Friday, March 27, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 27

இலங்கையின் பாடசாலைக் கல்வியில் பாரிய நெருக்கடி!

0

அறிவொளி மங்கும் வகுப்பறைகள்: இலங்கையின் பாடசாலைக் கல்வியில் நிலவும் பாரிய நெருக்கடி

இலங்கையின் இலவசக் கல்வி முறையானது ஆசியாவிற்கே முன்மாதிரியாகக் கருதப்பட்டாலும், இன்று அது ஒரு பாரிய சவாலை எதிர்நோக்கி வருவதை அண்மைக்கால புள்ளிவிபரங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நாட்டின் எதிர்காலத் தூண்களாகக் கருதப்படும் சிறுவர்களின் கல்வி கற்கும் சூழல், ஆசிரியர்களின் பற்றாக்குறையாலும் மாணவர்களின் வரவு வீழ்ச்சியாலும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இலங்கையிலுள்ள மொத்தப் பாடசாலைகளின் எண்ணிக்கை 10,047 ஆகும். இவற்றுள் 3,065 இற்கும் அதிகமான பாடசாலைகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை 10 இற்கும் குறைவாகவே உள்ளது என்பது கவலைக்குரிய விடயமாகும். இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், ஒரு தேசியப் பாடசாலையும் இந்த குறைந்த ஆசிரியர் எண்ணிக்கையைக் கொண்ட பட்டியலில் உள்ளடங்கியுள்ளது.

பாடசாலைகளில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது, மாணவர்களின் எண்ணிக்கையும் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. நாடு முழுவதும் உள்ள 1,645 அரச பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 50 இற்கும் குறைவாகவே காணப்படுகிறது. இவ்வாறு மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஒரு தேசியப் பாடசாலையும் அடங்குவது கல்வியமைப்பின் தற்போதைய நிலையைத் தெளிவுபடுத்துகிறது.

மேலும், 51 முதல் 100 வரையான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 1,648 ஆகும், இவை அனைத்தும் மாகாணப் பாடசாலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்கால சந்ததியினரின் கல்வி ஆர்வத்தைக் காட்டும் முதலாம் தர அனுமதி வீதமும் 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன. 2025 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு 266,281 பிள்ளைகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி என்பது ஒரு நாட்டின் உயிர்நாடி. ஆனால், ஆயிரக்கணக்கான பாடசாலைகள் மிகக்குறைந்த ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும் இயங்கி வருவது அந்த உயிர்நாடி மெல்ல மெல்லப் பலவீனமடைந்து வருவதையே காட்டுகிறது. இந்த நெருக்கடி நிலை தொடருமானால், கிராமப்புற மாணவர்களின் கல்வி உரிமை கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

எதிர்கால சந்ததியினரின் கனவுகள் கருகிவிடாமல் இருக்க, சிதைந்து வரும் இந்தப் பாடசாலைக் கட்டமைப்பைச் சீரமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

காலியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு!

0

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். 

நேற்று (05) மாலை பனாகமுவ பகுதியில், பின்னதுவ அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து வெளியேறி காலி நோக்கி பயணித்த கார் ஒன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்த இருவர் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 16 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது. 

விபத்து தொடர்பில் குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை, மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலியகொட – புத்தளம் வீதியில் மாரவில நகருக்கு அருகில், சிலாபத்திலிருந்து வென்னப்புவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி ஒருவருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் காயமடைந்த பாதசாரி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய ஒருவராவார். 

குறித்த விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்றில் மீண்டும் சூடுபிடித்த மன்னார் – புத்தளம் வீதி விவகாரம்!

0

மன்னார் மற்றும் வடமாகாண மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான எழுவன்குளம் வீதி விவகாரம், நாடாளுமன்றத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இது வெறும் வீதி பற்றிய சர்ச்சை மட்டுமல்ல; ஒரு இனத்தின் வரலாற்று வழித்தடத்திற்கும், இயற்கைப் பாதுகாப்புக்கும் இடையிலான ஒரு தீர்க்கப்படாத போராட்டமாக உருவெடுத்துள்ளது.

மன்னார் – எழுவன்குளம் வீதி என்பது நேற்று இன்று உருவானதல்ல; இது நூற்றாண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த ஒரு பாரம்பரிய வழித்தடம். வில்பத்து சரணாலயத்தின் ஊடாகச் செல்லும் இவ் வீதி, வடபகுதிக்கும் தென்பகுதிக்குமான தூரத்தைக் குறைக்கும் மிக முக்கிய இணைப்பாகக் கருதப்படுகிறது.

எனினும், 2010 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, 2018 முதல் இவ்வீதியின் பராமரிப்புப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நிலவும் சட்டச் சிக்கல்களைத் தெளிவுபடுத்தினார்.

2018 ஆம் ஆண்டு முதல் இவ்வீதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதுடன், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, இவ்வீதியில் சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி சரணாலயப் பகுதிக்குள் பொதுப் போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரைத் தவிர மற்றவர்கள் அனுமதியின்றி நுழைய முடியாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, சூழலியல் சமநிலையைப் பேண இந்த வீதியை சரளைக் கல் வீதியாக மட்டுமே பராமரிக்க முடியும்; தார் இட அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் வடமாகாண மக்களுக்கு இந்த வீதி ஒரு வரப்பிரசாதம். கொழும்பு நோக்கிய பயண தூரத்தை இது பெருமளவு குறைக்கிறது. 2022 டிசம்பரில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் இதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

இருப்பினும், கடந்த காலங்களில் இடம்பெற்ற முறையற்ற காடழிப்புகள் மற்றும் அரசியல் தலையீடுகள் காரணமாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த விவகாரத்தில் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழல் உருவானதை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தற்போது நிலவும் முட்டுக்கட்டைகளை உடைக்க, சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், சட்டச் சிக்கல்களுக்கு அப்பாற்பட்டு, அத்தியாவசியத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள எந்த தடையுமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அண்மையில் புத்தளத்தில் இடம்பெற்ற விஷேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு, மன்னார் – எழுவன்குளம் வீதி குறித்து அதிகாரிகள் பிழையான தகவல்களை வழங்கி பிழையாகவே அவரை வழிநடத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காஹா மஸ்தான் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இப்பாதை தொடர்பில் போடப்பட்ட வழக்கின் சில பிரதிவாதிகள், தற்போது அதிலிருந்து பின்வாங்கி, மன்னார் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும், இது தொடர்பில் பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களின் நீண்டகாலக் கனவான இந்த வீதி, இயற்கையைச் சிதைக்காமல் நவீன தொழில்நுட்பங்கள் அல்லது மாற்று வழிகள் மூலம் பயன்பாட்டுக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

“ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி என்ன? நடப்பது என்ன?

0

மன்னார் – புத்தளம் பாதையை திறந்து மக்கள் பாவனைக்கு விடுவோம் என தேர்தல் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அனுர குமாரவின் அரசு, 15 வருடங்களுக்கு முன் அப் பாதைக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்த இனவாத தரப்புடன் இணைந்து செயற்படுவது கண்டிக்ககூடியவது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்,

இன்று (05) பாராளுமன்றில் ஆற்றிய உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அங்கு உரையாற்றும் போது,

”மன்னார் புத்தளம் பாதையை திறந்து தருவோம் என்று சொல்லி விட்டு இன்று, நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த இனவாத தரப்புடன் இணைந்து அவர்களின் அமைச்சின் திணைக்களங்கள் கூறுவது வேடிக்கையானது. இன்று அமைச்சர் பிமல் ரத்நாயக் அவர்கள், இந்த பாதை தொடர்பில் குறிப்பிட்ட விடயம், ஒரு நியாயமானதாக, எனக்கு தெரியவில்லை.

விமல் ரத்நாயக்க அவர்களின் மீது ஒரு பெரிய நல்லெண்ணம் கொண்டவனாக நான் இன்று வரை இருந்தேன். ஆனால், மன்னார் புத்தளம் பாதை சம்பந்தமாக, அவருடைய கருத்து, ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. நூறு வருடம் பழமைவாய்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, B(பீ) வகையான பாதையே மன்னார்- புத்தளம் பாதை ஆகும். 

நான் அமைச்சராக இருந்த பொழுது, அந்த பாதையை, மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தேன். அதற்கு முன்னர் நூறு (100) வருடங்களுக்கு முன்னால் அந்த பாதை, வீதி அபிவிருத்தி அதிகார சபை பாதையாக இருந்த பாதை, எங்களை எல்லாம் அன்று அந்த மண்ணிலிருந்து, பயங்கரவாதம் வெளியேற்றிய பொழுது, அந்தப் பாதையும் மூடப்பட்டு, வாழ்ந்த மக்கள் எல்லாம் விரட்டி அடிக்கப்பட்டதனால், அந்தப் பகுதியில், யாரும் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. 

இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டு, சமாதானம் வந்த பிறகுதான், சொந்த ஊருக்கு, அந்த மக்கள், குறிப்பாக மறிச்சுக்கட்டி, கரடிக்குழி, பாலக்குழி, பெரியமடு, முள்ளிக்குளம் மக்கள் அந்தப் பகுதிகளுக்கெல்லாம் மீள் குடியேறச்சென்றார்கள்.

அவ்வாறு செல்லுகின்ற பொழுது, பாரம்பரியமாக மக்கள் வாழ்ந்த பெரியமடு, மரிச்சுக்கட்டு, பாலக்கூலி, கரடிக்குழி, முள்ளிக்குளம், கொண்டச்சி, அளக்கட்டு உள்ளிட்ட சில பகுதிகள் இவ்வாறு வன வள திணைக்களத்திற்கு கீழ் 2012ஆம் ஆண்டு, அந்த மக்களுக்கே தெரியாமல் அன்றிருந்த அரசாங்கம் இரகசியமாக வர்த்தமானி அறிவித்தல் செய்து கையகப்படுத்தினார்கள்.  

இதற்கு எதிராக, அன்று நான் ஆளும் கட்சியில் இருந்தாலும் இவ் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தொடர் முயற்சியாக போராடிக்கொண்டு எதிர்த்து பல போராட்டங்களை நியாயபூர்வமாக நாங்கள் செய்த பொழுது இந்த நாட்டில் இருந்த மதவாதம் குறிப்பாக, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மதகுருமார் ஒரு சிலர் மன்னாரோடு எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் மன்னாருக்குள்ளே வந்து ஆர்ப்பாட்டங்களை செய்து என்னை  ”ஒரு காடுகளை அழிக்கின்ற” ஒருவராக காட்டுகின்ற, ஒரு மோசமான ஒரு இனவாத செயலைச் செய்தார்கள்.

எந்த ஊடகத்தை எடுத்தாலும் எனக்கு எதிராக அந்த மக்களுடைய குடியேற்றத்திற்கு எதிராக ஒரு பெரிய அநியாயமாக அன்று பேசப்பட்ட ஒரு காலமாக இருந்தது.

அதையெல்லாம் தாண்டி அம்மக்களை நான் குடியேற்றினேன். அவ்வாறு இருக்கின்ற பொழுது இந்த மன்னார்-புத்தளம் பாதையை மூடுமாறு மேல் மாகாணத்தில் இருக்கின்ற, அந்த பாதைக்கு, சம்பந்தமில்லாத ஒரு சில சிங்கள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள்.  மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் அன்று வழக்கு போடுகின்ற பொழுது நானும் அதில் நான்காவது  குற்றவாளியாக பெயரிடப்பட்டேன். அதுபோல் வனவள திணைக்களத்திற்கும், அன்று இருந்த முன்னாள் அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ, சேர்த்து வழக்குதாக்கல் செய்தனர். 

இதன் போது அன்றைய காலம் தொட்டு அனுரவுக்கு முன்னர் இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன , கோட்டாபாய ராஜபக்‌ஷ, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைத்து ஆட்சியாளர்களின் அமைச்சின் திணைக்களங்கள் மக்களுக்கு சார்பாகவே இருந்தனர், குறிப்பாக வனவளத்திணைக்களம், வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் , வீதி அபிவிருத்தி திணைக்களம் மக்களுக்காக அப்பாதையை திறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலலையே இருந்தனர்.

ஆனால் இன்று இருக்கின்ற ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்கவின் ஆட்சியிலுள்ள அமைச்சரின் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியோர் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர், 

இந்த வீதியூடாக மன்னாரிலே இருந்து, புத்தளத்துக்கு வருகின்ற பொழுது, சுமார் 100 கி.மீ குறைவாக உள்ளது.

இந்த பாதையை திறப்பதாக தேர்தல் வாக்குறுதியில் கூறிய அனுரகுமார திஸ்ஸநாயக்க மீது, இனவாதம் இல்லாத ஓர் அரசாங்கம் என்றும்,  முஸ்லிம் சமூகத்தினர் ஜனாதிபதி அனுர மீது நல்லெண்ணம் கொண்டிருந்தோம். நீங்கள் செய்யும் நல்ல விடயங்களுக்கு நாம் ஆதரவுகளை வழங்கி இருந்தோம், ஆனால் அப்படிப்பட்ட இந்த அரசாங்கம் இந்த பாதையை நிரந்தரமாக மூடுவதற்கான துரோகத்தை செய்கின்றது என்றால் அதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்கின்ற பொருட்களை கொழும்புக்கு கொண்டு வருவதன் மூலம் எவ்வளவு பொருளாதாரம் மிச்சம் என்று சிந்தியுங்கள். நூறு கிலோமீட்டர் குறைகின்ற பொழுது, நாட்டுக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள், அந்த பிரதேசத்துக்கு செல்லுகின்ற பொழுது, அந்த பிரதேசம் முன்னேறும். அதேபோல, நூறு கிலோமீட்டர் கூடுதலாக செல்லுகின்ற பொழுது, எவ்வளவு சுற்றாடல் மாசடையும் என்று  சிந்தியுங்கள்.

இலங்கையின் 78 வது சுதந்திரத்தினை அரசு கொண்டாடிய போது வடக்கிலும், கிழக்கிலும் வாழும் மக்கள் சுதந்திர தினத்தை கறிநாளாக கொண்டிாடியதுடன், தமது எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தினர். ஆனால் நாங்கள் உங்களிடம் நாட்டை பிரித்து கொடுங்கள் என்று கேட்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே, தயவு செய்து விலங்குகளை பாதுகாக்கிறோம் என்று மக்களை கஷ்டப்படுத்துகின்ற ஒரு முடிவை இந்த அரசாங்கம் எடுக்கக் கூடாது. இது தொடர்பாக அவசரமாக பொறுப்பான அமைச்சர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும், வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஓர் மேசையில் உட்கார்ந்து பேசுங்கள் தீர்வைப் பெற்றுத்தாருங்கள்.

ஜனாதிபதி அவர்கள், புத்தளத்துக்கு சென்ற பொழுது மன்னார் புத்தளம் பாதையில் ஒரு பெரிய அணைக்கட்டை கட்டுவதற்கு 600 மில்லியன் தருவதாக முடிவெடுத்துள்ள நிலையில், இந்த வரலாற்று துரோகத்தை நீங்கள் செய்துவிடாதீர்கள். அந்த அணைக்கட்டு திட்டத்தை விட இந்த வீதி முக்கியம், அதை திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள், இல்லையெனின் நாட்டிற்கு அது பெரும் பாதிக்கப்பாக அமையும்.” என இன்றைய பாராளுமன்ற உரையில் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவித்தார்.

சுதந்திரமா? சுமையா? – வடக்கு கிழக்கில் வெடித்த “கரிநாள்” எழுச்சி!

இலங்கைத் திருநாட்டின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தெற்கில் களைகட்டியுள்ள நிலையில், வடக்கிலும் கிழக்கிலும் சோகம் தோய்ந்த கறுப்பு நிறம் வீதிகளை ஆக்கிரமித்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று சுதந்திர தினத்தை எதிர்ப்பு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்திருந்தன.

“தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் அல்ல, இது ஒரு கரிநாள்” என்ற கோஷத்துடன், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடித்திருக்கிறது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த ஒருமித்த அழைப்பு, இன்று ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒரு புள்ளியில் இணைந்துள்ளனர்.

போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகி, நகரத்தை நோக்கி ஒரு பெரும் பேரணியாக உருவெடுத்தது.

  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்: கைகளில் படங்களை ஏந்தி, நீதிக்காகக் காத்திருக்கும் அந்த விழிகளில் தெறிப்பது வெறும் கண்ணீரல்ல, அது காலங்காலமான வலி.
  • இளைஞர் மற்றும் மாணவர்கள்: வருங்கால சந்ததியினரின் உரிமையை உறுதிப்படுத்த வீதியில் இறங்கியுள்ளனர்.
  • தென்னிந்திய ஆதரவு: இந்த போராட்டத்திற்கு எல்லை கடந்து தென்னிந்தியப் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளமை, ஈழத் தமிழர்களின் கோரிக்கைக்கு சர்வதேசப் பரிமாணத்தை வழங்கியுள்ளது.

போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

போராட்டம் நடைபெறும் வீதிகளெங்கும் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்ததுடன், இந்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும், மக்கள் எவ்வித அச்சமுமின்றித் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இலங்கை, சுதந்திர தினத்தை மிக விமரிசையாகக் கொண்டாடும் இவ்வேளையில், வடக்கு கிழக்கில் ஒலிக்கும் இந்த “கரிநாள்” முழக்கம், ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வுக்கான அவசியத்தை உலக நாடுகளுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளது.

புத்தளத்தில் கோலாகலமாக நடைபெற்ற சுதந்திர தின விழா!

0

புத்தளத்தில் கோலாகலமாக நடைபெற்ற இலங்கையின் 78-வது சுதந்திர தின விழா: “இலங்கையை கட்டியெழுப்புவோம்” எனும் மகுடத்தில் சிறப்பான கொண்டாட்டம்

இலங்கை திருநாட்டின் 78-வது சுதந்திர தின விழா, “இலங்கையை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் புத்தளம் கொழும்பு முகத்திடலில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்டது.

புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயான் ஜானக அவர்களின் தலைமையில் இவ்விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்த கயான் ஜானக உள்ளிட்ட அதிதிகளை, புத்தளம் புனித ஆண்ட்ரூ கல்லூரியின் (St. Andrew’s College) மாணவர் படைப் பிரிவினரும், ஆனந்தா கல்லூரியின் பேண்ட் வாத்தியக் குழுவினரும் அணிவகுப்புடன் கௌரவமாக வரவேற்றனர்.

புனித ஆண்ட்ரூ கல்லூரி மாணவர்களின் தேசிய கீதத்துடனும், ஆனந்தா கல்லூரி மாணவர்களின் ஆசீர்வாதப் பாடல்களுடனும் விழா இனிதே ஆரம்பமானது.

விழாவை மேலும் மெருகூட்டும் வகையில் பல்வேறு கலாசார மற்றும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன:

கருவலகஸ்வெவ கலாசார மத்திய நிலையத்தின் பூஜா நடனம், இந்து கல்லூரி மாணவிகள் வழங்கிய பரதநாட்டிய கலைநிகழ்ச்சி, புத்தளம் மற்றும் பல்லம கலாசார மத்திய நிலையங்களின் புதுமையான நவீன நடனங்கள், ஆனமடுவ கலாசார மத்திய நிலையத்தின் பாரம்பரிய ‘வெஸ்’ (Wes) நடனம் நிகழ்வை மேலும் மெருகூட்டின.

புத்தளம் மாவட்டச் செயலாளர் திரு. இந்திக்க மஞ்சுள சில்வா அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து, இந்த நன்நாளில், நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் தமிழ் மொழியில் தனது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சிங்கள மொழியில் நாடாளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக தனது வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், புத்தளம் மாவட்டச் செயலாளர் இந்திக சில்வா, மேலதிக மாவட்டச் செயலாளர்களான புபுதிகா எஸ். பண்டார (நிர்வாகம்) மற்றும் சதுரிகா ஜயசிங்க (காணி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் நிறுவனத்திடமிருந்து பெட்ரோல் கொள்வனவு!

0

இலங்கைக்குத் தேவையான 92 ரக பெட்ரோல் விநியோகத்திற்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த M/s. Epdesa Pte. Ltd. நிறுவனத்துடன் நீண்டகால ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தலா 300,000 (± 5%) பீப்பாய்கள் கொண்ட 05 கப்பல் பெட்ரோல் தொகுதிகளை கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விநியோகங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெறவுள்ளன.

இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தில் (CPC) பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து இதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன. இதில் மொத்தம் 06 விநியோகஸ்தர்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

சமர்ப்பிக்கப்பட்ட விலைமனுக்களை மதிப்பீடு செய்த உயர் மட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கமைய, குறைந்த விலையை முன்வைத்த (Lowest Responsive Bidder) சிங்கப்பூரின் M/s. Epdesa Pte. Ltd. நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி அவர்கள் சமர்ப்பித்த இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை தனது உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரிய வகை உயிரினத்தை வேட்டையாடிய கொடூரம்!

இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தின் அடையாளங்களில் ஒன்றான, மிகவும் அரிய வகை உயிரினமான “உக்லான்” (Pangolin/அழுங்கு வகை) விலங்கினை இறைச்சிக்காக கடத்திச் சென்ற கும்பலை தர்மபுரம் பொலிஸார் இன்று (03.02.2026) அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், அரிய வகை விலங்கு ஒன்று இறைச்சிக்காகக் கொல்லப்பட்டு கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாகச் செயற்பட்ட தர்மபுரம் பொலிஸார், குறித்த பகுதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையின் போது, உக்லான் விலங்கினை இறைச்சிக்காக எடுத்துச் சென்ற சந்தேக நபர்கள் கையும் மெய்யுமாகப் பிடிபட்டனர். இயற்கையின் பொக்கிஷமாக கருதப்படும் இவ்வுயிரினத்தை, வெறும் பணத்திற்காகவும் நாவசைவிற்காகவும் சிதைக்க முற்பட்ட செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள தர்மபுரம் பொலிஸார், நாளை (04.02.2026) அவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வனப்பகுதிகளில் மிக அரிதாகக் காணப்படும் உக்லான் (அழுங்கு) போன்ற உயிரினங்கள், உலக அளவில் பாதுகாக்கப்பட்ட பட்டியலிலுள்ளவை.

இவ்வாறான விலங்குகளை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் பொலிஸாரின் இந்த அதிரடி நடவடிக்கை பிரதேசவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தில் சவூதி தூதுவர் நெகிழ்ச்சி!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நட்பு நாடான இலங்கை குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.

இந்த தேசியத் திருநாள் இலங்கை குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது அந்நாட்டு மக்கள் தமது தேசிய இறையாண்மையை நிலைநாட்டவும், அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பாதையை பலப்படுத்தவும் மேற்கொண்ட சாதனைகளை பிரதிபலிப்பதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில், எமது இரு நட்பு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வினால் இந்த உறவுகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. எமது இரு நாடுகளினதும் மக்களினதும் பொதுவான நலன்களுக்காக இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை குடியரசின் இந்த தேசிய கொண்டாட்டத்தில் தானும் இணைந்து கொள்வதுடன், இலங்கை குடியரசு தொடர்ந்தும் பாதுகாப்பாகவும், ஸ்திரத்தன்மையுடனும் விளங்கி, மேன்மேலும் முன்னேற்றத்தையும் சுபிட்சத்தையும் அடைய வேண்டுமென வாழ்த்துவதாக காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயும், மகனும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்!

0

சிரந்தி மற்றும் நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பாணை: விசாரணை பிரிவுகளில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்றைய தினம் (03) நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவின் வெவ்வேறு விசாரணை பிரிவுகளில் ஆஜராகியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சவை இன்றைய தினம் காலை 09 மணியளவில் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையில் ‘சிரிலிய’ (Siriliya) கணக்கிலிருந்த நிதியைப் பயன்படுத்தி வீடொன்றை கொள்வனவு செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவுசெய்ய இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவிக்கு வருகை தந்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ (Kehelbaddara Padme) என்பவருடன் தொடர்புகளைப் பேணியதாக நாமல் ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்வதற்காகவே அவர் இவ்வாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்

இன்றைய தினம் தந்தை மஹிந்த ராஜபக்சவின் பாரியார் மற்றும் புதல்வர் ஆகிய இருவருமே வெவ்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைப் பிரிவுகளுக்கு வருகை தந்துள்ள நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வெளியில் பெருமளவான ஆதரவாளர்கள் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.