையாகத் திட்டமிடுவதற்காக கடந்த ஏப்ரல் (19) விசேட கள ஆய்வுப் பயணம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது, தூய்மைப் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எப்படிக் குறைப்பது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதில் ஆர். பிரபாகரன் – வனத்தவில்லுவ பிரதேச செயலாளர், சமந்த குணசேகர – தலைவர், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், ஜகத் குணசேகர – பொது மேலாளர், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், சுசந்த குமார – பூக்குளம் கிராம அலுவலர், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் (MEPA) கள உதவியாளர் ஷமில விக்ரமசிங்க மற்றும் விசேட அதிகாரிகள் குழுவினர்.

விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறிய இந்தச் சிறிய நெகிழி மணிகள், கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இவை மீன்கள் மற்றும் ஆமைகளால் உணவெனத் தவறாகக் கருதப்பட்டு உட்கொள்ளப்படுவதால், கடல்சார் உணவுச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறித்த கள ஆய்வின் முடிவில், பிரதேச செயலகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரை ஒருங்கிணைத்து, கடற்கரைகளைச் சுத்தம் செய்யும் பணிகளை உடனடியாகத் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. மணலில் கலந்துள்ள இந்த நுண் நெகிழிகளை அகற்றுவது சவாலான காரியம் என்பதால், இதற்கென விசேட தொழில்நுட்ப முறைகளைக் கையாளவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கடல் வளத்தையும், கடற்கரை அழகையும் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தத் தூய்மைப் பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.