இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அவர் இந்த இணக்கப்பாட்டை வௌியிட்டுள்ளதாக மயூர நெத்திகுமாரகே குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் என்பன விரைவில் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்குக் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கத்தினால் இலங்கையின் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தற்போது கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பருப்பு, நெத்திலி மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற பல அடிப்படைப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகப் புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில், நுகர்வோர் அநீதிக்குள்ளாவதைத் தடுப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சில வியாபாரிகள் அத்தியாவசியப் பொருட்களை மறைத்து வைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, விலைகளை நியாயமற்ற முறையில் உயர்த்துவதாகவும் அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் சந்தையில் இடம்பெறக்கூடிய முறைகேடுகளைத் தடுப்பதற்காக, அதிகாரசபையின் அனைத்து விசாரணை உத்தியோகத்தர்களும் வார இறுதி நாட்கள் மற்றும் அரச விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு இழைக்கப்படும் அநீதிகள் அல்லது சந்தை முறைகேடுகள் தொடர்பான புகார்களைச் சமர்ப்பிக்க 1977 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
2025 மே மாதம் 19 ஆம் திகதியன்று தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெபிலியானா வீதி, நாதிமால பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வழங்கப்பட்ட தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், அங்கிருந்த கடை ஒன்றிற்குள் புகுந்து நபர் ஒருவரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவரைக் கொலை செய்துள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற குற்றச் செயல் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கொலைச் சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சந்தேக நபரான 41/14, ஓபேத் பேதசம் தெஹிவளை முகவரியை சேர்ந்த, சேனாரத்னகே தனஞ்சய கெளசல்ய பெரேரா என்பவரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காகப் பொலிஸார் தற்போது பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளனர்.
இது தொடர்பாகச் சந்தேக நபரின் தகவல்கள் மற்றும் வரைபடங்கள் அடிப்படையில் பொலிஸார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பான நிழற்படம் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இவரைப் பற்றிய ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களைப் பொதுமக்களுக்குக் கொண்டு செல்லுமாறு ஊடக நிறுவனங்களுக்குப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சந்தேக நபர் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள 071 859 6065/ 011 280 9077 தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இனிவரும் காலங்களில் ஏற்படவுள்ள மின்வெட்டுக்கு ஈரான் போர் காரணம் அல்ல என்றும், அதற்கு தற்போதைய ஜனாதிபதி அணுர குமார திசாநாயக்கவே பொறுப்பேற்க வேண்டும் என்றும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் பாடலீ சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்,.
நாவலப்பிட்டி ஸ்ரீ கவிஸ்வர வேலுவனாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘டிட்வா’ சூறாவளியினால் சேதமடைந்த நாவலப்பிட்டி விகாரையின் பாதுகாப்புச் சுவரை புனரமைப்பதற்காக, போதாகம சந்திம தேரரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ‘தம்மச்சக்க’ அறக்கட்டளை ஊடாக 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதி உதவி வழங்கும் நிகழ்விலேயே அவர் இந்த கருத்துக்களை முன்வைத்தார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்னவும் கலந்து கொண்டிருந்தார்.
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் பாரிய தவறுகளை இழைத்துள்ளதாக சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார். குறிப்பாக, வீடுகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிப்பதற்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்காததே அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறு என்று அவர் குறிப்பிட்டார்.
சுனாமி அனர்த்தத்தின் போது அரசாங்கம் வீடுகளையோ அல்லது தேவாலயங்களையோ கட்ட வேண்டிய தேவை இருக்கவில்லை, தன்னார்வ நிறுவனங்களே அனைத்தையும் செய்தன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும், அதற்கான காணிகள் கூட இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
“சமூக ஊடகங்களில் இந்த அனர்த்தம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுவிட்டதாகக் காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் மக்கள் இன்னும் கூடாரங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 8,63,680 ‘Pregab’ ரக வலிநிவாரணி மாத்திரைகளை கொஸ்வத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட இந்த மருந்துப் பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கல்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கி உலர்ந்த கருவாடு ஏற்றிச் செல்லும் போர்வையில், லொறி ஒன்றில் இந்த மாத்திரைகள் கொண்டு செல்லப்படுவதாக அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) கல்பிட்டி பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கல்பிட்டியிலிருந்து கொழும்பு வரையான பாதையிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் இது குறித்து உஷார்படுத்தப்பட்டன.
கடந்த 25ஆம் திகதி அதிகாலை, நந்தாண்டியா – கொட்டராமுல்ல பகுதியில் உள்ள ஒரு கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக இந்த லொறி நிறுத்தப்பட்டிருந்தது. லொறியை ஓட்டி வந்தவர்கள் அதனை அங்கேயே விட்டுச் சென்றதாக நிலைய உரிமையாளர் தெரிவித்தார். எவரும் லொறியை உரிமை கோரி வராத நிலையில், 26ஆம் திகதி அதிகாலை கொஸ்வத்தை பொலிஸார் அந்த லொறியைத் தங்கள் பொறுப்பில் எடுத்தனர்.
பொலிஸார் லொறியைச் சோதனையிட்ட போது, மேலோட்டமாகத் தெரிவது போல் 12 கருவாடு பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எனினும், அவற்றின் உள்ளே மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 பெட்டிகளில் இந்த சட்டவிரோத மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
புற்றுநோய் மற்றும் நரம்புப் பாதிப்புகளால் ஏற்படும் கடுமையான வலியைக் குறைக்க மட்டுமே இந்த ‘Pregab’ மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நிபுணத்துவ மருத்துவரின் பரிந்துரை இன்றி இதனை எவரும் வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது சட்டவிரோதமானது என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது லொறியின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர். சிலாபம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் பெரேரா மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக ஹப்புகொட ஆகியோரின் ஆலோசனையின் கீழ், கொஸ்வத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் வர்ணகுல உள்ளிட்ட குழுவினர் இந்தச் சோதனையை வெற்றிகரமாக முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
பிராந்திய இறையாண்மை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல்:
ஈரானுக்கு எதிரான ஐநா தீர்மானம் குறித்து சவுதி வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை.
சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஓமான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு எதிராக ஈரான் நடத்திய தூண்டப்படாத தாக்குதல்கள் மற்றும் அதனால் மனித உரிமைகளில் ஏற்படும் தாக்கங்கள் குறித்த தீர்மானத்தை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டதை சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வரவேற்கிறது.
மனித உரிமைகள் பேரவையின் 61-வது அமர்வின் போது, அதன் உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது ஈரானிய தாக்குதல்களை சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து நிராகரிப்பதையும், இந்த கொடூரமான செயல்களை மனித உரிமைகளின் கடுமையான மீறலாகக் கருதி கண்டனம் செய்வதையும் பிரதிபலிக்கிறது என்று அமைச்சகம் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சவுதி அரேபியா மற்றும் பிராந்திய நாடுகளுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்கள், நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் செயலாகும் என்றும், இது சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் தெளிவான மீறல் என்றும் சவுதி அரேபியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
மோதலில் ஈடுபடாத நாடுகளை இலக்காகக் கொள்வது ஒரு அப்பட்டமான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்றும், அதை நியாயப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியாது என்றும் அமைச்சகம் வலியுறுத்துகிறது.
ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கான சட்டங்களை இயற்ற ஈரான் பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் பாராளுமன்றத்தின் சிவில் விவகாரக் குழுவின் தலைவரை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்திகளின்படி, இதற்கான சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் சட்டத்துறையினால் அது இறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தத் திட்டத்தின்படி, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஈரான் கட்டணம் வசூலிக்க வேண்டும்” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு சாதாரண நடைமுறை என்று மேலும் தெரிவித்துள்ள அவர், “ஏனைய போக்குவரத்து வழிகளைப் போலவே, ஒரு நாட்டின் ஊடாகப் பொருட்கள் கொண்டு செல்லப்படும்போது வரி செலுத்தப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணையும் அத்தகைய ஒரு வழிப்பாதையே.
அதன் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்துவதால், கப்பல்களும் எண்ணெய் தாங்கிகளும் அதற்குக் கட்டணம் செலுத்துவது இயல்பானது” என்று கூறியுள்ளார்.
தற்போதைய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரான் முன்வைத்துள்ள ஐந்து நிபந்தனைகளில் ஒன்று, ஹோர்முஸ் நீரிணை மீது தனது அதிகாரத்தைச் செலுத்துவதற்கான உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதாகும்.
வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எனத் தன்னை அடையாளப்படுத்தி, வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்த 31 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது நடவடிக்கை கடந்த 25ஆம் திகதி மாலை கெலனிகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் வைத்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் வாட்ஸ்அப் ஊடாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தகர்களைத் தொடர்பு கொண்டுள்ளார். தான் வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எனக் கூறி, அவர்களை அச்சுறுத்தி பணம் பறித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக அம்பலாங்கொடை, காந்தர, இரத்தினபுரி, ஹொரண, பாணந்துறை, மாரவில மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் உள்ள ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்களிடம் இவர் இவ்வாறு கப்பம் பெற்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட சமயத்தில் சந்தேக நபரிடமிருந்து 25 கிராம் 620 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல், திருட்டு, கொள்ளை மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய குற்றவாளி என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் மீதான போரில் அமெரிக்கா பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்த போரில் எந்த நட்பு நாடுகளும் அதிபர் டிரம்புக்கு உதவ முன்வரவில்லை. ஈரான் போர் மூலம் உலகளாவிய பொருளாதார சிக்கலை டிரம்ப் உண்டாக்கிவிட்டதாக அவப்பெயரும் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டிலும் அவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டென்னசி மாகாணத்தில் நடந்த மெம்பிஸ் பாதுகாப்பு பணிக்குழுவின் வட்டமேசை மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், ‘‘ஈரான் போர் தொடர்பான முடிவை எடுப்பதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், விமானப்படை ஜெனரல் டான் கெய்ன் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளையும் அழைத்து நிலைமை குறித்து ஆலோசித்தேன். ஈரான் 47 ஆண்டுகளாக தொடர்ந்து தீவிரவாதத்தை மட்டுமே பரப்பி வருகிறது.
இப்போது அணு ஆயுதத்தை பெறும் நிலைக்கு மிகவும் நெருக்கத்தில் உள்ளனர். எனவே மத்திய கிழக்கில் சிறிய நடவடிக்கை மேற்கொண்டு பெரிய பிரச்னைக்கு முற்றிலும் முடிவு கட்டலாம் என்று கூறினேன். அப்போது பீட் ஹெக்சேத் தான் முதலில் குரல் கொடுத்தார். ‘அவர்கள் கையில் அணு ஆயுதம் கிடைப்பதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. நாம் தாக்குதல் நடத்துவோம்’ என ஹெக்சேத் கூறினார்’’ என ஹெக்சேத்தை பாராட்டினார். இதன் மூலம் ஈரான் போருக்கு தான் மூல காரணம் இல்லை என்பதை டிரம்ப் மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார்.
எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் அரசு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. பிலிப்பைன்ஸ் 98% கச்சா எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே வாங்குவதால், ஈரான் -அமெரிக்கா இஸ்ரேல், இடையேயான போரால் பெட்ரோல், டீசலின் விலை அந்நாட்டில் இருமடங்கு அதிகரித்தது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் உலகளவில் கடும் எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. இதன் நேரடி விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிபொருள் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதுடன், அதன் விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் விண்ணைத் தொட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, அந்நாட்டு அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நாடு முழுவதும் தேசிய எரிசக்தி அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. நாட்டின் தற்போதைய கையிருப்பு வெறும் 45 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.