ஏகாபத்தியவாதிகள் ஈரான் மீது நடத்திய ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ,ஈரான் மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு பூரண ஆதரவளிப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஈரானின் ஆன்மீகத் தலைவர் அலிகாமெய்னி கொல்லப்பட்ட விடயம் ஆழ்ந்த அதிர்ச்சியளித்துள்ளது. இந்த துயரமிகுந்த தருணத்தில், ஈரானியர்களுக்கு இதயபூர்வமான அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.
இந்தக் கொலையானது, தனிப்பட்ட ஒரு தலைவரினதோ அல்லது தளபதிகளதோ கொலைகளல்ல. தேசங்களின் ஆள்புல ஒருமைப்பாடு, தனித்துவம் மற்றும் நாடுகளின் இறைமைக்கு எதிரான தாக்குதலாகவே உள்ளது.
இதனால்,மத்தியகிழக்கு நாடுகள் எதிர்பாராத ஸ்திரத்தை இழந்துள்ளதுடன் பாரிய குழப்பத்திலும் மூழ்கியுள்ளன. சர்வதேச ஒழுங்கு விதிகளையும் சட்டத்தையும் மீறி இக்கொடூரம் நடந்துள்ளது.
இந்நிலையில் தொடர்ந்தும் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளதா ல், மத்தியகிழக்கில் வன்முறைச்சூறாவளி விஸ்வரூபமாடுகிறது. மட்டுமன்றி அங்குள்ள நாடுகள் பலவற்றை தீக்கிரையாகவும் இந்தக் கொந்தளிப்புகள் மாற்றியுள்ளன.சுதந்திர தேசத்தை இல்லாதொழிப்பதற் கான அப்பட்டமான அத்துமீறல்களே இவை.இந்த அத்துமீறிய அராஜகங்கள் ஒருபோதும் நீதிக்கு முன்னால் நியாயப்படுத்த முடியாதவை.
ஒவ்வொரு நாடுகளதும் இறைமை மற்றும் ஒருமாப்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.எந்த நாடுகளும் சுதந்திர நாடொன்றில் அத்துமீறிச் செயற்படுவதை ஏற்க முடியாது. ஜனநாயகக் கட்டமைப்பில் முறையாக கட்டமைக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில்,இந்த அத்துமீறல்களை வன்மையாக கண்டிக்கிறோம். மத்தியகிழக்கிலும் அமைதியே அவசியம்.இந்நாடுகளின் உரிமைகள் மற்றும் இறைமைகளும் பாதுகாக்கப்படுவதே அமைதிக்கு அடித்தளமிடும்.
ஆதரவு என்ற போர்வையில், எல்லாவற்றையும் அள்ளிச்செல்லும் கபட அரசியலுக்கு, மத்தியகிழக்கு மண்டியிடவும் கூடாது.உரிமைகள் களவாடப்படுவது மற்றும் இறைமைகள் அடிமைப்படுத்தப்படுவதற்கு ஜனநாயகத்தில் இடமில்லை.எனவே,மத்தியகிழக்கில் தீவிரமடைந்துள்ள வன்முறைகளை பேச்சுவார்த்தைகளூடாக தீர்த்து வைப்பதையே எமது கட்சி விரும்புகிறது.
ஈரானின் ஒருமைப்பாடும் ஆள்புல எல்லைகளும் பாதுகாக்கப்படுவதற்கு எமது கட்சி பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும்.ஆக்கிரமிப்பு வெறித்தனம் மற்றும் படுகொலைகளால் சமாதானம்,ஸ்திரம் மற்றும் நியாயம் என்பவற்றை அடைந்திவிட முடியாது.இவ்விடயத்தில் ஜனநாயகத்தை நேசிப்போர் தௌிவுடன் செயற்பட வேண்டும். என்றார்
மத்திய கிழக்கில் நிலவும் தீவிரமான போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்களைத் தொடர்ந்து, இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ள ஹோட்டல்களுக்குப் பாதுகாப்பை அதிகரிக்க இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொழும்பில் உள்ள முக்கிய வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் நடமாடும் இடங்களைப் பாதுகாக்குமாறு பொலிஸ் மா அதிபர் (IGP) அனைத்துப் பிரிவுகளுக்கும், குறிப்பாகச் சுற்றுலாப் பொலிஸ் பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளார். போராட்டக்காரர்கள் தூதரக வளாகங்களுக்குள் நுழைய முயல்வதைத் தடுப்பதிலும், வன்முறைப் போராட்டங்கள் வெடிக்காமல் கட்டுப்படுத்துவதிலும் பொலிஸார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள சாபாத் (Chabad) மையங்களுக்கு 24 மணி நேரப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையில், போதிய எண்ணிக்கையிலான பொலிஸ் அதிகாரிகள் இல்லாதது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்று வரும் “பிக் மேட்ச்” (Big Match) கிரிக்கெட் போட்டிகளுக்கான கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்காகப் பெருமளவிலான அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதே இதற்குக் காரணமாகும். இருப்பினும், கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்தவுடன், அந்த அதிகாரிகள் மீண்டும் தூதரகங்கள் மற்றும் ஹோட்டல்களின் பாதுகாப்பு வளையங்களை வலுப்படுத்த அனுப்பப்படுவார்கள் என்று பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
சர்வதேச சூழலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்க முயன்ற வன்முறைப் போராட்டங்களில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கையிலும் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், ஈரானில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால், உலகெங்கிலும் உள்ள தனது நாட்டு குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையின் விமான நிலையப் பாதுகாப்பு வழக்கம் போல் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பாக அவர்கள் தங்கியுள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பொதுப் பாதுகாப்பு அமைச்சு இந்த ஒட்டுமொத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கண்காணித்து வருவதாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பின் தூதரகப் பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பொலிஸாரின் நடமாடும் ரோந்துப் பணிகள் (Mobile Patrols) பகல் மற்றும் இரவு நேரங்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை அடுத்து, அங்குள்ள அனைத்து தூதரக சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கடல் கண்ணிவெடி அச்சுறுத்தலால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூதரகங்கள் மூடல் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை
சவுதி அரேபியாவின் ரியாத், ஜித்தா மற்றும் தஹ்ரான் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தூதரகப் பணிகள் மார்ச் 3, 2026 அன்று முதல் காலவரையறையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. தூதரக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அங்குள்ள பணியாளர்கள் மற்றும் அமெரிக்க குடிமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு (Shelter in place) உத்தரவிடப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்காகக் கூட தூதரகப் பகுதிகளுக்கு வர வேண்டாம் என்று குடிமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க குடிமக்கள் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களை முறையாகப் பராமரிக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
மறுபுறம், ஈரானிய கடற்படையால் ஹார்முஸ் ஜலசந்தியில் வைக்கப்படக்கூடிய கடல் கண்ணிவெடிகள் (Sea mines) குறித்து அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு துணைச் செயலாளர் மைக்கேல் முல்ராய் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பாதை வழியாகவே உலகின் பெரும்பகுதி எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படுவதால், இது மிக முக்கியமான கடல்வழிப் பாதையாகக் கருதப்படுகிறது.
ஈரான் இந்தப் பாதையில் கண்ணிவெடிகளை வைப்பது எளிது என்றும், ஆனால் அவற்றை அகற்றி மீண்டும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யப் பல மாதங்கள் ஆகலாம் என்றும் முல்ராய் தெரிவித்துள்ளார். இதனால் கப்பல்களுக்கான காப்பீட்டு நிறுவனங்கள் அந்தப் பகுதிக்குச் செல்லும் கலன்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் போக்கு நீடித்தால் உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது:
எரிசக்தி தடை: ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டால், உலக நாடுகளுக்குச் செல்லும் எரிசக்தி விநியோகம் முற்றிலுமாக நின்றுவிடும்.
பொருளாதாரச் சரிவு: வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தில் இது ஒரு பேரழிவை ஏற்படுத்தும்.
விலையேற்றம்: ஏற்கனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், இந்தப் போக்குவரத்துத் தடை விலையை மேலும் உச்சத்திற்குத் தள்ளும்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான நேரடித் தாக்குதல்களும், லெபனான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் நிலவும் பதற்றமும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஒரு பெரும் போர் முனையாக மாற்றியுள்ளன. சர்வதேச சமூகம் இந்த எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க மாற்று வழிகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
இஸ்ரேலிய விமானப்படை, ஈரான் மற்றும் லெபனானின் பெய்ரூட் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. ஈரானிய ஆட்சி மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்குச் சொந்தமான ராணுவ நிலைகளே தங்களின் இலக்கு என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, லெபனானில் உள்ள பாப்தா (Baabda) பகுதியில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
மறுபுறம், அமெரிக்க மத்திய கட்டளை (U.S. Central Command), ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கட்டுப்பாட்டு மையங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களை அழித்துள்ளதாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து தனது பணியாளர்களை வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
இந்த மோதலின் மிக முக்கிய விளைவாக, உலக எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் மூடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் பாதையை கடக்க முயலும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
உலகின் மொத்த எண்ணெய் நுகர்வில் ஐந்தில் ஒரு பங்கு இந்தப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது,. தற்போதைய மோதலில் நான்கு எண்ணெய் டாங்கர்கள் சேதமடைந்துள்ளதுடன், இரண்டு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 150 கப்பல்கள் அந்தப் பகுதியில் முடங்கியுள்ளதால் காப்பீட்டு நிறுவனங்கள் அந்தப் பிராந்தியத்தில் செல்லும் கப்பல்களுக்கான போர் அபாயக் காப்பீட்டை (War risk coverage) ரத்து செய்துள்ளன.
எகிறும் எண்ணெய் விலை மற்றும் பொருளாதாரத் தாக்கம்
எரிசக்தி விநியோகத் தடையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை 2.2% உயர்ந்து ஒரு பேரல் 79.44 டாலராக எட்டியுள்ளது. அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலையும் 1.6% உயர்ந்து 72.40 டாலராக உள்ளது.
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியாளர்களில் ஒன்றான கத்தார், தனது உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இந்த நிலை நீடித்தால் ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் (Inflation) கணிசமாக உயரும் என்றும், உற்பத்தித் திறன் வீழ்ச்சியடையும் என்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் பிலிப் லேன் எச்சரித்துள்ளார்.
எரிசக்தி தட்டுப்பாட்டை எதிர்கொள்ள தைவான் போன்ற நாடுகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. தற்போதைக்குத் தட்டுப்பாடு இல்லை என்றாலும், நிலைமை மோசமானால் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிடமிருந்து எரிவாயுவைப் பெறவும், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுடன் இணைந்து செயல்படவும் தைவான் திட்டமிட்டுள்ளது,.
மத்திய கிழக்கில் நிலவும் இந்த போர்ச் சூழல் உலக நாடுகளைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளும் என்று அஞ்சப்படுகிறது.
ரியாத்தில் உள்ள ஹோட்டல் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் தற்போது பெரும் சர்ச்சையையும், பரஸ்பர குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளன.
RIA Novosti செய்தி நிறுவனத்திடம் பேசிய ஈரானிய அதிகாரி ஒருவர், ரியாத் ஹோட்டல் மீதான தாக்குதல் அமெரிக்காவால் நடத்தப்பட்ட ஒரு “பொய் வழி நடவடிக்கை” (False Flag Operation) என்று கூறியுள்ளார்.
அரபு நாடுகளை ஈரானுக்கு எதிராகப் போரில் ஈடுபடத் தூண்டுவதற்காக அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இதைச் செய்ததாக அந்தத் தரப்பு குற்றம் சாட்டுகிறது. இருப்பினும் இந்தத் தாக்குதல் குறித்த செய்திகளை சவூதி அரேபிய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.
ரியாத்தில் உள்ள ஹயாட் ரீஜென்சி (Hyatt Regency) ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் பொய்யானவை என சவூதி தகவல் தொழில்நுட்பக் குழு தெரிவித்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஹோட்டல் எரியும் காட்சிகள் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டவை என்றும், அவை உண்மைக்குப் புறம்பானவை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று ரியாத் மற்றும் கிழக்கு மாகாணத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஈரானியத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக சவூதி உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் சில இடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான் தான் காரணம் என அந்த நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.
ஈரானிய எல்லைக்குள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் “ஆபரேஷன் ரோரிங் லயன்” (Operation Roaring Lion) என்ற இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இச்சம்பவங்கள் பார்க்கப்படுகின்றன.
உலகப் போர்ப் பதற்றமும் இலங்கையின் பொருளாதார சவால்களும்
இப்பொழுது உலகம் முழுவதும் பதற்றமாக இருக்கிறது. பெரியதொரு போர் மூண்டிருக்கிறது. மத்திய கிழக்கு எங்கும் யுத்தப் பேரிகை முழங்கிக் கொண்டிருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே இன்னொரு நாட்டைத் தாக்குவதற்கு இருக்கிற அதிகாரம் ஒரு வல்லரசின் கைகளில் வந்திருக்கிறது. இது பற்றி கண்டனங்கள் எவ்வளவுதான் வந்தாலும், இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு இதனால் ஏற்படுகிற பாதிப்புகள் மிகவும் பாரதூரமானவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
சனிக்கிழமை (28) மாலை, சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் பவளவிழா தொடர்பில் வித்தக விழா மற்றும் “நீதி முரசு” வெளியீட்டு நிகழ்வு – 2025 என்பன கொழும்பு, இலங்கை சட்டக் கல்லூரியில் நடைபெற்றது.அதில், சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
இந்தத் தமிழ் மன்றத்தின் தலைவராக 1982ஆம் ஆண்டில் நான் நான் பதவி வகித்தேன். 75 ஆண்டுகளைக் கடந்து பவளவிழா தொடர்பில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்ற இந்தத் தமிழ் மன்றத்தின் நிகழ்ச்சியைப் பார்க்கின்ற பொழுது மிகப் பூரிப்பாக இருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில் எங்களுடைய காலத்தில் உங்களை விடவும் நான்கு மடங்கு கூடுதலாகத் தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவர்கள் இருந்தார்கள். இன்று அந்த நிலைமை சட்டக் கல்லூரியில் இல்லை . இதை நிவர்த்தி செய்யவதற்கு அவ்வப்போது முயற்சிகள் எடுக்கப் பட்டாலும் கைகூடவில்லை.
எங்களுடைய காலத்தில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரிக்கு இடையிலான மரபு ரீதியான போட்டிகள், சட்ட பீடத்திற்கும் எங்களுக்குமிடையிலான விவாதம், இந்த எழுந்தமான பேச்சுப்போட்டி, அறங்கூறும் அவையத்துப் போட்டி இவைகள் என்ற இந்த மாமூலான விடயங்களை மாத்திரம் நடத்திவிட்டு நாங்கள் திருப்தியடைந்துவிட்டோம். ஆனால், இன்று நீங்கள் நிறைய பரிசில்கள் மாத்திரமல்ல, இன்னும் விவாதப் போட்டிகளையும் கூடுதலாகச் சட்ட பீடம், மருத்துவப் பீடத்திற்கிடையிலான விவகாரங்களையும் கூட்டியிருக்கிறீர்கள் என்பது மிகவும் மனநிறைவைத் தருகிறது. குறிப்பாக, இந்த நிர்வாகம் மிக விமர்சையாக நடத்திய உங்களுடைய 75வது அகவை கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடந்தது; அதில் அடியேனும் பங்குபற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றிருந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்.
இப்பொழுது உலகம் முழுவதும் பதற்றமாக இருக்கிறது. பெரியதொரு போர் மூண்டிருக்கிறது. மத்திய கிழக்கு எங்கும் யுத்தத்தின் பேரிகை முழங்கிக் கொண்டிருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே இன்னொரு நாட்டைத் தாக்குவதற்கு இருக்கிற அதிகாரம் ஒரு வல்லரசின் கைகளில் வந்திருக்கிற துர்ப்பாக்கிய நிலையைக் காண்கிறோம். இன்று நேற்றல்ல, ஐக்கிய நாடுகள் சபையை ஆரம்பித்ததும் ஐ நா சாசனம் (UN Charter )என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ஐக்கிய நாடுகள் சாசனத்தை வைத்துக் கொண்டு, இன்று நாங்கள் உள்நாட்டில் பேசுகிற சட்டத்தின் ஆட்சி (Rule of Law)என்பது வெறும் நாட்டின் உள்விவகாரத்தில் மாத்திரமல்ல, சர்வதேச விவகாரத்திலும் அது தேவை என்பதற்காக Rule-based International Order என்று ஒன்று இருக்கிறது.
அதைத் தொடர்ந்தும் மீறுகிற, எடுத்த எடுப்பில் நினைத்ததையெல்லாம் செய்துகொண்டு போகிற ஒரு வல்லரசின் இந்தப் போக்கு சம்பந்தமாகக் கண்டனங்கள் எவ்வளவுதான் வந்தாலும், எங்களைப் போன்ற சிறிய நாடுகளுக்கு இதனால் ஏற்படுகிற பாதிப்புகள் மிகவும் பாரதூரமானவை.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம். இப்பொழுது யுத்தத்தின் காரணமாக எண்ணெய் விலை பல மடங்கு அதிகரிக்கப் போகிறது. இதற்கு எப்படி நாங்கள் ஈடுகொடுக்கப் போகிறோம்? அடுத்த வருடத்திலிருந்து நாங்கள் பில்லியன் டொலர் கணக்கில் கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கடப்பாடு வருகிறது. இதை ஒத்திவைப்பதற்கும் சர்வதேச நாணய நிதியம் முன்வருமா என்பது தெரியாது.அதுவும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
அவர்களாக யுத்தங்களைத் தொடங்கி, இப்படி அக்கிரமங்களைப் புரிந்துகொண்டு செல்லும்போது, மத்திய கிழக்கில் இருக்கின்ற இஸ்ரேல் என்ற ஒரு நாட்டின் தேவைக்காக இவ்வளவு பாரிய ஒரு யுத்தத்தை அவர்கள் அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் என்பது மிகக் கண்டனத்துக்குரிய விடயமாகும்.
சிறிய நாட்டில் இருக்கின்ற எங்களுக்கு இதைக் கண்டித்துப் பேசுவதைத் தவிர வேறேதும் செய்துவிட முடியாது.
ஆனால் இதற்கு ஒர் அடிப்படைக் காரணம் இருக்கிறது, அந்த அடிப்படைக் காரணம் எங்களுடைய நாட்டிலும் எங்களுடைய அரசியல் யாப்பிலும் இருப்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது. நிறைவேற்று அதிகாரம் ஒருவரின் கைகளில் இருக்கிறபோது எடுக்கும் இவ்வாறான முடிவுகள் மிகவும் ஆபத்தானவை.
1978ஆம் ஆண்டு ஆக்கிய அரசியலமைப்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைக் கொண்டுவந்ததிலிருந்து அது நல்லதா,கெட்டதா? என்ற விவாதம் தொடர்ந்து கொண்டு போகிறது. இன்று ஆட்சியில் இருப்பவர்களும் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவோம் என்று வாக்களித்துவிட்டு வந்தவர்கள்தான். ஆனால், அவர்களுடைய ஆட்சி முடிந்து போகும் வரை இதைச் செய்யமாட்டார்கள் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது
ஏனென்றால் இதில் இருக்கிற அதிகாரத்தைப் பாவித்து எதையும் செய்யலாம். இது சட்டத்தின் ஆட்சியை மிகப் பெரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்குகின்ற, ஒரு தனிநபரின் கையில் இருக்கிற அதிகாரமாக இருப்பதுதான் இன்று இந்த மிகப் பெரிய அனர்த்தத்தை உலகளாவிய ரீதியிலும் உருவாக்கியிருக்கிறது.
இந்நாட்டிலும் இலைமறை காயாகத் தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் இந்த விவகாரம் மிகப்பெரிய பாதிப்பான விடயமாக இருக்கிறது. எடுத்த எடுப்பில் நிறைய மாற்றங்களைச் செய்வதற்கான அதிகாரம் இன்றைய ஆட்சியாளர்கள் கைகளிலும் இருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் நாட்டு மக்கள் இவர்களுக்கு அதிகமாகக் கொடுத்துவிட்டார்கள். யாரிடத்திலும் எதையும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது.
நீதிமன்றத்தில் இது அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டதா இல்லையா என்கிற விவகாரத்தில் அடிக்கடி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நடக்கின்ற போது, (Constitutional Matters) வாதிடும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் இருக்கின்ற இந்த நிலையில், எங்களைப் பொறுத்தமட்டில் வருங்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றிச் சட்ட மாணவர்கள் மிகவும் உன்னிப்பாக இருக்க வேண்டும்.சட்டத்தரணிகள் சங்கமமும் உன்னிப்பாக இருக்க வேண்டும்.
அண்மையில் சட்டத்தரணியொருவர் கொல்லப்பட்டபோது முழுச் சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் போர்க்கொடி தூக்கினார்கள். ஆனால் அதைவிடவும் மிகப்பெரிய பாதிப்பு அரசியல் யாப்பில் கைவைக்கின்றபோது ஏற்படும்.
எதேச்சதிகாரமாகப் பல விடயங்களைச் செய்வதற்கு எத்தனம் நடக்கிறது என்று கேள்விப்படுகிறோம். எனவே, அவ்வாறான விடயங்கள் நடக்கின்ற போது ,அதற்கெதிராகக் குரல் கொடுப்பதில் சட்ட மாணவர்களும், சட்டத்தரணிகளும் முன்னிலை வகிக்க வேண்டும். அது சம்பந்தமாக மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டும் என்பது எங்களுக்கிருக்கிற மிகப்பெரிய தார்மீகப் பொறுப்பாகும்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கை அரசாங்கம் விரிவான இராஜதந்திர, விமானப் போக்குவரத்து மற்றும் பொருளாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. மோதல் நடைபெறும் பகுதி இலங்கையிலிருந்து தொலைவில் இருந்தாலும், அந்தப் பிராந்தியத்துடனான வலுவான வர்த்தக, சுற்றுலா மற்றும் தொழிலாளர் உறவுகள் காரணமாக இலங்கை இந்தத் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இராஜதந்திர நிலைப்பாடு மற்றும் அமைதிக்கான அழைப்பு
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. இந்தப் போர்ச் சூழல் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் சர்வதேச அமைதிக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என எச்சரித்துள்ள வெளிவிவகார அமைச்சு, அனைத்துத் தரப்பினரும் உச்சக்கட்ட நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், பதற்றத்தைத் தணிக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கின் 14 நாடுகளில் தற்போது 10 இலட்சத்திற்கும் அதிகமான (1,007,855) இலங்கையர்கள் வசிக்கின்றனர். இதில் குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியம்: 350,000 பேர், சவூதி அரேபியா: 246,139 பேர், குவைத்: 175,000 பேர், கத்தார்: 140,000 பேர் பணிபுரிகின்றனர்.
இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் 24 மணிநேர அவசர செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இலங்கையர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், தூதரகங்களுடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவசரத் தேவைகளுக்கு 1989 என்ற துரித இலக்கத்தையோ அல்லது +94 74 259 5546 என்ற இலக்கத்தையோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கான விசேட சலுகைகள்
மத்திய கிழக்கு வான்பரப்பு மூடப்பட்டதால் இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் தாயகம் திரும்புவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தணிக்க, பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாட்கள் இலவச விசா நீடிப்பு வழங்க ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் உதவிக்காக 1912 என்ற 24 மணிநேர துரித அழைப்பு இலக்கம் செயல்பாட்டில் உள்ளது.
விமானப் போக்குவரத்து பாதிப்புகள்
பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை சில இடங்களுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை வருகை மற்றும் புறப்பாடு உட்பட 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பா மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் வழமை போல இயங்குகின்றன. அவசர தரையிறக்கங்களுக்கு மத்தல மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் இருப்பு மற்றும் உள்நாட்டு நிலைமை
நாட்டில் ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதியளித்துள்ளது. எனினும், மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம் காரணமாக எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. எரிபொருளைப் பதுக்குபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு எச்சரித்துள்ளது.
இதேவேளை இலங்கை வான்பரப்பில் வெளிநாட்டு இராணுவ விமானங்கள் பறப்பதாகப் பரவிய வதந்திகளை விமானப்படை முற்றாக மறுத்துள்ளது. வான்படையின் ஆண்டு நிறைவு ஒத்திகைகள் காரணமாகவே விமான நடமாட்டம் அதிகரித்துள்ளதாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கை இந்த மோதலில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், தனது நாட்டு மக்களின் பாதுகாப்பு, சுற்றுலாத்துறை மேம்பாடு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையைப் பேண அரசாங்கம் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மிகப்பெரிய நடமாடும் சுகாதார சேவையான “ஆரோக்கிய” (Arogya) திட்டத்தின் கீழ், அதன் 58வது நடமாடும் சுகாதார முகாம் அண்மையில் படபொத்த (Batapotha) ஸ்ரீ சுதர்சனாராம புராண விகாரை வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் வழிகாட்டல் மற்றும் வள பங்களிப்புடன், “Healthy Sri Lanka” (ஆரோக்கியமான இலங்கை) என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த மனிதாபிமானப் பணியை படபொத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விசேட முகாமின் ஊடாக பொதுமக்களுக்குப் பல மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன, இதில்
கண் பரிசோதனை மற்றும் பல் சிகிச்சை.
உடல் நிறை சுட்டெண் (BMI) பரிசோதனை மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனை.
இரத்தச் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனைகள்.
பெண்களுக்கான “சுவநாரி” கிளினிக் மற்றும் சுவாச நோய்களுக்கான சிகிச்சை.
ஆயுர்வேத மற்றும் மேற்கத்திய மருத்துவ ஆலோசனைகள்.
மனநல மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகள் ஆகிய சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் நோயாளிகளுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டதுடன், மேலதிக மற்றும் நீண்டகால சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், அரச பிரதான வைத்தியசாலைகளில் உள்ள நிபுணத்துவ சிகிச்சை பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த முகாம் ஆரம்பமான போதே படபொத்த, நுஹேதெனிய, விமலதிஸ்ஸ மாவத்தை, தேவால வீதி, அருக்கபிட்டிய உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (செய்தி மற்றும் விளம்பரம்) லக்ஷ்மேந்திர தமயந்தகுமார தென்னக்கோன் அவர்களின் கண்காணிப்பின் கீழ் இந்தத் திட்டம் நடைபெற்றது.
இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் சனிக்கிழமைகளில் கிராமப்புற மக்களுக்காகவும், தெரிவு செய்யப்பட்ட புதன்கிழமைகளில் அரச ஊழியர்கள், பொலிஸார் மற்றும் முப்படையினருக்காகவும் இம்முகாம்கள் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, தேசிய கண் வைத்தியசாலை, கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் ஆகியவற்றின் விசேட வைத்தியர்கள் மற்றும் தாதியர் குழுவினர் இந்த முகாமில் சேவையாற்றினர்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து மக்களும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் இந்த “ஆரோக்கிய” திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் படபொத்த விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய அத்தனாயாயே சந்தரதன ஹிமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மாரவில, கட்டுநேரிய பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் ஒருவரால் தனது மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மார்ச் முதலாம் திகதி இரவு 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தக் கொடூரக் கொலையில் உயிரிழந்தவர் கட்டுநேரிய – பாங்கட சந்தியில் வசித்து வந்த 44 வயதான அதிகாரி முதியன்சேலாகே துஷாரி அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, படுக்கையறையில் வைத்து கணவன் தனது மனைவியின் கழுத்தைக் கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேக நபரான கணவன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும், கைது செய்வதற்குமான விசேட விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தற்போது எரிபொருள் விநியோகத்தில் எந்தவித சிக்கலும் இல்லாததால், எரிபொருளைப் பெறுவதற்கு மீண்டும் கியூஆர் (QR) குறியீடு முறையை அறிமுகப்படுத்த வேண்டிய உடனடித் தேவை எதுவும் ஏற்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற்று வருவதாகவும், தற்போதைய நிலையில் பொதுமக்கள் தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அவர் மேலும் விளக்குகையில், முன்னதாக நாட்டில் நிலவிய கடுமையான எரிபொருள் நெருக்கடி காரணமாக, எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது மட்டுமே கியூஆர் குறியீடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டார்.
தற்போதைய நிலவரப்படி, நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்று உறுதிபடத் தெரிவித்த அமைச்சர், விநியோகச் சங்கிலியில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் கூறினார். இருப்பினும், எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு தேவை அல்லது நெருக்கடி நிலை ஏற்பட்டால் மட்டுமே, மீண்டும் கியூஆர் குறியீடு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம், எரிபொருள் விநியோகம் தொடர்பில் நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் நாட்டின் சகல பாகங்களிலும் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்ந்துகொண்டே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.