Tuesday, June 16, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 40

அமெரிக்க ராணுவ அமைச்சர் தான் ஈரான் போருக்கு காரணம்!

0

ஈரான் மீதான போரில் அமெரிக்கா பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்த போரில் எந்த நட்பு நாடுகளும் அதிபர் டிரம்புக்கு உதவ முன்வரவில்லை. ஈரான் போர் மூலம் உலகளாவிய பொருளாதார சிக்கலை டிரம்ப் உண்டாக்கிவிட்டதாக அவப்பெயரும் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டிலும் அவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டென்னசி மாகாணத்தில் நடந்த மெம்பிஸ் பாதுகாப்பு பணிக்குழுவின் வட்டமேசை மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், ‘‘ஈரான் போர் தொடர்பான முடிவை எடுப்பதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், விமானப்படை ஜெனரல் டான் கெய்ன் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளையும் அழைத்து நிலைமை குறித்து ஆலோசித்தேன். ஈரான் 47 ஆண்டுகளாக தொடர்ந்து தீவிரவாதத்தை மட்டுமே பரப்பி வருகிறது.

இப்போது அணு ஆயுதத்தை பெறும் நிலைக்கு மிகவும் நெருக்கத்தில் உள்ளனர். எனவே மத்திய கிழக்கில் சிறிய நடவடிக்கை மேற்கொண்டு பெரிய பிரச்னைக்கு முற்றிலும் முடிவு கட்டலாம் என்று கூறினேன். அப்போது பீட் ஹெக்சேத் தான் முதலில் குரல் கொடுத்தார். ‘அவர்கள் கையில் அணு ஆயுதம் கிடைப்பதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. நாம் தாக்குதல் நடத்துவோம்’ என ஹெக்சேத் கூறினார்’’ என ஹெக்சேத்தை பாராட்டினார். இதன் மூலம் ஈரான் போருக்கு தான் மூல காரணம் இல்லை என்பதை டிரம்ப் மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார்.

அவசர நிலை பிரகடனம் செய்த பிலிப்பைன்ஸ் அரசு!

0

எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் அரசு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. பிலிப்பைன்ஸ் 98% கச்சா எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே வாங்குவதால், ஈரான் -அமெரிக்கா இஸ்ரேல், இடையேயான போரால் பெட்ரோல், டீசலின் விலை அந்நாட்டில் இருமடங்கு அதிகரித்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் உலகளவில் கடும் எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. இதன் நேரடி விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிபொருள் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதுடன், அதன் விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் விண்ணைத் தொட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, அந்நாட்டு அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நாடு முழுவதும் தேசிய எரிசக்தி அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. நாட்டின் தற்போதைய கையிருப்பு வெறும் 45 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இனிப்புப் பேச்சுக்கு இடமில்லை! அணுசக்தி முடிவே சரி!

0

ஈரான் உடனான அமெரிக்காவின் போரை பார்க்கையில் தனது நாடு அணு ஆயுதங்களை தக்கவைத்துக் கொள்ள எடுத்த முடிவு சரியானது என்பதை நிரூபிக்கிறது என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அழுத்தத்தையும், அதன் இனிமையான பேச்சுகளையும் வட கொரியா நிராகரித்தது நியாயம்தான் என்பதை தற்போதைய சூழல் தெளிவாகக் காட்டுகிறது என அவர் கூறியுள்ளார்.

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தனது நாட்டின் அணுசக்தி அந்தஸ்தை திரும்பபெற முடியாதபடி உறுதிப்படுத்துவதாகவும், அதே நேரத்தில் தென் கொரியா மீது கடுமையான நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

நேற்று முன்தினம் பியோங்யாங்கின் ஒப்புதல் அளிக்கும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், மத்திய கிழக்கில் நடக்கும் போரைக் குறிப்பிடுவது போல, அமெரிக்கா உலகளாவிய “அரச பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு” செய்வதாக கிம் குற்றம் சாட்டினார்.

மேலும், அதிகரித்து வரும் அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகளுக்கு மத்தியில், வாஷிங்டனுக்கு எதிரான ஒரு ஐக்கிய முன்னணியில் வட கொரியா மிகவும் வலுவான பங்கை வகிக்கும் என்றும் அவர் கூறினார். ஆனால், கிம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை.

மேலும், தனது எதிரிகள் “மோதலைத் தேர்ந்தெடுக்கிறார்களா அல்லது அமைதியான சகவாழ்வைத் தேர்ந்தெடுக்கிறார்களா என்பது அவர்களைப் பொறுத்தது, எந்தவொரு தேர்வுக்கும் பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றும் கூறினார்.

மாதம்பே – செம்புகட்டிய பகுதியில் திடீர் தீப்பரவல்!

0

ஜூட் சமந்த

மாதம்பே – செம்புகட்டிய பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாகப் பெருமளவிலான தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தீப்பரவலானது மதியம் 3.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிலாபம் நகர சபையின் தீயணைப்புப் பிரிவு வரவழைக்கப்பட்டது. இவர்களுடன் இணைந்து மாதம்பே பொலிஸாரும் பிரதேச மக்களும் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீப்பரவல் ஏற்பட்ட காணியில் இருந்த பெருமளவிலான தென்னை மரங்கள் தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முச்சக்கரவண்டி மின்சாரத் தூணுடன் மோதியதில் சாரதி பலி!

0

ஜூட் சமந்த

லுனுவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் கஹட்டவில – மெல்லவ பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஜே. ஜி. பியதாச என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியின் சாரதி என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்தானது கடந்த 24 ஆம் திகதி இரவு தும்மலதெனிய – கிணிகல்போல வீதியில் பண்டாரநாயகபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உடனடியாக சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சாரதி நிலைதடுமாறியதே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுவில பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

சிலாபம் – தொடுவாவ கடற்கரையில் மீண்டும் பாரிய கடல் அரிப்பு!

0

ஜூட் சமந்த

சிலாபம் – மத்தி தொடுவாவ (Meda Thoduwawa) கடற்கரைப் பகுதி மீண்டும் ஒருமுறை கடுமையான கடல் அரிப்புக்கு உள்ளாகத் தொடங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் பலமுறை இப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டபோது, ஊடகங்கள் வாயிலாக நிலைமை சுட்டிக்காட்டப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க, கடலோரப் பாதுகாப்பிற்காகக் கல் அணைகள் (Rock revetments) அமைக்கப்பட்டன. இருப்பினும், தற்போது முன்னர் அமைக்கப்பட்ட அந்த கல் அணைகளுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே கடல் அரிப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மீனவர் நிரோஷன், கடந்த சில வாரங்களாக இந்த அரிப்பு அதிகரித்து வருவதாகவும், இரண்டு கல் அணைகளுக்கு இடைப்பட்ட சுமார் 200 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதி, தற்போது சுமார் 25 மீற்றர் வரை கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது நிலவும் அமைதியான காலநிலையிலேயே இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டால், இன்னும் ஒரு மாதத்தில் ஆரம்பமாகவுள்ள கடல் சீற்றமான பருவ காலத்தில் நிலைமை இன்னும் மோசமடையும் என அவர் அச்சம் தெரிவித்தார்.

“சிறியதாக இருக்கும்போதே சரிசெய்யக்கூடிய ஒரு பிரச்சினையை, கோடரி கொண்டு வெட்டும் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம்” என அவர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மற்றுமொரு குடியிருப்பாளரான ஜூட் ரஞ்சன் பெரேரா கூறுகையில், கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இந்த 200 மீற்றர் எல்லைக்குள் 5 வீடுகளும் ஒரு இறால் இனப்பெருக்க பண்ணையும் அமைந்துள்ளன எனக் குறிப்பிட்டார். மேலும், கடற்கரைக்கு இணையாக அமைந்துள்ள ஒரு சிறிய வீதி எந்த நேரத்திலும் கடலுக்குள் அள்ளுண்டு போகும் அபாயம் உள்ளதாகவும், அவ்வாறு நடந்தால் வீடுகளுக்கும் பண்ணைக்கும் நேரடி அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகாரிகள் வந்து நிலைமையைப் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனரே தவிர, உருப்படியான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என அவர் சாடியுள்ளார். முன்னதாகப் பாதிப்புகளைத் தடுக்க கிராம மக்களால் போடப்பட்ட மணல் மூட்டைகளும் தற்போது கடலால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

கடற்கரை அரிப்பைத் தடுக்கத் தேவையான பெரிய கறுப்புக் கற்கள் கிராமத்திற்கு அருகிலேயே குவித்து வைக்கப்பட்டிருந்தும், அவற்றை அரிப்பு ஏற்படும் இடத்திற்குக் கொண்டு வருவதற்குத் தேவையான இயந்திரங்கள் தாராளமாக இல்லை என கடலோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கூறுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விளக்கத்தைத் தங்களால் நம்ப முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் ஒரு மாத காலத்தில் கடல் சீற்றமடையும் போது, இப்பகுதியில் தற்போதைய நிலையை விடப் பாரிய அழிவுகள் ஏற்படும் என்பது உறுதியானது. எனவே, அந்தப் பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும் வரை காத்திருக்காமல், உடனடியாகத் தீர்வுகளை வழங்குவதே முறையானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மன்னாரில் சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் மீது அடக்குமுறை?

0

பாடசாலை என்பது அறிவை ஊட்டும் ஆலயம். அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் அந்த ஆலயத்தின் தூண்கள். ஆனால், மன்னாரில் உள்ள சில பாடசாலைகளில் இருந்து வெளிவரும் தகவல்கள், அந்தத் தூண்கள் இன்று அச்சுறுத்தலாலும், மேலாதிக்கப் போக்கினாலும் ஆட்டம் கண்டுள்ளதைக் காட்டுகின்றன.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, பாடசாலை அதிபரினால் ஆசிரியர்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பாடசாலை நேரம் தவிர்ந்த மாலை நேரங்களிலும், வார இறுதி விடுமுறை நாட்களிலும் மேலதிக வகுப்புகளை நடத்துமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

“எமக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது, குடும்பம் இருக்கிறது. ஆனால், அதிபரின் கட்டாய உத்தரவுகளால் எமது அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்,” எனப் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

புனித நோன்பு காலத்திலும் நீடிக்காத நிம்மதி

அரசினால் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு கால விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும், மன்னாரில் உள்ள சில முஸ்லீம் பாடசாலைகளில் விதிமுறைகள் மீறப்படுவதாகத் தெரிகிறது. புனிதமான இந்த மாதத்தில் கூட, பல்வேறு வழிகளில் ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, அவர்கள் பாடசாலைக்கு வரவழைக்கப்படுகின்றனர். இது அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை மாத்திரமன்றி, மனிதநேயத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

பழிவாங்கல் மற்றும் இடமாற்ற அச்சுறுத்தல்

நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவுகளுக்கு இணங்காத ஆசிரியர்கள் மீது ‘பழிவாங்கல்’ ஆயுதம் ஏவப்படுவதாகக் கூறப்படுகிறது.

  • இடமாற்ற அச்சுறுத்தல்: மேலதிக வகுப்புகளுக்கு மறுப்புத் தெரிவிக்கும் ஆசிரியர்களைத் தூர இடங்களுக்கு இடமாற்றம் (Transfer) செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
  • திட்டமிட்ட நெருக்கடி: பாடசாலை வேலை நாட்களில் தேவையற்ற இதர பணிகளை ஆசிரியர்களிடம் திணிப்பதன் மூலம், அவர்களது பாடப்பரப்பை (Syllabus) முடிக்க முடியாத நிலையை உருவாக்கி, அதையே பின்னர் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டாக மாற்றும் தந்திரோபாயம் கையாளப்படுவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சமூகம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம்!

ஒரு பாடசாலையின் வளர்ச்சி என்பது கட்டிடங்களில் இல்லை, அங்கு நிலவும் ஆரோக்கியமான கற்றல் கற்பித்தல் சூழலிலேயே உள்ளது. ஆசிரியர்கள் அச்சத்தோடும், மன அழுத்தத்தோடும் பணிபுரியும் ஒரு சூழலில் மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்க முடியுமா?

இந்த விவகாரத்தில் கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டியது அவசியமாகும். பாடசாலை சமூகமும், பழைய மாணவர்களும், பெற்றோர்களும் ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியைத் தட்டிக்கேட்க வேண்டும். தட்டிக்கேட்கத் தவறினால், ஒரு சிறந்த கல்விப் பரம்பரை உருவாவதற்குப் பதிலாக, அடக்குமுறைக்கு அஞ்சும் ஒரு சமூகம் தான் உருவாகும்.

நீதியும் கௌரவமான பணிச்சூழலும் ஆசிரியர்களின் உரிமை!

எரிபொருள் விலையில் மறைந்திருக்கும் பேரதிர்ச்சி!

0

“பெட்ரோல் விலையில் நடக்கும் பெரும் மோசடி? – ஆதாரங்களை அடுக்கும் ஹர்ஷா! அதிர்ச்சியில் மக்கள்!”

இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் எரிபொருள் விலை சூத்திரத்தில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், அரசாங்கம் தவறான தரவுகளை முன்வைத்து மக்களை திசைதிருப்புவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், தற்போதைய எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் அரசாங்கம் கூறும் மானியங்கள் தொடர்பான பல்வேறு முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் விலைகளை நிர்ணயிக்கும் போது, உலக சந்தையில் நிலவும் உண்மையான விலைகளை விடவும் மிக அதிக விலையை அரசாங்கம் கணக்கில் எடுத்துள்ளதாக ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார். அவரது சமீபத்திய கணக்கீடுகளின்படி:

  • பெட்ரோல் 92: ஒரு பேரலுக்கு 130 அமெரிக்க டாலர் என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
  • ஆட்டோ டீசல்: ஒரு பேரலுக்கு 180 அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில் உலகச் சந்தையில் இவ்வளவு அதிக விலையை அரசாங்கம் செலுத்தவில்லை எனவும், இறக்குமதிச் செலவுகள் இதைவிடக் குறைவாகவே இருப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளளார்.

தற்போது விற்பனை செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 20 ரூபாயும், டீசலுக்கு சுமார் 100 ரூபாயும் மானியம் வழங்குவதாக அரசாங்கம் கூறி வரும் நிலையில், உலகச் சந்தை விலை மற்றும் உண்மையான இறக்குமதி செலவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், அரசாங்கம் கூறுவது போல் இவ்வளவு பெரிய தொகையை மானியமாக வழங்க வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அரசாங்கம் முன்வைக்கும் விலைக் கணக்கீடுகள் உண்மையான இறக்குமதி விலையைப் பிரதிபலிக்கவில்லை. தவறான தரவுகளைக் கொண்டு அதிக விலையை நிர்ணயித்துவிட்டு, பின்னர் மானியம் வழங்குவதாகக் கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்” என அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

அரசியல் முரண்பாடுகள்

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்தை, தற்போதைய ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியில் இருந்தபோது கடுமையாக எதிர்த்தனர். ஆனால், இன்று அதே முறையை முறையற்ற விதத்தில் கையாள்வது அவர்களின் இரட்டை நிலையை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஹர்ஷா டி சில்வாவின் கோரிக்கை

எரிபொருள் விலை நிர்ணயக் கட்டமைப்பில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக:

  1. எரிபொருள் இறக்குமதிக்கு செலவிடப்படும் உண்மையான தொகை.
  2. அரசாங்கத்தால் விதிக்கப்படும் வரிகள்.
  3. விநியோக மற்றும் ஏனைய கூடுதல் செலவுகள்.

ஆகியவற்றை பகிரங்கமாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். உண்மை நிலையை மறைக்காமல், முறையான விலை சூத்திரத்தின் மூலம் மக்களுக்கு அதன் பலனை வழங்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் நிலைப்பாடாகும்.

சீமெந்தின் விலை 175 ரூபாவால் உயர்வு!

0

அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வின் பின்னணியில், கட்டுமானத் துறை தற்போது நெருக்கடியான நிலையில் இருப்பதாக இலங்கை கட்டுமான சங்கத்தின் தலைவர் திரு. சுசந்த லியனாரச்சி தெரிவித்தார்.

நேற்று (24) ஊடக சந்திப்பில் உரையாற்றியபோது அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானத் துறை கடுமையான நெருக்கடிக்குள் நுழைந்துள்ளதாகவும், இந்தத் துறையால் அதைத் தாங்க முடியாது என்றும் அவர் கூறினார்.

கட்டுமானப் பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாடு இருப்பதாகவும், கையிருப்புகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் துறையில் சுமார் 35,000 பேர் பணிபுரிகின்றனர் என்றும், சுமார் 35,00,000 குடும்பங்கள் இந்தத் துறையின் விநியோகச் சங்கிலியில் ஈடுபட்டுள்ளன என்றும், இதன் காரணமாக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது அவர்களுக்கு கடினமாக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், கட்டுமானத் துறை தற்போது நெருக்கடியான நிலையை அடைந்துள்ளதால், எதிர்காலத்தில் இத்துறை தொடர்பான பிரச்சினைகளை கட்டுமான அமைச்சகம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வல்லரசுகளின் வீழ்ச்சியும் ஈரான் போரும்:

21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இராணுவ நடவடிக்கையாகக் கருதப்படும் ஈரான் மீதான ‘Operation Epic Fury’, ஒரு வல்லரசு தனது இராணுவ பலத்தை மட்டும் நம்பி இறங்கும்போது சந்திக்கும் சவால்களை மீண்டும் உலகிற்கு உணர்த்தியுள்ளது. வரலாறு என்பது வெற்றிகளால் மட்டும் எழுதப்படுவதில்லை; மாறாக, வல்லரசுகள் இழைத்த தவறுகளாலும், மிகையான நம்பிக்கையாலுமே (Hubris) தீர்மானிக்கப்படுகிறது.

2026-ஆம் ஆண்டின் ‘Operation Epic Fury’ எனும் பெயரிலான அமெரிக்காவின் ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை, உலக வரலாற்றில் வல்லரசுகள் சந்தித்த முந்தைய வீழ்ச்சிகளை மீண்டும் நினைவூட்டுகிறது.

1979-ல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தபோது, அது தனது வீழ்ச்சியின் தொடக்கம் என்பதை உணரவில்லை. இன்று அமெரிக்கா ஈரான் போருக்காகச் செலவிடும் பில்லியன் கணக்கான டாலர்கள், ஏற்கனவே பலவீனமடைந்துள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தை (Stagflation) மேலும் பாதாளத்திற்குத் தள்ளுகிறது.

சோவியத் யூனியன் எப்படிப் போருக்கான அதிகப்படியான செலவுகளால் உள்நாட்டிலேயே சிதைந்ததோ, அதே போன்ற ஒரு பொருளாதார நெருக்கடியை இன்று அமெரிக்கா டாலர் வீழ்ச்சியின் மூலம் எதிர்கொள்கிறது.

ஒரு நாட்டின் நிலப்பரப்பையும், மக்களின் போர்க்குணத்தையும் வெறும் வான்வழித் தாக்குதல்களால் மட்டும் பணிய வைக்க முடியாது.

நவீன ஆயுதங்கள் இருந்தும், அமெரிக்கா தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஒரு புதிய உலக மாற்றத்திற்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏன் இந்த ஒப்பீடு?
  1. வியட்நாம் பாடம்: 1960-களில் வியட்நாமின் காடுகளில் அமெரிக்கா திணறியது போலவே, இன்று ஈரானின் மலைப்பகுதிகளிலும் நிலத்தடி பதுங்கு குழிகளிலும் ஈரானியப் படைகளின் ‘கொரில்லா’ போர்முறை அமெரிக்கப் படைகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. தொழில்நுட்பத்தை விட நிலப்பரப்பு அறிவே போரைத் தீர்மானிக்கிறது.
  2. சோவியத் யூனியனின் பொருளாதாரச் சரிவு: 1970-களில் ஆப்கானிஸ்தான் போரினால் சோவியத் யூனியன் பொருளாதார ரீதியாகச் சிதைந்தது. அதேபோல், இன்று டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், ஈரான் போருக்கான பில்லியன் கணக்கான டாலர் செலவுகள் அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தை ‘ஸ்டாக்ஃபிளேஷன்’ (Stagflation) எனும் இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது.
  3. ஈராக் தந்த படிப்பினை: 2003-ல் ஈராக்கில் சதாம் உசேனை வீழ்த்திய பிறகு ஏற்பட்ட ‘பாதுகாப்பு வெற்றிடம்’ ஐஎஸ் (ISIS) போன்ற குழுக்கள் வளரக் காரணமானது. தற்போது ஈரானில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை, மத்திய கிழக்கு முழுவதையும் ஒரு நிரந்தரப் போர்க்களமாக மாற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் பிரிட்டிஷ் பேரரசு தனது காலனித்துவப் பிடியை இழந்ததற்கு முக்கியக் காரணம், அதன் மீதான உலக நாடுகளின் நம்பிக்கையற்ற தன்மையே. இன்று ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா எடுக்கும் ஒருதலைப்பட்சமான முடிவுகள், அதன் நீண்டகால நட்பு நாடுகளை (ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை) அதனிடமிருந்து விலக்கச் செய்துள்ளன. ஒரு வல்லரசு தனது கூட்டணிகளை இழக்கும்போது, அதன் உலகளாவிய அதிகாரம் தானாகவே சரிந்துவிடும்.

ஒரு வல்லரசு போர்க்களத்தில் மட்டும் தோற்பதில்லை; மாறாக, பொருளாதாரச் சரிவு மற்றும் உலக நாடுகளின் ஆதரவை இழக்கும்போதே அதன் வீழ்ச்சி தொடங்குகிறது. ஈரான் போர் அமெரிக்காவிற்கு ஒரு ‘பிர்ரிக் வெற்றி’யாக (Pyrrhic Victory) அமையுமா அல்லது அதன் ஆதிக்கத்தின் முடிவாக இருக்குமா என்பதை காலமே தீர்மானிக்கும்.