Sunday, June 14, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 25

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிப்பு!

0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக, அவர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகிறார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-04-20

விஜய் முட்டி போட்டு நடக்க இப்படி ஒரு காரணமா?

0

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சமீபத்திய நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, திருச்சி மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவர் போட்டியிடும் வேளையில், அவருக்குக் கிடைத்துள்ள ரகசிய கள ஆய்வுகள் அவருக்குச் சாதகமாக இல்லை என்று தகவல்கள் கசிந்துள்ளன.

நெகட்டிவ் ரிப்போர்ட்: விஜய்க்கு அதிர்ச்சித் தகவல்!

விஜய் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவரது வெற்றி வாய்ப்பு குறித்து கட்சி மேலிடம் நடத்திய ரகசிய ஆய்வில், அவருக்குப் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பெரம்பூரில் ஆளும் திமுகவின் பலமான கட்டமைப்பு மற்றும் திருச்சி கிழக்கில் இனிகோ இருதயராஜூக்கு இருக்கும் கிறிஸ்துவர்கள் வாக்கு ஆகியவை விஜய்க்கு சவாலாக உள்ளன. இந்த இரண்டு தொகுதிகளிலும் விஜய் தோல்வியைத் தழுவக்கூடும் என்ற ‘நெகட்டிவ் ரிப்போர்ட்’ வந்ததைத் தொடர்ந்து, அவர் தனது தேர்தல் வியூகத்தை அதிரடியாக மாற்றியுள்ளார்.

திருச்சி கிழக்குத் தொகுதியைப் பொறுத்தவரை, சுமார் 35% கிறிஸ்தவ வாக்காளர்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். ஏற்கனவே கிறிஸ்தவ ஆயர்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது விஜய்க்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

இந்தச் சூழலில், எப்படியாவது சிறுபான்மையின வாக்குகளைத் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காகவே, புனித அந்தோணியார் ஆலயத்தில் விஜய் முட்டிப் போட்டுப் பிரார்த்தனை செய்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது ஒரு ‘இறுதிக்கட்ட முயற்சி’ என்றும், தனது மத அடையாளத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மக்களின் உணர்வுகளைக் கவர விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யின் இந்த திடீர் ‘பக்தி அரசியல்’ ஆளும் திமுக தரப்பிற்குச் சிறு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது உறுதியான வாக்கு வங்கியில் விஜய் ஓட்டை போடுகிறாரோ என்ற அச்சம் திமுகவினரிடையே எழுந்துள்ளது.

மறுபுறம், இந்த மோதலைக் கண்டு அதிமுக உற்சாகத்தில் உள்ளது. திமுகவின் வாக்குகள் விஜய்யால் பிரிக்கப்பட்டால், அது தங்களுக்கு எளிதான வெற்றியைத் தேடித்தரும் என அதிமுக கணக்குப் போடுகிறது.

பொதுவாக கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையின வாக்குகள் திமுகவின் கோட்டையாகக் கருதப்படுபவை. தற்போது விஜய் அந்த வாக்கு வங்கியில் கை வைப்பதால், திமுகவிற்குச் செல்ல வேண்டிய வாக்குகள் இரண்டாகப் பிரியும் (DMK & TVK). இதில் விஜய் பாதியை எடுத்தால் போதும்.. வாக்குகள் அப்படியே சிதறும். அப்படியே மற்ற வாக்குகள் எதிரணிக்கு செல்லும். அதாவது அதிமுகவிற்கு மற்ற வாக்குகள் அதிமுகவிற்கு செல்லும். அதிமுக வாக்குகள் உடையாமல் இருப்பதால் அது அவர்களுக்கு சாதகமாக மாறும்.

இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானது. தோல்வி பயம் காரணமாக அவர் மேற்கொண்டுள்ள இந்தத் தீவிர முயற்சி, திருச்சி மற்றும் பெரம்பூர் மக்களின் மனதை மாற்றுமா? அல்லது ரகசிய ஆய்வுகள் சொன்னது போலவே அவருக்குப் பின்னடைவு ஏற்படுமா? என்பது வாக்கு எண்ணிக்கையின் போதுதான் தெரியவரும்.

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல்: ஜஸ்வர் உமருக்கு அடித்த ஜாக்போட்!

0

இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழு தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனைகள் தொடர்பில் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்பாளர் ஜஸ்வர் உமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து எதிர்ப்புகளும் சுயாதீனத் தேர்தல் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தகவலின்படி, இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் செயல்முறையில் ஜஸ்வர் உமரின் வேட்புமனு முழுமையாக செல்லுபடியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலில், ஜஸ்வர் உமர் மீது தேசிய ஒலிம்பிக் குழு அல்லது ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஆகியவற்றின் எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரின் தகுதி குறித்து எழுந்திருந்த சந்தேகங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பிரித்திவிராஜ் பெரேரா, மொஹம்மட் ரிப்தி பாகிம் மற்றும் சுனில் செனவீர ஆகியோர் மூன்று தனித்தனியான ஆட்சேபனைகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த ஆட்சேபனைகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஜஸ்வர் உமர் சர்வதேச விளையாட்டு சட்ட நிபுணத்துவம் கொண்ட சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட சட்ட நிறுவனத்தின் மூலம் விரிவான சட்ட விளக்கங்களை சமர்ப்பித்தார்.

அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பின்னர், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஆர். சித்ரஸ்ரீ தலைமையிலான தேர்தல் குழு, நீதிபதி பியசேன ரணசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஹர்ஷ அமரசேகர ஆகியோரின் பங்கேற்புடன், அனைத்து ஆட்சேபனைகளையும் நிராகரித்துள்ளது.

இதனிடையே, தேர்தல் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெற வேண்டும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் பதவி விலகும் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் செயல்முறையை தாமதப்படுத்தும் எந்த முயற்சிகளுக்கும் தானாக பதவி நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்னேற்றங்களுடன், தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஜஸ்வர் உமர், தேசிய ஒலிம்பிக் குழு தலைவர் பதவிக்கான முன்னணி வேட்பாளராக காணப்படுகின்றார்.

இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இம்மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போதைய நிலவரத்தில், இந்த தீர்ப்பு தேர்தல் சூழ்நிலையை மேலும் தெளிவுபடுத்தியுள்ளதாக விளையாட்டு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டு கொண்டாட்ட கால விபத்துக்களில் 80 பேர் பலி!

0

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு விபத்துச் சம்பவங்களினால் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மாத்திரம் 53 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக, புத்தாண்டுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 13 மற்றும் ஏப்ரல் 10 ஆகிய திகதிகளிலேயே அதிகளவிலான விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிக வேகம், மதுபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் கவனயீனம் ஆகியவையே இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னாலுள்ள பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இதேவேளை கொண்டாட்டங்களுக்காக நீர்நிலைகளுக்குச் சென்றவர்களில் 27 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பற்ற இடங்களில் நீராடியமை மற்றும் நீர்நிலைகளின் தன்மை அறியாது இறங்கியமை இந்தத் துயரங்களுக்குக் காரணமாகியுள்ளது.

கடந்த ஆண்டுகளின் புத்தாண்டு கால புள்ளிவிபரங்களோடு ஒப்பிடுகையில், இந்த வருடம் வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் ஏற்பட்ட மரணங்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன.

“கொண்டாட்டங்களின் போது பொதுமக்கள் போதியளவு அவதானத்துடன் செயற்படாததே இவ்வாறான உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாகியுள்ளது. எதிர்காலத்திலாவது வீதி ஒழுங்குவிதிகளையும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் முறையாகப் பின்பற்றுவது அவசியமாகும்.”

புத்தாண்டு மகிழ்ச்சி பல குடும்பங்களில் சோகமாக மாறியுள்ள இந்தச் சூழல், சமூகப் பாதுகாப்பு குறித்த மேலதிக விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் பல பாகங்களில் பிற்பகலில் பலத்த மழை!

0

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (20) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின் படி, இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

குறிப்பாக மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம், தென் மாகாணம், குருநாகல் மாவட்டம் ஆகிய பகுதிகளில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது:

இன்று அதிகாலை வேளையில் சில பகுதிகளில் பனிமூட்டமான நிலை காணப்பட்டது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இந்த நிலை நீடித்தது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது வெட்டவெளிகளிலும் மரங்களின் அடியிலும் தங்குவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

இலங்கை கடற்படையின் அதிரடி வேட்டையில் 41 பேர் கைது!

0

இலங்கையின் கடல் வளங்களைப் பாதுகாக்கவும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, கடந்த இரண்டு வாரங்களில் பாரிய சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.

2026 ஏப்ரல் 01 முதல் 15 வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் இலங்கை கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியன இணைந்து முன்னெடுத்த இந்த விசேட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்திய 41 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படைக் கட்டளைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்தச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் செம்மலை, செட்டிபாளையம், எலிசபெத் தீவு, கோழிப்பண்ணை, கிளிப்பன்பேர்க் முனை மற்றும் உப்புரால் பகுதிகளிலும், வடக்கில், நந்திக்கடல் களப்பு, அலம்பில், யானை தீவு, புடுவக்கட்டு மற்றும் யாழ்ப்பாணத்தின் கோமர் முனை பகுதிகளிலும், புத்தளம் உச்சமுனை பகுதிகளில் கடற்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்:

இந்த சுற்றிவளைப்புகளின் போது சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் வாகனங்களும் கைப்பற்றப்பட்டன:

  • 11 சிறுபடகுகள் மற்றும் 02 இழுவைப் படகுகள்
  • சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள்.
  • மீன்பிடிக்காகப் பயன்படுத்தப்படும் வணிக வெடிபொருட்கள்.
  • தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் இதர மீன்பிடி உபகரணங்கள்.
  • கரைப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள்.

கைது செய்யப்பட்ட 41 சந்தேக நபர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில், தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை ஜனாதிபதியை சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி!

0

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இன்று முற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

ஜனாதிபதிஅலுவலகத்திற்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமோக வரவேற்பளித்ததுடன், இந்திய துணை ஜனாதிபதியாக பதவியேற்றமைக்காக சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இதுவே இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் எனக் குறிப்பிட்ட இந்திய துணை ஜனாதிபதி, இலங்கையில் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் தொடர்பில் தனது நன்றியினைத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தலைவர்களுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானதுடன், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது

பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுலா, முதலீடு மற்றும் வர்த்தகத் துறைகளிலும், குறிப்பாக வலுசக்தி பாதுகாப்பு மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இந்திய துணை ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இந்திய அரசின் ஆதரவுடன் இந்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் குறித்தும், டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிப் பொதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

அவசர நிலைமைகளுக்கு மேலதிகமாக, அண்மையில் தான் இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போதும், பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதும் எட்டப்பட்ட புரிந்துணர்வுக்கு ஏற்ப, இந்தியா தற்போது இலங்கைக்கு வழங்கும் பொருளாதார மற்றும் சமூக ரீதியான அனைத்துத் துறைசார்ந்த ஒத்துழைப்புகளும் விரிவடைந்துள்ளதாகவும், அதன்படி தற்போது பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் மூலம் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், டித்வா சூறாவளியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய சிறப்பான ஆதரவை இங்கு பாராட்டிய ஜனாதிபதி, இந்திய வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்காக நிதி ஒதுக்கீடு செய்தமைக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார்.

அதேபோன்று, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்ட வலுசக்தி நெருக்கடியின் போது, இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை அனுப்புவதற்கு இந்தியா எடுத்த நடவடிக்கையையும் ஜனாதிபதி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

தொழில்நுட்ப ரீதியாக இந்தியா அடைந்துள்ள சிறப்பான வெற்றிகளை இங்கு நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அந்தத் துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட இலங்கை எதிர்பார்ப்பதாகவும், குறிப்பாக, மனிதவள அபிவிருத்தி மற்றும் அரச துறையை டிஜிட்டல் மயப்படுத்தல் வேலைத்திட்டங்களில் இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

மீனவர் பிரச்சினைகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு தரப்பினரும் இணைந்து செயற்பட்டு, அதற்கு நீண்டகால நிரந்தர தீர்வைக் காண வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தியத் தூதுக்குழுவின் சார்பில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல், பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி கே. லக்ஷ்மண், கலாநிதி மேதா விஷ்ரம் குல்கர்னி, வெளியுறவு அமைச்சின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஆர்.கே. லெனகல உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வடக்கில் இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்!

0

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு விளையாட்டுத் திணைக்களத்துடன் இணைந்து நடத்திய ‘வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் – 2026’, கரவெட்டி இமையாணன் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் கடந்த (17.04.2026) அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் விழா மைதானத்துக்கு வருகை தந்த விருந்தினர்கள் பாரம்பரிய முறைப்படி கௌரவமாக வரவேற்று அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் மற்றும் சிங்களப் பாரம்பரியக் குடில்களை விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

மேலும் மைதானத்தில் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகள் அடங்கிய கண்காட்சிக்கூடங்களையும் விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

மேடை நிகழ்வுகளாக, வரவேற்பு நடனம், பேடிக்கூத்து, கண்டிய நடனம், கண்ணன் நடனம், பாரம்பரிய சிங்கள நடனம், புத்தாக்க நடனம், பாம்பு நடனம், தில்லானா நடனம் ஆகியனவும் இடம்பெற்றன.

அதேநேரம், பாரம்பரிய விளையாட்டுக்களான வழுக்கு மரம் (கிறீஸ் மரம்) ஏறுதல், தலையணைச் சண்டை உள்ளிட்ட பல கிராமிய விளையாட்டுப் போட்டிகளும் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கோலி, ரோஹித்தையே வீட்டுக்கு அனுப்பியவர்தான் இவர்!

0

இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவான்களாக வலம் வந்த விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களையே அணியை விட்டு வெளியேற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர். இவரது தேர்வின் கீழ் அணித் தேர்வில் பல அதிர்ச்சிகளைச் சந்தித்தாலும், இந்திய அணி வரலாற்று வெற்றிகளையும் குவித்தது. இதனால் பிசிசிஐ அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராகச் செயல்பட்டு வருபவர் அஜித் அகர்கர். இவரது தற்போதைய பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இவரது பதவிக்காலத்தை 2027 ஜூன் வரை நீட்டிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அகர்கர் தேர்வுக் குழு தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி 2024 மற்றும் 2026 டி20 உலகக்கோப்பைகளையும், கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று அசத்தியது. இந்தத் தொடர் வெற்றிகளே அவரது பதவி நீட்டிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

அகர்கர் பதவியேற்ற பிறகு இந்திய அணியில் பல கடுமையான மாற்றங்கள் அரங்கேறின. குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற மூத்த வீரர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு அணி ஒரு புதிய கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மேலும், டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில், டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் என புதிய கேப்டன்களையும் அகர்கர் துணிச்சலாக நியமித்தார்.

நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியா தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அடைந்த அபார வெற்றிகள் அவரது தேர்வுக் கொள்கைக்கு வலு சேர்த்துள்ளன. அணி நிர்வாகத்தின் பேச்சை கேட்காத இஷான் கிஷன் போன்ற வீரர்களை அணியிலிருந்து நீக்கித் தனது கண்டிப்பைக் காட்டிய அவர், பின்னர் அவர்கள் திறமையை நிரூபித்ததும் மீண்டும் உலகக்கோப்பை அணியில் சேர்த்து தனது நெகிழ்வுத்தன்மையையும் வெளிப்படுத்தினார்.

மேலும், தற்போதைய தேர்வுக் குழுவில் உள்ள ஆர் பி சிங் மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோர் புதிதாகப் பொறுப்பேற்றவர்கள் என்பதால், அகர்கர் போன்ற அனுபவமிக்க ஒருவரின் வழிகாட்டுதல் தொடர்ந்து அணிக்குத் தேவை என வாரியம் கருதுகிறது. அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெற உள்ளதால், அணியின் தேர்வில் எந்தவிதமான குழப்பமும் இன்றி ஒரு நிலைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளின் இடையே பிசிசிஐ அதிகாரிகள் அகர்கரை நேரில் சந்தித்து இந்த பதவி நீட்டிப்பு குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க உள்ளனர். துணிச்சலான முடிவுகளுக்குக் கிடைத்த பரிசாகவே இது பார்க்கப்படுகிறது.

திட்டமிட்டு வைக்கப்பட்ட தீ? – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி!

0

மஹரகமையில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரு ஆண்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். 

மஹரகம, பமுணுவ வீதி, எக்சத் சுபசாதக மாவத்தை, இரண்டாவது குறுக்கு ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த 55 வயதுடைய பெண் மற்றும் அவரது 16 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

இந்தக் கொடூரச் சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமியின் தந்தை மற்றும் வீட்டின் உரிமையாளரான 76 வயதுடைய முதியவர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று (18) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அயலவர்கள் உடனடியாகச் செயல்பட்டுத் தீயை அணைத்து, காயமடைந்த இரு ஆண்களையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

பின்னர் வீட்டைச் சோதனையிட்ட போது, அறையொன்றுக்குள் தாயும் மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

குற்றச் செயல் நடந்த இடத்தில் பெட்ரோல் வாடை வீசியுள்ளதோடு, வீடொன்றிற்குத் தீ வைத்து மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவம் இதுவென விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.