Sunday, June 14, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 36

குவைத் விமான நிலையம் மீது தாக்குதல்!

குவைத் விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பயணிகள் விமான நிலையம் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது, ஒன்றுக்கும் மேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அந்நாட்டு செய்தி ஊடகமான ‘KUNA’ தெரிவித்திருக்கிறது.

இந்த தாக்குதலில், விமான நிலையத்தின் ரேடார் அமைப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. உயிரிழப்பு, காயம் ஏற்படவில்லை என்பதை குவைத் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உறுதி செய்திருக்கிறது.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த விரிவான விசாரணையை பாதுகாப்பு அமைப்புகள் தொடங்கியுள்ளன. ரேடார் அமைப்பு சேதமடைந்துள்ளதால், விமானப் போக்குவரத்து மற்றும் சிக்னல் பெறுவதில் தற்காலிகத் தடைகள் அல்லது தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், குவைத் மீதான இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஏற்கெனவே சவுதி, அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் விமா நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது நடந்திருக்கும் தாக்குதல், மத்திய கிழக்கில் இன்னும் பதற்றம் கொஞ்சமும் குறையவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

அறிமுகமாகியது “சுரகிமு லங்கா” தேசிய திட்டம்!

0

வலு சக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “இலங்கையைக் காப்போம் ” தேசிய வேலைத்திட்டம் இன்று (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

மின்சக்தி வளங்களை மிகவும் பொறுப்புடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலினால் நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் குறித்த கணிப்புகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

அரச வளங்களை மிக சிக்கனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம், தேசிய வலுசக்தி பாதுகாப்பிற்காக பொதுமக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்வதே இதன் பிரதான எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ளது. 

இந்தத் திட்டம் இன்றிலிருந்து அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

“செல்வச் செழிப்புமிக்க நாடு – அழகான வாழ்க்கை” எனும் தொலைநோக்கின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘Clean Sri Lanka’ திட்டத்தின் ஒரு பகுதியாக, “சுரகிமு லங்கா – ஒன்றிணைவோம் – ஒளியூட்டுவோம்” என்ற தொனிப்பொருளில் இது செயற்படுத்தப்படுகிறது. 

இதற்காக அரச, அரச அனுசரணை மற்றும் தனியார் துறையினருடன் சிவில் சமூகம் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள அல்லது அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை முடிந்தவரை பகல் நேரங்களில் செய்து முடிக்க மக்களை ஊக்குவிப்பதே “சுரகிமு லங்கா” திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். 

இந்தத் திட்டத்தின் மூலம் மின்சாரப் பயன்பாட்டிற்கு எவ்வித தடைகளும் அல்லது கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி நீர் மின்சாரம் மூலம் கிடைப்பதால், வருங்காலத்தில் நீரையும் மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மக்களிடையே மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த ஒரு மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தாமாகவே முன்வந்து இத்திட்டத்தில் இணையச் செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும்.

“ஈரானின் ஆட்சியை மாற்ற இதுவே தருணம்” பஹ்லவி அதிரடி முழக்கம்!

ஈரானின் மறைந்த ஷா மன்னரின் மகனும், தற்பொழுது புலம்பெயர்ந்து வாழ்ந்து வருபவருமான பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி, அமெரிக்காவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் ஆற்றிய உரை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் தற்போதைய ஆட்சி மாற்றத்திற்கான தனது தயார் நிலையை அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற CPAC (Conservative Political Action Conference) 2026 மாநாட்டில் பஹ்லவி கலந்துகொண்டார். அங்கு ஆற்றிய உரையில், ஈரானின் தற்போதைய ஆட்சியாளர்களுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டாம் என அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அவர் கோரிக்கை விடுத்தார். “ஈரானிய ஆட்சியாளர்களுடனான விவகாரத்தை இப்போதே முடித்துவிடுங்கள்” (Finish the job) என்று அவர் ஆக்ரோஷமாகப் பேசினார்.

ஈரானில் தற்போதைய இஸ்லாமியக் குடியரசு வீழ்ச்சியடைந்தால், அதிகாரத்தை உடனடியாகப் பொறுப்பேற்கத் தான் தயாராக இருப்பதாக பஹ்லவி அறிவித்தார். இதற்காக ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள நிபுணர்களைக் கொண்டு ஒரு “இடைக்கால ஆட்சி அமைப்பு” ஏற்கனவே உருவாக்கப்பட்டுத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

180 நாட்கள் நீடிக்கும் இந்த இடைக்கால ஆட்சிக்குப் பிறகு, நாட்டில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை அவர் பாராட்டியது இந்த உரையில் மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல்கள் ஆட்சியின் வீழ்ச்சியை வேகப்படுத்தும் என்றும், இதன் மூலம் உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானிய பாதுகாப்புப் படையினர் தற்போதைய ஆட்சிக்கான ஆதரவைக் கைவிட்டு மக்கள் பக்கம் சேர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பஹ்லவியின் இந்தப் பேச்சுக்கு ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை வெளிநாட்டு சக்திகளின் “கைப்பாவை” என்று வர்ணித்துள்ள ஈரான் ஊடகங்கள், அவர் பயங்கரவாதத்தைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளன. அதேசமயம், ஈரானுக்குள்ளும் பல போராட்டக்காரர்கள் இவரை ஒரு மதச்சார்பற்ற தலைவராகப் பார்த்தாலும், வெளிநாட்டு ராணுவத் தலையீட்டை அவர் ஆதரிப்பது நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து என்று ஒரு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பஹ்லவியின் இந்தத் திடீர் அரசியல் நகர்வுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரானின் எதிர்காலத்தை நோக்கிய இந்தப் போர் மேகங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் சர்வதேச அரசியலில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகின்றன.

“நேபாளத்தில் நள்ளிரவு அதிரடி: முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது!

0

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி நேற்று கைது செய்யப்பட்டார். நேபாளத்தில் கடந்த ஆண்டு ஜென் இசட் இயக்கப் போராட்டங்கள் வெடித்தது. போராட்டத்தின்போது சுமார் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உட்பட சுமார் 76 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான சம்பவங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் உள்ளிட்டோர் மீது குற்றவியல் பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது.

இந்நிலையில் புதிதாக பிரதமராக பொறுப்பேற்ற பாலேந்திர ஷா தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில் விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமரும் சிபிஎன்-யூஎம்எல் கட்சியின் தலைவருமான சர்மா ஒலி பக்தபூர் மாவட்டத்தின் குண்டு பகுதியில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். மேலும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் கதுன்ஜே பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் ட்ரோன் கிடங்கை தரைமட்டமாக்கியதா ஈரான்?

துபாயில் அமைந்துள்ள உக்ரைன் நாட்டின் ட்ரோன்-எதிர்ப்பு அமைப்புகளின் கிடங்கை தாக்கி அழித்ததாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கப் படைகளின் மறைவிடமாக செயல்பட்ட உக்ரைன் கிடங்கை தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) மற்றும் அதன் கூட்டு செயல்பாட்டு மையமான காத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) மார்ச் 28, 2026 அன்று ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

அதில், துபாயில் அமெரிக்க இராணுவத் தளபதிகள் மற்றும் வீரர்கள் பதுங்கியிருந்த இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறியது. அதே நேரத்தில், அமெரிக்கப் படைகளுக்கு உதவும் நோக்கில் துபாயில் அமைக்கப்பட்டிருந்த உக்ரைனிய ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளின் (Anti-drone systems) கிடங்கை தாக்கி அழித்ததாகவும் தெரிவித்தது.

இந்தத் தாக்குதலின் போது அங்கு 21 உக்ரைனிய நிபுணர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஈரான் தரப்பில் உரிமை கோரப்பட்டது.

இந் நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பை உக்ரைன் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. இது குறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹியோர்ஹி திகி மற்றும் உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது:

ஈரானின் இந்தச் செய்தி “முற்றிலும் பொயானது” என்றும், இது ஈரானிய மற்றும் ரஷ்ய அரசுகளின் திட்டமிடப்பட்ட தவறான தகவல் பரப்புதல் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அமீரகத்தில் உக்ரைனிய நிபுணர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

சர்வதேச செய்தி நிறுவனங்கள் ஈரானின் உரிமை கோரலைப் பதிவு செய்துள்ளனரே தவிர, உக்ரைன் கிடங்கு உண்மையில் அழிக்கப்பட்டதற்கான எவ்வித செயற்கைக்கோள் படங்களோ அல்லது தரைமட்ட ஆதாரங்களோ இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

ஈரான் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறினாலும், உக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத் தரப்பிலிருந்து இதற்கு எவ்வித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீரிணையை கடக்க பாகிஸ்தான் ஈரானுடன் வரலாற்று ஒப்பந்தம்!

நவீன வரலாற்றிலேயே மிக மோசமான எரிசக்தி நெருக்கடியைச் சந்தித்து வரும் பாகிஸ்தான், தனது 20 கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாகச் செலுத்த ஈரானுடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.

நாளொன்றுக்கு இரண்டு கப்பல்கள் வீதம் இந்த நீரிணையைக் கடக்கும் என்று இஷாக் தார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த முடிவை “அமைதிக்கான முன்னோடி” மற்றும் ஒரு “வரவேற்கத்தக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை” என்று அவர் பாராட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதல்களில் ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இந்தப் போரில் ஈரானில் சுமார் 2,000 பேரும், லெபனானில் 1,100-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.

உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையாகக் கருதப்படும் இந்த நீரிணை முடங்கியதால், கச்சா எண்ணெய் விலை 40 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. சுமார் 2,000 கப்பல்கள் நீரிணையின் இருபுறமும் தவித்து வரும் நிலையில், உலக வர்த்தக அமைப்பு (WTO) இதனை கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பாதிப்பு என்று வர்ணித்துள்ளது.

ஈரானின் கட்டுப்பாடுகளும் கட்டணமும்:
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தற்போது இந்த நீரிணையை ஒரு சோதனைச் சாவடியாக மாற்றியுள்ளது. இந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் தங்களின் சரக்கு விவரங்கள் மற்றும் குழுவினர் பட்டியலைச் சமர்ப்பித்து அனுமதி குறியீடு பெற வேண்டும். சில கப்பல்கள் இந்த நீரிணையைக் கடக்க தலா 2 மில்லியன் டாலர் வரை சீன யுவான் (Yuan) மதிப்பில் கட்டணமாகச் செலுத்தியுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே மலேசியக் கப்பல்களுக்கும் இத்தகைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் தீவிர ராஜதந்திர முயற்சியின் பலனாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் இது குறித்துப் பேசியுள்ளார். அதே சமயம், ஹார்முஸ் நீரிணை மீதான தனது அதிகாரத்தை சர்வதேச சமூகம் முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.

தற்போது ஈரான் மின் நிலையங்கள் மீதான தாக்குதலை அமெரிக்கா ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்த அவகாசம் சனிக்கிழமையுடன் முடிவடையும் நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடரும் என்று அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கியூ.ஆர் (QR) முறையில் அறிமுகமாகும் புதிய அப்டேட்!

0

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது வாகனங்களை மொத்தமாகப் பதிவு செய்யக்கூடிய புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால இது குறித்துத் தெரிவிக்கையில்,

பெரிய அளவிலான வாகனங்களைக் கொண்ட நிறுவனங்கள், ஒவ்வொரு வாகனத்தையும் தனித்தனியாகப் பதிவு செய்வதற்குப் பதிலாக, ஒரே குழுவாகப் பதிவு செய்யும் வசதியை அமைச்சகம் உருவாக்கி வருகிறது.

இதுவரை சுமார் 6 மில்லியன் பயனாளர்கள் இந்த அமைப்பில் பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 15 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 2 மில்லியன் புதிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுத்தளத்தில் உள்ள தகவல்களுடன் முரண்பாடுகள் காணப்படுவதால், சுமார் 200,000 பயனாளர்கள் சில சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திர எண்களை வாசிப்பதில் ஏற்படும் எழுத்துப் பிழைகளே (உதாரணமாக: ‘0’ என்பதற்குப் பதில் ‘O’) இதற்கு முக்கியக் காரணமாகும். இவை தற்போது உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகின்றன.

ஆரம்பக் கட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டுள்ளதால், தற்போது பயனாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்த போதிலும் கட்டமைப்பு ஸ்திரமாக உள்ளதாகச் செயலாளர் உறுதியளித்தார்.

வாகனங்கள் அல்லாத ஏனைய அத்தியாவசியத் துறைகளுக்கும் இந்த கியூ.ஆர். முறைமை விரிவுபடுத்தப்படவுள்ளது. விவசாய உபகரணங்கள் மற்றும் கடற்றொழில் படகுகளை இந்த அமைப்பில் இணைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது அந்தந்தத் துறையினருக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கியூ.ஆர். குறியீடுகளைத் தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மற்றவர்களின் கியூ.ஆர். குறியீடுகளைச் சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்த 153 கைபேசி இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மோசடிகள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 79 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதற்காக எரிபொருளைப் பதுக்கி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பதிவு தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக 1919 என்ற அவசர இலக்கத்திற்கு மேலதிகமாக, ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ஒரு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் தமது பகுதிகளில் உள்ள இந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது!

0

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கெப் ரக வாகனமொன்றின் சேஸி (Chassis) இலக்கத்தைத் திருத்தி, அதனை போலியான முறையில் பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள கமல் அமரசிங்க, இன்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக 3,000 இடங்களில் போராட்டங்கள்!

0

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ஈரானுடனான போர்ச் சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்று அமெரிக்கா முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களை நடத்த “No Kings” என்ற மக்கள் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே 2025 ஜூன் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்பின் கடுமையான குடிவரவு கொள்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வொஷிங்டன் டி.சி. மினியாபோலிஸ், சிகாகோ மற்றும் சென் பிரான்சிஸ்கோ போன்ற முக்கிய நகரங்களில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 6,46,000 மக்கள் தொகையைக் கொண்ட சிறிய மாநிலமான வெர்மான்ட்டில் மாத்திரம் 40க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்ட தினங்களில் ஒன்றாக இந்தச் சனிக்கிழமை அமையும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

உலகில் அதிகம் பாதிக்கப்படும் 2-வது நாடாக இலங்கை!

0

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நெருக்கடி நிலைமையால் பொருட்களின் விலை அதிகரிப்பினால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக பிபிசி வெரிஃபை (BBC Verify) ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வழமையாக நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்து, தற்போது ஒரு சில கப்பல்களாகக் குறைந்துள்ளதாக பிபிசி வெரிஃபை சுட்டிக்காட்டுகிறது.

இதன் விளைவாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்புடன், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் வேகமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய விவசாயத் தேவைகளுக்கான யூரியா, பொட்டாஷியம், அமோனியா மற்றும் பொஸ்பரேட் போன்ற உரத் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு (1/3) பொதுவாக இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

வட அரைக்கோளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் முக்கிய பயிர்ச்செய்கை காலங்களாக இருப்பதால், தற்போதைய உரத் தட்டுப்பாடு ஆண்டின் பிற்பகுதியில் பயிர் விளைச்சல் குறைவதற்கு நேரடியாக வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜெர்மனியின் கீல் ஆராய்ச்சி நிறுவனம்(Kiel Research Institute), ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலகளாவிய கோதுமை விலை 4.2% ஆகவும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் 5.2% ஆகவும் உயரக்கூடும் எனக் குறிப்பிடுகிறது.

கீல் நிறுவனத்தின் தரவுகளின்படி, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் பொருட்களின் விலை அதிகம் உயரக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

உணவுப் பொருட்களின் ஒட்டுமொத்த விலை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஜாம்பியா (30.7%), இலங்கை (15.3%), தாய்வான் (12.5%) மற்றும் பாகிஸ்தான் (11.4%) ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.