Saturday, September 13, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 34

மெழுகு அருங்காட்சியகம் திறந்துவைப்பு!

0

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் இன்று (17) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது. 

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் புதுப்பிக்கப்பட்ட எஹெலேபொல வளவின் தொல்பொருள் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. 

எஹெலேபொல வளவின் ஒரு பகுதியாக இருக்கும் மலைநாட்டு இராஜ்ஜியத்தின் கட்டிடக்கலை, பழக்கவழக்கங்கள் மற்றும் கலைகள் இங்கு மெழுகைப் பயன்படுத்தி மீளுருவாக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய கைவினைப்பொருட்கள் தொடர்பான கண்காட்சி அரங்குகள் மாத்திரமன்றி பண்டைய உணவகமும் நிறுவப்பட்டுள்ளன. 

வணக்கத்திற்குரிய வெலிவிட்ட ஸ்ரீ சரணங்கர சங்கராஜ தேரர், வணக்கத்திற்குரிய வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரர், மன்னர் விமலதர்மசூரிய, குசுமாசன தேவி, மொனரவில கெப்பட்டிபொல, தேவேந்திர முலாச்சாரி, ஆளுநர் ராபர்ட் பிரவுன்ரிக், எஹெலேபொல மகாதிகாரம், குமாரிஹாமி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட வரலாற்றில் முக்கியமான 35 நபர்களின் உயிரோட்டமான மெழுகு உருவங்கள் இங்கு மீளுருவாக்கப்பட்டுள்ளன. 

இலங்கையின் பெருமையையும் கண்ணியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், கண்டிக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகமானது மலைநாட்டு இராஜ்ஜியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வரலாற்றை தற்போதைய தலைமுறையினருக்கு துல்லியமாக அறிந்துகொள்ளக் கூடிய இடமாக இருக்கும். 

கம்பளையில் வசிக்கும் அதுல ஹேரத் இந்த சிற்பங்களை உருவாக்கியுள்ளதோடு ஸ்ரீ தலதா மாளிகையின் எஹெலேபொல வளவு அருங்காட்சியக விசேட திட்டத்தின் கீழ் இந்தத் திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 

சியம் மகா பீடத்தின் மல்வது அனுநாயக்க தேரர்களான வணக்கத்துக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர், வணக்கத்துக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர், அஸ்கிரிய அனுநாயக்க தேரர்களான வணக்கத்துக்குரிய வெந்டருவே உபாலி தேரர், வணக்கத்துக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் மற்றும் விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி. லால்காந்த, ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, மற்றும் பல்வேறு துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மஜ்மா நகர் தொடர்பில் பா.உ ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை!

0

மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணியை விரைவுபடுத்துங்கள்..!

கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை.

மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத், கந்தசாமி பிரபு ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது.

இக்கூட்டத்தில் விஷேட அதிதியாக, சுற்றாடல் அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி கலந்துகொண்டார்.

இதன்போது, சுற்றாடல் அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பல முன்மொழிவுகளை முன் மொழிந்த்திருந்தார். அதனடிப்படையில்,

ஓட்டமாவடி மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை தாங்குதலால் உயிரிழப்பு உட்பட பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த பிரதேசத்திற்கு யானை வேலி அமைக்கப்பட்டு மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் இதற்கான நிதியினை விரைவாக ஒதுக்கீடு செய்து இத் தேவையை பூர்த்தி செய்து தருவதாக உறுதிமொழி வழங்கினார்.

அதேபோல், ஓட்டமாவடி பிரதேசத்தில் அமைந்துள்ள அரிசி ஆலைகள், மர அலைகள் என்பனவற்றால் சூழல் மாசடைவு, அதிக சத்தம் போன்ற பல காரணங்களால் இத்தொழிற்சாலைகளை ஓட்டமாவடி பத்திரிகை தொழிற்சாலை காணிகளுக்கு மாற்றுவதற்கு எழுபது ஏக்கர் காணிகளை ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.

இதன்போது, சுற்றாடல் அதிகார சபை காணியை அமைச்சு வழங்குமாக இருந்தால் அதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என தெரிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தேவையான காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என உறுதிமொழி வழங்கினார்.

வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த அதிரடி உத்தரவு!

சில பாடசாலைகளில் வளங்கள் குவிந்துள்ளன. அதற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் எந்தவொரு வளங்களும் இல்லாமல் உள்ளன. வளங்கள் சமச்சீராக பகிரப்படுவதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்களே பொறுப்பு என வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அடுத்த ஆண்டுக்குரிய வேலைத் திட்டங்களை இன்னும் ஒரு மாத காலத்தினுள் வழங்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (15.07.2025) நடைபெற்றது.

ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களை இன்று புதன்கிழமையுடன் (16.07.2025) அவர்களை விடுவித்து புதிய நிலையங்களில் பொறுப்பேற்க பணிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களை ஆளுநர் கேட்டுக்கொண்டார். அவர்கள் புதிய நிலையங்களில் அறிக்கையிடவில்லையாயின் நிறுவன நடைமுறைகளுக்கு அமைவான நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறும் பணித்தார்.

மேலும், பாடசாலைகளில் நடைபெறும் தவணைப் பரீட்சைக்கான கட்டணங்களை மாணவர்களிடமிருந்து அறவிடுவதில்லை எனவும், அதற்குரிய நிதி மாகாண சபையால் வழங்கப்படும் என்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் தெரிவித்தார். பரீட்சை வினாத்தாள் திருத்துவதற்கு கொடுப்பனவு வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் வடக்கு மாகாணம் தொடர்ந்தும் பின்தங்கியுள்ள நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது. கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் முன்னிலையில் இருந்தாலும், சாதாரண தரப் பரீட்சையில் முன்னேற்றத்தைக் காண்பிக்க முடியாமைக்கான காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார்.

சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு புறக்காரணிகளால் அவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன என்றும், மாணவர்களுக்கான உளவள ஆற்றுப்படுத்தல் அவசியம் எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அதேநேரம், ஆசிரியர்களிடமிருந்து உணர்வுபூர்மான கற்பித்தல் செயற்பாடுகள் இன்னமும் அதிகமாகத் தேவை எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம், விளையாட்டுத் திணைக்களம், கலாசார அலுவல்கள் பிரிவு என ஒவ்வொரு திணைக்களத்தினதும் முன்னேற்றம் விரிவாக ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற சர்வதேச மாநாடு!

வறண்ட மண்டல விவசாயம் குறித்த 11வது சர்வதேச மாநாடு (11வது ICDA-2025) யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்ற குறித்த மாநாட்டில் பிரதம விருந்தினராக

யாழ் பல்கலைக்கழ துணைவேந்தர் பேராசிரியர் சிவகொழுந்து ஸ்ரீசற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

பிரதம பேச்சாளராக மஞ்சுளா குலரத்னா (லிங்கன் பல்கலைக்கழகம்-நியூசிலாந்து, யுகா சசாகி யமகட்டா பல்கலைக்கழகம்-யப்பான்) பங்குபற்றியதுடன், இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தின் ஹிமால் ஏ. சுரவீர அவர்களும் கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், விவசாயத்துறை சார்ந்த அதிகாரிகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

எல்லா நாடுகளும் இஸ்ரேல் உறவை துண்டிக்க வேண்டும்!

0

இஸ்ரேலின் காசா இனப்படுகொலையை தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கவேண்டிய நேரம் இது என ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொலம்பியா தலைநகரில் இடம்பெற்ற சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குல்கள் முற்றுகையிடப்பட்டுள்ள காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு உலக நாடுகள் என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதை ஆராய்வதற்காக இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளின் பிரதிநிதிகள் காசாமீதான இஸ்ரேலின் தாக்குதலை பாலஸ்தீனியர்களிற்கு எதிரான இனப்படுகொலை என குறிப்பிட்டுள்ளன.

ஒவ்வொரு நாடும் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை மீள்பரிசீலனை செய்து அந்த நாட்டுடனா உறவுகளை இடைநிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ள பிரான்செஸ்கா அல்பெனிஸ் தனியார் துறையினரும் இஸ்ரேலுடனான உறவுகளைதுண்டிப்பதை உலகநாடுகள் உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய பொருளாதாரம் தற்போது இனப்படுகொலையாக மாறியுள்ள ஆக்கிரமிப்பை தக்கவைப்பதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் அரசாங்கங்களும் தனிநபர்களும் என்ன செய்தார்கள் என்பதை உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும்  நாங்கள் அச்சத்தினால் பயத்தினால் பின்வாங்கினோமா அல்லது மனித கண்ணியத்தை பாதுகாக்க எழுந்தோமா என்பதை உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும்.

நீண்ட காலமாக சர்வதேச சட்டம் விருப்பத்தேர்வாகக் கருதப்படுகிறது – பலவீனமானவர்களாகக் கருதப்படுபவர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுகிறது சக்திவாய்ந்தவர்களாகச் செயல்படுபவர்களால் புறக்கணிக்கப்படுகிறது. இந்த இரட்டைத் தரம் சட்ட ஒழுங்கின் அடித்தளத்தையே அரித்துவிட்டது. அந்த சகாப்தம் முடிவுக்கு வர வேண்டும்.

இங்கு பொகோட்டாவில் பல நாடுகள் மௌனத்தை கலைத்துஇ போதுபோதும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் போதும்இவெற்றுவார்த்தைகள் போதும்இவிதிவிலக்குவாதம் போதும்இஉடந்தையாகயிருத்தல் போதும்இஎன தெரிவிப்பதன் மூலம் சட்டப்பாதைக்கு திரும்புவதற்கான வழி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் அமைதியைப் பின்தொடர்வதில் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது – அனைவருக்கும் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அடிப்படையாகக் கொண்டது சிலருக்கு வெறும் சலுகைகளை அல்ல மற்றவர்களை அழிப்பதன் இழப்பில்.என அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சாசனம் மற்றும் உலகளாவிய மனித உரிமைகள் கருவிகள் அனைவரின் திசைகாட்டியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

இந்தோனேசியாவிற்கு வரிச் சலுகை!

0

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 19% தீர்வை வரி விதித்துள்ளார். 

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவுடனான புதிய ஒப்பந்தத்தின் கீழ் டிரம்ப் இந்த முடிவை எடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அதன்படி, முன்னர் அறிவித்த 32% தீர்வை வரியை 19% ஆக குறைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். 

இந்தோனேசியா – அமெரிக்க வலுசக்தி மற்றும் விவசாய உற்பத்திகளுடன், பில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான போயிங் ஜெட் விமானங்களையும் கொள்வனவு செய்ய இணக்கம் ஏற்பட்டதை அடுத்து டிரம்ப் இந்த சலுகையை வழங்கியுள்ளார்.

குருக்கள்மட ஜனாஸாக்களில் வஞ்சம் தீர்க்காதீர்!

0

புதைக்கப்பட்ட குருக்கள்மட ஜனாஸாக்களில் வஞ்சம் தீர்க்காதீர்.
முன்னாள் நீதியமைச்சர் ஹக்கீம் நிதி கொடுக்க மறுத்தாரா?

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

இலங்கை அரசியலில் இன்றைய பேசுபொருளாக இரு சிறுபான்மை இனங்களின் மனிதப்புதைகுழிகள் காணப்படுகின்றன.

தமிழ் மக்கள் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான நியாயத்தைக்கோரி தொடர்ந்த ஆர்ப்பாட்டங்கள், ஏனைய நகர்வுகளால் தற்போது அவை தோண்டப்படுகின்றது.

அதேநேரம், 1990ல் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு ஊர் திரும்பிய காத்தான்குடியைச்சேர்ந்த ஆண், பெண், சிறுவர்கள் உள்ளடங்களாக சுமார் 60-160 பேர் வரையான முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் கடத்திக்கொலை செய்து குருக்கள்மடத்தில் புதைக்கப்பட்ட புதைகுழிகளைத் தோண்டியெடுத்து அவர்களுக்கான நியாயம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையாகும்.

எவ்வாறு செம்மணிக்கான தீர்வைப்பெற உழைத்து தற்போதைய சூழ்நிலையில் அதனை சாத்தியப்படுத்திக் கொள்ள தமிழ் சமூகம் முயற்சிக்கிறதோ, அதேபோன்று, இச்சூழ்நிலையைப்பயன்படுத்தி தங்களுக்கான நியாயங்களை முஸ்லிம் சமூகம் பெற முயற்சிப்பதில் எவ்விதத்தவறுமில்லை.

கடந்த 2010ல் மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தவணை ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஐநா மனித உரிமைப்பேரவையில் இலங்கை தொடர்பான தொடரான அழுத்தங்களைச்சமாளிக்கும் நோக்கில் காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

இவ்வாணைக்குழு அமைக்கும் பின்னணியில் அன்றைய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் முக்கிய பங்கிருந்தது என்பது நினைவூட்டத்தக்கது.

இவ்வாணைக்குழு அமைக்கப்பட்ட காலப்பகுதியில் இவ்வாய்ப்பினை சாதகமாக பயன்படுத்தி குருக்கள்மடத்தில் புலிகளால் கொன்று புதைக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் தோண்டியெடுக்கப்பட வேண்டுமென்ற விடயத்தில் காத்தான்குடியைச்சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக் கடுமையான பிரயேத்தனங்களை அக்காலப்பகுதியில் மேற்கொண்டிருந்தார்.

கடத்திக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் உறவினர்களினூடாக முறைப்பாட்டைப்பதிவு செய்து, களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தினூடாக புதைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்தைத்தோண்டுவதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டனர்.

ஆனால், குறித்த புதைகுழிகள் தோண்டுவதை அன்றைய ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. ஏனெனில், மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில், அவரின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதியமைச்சராகவும் இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இக்கொலை இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கிழக்குத்தளபதியாக செயற்பட்டிருந்தார்.

அன்று இவை தோண்டியெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் கருணாவை சாட்சியாளராகப் பெயரிட வேண்டிய சூழ்நிலை வரும். இதை கருணாவும் விரும்பவில்லை,
ஜனாதிபதியும் சிங்கள மக்கள் மத்தியில் தனது கட்சிக்கு அவப்பெயர் வருவதை விரும்பவில்லை.

அதேநேரம், இக்காலகட்டத்தில் குருக்கள்மடத்திலுள்ள புலிகளால் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி ஆண், பெண், சிறுவர்களின் உடல்கள் வெளிவருவது சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிகள் கொடூரமானவர்கள், சிறுவர்களைக்கூட விட்டுவைக்காதவர்கள் என்ற அவப்பெயர் வருவதை புலம்பெயர் தமிழர் தரப்பும் விரும்பவில்லை.

அதே போன்று, கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக சிவநேசனத்துறை சந்திரக்காந்தன் (பிள்ளையான்) உட்பட விடுதலைப்புலிகளின் அன்றைய முக்கியஸ்தர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாக்கும் கடப்பாட்டுடன் இருந்ததால், குறித்த புதைகுழி தோண்டப்படுவதில் அவருக்கு விருப்பமிருக்கவில்லை.

தற்போது சொல்லப்படுவது போல் குருக்கள்மடத்தில் இருக்கும் புதைகுழியைத்தோண்டுவதற்கு நீதியமைச்சு நிதி கொடுக்கவில்லை. அதனால் தான் தோண்டப்படவில்லை. நீதியமைச்சராக ரவூப் ஹக்கீம் இருந்தும் எதுவும் செய்யவில்லை என உண்மைக்குப் புறம்பான அரசியல் காழ்புணர்வு கொண்ட ஒரு சிலர் விமர்சிப்பது போன்று நிதி இவ்விடயத்திற்கு தடையாக இருக்கவில்லை. குறித்த அகழ்வுப்பணிகளுக்கு நிதி தேவைப்பட்டாலும் அதனை நிறுவன ரீதியாக சேகரித்துக் கொள்ளும் வழிமுறைகள் தாராளமாக இருந்தது. அதனை அக்காலப்பகுதியில் மாகாண சபை உறுப்பினராக இருந்த இம்மனிதப் புதைகுழியைத் தோண்ட வேண்டுமென்று பிரயத்தனங்களை எடுத்த ஷிப்லி பாறுக் பல்வேறு ஊடக அறிக்கைகளில் உறுதிப்படுத்தி இருந்தார். அதற்கான முழு நிதியையும் வழங்குவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்( ICRC) முன்வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அன்று ரவூப் ஹக்கீம் தானே நீதியமைச்சர்? ஆம், அன்று ரவூப் ஹக்கீம் தான் நீதியமைச்சர், அவர் எவ்வாறான சூழ்நிலையில் அன்று மஹிந்த அரசாங்கத்தோடு இணைந்து கொண்டார் என்பது இன்று சிலருக்கு தெரியாவிட்டாலும், இவ்விவகாரம் பலரும் அறிந்த
விடயம். முஸ்லிம் காங்கிரஸை முழுமையாக உடைக்கும் அரசாங்கத்தின் சதியிலிருந்து கட்சியைப்பாதுகாப்பதற்கு அரசாங்கத்தோடு இணைந்து கொண்டார்.

அன்று யுத்த வெற்றியைக்காரணங்காட்டி ஆட்சிபீடமேறிய அரசாங்கம் நினைத்ததைச்செய்யும் அதிகாரங்களோடு இருந்ததால் அதன் ஆபத்துகளை முடியுமானளவு தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் இணைந்து கொண்டார்.

அன்றைய ஆட்சியில் றிசாட்,அதாவுள்ளாஹ் போன்ற சில முஸ்லிம் தலைவர்கள் ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளைகளாக இருந்ததன் காரணத்தினால் அரச தலைவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை மாற்றாந்தாய் பிள்ளை மனப்பாங்கிலேயே பார்த்தார்கள்.

நீதியமைச்சைக்கொடுத்தார்கள். அதனைச் செயற்படுத்துவதற்கு போதிய நிதிகளை ஒதுக்கிக் கொடுக்கவில்லை. அபிவிருத்திகளுக்கும் நிதிகளை ஒதுக்கிக்கொடுக்கவில்லை. அந்த ஆட்சியில் இணைந்ததை ரவூப் ஹக்கீம் இப்படிச்சொன்னார், “கண்ணைத்திறந்து கொண்டு குழியில் விழுந்து விட்டேன்” என்று.

அதேநேரம், அந்த ஆட்சியில் இனவாதிகளால் முஸ்லிம் சமூகம் பல நெருக்கடிகள், இழப்புக்களைச்சந்தித்த நேரம், அவ்வாறான நேரங்களில் ரவூப் ஹக்கீம் ஆளுங்கட்சிக்குள் ஒரு எதிர்க்கட்சியாகச் செயற்பட்டு அரசின் போக்கைக்கடுமையாக விமர்சித்ததையும், கண்டித்ததையும் பாராளுமன்றத்தில் உரத்து குரல் எழுப்பியதையும் மறக்க முடியாது.

சர்வதேசப்பரப்பில் அன்றைய ஆட்சி எப்படி இருக்கிறது என்பதையும், முஸ்லிம் விரோதப்போக்குகளை விளக்கும் நோக்கோடு ரவூப் ஹக்கீம் “நீதியில்லாத நாட்டில் தான் நீதியமைச்சர்” என்று வெளிப்படையாகக்கூறியது ஆட்சியாளரின் போக்கை தெட்டத்தெளிவாக விளக்கியது.

இவைகள் சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை ஏற்படுத்தியது. முஸ்லிம் விரோதப்போக்கிற்கெதிராக தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காகச்செயற்பட்டார் என்பது இன்றைய தேசிய மக்கள் சக்தி பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் போன்றவர்களுக்கு தெரியவாய்ப்பில்லை.

அதனால் தான் ரவூப் ஹக்கீம் இந்த அரசாங்கத்தின் கவனத்திற்கு மக்களின் நியாயமான பிரச்சினைகளை கொண்டு சென்றால் அதற்குப்பதில் வழங்காது அரசாங்கம் இவ்வாறானவர்களைக் கொண்டு ரவூப் ஹக்கீமுக்கு சேறுபூச முனைகின்றது.

குருக்கள்மடத்தில் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத்தோண்டும் வழக்கு 2014ல் களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.

இந்தாண்டு மஹிந்த ஆட்சியின் இறுதிப்பகுதியாகும். நீதிமன்றம் தோண்டுவதற்கு அனுமதி கொடுத்து அவை தோண்டுவதற்கான சட்டவைத்திய நிபுணர்களும் குறித்த இடத்திற்கு வந்த போது, குறித்த இடத்தை அடையாளப்படுத்துவதில் ஷிப்லி பாறுக் மற்றும் நகர சபை உறுப்பினர் றவூப் ஏ மஜீத் ஆகியோருக்கிடையில் இடத்தை அடையாளப்படுத்துவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவை நிறுத்தப்பட்டு, உரிய இடத்தை அடையாளப்படுத்தாமல் பரவலாகத்தோண்ட முடியாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதற்குப்பின்னால் வேறு அஜந்தாக்களோடு சிலர் செயற்பட்டார்களா? என்ற ஐயமும் வெளிப்படுத்தப்படுகிறது.

இந்த விடயத்தில் ஆரம்பம் முதல் முழுமையாக தன்னை ஈடுபடுத்திய ஷிப்லி பாறுக்கினால் பிரதேச மக்களின் கருத்துக்களை பெற்று ஊர்ஜிதமாக புதைகுழி அடையாளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும்,றவூப் ஹாஜியாரால் வேறு இடம் அடையாளப்படுத்தப்பட முரண்பாடு ஏற்பட்டது. சட்டவைத்திய அதிகாரிகளால் தெளிவாக இடத்தை அடையாளப்படுத்துமாறு கூறப்பட்டு, அவர்கள் திரும்பிச்சென்ற நிலையில், குறித்த வழக்கு சட்டமாஅதிபரின் ஆலோசனையின் பேரில் கிடப்பில் போடப்பட்டது.

அன்று குறித்த இவ்வழக்கு களுவாஞ்சிக்குடி நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஷிப்லி பாருக்கின் சார்பாக ஆர்வமாக இவ்வழக்கில் தோன்றி தன்னாலான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவை இவ்வாறிருக்க, கடந்த 09.07.2025 பாராளுமன்ற அமர்வில் செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கு, அதேபோன்று சிங்கள சகோதரர்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் மற்றும் குருக்கள்மடத்தில் புனித ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு வந்தவர்களை புலிகள் கொன்று புதைத்த குருக்கள்மடத்திலிருக்கும் புதைகுழிகளும் தோண்டப்பட வேண்டுமென்பதை நியாயபூர்வமாக ரவூப் ஹக்கீம் நீதியமைச்சருக்கு காட்டமாக எடுத்துரைத்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தை அமைத்து அதனூடாக அரசியல் காரணங்களுக்காக கிடப்பில் போடப்பட்ட இவ்வாறான விடயங்களைத்தோண்டி எடுக்கப்பட்டு அரசியல் தலையீடின்றி உண்மை வெளிப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்கான பங்களிப்பை ரவூப் ஹக்கீம் வழங்கினார்.

குறித்த அலுவலகம் 2016ல் ஆரம்பிக்கப்பட்டு, 2017ல் நடுப்பகுதியில் நடைமுறைக்கு வந்தது. அதன் விளைவாகவே இவ்விவகாரங்கள் இன்று கவனஞ்செலுத்தப்படுகின்றன.

மேலும், குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுத்து இவ்வாறான பிரச்சினைக்குத்தீர்வை வழங்குமாறே பாராளுமன்றத்தில் நீதியமைச்சரை ரவூப் ஹக்கீம் கோரியிருந்தார்.

இதன் பின்னர் தேசிய அரசியலிலும், சர்வதேச ரீதியாகவும் குருக்கள்மடம் பேசுபொருளாக மாற்றப்பட்டு பலரும் அவை தொடர்பாக அவதானஞ்செலுத்துகின்றனர்.

இதன் விளைவாக கிடப்பில் போடப்பட்ட வழக்கு நகர்த்தல் பத்திரத்தினூடாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

செம்மணி மனிதப்புதைகுழி போன்று குருக்கள்மட மனிதப்புதைகுழியும் தோண்டப்பட்டு உண்மை வெளிச்சத்திற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வவகாரம் தற்போது சூடுபிடித்து பேசுபொருளாக மாறியது ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற உரை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதனைத்தாங்கிக்கொள்ள முடியாத தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் உட்பட எதிரணியினர் உண்மையை மறைத்து, தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பதோடு, நீதியமைச்சு தோண்ட நிதி கொடுக்கவில்லை என நடக்காத விடயத்தை கற்பனை செய்து, போலியாக புனைந்து, தவறான செய்தியினை வதந்தியாக பரவவிட்டு, அப்பாவி மக்களைக்குழப்பும் மோசமான செயலைச் செய்திருக்கிறார்கள் என்பது மேற்சொன்ன விடயங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ரவூப் ஹக்கீம் ஒரு கட்சித்தலைவராக, முப்பது வருட பாராளுமன்ற அனுபவத்தைக்கொண்ட மூத்த அரசியல் தலைவருக்கு எந்த விடயத்தை, எந்த காலப்பகுதியில் பேசுவது பொருத்தமென்பது தெரியும், இதனையே காலம் அறிந்து பயிரிடல் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே, ரவூப் ஹக்கீமுக்கு அரசியல் படிப்பிக்க கத்துக்குட்டிகளும்,மூடர்களும் முனையக்கூடாது. இன்று பொருத்தமான நேரத்தில், பொருத்தமான சந்தர்ப்பத்தில் ரவூப் ஹக்கீம் குறித்த விடயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என சகோதர இன சமூக ஆர்வாளர்கள் அதன் நியாயங்களை முன்வைத்து ரவூப் ஹக்கீமின் செயலை பொதுத்தளங்களில் ஆதரித்துப்பேசும் போது, போதுமான அரசியல் அறிவில்லாதவர்கள் விமர்சனம் எனும் போர்வையில் காழ்ப்புணர்வோடு இவ்விடயத்தை விமர்சிப்பதை மக்கள் உணர்வார்கள்.

ரவூப் ஹக்கீம் அன்று பாராளுமன்றத்தில் இதனைப்பேசாவிட்டால் யார் பேசியிருப்பர்? என்ற கேள்வியை ஒவ்வொருவரும் கேட்டுப்பார்தால் உண்மை புரியும். இன்னும் இவ்விவகாரம் கிடப்பில்தான் இருந்திருக்கும்.

ரவூப் ஹக்கீம் பேசிய பின்னர் தான் அது பேசுபொருளாக இன்று பலரும் பேசுவதற்கு காரணமாகி, மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வைக் கொடுத்திருக்கிறது என்பது நிதர்சன உண்மையாகும்.

விமர்சனம் என்ற பேரில் நல்லவைகளுக்கு ஒத்துழைத்து சமூகத்திற்கு நலவு ஏற்படுவதை தங்களது வங்குரோத்து அரசியலுக்காக விமர்சித்து தடுக்கப்பார்க்கும் இத்தகையவர்கள் தான் முஸ்லிம் சமூகத்தின் கேடுகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இவ்வாறானவர்களை முஸ்லிம் சமூகம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.

ஏற்கனவே ஷிப்லி பாறுக் மற்றும் றவூப் ஏ மஜீத் (றவூப் ஹாஜியார்) ஆகியோருக்கிடையில் இடத்தை அடையாளப்படுத்துவதில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக கிடப்பில் போடப்பட்ட, அதே நேரத்தில் தற்போது றவூப் ஏ மஜீத் உடன் குரல்கள் அமைப்பின் சட்டத்தரணிகள் குழு இணைந்து இந்த விவகாரத்தில் முனைப்புக்காட்டுவது வரவேற்கக்கூடியது என்றாலும், கடந்த காலப்படிப்பினையிலிருந்து முரண்பாடில்லாமல் புதைக்கப்பட்ட இடத்தை சரியாக அடையாளப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

எனவே, குருக்கள்மடத்திலுள்ள முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தோண்டும் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள், சமூகத்தலைவர்கள், சமூக அமைப்புக்கள் எல்லோரும் ஒத்துழைத்து, அன்று போன்று உரிய இடத்தை அடையாளப்படுத்துவதில் வந்த குழப்பங்கள் வருவதைத்தவிர்த்து, உரிய இடத்தை அடையாளங்கண்டு நீதி மன்றத்தில் அனுமதியோடு இவ்விவகாரங்களை முன்னெடுத்துச்செல்வதே சாலச்சிறந்தது.

மாகாண மட்ட உதைப்பந்தாட்டத்தில் புத்தளம் அணி சாம்பியன்!

பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற மாகாண மட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 18 வயதின் கீழ் பிரிவில் புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை சம்பியன் பட்டம் வென்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியது.

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் அகில இலங்கை போட்டிக்கு பு/வெட்டாளை அசன்குத்தூஸ் மு.வித்தியாலயம் இன்று (2025.07.15) புத்தளம் எருக்கலம்பிட்டி மு.வித்தியாலயத்தில் நடைபெற்ற வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் வெ/ஜோன்போல் அணியை 2:1 கோல் கணக்கில் வெற்றி பெற்று அகில இலங்கை போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டது

கடந்த இரண்டு தினங்களாக புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில், 18 வயதின் கீழ் பிரிவில் இடம்பெற்ற மாகாண மட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில், புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை மற்றும் வென்னப்புவ ஜோன் போள் சர்வதேச பாடசாலை ஆகியன பலப்பரீட்சை நடத்தின.

இதில் ஆரம்பம் முதல் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை 2:1 கோல் கணக்கில் வெற்றிபெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியதுடன் இரண்டாம் இடத்தை வென்னப்புவ ஜோன் போள் சர்வதேச பாடசாலை பெற்றுக்கொண்டது.

இதேவேளை மூன்றாவது இடத்தை பெரும் அணியை தெரிவுசெய்வதற்காக இடம்பெற்ற போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அணி மற்றும் புத்தளம் ஸாஹிரா கல்லூரிகள் மோதின.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில், 2:0 அடிப்படையில் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அணி, புத்தளம் ஸாஹிரா கல்லூரி அணியை வீழ்த்தி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா பறக்கும் இலங்கைக் குழு!

0

அமெரிக்காவின் தீர்வை வரி குறித்து கலந்துரையாட இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். 

கொழும்பில் இன்று (15) நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “எங்கள் குழு வொஷிங்டன் செல்கிறது. பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்பு எங்கள் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அது குறித்து இருதரப்பு ஒப்பந்தத்தை எட்டுவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடினோம். நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார்.

கல்வித்துறையில் 1400 பேர் டிஸ்மிஸ்!

0

அமெரிக்காவில் கல்வித்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபரான பின்னர் டிரம்ப் செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார். பல்வேறு அரசு துறைகளில் இருக்கும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார்.

அதன் முக்கிய கட்டமாக, கல்வித்துறையில் இருக்கும் 1300க்கும் அதிகமானோரை பணி நீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்தார். ஆனால் டிரம்பின் நடவடிக்கைக்கு கடும் விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், கல்வித்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. டிரம்பின் செலவின குறைப்பு நடவடிக்கைக்கு பாஸ்டன் நீதிமன்றம் தடை பிறப்பித்து இருந்தது.

ஆனால் தற்போது அந்த தடை உத்தரவை தகர்க்கும் வகையில் அந்நாட்டு உச்சநீதிமன்றம், பணியாளர்களை நீக்க ஒப்புதல் தந்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த அனுமதியை வரவேற்றுள்ள டிரம்ப், நாடு முழுவதும் உள்ள பெற்றோர், மாணவர்களுக்கு நன்றி என்று கூறி உள்ளார்.

மேலும் தனது நிர்வாகம் எடுக்க இருக்கக்கூடிய சில முக்கிய சீர்திருத்தங்களின் தொடக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.