Wednesday, June 17, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 42

ஏப்ரலில் கூடுகிறது பாராளுமன்றம் – அனல் பறக்கப்போகும் விவாதங்கள்!

0

பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் பற்றி தீர்மானம்

பாராளுமன்றம் ஏப்ரல் 7, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் 2026.03.19ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாராளுமன்றம் கூடும் இத்தினங்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய 2026 ஏப்ரல் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 4.45 மணிவரை விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், 2026.03.17ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாவது வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்ட உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுதொகை சட்டமூலத்திற்கு அரசியலமைப்பின் உறுப்புரை 121 இன் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படாவிட்டால் அன்றையதினம் விவாதத்திற்கு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பி.ப 4.45 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்தங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படும். அத்துடன், பி.ப 5.30 மணிக்கு இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை விவாதம் இன்றி அனுமதிக்கப்படும்.

ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை அரசாங்க விடுமுறை தினம் என்பதால் அன்று பாராளுமன்றம் கூடாது.

2026 ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.00 மணிவரை (357ஆம் அத்தியாயம்) தரைப்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, (358ஆம் அத்தியாயமான) கடற்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, (359ஆம் அத்தியாயமான) வான்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் தீர்மானம் வெளியிடப்பட்டால் குறித்த விடயம் அன்றையதினம் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படும்.

இதன் பின்னர் பி.ப 2.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை 2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2026 ஏப்ரல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை வலுசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயக்கொடி அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

கிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை!

0

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. 

இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 38,000 ரூபா வீழ்ச்சியாகும். 

இதன்படி, கடந்த வாரம் 17ஆம் திகதி 408,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று (24) 370,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. 

அதேவேளை, கடந்த வாரம் 17ஆம் திகதி 375,300 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 340,400 ரூபாவாகக் வீழ்ச்சியடைந்துள்ளது. 

நேற்றுடன் ஒப்பிடுகையில் உலக சந்தையிலும் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,344 டொலர்களாகக் பதிவாகியுள்ளது.

வலுசக்தி நெருக்கடியால் அரச நிறுவனங்களுக்குக் கடும் கட்டுப்பாடு

0

அரசாங்க நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, எதிர்காலத்தில் நாட்டுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதில் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால், தற்போதுள்ள எரிபொருள் கையிருப்புகளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அனைத்து அரசியலமைப்புச் சார்ந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இந்த வழிகாட்டல் ஆலோசனைகள் நேற்று (23) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இதன் ஊடாக அரச அலுவலகங்களின் பணியாளர் போக்குவரத்து மற்றும் எரிபொருள் முகாமைத்துவத்திற்காக அரச நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் விரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தியோகத்தர்கள் கடமைக்கு வருகை தரும் போது தனித்தனி வாகனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, முடிந்தவரை பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அல்லது குழுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும், களப்பணிகளுக்காக குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களைப் பயன்படுத்தும் வகையில் தினசரி போக்குவரத்துத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மின்சாரம் மற்றும் வலுசக்தியை சேமிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார். 

குறிப்பாக, முடிந்தவரை இயற்கையான வெளிச்சத்தைப் பயன்படுத்தவும், குளிரூட்டிகளுக்குப் (Air Conditioners) பதிலாக மின்விசிறிகளைப் பயன்படுத்தவும் அந்த வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிறுவனங்களில் மின்தூக்கி (Lift) பயன்பாட்டைக் குறைத்து படிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், உள்ளூராட்சி நிறுவனங்களினால் கட்டுப்படுத்தப்படும் மின்விளக்குகளை தேவையற்ற நேரங்களில் அணைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். 

தவிர, அதியுயர் பாதுகாப்பு வலயங்களைத் தவிர ஏனைய வீதிகளில் தற்காலிக தீர்வாக மின்விளக்குகளை அணைப்பதற்கும், பகல் நேரங்களில் நிறுவனங்களிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளைச் செயலிழக்கச் செய்வதற்கும் அந்த வழிகாட்டல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

அரச நிறுவனங்களின் செயல்பாட்டு நடைமுறைகள் குறித்தும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 

நிறுவனத்திற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் காணப்படுமாயின், பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைக்காமல் இணையவழி (Online) ஊடாகச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த கடமை நேரத்திற்குப் பின்னரும் வார இறுதி நாட்களிலும், அத்தியாவசியத் தேவை தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் அலுவலகங்களை மூடி வைப்பதை உறுதி செய்யுமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வெளிப்புறத் தாக்கங்களின் போது அனைத்து அரச அதிகாரிகளும் பொதுமக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும் எனவும், தேசிய வலுசக்தி சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க உறுதி பூண வேண்டும் எனவும் அந்த வழிகாட்டல்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திடீரென யூடேர்ன் அடித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான இராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு இராணுவத்திற்கு உத்தரவிடப்போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

ஈரானின் மின் விநியோகக் கட்டமைப்பை அமெரிக்கா இலக்கு வைத்தால், பதிலுக்கு இஸ்ரேலின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுளளார்.

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் தொடரும் என்று ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

அதில், “தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மற்றும் விவாதங்களின் வெற்றியைப் பொறுத்து, ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் எழுதியுள்ளார். 

ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்க ஈரான் அனுமதிக்கவில்லை என்றால், திங்கள்கிழமை மாலைக்குள் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் முன்னதாக எச்சரித்திருந்தார். 

கடந்த வாரம் வரை, ஈரானுடன் போர்நிறுத்தத்தை (Ceasefire) மேற்கொள்வதில் தமக்கு விருப்பமில்லை என்று ட்ரம்ப் கூறிவந்த ட்ரம்ப், “நாம் பேச்சுவார்த்தை நடத்தலாம், ஆனால் நான் போர்நிறுத்தத்தை விரும்பவில்லை” என்று அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாரவிலை சுற்றுலா விடுதி ஊழியர் நீரில் மூழ்கிப் பலி!

0

மாரவில – தல்வில பொய முகத்துவாரப் பகுதிக்கு அருகே கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தொடுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று 23ஆம் தேதி காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் வலிபென்ன, துனகதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய வர்ணகுலசூரிய ரமேஷ் தருக்க டில்ஷ திசேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், அக்குரஸ்ஸ, லேனவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய விக்கிரமசிங்க மலே பத்திரனகே ஜீவக சமந்தா என்பவர் கடலில் இருந்து மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாரவில – தல்வில பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த இந்த மூன்று இளைஞர்களும், 23ஆம் தேதி காலை கடலில் நீராடச் சென்றுள்ளனர். அவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது, அவர்களில் இருவர் கடலில் ஏற்பட்ட பலமான நீரோட்டத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் உடனடியாகச் செயல்பட்டு, விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்கு சிகிச்சைப் பலனின்றி ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மீதான மரணப் பரிசோதனை நடைபெறவுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தொடுவாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காத்தான்குடியில் வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை!

காத்தான்குடி வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு..!

காத்தான்குடி நகரின் அழகையும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தீர்க்கதரிசனமான சிந்தனை மற்றும் வழிகாட்டலின் பேரில் உருவாக்கப்பட்ட “வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை” ஞாயிற்றுக்கிழமை (22) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இவ்விழாவில் நகர சபை உபதவிசாளர், சபை உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பெரும்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன்; உதவுவதற்கு ஈரான் தயார்!

0

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார். 

இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை எரிபொருள் அல்லது வேறு ஏதேனும் அத்தியாவசியப் பொருட்களைக் கோரினால், அவற்றை வழங்க ஈரான் தயாராக உள்ளது என்றார். ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது நட்பு நாடுகளுக்காக மூடவில்லை என்பதையும் அவர் இங்கு வலியுறுத்தினார். 

இலங்கை இக்கட்டான நிலைக்கு உள்ளாவதை ஈரான் ஒருபோதும் விரும்பாது என்றும், ஈரான் தேசத்திற்கு இலங்கை மிகவும் மரியாதைக்குரிய நாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ‘IRIS Dena’ போர்க்கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கு, ஈரான் கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே இலங்கை நடவடிக்கை எடுத்திருந்தது. இலங்கையின் அந்த உதவியை இச்சந்தர்ப்பத்தில் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். 

இதேவேளை, ஈரானில் உள்ள இலங்கையர்கள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்பினால், அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க ஈரான் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டார்.

90 சதவீதமான தனியார் பேருந்து சேவைகள் இன்றும் முடக்கம்!

0

இன்றைய தினம் (23) பேருந்து சேவைகளிலிருந்து விலகியமை ஒரு வேலைநிறுத்தப் போராட்டம் அல்ல என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், பழைய கட்டணத்தின் கீழ் பேருந்துகளை இயக்க முடியாது என்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் நேற்று முதல் புதிய கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்தியிருக்க முடியும் என்றும், அவ்வாறு செய்யாததே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய தினம் 90 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்த அவர், எவருக்கும் அழுத்தம் கொடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், ஒரு சில பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். எவ்வாறாயினும், ‘சிசு செரிய’ பாடசாலை பேருந்து சேவைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டதாக அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த கெமுனு விஜேரத்ன:

“இதனை ஒரு வேலைநிறுத்தப் போராட்டமாக நாம் கூறவில்லை. நட்டத்தை ஈடுகட்ட முடியாததால் சேவையிலிருந்து விலகியுள்ளோம். குறுகிய தூர சேவைகளுக்கு 5,000 முதல் 6,000 ரூபா வரையிலும், நீண்ட தூர சேவைகளுக்கு 15,000 முதல் 20,000 ரூபா வரையிலும் நட்டம் ஏற்படுகிறது.

எவரும் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய மாட்டார்கள். இது ஒரு தொழில். கடந்த காலங்களில் எரிபொருள் விலை உயர்ந்தவுடன் அதிகாரிகள் எம்முடன் கலந்துரையாடினர். ஆனால் இம்முறை எவ்வித பேச்சுவார்த்தையும் இன்றி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் அமைச்சும் செயற்பட்டுள்ளன. எம்முடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு ஒரு சிறிய சமிக்ஞையை வழங்கியுள்ளோம்.”

மீண்டும் கட்டணம் – கொழும்பு மாநகர சபையின் முக்கிய அறிவிப்பு!

0

கொழும்பில் வாகன நிறுத்துமிடக் கட்டண அறவீடு தொடர்பாக

கொழும்பு மாநகர சபையால் தீர்மானிக்கப்பட்டபடி, எரிபொருள் நிலையங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் வாகன நிறுத்துமிடங்களில் ஏற்படும் பாதிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்கு வந்த மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக, வாகன நிறுத்துமிடக் கட்டணம் அறவீடு 18.03.2026 முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டது.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறை மற்றும் வாகன இலக்கம் (ஒற்றை/இரட்டை) ஆகியவற்றின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுவதால், எரிபொருள் நிலையங்களுக்கு அருகிலுள்ள வாகன வரிசைகள் குறைவடைந்துள்ளதாகக் காணப்படுகிறது.

எனவே, கொழும்பு மாநகர சபை, நிதி மீதான நிலைக்குழுவில், வாகன நிறுத்துமிடங்களின் முகாமைத்துவ கட்டணம் அறவீட்டை 23.03.2026 அன்று காலை 6.00 மணி முதல் வழக்கம் போல் மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேக்கரி தொழில் வீழ்ச்சியடையும் அபாயம்!

0

ஜூட் சமந்த

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு தேங்காய் எண்ணெயின் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பேக்கரி உற்பத்தியாளர்களின் தகவல்படி, ஒரு கிலோகிராம் 850 ரூபாயாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயின் (RDB) விலை தற்போது 1,130 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் உள்நாட்டு தேங்காய் எண்ணெயின் விலை 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

தேங்காய் எண்ணெய் மட்டுமின்றி, பாம் ஆயில் (Palm Oil) உள்ளிட்ட இதர சமையல் எண்ணெய் வகைகளின் விலையும் கிலோவிற்கு 700 ரூபாயிலிருந்து 960 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. விலை உயர்வு ஒருபுறமிருக்க, சந்தையில் இந்த எண்ணெய் வகைகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், உள்நாட்டு எண்ணெய் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கிலோகிராம் கள்ளுத் தேங்காய் (Katu Pol) 135 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக அதிகரித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை உயர்வு காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பேக்கரி தொழில் முற்றாகச் சரிவடையும் அபாயம் உள்ளதாக உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர். மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் சந்தையில் நிலவும் தட்டுப்பாடு காரணமாகத் தொழிலை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.