Thursday, July 30, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 35

டித்வா நிவாரண மோசடி – நிவாரண சேவை அதிகாரி பணிநீக்கம்!

0

மொனராகலை மாவட்டத்தில் பேரிடர் நிவாரண இரட்டைக் கொடுப்பனவு (தங்குமிடக் கொடுப்பனவு) வழங்கியதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேரிடர் நிவாரண சேவை அதிகாரியின் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிராம அதிகாரியும், விசாரணை நடவடிக்கைகளுக்கு வசதியாக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிதி மோசடி மற்றும் முறைகேடு சம்பவம் தொடர்பில் தற்போது விரிவான மற்றும் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீனா கொடுத்த பரிசுகளை குப்பையில் வீசிய அமெரிக்கக் குழு:

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக சீனா சென்றிருந்தார். இந்தச் சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையே சோயாபீன்ஸ் மற்றும் போயிங் விமானங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் மட்டுமே கையெழுத்தாயின.

டிரம்ப் எதிர்பார்த்த அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதி போன்ற முக்கிய ஒப்பந்தங்கள் நிறைவேறாததால், அமெரிக்கத் தரப்பிற்கு இது சற்றே ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும், இந்த சுற்றுப்பயணத்தின் முடிவில் உலக அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பும் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது.

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பரிசுகள்

சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் அமெரிக்கா புறப்பட்டபோது, சீனா சார்பில் வழங்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் விமான நிலையத்திலேயே குப்பையில் வீசப்பட்டன.

  • வீசப்பட்ட பொருட்கள்: சீன அதிகாரிகள் வழங்கிய நினைவுப் பரிசுகள், அடையாள அட்டைகள் (Badges), அழைப்பிதழ்கள் மற்றும் தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்ட ‘பர்னர் போன்கள்’ (Burner Phones).
  • நடந்த இடம்: அமெரிக்க அதிபரின் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) விமானத்தின் படிக்கட்டுகளுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த பெரிய குப்பைத் தொட்டியில் இவை அனைத்தும் மொத்தமாகப் கொட்டப்பட்டன.
பின்னணி என்ன? ஏன் இந்த அதிரடி நடவடிக்கை?

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாகவே உளவு மற்றும் ரகசிய கண்காணிப்பு தொடர்பான கடுமையான போட்டி நிலவி வருகிறது.

  1. உளவு பார்க்கும் அச்சம்: சீனா வழங்கும் பொருட்கள், பதக்கங்கள் அல்லது மின்னணு சாதனங்கள் மூலம் அமெரிக்க அதிகாரிகளின் செயல்பாடுகள் மற்றும் ரகசியங்களைச் சீனா உளவு பார்க்கக்கூடும் என்ற பலத்த சந்தேகம் அமெரிக்கப் பாதுகாப்புப் பிரிவினருக்கு உண்டு.
  2. வழக்கமான பாதுகாப்பு நடைமுறை: இது போன்ற தீவிரப் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் நாடுகள் வழங்கும் எந்தவொரு பொருளையும் அமெரிக்க அரசு அதிகாரிகள் தங்களது நாட்டிற்குள் அல்லது அதிபர் விமானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. இது அவர்களின் வழக்கமான பாதுகாப்பு நெறிமுறையாகும்.
  3. அனலாக் முறைப் பயணம்: இந்த அச்சம் காரணமாக, டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்கக் குழுவினர் தங்களின் சொந்த மொபைல் போன்களை அமெரிக்காவிலேயே வைத்துவிட்டு, சீனாவில் வெறும் தற்காலிக ‘பர்னர் போன்களை’ மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.

“சீன அதிகாரிகள் கொடுத்த எதையும் விமானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை” என்று இச்சம்பவத்தை நேரில் பார்த்த நியூயார்க் போஸ்ட் பத்திரிகையாளர் எமிலி குடின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொதுவாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் திரைமறைவில் ரகசியமாக நடக்கும். ஆனால், இந்த முறை பொது வெளியில், விமான நிலையத்திலேயே வெளிப்படையாக அரங்கேறியதும், அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதும் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகை உலுக்கும் ‘ஹண்டாவைரஸ்’ கொரோனாவை விடக் கொடூரம்!

0

இப்போது சர்வதேச அளவில் ஹண்டாவைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பெரியளவில் உலகெங்கும் இதுவரை பரவவில்லை என்ற போதிலும், இப்போதே இது அலற வைத்து இருக்கிறது.

உலகையே அச்சுறுத்திய கொரோனா, குரங்கு அம்மை வரிசையில், இப்போது உல்லாசக் கப்பல் ஒன்றின் வழியாகப் பரவத் தொடங்கியிருக்கும் ஹண்டாவைரஸ் (Hantavirus) மரணப் பீதியைக் கிளப்பியுள்ளது. டச்சு உல்லாசக் கப்பல் ஒன்றில் பரவிய இந்தத் தொற்றால் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இப்போது கனடாவிலும் இதன் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சொகுசு கப்பலாக உலகைச் சுற்றி வந்த ‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற டச்சு கப்பல், இப்போது ஒரு நடமாடும் குவாரன்டைன் மையமாக மாறியுள்ளது. இந்தக் கப்பலில் பயணித்த பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலில் பயணித்த 4 கனடா நாட்டவர்கள் கடந்த மே 10ம் தேதி விக்டோரியா நகருக்கு வந்தடைந்தனர். அப்போது அவர்களுக்கு அறிகுறி எதுவும் இல்லாதபோதும், முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது அவர்களில் ஒருவருக்குக் காய்ச்சல், தலைவலி போன்ற லேசான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட தொடக்கநிலை பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதே கப்பலில் பயணித்த நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதி மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண் என மொத்தம் 3 பேர் இந்த ‘ஹண்டாவைரஸ்’ பாதிப்பால் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாகவே, உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை 42 நாட்கள் வரை தனிமைப்படுத்தப் பரிந்துரைக்கிறது. கனடா அரசு 21 நாட்கள் குவாரன்டைன் விதியை அமல்படுத்தியுள்ளது.

ஹண்டாவைரஸ் என்பது பொதுவாக எலிகள், சுண்டெலிகள் மூலமாகப் பரவக்கூடிய ஒரு ஆபத்தான வைரஸ் தொற்றாகும். எலிகளின் சிறுநீர், எச்சில் மற்றும் மலம் ஆகியவற்றின் மூலமே இந்த வைரஸ் காற்றில் கலந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. உல்லாசக் கப்பல் போன்ற மூடிய குளிரூட்டப்பட்ட சூழலில், ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டால் அது எளிதாக மற்றவர்களுக்குப் பரவும் அபாயம் இருக்கிறது.

இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்தவுடன் காட்டும் ஆரம்பக்கால அறிகுறிகள் மிகவும் சாதாரணமானவை.. கடுமையான காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு மற்றும் உடல் சோர்வு என்று தொடக்கத்தில் அறிகுறி லேசாகவே இருக்கும். நோய்ப் பாதிப்பு தொற்று முதிர்ச்சியடையும் போது, அது ‘ஹண்டாவைரஸ் நுரையீரல் நோய்க்குறி’ (Hantavirus Pulmonary Syndrome – HPS) ஆக மாறி, நுரையீரலில் நீர் கோர்த்துக் கொள்ளும். இதனால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உடலின் உள் உறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்படலாம்

இந்த வைரஸ் வேகமாகப் பரவாது என்ற போதிலும் இதன் இறப்பு விகிதம் (Mortality Rate) மிக அதிகம் என்பதால் தான் மருத்துவர்கள் அலறுகிறார்கள். இந்த நோய்ப் பாதிப்பு ஏற்படுவோரில் கிட்டத்தட்ட 50% பேர் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே இது உலகளவில் பெரிதாக வெடிக்கும் முன்பு இதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வல்லுநர்கள் இறங்கியுள்ளனர்.

அப்படிப்பட்ட தரங்கெட்ட ஆள் நான் இல்லை-முற்றுப்புள்ளி வைத்த ரஜினி

0

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பரவி வரும் அரசியல் வதந்திகளுக்கு, நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடி விளக்கமளித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து, விஜய் முதலமைச்சராவதைத் தடுக்க அதிமுக – திமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க ரஜினிகாந்த் பேச்சுவார்த்தை நடத்தியதாகப் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த ரஜினிகாந்த், “விமர்சனங்களுக்கு நான் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தால், அதுவே உண்மையாகிவிடும் என்பதால் தான் இந்த விளக்கம். மு.க.ஸ்டாலினுடன் எனக்கு இருக்கும் நட்பு, கொள்கை மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டது; அது 40 ஆண்டுகால நட்பு. அந்த ரீதியிலேயே அவரைச் சந்தித்தேன்.

விஜய் முதலமைச்சராவதைத் தடுக்க நான் இரு பெரிய கட்சிகளுடன் தூது சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட தரங்கெட்ட செயல்களைச் செய்யும் ஆள் இந்த ரஜினி கிடையாது. விஜய் முதலமைச்சராவதில் எனக்கு என்ன பொறாமை? நான் அரசியலிலேயே இல்லை. அவருக்கும் எனக்கும் 28 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது. அவர் வெற்றி பெற்றவுடனேயே எக்ஸ் (X) தளத்தில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டேன்” என்று கூறினார்.

விஜய் சாதனைக்குப் பாராட்டு:

விஜய்யின் அரசியல் வெற்றியைப் பாராட்டிய ரஜினிகாந்த், “மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பிய சமயத்தில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் தனியாகப் போட்டியிட்டு, எம்.ஜி.ஆர், என்.டி.ஆரை விடப் பெரிய அளவில் வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பெற்றுள்ளார். இது எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தைத் தருகிறது.

நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் வென்றிருப்பேன். ஆனால், நான் ஏன் வரவில்லை என்பது குறித்து ஏற்கனவே 3 பக்க அறிக்கையில் விளக்கியுள்ளேன். விஜய்யைச் சம்பிரதாயத்திற்காகச் சந்திக்க எனக்கு விருப்பமில்லை” என்றும் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.

வணாத்தவில்லுவில் புலித்தோல், துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

0

ஜூட் சமந்த

வணாத்தவில்லுவ – காட்டுப்புளியங்குளம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் அமைந்துள்ள வீட்டிலிருந்து சிறுத்தை புலித் தோல், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பு வனஜீவராசிகள் திணைக்களத்தின் வணாத்தவில்லுவ உப அலுவலக அதிகாரிகளால், இன்று (17ஆம் திகதி) நள்ளிரவில் முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டைச் சோதனையிட்ட போது பல சட்ட விரோதமான பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன:

  • ஒரு சிறுத்தை புலித் தோல் (திவி ஹக்)
  • வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட, அனுமதியற்ற 12 போர்ட் ரக துப்பாக்கி ஒன்று
  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, அனுமதியற்ற 12 போர்ட் ரக துப்பாக்கி ஒன்று
  • 05Live தோட்டாக்கள் (உயிருள்ள தோட்டாக்கள்)
  • 04 வெற்றுத் தோட்டாக் கூடுகள் ஆகியன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வனாத்தவில்லுவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நவீனமயமாக்கப்பட்ட சிலாபம் போக்குவரத்து பொலிஸ் பிரிவு!

0

ஜூட் சமந்த

பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான மற்றும் முறையான சேவைகளை வழங்கும் நோக்கில், நவீனமயமாக்கப்பட்ட சிலாபம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் மற்றும் வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண ஆகியோரால் இந்த நவீனமயமாக்கப்பட்ட பிரிவு நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விக்ரமசிங்க ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

புதிதாக நவீனமயமாக்கப்பட்ட இந்த போக்குவரத்து பிரிவின் மூலம் சிலாபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மேலாண்மை மற்றும் வீதி ஒழுங்குமுறைகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை: 33,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

0

கடந்த மே 13 ஆம் தேதி முதல் புத்தளம் மாவட்டத்தில் நிலவி வரும் கடும் மழை, வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய இடர் நிவாரண சேவை மையம் (NDRSC) இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாவட்டத்தின் 70 கிராம சேவகர் பிரிவுகளில் மொத்தம் 9,106 குடும்பங்களைச் சேர்ந்த 33,301 நபர்கள் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவ பெரும் பகுதியினர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8,666 குடும்பங்களைச் சேர்ந்த 31,876 பேர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • முந்தல்: 162 குடும்பங்கள் (522 நபர்கள்).
  • கருவலகஸ்வெவ: 108 குடும்பங்கள் (330 நபர்கள்) – இங்கு 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
  • நவகத்தேகம: 71 குடும்பங்கள் (239 நபர்கள்).
  • ஆணமடுவ: 69 குடும்பங்கள் (222 நபர்கள்).
  • தன்கொடுவ: 13 குடும்பங்கள் (45 நபர்கள்).

வனாதவில்லுவ பகுதியில் ஒரு வீடு முழுமையாகவும், 3 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மேலும், பள்ளம மற்றும் நவகத்தேகம பகுதிகளிலும் வீடுகளுக்கு பகுதியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி விகாரவெவ மற்றும் பத்தையம ஆகிய குளங்களின் கட்டுகள் உடைந்துள்ளன. நிலைமையைக் கட்டுப்படுத்த உடப்பு பகுதியில் ஆற்றின் முகத்துவாரத்தை வெட்டி நீரை வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தன்கொடுவ பகுதியில் ஜங்குராவெல – அபரஞ்சிமுல்ல கிராமத்திற்குச் செல்லும் வீதி வெள்ள நீரினால் அரித்துச் செல்லப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த வீதி உடைந்தால் அக்கிராமம் தனிமைப்படுத்தப்படும் சூழல் நிலவுவதால், அங்கிருக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிவாரணப் பணிகள்: தற்போது மாவட்டத்தில் 5 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 168 நபர்கள் தங்கியுள்ளனர். இது தவிர, 582 குடும்பங்களைச் சேர்ந்த 1,957 நபர்கள் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக, இந்த அனர்த்தத்தினால் புத்தளம் மாவட்டத்தில் இதுவரை மரணங்களோ, காயங்களோ அல்லது எவரும் காணாமல் போனதாகவோ தகவல்கள் எவையும் பதிவாகவில்லை. மாவட்ட இடர் நிவாரண அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலாளர் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழப்பு:14 மாவட்டங்கள் பாதிப்பு!

0

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) இன்று மாலை 6.00 மணி

கடந்த மே 10 ஆம் தேதி முதல் இன்று வரை நிலவிய அனர்த்தங்களினால் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 1,574 குடும்பங்களைச் சேர்ந்த 5,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வீடு முழுமையாகவும், 192 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ள நிலையில் 5 பாதுகாப்பு மையங்களில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்புகள் மற்றும் விபத்துக்கள்:

  • மட்டக்களப்பு: மே 11 அன்று கோரளைப்பற்று தெற்கு பகுதியில் பாலத்தை கடக்க முயன்ற 46 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
  • யாழ்ப்பாணம்: மே 14 அன்று சண்டிலிப்பாய் பகுதியில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்தார்.
  • கொழும்பு (சீதாவக்க): மே 15 அன்று கொஸ்கம பகுதியில் ஆற்றில் நீராடச் சென்ற 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் மது அருந்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • இரயில் விபத்து: மே 16 அதிகாலை 5.19 மணியளவில் கம்பஹா, வனவாசல பகுதியில் பொல்கஹவெலையில் இருந்து களுத்துறை நோக்கிச் சென்ற புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இதில் 5 பெட்டிகள் தடம் புரண்டதுடன், 10 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு பாதிப்புகள்:

  • இரயில் சேவை: மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையிலான இரயில் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், மலையகப் பாதையில் ரம்புக்கணைக்கும் அசேலவெலவுக்கும் இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது (அசேலவெலவிலிருந்து பதுளை வரை மட்டுமே இரயில்கள் இயங்குகின்றன).
  • வீதிகள்: மாத்தளை – ரிவர்ஸ்டன் வீதி தற்போது இலகுரக வாகனங்களுக்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. கண்டி – தலாத்துஓயா வீதியில் உட தெல்தொட்ட பாலம் சேதமடைந்துள்ளதால் அந்த வீதி மூடப்பட்டுள்ளது.
  • நீர்த்தேக்கங்கள்: கடும் மழை காரணமாக அனுராதபுரம், அம்பாந்தோட்டை, குருணாகல் மற்றும் மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

வானிலை மற்றும் மண்சரிவு எச்சரிக்கை: வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவும் குறைந்த அழுத்த மண்டலம் காரணமாக மேல், சபரகமுவா, மத்திய, வடமேற்கு மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும், பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பில் புதிய அரசியல் வியூகம்: மலர் வீதியில் கூடிய எதிர்க்கட்சிகள்!

0

இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கூட்டு எதிர்க்கட்சியின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (16) கொழும்பு, மலர் வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் நடைபெற்றது.

அரசாங்கத்தினால் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் நாடளாவிய ரீதியிலான கருத்தரங்குத் தொடரின் மூன்றாவது மாநாடு, வரும் 24ஆம் திகதி ஜா-எல பகுதியில் நடத்தப்படவுள்ளது. இது குறித்த இறுதித் திட்டமிடல்களுக்காகவே இக்கலந்துரையாடல் பல மணிநேரம் நீடித்து நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆகிய பிரதான அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு நேர்ந்துள்ள கொடுமை

இலங்கையில் ஒரு நிலையான பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை வேண்டி, பழைய அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த மக்களுக்கு தற்போதைய அரசியல் சூழல் பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் பலவீனங்களையும் ஊழல்களையும் சுட்டிக்காட்டி மக்களை அணிதிரட்ட எதிர்க்கட்சிகள் முயன்றாலும், மறுபுறம் அவை தங்களின் சுயநல அரசியல் இருப்பை தக்கவைப்பதிலேயே குறியாக உள்ளன என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் நாட்டைப் பேரழிவிற்குள் தள்ளியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தரப்புகளும், கொள்கை ரீதியாக முரண்பட்டுக் கொண்ட கட்சிகளும் இன்று “கூட்டு எதிர்க்கட்சி” என்ற போர்வையில் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது, உண்மையான மக்கள் நலனுக்காகவா அல்லது மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்கள், அன்றாட வாழ்க்கைச் செலவு உயர்வு, வரிச்சுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் நசுக்கப்பட்டு வரும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்கால தேர்தல் இலாபங்களை மட்டுமே இலக்காகக் கொண்டு காய்களை நகர்த்தி வருவது, மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

தேர்தல் வரும்போதுதான் ஒன்றிணைவோம்: லசந்த அழகியவண்ணவின் கருத்து

இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண, எதிர்க்கட்சிகளின் தற்போதைய சுயரூபத்தை வெளிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டார்.

“கூட்டு எதிர்க்கட்சியினால் வரும் 24ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் எமது கருத்தரங்குத் தொடரின் 3ஆவது கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது. அது தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சிகளும் இணைந்து இன்று கலந்துரையாடலொன்றை நடத்தினோம். எதிர்க்கட்சி எல்லா இடங்களிலும் பலமாகவே இருக்கின்றது, அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தேவையான நேரத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள்.

தற்போது எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் கட்சிகள் தத்தமது கட்சிகளைப் பலப்படுத்தும் பணிகளையே தனித்தனியாகச் செய்து வருகின்றன. கூட்டணி குறித்த கேள்விகளை தேர்தல் ஒன்று வரும்போதுதான் கேட்க வேண்டும். தேர்தல் வரும்போது நாட்டின் தேவைக்காக, ஒரு பொறுப்புள்ள கட்சியாக அந்தப் பொறுப்பை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.” என லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

மக்களின் அவலமும் சுயநல அரசியலும்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தக் கூற்று, தற்போதைய அரசியல் கட்சிகள் மக்கள் படும் துன்பங்களை விட, தேர்தல் வெற்றிகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றன என்பதைத் தெட்டத்தெளிவாக்குகின்றது. “தேர்தல் வரும்போதுதான் ஒன்றிணைவோம்” என்ற இவர்களின் கொள்கை, தற்போதைய நெருக்கடியான சூழலில் தங்களுக்குத் தலைமை தாங்க வலுவானதொரு எதிர்க்கட்சி இல்லையா என ஏங்கும் சாதாரண குடிமகனுக்குச் செய்யும் துரோகமாகும்.

நாட்டில் உண்மையானதொரு ஆட்சி மாற்றத்தையும், தூய்மையான அரசியல் கலாசாரத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்கு, இந்த மலர் வீதி சந்திப்புகளும், தேர்தலை மையப்படுத்திய கூட்டணிகளும் வெறும் ‘அரசியல் நாடகமாகவே’ காட்சியளிக்கின்றன.

தங்களின் வாழ்வாதாரப் போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்காமல், அரசியல்வாதிகளின் தேர்தல் சதுரங்க ஆட்டத்திற்குள் மக்கள் மீண்டும் பகடைக்காய்களாக்கப்படும் கொடுமையே இன்று இலங்கையில் அரங்கேறி வருகின்றது.

வாகன இறக்குமதிக்கு விழுந்தது பலத்த அடி: 50% மேலதிக வரி!

0

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான சுங்க இறக்குமதி வரிக்கு, 50% மேலதிக கட்டணத்தை விதிக்க நிதி அமைச்சு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேலதிக கட்டணம் இன்று (16) முதல் 3 மாத காலத்திற்கு அமுல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கடன் கடிதங்கள் தொடர்பான இறக்குமதிக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.