Sunday, June 14, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 26

உழவியந்திரம் கவிழ்ந்து 29 வயது இளம் குடும்பஸ்தர் பலி!

0

பாஸ்கரன் கதீசன் – வவுனியா

வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்று உழவியந்திரம் கவிழ்ந்து இடம்பெற்ற கோர விபத்தில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் குறித்த நபர் தனது அத்தியாவசியத் தேவை ஒன்றின் நிமித்தம் உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது, எதிர்பாராத விதமாக உழவியந்திரம் கட்டுப்பாட்டை இழந்து திடீரெனத் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின்போது உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்ற சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த புளியங்குளம் பொலிஸார், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் மதியாமடு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம் மாவட்ட மக்களுக்கு 318 மில்லியன் ரூபா இழப்பீடு!

0

ஜூட் சமந்த

புத்தளம்: “டிட்வா” (Ditva) சூறாவளியினால் புத்தளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு அண்மையில் புத்தளம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரச நிர்வாக அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பயனாளிகளுக்கு மொத்தமாக 318 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.

இச்சூறாவளியின் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் 07 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டனர். இதில் அதிகப்படியான பாதிப்புகள் கருவலாகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவில் பதிவாகியுள்ளன. மாவட்ட ரீதியாக:

  • 150 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.
  • 29 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
  • 49 தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு தொழில்துறைகள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக முதற்கட்டமாக பின்வரும் இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டன:

  • முழுமையாகச் சேதமடைந்த வீடுகளை மீளக் கட்டியெழுப்ப முதற்கட்டமாக தலா 20 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
  • பகுதியளவில் சேதமடைந்த வீடுகளைப் புனரமைக்க தலா 30 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
  • பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முதற்கட்டமாக தலா 20 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன, அரசாங்கம் கடந்த ஒரு வருடத்தில் மேற்கொண்ட முறையான நிதி முகாமைத்துவம் மற்றும் வரிக் கொள்கை காரணமாக ஒரு இலட்சம் கோடி ரூபாவை சேமிக்க முடிந்துள்ளதாகத் தெரிவித்தார். இதன் விளைவாகவே, பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக 50,000 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்ய முடிந்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், பேரிடர் நிலைமைகளைக் காரணம் காட்டி நாட்டின் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளும் நிறுத்தப்படவோ அல்லது ஒத்திவைக்கப்படவோ இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்த இழப்பீட்டு நிதி ஜனாதிபதியினதோ, அமைச்சர்களினதோ அல்லது அரச அதிகாரிகளினதோ தனிப்பட்ட பணம் அல்ல; இது பொதுமக்களின் பணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்று அமைச்சர் வலியுறுத்தினார். அத்துடன், தொழிற்சாலைகள் இயங்குவதன் மூலமே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும் என்பதால், பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை விரைவாக மீண்டும் ஆரம்பிக்குமாறு அதன் உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், புத்தளம் மாவட்டச் செயலாளர் இந்திகா சில்வா உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் கே.டி லாந்காந்தவிடம் மன்னிப்பு கோரியதா ஹிரு ஊடகம்?

0

அமைச்சர் கே.டி லாந்காந்தவின் சொத்துக்கள் தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியூடாக ஒளிபரப்பிய செய்தி தவறானது என அறிவித்து, அமைச்சரின் சட்டத்தரணியால் கோரிக்கை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹிரு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதற்கு அமைய, அமைச்சரின் பிணையங்களின் பெறுமதி மற்றும் சொத்துக்களின் மொத்த பெறுமதி ஆகியன தவறாக அறிக்கையிடப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சில தரவுகளை மீண்டும் உறுதி செய்துக் கொள்வதற்கான உரித்துக்கு அமைய, குறித்த தகவல்களை ஹிரு தொலைக்காட்சி செய்தி மீண்டும் வெளியிட்டுள்ளது.

அமைச்சர் கே.டி. லால்காந்த, தன்னுடையதும், தனது குடும்ப உறுப்பினர்களுக்குமான 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்குரிய சொத்து விபரங்களை கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்பித்தமை தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி ஹிரு செய்தி வெளியிட்டது.

அதற்கமைய, அசையா சொத்துக்களாக, அன்பளிப்பு உரித்தினூடாக கிடைக்கப்பெற்ற 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2500 சதுரஅடி கட்டடம், 10 பேர்ச்சஸ் காணி, 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிரந்தர கட்டடம் மற்றும் 20 பேர்ச்சஸ் காணி, 560 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்காயிரத்து 50 சதுர அடி கட்டடம் மற்றும் 14 பேர்ச்சஸ் காணி ஆகியன தொடர்பில் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், உரித்தினூடாக கிடைக்கப்பெற்ற 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7.26 பேர்ச்சஸ் காணியிலுள்ள 2500 சதுர அடியிலான கட்டடம் மற்றும் வணிக கட்டடம் என்பனவும் தமது அசையா சொத்துக்கள் என அமைச்சர் கே.டி லாந்காந்த அறிவித்துள்ளார்.

இதனை தவிர அசையும் சொத்துக்களாக, 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 பவுண் தங்க ஆபரணங்களும், 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான 120 கிராம் தங்கம் மற்றும் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிற்றூர்ந்து ஒன்றும் உள்ளதாக தெரிவித்து அவர் ஆவணங்களை சமர்பித்துள்ளார்.

அத்துடன், மாதாந்த சம்பளத்தினூடாக உழைத்த 7 இலட்சத்து, 38 ஆயிரத்து 918 ரூபாய் 10 சதம் பணமும், சொத்துக்களை குத்தகைக்கு வழங்கியமையூடாக பெற்றுக் கொள்ளப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பணமும், ஓய்வூதிய கொடுப்பனவாக 7 இலட்சத்து 71 ஆயிரத்து 400 ரூபாய் பணமும் அவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தவிர, சொத்து விபரங்களின் அடிப்படையில், நிலையான வைப்பினூடாக வருடாந்தம் 27 இலட்சத்து 55 ஆயிரத்து 851 ரூபாய் 97 சதம் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதாகவும், தற்போதைய தொழில் என்ற அடிப்படையில் வருடாந்தம் 18 இலட்சம் வருவாய் சமர்பிக்கப்பட்டுள்ளதாக, ஹிரு தொலைக்காட்சியின் செய்தியில் அறிக்கையிடப்பட்டது.

இந்த சொத்து விபரங்களில் தவறில்லை என்பது, கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களுடாக அறியமுடிகிறது.

எனினும், அமைச்சரின் பிணையங்கள் மற்றும் சொத்துக்களின் மொத்த பெறுமதி தவறானது என தெரிவித்து, அமைச்சரின் சட்டத்தரணி ஹிரு ஊடகத்திற்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

அமைச்சரின் பிணையங்களின் மொத்த பெறுமதி 38 கோடியே 39 இலட்சத்து ஆறாயிரத்து 705 ரூபாய் 40 சதம் என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்ததாக, தவறாக அறிக்கையிடப்பட்டதை ஹிரு தொலைக்காட்சி இன்று தெரிவித்துள்ளது.

அதன்படி, அமைச்சருக்கு சொந்தமான பிணையங்களின் மொத்த பெறுமதி ஒரு இலட்சத்து, 43 ஆயிரத்து 475 ரூபாய் 08 சதம் என்பதே சரியான அறிக்கையாகும்.

இதனை தவிர அமைச்சரூடாக சமர்பிக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த பெறுமதி 46 கோடி ரூபாய்க்கும் அதிகம் என அறிக்கையிட்டமை, மொத்தக் கணிப்பில் ஏற்பட்ட தவறு என்பதையும் ஹிரு தொலைக்காட்சி செய்தி இன்று குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சரூடாக சமர்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கு அமைய, சொத்துக்களின் மொத்த பெறுமதி சுமார் 08 கோடி ரூபாய் ஆகும்.

இதற்கமைய, அமைச்சர் கே.டி.லால்காந்தவுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஹிரு தொலைக்காட்சி செய்தி கவலை வெளியிட்டுள்ளது.

அதிரடித் திருப்பம்: மீண்டும் மூடப்பட்டது ஹோர்முஸ் நீரிணை!

நேற்று முழுமையாகத் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, இன்று மீண்டும் மூடப்பட்டுள்ளதாக ஈரானிய கடற்படை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் துறைமுக முற்றுகை தொடர்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த வணிகக் கப்பல்களுக்கு, ஈரானிய கடற்படை வானொலி தகவல் ஊடாக அவசரச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், “ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டுள்ளது, எந்தக் கப்பல்களும் கடந்து செல்ல அனுமதி இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச கப்பல் போக்குவரத்து தகவல் உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரான் தனது வான்பரப்பு மற்றும் நீரிணையைத் திறப்பதாக அறிவித்திருந்த போதிலும், ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையைத் தளர்த்தப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் இந்த ‘கடல்சார் கொள்ளை’ மற்றும் முற்றுகை தொடர்வதால், நீரிணையின் கட்டுப்பாடு மீண்டும் பழைய நிலைக்கு (கடுமையான இராணுவக் கண்காணிப்பு) கொண்டுவரப்படுவதாக ஈரானின் ‘காதம் அல்-அன்பியா’ (Khatam Al-Anbiya) இராணுவக் கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.

இந்தத் திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து, நீரிணையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுமார் 5க்கும் மேற்பட்ட எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் (கிரேக்கம் மற்றும் இந்தியக் கப்பல்கள் உட்பட) தமது பயணத்தை ரத்து செய்துவிட்டுத் திரும்பியுள்ளன.

ஈரானில் 10 நாள் போர்நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும், ஹோர்முஸ் நீரிணை விவகாரம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் பெரும் முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

லெபனானில் போர் நிறுத்தம், உலகில் எண்ணெய் விலை சரிவு:

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் மிகமுக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை அனைத்த வணிகக் கப்பல்களுக்கு முழுமையாக திறந்துவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்துள்ளது. இது உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான சிக்னலாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா – ஈரான் மத்தியிலான 2ஆம் கட்ட பேச்சுவாத்தைக்கு முன்பு இத்தகைய அறிவிப்பு வெளியானது முதலீட்டு சந்தைக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். லெபனான் நாட்டில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தும் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் முழுமையாக செல்ல அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் வரையில் ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும் என்றும் அப்பாஸ் அராக்சி குறிப்பிட்டார். மேலும், பாதுகாப்பான பயணம் ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பு ஏற்கெனவே அறிவித்த ஒருங்கிணைக்கப்பட்ட பாதையில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார்.

ஈரான் வெளியுறவு அமைச்சரின் அறிவிப்பு வெளியான உடனேயே சர்வதேச எண்ணெய் சந்தையில் இதன் விலை வீழ்ச்சியடைந்தது. கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் (futures market) ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் ஒப்பந்தம் மதிப்பு இந்திய நேரப்படி மாலை 7.45 மணியளவில் 10.80 சதவீதம் குறைந்து 88.66 டாலருக்கு வர்த்தகமானது.

இதுவே அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் 10.88 சதவீதம் குறைந்து 84.03 டாலராக உள்ளது. இன்று காலை முதல் பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்கா மத்தியில் விரைவில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை துவங்கும் என தகவல் வெளியான நிலையில் கச்சா எண்ணெய் விலை சிறிய அளவில் குறைந்து வந்தது. தற்போது ஹார்முஸ் மொத்தமாக திறக்கப்பட்டது மூலம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் சுமார் 9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி உலக எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கிய பாதையாக இருப்பதால், இதில் ஏற்பட்ட முடக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது ஈரான் முழுமையாக திறக்கப்பட்டதாக அறிவித்தது மூலம் விலை குறைய துவங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்திலும் இந்த அறிவிப்பை தெரிவித்தார். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறந்துவிட்டதாகவும், உலகளாவிய சரக்கு கப்பல்கள் பயணிக்க முழுமையாக தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளது என்று அவர் பதிவிட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு தலைமையில் நேற்று நடந்த லெபனான் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் மத்தியிலான கூட்டத்தில், 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதை டிரம்ப் லாஸ் வேகாஸ் செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தார். இதை லெபனான் மக்கள் கொண்டாடி தீர்த்தனர். மேலும் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீதான தாக்குதலையும் நிறுத்துவதாக அந்த சந்திப்பில் உத்தரவாதம் கொடுத்துள்ள காரணத்தால் மத்திய கிழக்கில் தற்காலிக அமைதி உருவாக்கியுள்ளது.

இதன் தாக்கமாக, ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றத்தையும் குறைக்கும் முயற்சிகளும், வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. கடந்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், ஈரான் தரப்பு, ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்துவது முக்கிய கோரிக்கையாக முன்வைத்தது. இஸ்ரேல் நேரடியாக லெபனானுடன் அல்லாமல், அந்த நாட்டுக்குள் செயல்படும் ஹெஸ்புல்லா அமைப்புடன் மோதி வருகிறது.

இந்த ஹிஸ்புல்லா அமைப்பு ஈறானுக்கு ஆதரவாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்துவதை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

ஆனால் இஸ்ரேல் தனது படைகளை லெபனானில் இருந்து திரும்பப் பெறப்படமாட்டாது என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொத்தத்தில், இந்த தற்காலிக போர்நிறுத்தம் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நிலைமை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்பதே உண்மை. மேலும் ஈரானும் லெபனான் மீதான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ள இந்த 10 நாட்களுக்கு மட்டுமே ஹார்முஸ் திறக்கப்படும் என தெளிவாக தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் வழித்தடம் ஏன் முக்கியம்

உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 – 25 சதவீதம் வரையிலும், இயற்கை எரிவாயுவில் (LNG) சுமார் 25 சதவீத பங்கும் இந்த குறுகிய நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. ஹார்முஸ் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருட்கள் பெரும்பாலும் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுக்கே அதிகளவில் சென்றடைகின்றன.

ஹார்முஸ் நீரிணை வழியாக எரிபொருள் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளின் பட்டியல்: சவுதி அரேபியா தனது மொத்த ஏற்றுமதியில் சுமார் சுமார் 37.2% ஹார்முஸ் நீரிணை வாயிலாக ஏற்றுமதி செய்கிறது. ஈராக் – சுமார் 22.8% ஏற்றுமதி செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சுமார் 12.9%, ஈரான் சுமார் 10.6%, குவைத் 10.1%, உலகின் முக்கிய LNG ஏற்றுமதியாளரான கத்தார் முழுமையாக இந்த பாதையை நம்பியிருக்கிறது. பஹ்ரைன் பெட்ரோலிய மற்றும் ரசாயன ஏற்றுமதிக்கு இந்த வழியைப் பயன்படுத்துகிறது.

பாதுகாப்பு பிரதி அமைச்சரை பதவி நீக்க அதிரடி கோரிக்கை!

0

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையிலும், நியாயமாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த, தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அருட்தந்தை ரொஹான் டி சில்வா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள சமூக மற்றும் சமய மையத்தினால் (CSR) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ‘நினைவு, வலி மற்றும் நம்பிக்கை: 7 ஆண்டுகளின் பின்னர் நீதியைத் தேடி’ எனும் தலைப்பில் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய அருட்தந்தை ரொஹான் டி சில்வா, விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து கருத்துத் தெரிவித்தார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்:

  • சாதகமான நகர்வு: நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு, தற்போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஒரு நம்பிக்கையூட்டும் திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.
  • பதவி நீக்கம் ஏன்?: தாக்குதல்கள் நடைபெற்ற காலகட்டத்தில், சர்ச்சைக்குரிய சாய்ந்தமருது சம்பவங்கள் இடம்பெற்ற போது, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக அருண ஜயசேகர கடமையாற்றியிருந்தார்.
  • சுயாதீன விசாரணை: தற்போது அவர் பாதுகாப்பு பிரதி அமைச்சராகப் பதவி வகிப்பது, விசாரணைகளின் வெளிப்படைத்தன்மையைப் பாதிக்கக்கூடும். எனவே, விசாரணைகள் முழுமையாக நிறைவடையும் வரை அவரை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்.
நீதி வேண்டிய போராட்டம்

“பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், விசாரணைகளைத் தடுக்கும் அல்லது செல்வாக்கு செலுத்தும் நிலையில் எவரும் இருக்கக் கூடாது. இதற்கான தகுந்த சூழலை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என அருட்தந்தை மேலும் சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கத்தோலிக்க திருச்சபை மற்றும் சிவில் அமைப்புகள் தொடர்ந்து நீதிக்காகக் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலங்குகளுக்காக வைக்கப்பட்ட கட்டுத் துப்பாக்கி வெடித்து நபர் பலி!

0

ஜூட் சமந்த

ஆனமடுவ பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் ஏப்ரல் 17ஆம் தேதி காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் ஆனமடுவ, பரமாகந்தகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ரன்கொத்பேடி துரயலாகே தினேஷ் மங்கள அமரதாச என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பரமாகந்த மலையின் பின்புற பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் தாம் கட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகவும், ஏப்ரல் 17 அன்று காலை 7.30 மணியளவில் அங்கு சென்று பார்த்தபோது, அத்துப்பாக்கி வெடித்ததில் தினேஷ் என்பவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டதாகவும் சந்தேகநபர் ஒருவரே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டனர். இருப்பினும், உயிரிழந்த நபர் எதற்காக அந்த காட்டுப் பகுதிக்குச் சென்றார் என்பது குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பரமாகந்தகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக சட்ட நடவடிக்கைகளை ஆனைமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எரிசக்தி அமைச்சர் ஜனாதிபதிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

0

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அனுப்பிய கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

“நிலக்கரி விநியோகம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க எடுத்த தீர்மானத்தையும், 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலாளர் ஊடாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தமையையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன். இதன் மூலம் ஊழலுக்கு எதிராகவும், மக்கள் ஆணையை நிறைவேற்றுவதிலும் உங்களுக்கு இருக்கும் துணிச்சலான உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது.

எவ்வாறாயினும், இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணை நடவடிக்கைகள் மிகவும் சுதந்திரமாகவும், எந்தவொரு பக்கச்சார்பின்றியும் முன்னெடுக்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். இந்த விசாரணைகள் இடம்பெறும் காலப்பகுதியில் நான் இப்பதவியில் நீடிப்பது அதற்கு ஒரு தடையாக அமையக்கூடும் என்ற நிலப்பாட்டில் இருந்து, 17.04.2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிசக்தி அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளேன்.

இந்த விசாரணை நிறைவடைந்து உண்மை மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படும் வரை நான் இத்தீர்மானத்தில் உறுதியாக இருப்பேன். அத்துடன், இந்த விசாரணைகளின் மூலம் கிடைக்கப்பெறும் எந்தவொரு முடிவையும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன். தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக நீங்களும் அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும்.”

உறவினர் வீட்டிற்குச் சென்ற 8 பேர் நீரில் மூழ்கிப் பலி!

0

நிக்கவரட்டிய: புதுவருட விடுமுறையைக் கழிக்கவும், உறவினர்களைச் சந்திக்கவும் மகிழ்ச்சியுடன் சென்ற ஒரு பயணக் குழுவிற்கு, தெதுறு ஓயா மரணப் பொறையாக மாறியுள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் இலங்கையைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

​கொழும்பு, கடவத்தை பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர், நிக்கவரட்டிய – கொபெய்கனே பகுதியில் உள்ள தங்களது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு உறவினர்களைச் சந்தித்த மகிழ்ச்சியில், அனைவரும் இணைந்து அப்பகுதியில் உள்ள தெதுறு ஓயாவில் நீராட முடிவு செய்துள்ளனர்.

​நேற்று (16) மாலை, கடவத்தை மற்றும் கொபெய்கனே ஆகிய இரண்டு குடும்பங்களையும் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் உற்சாகமாக ஆற்றில் இறங்கியுள்ளனர். ஆனால், அந்த மகிழ்ச்சி சில நிமிடங்களிலேயே மரண ஓலமாக மாறியுள்ளது.

நீரில் மூழ்கிய 10 பேர்

​ஆற்றின் ஆழமான பகுதி மற்றும் நீரோட்டத்தின் வேகம் தெரியாமல் நீராடியபோது, எதிர்பாராத விதமாக 10 பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகினர். அருகில் இருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றபோதிலும், 6 பேர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

  • இருவர் உயிருடன் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
  • ​நேற்று மாலையே இருவர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

சோகத்தில் முடிந்த தேடுதல் வேட்டை

​காணாமல் போன ஏனைய 6 பேரைத் தேடும் பணிகள் பொலிஸாரால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. இன்று (17) காலை மீட்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் மேலும் 4 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தீவிரமாகத் தேடப்பட்டு வந்த எஞ்சிய இருவரின் சடலங்களும் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

​இதன் மூலம், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே இடத்தைச் சேர்ந்த மற்றும் உறவினர்களான 8 பேர் உயிரிழந்துள்ள செய்தி கடவத்தை மற்றும் கொபெய்கனே பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு ஆற்றுக்குச் சென்றவர்கள் பிணமாகத் திரும்புவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை” என உறவினர்கள் கதறி அழுவது பார்ப்போர் நெஞ்சைப் பதற வைக்கிறது.

எச்சரிக்கை

​அண்மைக்காலமாக ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீராடச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நீர்நிலைகளின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் தன்மையை அறியாமல் இறங்குவது இத்தகைய பாரிய உயிரிழப்புகளுக்குக் காரணமாகிறது எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

​தெதுறு ஓயா இன்று 8 உயிர்களைப் பறித்த ஒரு துயர இடமாக மாறி நிற்கிறது. கடவத்தை மற்றும் கொபெய்கனே கிராமங்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளன.

வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

0

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் இவர்கள் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். 

நிலக்கரி இறக்குமதி மற்றும் அது சார்ந்த மின்சார உற்பத்தியின் போது ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று (17) விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 

இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையிலும் சுதந்திரமாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இவர்கள் பதவிலகியுள்ளனர்.