Saturday, June 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 21

கல்விப் புரட்சியில் ‘Skills Vista’ – சான்றிதழ் விழாவில் மேயர் ரின்சாத்!

0

இன்றைய போட்டி நிறைந்த உலகில் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன என புத்தளம் மாநகரசபை மாண்புமிகு மேயர் ரின்சாத் அகமது அவர்கள் தெரிவித்தார்.

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஸ்கில்ஸ் விஸ்டா ‘Skills Vista’ திட்டத்தின் 2025/2026 ஆம் ஆண்டிற்கான சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை கல்வி அமைச்சு, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) மற்றும் தேசிய கல்வி நிறுவனம் (NIE) ஆகிய உயர்மட்ட நிறுவனங்கள் ஒன்றிணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

முக்கியமாக, உயர் தர மாணவர்களை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம் பல முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது:

  • தொழில் வழிகாட்டல் (Career Guidance): மாணவர்களின் எதிர்கால இலக்குகளைத் தீர்மானித்தல்.
  • தகவல் தொழில்நுட்பம் (ICT): நவீன டிஜிட்டல் உலகிற்குத் தேவையான கணினித் திறன்கள்.
  • ஆங்கில மொழிப் பயிற்சி (English Language): சர்வதேச மட்டத்தில் தொடர்பாடல் திறனை வளர்த்தல்.
  • வாழ்க்கைத் திறன்கள் (Life Skills): ஆளுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்தல்.

இந்நிகழ்வில் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு மேயர் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களை வாழ்த்திய மேயர், கல்வி அறிவு என்பது வெறும் புத்தகங்களோடு நின்றுவிடாமல், இத்தகைய செயல்முறைத் திறன்களையும் (Practical Skills) வளர்த்துக்கொள்ளும் போதுதான் ஒரு இளைஞர் முழுமையான வெற்றியாளராக மாற முடியும் என வலியுறுத்தினார்.

மேலும், நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களைச் சரியான பாதையில் வழிநடத்தும் நோக்கில் இத்தகைய காத்திரமான திட்டத்தை முன்னெடுத்து வரும் கல்வி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மேயர் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த ‘Skills Vista’ திட்டம் கல்வி முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புச் சந்தையில் ஒரு பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒன்றரை வயது பெண் குழந்தை 50,000 ரூபாய்க்கு விற்பனை!

தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில், ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை பணத்திற்காக விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவரும், அவருடன் இருந்த ஆடவர் ஒருவரும் இணைந்து தமது ஒன்றரை வயது பெண் குழந்தையை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். தமக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், வறுமை காரணமாக ஒரு குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் அதனை விற்பனை செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை விற்பனை செய்யப்படுவதை அவதானித்த புன்னை நீராவி கிராம மக்கள், உடனடியாகச் செயற்பட்டு குறித்த தாயையும் அவருடன் இருந்த ஆடவரையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் தர்மபுர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தற்போது தர்மபுர பொலிஸார் முன்னெடுத்துள்ள முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் குழந்தையை விற்பனை செய்த தாய், அதற்கு உடந்தையாக இருந்த ஆண் மற்றும் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய நபர் என மொத்தம் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினரிடம் தற்போது இரண்டு வயது மதிக்கத்தக்க மற்றுமொரு பெண் குழந்தையும் உள்ளது. இதனால், விற்பனை செய்யப்பட்ட குழந்தை உண்மையில் இவர்களுடையதுதானா அல்லது கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை தற்போது பொலிஸாரின் பாதுகாப்பான பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை தர்மபுர பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், வறுமையைச் சாட்டி இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் மகளிர் சங்கத்தின் “மகளிர் தின விழா!

எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் மகளிர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட மகளிர் தின விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நேற்று 25.04.2026 மிகச் சிறப்பாக நடைபெற்றது.

புனித ரமலான் மாதத்தில் நோன்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்ந்நிகழ்வு, நேற்று மிகுந்த எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் எருக்கல பிரைம் டெவலப்பர்ஸ் அமைப்பின் தலைவர் ஜனாப் இம்ரான் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டது.

பெண்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு பாரம்பரிய மற்றும் வினோத விளையாட்டுப் போட்டிகள் இதில் இடம்பெற்றன.

குறிப்பாக கயிறு இழுத்தல், கதிரை ஓட்டம், பலூன் உடைத்தல், சமநிலை ஓட்டம், கிடுகு மற்றும் பாய் இழைத்தல், தேங்காய் துருவுதல் போன்ற போட்டிகளில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, எருக்கலம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 14 பெண் அரச அதிகாரிகள், புத்தளம் பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட மொத்தம் 18 பெண் அதிகாரிகள் சிறப்பு அதிதிகளாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

ஊரின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் இவர்களை அடையாளப்படுத்தி, பாராட்டி நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற பிரைம் டெவலப்பர்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் மிகுந்த சிரமத்துடன் ஏற்பாடு செய்திருந்தபோதிலும் ஜனாப் அர்சத் மற்றும் ஜனாப் இஸ்மத் ஆகியோர் தாராளமான ஒத்துழைப்புக்களையும் இடவசதிகளையும் வழங்கி குறித்த நிகழ்வு சிறப்புற நடைபெற பெரும் பங்களிப்பு செய்தனர்.

நிகழ்வின் இறுதியில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பெறுமதிமிக்க பரிசில்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை பிரைம் டெவலப்பர்ஸ் அமைப்பின் தலைவர் இம்ரான், செயலாளர் ரிபாஸ் ஆசிரியர் மற்றும் அமைப்பின் ஸ்தாபகத்தலைவர் எம்.ஜே.எம் சிராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கி கௌரவித்தனர்.

பெண்களின் ஒற்றுமையையும் ஆளுமையையும் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த விழா, கிராம மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெசாக் வாரத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு வழிகாட்டல்!

0

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, “வெசாக் வாரத்தில்” பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய சுற்றுநிருபத்தில்,

வெசாக் வாரத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளில் விசேட ஆன்மீக மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான வெசாக் தினம் மே மாதம் 30ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு மற்றும் பௌத்த விவகார திணைக்களம் இணைந்து நடத்தும் அரச வெசாக் உற்சவம் மே மாதம் 27ஆம் திகதி மாத்தறை – திஹகொட, மிதெலவல புராதன விகாரையில் நடைபெறவுள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முன்மாதிரித் திட்டங்களை அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. அந்தந்த பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் சூழலுக்கு ஏற்ப பொருத்தமான முறையில் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

கல்வி அமைச்சின் இந்த வழிகாட்டல்களைப் பின்பற்றி அனைத்து கல்வி நிறுவனங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

வாக்களித்த மக்களை அரசாங்கம் முட்டாள்களாக்க முற்படுகிறது!

0

சத்திரசிகிச்சையின் பின்னர் நாடு திரும்பியுள்ள ரணில் விக்கிரமசிங்க, தற்போது மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார். ஓய்வில் இருக்கும் போதிலும், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக அவர் தனது நெருக்கமான அரசியல் சகாக்களை அழைத்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. 

இதன்படி, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரை அழைத்து அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பதவியில் இருந்து விலகியமைக்கான உண்மைப் பின்னணியை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ரணில் இதன்போது வலியுறுத்தினார். பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடுமாறும் அவர் பணிப்புரை விடுத்தார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு எத்தனை பேர் ஆலோசனை வழங்குகிறார்கள் என ரணில் இதன்போது கேள்வி எழுப்பினார். ஒரு பக்கம் அரசாங்கம் எரான் விக்கிரமரத்னவை கொண்டுவர முயற்சிக்கிறார்கள், மறுபுறம் ஹர்ஷ டி சில்வாவிடம் ஆலோசனை பெறுவதாகக் கூறப்படுகிறது.

எரான் விக்கிரமரத்னவை இவ்வாறான பதவிகளுக்குக் கொண்டுவருவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியினரிடையே பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்த கொடுக்கல் வாங்கல்களுக்குப் பின்னால் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டு மக்களுக்கு உண்மை நிலைமையை தெரியப்படுத்த வேண்டும். அரசாங்கத்திற்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுக்களை மூடிமறைக்க அரசாங்கம் இன்னோரன்ன செயல்களை செய்து வருகிறது. வாக்களித்த மக்களை முட்டாள்களாக்கவே அரசாங்கம் முற்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சி இதற்கு எதிராக வலுவாக செயல்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

110 ரூபா கோடி பெறுமதி போதைப் பொருட்களுடன் 22 தேரர்கள் கைது!

0

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹேஷ் ரக போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 தேரர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று சனிக்கிழமை (25) இரவு 10.10 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து தாய் எயார் ஏசியா விமானம் மூலம் வருகை தந்த தேரர்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதன்போது அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு தேரரின் பயணப் பொதியிலும் பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்கு நடுவே, சூட்சுமமான முறையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

மொத்தமாக 110 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சந்தை பெறுமதி சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேரரும் சுமார் 5 கிலோகிராம் போதைப்பொருளைத் தனித்தனியாகக் கொண்டு வந்துள்ளனர்.

இவர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் தேரர்கள் எனவும், உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று வருபவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி தர்மகர்த்தா ஒருவரால் வழங்கப்பட்ட விமான பயணச்சீட்டுகள் மூலம் இவர்கள் தாய்லாந்து சென்றுள்ளனர். தாய்லாந்தில் தங்கியிருந்த போது இவர்கள் சாதாரண உடையில பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர்களின் அலைபேசிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் இவ்வாறான பாரிய போதைப்பொருள் தொகை சிக்கிய முதல் சந்தர்ப்பம் இதுவெனக் கூறப்படுகிறது. அத்துடன், பெருமளவிலான தேரர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதும் இதுவே முதல் முறையாகும். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (26) நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். 

வெசாக் வாரத்தில் ஹஜ் பெருநாள்: அரசாங்கத்தின் தீர்மானம்?

0

பௌத்த மக்கள் மிகவும் புனிதமாகப் போற்றும் வெசாக் வாரத்தில் மாடுகள் அல்லது ஏனைய விலங்குகளைப் பலியிடுவதானது தேவையற்ற சமூகப் பதற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இது குறித்து அரசாங்கம் இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி அதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இஸ்லாமியர்கள் தமது ஹஜ் பெருநாளை மிகுந்த எதிர்பார்ப்புடன் கொண்டாடி வருகின்றனர். ஈதுல்  பெருநாளைத் தொடர்ந்து அய்யாமுல் தஷ்ரீக் எனப்படும் மூன்று நாட்கள் தியாகத் திருநாள் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இஸ்லாமிய மார்க்கத்தின் படி அல்லாஹ்வுக்காகச் செய்யப்படும் தியாகமாகவே இது கருதப்படுகிறது. இப்ராஹீம் நபியவர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற அர்ப்பணிப்பினை நினைவுறுத்தும் வகையில், நீண்டகாலமாக அவர்கள் மாடுகள், ஆடுகள் அல்லது ஒட்டகங்களைப் பலியிடுவதை ஒரு புண்ணியச் செயலாகக் கருதிப் பின்பற்றி வருகின்றனர்.

எனினும், இவ்வாறான குர்பான் நிகழ்வுகளின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த காலங்களில் அமைதியற்ற சூழல்கள் உருவானதை நாம் அறிவோம். குறிப்பாக 2013 ஆம் ஆண்டு கொலன்னாவை நகர சபைக்கு அப்போதைய மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவினால் அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில், இதனை பசு வதை புண்ணியச் செயல் எனக் குறிப்பிட்டிருந்த ஆவணம் என்னிடம் இப்போதும் உள்ளது. ஒரு விலங்கைக் கொன்று அதன் இறைச்சியைத் தமக்கும், ஏழைகளுக்கும், அயலவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதே அவர்களின் சம்பிரதாயம்.

தற்போதுள்ள சூழலில் வெசாக் வாரம் என்பது பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். மக்கள் தான தர்மங்கள் செய்தும், தோரணங்கள் அமைத்தும், பௌத்த நடைமுறைகளைப் பின்பற்றியும் இப்புனித வாரத்தைக் கொண்டாடுகின்றனர். 

இம்முறை இஸ்லாமிய நாட்காட்டியின் படி மே மாதம் 30ஆம் திகதி ஹஜ் பெருநாளின் முக்கிய தினம் அமையும் எனத் தெரிகிறது. வெசாக் வாரம் மே 27 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதன்படி வெசாக் வார காலப்பகுதிக்குள் இந்தத் தியாகத் திருநாள் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

பௌத்த தர்மத்தின் படி தம்மபதத்தில் அனைத்து உயிர்களும் தண்டனைக்கும் மரணத்திற்கும் அஞ்சுகின்றன. எனவே தன்னையே உதாரணமாகக் கொண்டு பிற உயிர்களைக் கொல்லவோ அல்லது கொலை செய்யத் தூண்டவோ கூடாது என்பதே அதன் பொருளாகும். 

தற்போதுள்ள சர்வதேச அரசியல் சூழலில், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், இணையத்தளங்கள் வாயிலாக மத ரீதியான கருத்துக்கள் ஆவேசமாகப் பரிமாறப்படுகின்றன.  இவ்வாறான பின்புலத்தில் உள்நாட்டில் இத்தகைய செயற்பாடுகள் பாரிய மோதல்களுக்கு வித்திடக்கூடும். 

எனவே, வக்பு சபை மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் இணைந்து அரசாங்கம் இது குறித்து உரிய ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும். மதச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டிய அதேவேளை, நாட்டின் அமைதியைப் பேணும் வகையில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் எழும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.  

திறமையற்ற அரசாங்கம்; ரணிலின் அதிகாரிகளால்தான் நாடு ஓடுகிறது!

0

செய்தித் தொகுப்பு: ஜுட் சமந்த

“அதிகாரிகளை நியமிக்கத் தெரியாத அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வி” – பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் குற்றச்சாட்டு

சிலாபம்: தற்போதைய அரசாங்கத்திற்கு தகுதியான அதிகாரிகளை நியமிக்கத் தெரியாத காரணத்தினால், அவர்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியடைந்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

சிலாபம் – மாதம்பே பகுதியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் திட்டமிடல் இன்மை குறித்து விமர்சித்தார்:

“தேர்தலுக்கு முன்னதாக மேடைகளில் கத்தியவர்கள், மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்குவோம் என்று கூறினார்கள். ஆனால், ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் நான் நந்தலால் அவர்களிடம் ‘எப்போது பதவி விலகுகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான் போகவில்லை அமைச்சரே, ஜனாதிபதி என்னை தொலைபேசியில் அழைத்து தொடர்ந்து பதவியில் இருக்குமாறு கூறினார்’ எனப் பதிலளித்தார்.”

இதன் மூலம், ரணில் விக்ரமசிங்க நியமித்த அதிகாரிகளைக் கொண்டே தற்போதைய அரசாங்கம் இன்றும் இயங்கி வருவது தெளிவாகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் நிதியமைச்சை ‘இதயம்’ என வர்ணித்த பாராளுமன்ற உறுப்பினர், இதயம் இயங்காத போது முழு உடலும் வீழ்ந்துவிடும் என்றும், ரணில் விக்ரமசிங்க விட்டுச் சென்ற பணத்தை வைத்தே இந்த அரசாங்கம் தற்போது ஓடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னைய காலங்களில் திருட்டுச் சம்பவங்கள் இரவில் இடம்பெற்றதாகவும், ஆனால் தற்போது பட்டப்பகலிலேயே மணல் கொள்ளை உள்ளிட்ட திருட்டுகள் பகிரங்கமாக நடப்பதாகவும் அவர் சாடினார். இவற்றைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் அவர் அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்றம் மற்றும் மே தினக் கூட்டம்

பாராளுமன்றத்தில் உள்ள 159 உறுப்பினர்களும் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் கையை உயர்த்துகிறார்கள் என்றும், பின்னர் ஜனாதிபதி வந்து அவற்றை சரிசெய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மே தினக் கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்: “மே தினத்தில் வெசாக் பௌர்ணமி என்பதால் கூட்டத்தை நடத்த முடியாது எனச் சிலர் கூறுகின்றனர். ஜே.வி.பி-யினர் எப்போது பன்சலைக்குச் சென்றார்கள் அல்லது எப்போது சில எடுத்தார்கள் என்று கேட்க விரும்புகிறேன். மதம் பாராது ஆட்சியைக் கைப்பற்றிய அவர்கள், மதம் குறித்துப் பேசுவதற்கு முன்னரே வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள். எனவேதான் நாங்கள் மே தினப் பேரணியை நடத்தத் தீர்மானித்தோம்.”

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன, புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் நிமல் பமுனுஆராச்சி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு!

0

அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் சம்பவத்தை அடுத்து அதிபர் டிரம்ப் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நேற்று இரவு நடைபெற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் வருடாந்திர விருந்து நிகழ்ச்சியில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் உருவானது.

இதையடுத்து பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துணை அதிபர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்தச் சம்பவத்தில் அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அதிபர் ட்ரம்ப், பாதுகாப்புப் படையினரின் துரிதமான மற்றும் துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டியதோடு, “நிகழ்ச்சி தொடரட்டும்” என்று தான் பரிந்துரைத்த போதிலும், பாதுகாப்பு நெறிமுறைகளின்படி அதிகாரிகள் நிகழ்ச்சி நிரலை மாற்றியமைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த அவர், விரைவில் வெள்ளை மாளிகையில் இருந்து செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகவும், ரத்து செய்யப்பட்ட இந்த விருந்து நிகழ்ச்சி அடுத்த 30 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

7 வயது சிறுமியை சீரழித்த காமக் கொடூரன் – மாதம்பையில் சம்பவம்!

0

குளிக்க அழைத்துச் செல்வதாகக் கூறி 7 வயதுடைய தனது உறவினரான சிறுமியை பாலியல் துஷ்பிரயோம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மாதம்பே பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ராகல – லுணுகலை தோட்டத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் காக்கபள்ளிய – வாலஹேன பிரதேசத்தில் உள்ள தென்னை நார் மில் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும் அதே மில்லில் பணியாற்றுபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 24ஆம் திகதி மாலை, குறித்த சிறுமியையும் அவரது சகோதரனையும் கடைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சந்தேகநபர் அழைத்துச் சென்றுள்ளார். எனினும், சிறிது நேரத்தின் பின்னர் சிறுவன் மட்டும் தனியாக வீடு திரும்பியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாய், மகளைத் தேடிச் சென்றுள்ளார்.

அப்போது, வீட்டின் அருகே உள்ள கால்வாய்க்குப் பக்கத்தில் சிறுமி அரைவாசி ஆடைகளுடன் இருப்பதைக் கண்ட தாய், அது குறித்து விசாரித்துள்ளார். இதன்போது, சந்தேகநபர் தனக்கு இழைத்த அநீதி குறித்து சிறுமி தாயிடம் கூறியுள்ளார்.

சம்பவம் அம்பலமானதும் அங்கிருந்து தப்பியோட முயன்ற சந்தேகநபரை, அக்கம் பக்கத்தினர் பிடித்து மாதம்பே பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். மாதம்பே பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தித் தொகுப்பு: ஜுட் சமந்த