Thursday, July 30, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 36

கொழும்பில் புதிய அரசியல் வியூகம்: மலர் வீதியில் கூடிய எதிர்க்கட்சிகள்!

0

இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கூட்டு எதிர்க்கட்சியின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (16) கொழும்பு, மலர் வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் நடைபெற்றது.

அரசாங்கத்தினால் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் நாடளாவிய ரீதியிலான கருத்தரங்குத் தொடரின் மூன்றாவது மாநாடு, வரும் 24ஆம் திகதி ஜா-எல பகுதியில் நடத்தப்படவுள்ளது. இது குறித்த இறுதித் திட்டமிடல்களுக்காகவே இக்கலந்துரையாடல் பல மணிநேரம் நீடித்து நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆகிய பிரதான அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு நேர்ந்துள்ள கொடுமை

இலங்கையில் ஒரு நிலையான பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை வேண்டி, பழைய அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த மக்களுக்கு தற்போதைய அரசியல் சூழல் பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் பலவீனங்களையும் ஊழல்களையும் சுட்டிக்காட்டி மக்களை அணிதிரட்ட எதிர்க்கட்சிகள் முயன்றாலும், மறுபுறம் அவை தங்களின் சுயநல அரசியல் இருப்பை தக்கவைப்பதிலேயே குறியாக உள்ளன என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் நாட்டைப் பேரழிவிற்குள் தள்ளியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தரப்புகளும், கொள்கை ரீதியாக முரண்பட்டுக் கொண்ட கட்சிகளும் இன்று “கூட்டு எதிர்க்கட்சி” என்ற போர்வையில் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது, உண்மையான மக்கள் நலனுக்காகவா அல்லது மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்கள், அன்றாட வாழ்க்கைச் செலவு உயர்வு, வரிச்சுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் நசுக்கப்பட்டு வரும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்கால தேர்தல் இலாபங்களை மட்டுமே இலக்காகக் கொண்டு காய்களை நகர்த்தி வருவது, மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

தேர்தல் வரும்போதுதான் ஒன்றிணைவோம்: லசந்த அழகியவண்ணவின் கருத்து

இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண, எதிர்க்கட்சிகளின் தற்போதைய சுயரூபத்தை வெளிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டார்.

“கூட்டு எதிர்க்கட்சியினால் வரும் 24ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் எமது கருத்தரங்குத் தொடரின் 3ஆவது கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது. அது தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சிகளும் இணைந்து இன்று கலந்துரையாடலொன்றை நடத்தினோம். எதிர்க்கட்சி எல்லா இடங்களிலும் பலமாகவே இருக்கின்றது, அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தேவையான நேரத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள்.

தற்போது எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் கட்சிகள் தத்தமது கட்சிகளைப் பலப்படுத்தும் பணிகளையே தனித்தனியாகச் செய்து வருகின்றன. கூட்டணி குறித்த கேள்விகளை தேர்தல் ஒன்று வரும்போதுதான் கேட்க வேண்டும். தேர்தல் வரும்போது நாட்டின் தேவைக்காக, ஒரு பொறுப்புள்ள கட்சியாக அந்தப் பொறுப்பை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.” என லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

மக்களின் அவலமும் சுயநல அரசியலும்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தக் கூற்று, தற்போதைய அரசியல் கட்சிகள் மக்கள் படும் துன்பங்களை விட, தேர்தல் வெற்றிகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றன என்பதைத் தெட்டத்தெளிவாக்குகின்றது. “தேர்தல் வரும்போதுதான் ஒன்றிணைவோம்” என்ற இவர்களின் கொள்கை, தற்போதைய நெருக்கடியான சூழலில் தங்களுக்குத் தலைமை தாங்க வலுவானதொரு எதிர்க்கட்சி இல்லையா என ஏங்கும் சாதாரண குடிமகனுக்குச் செய்யும் துரோகமாகும்.

நாட்டில் உண்மையானதொரு ஆட்சி மாற்றத்தையும், தூய்மையான அரசியல் கலாசாரத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்கு, இந்த மலர் வீதி சந்திப்புகளும், தேர்தலை மையப்படுத்திய கூட்டணிகளும் வெறும் ‘அரசியல் நாடகமாகவே’ காட்சியளிக்கின்றன.

தங்களின் வாழ்வாதாரப் போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்காமல், அரசியல்வாதிகளின் தேர்தல் சதுரங்க ஆட்டத்திற்குள் மக்கள் மீண்டும் பகடைக்காய்களாக்கப்படும் கொடுமையே இன்று இலங்கையில் அரங்கேறி வருகின்றது.

வாகன இறக்குமதிக்கு விழுந்தது பலத்த அடி: 50% மேலதிக வரி!

0

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான சுங்க இறக்குமதி வரிக்கு, 50% மேலதிக கட்டணத்தை விதிக்க நிதி அமைச்சு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேலதிக கட்டணம் இன்று (16) முதல் 3 மாத காலத்திற்கு அமுல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கடன் கடிதங்கள் தொடர்பான இறக்குமதிக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வனவாசல ரயில் விபத்தில் சதி? தண்டவாளக் கம்பிகள் திருட்டு!

0

வனவாசல உப தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற விபத்துக்கு,தொடருந்து தண்டவாளத்தின் தடம் மாற்றும் அமைப்பின் இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டிருந்தமையே காரணம் என தொடருந்து திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

திண்மக் கழிவு பதப்படுத்தும் வளாகம் மற்றும் பிரதான தொடருந்து பாதை ஆகியவற்றுக்கு இடையே தொடருந்ததை தடம் மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் இணைப்பு கம்பிகளை யாரோ ஒரு நபர் அல்லது ஒரு குழுவினர் திட்டமிட்டோ, ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலோ அல்லது திருடும் நோக்கிலோ கழற்றியுள்ளமையே இந்த விபத்துக்கு தற்போதைக்கு அவதானிக்கப்பட்டுள்ள காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வனவாசல தொடருந்து நிலையத்திற்கு அருகில் கொழும்பு திண்மக் கழிவு பதப்படுத்தும் வளாகம் ஒன்று அமைந்துள்ளது. அதற்கான தொடருந்து பாதை ஒன்றும் காணப்படுகின்றது. எனினும், அது தற்போது பயன்பாட்டில் இல்லை. அந்த இடத்திலேயே இலக்கம் 507 உடைய தொடருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தக் பாகங்கள் கழற்றப்பட்டதன் காரணமாக தடம் மாற்றும் இணைப்பு தளர்வடைந்துள்ளது. இதனால் தொடருந்தின் முன் பெட்டி பிரதான பாதையிலும், பின் பெட்டிகள் திண்மக் கழிவு பதப்படுத்தும் முற்றத்திற்குச் செல்லும் பாதையிலும் பயணித்துள்ளன.

இவ்வாறு இந்த தொடருந்து தொகுதியின் பெட்டிகள் இரண்டு வெவ்வேறு பாதைகளில் பயணித்ததன் காரணமாக, இரண்டாவது பெட்டி தடம் புரண்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக நாங்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளோம். இது குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என தொடருந்து போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

மாறும் வானிலை! இடியுடன் மழை, 55 கி.மீ வேகப் புயல்காற்று!

0

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அடுத்த சில மணித்தியாலங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, நாட்டின் பல கடற்பரப்புகளில் மழையுடனான வானிலையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசந்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனைத் தவிர, நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது பொதுவாக தென்மேற்குத் திசையிலிருந்து வீசக்கூடும். இதன் சாதாரண வேகம் மணித்தியாலத்துக்கு 25 முதல் 35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இருப்பினும், காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

விசேட எச்சரிக்கை: இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில், சம்பந்தப்பட்ட கடற் பகுதிகளில் அவ்வப்போது கடுமையான பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அக்கடற் பிரதேசங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

எனவே, கடற்றொழிலாளர்களும் கடல்சார் ஊழியர்களும் இவற்றுக்கு அமைவாக அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புகையிலை, புகைப்பிடித்தலை ஒழிப்பதற்கு கூட்டு நடவடிக்கை!

0

இலங்கையில் புகையிலை நுகர்வைக் குறைப்பதென்பது வெறும் சுகாதார இலக்கு மட்டுமல்ல, அது தேசிய அபிவிருத்தியின் முதன்மையான முன்னுரிமையாகும் என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள், சுகாதார சேவை வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகளாவிய சுகாதார அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய “இலங்கையில் புகையிலை பயன்பாடு மற்றும் புகைப்பிடித்தலை ஒழிப்பதற்கான உத்திகளை மேம்படுத்தல்” குறித்த கலந்துரையாடலும் ஊடகவியலாளர் சந்திப்பும் அண்மையில் கொழும்பு சினமன் லேக்சைட் (Cinnamon Lakeside) ஹோட்டலில் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

ஆசிய பிராந்திய மக்கள் தொகையில், ஆபத்தான நிலையில் உள்ள பிரிவினரிடையே சுவாச நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைப்பதையும், அவர்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த சர்வதேச தலையீடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய சுகாதாரம் தொடர்பான Respire திட்டத்தின் கீழ், இலங்கையின் சில பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

  • ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
  • பேராதனைப் பல்கலைக்கழகம்
  • ரஜரட்ட பல்கலைக்கழகம்
  • வயம்ப பல்கலைக்கழகம்
  • ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இத்திட்டத்திற்கு கைகொடுத்துள்ளன.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இலங்கையில் புகையிலை பயன்பாடு மற்றும் புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படுவதுடன், அதற்கான உத்திகள் மற்றும் கூட்டு அணுகுமுறைகளும் இங்கு வலியுறுத்தப்பட்டன.

அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளும் சர்வதேச ஆலோசனைகளும்

இந்நிகழ்வில், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரசன்ன ஹேரத் அவர்களினால், தனிநபர் புகைப்பிடித்தல் தடுப்புத் தொடர்பாகப் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அத்துடன், நியூசிலாந்தின் ஓக்லாண்ட் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை சுகாதாரப் பாடசாலையின் பொதுச் சுகாதாரத் துறைப் பேராசிரியர் கிறிஸ் புல்லன் (Prof. Chris Bullen) அவர்கள் ‘ஸூம்’ (Zoom) தொழில்நுட்பம் ஊடாகப் பிரதான உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கான உத்திகள், புகைப்பிடித்தல் மற்றும் சுவாச நோய்கள், புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கான முன்முயற்சிகள் மற்றும் கூட்டுச் செயற்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அதற்கான சான்றுகள் அடிப்படையிலான அறிவியல் அணுகுமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

அரசாங்கத்தின் அர்ப்பணிப்பும் கொள்கை மாற்றமும்

புகையிலை நுகர்வைக் குறைப்பதில் அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்து சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி இங்கு விரிவாகக் கருத்து தெரிவித்தார்.

“உலகில் தவிர்க்கக்கூடிய மரணங்களுக்குப் பிரதான காரணங்களில் ஒன்றாகப் புகையிலை பயன்பாடு காணப்படுகிறது. புகையிலை சார்ந்த நோய்கள் நாட்டின் சுகாதார அமைப்பு, பொருளாதாரம் மற்றும் குடும்பங்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளன. மக்களை நோய்களிலிருந்து பாதுகாத்து மகிழ்ச்சியாக வாழ வைப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். நோய்கள் ஏற்பட்ட பின்னர் சிகிச்சை அளிப்பதை விட, அவை ஏற்படுவதற்கு முன்பே தடுப்பதே எமது பொறுப்பாகும்” என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், புகைப்பிடித்தல் என்பது 100 வீதம் தவிர்க்கக்கூடிய ஒன்று எனவும், புகையிலை தயாரிப்புகளுக்கான வரிகளை அரசாங்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். புகையிலைக் கைத்தொழிலானது மறைமுக சந்தைப்படுத்தல் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புகள் மூலம் இளைஞர்களையே இலக்கு வைக்கிறது. எனவே, புதிய வடிவிலான அனைத்து நிக்கோடின் அடிமைத்தனங்களுக்கும் எதிராக அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், மாறிவரும் சவால்களுக்கு ஏற்ப எமது கொள்கைகள் மாற்றமடைய வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், Respire ஸ்ரீ லங்கா திட்டத்தின் இணைத் தலைவர் பேராசிரியர் சாவித்திரி விமலசேகர, உலக சுகாதார அமைப்பின் (WHO) இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் (Dr. Rajesh Sambhajirao Pandav) ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழப்பு!

0

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மே 10ஆம் திகதி காலை 6:00 மணி முதல் மே 15ஆம் திகதி மாலை 6:00 மணி வரையிலான தரவுகளின்படி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பில் 46 வயதுடைய நபர் ஒருவர் ஆற்றைக் கடக்க முயன்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தங்களினால் நாட்டின் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 47 பிரதேச செயலகப் பிரிவுகளில் மொத்தம் 1,143 குடும்பங்களைச் சேர்ந்த 3,587 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வீடு முழுமையாகவும், 99 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. தற்போது 32 குடும்பங்களைச் சேர்ந்த 113 நபர்கள் 3 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு: திம்பிரிகஸ்யாய பகுதியில் மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்ததில் ஒரு வயது மற்றும் ஆறு மாத கால சிறுவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம்: ஆனமடுவ பகுதியில் வெள்ள நீரில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா: ஜா-எல மற்றும் கணேமுல்ல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு பாதிப்புகள் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை:

மன்னார் – மதவாச்சி மற்றும் ரம்புக்கனை – அஸ்கிரிவத்தை ஆகியவற்றுக்கு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சாலைகள்:

கண்டியில் உடதெல்தொட்ட பாலம் இடிந்து விழுந்ததால் கண்டி-தலத்து ஓயா வீதி மூடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்கள்:

கடும் மழை காரணமாக நுவரவெவ, யான் ஓயா, லுணுகம்வெஹெர மற்றும் ராஜாங்கனை உள்ளிட்ட பல பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மண்சரிவு மற்றும் வானிலை எச்சரிக்கைகள்

பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் அம்பர் நிற மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் கணிப்பின்படி, அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நிலைமைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதுடன், சுமார் 35,000 பேருக்கு குறுஞ்செய்திகள் (SMS) மூலம் எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது.

புத்தளத்தில் மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

0

ஜூட் சமந்த

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 33 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 8,347 குடும்பங்களைச் சேர்ந்த 30,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் இந்திக சில்வா தெரிவித்துள்ளார்.​

பாதிக்கப்பட்ட மக்களுக்காக 6 நலன்புரி முகாம்கள் (தற்காலிக தங்குமிடங்கள்) அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த முகாம்களில் தற்போது 188 குடும்பங்களைச் சேர்ந்த 584 பேர் தங்கியுள்ளனர் என்றும் மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.​

​தொடர்ச்சியான அதிக மழை வீழ்ச்சி காரணமாக தெதுரு ஓயா, இங்கினிமிட்டிய மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.​

தெதுரு ஓயா நீர்த்தேக்கம்:

4 வான் கதவுகள் தலா 2 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக வினாடிக்கு 5,500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.​

தப்போவ நீர்த்தேக்கம்:

12 வான் கதவுகள் தலா 2 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக வினாடிக்கு 4,480 கன அடி நீர் மீ ஓயாவிற்குள் வெளியேற்றப்படுகிறது.​

இங்கினிமிட்டிய நீர்த்தேக்கம்:

2 வான் கதவுகள் 3 அடி வீதமும், மேலும் 2 வான் கதவுகள் 2 அடி வீதமும், மற்றுமொரு 2 வான் கதவுகள் 1 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, வினாடிக்கு 6,000 கன அடி நீர் மீ ஓயாவிற்குள் திறந்து விடப்படுகிறது.​

வெள்ள அபாய எச்சரிக்கை​

தப்போவ மற்றும் இங்கினிமிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மீ ஓயாவிற்குள் பாய்வதனால், மீ ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக புத்தளம் மாவட்ட இடர் மேலாண்மை பிரிவு எச்சரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 150 புதிய வீடுகள் நிர்மாணிப்பு!

0

வவுனியா மாவட்டத்தில் புதிய வீடுகள் 150 கட்டப்படுகிறது – ஒதுக்கீட்டு நிதி ரூபாய் 150 மில்லியன்

“தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளின் கீழ் அரசு ஆரம்பித்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் நிரந்தர வீடுகள் 150 கட்டப்படுகின்றன.

இதற்காக ரூபாய் 150 மில்லியன் செலவிடப்படுகிறது.

வவுனியா மாவட்டத்தில் வீடில்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் 150க்கு இவ்வருடம் புதிய வீடுகள் வழங்கப்படுகின்றன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த குடும்பங்கள் 05 ற்கு நிரந்தர வீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா கற்குழி, அவுசதப்பிட்டிய, கலுகுன்னம்மடுவ, கூமான்குளம் மற்றும் நெடுங்குளம் ஆகிய கிராமங்களில் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வீட்டிற்கும் அரசு ரூபாய் 10 இலட்சம் வரை செலவிட்டுள்ளது. புதிய வீடுகள் திறந்து வைக்கும் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் என். கமலதாசன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கொட்டித் தீர்க்கவுல்ல 150 மி.மீ. அளவு கனமழை!

0

இலங்கைக்கு வடகிழக்கு திசையில் குறைந்த தாழமுக்க வலயம் தொடர்ந்தும்…

இலங்கையின் வடகிழக்கு திசையில் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்து நீடிக்கும் என்றும், அடுத்த 36 மணி நேரத்திற்குள் தீவிலிருந்து அகன்று செல்லும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மி.மீ. அளவுக்கு மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ.-க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்க, பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

0

அத்தனகலு ஓயா வடிநிலப் பகுதிகளில் இன்று இரவு 7.00 மணி நிலவரப்படி பெய்துள்ள பலத்த மழை காரணமாக, அத்தீவுப் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

​அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது:

  • ​அந்த வகையில் திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான, வத்தளை பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

​மேற்குறிப்பிட்ட தாழ்நிலப் பகுதிகள் ஊடாகச் செல்லும் சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, அந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், அவசரத் தேவைகளுக்காகத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெள்ளம் தேங்கியுள்ள வீதிகளைக் கடக்கும்போது மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்படுகிறார்கள்.

இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

​இந்த எச்சரிக்கை அறிவித்தல் 2026 மே 15ஆம் திகதி இரவு 8.00 மணி வரை செல்லுபடியாகும்.

ஆதாரம்: நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவு, நீர்ப்பாசனத் திணைக்களம்.