Tuesday, June 16, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 38

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது!

0

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கெப் ரக வாகனமொன்றின் சேஸி (Chassis) இலக்கத்தைத் திருத்தி, அதனை போலியான முறையில் பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள கமல் அமரசிங்க, இன்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக 3,000 இடங்களில் போராட்டங்கள்!

0

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ஈரானுடனான போர்ச் சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்று அமெரிக்கா முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களை நடத்த “No Kings” என்ற மக்கள் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே 2025 ஜூன் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்பின் கடுமையான குடிவரவு கொள்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வொஷிங்டன் டி.சி. மினியாபோலிஸ், சிகாகோ மற்றும் சென் பிரான்சிஸ்கோ போன்ற முக்கிய நகரங்களில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 6,46,000 மக்கள் தொகையைக் கொண்ட சிறிய மாநிலமான வெர்மான்ட்டில் மாத்திரம் 40க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்ட தினங்களில் ஒன்றாக இந்தச் சனிக்கிழமை அமையும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

உலகில் அதிகம் பாதிக்கப்படும் 2-வது நாடாக இலங்கை!

0

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நெருக்கடி நிலைமையால் பொருட்களின் விலை அதிகரிப்பினால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக பிபிசி வெரிஃபை (BBC Verify) ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வழமையாக நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்து, தற்போது ஒரு சில கப்பல்களாகக் குறைந்துள்ளதாக பிபிசி வெரிஃபை சுட்டிக்காட்டுகிறது.

இதன் விளைவாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்புடன், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் வேகமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய விவசாயத் தேவைகளுக்கான யூரியா, பொட்டாஷியம், அமோனியா மற்றும் பொஸ்பரேட் போன்ற உரத் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு (1/3) பொதுவாக இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

வட அரைக்கோளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் முக்கிய பயிர்ச்செய்கை காலங்களாக இருப்பதால், தற்போதைய உரத் தட்டுப்பாடு ஆண்டின் பிற்பகுதியில் பயிர் விளைச்சல் குறைவதற்கு நேரடியாக வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜெர்மனியின் கீல் ஆராய்ச்சி நிறுவனம்(Kiel Research Institute), ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலகளாவிய கோதுமை விலை 4.2% ஆகவும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் 5.2% ஆகவும் உயரக்கூடும் எனக் குறிப்பிடுகிறது.

கீல் நிறுவனத்தின் தரவுகளின்படி, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் பொருட்களின் விலை அதிகம் உயரக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

உணவுப் பொருட்களின் ஒட்டுமொத்த விலை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஜாம்பியா (30.7%), இலங்கை (15.3%), தாய்வான் (12.5%) மற்றும் பாகிஸ்தான் (11.4%) ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஈரான் மோதலிலிருந்து கத்தார் விலகல்:

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்திலிருந்து கத்தார் அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை, சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

​கடந்த மார்ச் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில், கத்தாரின் முக்கிய எரிசக்தி மையமான ‘ராஸ் லப்பான்’ மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களை கத்தார் ராணுவம் வெற்றிகரமாக முறியடித்த போதிலும், நாட்டின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியில் 17% பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

​இந்தத் தாக்குதலால் சுமார் $20 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்பில் உள்ள பலவீனத்தை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

விலகலுக்கான காரணம் என்ன?

​அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், ஈரான் உடனான நேரடி மோதலைத் தவிர்க்க கத்தார் முடிவு செய்துள்ளது.

  • ​உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலை கத்தாரும் ஈரானும் பகிர்ந்து கொள்கின்றன. ஈரானுடன் பகைத்துக் கொள்வது கத்தாரின் பொருளாதார அடித்தளத்தையே பாதிக்கும்.
  • போரினால் ஏற்படும் பேரழிவை விட, பிராந்திய நாடுகளுடன் இணைந்து வாழ்வதே சிறந்தது என கத்தார் கருதுகிறது.
  • ​ஆயுத மோதல்களை விட பேச்சுவார்த்தை மூலமே நிரந்தரத் தீர்வு காண முடியும் என கத்தார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

வளைகுடா அரசியலில் மாற்றம்

​கத்தாரின் இந்தத் திடீர் முடிவு, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற அண்டை நாடுகளுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கக் கூட்டணியில் பிளவு ஏற்படுவதை இது காட்டுவதுடன், மற்ற நாடுகளும் தங்கள் பொருளாதார நலனைக் கருதி ஈரானுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

​மொத்தத்தில், ஒரு போரைத் தொடர்வதை விட, தனது நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து கத்தார் எடுத்துள்ள இந்த முடிவு, மத்திய கிழக்கு அரசியலில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

பிஸ்கட் மற்றும் இனிப்பு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பு?

0

இலங்கையில் பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிப்பதில்லை என இலங்கை இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் (Lanka Confectionery Manufacturers Association) உறுதியளித்துள்ளது.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கும், இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (26) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய தாக்கம் மற்றும் உள்நாட்டுத் தொழிற்றுறையில் அதன் பாதிப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

தற்போதைய பொருளாதாரச் சூழலில் நுகர்வோரால் மேலதிக விலை உயர்வைத் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். உள்நாட்டு பிஸ்கட் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் அதேவேளை, நுகர்வோர் பாதிக்கப்படுவதை ஆகக்குறைந்த மட்டத்தில் பேணுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார்.

அத்துடன், கடினமான காலப்பகுதியிலும் நுகர்வோர் நலன் கருதி செயற்படுமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர், உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் தலையிடத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியகுமார, பின்வரும் முக்கிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்:

  • இலங்கையின் இனிப்புப் பண்டத் தேவையானது 95% உள்நாட்டு உற்பத்தியின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.
  • இத்தொழிற்றுறையில் சுமார் 50,000 பேர் நேரடியாகவும், 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
  • கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொழில்நுட்ப முதலீடுகள் இத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மின்சார மற்றும் எரிவாயு கட்டண உயர்வு மற்றும் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை இத்துறை எதிர்கொள்ளும் பிரதான சவால்களாக உள்ளன. குறிப்பாக, கரோனா காலத்திற்குப் பிறகு பெரிய அளவில் விலையேற்றம் செய்யப்படாமல், மிகக் குறைந்த இலாபத்துடனேயே இத்தொழிற்றுறை இயங்கி வருவதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இருப்பினும், சித்திரைப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குச் சுமையை ஏற்படுத்தாத வகையில் மே மாதம் வரை விலையை அதிகரிப்பதில்லை என சங்கம் ஒருமனதாகத் தீர்மானித்துள்ளது. மே மாதத்திற்குப் பின்னரும் எரிவாயு, மின்சாரம் மற்றும் மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்தால் மட்டுமே விலை திருத்தம் குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், துறைமுகத்தில் மூலப்பொருட்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் கப்பல் கட்டண உயர்வு போன்ற பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய உற்பத்தியாளர்கள், புத்தாண்டு கால விநியோக நடவடிக்கைகளுக்காகத் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிரடியாக எரிபொருள் வரி நீக்கத்தை அறிவித்தது வியட்நாம்!

0

ஈரான் மீதான போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகின்றன. இந்த விலை உயர்விலிருந்து உள்நாட்டு நுகர்வோர்களைப் பாதுகாக்கவும், பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் வியட்நாம் நிதி அமைச்சு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

உள்நாட்டுச் சந்தையில் எரிபொருள் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக, குறிப்பிட்ட சில வரிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருட்கள் மீதான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி மற்றும் விசேட கொள்வனவு வரி ஆகியவற்றை வியட்நாம் நிதி அமைச்சு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. 

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, இந்த வரி விலக்கு நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும், எதிர்வரும் ஏப்ரல் 15-ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் நிதி அமைச்சின் உத்தியோகபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈரான் மீதான போரினால் உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், வியட்நாம் தமது உள்நாட்டு சந்தையை ஸ்திரப்படுத்துவதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உலக நாடுகள் பலவற்றிலும் பணவீக்கத்தை அதிகரித்துள்ளன. இந்த இக்கட்டான சூழலில், வியட்நாமின் இந்த வரி குறைப்பு நடவடிக்கை அந்நாட்டு போக்குவரத்து மற்றும் விமானத் துறைக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி நீதிமன்றில் ஆஜர்!

0

இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, தற்போதைய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலப்பகுதியில், தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சட்டவிரோதமான முறையில் இலாபம் அல்லது சலுகைகளைப் பெற்றுக்கொடுத்ததன் மூலம், இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றத்தைப் புரிந்ததாக இவருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அக்காலப்பகுதியில் குமார ஜயகொடி உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் மற்றும் இறக்குமதி பிரிவின் முகாமையாளராகப் பணியாற்றியுள்ளார். இதன்போது, குறித்த கூட்டுத்தாபனத்தின் ஹுனுப்பிட்டிய களஞ்சிய வளாகத் தரையில் கார்பட் இடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் செயல்முறையிலேயே முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேகநபருக்கு எதிராக இந்தக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யத் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நிலக்கரி மோசடி தொடர்பிலும் பாரிய பிரச்சினை எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் அரசியல் மற்றும் பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் மகனை கோடரியால் வெட்டிக்கொன்ற தந்தை!

0

ஜூட் சமந்த

ஆணமடுவ – சொஹன்கல்ம பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை கோடாரியால் தாக்கி படுகொலை செய்துள்ளதாக மஹகும்புக்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சோகமான சம்பவம் நேற்று 26 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ஆணமடுவ – சொஹன்கல்ம பகுதியைச் சேர்ந்த ராஜகருணா ஹேரத் முடியன்சேலாகே திலீப மதுசங்க (26 வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த மகனுக்கும் சந்தேகநபரான தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நடந்த சமயத்தில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவருமே மது அருந்தியிருந்ததாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தக் கொலையைச் செய்த பின்னர், 63 வயதுடைய சந்தேகநபரான தந்தை அப்பகுதியிலிருந்து தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாகியுள்ள தந்தையைக் கைது செய்வதற்கான விசேட விசாரணைகளை மஹகும்புக்கடவல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடைபெறவுள்ள நிலையில், மஹகும்புக்கடவல பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

0

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நுகர்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வால் முட்டை ஒன்றின் விலை 40 ரூபா வரையிலும், தோல் உடனுள்ள குளிரூட்டப்பட்ட (Frozen) கோழி இறைச்சி ஒரு கிலோகிராமின் விலை 100 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.

முட்டைகளின் புதிய விலை விபரம்:

  • சிறிய அளவிலான முட்டை – 37 ரூபா.
  • நடுத்தர அளவிலான முட்டை – 39 ரூபா.
  • பெரிய (சிவப்பு) முட்டை – 40 ரூபா.

அதேவேளை, பண்ணைகளிலிருந்து சந்தைக்கு விநியோகிக்கப்படும் தோல் உடனுள்ள கோழி இறைச்சி ஒரு கிலோகிராமின் விலை தற்போது 1,200 ரூபா முதல் 1,250 ரூபா வரை உயர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையேற்றம் கோழிப்பண்ணை தொழிலை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளதாக இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச். குணசேகர தெரிவித்துள்ளார்.

கோழிப்பண்ணைகளில் உள்ள சிறிய குஞ்சுகளை வெப்பப்படுத்துவதற்கு எரிவாயு பயன்படுத்தப்படுவதாகவும், தற்போதைய எரிபொருள் விலை உயர்வு இத்தொழில்துறையை அசாதாரணமான முறையில் பாதித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு வருகிறது ரஷ்யாவின் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்!

0

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். 

தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அவர் இந்த இணக்கப்பாட்டை வௌியிட்டுள்ளதாக மயூர நெத்திகுமாரகே குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி, சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் என்பன விரைவில் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்குக் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.