Friday, September 12, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 25

புதிய இடத்திற்கு மாற்றப்பட்ட முக்கிய அலுவலகங்கள்!

0

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் 11 பிரிவுகள் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

மெஹெவர பியச கட்டடத் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் சில பிரிவுகள் சிமந்த்ரா கட்டட வளாகத்திற்கு இடமாற்றம் செய்யும் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு வெளிநாட்டு அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹெமசந்திரா தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.

அதன்படி 11 பிரிவுகள் தலைமை அலுவலகத்திற்கு அருகில் உள்ள பத்தரமுல்ல, கனஹேன, இல. 465 என்ற (சிமந்திரா கட்டடத்தில்) நிறுவப்பட்டது.

அவ்வாறே நிறுவப்பட்ட பிரிவுகள்;

1.நலன்புரிப் பிரிவு
2.ஒருங்கிணைப்புப பிரிவு
3.வெளிநாட்டு உறவுகள் II பிரிவு
4. வணிக சிக்கல்களை தீர்க்கும் பிரிவு
5.நிறுவன மற்றும் தொழில் பயிற்சிப் பிரிவு
6.ஆய்வு பிரிவு
7.சந்தைப்படுத்தல் பிரிவு
8.பிரதி பொது முகாமையாளர் (சமூக அபிவிருத்தி)
9.சிரேஷ்ட முகாமையாளர் (சமூக அபிவிருத்தி)
10.IM Japan பிரிவு

அதன்படி இன்று (01) முதல் மேற்படி பிரிவுகளின் சேவைகள் புதிய இடத்தில் பெற்றுக் கொள்வதற்கு புலம்பெயர் சமூகத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் நியமனத்துடன் அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் அரசியல் தலையீடுகள் இல்லாததால், வளர்ந்த நாடுகள் இலங்கைத் தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு வாய்ப்புகளைத் திறந்து வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு அரசாங்கமாக நாங்கள் ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேலுடன் மட்டுமே வெளிநாட்டு வேலைகளை வழங்க தலையிடுகிறோம். புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகளைப் பெறுவதற்காக இந்த மூன்று நாடுகளுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஜப்பானில் இருந்து பல சிறப்பு பிரதிநிதிகள் கடந்த சில நாட்களில் எங்களுடன் கலந்துரையாடினர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்கா வரி குறைப்பு குறித்து விளக்கம்!

0

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி விகிதத்தை 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் அமெரிக்கா குறைத்துள்ளது. 

இந்த புதிய கட்டண விகிதங்கள் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 

இது தொடர்பான விடயங்களை விளக்கி, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும கூறுகையில், 

“இந்த சவால்களுடன், புதிய வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. இரு நாடுகளும்… எதிர்காலத்தில் இதன் மூலம் நமக்குத் தேவையான பலன்களைப் பெறப் போகின்றன என்பதை இது காட்டுகிறது. நாடாக இதை ஒரு சிறந்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம். இந்த கலந்துரையாடங்களை தொடர நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார். 

இதற்கிடையில், அமெரிக்காவால் நாட்டின் மீது விதிக்கப்பட்ட வரி விகிதத்தை 20% ஆகக் குறைப்பது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, X கணக்கில் குறிப்பு ஒன்றை இட்டுள்ளார்.

இந்தியா மீது 25% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் மீதும் இதேபோன்ற 20% வரி விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். 

நமது ஏற்றுமதியாளர்களுக்கு உண்மையான நன்மையை வழங்க, அந்த விகிதத்தை 15% ஆகக் குறைக்க அமெரிக்காவுடன் மேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்துகிறார்.

புத்தளம் மாவட்டத்திற்கு 250 மில்லியன் ஒதுக்கீடு!

0

புத்தளம் மாவட்டத்தின் அரச மற்றும் தனியார் போக்குவரத்து, வீதி மறுசீரமைப்பு, ரயில் கடவை மற்றும் ரயில் போக்குவரத்து தொடர்பான குறைபாடுகள் பற்றிய விஷேட கலந்துரையாடல் இன்று புத்தளம் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த விஷேட சந்திப்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும் நாடாளுமன்ற அவைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க கலந்துகொண்டார்.

இதில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள மூன்று பஸ் டிப்போக்கள் தொடர்பாகவும், அவற்றின் செயற்பாடுகள் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

புத்தளம் பஸ் டிப்போவுக்கு சொந்தமாக 63 பஸ்கள் இருந்தபோதிலும், அவற்றில் 48 பஸ்களே இயங்கும் நிலையில் இருப்பதாக புத்தளம் டிப்போ தலைவர் சுட்டிக்காட்டியதுடன், மேலதிகமாக 5 புதிய பஸ்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை புத்தளம் தொடக்கம் அட்டவில்லு, மயிலங்குளம், மகாகும்புக்கடவல, இஹலபுளியங்குளம மற்றும் இங்கினிமிட்டியாவ பகுதிகளுக்கும் புதிதாக பஸ் சேவை இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் புத்தளம் டிப்போவில் உள்ள கட்டிடங்கள் சுமார் 100 வருடங்கள் பழமையானவையும் எனவும், அவைகள் மீள் புனர்நிர்மாணம் செய்யப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

புத்தளம் டிப்போ குறித்த குறைபாடுகள் தொடர்பிலும், அதன் முகாமைத்துவம் தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பஸ் கொள்வனவு தொடக்கம், சேதமடைந்த இலங்கை போக்குவரத்து பஸ்களை திருத்துதல் அனைத்துமே மக்களின் வரிப்பணத்தில் இடம்பெறுவதாகவும், மக்களுக்கு நியாமான சேவைகள் இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் சேவையில் உள்ள அனைத்து பஸ்களுக்கும் GPS இணைப்பை உடனடியாக பொருத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான நெடுஞ்சாலையில் காணப்படும் குறைபாடுகளை இனம்காண நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பாதுகாப்பற்ற பாதைகள் மற்றும் ரயில் கடவைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

பாதை திருத்தப்பணி மற்றும் பாலங்கள் புனரமைப்பிற்காக சுமார் 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், திணைக்கள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், பொலிஸ் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சவூதி மீது இவ்வளவு விமர்சனமா?

விமர்சிக்கப்பட வேண்டியது சவூதியா?

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

சமகாலத்தில் உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் நிகழ்வு பலஸ்தீன விவகாரமாகும். மனிதநேயம் கொண்டவர்களைக் கலங்கடித்துக் கொண்டிருக்கும் நிகழ்வு காஸாவின் அழுகுரலாகும்.

பலஸ்தீன விவகாரம் இன்று நேற்று ஆரம்பமானதல்ல. கள்ளத்தனமாக இஸ்ரேல் என்ற நாடு தோற்றுவிக்கப்பட்ட பின்னணியிலிருந்து ஆரம்பமானது.

அன்று அரபு நாடுகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கும், அக்கிரமத்திற்கும் எதிராகப் போரிட்டு பல இழப்புகளைச் சந்தித்ததை மறந்து விட முடியாது.

கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் காரணமாக இன்றைய சூழலை எவ்வாறு கையாள்வது? என்பதில் அரபுலகு கண்ணுங்கருத்துமாகச் செயற்படுவதைக் காணலாம்.

இச்சூழ்நிலையில் பலஸ்தீன விவகாரத்தில் சவூதி அரேபியாவை பலர் விமர்சனம் செய்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இஸ்லாமிய வரலாற்றுடன் பின்னிணைப் பிணைந்துள்ளதால் சவூதி அரேபியா முஸ்லிம்களின் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகத் திகழ்கின்றது. இரு புனிதஸ்தலங்கள் அமைந்திருப்பதோடு, இஸ்லாம் வளர்ந்த பிரதேசம், தங்களது உயிரிலும் மேலாக நேசிக்கும் நபி(ஸல்) அவர்கள் பிறந்து, வாழ்ந்த பிரதேசம் என்ற அடிப்படையில் உலக முஸ்லிம்களால் நேசிக்கப்படும் தேசமாக சவூதி அரேபியா உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

உலக நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் சவூதி அரேபியா என்ற நாடு உலக முஸ்லிம்களின் விவகாரத்தில் கரிசணைகாட்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு சவூதி அரேபியா மீது கொண்டுள்ள நம்பிக்கை முஸ்லிம் விரோத சக்திகளுக்கு அடிக்கடி எரிச்சலைக் கொடுத்து வருகின்றது.

அதேநேரம், சவூதி தன்னாலான அனைத்து உதவிகளையும் ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளுக்கும் தொடராக வழங்கி வருவதைக் காணலாம்.

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இலங்கை போன்ற நாடுகளிலும் பல அபிவிருத்தித்திட்டங்களுக்கு பெருமளவு நிதிகளை வழங்கி வருவதும், அங்கு வாழும் முஸ்லிம்களின் விவகாரத்தில் கரிசணையோடு செயற்படுவதும், பிரச்சினைகள் வரும் போது இராஜதந்திர ரீதியாக அழுத்தங்களைக்கொடுத்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதையும் கடந்தகால நிகழ்வுகளிலிருந்து காணலாம்.

சில நாடுகளில் கொடுமைகளை அனுபவித்த முஸ்லிம்களுக்கு தன்னுடைய நாட்டுக்குள் தஞ்சம் கொடுத்து சவூதி வாழ வைத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

சவூதி அரேபியாவில் காணப்படும் எண்ணெய் வளம் உலகில் முக்கியத்துவம் பெற்றதாகும். சவூதியோடு உறவைப் பலப்படுத்திக்கொள்ளவே உலக நாடுகள் விரும்புகின்றன. முஸ்லிம் நாடுகளில் பலமான நாடாக சவூதி விளங்குவதாலும் முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பிலும் முஸ்லிம்களின் விவகாரங்களில் தலையீடு செய்வதிலும் அதிக பங்கு சவூதி அரேபியாவிற்கே இருக்கின்றது.

சவூதியைப் பலவீனப்படுத்த வேண்டுமென்பதில் சவூதியின் வளர்ச்சியைப்பிடிக்காத முஸ்லிம் விரோத சக்திகள் சவூதிக்கெதிரான விமர்சனங்களை பூதகரமாக்கி மக்கள் மயப்படுத்துவதில் அன்று தொட்டு இன்று வரை முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

சவூதியை அழிப்பதற்கு முதல், உலக முஸ்லிம்களின் உள்ளத்திலும் சவூதி அரேபியாவின் ஆட்சியாளர்களுக்கெதிரான மனோநிலையினை ஏற்படுத்தி வெறுப்பை உருவாக்கி ஏனைய நாட்டிற்குள் அரபு வசந்தம் என்ற போர்வையில் உள்நுழைந்து அந்த நாடுகளை நாசம் செய்தது போல் சவூதியையும் நாசம் செய்து புனிதஸ்தலங்களையும் துவம்சம் செய்ய வேண்டுமென்ற எண்ணமாகும்.

பல முறை பல முயற்சிகள் நடந்தும் இறைவன் அருளால் அவை முறியடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

தற்போது நீண்ட நாட்களாக பலஸ்தீனத்தின் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலும் காஸாவின் அழுகுரல்களும் முஸ்லிம் உம்மத்தை மாத்திரமின்றி, மனிதநேயமிக்க மக்களையும் நாடுகளையும் உலுக்கியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் கொதித்துப்போயிருக்கும் மக்களின் உணர்வுகளைத்தூண்டி விட்டு சவூதி அரேபியாவுக்கெதிராக திருப்பி விட வேண்டுமென்ற குறிக்கோளில் இஸ்லாத்தின் எதிரிகள் மிகக்கச்சிதமாக ஊடகங்களைப்பயன்படுத்தி உண்மைக்குப்புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதோடு, பலஸ்தீன விவகாரத்தில் அன்று தொடக்கம் இன்று வரை சவூதி மேற்கொண்டு வரும் அத்தனை முயற்சிகளையும் மூடிமறைத்துச் செயற்படுவதைப் பார்க்கலாம்.

முஸ்லிம்களோடு நட்புறவாடி நயவஞ்சகத்தால் வீழ்த்த நினைக்கும் சில நாடுகள் தங்களை முஸ்லிம்களின் காவலனாக காட்டுவதற்கும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால், உண்மையில் பலஸ்தீன விவகாரம் உட்பட பல முஸ்லிம் நாடுகளுக்கும், முஸ்லிம்கள் வாழும் நாடுகளுக்கும் தனது செல்வத்திலிருந்து அதிகளவான கொடை கொடுப்பதும், அவர்களின் தேவைகளைப்பூர்த்தி செய்வதிலும், அவர்களுக்கான பிரச்சினைகளின் போது நேரடியாகவும் மறைமுகமாகவும் இராஜதந்திர ரீதியில் தலையீடுகளைச் செய்வதிலும் முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்து சர்வதேச ரீதியாக அழுத்தங்களை உருவாக்கி சாதிப்பதிலும் சவூதிக்கு முதன்மை இடமிருக்கிறது. எனவே தான் சவூதியின் பலத்தை குறைப்பதற்கும் பல சக்திகள் திரைமறைவில் காய் நகர்த்துகின்றன.

சவூதி அரேபியா நாடு என்ற அடிப்படையில் தனது குடிமக்களின் எதிர்காலம் தொடர்பாக அதிக கரிசனை காட்டுவதோடு, உலகில் பரந்து வாழும் முஸ்லிம்கள் தொடர்பிலும் கரிசனை காட்டுகிறது. உலக விவகாரங்களில் வேறு நாட்டு விடயங்களில் தலையீடு செய்யும் போது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயற்பட முடியாதென்பது நிதர்சனமான உண்மை.

எந்த நாடும் வேறு நாடுகள் தங்கள் விடயத்தில் தலையீடு செய்வதை விரும்பாது. சர்வதேச ரீதியாகவும் தடைகள் இருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் குறித்த விவகாரங்களில் தனது நட்பு நாடுகளின் ஆதரவுகளைப் பெற்று சர்வதேச அமைப்புகளின் கவனத்தை குறித்த விடயங்களில் திருப்பி இராஜதந்திர ரீதியான நகர்வுகளினூடாகத்தான் சாதிக்க முடியும்.

பலஸ்தீன விவகாரத்திலும் சவூதியின் செயற்பாடுகளும் பலமான நகர்வுகளாகவே இருக்கின்றது. ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் மனோநிலைக்கு வந்திருப்பதன் பின்னணியில் சவூதியின் வேலைத்திட்டம் இருக்கிறது. பலஸ்தீன மீளெழுச்சியில் நிதி ரீதியாக பெரும் பங்களிப்பையும் தொடராக வழங்கி வருகிறது.

இவ்வாறான மனிதாபிமான உதவிகளை உறவுகளுக்காக வழங்கி வரும் சவூதியின் பணிகளைக் கொச்சைப்படுத்தி விமர்சனம் என்ற ரீதியில் மோசமாக விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல.

உணர்வுகளுக்கு அடிமைப்பட்ட சமூகமாக நாம் இருந்து விட்டு, விமர்சித்து விட்டுப்போக முடியாது. இவ்வாறான பிழையான விமர்சனங்கள் மற்றவர்களின் மனங்களில் தப்பான எண்ணங்களைத் தோற்றுவிப்பதோடு, எதிரிகள் தங்களின் இலக்கை எம்மூடாக நிறைவேற்றிக் கொள்ளவும் இடங்கொடுக்கக்கூடாது.

ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள், ஒவ்வொருவரின் பொறுப்புகள் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என்பதை நாம் நம்பியிருக்கிறோம்.

இஸ்லாம் இவ்வாறான விவகாரங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென வழிகாட்டியிருக்கத்தக்கதாக சில உலமாக்களும் ஏனையவர்களும் தவறான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதும் ஆரோக்கியமல்ல. அரபுமொழியை அறியாதவர்கள் என்ன நடக்கிறது எனப்புரியாதவர்கள் ஊடகங்களின் தவறான கதைகளை நம்பி விமர்சனம் செய்வது ஆரோக்கியமல்ல என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்னும் சில உலமாக்கள், அறிஞர்கள் பலஸ்தீன விவகாரம் உட்பட சவூதியின் செயற்பாடுகளையும் அதன் நியாயங்களையும் உண்மைத்தன்மையை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தவறான புரிதல் ஆபத்தானது என்பதையும் யார் உண்மையான முஸ்லிம்களின் நண்பர்? யார் இரட்டை வேடம் போட்டு முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அறியாமையின் காரணத்தினால் நன்மை செய்வோருக்கெதிராக மற்றவர்கள் பாவம் செய்து விடக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் இவ்விடயங்களைப் பதிவுசெய்துகொள்கிறார்கள்.

நமக்குத் தெரியாத விடயத்தில் போலியான தகவல்களை நம்பி உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதை விடுத்து நம்மிடமிருக்கும் பலமான ஆயுதமான துஆவை பலஸ்தீன மக்களுக்காகப் பயன்படுத்த வேண்டும்.

சவூதியின் ஆட்சியாளர்கள் இன்னும் இவ்விடயங்களில் கரிசனை காட்டுவதற்கு நல்லெண்ணங்களோடு பிரார்த்தனை செய்வோம். அதுவே மிக ஆரோக்கியமான செயலாக இருக்கும்.

சவூதி அரேபியா தன்னாலான தனியான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் அதே வேளை, சவூதி அரேபியாவை தலைமையாக, தளமாகக் கொண்டியங்கும் பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான “இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC)” காசா-இஸ்ரேல் மோதல் தொடர்பான விடயங்களை தீவிரமாகக் கையாண்டுவருகிறது.

இஸ்ரேலைக் கடுமையாக கண்டித்து வருவதுடன், காஸாவில் இடம்பெறும் இஸ்ரேலிய நடவடிக்கைகளை “போர்க்குற்றங்கள்” என்றும் சர்வதேச சட்ட மீறல்கள் என்றும் முத்திரை குத்தி வருகின்றது.

அத்தோடு, கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீனத்தின் தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்தீன் மலர வேண்டும். இடம்பெயர்வை நிராகரித்தல் மற்றும் இஸ்ரேலுக்கெதிரான தென்னாப்பிரிக்காவின் ICJ இனப்படுகொலை வழக்கை ஆதரித்தும் வருகின்றது.

அத்துடன், மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருவதுடன், மனிதாபிமான உதவி வழங்குமாறு ஏனைய நாடுகளையும் வலியுறுத்துதல், காஸாவின் முற்றுகையை நீக்குதல் மற்றும் பாலஸ்தீன அதிகார சபை நிர்வாகத்தின் கீழான காசாவிற்கு $53 பில்லியன் மதிப்புள்ள அரபு மறுகட்டமைப்புத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளல், அத்துடன், இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்து அவசரக்கூட்டங்களை நடத்துதல் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் செயலற்ற தன்மையை விமர்சித்தல் என கூட்டாகவும் தனியாகவும் சவூதி அரேபியா பல்வேறு பணிகளை பல சவால்களை எதிர்கொண்டு மேற்கொண்டு வருவதை மறுதலிக்க முடியாது.

அத்துடன், மத்திய கிழக்கிலுள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியம் (UAE), கத்தார் போன்ற ஏனைய நாடுகளும் தம்மாலான பல்வேறு இராஜதந்திர, மனிதாபிமான முயற்சிகளை, உதவிகளை முன்னெடுத்தே வருகின்றன.

இது அரபு நாடுகளுக்கு வக்காலத்து வாங்கி துதிபாடுவதாக அல்லாமல் யதார்த்தங்களைப் புரிந்து கொள்வதற்கான பதிவாகும்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் கோர விபத்து!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று 31.07.2025 காலை இடம்பெற்ற விபத்தொன்றில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த்துள்ளார்.

கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப்பணி!

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில், தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில், ஏ 35 பிரதான வீதியில் அருகே தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிசார் இன்றைய தினம் 31.07.2025 கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் அகழ்வுப்பணி இடம்பெற்றது.

பொலிசார், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் குறித்த அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்ட போது, எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணியை நீதவான் இடைநிறுத்தினார்.

இதேவேளை அண்மையில் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் தகவலுக்கமைய நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள், ரி- 56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1000 அஞ்சல் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம்!

0

1000 அஞ்சல் உதவியாளர்களை நிரந்தர சேவையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1000 புதிய அஞ்சல் உதவியாளர்களை பதிவு செய்வதற்கு ஒப்புதல்..

இலங்கை தபால் திணைக்களத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மத்திய தபால் பரிமாற்ற சேவைகளை நேற்று (29) பிற்பகல் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ பார்வையிட்டார். ஆய்வைத் தொடர்ந்து, தற்போதைய செயல்பாடுகள், எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து மத்திய தபால் பரிமாற்றத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

நாட்டை ஒரு வலுவான அடித்தளத்தில் நிலைநிறுத்துவது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக இருப்பதால், அந்த நோக்கத்தின் கீழ் தபால் திணைக்களத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் தெரிவித்தார். தபால் திணைக்களத்தின் பொதுவான பிரச்சினைகளாக இருக்கும் பணியாளர் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து சிக்கல்களைத் தீர்க்க ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 1000 அஞ்சல் உதவியாளர்களின் சேவைகளை நிரந்தரமாக்குவதற்கும், 1000 புதிய அஞ்சல் உதவியாளர்களை பதிவு செய்வதற்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.. அதன்படி, சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்புகளுக்கு தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அஞ்சல் சேவை மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களுக்கு வருவாய் இலக்குகளை வழங்குதல், புதிய சேவைகளை அறிமுகப்படுத்துதல், புதிய அஞ்சல் அலுவலகங்களைத் திறத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சீன மக்கள் குடியரசின் நன்கொடையாகப் பெறப்பட்ட மத்திய அஞ்சல் பரிமாற்ற பிரதான கட்டிடத்தை நவீனமயமாக்குவதற்கும், நவீன தொழில்நுட்பத்துடன் அதை வலுப்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் சீனத் தூதருடன் கலந்துரையாட விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய அஞ்சல் பரிமாற்ற சேவையானது பல சிரமங்கள் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு மத்தியில் செயல்பட்டு வருவதாகஅமைச்சர் கூறினார். அதிகாரிகளுடன் கலந்துரையாடி அஞ்சல் சேவையை படிப்படியாகக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என்றும், அஞ்சல் சேவைக்குத் தேவையான மதிப்பு, மரியாதை மற்றும் சரியான இடத்தை வழங்குவதே தனது நோக்கம் என்றும், அதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

நாட்டிற்கு வலுவான பொது சேவை தேவை என்றும், நாட்டின் வருமானம் குறைவாக இருப்பதால், பொருளாதார வளர்ச்சியுடன் ஆட்சேர்ப்பை அதிகரிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், பொது சேவையில் முறைசாரா ஆட்சேர்ப்பு முறை மேம்படுத்தப்பட்டு வருவதாலும், அஞ்சல் துறையிலும் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுவதாலும், அனைவரும் அரசாங்கத்தின் புதிய திட்டத்தைப் புரிந்துகொண்டு புரிதலுடன் இணைந்து செயல்பட்டு அஞ்சல் சேவையை மேம்படுத்த கைகோர்க்க வேண்டும் என்றும் மேலும் வலியுறுத்தினார்.

மத்திய அஞ்சல் பரிமாற்றத்தின் மாதாந்திர வருமானம் சுமார் ரூ. 277 மில்லியன் ஆகும், மேலும் அந்தத் தொகையில் சுமார் ரூ. 200 மில்லியன் கடித பரிமாற்றத்தின் மூலம் வருமானம் ஈட்டப்படுகிறது. தற்போதைய வருமான ஆதாரங்கள் கூரியர் மற்றும் பார்சல் சேவைகள் மற்றும் மின்னஞ்சல் சேவைகள் போன்ற நவீன முறைகள் என்பதால், நவீன அஞ்சல் சேவையை நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த தேவையான பின்னணியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அஞ்சல் பரிமாற்றத்தின் கண்காணிப்பாளர் திருமதி மனோஜனி நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு அஞ்சல் பிரிவு, பார்சல் பிரிவு (வெளிநாட்டு), சர்வதேச அஞ்சல், ஸ்கேன் பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட மத்திய அஞ்சல் பரிமாற்றத்தின் பல துறைகளை அமைச்சர் ஆய்வு செய்தார், மேலும் பணியில் உள்ள ஊழியர்களின் பிரச்சினைகள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைக் கேட்கவும் நடவடிக்கை எடுத்தார்.

புதுமையான மற்றும் பன்முக சேவைகளை வழங்கி தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் இலங்கை தபால் துறையின் மத்திய தபால் பரிமாற்றம், தற்போது ஒரு புதிய திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது, இது ஒரு சிறந்த சூழலில் வாடிக்கையாளர் திருப்தியை அதிகப்படுத்துவதன் மூலமும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், புதுமையான, திறமையான, நம்பகமான சேவையை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்படடது.

தபால் அதிபர் ஜெனரல் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார, மத்திய தபால் பரிமாற்றத்தின் கண்காணிப்பாளர் மனோஜனி நாணயக்கார, துணை தபால் அதிபர்கள் மத்திய தபால் பரிமாற்றத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஏற்றுமதியை அதிகரிக்காமல் வருமானம் உயராது!

ஏற்றுமதியை அதிகரிக்காமல் வருமானத்தை உயர்த்த முடியாது. ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டுமானால், வடக்கு மாகாணத்தின் மிகச்சிறந்த வளமாக உள்ள விவசாயம் மற்றும் கடற்றொழிலின் உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும். தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவதன் ஊடாக எமது வேலைவாய்ப்பு பிரச்சினையையும் தீர்க்கக் கூடியதாக இருக்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், றொட்டரி – யாழ்ப்பாணத்துடன் இணைந்து வட மாகாணத்தில் ஏற்றுமதிக்குத் தயாரான உற்பத்தியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அரியாலை ‘ஜே ஹெஸ்ட் ஹோட்டலில்’ இன்று புதன்கிழமை காலை (30.07.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர்,

எமது பிராந்தியத்தின் ஏற்றுமதி சுற்றுச்சூழலை வலுப்படுத்த ஒரு பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வையுடன் ஒன்றிணைந்த இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், யாழ்ப்பாண மேலாளர்கள் மன்றம், வடக்கு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வட மாகாணம், மனிதத் திறமை, விவசாய பன்முகத்தன்மை, பாரம்பரிய கைவினைத்திறன் மற்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் தளத்தால் நிறைந்துள்ளது. இருப்பினும், சந்தை அணுகல், தரச் சான்றிதழ் மற்றும் சிறு உற்பத்தியாளர்களை வெற்றிகரமான ஏற்றுமதியாளர்களாக மாற்றக்கூடிய வெளிப்பாடு ஆகியவற்றில் நாங்கள் நீண்ட காலமாக சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.

இந்த முயற்சி ஒரு மாற்றத்தக்க வாய்ப்பைக் குறிக்கிறது. இந்த வியாபாரத்திலிருந்து வியாபாரம் (Business 2 Business (B2B) மூலம் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், ஆதரவு நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்களை ஒன்றிணைப்பதன் மூலம், நாங்கள் பின்வரும் அடிப்படைகளை அமைத்துக்கொடுக்க முயல்கின்றோம்.

நேரடி வணிக இணைப்புகள், அறிவுப் பகிர்வு மற்றும் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஏற்றுமதி – தயார்நிலை ஆதரவு.

இத்தகைய இலக்கு தலையீடுகள் தற்போதுள்ள இடைவெளிகளைக் குறைக்கும் மற்றும் வடக்கில் உற்பத்தியாளர்கள் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்ய, செயற்பாடுகளை அதிகரிக்க மற்றும் அவர்களின் சந்தைகளை பல்வகைப்படுத்த உதவும்.

இது பொருட்களை ஏற்றுமதி செய்வது மட்டுமல்ல – இது மீண்டும் கட்டியெழுப்பவும் செழிக்கவும் உறுதிபூண்டுள்ள ஒரு பிராந்தியத்திலிருந்து நம்பிக்கை, புதுமை மற்றும் மீள்தன்மையை ஏற்றுமதி செய்வது பற்றியதாகவும் அமைகின்றது.

விவசாய வணிகம் முதல் கடல்வளம் வரை, பாரம்பரிய கைவினைப்பொருட்கள் முதல் தொழில்நுட்ப சேவைகள் வரை, நமது உள்ளூர் தொழில்களின் வலிமையை பயன்படுத்திக்கொள்ளுமாறு வருகைதரும் அனைத்து ஏற்றுமதியாளர்களையும் முதலீட்டாளர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வழிகாட்டுதல், நிபுணத்துவம் மற்றும் தொடர்பாடல்கள் மூலம், வடக்கில் ஒரு துடிப்பான ஏற்றுமதி சமூகத்தை உருவாக்க முடியும்.

இந்தச் செயற்பாட்டுக்கு எமது மாகாணசபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என உறுதிப்பட இங்கு நான் தெரிவிக்கின்றேன். தடைகளை நீக்கவும், உள்கட்டமைப்பை வழங்கவும், ஒரு உகந்த கொள்கை சூழலை உருவாக்கவும் தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் நாங்கள் கைகோர்த்து செயற்படுவோம்.

தற்போதைய அரசாங்கம் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கியே கூடுதல் கவனம் செலுத்துகின்றது. அவ்வாறானதொரு சாதகமான சந்தர்ப்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சாதாரண ஒருவரும் எந்தவொரு தடைகளும இல்லாமல் ஏற்றுமதியை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக அதற்கான பொறிமுறையை உருவாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம், என ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.

நிகழ்வின் ஆரம்பத்தைத் தொடர்ந்து ஏற்றுமதியாளர்களுக்கான நூல் ஒன்றும் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், தேசிய ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் றொட்டரி கழகத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஆளுநரும் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

AI தொழில்நுட்பத்தினால் பேராபத்து!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சியானது பாரியளவு ஆபத்தை ஏற்படுத்தும் என செயற்கை நுண்ணறிவின் தந்தை என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஷிண்டன் எச்சரித்துள்ளார். 

one decision பொட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் அதனை தெரிவித்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

AI தொழில்நுட்பத்தால் ஏற்படவிருக்கும் மிக பெரிய ஆபத்துக்களை மென்பொருள் நிறுவனங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார். 

மேலும், AI யினால் ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து அவர்கள் நன்கு அறிந்திருந்த போதிலும், அவற்றை வெளியுலகிற்கு அறியப்படுத்தாது மறைத்துவருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

0

2025 ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நேற்று (29) வரையான காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 122,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

2025 ஜனவரி 1 முதல் நேற்று (29) வரையான காலப்பகுதியில் 928,787 கிலோ ஹெராயின், 1,396,709 கிலோ ஐஸ், 11,192,823 கிலோ கஞ்சா, 27,836 கிலோ கொக்கெய்ன் மற்றும் 381,428 கிலோ ஹாஷிஷ் ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று (29) முழுவதும் மேலும் பல சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  

இந்த நடவடிக்கைக்காக இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகள் இணைந்துக்கொண்டுள்ளன.  

சோதனை நடவடிக்கையின் போது, 25,111 பேர் சோதனை செய்யப்பட்டனர். மேலும் 7,734 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 10,128 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.  

அதன்படி, இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றங்களுக்காக 948 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த சோதனைகளின் போது குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 13 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்தோடு, இந்த சோதனை நடவடிக்கையின் போது மூன்று சட்டவிரோத துப்பாக்கிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கைக்காக பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை உறுப்பினர்கள் உட்பட 6,695இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பங்கேற்றுள்ளனர்.