இலங்கையில் தற்போது எரிபொருள் விநியோகத்தில் எந்தவித சிக்கலும் இல்லாததால், எரிபொருளைப் பெறுவதற்கு மீண்டும் கியூஆர் (QR) குறியீடு முறையை அறிமுகப்படுத்த வேண்டிய உடனடித் தேவை எதுவும் ஏற்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற்று வருவதாகவும், தற்போதைய நிலையில் பொதுமக்கள் தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அவர் மேலும் விளக்குகையில், முன்னதாக நாட்டில் நிலவிய கடுமையான எரிபொருள் நெருக்கடி காரணமாக, எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது மட்டுமே கியூஆர் குறியீடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டார்.
தற்போதைய நிலவரப்படி, நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்று உறுதிபடத் தெரிவித்த அமைச்சர், விநியோகச் சங்கிலியில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் கூறினார். இருப்பினும், எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு தேவை அல்லது நெருக்கடி நிலை ஏற்பட்டால் மட்டுமே, மீண்டும் கியூஆர் குறியீடு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம், எரிபொருள் விநியோகம் தொடர்பில் நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் நாட்டின் சகல பாகங்களிலும் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்ந்துகொண்டே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கும் (Iran) ஹார்முஸ்நீரிணைக்கும் (Strait of Hormuz) இடையிலான உறவு என்பது புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமானது.
ஹார்மூஸ் நீரிணை ஈரானின் தெற்கே அமைந்துள்ளது. இது பாரசீக வளைகுடாவையும் (Persian Gulf) ஓமன் வளைகுடாவையும் (Gulf of Oman) இணைக்கும் ஒரு குறுகிய கடல் வழியாகும். இதன் வடக்குக் கரை முழுவதையும் ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
தற்போது மூண்டுள்ள போர்நிலை காரணமாக ஈரான் ஹார்மூஸ் நீரிணை போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளமை முழு உலகையும் கலங்கடித்துளளது.
ஈரான் அரசாங்கம் இது குறித்து இன்னும் முறையான உலகளாவிய அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், ஈரானிய கடற்படை வானொலி (Radio Broadcast) வழியாக அந்தப் பகுதி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு, “எந்தக் கப்பலும் ஹார்மூஸ் நீரிணையைக் கடக்க அனுமதி இல்லை” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹார்மூஸ் நீரிணை உலகிலேயே கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இடமாக இது கருதப்படுவதுடன், உலகில் கடல் வழியாக கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய்களில் சுமார் 20% முதல் 30% வரை இந்த நீரிணை வழியாகவே செல்கிறது. ஈரான் இந்த பாதையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.
அமெரிக்கா அல்லது பிற நாடுகளுடன் பதற்றம் ஏற்படும் போது, “ஹார்மூஸ் நீரிணையை மூடிவிடுவோம்” என்று ஈரான் அவ்வப்போது எச்சரிக்கை செய்வதுவரும் அதேவேளை, அப்படி நடந்தால் உலக சந்தையில் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்வடையும்.
ஈரான் தனது கடற்படை மற்றும் ஏவுகணைத் தளங்களை இந்த நீரிணையை ஒட்டிய பகுதிகளில் அமைத்துள்ளது. சர்வதேச சட்டப்படி இது ஒரு சர்வதேச நீரிணையாகக் கருதப்பட்டாலும், இதன் பெரும்பகுதி ஈரானின் கடல் எல்லைக்குள் இருப்பதால், இப்பகுதியைக் கடக்கும் கப்பல்களைக் கண்காணிக்கும் அதிகாரம் ஈரானிடம் உள்ளது.
ஈரானைப் பொறுத்தவரை, ஹார்மூஸ் நீரிணை என்பது ஒரு “பொருளாதார ஆயுதம்”. இதன் மூலம் உலக நாடுகளைத் தன் பக்கம் திரும்பச் செய்யும் வலிமையை ஈரான் இயற்கையாகவே பெற்றுள்ளமை உலக நாடுகளுக்கு விடுக்கப்படும் பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
ஈரான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள வெறும் 33 கிலோமீட்டர் அகலம் கொண்ட ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழித்தடம், ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கும் வல்லமை கொண்டது என்பது வியப்பிற்குரிய உண்மையாகும்
உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20%, அதாவது தினமும் சுமார் 1.7 கோடி பேரல்கள் இந்த ஒரு குறுகிய பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. ஈரான், ஈராக், குவைத், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 90% எண்ணெய் ஏற்றுமதி இந்த வழித்தடத்தைச் சார்ந்தே உள்ளது. ஒருவேளை ஈரான் இந்த வழியைத் தடுத்தால், உலக நாடுகள் சந்திக்கப்போகும் விளைவுகள் மிகவும் பாரதூரமாக அமைய வாய்ப்புள்ளது.
இலங்கையை பொறுத்தவரையில் தனக்குத் தேவையான எரிபொருளில் பெரும்பகுதியை இறக்குமதி மூலமே பெற்றுக்கொள்கிறது. 2024 மற்றும் 2026-ஆம் ஆண்டின் தற்போதைய தரவுகளின்படி இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை வழங்கும் மிகப்பெரிய நாடாக சிங்கப்பூர் உள்ளது. அதேபோல் பெருமளவு பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
தற்போதைய ஹார்மோஸ் நீரினை போக்குவரத்து தடையால் மிக மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இந்தியாவும் முக்கிய இடம்பிடித்துளளது.
இந்தியா தனது எண்ணெய் தேவையில் 85%-ஐ இறக்குமதி செய்கிறது, இதில் 60% எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து பெறப்படுகிறது. இதனால் இந்தியாவில் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரும் எனவும், தொழிற்சாலைகள் முடங்கி வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் நிலைகுலையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியிலும், இலங்கையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடையோ அல்லது தாமதமோ ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய CPC தலைவர் டி.ஜே. ராஜகருண, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி நாட்டை வந்தடையும் எனத் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், 37 நாட்களுக்குப் போதுமான பெட்ரோல், 35 நாட்களுக்குப் போதுமான டீசல், 72 நாட்களுக்குப் போதுமான சூப்பர் டீசல், 47 நாட்களுக்குப் போதுமான விமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தாலும், போர் சூழல் தொடருமானால் இலங்கை போன்ற சிறிய நாடுகள் எரிபொருள் கொள்வனவில் பெரும் சிக்கலை சந்திக்கும் அதேவேளை, எரிபொருள் விலையிலும் பாரிய அதிகரிப்பு ஏற்பட்ட அதிக வாய்ப்புள்ளது.
இவ்வாறான சூழ்நிலையிலே நேற்று மாலை தொடக்கம் இன்று வரை நாடு பூராகவும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் பெற்றுக்கொள்வதுடன், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இல்லை என்ற விடயத்தையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்தத் தடையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 150 டாலரைத் தாண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது உலகெங்கிலும் கடுமையான பணவீக்கத்தை உருவாக்கி, ஒரு மிகப்பெரிய உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு (Global Recession) வழிவகுக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், இந்த 33 கிலோமீட்டர் கடல் பகுதி அடைக்கப்பட்டால், அது உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பிற்கு விடப்படும் பெரும் சவாலாக அமையும்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹஷான் திலகரத்ன, நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஒரு “மாஃபியா” கும்பல் வேரூன்றியுள்ளதாகத் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடைபெற்றுவரும் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதி பெறத் தவறியதைத் தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சி உடனான நேர்காணலில் அவர் இதனை வெளிப்படுத்தினார்.
கிரிக்கெட் கட்டமைப்பில் வீரர்கள், முகாமையாளர்கள், தெரிவாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் ஒரு மாஃபியா கும்பல் அல்லது குழு செயல்படுவதை அவர் ஒப்புக்கொண்டார்.
ஓய்வு பெற்ற ஒரு வீரர் பொதுவாகக் கூறத் தயங்கும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை திலகரத்ன முன்வைத்துள்ளமை இலங்கை கிரிக்கட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
“2015 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்த அனைத்து ஜனாதிபதிகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் இந்த ஊழலில் ஒரு பங்கைப் பெற்றுள்ளனர்” என்றும், இதன் விளைவாக கிரிக்கெட் நிர்வாகத்தின் 80 சதவீதப் பகுதி சீரழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இலங்கை கிரிக்கெட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்ல நிர்வாகத்தின் தலைமையில் யார் இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்டபோது, ரொஷான் மகாநாம (Roshan Mahanama) ஒருவரே அதற்குப் பொருத்தமானவர் எனத் திலகரத்ன குறிப்பிட்டார்.
ஹஷான் திலகரத்ன மற்றும் ரொஷான் மகாநாம ஆகிய இருவரும் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் முக்கிய வீரர்களாவர். மேலும், மகாநாம சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) போட்டி நடுவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது அவரது நேர்மைக்கும் திறமைக்கும் சான்றாகும்.
இலங்கை கிரிக்கெட் துறையில் நிலவும் இந்த முறைகேடுகள் குறித்த அவரது வெளிப்பாடுகள் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியிலும், இலங்கையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடையோ அல்லது தாமதமோ ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
நேற்று மாலை தொடக்கம் இன்று வரை நாடு பூராகவும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் பெற்றுக்கொள்வதை காணக்கூடியதாக உள்ளது.
இது தொடர்பாக இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய CPC தலைவர் டி.ஜே. ராஜகருண, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி நாட்டை வந்தடையும் எனத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் நிலைமைகள் இலங்கையின் எரிபொருள் விநியோகத்தைப் பாதிக்காது என்பதைத் தாம் பொறுப்புடன் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களின் நுகர்வு அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு, இன்று (01) திட்டமிடப்படாத போதிலும் ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்பட்டு விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாளை பௌர்ணமி (Poya) தினமாக இருந்தபோதிலும், தடையின்றி எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தலின்படி, பீப்பாய்களில் (Barrels) எரிபொருள் வழங்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. எரிபொருளைப் பீப்பாய்களில் கொள்வனவு செய்து, அதனை அதிக விலைக்கு மீள்விற்பனை செய்ய முயற்சிப்பவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், 37 நாட்களுக்குப் போதுமான பெட்ரோல், 35 நாட்களுக்குப் போதுமான டீசல், 72 நாட்களுக்குப் போதுமான சூப்பர் டீசல், 47 நாட்களுக்குப் போதுமான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், நீண்ட வரிசையில் நின்று பீதியை உண்டாக்கவேண்டாம் வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானங்களுக்கு, தமது சங்கத்தின் திருத்தங்களுடன் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகச் சங்கத்தின் தலைவர் என்.எச்.கே. ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்தார். வென்னப்புவ – தும்மலதெனிய பகுதியில் நடைபெற்ற புத்தளம் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது இலங்கை முழுவதும் சுமார் 32,000 பஸ்கள் மற்றும் வேன்கள் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் இவற்றின் ஊடாக நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 18.5 இலட்சம் முதல் 19 இலட்சம் மாணவர்கள் வரை பயணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து என்பது மிகவும் பொறுப்புவாய்ந்த ஒரு பணியாகும் எனச் சுட்டிக்காட்டிய பத்மசிறி, ஏனைய போக்குவரத்துச் சேவைகளைப் போலன்றி, இதில் ஈடுபடுபவர்கள் தமது தனிப்பட்ட தேவைகளைக் காட்டிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்
அரசாங்கம் கொண்டு வந்த சில ஆரம்பக்கட்ட யோசனைகளைச் சங்கம் ஏற்கவில்லை என்றும், அதற்குப் பதிலாகச் சில திருத்தங்களைச் சங்கம் முன்வைத்ததாகவும், அதற்கு அரசாங்கம் சாதகமான பதில்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திருத்தங்களின் ஊடாக பாடசாலை வாகனச் சாரதிகளுக்கான தற்போதைய வயது எல்லையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சாரதிகள் மற்றும் வாகனங்களில் பணிபுரியும் பெண் உதவியாளர்களுக்கு (Matrons) பிரத்யேகச் சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதுவரை பாடசாலை வாகனங்கள் தொடர்பான முடிவுகள் அந்தந்த மாகாண சபைகளாலேயே எடுக்கப்பட்டு வந்தன. எனினும், பாடசாலை வாகனங்கள் மாகாணங்களுக்கு இடையிலும் சேவைகளை வழங்குவதால், இதனை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்று முறைப்படுத்துவது நீண்டகாலமாக நிலவி வந்த பல சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும் எனச் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த விசேட கலந்துரையாடலில் சங்கத்தின் செயலாளர் வசந்த இலங்ககோன், பொருளாளர் கபில குமாரசிறி மற்றும் தேசிய அமைப்பாளர் கமல் இலங்கரத்ன உள்ளிட்ட பல முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தங்கோட்டுவ, யோகியான – சிங்கக்குலிய பகுதியில் உள்ள பிரபல இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மதில் சுவர் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அசித குமார பாலசூரிய என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் வீட்டில் எவரும் இருக்கவில்லை என்பதுடன், வீட்டின் உரிமையாளர் தனது தொழில் நிமித்தம் இரத்தினபுரி பகுதிக்குச் சென்றிருந்ததாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தங்கோட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வர்த்தகரைத் தொடர்புகொண்டு விபரித்துள்ளபோதிலும் இச்சம்பவம் குறித்து பொலிஸில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு அளிக்க வர்த்தகர் விருப்பம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.
தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகக் கருதப்படும் “அடா” (Ada) எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் தன்னிடம் பலமுறை கப்பம் கோரப்பட்டதாகவும், அதற்குத் தான் இணங்காத காரணத்தினால் அவரது ஆதரவாளர்கள் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என வர்த்தகர் தொலைபேசி ஊடாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 12 போர்ட் (12-bore) ரகத் துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் இரண்டு உயிருள்ள தோட்டாக்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் யார் என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில் இச்சம்பவம் குறித்து சிலாபம் கோட்ட குற்றப்பிரிவு மற்றும் தங்கோட்டுவ பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், சந்தையில் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
போதுமான அளவு எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் துறைசார் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும், சில்லறை விற்பனை நிலையங்களில் “எரிவாயு இல்லை” என்ற பதிலே கிடைப்பதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.
வீடுகளில் சமையல் எரிவாயு தீர்ந்துள்ள நிலையில், மாற்று வழியின்றி உணவகங்களிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் நாளாந்தச் செலவுகளைப் பாரியளவில் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர், “நுகர்வோர் முறையான வைப்புத் தொகையை (Deposit) செலுத்தியே எரிவாயு கொள்கலன்களைப் பெற்றுள்ளனர். எனவே, அவர்களுக்குத் தடையின்றி எரிவாயுவை வழங்க வேண்டிய சட்டரீதியான பொறுப்பு எரிவாயு நிறுவனங்களுக்கு உண்டு” என வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் சக்திவாய்ந்த உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei), அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். 86 வயதான அவரது மறைவை ஈரான் அரசு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உறுதிப்படுத்தின.
சனிக்கிழமை காலை கமேனியின் குடியிருப்பு மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், கமேனியுடன் சேர்த்து அவரது மகள், மருமகன் மற்றும் பேரனும் கொல்லப்பட்டதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது குறித்துக் கூறுகையில், அமெரிக்க உளவுத்துறை மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து கமேனியால் தப்பிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் அரசு கமேனியை ஒரு “தியாகி” என்று போற்றியுள்ளது.
எதிர்ப்பின் சிற்பி: கமேனியின் அரசியல் பயணம்
1989-ல் ஈரானிய புரட்சியின் தந்தை அயதுல்லா ருஹொல்லா கொமேனியின் மறைவுக்குப் பிறகு கமேனி ஈரானின் தலைமையை ஏற்றார். 1980-களில் ஈராக் உடனான போரின் போது ஈரானின் அதிபராகப் பணியாற்றிய அனுபவம், மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா மீது அவருக்குத் தீராத அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.
ஈரானின் பாதுகாப்பு அரணாக விளங்கும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) மற்றும் அதன் துணை ராணுவ அமைப்புகளை வடிவமைத்ததில் கமேனிக்கு முக்கிய பங்கு உண்டு. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள “எதிர்ப்புப் பொருளாதாரம்” (Resistance Economy) என்ற கொள்கையை அவர் முன்னெடுத்தார்.
கமேனியின் நீண்டகால ஆட்சியில் பல உள்நாட்டுப் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக 2009: தேர்தல் முறைகேடு புகார்களால் வெடித்த “பச்சை இயக்கம்” (Green Movement) போராட்டங்கள், 2022: பெண்கள் உரிமை தொடர்பான போராட்டங்கள், 2024 ஜனவரி: பொருளாதார நெருக்கடியால் உருவான நாடு தழுவிய கிளர்ச்சிகள், இது 1979 புரட்சிக்குப் பிறகு நிகழ்ந்த மிக வன்முறையான மோதலாகக் கருதப்படுகிறது.
சீர்திருத்தங்களை விரும்பிய ஈரானின் இளைய தலைமுறையினரிடமிருந்து கமேனி முற்றிலும் தனிமைப்பட்டு இருந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தேசிய சுதந்திரத்திற்காக ஈரானிய மக்கள் மிக அதிக விலையைக் கொடுக்க வேண்டியிருந்ததாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கமேனியின் படுகொலையைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 1981-ல் ஒரு படுகொலை முயற்சியில் தப்பித்து தனது வலது கையின் செயல்பாட்டை இழந்த கமேனி, தற்போது நேரடித் தாக்குதலில் கொல்லப்பட்டது ஈரானிய அரசியலில் ஒரு பெரும் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. ஈரானின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
அலி கமேனியின் ‘எதிர்ப்பு அரசியல்’ முதல் தற்போதைய மோதல் வரை
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் நீண்டகால ஆட்சி மற்றும் அவர் உருவாக்கிய “எதிர்ப்பு அச்சு” (Axis of Resistance) ஆகியவை தற்போது ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளன. மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான அவரது நிலைப்பாடும், சமீபத்திய ராணுவ மோதல்களும் மத்திய கிழக்கை ஒரு முழுமையான போரை நோக்கித் தள்ளியுள்ளன.
அலி கமேனி ஒரு நடைமுறைவாதியாக (Pragmatist) அறியப்பட்டார். மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகப் போராடுவதற்குப் பேச்சுவார்த்தை மற்றும் எதிர்ப்பு ஆகிய இரண்டு உத்திகளையும் அவர் பயன்படுத்தினார். 2015-ஆம் ஆண்டில், கடுமையான பொருளாதாரத் தடைகளிலிருந்து நாட்டை மீட்க, அப்போதைய அதிபர் ஹசன் ரௌஹானி மேற்கத்திய நாடுகளுடன் நடத்திய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு (JCPOA) கமேனி பச்சைக்கொடி காட்டினார்.
இருப்பினும், 2018-ல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய பிறகு, கமேனி மீண்டும் ஆக்ரோஷமான நிலையை எடுத்தார். இதன் விளைவாக, ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தியது.
இதனை தொடர்ந்து கமேனியின் ஆட்சிக் காலத்தில் ஈரான் பல உள்நாட்டு நெருக்கடிகளையும் சந்தித்தது.
2019: பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக வெடித்த போராட்டங்களில் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கமேனி இந்தப் போராட்டக்காரர்களை “குண்டர்கள்” என்று விமர்சித்தார்.
2022: மஷா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன. இதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அனைத்துப் போராட்டங்களையும் அலி கமேனி ஒரு தேசிய பாதுகாப்புப் பிரச்சினையாகவே பார்த்தார். இவை அனைத்தும் ஈரானின் வலிமையைக் குறைக்க வெளிநாட்டு சக்திகளால் தூண்டப்பட்டவை என்று அவர் வாதிட்டார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதிக்கத்தைத் தடுக்க, ஈரான் தனது எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கியது. காசிம் சுலைமானி இந்தத் திட்டத்தின் முக்கிய சிற்பியாக இருந்தார். இக்கூட்டணியில் லெபனானின் ஹிஸ்புல்லா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், யேமனின் ஹூதிக்கள் மற்றும் சிரியாவின் ஆசாத் அரசு ஆகியவை இடம்பெற்றிருந்தன.
வீழ்ச்சியின் தொடக்கம் மற்றும் தற்போதைய போர்
அக்டோபர் 7, 2023-க்குப் பிறகு இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதல்களில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 2024 டிசம்பரில் சிரியாவில் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டது ஈரானுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.
இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட இஸ்ரேல், ஜூன் 13, 2025 அன்று ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் மீது நேரடித் தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரான் டெல் அவிவ் மீது ஏவுகணை மழையைப் பொழிந்தது. இந்த மோதலின் உச்சகட்டமாக, அமெரிக்கா ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது ‘பங்கர் பஸ்டர்’ (Bunker Busters) குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
தற்போது மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு மிகப்பாரிய போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது என்பதை முழு உலகமும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தொடர் தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அலி கமேனி (Ali Khamenei) கொல்லப்பட்டார்.
சனிக்கிழமை அன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், கமேனியுடன் சேர்த்து அவரது மகள், மருமகன் மற்றும் பேரனும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அரசு ஊடகங்கள் கமேனியின் மரணத்தை உறுதிப்படுத்தி, அவரை ஒரு “தியாகி” என்று போற்றியுள்ளன.
முக்கிய தலைவர்கள் உயிரிழப்பு
கமேனியுடன் சேர்ந்து ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். கமேனியின் மூத்த அரசியல் ஆலோசகரும் ஈரான் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளருமான அலி ஷம்கானி (Ali Shamkani) மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தலைமைத் தளபதி முகமது பாக்பூர் (Mohammad Pakpour) ஆகியோரும் உயிரிழந்ததை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக, மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள 27 ராணுவ தளங்கள் மற்றும் டெல் அவிவில் உள்ள இஸ்ரேலிய ராணுவ நிலைகள் மீது ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தாக்குதலைத் தொடங்கியுள்ளது. கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர் வெடிப்புச் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளன. கத்தாரில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் இதுவரை 16 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பள்ளி மீது தாக்குதல்: நூற்றுக்கணக்கானோர் பலி
தெற்கு ஈரானின் மினாப் (Minab) நகரில் உள்ள சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளி ஒன்றின் மீது அமெரிக்க-இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 148 பேர் உயிரிழந்துள்ளதுடன் 95 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian), கமேனியின் படுகொலையை “ஒரு மாபெரும் குற்றம்” என்று கண்டித்துள்ளதோடு, இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். ஈராக் தலைவர் முக்தாதா அல்-சதர் கமேனியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, ஈராக்கில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தின் ‘கிரீன் ஜோன்’ பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை (T20 World Cup 2026) தொடரில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இன்னும் மிச்சமுள்ளது. இருப்பினும், அது மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது.
பிப்ரவரி 27 அன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை தோற்கடித்ததன் மூலம் பாகிஸ்தானுக்கான கதவு திறந்துள்ளது. தற்போதுள்ள நிலையில், பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்ல செய்ய வேண்டியவை இதோ:
கட்டாய வெற்றி
பாகிஸ்தான் தனது கடைசி ‘சூப்பர் 8’ போட்டியில் (பிப்ரவரி 28, இன்று) இலங்கை அணியை கண்டிப்பாகத் தோற்கடிக்க வேண்டும். இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் பாகிஸ்தான் தொடரிலிருந்து உடனடியாக வெளியேறிவிடும்.
நிகர ஓட்ட விகிதம் (Net Run Rate – NRR)
வெற்றி பெற்றால் மட்டும் போதாது, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். எனவே, நியூசிலாந்தின் நிகர ஓட்ட விகிதத்தை (+1.390) விட பாகிஸ்தான் (-0.461) அதிக ஓட்ட விகிதத்தைப் பெற வேண்டும்.
அதனடிப்படையில் பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடினால்: இலங்கை அணியை சுமார் 65 ஓட்டங்கள் (Runs) வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.
பாகிஸ்தான் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடினால்: இலங்கையினால் நிர்ணயிக்கப்படும் இலக்கை சுமார் 12 முதல் 13 ஓவர்களுக்குள் (7-8 ஓவர்கள் மீதமிருக்கையில்) எட்டிப் பிடிக்க வேண்டும்.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற, இன்று இலங்கைக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியைப் (Big Margin Win) பதிவு செய்ய வேண்டும். இங்கிலாந்து ஏற்கனவே தனது பிரிவில் 3 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.