நாட்டில் நிலவும் டெங்கு அபாய நிலையை கருத்தில் கொண்டு, பாடசாலை சீருடையுடன் சேர்த்து கைகளையும் கால்களையும் முழுமையாக மூடும் பொருத்தமான ஆடைகளை மாணவர்கள் அணிந்து வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்மானம் தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் நுளம்புக்கடியில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கும், பாடசாலை மாணவர்களிடையே டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களின் பங்களிப்புடன் விசேட நுளம்பு ஒழிப்பு மற்றும் பாடசாலை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் அதிபர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாணவர்கள் முறையான தரத்திலான நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வூட்டுமாறு அதிபர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தலில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான சமூக மட்டத்திலான விழிப்புணர்வு மற்றும் ஒழிப்புச் செயற்றிட்டம், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த மக்கள் நல செயற்றிட்டம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல், நேற்று (11) கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஆசாத் பிளாசா மண்டபத்தில், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
குறித்த செயற்றிட்டம் சுகாதார அமைச்சுடன் இடம்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
“இன்று நாட்டில் அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற டெங்கு அபாயத்திலிருந்து மக்களை மீட்டெடுக்கின்ற பணியில், சமூக மட்ட செயல்பாடுகளைச் செய்கிற ஒரு செயல்திட்டமொன்று அவசியம் என்று கருதப்பட்டது. இது குறித்து பாராளுமன்றத்தின் சுகாதார அமைச்சு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு கிராம மட்டத்திலும் இது விரிவாக்கப்படவேண்டிய அவசியம் பேசப்பட்டிருக்கின்றது. நாங்கள் அவசரமாக இதை எமது உள்ளூராட்சி மன்றத் தலைவர்களூடாகவும், எமது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடைய தலைமையிலும், கட்சியின் ஏனைய கீழ்மட்டச் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, இந்த மாவட்டம் தொடங்கி ஏனைய இரண்டு மாவட்டங்களிலும் இதை விரிவுபடுத்திச் செய்வது என்ற தீர்மானத்திற்கு நாங்கள் வந்திருக்கின்றோம்” என்று தெரிவித்தார்.
டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டம், நேற்று முதல் ஆகஸ்ட் 09, 2026 வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை உத்தியோகத்தர்களின் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புடன், சமூகத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையில் இது திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையின் ஊடகத்துறையில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தக் கூடிய ‘மீடியா ஃபெஸ்ட் 2026’ மாநாடு நேற்று (ஜூலை 11) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவின் முன்னணி ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் ஊடக நிறுவன பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்டோரும் ஒரே கூரையின் கீழ் ஒன்றுகூடினர்.
டிஜிட்டல் யுகத்தின் அசுர வளர்ச்சியால், உலகளவில் பாரம்பரிய செய்தி ஊடகங்கள் தங்களது செல்வாக்கை இழந்து வரும் ஒரு இக்கட்டான காலகட்டத்திலேயே இந்த மாநாடு நடப்பது அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. மக்கள் செய்திகளை நுகரும் விதம், சோசியல் மீடியா மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் வரவால் முற்றாக மாறியுள்ளது. இந்த சவால்களை எதிர்கொண்டு, செய்திகளின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை எவ்வாறு தக்கவைப்பது என்பதே நேற்றைய விவாதங்களின் மையப்புள்ளியாகும்.
டிஜிட்டல் யுகத்தின் அசுர வளர்ச்சியும், நாளாந்தம் மாறும் தொழில்நுட்பங்களும் உலகளாவிய ரீதியில் ஊடகத்துறையை ஒரு பாரிய கேள்விக்குறியின் முன் நிறுத்தியுள்ளன. மக்கள் தகவல்களைத் தேடுவதை நிறுத்தவில்லை, ஆனால் அவர்கள் தகவல்களைப் பெறும் வழிகள் முற்றாக மாறிவிட்டன. இந்நிலையில், இலங்கையின் ஊடகத்துறை அடுத்த கட்டத்தை நோக்கி எவ்வாறு நகரப் போகின்றது? இதற்கான விடையைத் தேடி, நாட்டின் முன்னணி ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், பதிப்பாளர்கள் மற்றும் ஊடகப் புதுமைப்படைப்பாளிகள் என அனைவரும் வருகை தந்திருந்தனர்.
இந்த மாநாட்டில், இலங்கை மற்றும் இந்தியாவின் ஆகச்சிறந்த ஊடக ஆளுமைகளின் சிறப்புரைகளும், அனல் பறக்கும் குழு விவாதங்களும் (Panel Discussions) இடம்பெற்றன. குறிப்பாக இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ (ANI) இன் முதன்மை ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ், இந்தியா டுடே (India Today) இன் நிர்வாக ஆசிரியர் மரியா ஷகில் மற்றும் மூத்த ஊடக உத்தியோகத்தர் அசோக் மாலிக் ஆகியோர் சர்வதேச அனுபவங்களை இதில் பகிர்ந்து கொண்டனர்.
வழக்கமான உரை நிகழ்த்தல்களுக்கு அப்பால், நேற்றைய மாநாடானது ஊடகவியலாளர்களும், இளம் படைப்பாளிகளும் தங்களுக்குள் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் (Networking) ஒரு அரிய களமாக அமைந்துள்ளது. மூன்று முக்கிய கருப்பொருள்களின் கீழ், தொலைக்காட்சி, அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் ஒருங்கிணைப்பு பற்றியும், வாசகர்கள் எவ்வாறு வெறும் பார்வையாளர்களாக மாறுகிறார்கள் என்பது பற்றியும் குறித்த அமர்வில் ஆழமாக ஆராயப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் ஃபேஸ்புக், டிக் டாக், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்கள் மற்றும் தனிநபர் சார்ந்த இன்ஃபுளுவன்சர்களின் ஆதிக்கம் என்பன செய்திகள் மக்களை சென்றடையும் விதத்தை முற்றாக மாற்றி அமைத்துள்ளன. இதனால் பாரம்பரிய ஊடகங்கள் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றன. இந்த இக்கட்டான சூழலிலும், செய்திகளின் துல்லியம், நடுநிலைமை மற்றும் மக்களின் நம்பகத்தன்மை ஆகிய அடிப்படைப் பண்புகளைப் பாதுகாத்துக் கொண்டு, ஊடகங்கள் எவ்வாறு தங்களைத் தக்கவைத்துக் கொள்ளப் போகின்றன என்பதுவே இந்த மாநாட்டின் பிரதான பேசுபொருளாக அமைந்திருந்தது.
இந்த மாநாடானது பிரதானமாக மூன்று முக்கிய தலைப்புகளின் கீழ் சுவாரஸ்யமாக முன்னெடுக்கப்பட்டது.
நம்பகத்தன்மை, உண்மை மற்றும் நம்பகத்தன்மைக்கான போராட்டம்: போலிச் செய்திகளுக்கு மத்தியில் உண்மையை நிலைநாட்டுதல்.
ஒட்டுமொத்த ஊடக உத்தி: தொலைக்காட்சி, அச்சு ஊடகம் மற்றும் டிஜிட்டல் தளங்களை ஒன்றிணைத்து எவ்வாறு பயணிப்பது?
பார்வையாளர்களின் மாற்றம்: வாசகர்கள் எவ்வாறு வீடியோக்களைப் பார்க்கும் பார்வையாளர்களாக மாறுகிறார்கள் மற்றும் நிறுவனங்களை விட தனிநபர்களை எப்படி அதிகம் நம்புகிறார்கள் என்பது பற்றிய ஆய்வு.
பொதுமக்களின் நம்பிக்கையை ஊடகங்கள் மீது மீண்டும் கட்டியெழுப்புவது எப்படி, மாறிவரும் நுகர்வோர் கலாசாரத்திற்கு ஏற்ப புதிய வணிக உத்திகளை எவ்வாறு கையாள்வது, மற்றும் தொழில்நுட்பப் புரட்சியால் ஏற்படும் நன்மைகள்-தீமைகள் எவை போன்ற மிக முக்கியமான இலக்குகளை முன்வைத்தே இந்த மாநாடு நடைபெற்றது. ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலதரப்பட்டோரின் பங்களிப்புடன், இலங்கையின் ஊடகத்துறைக்கு இந்த மாநாடு ஒரு புதிய திசையைக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வில் விஷேட விருந்தினராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மாண்புமிகு டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களும், பிரதம விருந்தினராக வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் மாண்புமிகு டொக்டர் கௌசல்யா அரியரத்ன அவர்களும், இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் மேதகு சந்தோஷ் ஜா அவர்கள் மற்றும் ஏனைய முக்கிய அதிதிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த உலக இரசிகர்களையும் சீட்டின் நுனிக்கே கொண்டு வந்த இரண்டு அதிரடி காலிறுதி ஆட்டங்கள் நிறைவுக்கு வந்துள்ளன. உலகக் கிண்ண வரலாற்றில் மற்றுமொரு மறக்க முடியாத அத்தியாயத்தை எழுதும் நோக்கில் களம் புகுந்த அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள், கூடுதல் நேரப் பரபரப்பில் தங்களது அரையிறுதி வாய்ப்பை அதிரடியாக உறுதி செய்துள்ளன.
சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா அணி ஆரம்பம் முதலே கடும் சவாலை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சுவிஸ் வீரர்கள் ஆக்ரோஷமாக முன்னேறிய போதிலும், மெஸ்ஸியின் மாயாஜால கார்னர் வாய்ப்பை லாவகமாகப் பயன்படுத்திய அலெக்சிஸ் மெக் அலிஸ்டர், தலையால் முட்டி பந்தை கோல் வலைக்குள் திணித்து அர்ஜென்டினாவை முன்னிலைப்படுத்தினார். எனினும், சுவிஸ் வீரர் பிரீல் எம்போலோவின் கோல் அடிக்கும் அசுரத்தனமான முயற்சியை அர்ஜென்டினாவின்Wall என்று அழைக்கப்படும் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் சாதுரியமாகத் தடுத்து நிறுத்த, அரங்கம் அதிர்ந்தது.
ஆனால், கதையின் இரண்டாம் பாதியில் சுவிஸ் வீரர் டான் என்டோயே அடித்த மின்னல் வேக கோல் ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தது. போட்டி உச்சக்கட்ட பதற்றத்தை நோக்கிய நகர்ந்த 72-வது நிமிடத்தில், சுவிஸின் நட்சத்திர வீரர் எம்போலோ இரண்டாவது மஞ்சள் அட்டை (சிவப்பு அட்டை) பெற்று மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். இதுவே ஆட்டத்தின் போக்கை முழுமையாக மாற்றியமைத்தது. 10 வீரர்களுடன் சுவிஸ் அணி திணறிய வேளையில், போட்டியின் கூடுதல் நேரத்தில் மைதானத்துக்குள் புகுந்த ஜூலியன் அல்வரெஸ் மற்றும் லௌடாரோ மார்டினெஸ் ஆகியோர் அடுத்தடுத்து கோல்களைப் பொழிந்து அர்ஜென்டினாவின் அரையிறுதிப் பயணத்தை 100% உறுதி செய்தனர்.
இதேவேளை, நோர்வே அணிக்கு எதிராக களம் கண்ட இங்கிலாந்து அணியும் மரண பயத்தை கண்முன்னே கண்டது என்றே கூற வேண்டும். போட்டியின் முதல் பாதியில் நோர்வேயின் ஆண்ட்ரியாஸ் ஷெல்டெரப் முதல் கோலை அடித்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அணியைக் காப்பாற்ற முன்வந்த இங்கிலாந்தின் இளம் சிங்கம் ஜூட் பெல்லிங்ஹாம், முதல் பாதி முடிவதற்குள் ஒரு அதிரடி கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் புள்ளிகளைப் பெற மல்லுக்கட்டிய நிலையில், நோர்வே அடித்த ஒரு கோல் ‘VAR’ (Video Assistant Referee) தொழில்நுட்பத்தின் துல்லியமான கணிப்பால் ரத்து செய்யப்பட, மைதானத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு நகர்ந்த போது, நோர்வே கோல்கீப்பர் நைலேண்ட் செய்த சிறு தவறைக் கச்சிதமாகப் பயன்படுத்திய பெல்லிங்ஹாம், தனது இரண்டாவது கோலை அடித்து இங்கிலாந்து இரசிகர்களை ஆனந்தக் கண்ணீரில் நனையவைத்தார்.
இந்த அசுரத்தனமான வெற்றிகளைத் தொடர்ந்து, உலகக் கிண்ண கால்பந்து அரங்கின் தற்போதைய ஹாட் டாபிக் (Hot Topic) புதன்கிழமை நடைபெறவுள்ள மெகா அரையிறுதிப் போட்டிதான். வரும் புதன்கிழமை (15) அட்லாண்டா மைதானத்தில், லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவும், ஜூட் பெல்லிங்ஹாமின் இங்கிலாந்தும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டைப் பெற நேருக்கு நேர் மோதவுள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கால்பந்து யுத்தத்தைக் காண உலகமே இப்போது அட்லாண்டாவை நோக்கித் திரும்பியுள்ளது.
நாடு முழுவதும் அச்சுறுத்தலாக இருந்த டெங்கு நோயின் பரவல் தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால், இந்த நிம்மதிக்கு மத்தியிலும் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் டெங்கு குறைந்தாலும், கடலோர மற்றும் மீனவ கிராமங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் எந்தவொரு குறைவும் ஏற்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபூல் ரோஹண வெளியிட்டுள்ளார். சிலாபத்தில் நடைபெற்ற அவசர டெங்கு ஒழிப்பு திட்டத்தின் போதே அவர் இதனை பகிரங்கப்படுத்தினார்.
சுகாதார துறையினர் மற்றும் தொண்டர் அமைப்புகளின் அதிரடி நடவடிக்கைகளால் டெங்கு பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், நிலைமையை முழுமையாக சீர்செய்ய தற்போது இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் பங்களிப்பு கோரப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக சிலாபம் கடலோரப் பகுதி மற்றும் களப்புப் பகுதியை சுற்றியுள்ள வீடுகள் மற்றும் சூழலை சோதனையிடும் நடவடிக்கைகள் இராணுவத்தின் பலத்துடன் தற்போது தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால், மீனவ கிராமங்களில் மட்டும் ஏன் இந்த திடீர் டெங்கு வெடிப்பு? இதற்கான காரணத்தை தேடிச் சென்ற சுகாதார அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பொதுவாக வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், பாத்திரங்களையே நாம் சோதனையிடுவோம். ஆனால், மீனவ கிராமங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பழைய மீன்பிடி படகுகள் (வள்ளங்கள்) மற்றும் அங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகளை மூடியிருக்கும் உறைகளுக்குள் தேங்கியிருக்கும் நீரிலேயே டெங்கு நுளம்புகள் பில்லியன் கணக்கில் பெருகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலாபம் மட்டுமன்றி, மாத்தறை போன்ற தூரத்து கடலோர மாவட்டங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.
இந்த அபாயகரமான சூழ்நிலையை முறியடிப்பதற்காக, மாதம்பே முகாமின் இராணுவ 7வது கஜபா படைப்பிரிவின் அதிகாரிகள், புத்தளம் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு மற்றும் சிலாபம் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலக வைத்தியர்கள் உள்ளிட்ட பெரும் பட்டாளமே இப்போது சிலாபத்தில் முகாமிட்டுள்ளது.
இறுதியாக, அதிகாரிகள் ஒரு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். சுகாதார அதிகாரிகளோ அல்லது பாதுகாப்புப் படையினரோ உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து டெங்கு நுளம்புகளை அழிக்கும் வரை பொதுமக்கள் காத்திருக்கக் கூடாது. நீங்கள் வாழும் சூழலை சுத்தமாக வைத்திருப்பது உங்களது அண்டை வீட்டாருக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ செய்யும் உதவி அல்ல; அது இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டுக்கும் நீங்கள் செய்யும் ஒரு “தேசிய கடமை” என்பதை உணர்ந்து அனைவரும் உடனே விழித்துக்கொள்ள வேண்டும்.
இலங்கையின் நிதித்துறையையே ஆட்டம் காண வைத்துள்ள ஒரு அதிர்ச்சித் தகவல், இன்று நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள், அதாவது இலங்கை மதிப்பில் பல நூறு கோடி ரூபாய் பணம், மர்மமான முறையில் மூன்றாம் தரப்பு ஒன்றின் கைகளுக்குச் சென்றுள்ளதாக அரச நிதி பற்றிய குழு (COPF) தனது அதிரடி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இந்த விசேட அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றிய அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள திடுக்கிடும் உண்மைகளை உடைத்துள்ளார். திறைசேரியில் இருந்து காணாமல் போயுள்ள இந்த மில்லியன் கணக்கான டொலர் பணம், சாதாரணமான ஒரு கணக்குத் தவறு அல்ல என்றும், இது ஒரு திட்டமிடப்பட்ட ‘சைபர் குற்றத்தின்’ மூலமாக அரங்கேற்றப்பட்ட பாரிய நிதி மோசடி என்றும் அவர் சபையில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
நாட்டின் மிக உயரிய பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் திறைசேரியின் நிதி, எவ்வாறு இணையவழிக் கொள்ளையர்களால் சுருட்டப்பட்டது என்ற கேள்வி இப்போது நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நாட்டின் ஒட்டுமொத்த நிதிப் பாதுகாப்பிற்கே விடுக்கப்பட்ட ஒரு சிவப்பு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.
இணையவழிக் கொள்ளையர்களின் இந்தத் துணிகரமான நடவடிக்கை, இலங்கையின் ஒட்டுமொத்த வெளிநாட்டு நிதிப் பரிமாற்றங்கள் மீதான நம்பிக்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இதன் விளைவாக, நாட்டின் ஒட்டுமொத்த வெளிநாட்டு கடன் மறுசெலுத்துகை செயன்முறைகள் அனைத்தையும் முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் மூலமாக அவசர மற்றும் முழுமையான சுயாதீன கணக்காய்வு ஒன்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என அரச நிதி பற்றிய குழு நாடாளுமன்றத்திற்குப் பலமாகப் பரிந்துரைத்துள்ளது. இந்த சைபர் கொள்ளையின் பின்னணியில் உள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச நெட்வொர்க் எது என்பது பற்றிய அடுத்தகட்ட விசாரணைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
உலக அரசியல் அரங்கம் மீண்டும் ஒருமுறை அதிரத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் அண்மையில் ஒரு புதிய சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை, அமெரிக்காவிற்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான 60 நாள் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்து, இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கிக் கொள்ளும் இக்கட்டான சூழலில், இந்த உளவுத் தகவல் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறையானது கடந்த சில வாரங்களாகவே ட்ரம்பிற்கு எதிரான ஈரானின் அச்சுறுத்தல்களைத் தீவிரமாகக் கண்காணித்து வந்த போதிலும், இந்த வாரம் இஸ்ரேல் வழங்கிய எச்சரிக்கையானது மிகவும் விசேடமானது என வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், இது ஈரான் தற்போதைக்குத் தீட்டியுள்ள ஒரு குறிப்பிட்ட இரகசியத் திட்டத்தை அக்குவேறாக ஆணிவேறாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. எனினும், இந்தத் தகவலை அமெரிக்கா இன்னும் சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த உளவுத் தகவலின் பின்னணியில் ஒரு பெரும் அரசியல் காய்நகர்த்தல் இருப்பதாக அமெரிக்க உயர் அதிகாரிகள் சிலர் சந்தேகிக்கின்றனர். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இன்னும் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரும்புவதாகவும், ட்ரம்பின் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவதற்காகவே இஸ்ரேல் இந்தத் தகவலை இப்போது கசியவிட்டுள்ளதாகவும் அவர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ஈரானுடனான ட்ரம்பின் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நெதன்யாகு கடுமையாக எதிர்த்து வரும் நிலையிலேயே இந்தத் திருப்பம் நிகழ்ந்துள்ளது.
“அவர்கள் அமெரிக்கத் தலைவரான என்னைத்தான் ஒழிக்க நினைக்கிறார்கள்” என்று புதன்கிழமை அன்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் கொலைப் பட்டியலில் தான் முதலிடத்தில் இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், “இதுவரை நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி, ஆனால் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியாது. இவர்கள் மிகவும் கொடூரமான மனிதர்கள், இந்த புற்றுநோயை நாம் ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும்” எனத் தனது பாணியில் எச்சரித்துள்ளார். அண்மையில் கொல்லப்பட்ட ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில், “ட்ரம்ப்பை கொல்வோம்” என்ற பதாகைகளுடன் ஈரானிய மக்கள் வீதிக்கு வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், திரைக்குப் பின்னால் மற்றொரு சுவாரஸ்யமான நாடகம் அரங்கேறி வருகின்றது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பமாகி, போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக ட்ரம்பே அறிவித்தாலும், வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதிக்குள் ஒரு புதிய அணுஆயுத ஒப்பந்தத்தைக் கொண்டுவர இரு நாடுகளும் இரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எந்நேரமும் ஈரான் மீது தாக்குதல் நடத்த ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ போர்க்கப்பலில் போர் விமானங்கள் ஆயுதங்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தாலும், இராஜதந்திர ரீதியில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே வாஷிங்டன் தற்போது முன்னுரிமை வழங்கி வருகின்றது. இராஜதந்திரமா அல்லது யுத்தமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்புத்துறையைச் சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது 42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாகச் சிகிச்சை பெற்று வந்துள்ள குறித்த நபர், நோயின் வீரியம் தாங்க முடியாமல், கச்சேரிக்கு முன்பாக உள்ள ரயில் கடவைக்குச் சென்று, அநுராதபுரத்தில் இருந்து வந்த யாழ்ராணி ரயில் முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.
பின்னர் அவரது சடலமானது ரயிலில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும், சுமார் 10,000 கிலோ கிராம் எடையுடைய 60,448 கடல் அட்டைகளுடன் 26 மீனவர்கள் இன்று (09) மன்னார், சௌத்பார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தச் சட்டவிரோத கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 12 படகுகளும், அவற்றில் இருந்து சுமார் 10,000 கிலோ கிராம் எடையுடைய 60,448 கடல் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் கடல் அட்டைகள் சௌத்பார் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டு, முதற்கட்ட நடவடிக்கைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
மீட்கப்பட்ட கடல் அட்டைகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு, பொலித்தீன் பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் காணப்பட்டன. இது குறித்து கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் இன்று (09) மாலை கடற்படை மற்றும் பொலிஸார் முன்னிலையில் பகிரங்க ஏல விற்பனை செய்யப்பட்டன.
அதேவேளை, கைது செய்யப்பட்ட 26 மீனவர்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகுகள் உள்ளிட்ட ஏனைய பொருட்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் மிக வேகமாக அதிகரித்து வரும் சுகாதாரப் பிரச்சினைகளில் சிறுநீரகக் கல் நோய் (Kidney Stone Disease) பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, நவீன எண்டோரோலாஜிக்கல் தொழில்நுட்பப் பற்றாக்குறை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அறைகள் காரணமாக, நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட நோயாளர்கள் தங்களின் சத்திரசிகிச்சைக்காகக் காத்துக்கிடக்கும் அவல நிலை இதுவரை நீடித்து வந்தது. இந்த நீண்டநாள் அவதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான திட்டம் தற்போது தயார் நிலையில் உள்ளது.
நாடு தழுவிய ரீதியில் சிறுநீரக நோயாளர்களுக்குச் சேவையாற்றும் நோக்கில், அனைத்து அதிநவீன வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக் கட்டிடமாக “மீரிகம தேசிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம்” கம்பீரமாக எழுந்து நிற்கிறது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் தொற்றா நோய்கள் (NCD) செயலணிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட விசேட முன்மொழிவுகளின்படி, இலங்கை சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் (SLAUS) முழுமையான அனுசரணையில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி காலை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இம்மையம் உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்படவுள்ளது.
இந்த மெகா திட்டத்தின் பின்னணியில் சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பங்களிப்புகள் கைகோர்த்துள்ளன. சீன அரசாங்கத்தின் 564 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த அதிநவீன மூன்று மாடிக் கட்டிடமும் அதன் ஆரம்பக் கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், ஆரம்பத்தில் இருந்தே இத்திட்டத்திற்குப் பக்கபலமாக இருந்த பிரபல தொழிலதிபரும் பொறியியலாளருமான நஹீல் விஜேசூரிய, சிறுநீரகக் கற்களை மிக இலகுவாகவும் நவீன முறையிலும் அகற்றுவதற்குத் தேவையான அதிநவீன மருத்துவ உபகரணங்களையும் உயர்தொழில்நுட்பங்களையும் முழு மனதுடன் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இலங்கை மருத்துவத் துறையில் இதுவரை இல்லாத ஒரு புதிய அணுகுமுறையும் இம்மையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க சுகாதாரச் சேவையில் பணிபுரியும் எந்தவொரு பகுதியைச் சேர்ந்த விசேட சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணரும், தமது நோயாளர்களை இந்த மையத்திற்கு அழைத்து வர முடியும். இங்குள்ள உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தங்களின் நோயாளர்களுக்கு உயர்திறன் வாய்ந்த சத்திரசிகிச்சைகளை அவர்களே முன்னெடுக்கலாம் என்பது இதன் தனித்துவமான அம்சமாகும்.
எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திறப்பு விழாவில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் வைத்தியர் அனில் ஜசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, மீரிகம மருத்துவமனையின் பணிப்பாளர் சமிந்த பிரேமரத்ன மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகள், மருத்துவர்கள், தாதியர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இலங்கை மக்களின் சிறுநீரக நோய் அவஸ்தைகளுக்கு மிக விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.