Tuesday, June 16, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 41

வல்லரசுகளின் வீழ்ச்சியும் ஈரான் போரும்:

21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இராணுவ நடவடிக்கையாகக் கருதப்படும் ஈரான் மீதான ‘Operation Epic Fury’, ஒரு வல்லரசு தனது இராணுவ பலத்தை மட்டும் நம்பி இறங்கும்போது சந்திக்கும் சவால்களை மீண்டும் உலகிற்கு உணர்த்தியுள்ளது. வரலாறு என்பது வெற்றிகளால் மட்டும் எழுதப்படுவதில்லை; மாறாக, வல்லரசுகள் இழைத்த தவறுகளாலும், மிகையான நம்பிக்கையாலுமே (Hubris) தீர்மானிக்கப்படுகிறது.

2026-ஆம் ஆண்டின் ‘Operation Epic Fury’ எனும் பெயரிலான அமெரிக்காவின் ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை, உலக வரலாற்றில் வல்லரசுகள் சந்தித்த முந்தைய வீழ்ச்சிகளை மீண்டும் நினைவூட்டுகிறது.

1979-ல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தபோது, அது தனது வீழ்ச்சியின் தொடக்கம் என்பதை உணரவில்லை. இன்று அமெரிக்கா ஈரான் போருக்காகச் செலவிடும் பில்லியன் கணக்கான டாலர்கள், ஏற்கனவே பலவீனமடைந்துள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தை (Stagflation) மேலும் பாதாளத்திற்குத் தள்ளுகிறது.

சோவியத் யூனியன் எப்படிப் போருக்கான அதிகப்படியான செலவுகளால் உள்நாட்டிலேயே சிதைந்ததோ, அதே போன்ற ஒரு பொருளாதார நெருக்கடியை இன்று அமெரிக்கா டாலர் வீழ்ச்சியின் மூலம் எதிர்கொள்கிறது.

ஒரு நாட்டின் நிலப்பரப்பையும், மக்களின் போர்க்குணத்தையும் வெறும் வான்வழித் தாக்குதல்களால் மட்டும் பணிய வைக்க முடியாது.

நவீன ஆயுதங்கள் இருந்தும், அமெரிக்கா தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஒரு புதிய உலக மாற்றத்திற்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏன் இந்த ஒப்பீடு?
  1. வியட்நாம் பாடம்: 1960-களில் வியட்நாமின் காடுகளில் அமெரிக்கா திணறியது போலவே, இன்று ஈரானின் மலைப்பகுதிகளிலும் நிலத்தடி பதுங்கு குழிகளிலும் ஈரானியப் படைகளின் ‘கொரில்லா’ போர்முறை அமெரிக்கப் படைகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. தொழில்நுட்பத்தை விட நிலப்பரப்பு அறிவே போரைத் தீர்மானிக்கிறது.
  2. சோவியத் யூனியனின் பொருளாதாரச் சரிவு: 1970-களில் ஆப்கானிஸ்தான் போரினால் சோவியத் யூனியன் பொருளாதார ரீதியாகச் சிதைந்தது. அதேபோல், இன்று டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், ஈரான் போருக்கான பில்லியன் கணக்கான டாலர் செலவுகள் அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தை ‘ஸ்டாக்ஃபிளேஷன்’ (Stagflation) எனும் இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது.
  3. ஈராக் தந்த படிப்பினை: 2003-ல் ஈராக்கில் சதாம் உசேனை வீழ்த்திய பிறகு ஏற்பட்ட ‘பாதுகாப்பு வெற்றிடம்’ ஐஎஸ் (ISIS) போன்ற குழுக்கள் வளரக் காரணமானது. தற்போது ஈரானில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை, மத்திய கிழக்கு முழுவதையும் ஒரு நிரந்தரப் போர்க்களமாக மாற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் பிரிட்டிஷ் பேரரசு தனது காலனித்துவப் பிடியை இழந்ததற்கு முக்கியக் காரணம், அதன் மீதான உலக நாடுகளின் நம்பிக்கையற்ற தன்மையே. இன்று ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா எடுக்கும் ஒருதலைப்பட்சமான முடிவுகள், அதன் நீண்டகால நட்பு நாடுகளை (ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை) அதனிடமிருந்து விலக்கச் செய்துள்ளன. ஒரு வல்லரசு தனது கூட்டணிகளை இழக்கும்போது, அதன் உலகளாவிய அதிகாரம் தானாகவே சரிந்துவிடும்.

ஒரு வல்லரசு போர்க்களத்தில் மட்டும் தோற்பதில்லை; மாறாக, பொருளாதாரச் சரிவு மற்றும் உலக நாடுகளின் ஆதரவை இழக்கும்போதே அதன் வீழ்ச்சி தொடங்குகிறது. ஈரான் போர் அமெரிக்காவிற்கு ஒரு ‘பிர்ரிக் வெற்றி’யாக (Pyrrhic Victory) அமையுமா அல்லது அதன் ஆதிக்கத்தின் முடிவாக இருக்குமா என்பதை காலமே தீர்மானிக்கும்.

ஹூர்முஸ் நீரிணையும் அமெரிக்காவின் அஸ்தமனமும்!

வரலாறு மீண்டும் திரும்புகிறதா? 1956-ல் பிரிட்டன் தனது உலகளாவிய ஆதிக்கத்தை இழந்த அதே புள்ளியில் இன்று அமெரிக்கா நிற்கிறதா?

புகழ்பெற்ற பொருளாதார ஆய்வாளரும், ‘Principles’ நூலின் ஆசிரியருமான ரே டாலியோ (Ray Dalio) முன்வைக்கும் ஒரு ஒப்பீடு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. “ஹூர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை இழப்பது, 1956-ல் பிரிட்டன் சூயஸ் கால்வாயை இழந்ததற்கு ஒப்பானது” என்பதே அந்த எச்சரிக்கை.

டாலியோ தனது “The Changing World Order” என்ற ஆய்வில், கடந்த 500 ஆண்டுகளில் உலக வல்லரசுகளின் (நெதர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் தற்போது சீனா) எழுச்சியையும் வீழ்ச்சியையும் ஒரு குறிப்பிட்ட சுழற்சியாக விளக்குகிறார்.

1956-ல் நடந்தது என்ன? பிரிட்டனின் வீழ்ச்சி

இரண்டு நூற்றாண்டுகளாக உலகை ஆண்ட பிரிட்டனின் கர்வத்தை உடைத்தது சூயஸ் கால்வாய் விவகாரம். எகிப்து அந்த கால்வாயை தேசியமயமாக்கியபோது, அதை மீட்க பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து பிரிட்டன் போர் தொடுத்தது. ஆனால், அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் எதிர்ப்பால் பிரிட்டன் பின்வாங்க நேரிட்டது.

இந்த தோல்வி, பிரிட்டன் இனி ஒரு ‘சூப்பர் பவர்’ அல்ல என்பதை உலகுக்கு பறைசாற்றியது. அடுத்த 20 ஆண்டுகளில் பவுண்ட் ஸ்டெர்லிங் சரிந்தது, காலனிகள் சுதந்திரம் பெற்றன, பிரிட்டிஷ் பேரரசு ஒரு சாதாரண நாடாக சுருங்கியது.

ஹூர்முஸ் நீரிணை: இன்றைய உலகத்தின் உயிர்நாடி

இன்று அதே போன்றதொரு முக்கியத்துவத்தை ஹூர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பெற்றுள்ளது. உலக எண்ணெய் விநியோகத்தில் 20% இந்த குறுகிய பாதை வழியாகவே செல்கிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் ஏற்றுமதிக்கு இதுவே பிரதான பாதை.

ஈரான் இந்த நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ஒருவேளை இந்த பாதை மூடப்பட்டால்:

  • உலகளவில் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயரும்.
  • ஐரோப்பாவில் எரிசக்தி பற்றாக்குறை ஏற்படும்.
  • ஆசியாவின் பிரம்மாண்ட தொழிற்சாலைகள் முடங்கும்.
  • ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் ஆட்டம்காணும்.
டாலியோவின் வரலாற்று விதி: பேரரசுகளின் சரிவு

கடந்த 500 ஆண்டு கால வரலாற்றை ஆய்வு செய்த ரே டாலியோ, ஒரு முக்கிய விதியை முன்வைக்கிறார். ஒரு வளர்ந்து வரும் சிறிய சக்தி, ஒரு பெரிய வல்லரசின் வர்த்தகப் பாதையை சவால் செய்யும்போது அந்தப் பேரரசின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.

  1. பெரிய சக்தி வென்றால்: அதன் ஆதிக்கம் தொடரும், நாணயம் வலுப்பெறும்.
  2. பெரிய சக்தி தோற்றால்: கூட்டணிகள் விலகும், முதலீடுகள் வெளியேறும், அந்தப் பேரரசு வீழ்ச்சியடையும்.

போர்த்துக்கல், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் சரிவு இவ்வாறே நிகழ்ந்தது.

அமெரிக்காவின் தற்போதைய பலவீனம்

அமெரிக்கா இன்று 38 டிரில்லியன் டாலர் கடன் சுமையில் உள்ளது. ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலர் வட்டி மட்டுமே செலுத்தும் நிலையில், அதன் பொருளாதார பலம் கேள்விக்குறியாகியுள்ளது. வியட்நாம், ஆப்கானிஸ்தான் போர்களில் ஏற்பட்ட பின்னடைவுகள் அமெரிக்காவின் இராணுவ பலத்தின் மீதான நம்பிக்கையை குறைத்துள்ளன.

மறுபுறம், ஈரான் போரை நேரடியாக எதிர்கொள்ளாமல், மெதுவாகவும் நீடித்தும் அமெரிக்காவின் பொறுமையைச் சோதிக்கும் உத்தியைக் கையாள்கிறது. “போரில் வலி ஏற்படுத்தும் சக்தியை விட, வலியைத் தாங்கும் திறனே முக்கியம்” என்கிறார் டாலியோ.

1. ஒரு பேரரசின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியின் 6 கட்டங்கள்:

டாலியோவின் கூற்றுப்படி, ஒவ்வொரு வல்லரசும் இந்த ஆறு நிலைகளைக் கடக்கின்றன:

  • கட்டம் 1 (புதிய ஒழுங்கு): ஒரு உள்நாட்டுப் போர் அல்லது புரட்சிக்குப் பிறகு புதிய தலைமை உருவாகிறது.
  • கட்டம் 2 (வளரூக்கம்): அமைதி நிலவுகிறது, கல்வி மற்றும் தொழில்நுட்பம் வளர்கிறது.
  • கட்டம் 3 (அமைதி மற்றும் செழுமை): நாடு பொருளாதார ரீதியாக உச்சத்தை அடைகிறது. அதன் நாணயம் உலகளாவிய ‘Reserve Currency’ ஆக மாறுகிறது.
  • கட்டம் 4 (அதிகப்படியான விரிவு): நாடு தனது இராணுவத்தை உலகம் முழுவதும் நிலைநிறுத்த அதிக செலவு செய்கிறது. கடன் அதிகரிக்கத் தொடங்குகிறது.
  • கட்டம் 5 (நிதி நெருக்கடி): அதிக கடன் மற்றும் உள்நாட்டுப் பிளவுகள் (ஏழை – பணக்காரர் இடைவெளி) ஏற்படுகின்றன. அரசாங்கம் பணத்தை அச்சடிக்கத் தொடங்குகிறது, இதனால் நாணயத்தின் மதிப்பு குறைகிறது.
  • கட்டம் 6 (வீழ்ச்சி/யுத்தம்): ஒரு பெரிய வெளிநாட்டு சக்தி (தற்போது சீனா போன்றவை) சவால் விடும்போது, பழைய வல்லரசு நிலைகுலைகிறது.
2. அமெரிக்கா இப்போது எந்தக் கட்டத்தில் உள்ளது?

ரே டாலியோவின் கணிப்புப்படி, அமெரிக்கா இப்போது 5-வது கட்டத்தின் இறுதியிலும் 6-வது கட்டத்தின் தொடக்கத்திலும் உள்ளது. இதற்கு அவர் சொல்லும் காரணங்கள்:

  • பொருளாதார ஏற்றத்தாழ்வு: அமெரிக்காவில் நிலவும் சமூகப் பிளவுகள் உள்நாட்டு ஸ்திரமின்மையை உருவாக்குகின்றன.
  • கடன் சுமை: $38$ டிரில்லியன் டாலர் கடன் என்பது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட அதிகம்.
  • நாணய மதிப்பு: டாலருக்கு மாற்றாக பிற நாணயங்கள் (BRICS போன்றவை) முன்னிலைப்படுத்தப்படுவது.
3. ஹூர்முஸ் நீரிணையின் ‘உத்திக ரீதியான’ முக்கியத்துவம்

வரலாற்றில், ஒரு வல்லரசு தனது பொருளாதார பலத்தை இழக்கும்போது, அதன் இராணுவ பலமும் சோதிக்கப்படும்.

“வலி தாங்கும் திறன்” (Pain Tolerance): ஈரான் போன்ற நாடுகள் நீண்ட காலப் பொருளாதாரத் தடைகளையும் போரையும் தாங்கிக் கொள்ளப் பழகிவிட்டன. ஆனால், ஒரு நவீன நுகர்வோர் நாடான அமெரிக்காவிற்கு, எண்ணெய் விலை ஒரு லிட்டருக்கு சில டாலர்கள் உயர்ந்தாலே அது மிகப்பெரிய அரசியல் நெருக்கடியாகவும் மக்கள் கொந்தளிப்பாகவும் மாறும்.

4. தங்கம் மற்றும் மாற்று முதலீடுகள்

அமெரிக்க டாலரின் மீதான நம்பிக்கை குறையும்போது, உலகம் மீண்டும் தங்கம் (Gold) மற்றும் உண்மையான சொத்துக்கள் (Real Assets) பக்கம் திரும்பும் என்பது டாலியோவின் வாதம். ஹூர்முஸ் நீரிணையில் ஏற்படும் ஒரு தோல்வி, முதலீட்டாளர்களை டாலரை விட்டு வெளியேறத் தூண்டும் “Trigger” ஆக அமையலாம்.

ஆட்டத்தின் இறுதி கட்டம்

அமெரிக்கா ஹூர்முஸ் நீரிணையில் தனது கட்டுப்பாட்டை இழந்தால், அது டாலரின் வீழ்ச்சிக்கும், தங்கத்தின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும். சீனா போன்ற மாற்று சக்திகளின் எழுச்சிக்கு இது வித்திடும்.

வரலாற்றுப் பாடங்களின்படி, ஒரு முக்கிய வர்த்தகப் பாதையைத் தக்கவைக்க முடியாத பேரரசு நீண்ட காலம் நீடித்ததில்லை. ஹூர்முஸ் நீரிணை என்பது வெறும் கடல் பகுதி மட்டுமல்ல; அது அமெரிக்க சாம்ராஜ்யத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு பரீட்சைக்களம்.

மூலம் : அலி ஸல்லாபி
தமிழ் வடிவம் : முஹம்மத் பகீஹூத்தீன்

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி!

0

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.27 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளதாகவும், இது 4.42 சதவீத வீழ்ச்சி எனவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.84 டொலர்கள் வரை குறைந்துள்ளதுடன், இது 5.41 சதவீத வீழ்ச்சியாகும். 

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மெர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 119.88 டொலர்களாகக் காணப்படுகிறது. 

அதன்படி, இது முன்னைய விலையுடன் ஒப்பிடுகையில் 11.31 சதவீத வீழ்ச்சி என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்தியா மற்றும் நேபாளம் விலையை கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி?

0

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத் தடைகள் காரணமாக இலங்கையும் பாகிஸ்தானும் எரிபொருள் விலையேற்றத்தால் திணறி வரும் நிலையில், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் ஓப்பீட்டளவில் குறைந்த பாதிப்புடன் இச்சூழ்நிலையை கையாண்டு வருகின்றன.

2026 மார்ச் மாத நிலவரப்படி, தெற்காசிய நாடுகளில் பதிவாகியுள்ள எரிபொருள் விலையேற்றத்தின் சதவீதம்:

  • இலங்கை: 25% (கடும் உயர்வு)
  • பாகிஸ்தான்: 21% – 24%
  • நேபாளம்: 10% (மிதமான உயர்வு)
  • இந்தியா: 5% (மிகக்குறைந்த உயர்வு)

இந்தியா எவ்வாறு சாதித்தது?

உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடான இந்தியா, சர்வதேச நெருக்கடியின் மத்தியிலும் தனது உள்நாட்டு விலையை நிலைநிறுத்த மூன்று முக்கிய காரணிகளைக் கையாண்டுள்ளது:

  1. மூலோபாய இருப்பு (Strategic Reserves): இந்தியா ஏற்கனவே சேமித்து வைத்துள்ள அவசர கால கச்சா எண்ணெய் இருப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், சர்வதேச சந்தையில் ஏற்படும் திடீர் விலை மாற்றங்கள் உள்நாட்டு சந்தையை உடனடியாகப் பாதிக்காமல் தடுக்கிறது.
  2. வரி சீரமைப்பு: மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருள் மீதான வரிகளைக் குறைப்பதன் மூலம், சர்வதேச விலை உயர்வினால் ஏற்படும் சுமையை நுகர்வோர் மீது முழுமையாகச் சுமத்தாமல் தவிர்க்கின்றன.
  3. திட்டமிட்ட விநியோகம்: எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை விலையேற்றத்தை ஒரே நாளில் அமல்படுத்தாமல், ‘சீரான விலை உயர்வு’ (Calibrated Hike) கொள்கையைப் பின்பற்றி வருகின்றன.

நேபாளத்தின் மாற்றுப் பாதை

நேபாளம் தனது எரிபொருள் தேவைக்கு இந்தியாவை முழுமையாகச் சார்ந்திருந்தாலும், அதன் பாதிப்பு 10 சதவீதத்திற்குள் முடிவடைய அந்நாட்டின் நீர் மின்சக்தி (Hydropower) பயன்பாடே காரணமாகும். அண்மைக்காலமாக நேபாளம் மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை ஊக்குவிப்பதாலும், சமையல் எரிவாயுவிற்குப் பதில் மின்சார அடுப்புகளைப் பயன்படுத்துவதாலும் கச்சா எண்ணெய் மீதான அதன் தங்கியிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.

எரிசக்தி நிபுணர்களின் கூற்றுப்படி, இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களை விட உள்நாட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களில் முதலீடு செய்யும் நாடுகளே இவ்வாறான போர்ச் சூழல்களில் பொருளாதார ரீதியாகத் தப்பிப்பிழைக்கின்றன. இலங்கை போன்ற நாடுகள் எரிபொருள் பங்கீட்டு முறையை (QR System) அமல்படுத்தியுள்ள நிலையில், இந்தியா மற்றும் நேபாளத்தின் இந்த அணுகுமுறை ஒரு சிறந்த பாடமாக அமைகிறது.

ஏன் இந்த வேறுபாடு?

இந்தியா, சர்வதேச நெருக்கடியின் மத்தியிலும் எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருக்க அதன் மூலோபாய இருப்பு (Strategic Reserves), அரசு வரிக் குறைப்புகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் சீரான விலை உயர்வுக் கொள்கை ஆகியவற்றை முக்கியமாக பயன்படுத்தியது. ஆனால், இலங்கை அந்நியச் செலாவணி நெருக்கடி மற்றும் எரிபொருள் இறக்குமதியில் உள்ள சிரமங்களால் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை சந்திக்க நேரிட்டது. நேபாளம் தனது நீர் மின்சக்தி பயன்பாடு மற்றும் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதன் மூலம் ஓரளவு கட்டுக்குள் வைத்துள்ளது.

எதிர்காலத்தில் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களில் முதலீடு செய்வது மிகவும் அவசியமாகும். மேலும் தகவல்களுக்கு தொடர்ந்து enews1st.lk உடன் இணைந்திருங்கள்.

போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை – ஈரான்!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் பல பகுதிகளில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர்மட்ட சபையின் புதிய செயலாளராக முகமது பாகர் சொல்கத்ர் (Mohammad Bagher Zolghadr) நியமிக்கப்பட்டுள்ளார்,. கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட அலி லாரிஜானிக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த போதிலும், அதனை ஈரான் முற்றாக மறுத்துள்ளது. வான்வழித் தாக்குதல்கள் தொடரும் வரை எவ்வித போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என டெஹ்ரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பிராந்திய நாடுகளின் நிலைப்பாடு:
ஈரானின் தாக்குதல்கள் தனது இறையாண்மையை பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கத்தார், இழந்த நம்பிக்கையை ஈரான் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு இந்த போரினால் சிதைந்துள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி கவலை வெளியிட்டுள்ளார். இதனிடையே, லெபனான் நாடு தனது நாட்டிலுள்ள ஈரானிய தூதரை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச சமூகத்தின் கவலைகள்:

  1. ஐக்கிய நாடுகள் சபை: வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்கள் குறித்து புதன்கிழமை அவசர விவாதம் நடத்த ஐநா மனித உரிமைகள் பேரவை முடிவு செய்துள்ளது,.
  2. ரஷ்யா: இந்த மோதல் காஸ்பியன் கடல் பகுதிக்கு பரவுவதை ரஷ்யா கடுமையாக எதிர்க்கிறது. அங்குள்ள ஈரானிய கடற்படை இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
  3. பொருளாதார பாதிப்பு: மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, கென்யாவில் 20 சதவீத எரிபொருள் விற்பனை நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது,.

ஈரானுக்குள் ஒடுக்குமுறை: உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் இணையத்தில் செயல்பட்டதாகக் கூறி 466 பேரை ஈரானிய பொலிஸார் கைது செய்துள்ளனர். பொதுமக்களிடையே அச்சத்தைப் பரப்புதல் மற்றும் எதிரிகளுக்கு ஆதரவாகச் செயல்படுதல் போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளே ஒரே வழி என சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், இரு தரப்பிலும் தாக்குதல்கள் தொடர்ந்து வருவது போரின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அல்ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கல்பிட்டி தொழிலதிபர் கடத்தப்பட்டு நாய்க்கூண்டில் அடைப்பு!

0

ஜூட் சமந்த

கடன் தகராறு ஒன்றின் காரணமாக தொழிலதிபர் ஒருவரைக் கடத்திச் சென்று நாய்க்கூண்டில் அடைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு சந்தேகநபர்களை லுணுவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்பிட்டி – நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், வென்னப்புவ – காலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 5 இலட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். குறித்த கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக முரண்பாடு நிலவி வந்துள்ளது.

இந்த மோதலின் விளைவாக, பணத்தைக் கொடுத்த நபர் தனது நண்பர்கள் ஐவருடன் இணைந்து குறித்த தொழிலதிபரை நுரைச்சோலைப் பகுதியில் வைத்துக் கடத்திச் சென்றுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தொழிலதிபரின் உறவினர்கள் நுரைச்சோலை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் சந்தேகநபர்கள் குறித்த விபரங்களை நுரைச்சோலை பொலிஸார் லுணுவில பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர். இதன் அடிப்படையில், கடந்த 23ஆம் திகதி மாலை காலவத்தை பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டை லுணுவில பொலிஸார் அதிரடியாகச் சோதனைக்கு உட்படுத்தினர்.

அந்த வீட்டின் பின்புறம் இருந்த நாய்க்கூண்டு ஒன்றிற்குள் தொழிலதிபர் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் இதன்போது கண்டறிந்தனர். உடனடியாக அவரை மீட்ட பொலிஸார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றையும் கைப்பற்றியதோடு, கடத்தலுடன் தொடர்புடைய ஆறு பேரையும் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட தொழிலதிபர் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாட்டின் எதிர்காலத்தை செதுக்கும் அமைச்சரவையின் அதிரடி முடிவுகள்!

0

2026 மார்ச் 23 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

1. பொருளாதார மற்றும் சக்தித்துறை மேம்பாடு: நாட்டின் சக்திப் பொருளாதாரத்தை (Energy Economy) நிலையான முறையில் வளர்ப்பதற்கும், எதிர்காலத் தேவைகளை ஆராய்வதற்கும் டாக்டர் ஹான்ஸ் விஜேசுரிய தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தேசிய QR (LankaQR) கொடுப்பனவு முறையை விரைவுபடுத்தவும், 5,000 ரூபாவிற்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கு மேலதிக கட்டணங்கள் வசூலிப்பதைத் தவிர்க்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2. கல்வி மற்றும் விளையாட்டுத்துறை மறுசீரமைப்பு:

  • கல்விச் சீர்திருத்தங்கள்: 2026 இல் தரம் 1 மற்றும் 2027 இல் தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஒரு தேசிய வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
  • தகவல் தொழில்நுட்பம்: கொரியா EXIM வங்கியின் நிதி உதவியுடன் பாடசாலைகளில் ICT மையங்களை நிறுவும் திட்டம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
  • விளையாட்டு மைதானங்கள்: 2026-2029 காலப்பகுதியில் 400 பாடசாலை விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த 2,010.50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மாணவியர் நலன்: சுமார் 1.05 மில்லியன் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதாரத் துடைப்பான்கள் (Sanitary Napkins) வழங்கும் திட்டம் இந்த ஆண்டும் தொடர அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

3. உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து:

  • ரயில் மற்றும் துறைமுக மேம்பாடு: கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் ஒப்பந்தம் (2,162.64 மில்லியன் ரூபா) MAGA Engineering நிறுவனத்திற்கும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) இறங்குதுறையை புனரமைக்கும் ஒப்பந்தம் (984.73 மில்லியன் ரூபா) RR Construction நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
  • பேருந்து கட்டண உயர்வு: டீசல் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, பேருந்து கட்டணங்களை 12.19% உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது 2026 மார்ச் 23 நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

4. சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை:

  • மகியங்கனை வைத்தியசாலை: ஊவா மாகாண சபையின் கீழ் இருந்த மகியங்கனை ஆதார வைத்தியசாலை, அதன் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • அவசரகால தொடர்புகள்: பேரிடர் காலங்களில் தடையற்ற தொடர்புகளைப் பேண, ‘அமெச்சூர் ரேடியோ’ (Amateur Radio) அவசர கால தொடர்பு வலையமைப்பை நிறுவ ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து 181,837 அமெரிக்க டொலர் நிதி உதவியைப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

5. வாழ்வாதார மற்றும் நிர்வாக முடிவுகள்:

  • இளம் தொழில்முயற்சியாளர்கள்: அடுத்த 5 ஆண்டுகளில் 50,000 இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில், 4% சலுகை வட்டி வீதத்தில் கடன் வழங்கும் திட்டம் 2026 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.
  • புதிய நியமனம்: அரசாங்க அச்சகத் தலைவராக (Government Printer) ஆர்.ஏ.பி. ஜயரத்ன 2026 ஏப்ரல் 02 முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சிவில் விமான போக்குவரத்து: இலங்கையின் சிவில் விமான போக்குவரத்து சேவைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கான ‘தேசிய சிவில் விமான போக்குவரத்து முதன்மைத் திட்டம்’ (Master Plan) அங்கீகரிக்கப்பட்டது

கொக்காவிலவில் கோர விபத்து: லாரி மோதியதில் இளம் பெண் பலி!

0

ஜூட் சமந்த

சிலாபம் – குருநாகல் வீதியின் கொக்காவில சந்தி பகுதியில் லாரி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த விபத்து கடந்த 23-ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் சிலாபம், கிழக்கு கரவிட்டகார பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய மதுஷானி ஹெட்டியாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த நெதுல் ஆதித்யா என்ற 7 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிலாபத்திலிருந்து வந்த மோட்டார் சைக்கிள், கொக்காவில சந்தியில் வலதுபுறமாக திரும்புவதற்காக முற்பட்டபோது, சிலாபத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த லாரி ஒன்று, மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் பலமாக மோதியதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய லாரியை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளதுடன், அதனை ஓட்டி வந்த தெஹியோவிட்ட பகுதியைச் சேர்ந்த சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொலம்பியாவில் ராணுவ விமானம் விபத்து: 66 வீரர்கள் வீரமரணம்!

0

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 128 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில், 66 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்நாட்டு ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவின் அமேசான் மாகாணமான புடுமாயோவில் (Putumayo) உள்ள பியூர்டோ லெகுயிசாமோ விமான நிலையத்திலிருந்து திங்கட்கிழமை ஒரு ராணுவ விமானம் புறப்பட்டது. அதில் 115 ராணுவ வீரர்கள், 11 விமானப் படை ஊழியர்கள் மற்றும் 2 தேசிய காவல்துறை அதிகாரிகள் என மொத்தம் 128 பேர் பயணம் செய்தனர்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமான நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த இடத்தில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்த கோர விபத்து குறித்து கொலம்பியா ஆயுதப் படைகளின் தலைவர் ஜெனரல் ஹியூகோ அலெஜான்ட்ரோ லோபஸ் பாரெட்டோ கூறுகையில்:

“இந்தத் துயரமான விபத்தின் விளைவாக, எங்களது 66 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது வரை 57 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 4 வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது,” என்றார்.

விபத்து நடந்தவுடன் உள்ளூர் மக்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் காயமடைந்த வீரர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், விமானம் விழுந்த இடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கவும் மக்கள் பெரிதும் உதவினர். இதற்கு துணை மேயர் கார்லோஸ் கிளாரோஸ் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்துப் பேசிய கொலம்பியா விமானப்படைத் தளபதி கார்லோஸ் பெர்னாண்டோ சில்வா, “விமானத்தில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது, அதனால் தான் அது விமான நிலையத்திற்கு அருகிலேயே விழுந்துள்ளது. மற்ற விவரங்கள் புலனாய்விற்குப் பிறகே தெரியவரும்,” என்றார்.

மேலும், இந்த விபத்தின் பின்னணியில் சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் தாக்குதல் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று ராணுவத் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் பெட்ரோ சான்செஸ், உயிரிழந்த வீரர்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் நடவடிக்கைகளுக்குச் சவூதி தூதுவர் கடும் கண்டனம்!

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கும் ஈரானின் நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கடும் கண்டனம் – சவூதி தூதர்.

(இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி டெய்லி மிரர் இதழுக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணல்)

“இந்தத் தாக்குதல்கள் நாட்டின் இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதுடன், சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறும் செயலுமாகும். இவை எந்தவொரு சாக்குப்போக்கின் கீழும் நியாயப்படுத்த முடியாத ஒரு ஆபத்தான தீவிரப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன.”

​”வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய வசதிகளை ஈரான் இலக்கு வைப்பது உலகப் பொருளாதார பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக அமைகிறது. இது எரிசக்தி சந்தைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் ஸ்திரத்தன்மை மீது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.”

​”பிராந்திய பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். சர்வதேச பாதுகாப்பிற்கான எங்களது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் அச்சுறுத்தல்களைத் தடுக்கவும் சர்வதேச ஒத்துழைப்பே சிறந்த வழியாகும்.”

​”சந்தைப் பாதுகாப்பை ஆதரிக்கவும், உலகப் பொருளாதாரத்தை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடிய ஏற்ற இறக்கங்களைக் குறைக்கவும் சவூதி அரேபியா OPEC+ கட்டமைப்பிற்குள் இருக்கும் கூட்டாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.”

​”ஈரானியத் தாக்குதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இத்தகைய விரோதச் செயல்கள் தொடர்வது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.”

மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்-தஸாம் அல்கஹ்தானி டெய்லி மிரர் இதழுக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், சமீபத்திய நிலவரங்கள் குறித்த தனது நாட்டின் நிலைப்பாடுகளைப் பகிர்ந்து கொண்டார்.

கேள்வி: வளைகுடா நாடுகள் மீது சமீபத்தில் ஈரான் நடத்திய தாக்குதல்களை சவுதி அரேபிய அரசு எவ்வாறு மதிப்பிடுகிறது?

​குடியிருப்புப் பகுதிகள், எண்ணெய் ஆலைகள், நன்னீராக்கல் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் தூதரகங்கள் போன்ற சிவிலியன் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து, சவுதி அரேபியா மற்றும் அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை சவுதி அரேபியா வன்மையாகக் கண்டிக்கிறது.
​இந்தத் தாக்குதல்கள் ஒரு நாட்டின் இறையாண்மையை மீறும் செயலாகும் மற்றும் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். இது பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் ஒரு ஆபத்தான நடவடிக்கையாகும். இதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

​இந்தச் சூழலில், இத்தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை சவுதி அரேபியா வலியுறுத்துகிறது. மார்ச் 18, 2026 அன்று ரியாத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஈரானை சர்வதேச சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறும், அண்டை நாடுகளுக்கு எதிரான ஆத்திரமூட்டும் செயல்களைத் தவிர்க்குமாறும் சவுதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளது.

​கேள்வி: வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது உலகப் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு எந்தளவு அச்சுறுத்தலாக அமையும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

​ஈரானின் இந்தத் தாக்குதல்கள் பிராந்தியப் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாது, உலகப் பொருளாதாரப் பாதுகாப்பிற்கும் நேரடி அச்சுறுத்தலாகும். இது எரிசக்தி சந்தை மற்றும் விநியோகச் சங்கிலியில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இத்தாக்குதல்களால் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபடுவதோடு, உலகளாவிய ரீதியில் அவற்றின் விலை உயரவும் காரணமாகிறது. இது அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும், குறிப்பாக வளரும் நாடுகளைப் பெரிதும் பாதிக்கிறது.

​கேள்வி: அரபிக் கடலில் வணிகக் கப்பல்களை இலக்கு வைப்பது மற்றும் ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் ஈரானின் செயல்கள் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?

​அரபிக் கடலில் வணிகக் கப்பல்களைத் தாக்குவதையும், ஹார்முஸ் நீரிணையில் கடல் போக்குவரத்தைத் தடுப்பதையும் சவுதி அரேபியா வன்மையாகக் கண்டிக்கிறது. சர்வதேச வர்த்தகம், கடல்சார் சுதந்திரம் மற்றும் விநியோகப் பாதைகளின் பாதுகாப்பு ஆகியவற்றில் இவை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய செயல்களைத் தடுப்பதற்கும், பிராந்தியத்தின் பாதுகாப்பைப் பேணுவதற்கும் சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

​கேள்வி: இந்த சவால்களை எதிர்கொள்ள சவுதி அரேபியா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து முன்னெடுக்கும் முயற்சிகள் யாவை?

​சவுதி அரேபியா பல வழிகளில் இதற்கான தீர்வுகளை முன்னெடுத்து வருகிறது. நட்பு நாடுகளுடனான ஒருங்கிணைப்பு, சர்வதேச ரீதியிலான இராஜதந்திர முயற்சிகளைப் பலப்படுத்துதல் மற்றும் பதற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளித்தல் ஆகியவை இதில் அடங்கும். பிராந்திய பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும்.

​கேள்வி: தற்போதைய சவால்களுக்கு மத்தியில் எரிசக்தி பாதுகாப்பின் எதிர்காலத்தை சவுதி அரேபியா எவ்வாறு பார்க்கிறது?

​உலகளாவிய எரிசக்தி சந்தையில் சவுதி அரேபியா ஒரு நம்பகமான மற்றும் சுறுசுறுப்பான விநியோகஸ்தராக தொடர்ந்து செயல்படுகிறது. சந்தையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த OPEC+ கட்டமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். பாரம்பரிய எரிசக்தி ஆதாரங்கள் மட்டுமன்றி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நவீன தொழில்நுட்பங்களிலும் முதலீடு செய்வதன் மூலம் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

​கேள்வி: சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்த சவுதி அரேபியா புதிய அணுகுமுறைகளை மேற்கொள்ளுமா?

​சவுதி அரேபியாவின் கொள்கையானது எப்போதும் ஸ்திரத்தன்மையை ஆதரிப்பது மற்றும் அரசியல் தீர்வுகளை முன்னெடுப்பதிலேயே உள்ளது. பிராந்திய மோதல்களின் விளைவுகளைக் குறைப்பதற்கும், அவை தீவிரமடைவதைத் தடுப்பதற்கும் சர்வதேச அளவில் அதிக ஒருங்கிணைப்பு கூட்டு நடவடிக்கை தேவை என சவுதி அரேபியா நம்புகிறது. பேச்சுவார்த்தை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் ஒரு பாதுகாப்புச் சூழலை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

​கேள்வி: இந்தச் சூழலில் சர்வதேச சமூகத்திற்கு நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?

​ஈரான் தனது அண்டை நாடுகள் மீது நடத்தும் தாக்குதல்களை நிறுத்தவும், சர்வதேச சட்டங்களை மதிக்கவும் சர்வதேச சமூகம் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஈரானின் இத்தகைய விரோதப் போக்குகள் தொடர்ந்தால், அது சர்வதேச அமைதிக்கும் உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கும் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும்.