Saturday, March 7, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 5

அலி கமேனியின் ‘எதிர்ப்பு அரசியல்’ முதல் தற்போதைய மோதல் வரை!

ஈரானின் சக்திவாய்ந்த உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei), அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். 86 வயதான அவரது மறைவை ஈரான் அரசு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உறுதிப்படுத்தின.

சனிக்கிழமை காலை கமேனியின் குடியிருப்பு மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், கமேனியுடன் சேர்த்து அவரது மகள், மருமகன் மற்றும் பேரனும் கொல்லப்பட்டதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது குறித்துக் கூறுகையில், அமெரிக்க உளவுத்துறை மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து கமேனியால் தப்பிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் அரசு கமேனியை ஒரு “தியாகி” என்று போற்றியுள்ளது.

எதிர்ப்பின் சிற்பி: கமேனியின் அரசியல் பயணம்

1989-ல் ஈரானிய புரட்சியின் தந்தை அயதுல்லா ருஹொல்லா கொமேனியின் மறைவுக்குப் பிறகு கமேனி ஈரானின் தலைமையை ஏற்றார். 1980-களில் ஈராக் உடனான போரின் போது ஈரானின் அதிபராகப் பணியாற்றிய அனுபவம், மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா மீது அவருக்குத் தீராத அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.

ஈரானின் பாதுகாப்பு அரணாக விளங்கும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) மற்றும் அதன் துணை ராணுவ அமைப்புகளை வடிவமைத்ததில் கமேனிக்கு முக்கிய பங்கு உண்டு. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள “எதிர்ப்புப் பொருளாதாரம்” (Resistance Economy) என்ற கொள்கையை அவர் முன்னெடுத்தார்.

கமேனியின் நீண்டகால ஆட்சியில் பல உள்நாட்டுப் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக 2009: தேர்தல் முறைகேடு புகார்களால் வெடித்த “பச்சை இயக்கம்” (Green Movement) போராட்டங்கள், 2022: பெண்கள் உரிமை தொடர்பான போராட்டங்கள், 2024 ஜனவரி: பொருளாதார நெருக்கடியால் உருவான நாடு தழுவிய கிளர்ச்சிகள், இது 1979 புரட்சிக்குப் பிறகு நிகழ்ந்த மிக வன்முறையான மோதலாகக் கருதப்படுகிறது.

சீர்திருத்தங்களை விரும்பிய ஈரானின் இளைய தலைமுறையினரிடமிருந்து கமேனி முற்றிலும் தனிமைப்பட்டு இருந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தேசிய சுதந்திரத்திற்காக ஈரானிய மக்கள் மிக அதிக விலையைக் கொடுக்க வேண்டியிருந்ததாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கமேனியின் படுகொலையைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 1981-ல் ஒரு படுகொலை முயற்சியில் தப்பித்து தனது வலது கையின் செயல்பாட்டை இழந்த கமேனி, தற்போது நேரடித் தாக்குதலில் கொல்லப்பட்டது ஈரானிய அரசியலில் ஒரு பெரும் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. ஈரானின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

அலி கமேனியின் ‘எதிர்ப்பு அரசியல்’ முதல் தற்போதைய மோதல் வரை

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் நீண்டகால ஆட்சி மற்றும் அவர் உருவாக்கிய “எதிர்ப்பு அச்சு” (Axis of Resistance) ஆகியவை தற்போது ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளன. மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான அவரது நிலைப்பாடும், சமீபத்திய ராணுவ மோதல்களும் மத்திய கிழக்கை ஒரு முழுமையான போரை நோக்கித் தள்ளியுள்ளன.

அலி கமேனி ஒரு நடைமுறைவாதியாக (Pragmatist) அறியப்பட்டார். மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகப் போராடுவதற்குப் பேச்சுவார்த்தை மற்றும் எதிர்ப்பு ஆகிய இரண்டு உத்திகளையும் அவர் பயன்படுத்தினார். 2015-ஆம் ஆண்டில், கடுமையான பொருளாதாரத் தடைகளிலிருந்து நாட்டை மீட்க, அப்போதைய அதிபர் ஹசன் ரௌஹானி மேற்கத்திய நாடுகளுடன் நடத்திய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு (JCPOA) கமேனி பச்சைக்கொடி காட்டினார்.

இருப்பினும், 2018-ல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய பிறகு, கமேனி மீண்டும் ஆக்ரோஷமான நிலையை எடுத்தார். இதன் விளைவாக, ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தியது.

இதனை தொடர்ந்து கமேனியின் ஆட்சிக் காலத்தில் ஈரான் பல உள்நாட்டு நெருக்கடிகளையும் சந்தித்தது.

  • 2019: பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக வெடித்த போராட்டங்களில் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கமேனி இந்தப் போராட்டக்காரர்களை “குண்டர்கள்” என்று விமர்சித்தார்.
  • 2022: மஷா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன. இதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அனைத்துப் போராட்டங்களையும் அலி கமேனி ஒரு தேசிய பாதுகாப்புப் பிரச்சினையாகவே பார்த்தார். இவை அனைத்தும் ஈரானின் வலிமையைக் குறைக்க வெளிநாட்டு சக்திகளால் தூண்டப்பட்டவை என்று அவர் வாதிட்டார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதிக்கத்தைத் தடுக்க, ஈரான் தனது எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கியது. காசிம் சுலைமானி இந்தத் திட்டத்தின் முக்கிய சிற்பியாக இருந்தார். இக்கூட்டணியில் லெபனானின் ஹிஸ்புல்லா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், யேமனின் ஹூதிக்கள் மற்றும் சிரியாவின் ஆசாத் அரசு ஆகியவை இடம்பெற்றிருந்தன.

வீழ்ச்சியின் தொடக்கம் மற்றும் தற்போதைய போர்

அக்டோபர் 7, 2023-க்குப் பிறகு இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதல்களில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 2024 டிசம்பரில் சிரியாவில் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டது ஈரானுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட இஸ்ரேல், ஜூன் 13, 2025 அன்று ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் மீது நேரடித் தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரான் டெல் அவிவ் மீது ஏவுகணை மழையைப் பொழிந்தது. இந்த மோதலின் உச்சகட்டமாக, அமெரிக்கா ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது ‘பங்கர் பஸ்டர்’ (Bunker Busters) குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது.

தற்போது மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு மிகப்பாரிய போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது என்பதை முழு உலகமும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.

ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தொடர் தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அலி கமேனி (Ali Khamenei) கொல்லப்பட்டார்.

சனிக்கிழமை அன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், கமேனியுடன் சேர்த்து அவரது மகள், மருமகன் மற்றும் பேரனும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அரசு ஊடகங்கள் கமேனியின் மரணத்தை உறுதிப்படுத்தி, அவரை ஒரு “தியாகி” என்று போற்றியுள்ளன.

முக்கிய தலைவர்கள் உயிரிழப்பு

கமேனியுடன் சேர்ந்து ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். கமேனியின் மூத்த அரசியல் ஆலோசகரும் ஈரான் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளருமான அலி ஷம்கானி (Ali Shamkani) மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தலைமைத் தளபதி முகமது பாக்பூர் (Mohammad Pakpour) ஆகியோரும் உயிரிழந்ததை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தப் படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக, மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள 27 ராணுவ தளங்கள் மற்றும் டெல் அவிவில் உள்ள இஸ்ரேலிய ராணுவ நிலைகள் மீது ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தாக்குதலைத் தொடங்கியுள்ளது. கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர் வெடிப்புச் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளன. கத்தாரில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் இதுவரை 16 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பள்ளி மீது தாக்குதல்: நூற்றுக்கணக்கானோர் பலி

தெற்கு ஈரானின் மினாப் (Minab) நகரில் உள்ள சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளி ஒன்றின் மீது அமெரிக்க-இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 148 பேர் உயிரிழந்துள்ளதுடன் 95 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian), கமேனியின் படுகொலையை “ஒரு மாபெரும் குற்றம்” என்று கண்டித்துள்ளதோடு, இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். ஈராக் தலைவர் முக்தாதா அல்-சதர் கமேனியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, ஈராக்கில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தின் ‘கிரீன் ஜோன்’ பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா சாவா போட்டி இன்று!

0

தற்போது நடைபெற்று வரும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை (T20 World Cup 2026) தொடரில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இன்னும் மிச்சமுள்ளது. இருப்பினும், அது மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது.

​பிப்ரவரி 27 அன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை தோற்கடித்ததன் மூலம் பாகிஸ்தானுக்கான கதவு திறந்துள்ளது. தற்போதுள்ள நிலையில், பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்ல செய்ய வேண்டியவை இதோ:

​கட்டாய வெற்றி

​பாகிஸ்தான் தனது கடைசி ‘சூப்பர் 8’ போட்டியில் (பிப்ரவரி 28, இன்று) இலங்கை அணியை கண்டிப்பாகத் தோற்கடிக்க வேண்டும். இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் பாகிஸ்தான் தொடரிலிருந்து உடனடியாக வெளியேறிவிடும்.

​நிகர ஓட்ட விகிதம் (Net Run Rate – NRR)

​வெற்றி பெற்றால் மட்டும் போதாது, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். எனவே, நியூசிலாந்தின் நிகர ஓட்ட விகிதத்தை (+1.390) விட பாகிஸ்தான் (-0.461) அதிக ஓட்ட விகிதத்தைப் பெற வேண்டும்.

  • ​அதனடிப்படையில் பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடினால்: இலங்கை அணியை சுமார் 65 ஓட்டங்கள் (Runs) வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.
  • பாகிஸ்தான் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடினால்: இலங்கையினால் நிர்ணயிக்கப்படும் இலக்கை சுமார் 12 முதல் 13 ஓவர்களுக்குள் (7-8 ஓவர்கள் மீதமிருக்கையில்) எட்டிப் பிடிக்க வேண்டும்.

​பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற, இன்று இலங்கைக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியைப் (Big Margin Win) பதிவு செய்ய வேண்டும். இங்கிலாந்து ஏற்கனவே தனது பிரிவில் 3 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்பிட்டியில் ரிஷாட் தலைமையில் இடம்பெற்ற இப்தார் பெருவிழா!

0

புனித ரமழான் மாதம் என்பது வெறும் பசியையும் தாகத்தையும் அடக்கும் மாதமல்ல; அது இதயங்களை இணைக்கும் மாதம்.

அந்த உன்னத நோக்கத்தை பறைசாற்றும் வகையில், இன்று கல்பிட்டி- மண்டலக்குடா அல் மனார் ஜும்ஆ பள்ளிவாயலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் தலைமையில் மிகப்பிரம்மாண்டமான இப்தார் நிகழ்வு அரங்கேறியது.​

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் NTM தாஹிர் மரிக்கார் அவர்களின் ஏற்பாட்டில், இந்த நிகழ்வு வெறும் அரசியல் நிகழ்வாக அமையாமல், ஒரு குடும்ப விழாவாகவே மாறியிருந்தது.

கல்பிட்டி பகுதியே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. மக்களின் உணர்வுகளை மதிக்கும் தலைவர்களும், தலைவர்களின் அழைப்பை ஏற்று திரண்ட மக்களும் ஒரு புள்ளியில் இணைந்த காட்சி, அந்தப் பிரதேசத்தின் ஒற்றுமையை பறைசாற்றியது.​

ஊர் மக்கள், உலமாக்கள், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், ஏனைய அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் இதில் கலந்துகொண்டனர்.​

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட காட்சி, சமூக நல்லிணக்கத்தின் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்தது.​

“மக்களுக்காக உழைக்கும் தலைவன், மக்களோடு அமர்ந்து நோன்பு துறப்பதில்தான் உண்மையான திருப்தி காண்கிறான்.” – இந்த இப்தார் நிகழ்வு இந்த வரிகளுக்கு உயிரூட்டியது.​

​இன்றைய இப்தார் நிகழ்வு மற்றும் அதற்கான ஏற்பாடுகள் குறித்து அப்பகுதி மக்கள் பெரும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேர்த்தியான ஒழுங்கமைப்பு மற்றும் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்ற உபசரிப்பு முறை என அனைத்தும் பாராட்டுக்குரியதாக அமைந்தன.

​தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் மரிக்கார் ஆகியோரின் இந்த முயற்சி, கல்பிட்டி பிரதேச மக்களின் இதயங்களில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது என்பதில் ஐயமில்லை.

ஹிஸ்புல்லாஹ் எம்.பி யினால் பேரீச்சம் பழம் வழங்கிவைப்பு!

ஹிஸ்புல்லாஹ் எம்.பி யினால் பேரீச்சம் பழம் வழங்கிவைப்பு..!

புனித ரமழான் மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் ஏற்பாட்டில், இலங்கையில் உள்ள பள்ளிவாயல்கள், மதரஸாக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு பேரீச்சம் பழம் வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது.

ஹிரா பவுண்டேஷன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் இன்று (27) நடைபெற்றது.

காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி), காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

போதை ஒழிப்புக்கான தேசியத் திட்ட ஆலோசனைக் கூட்டம் புத்தளத்தில்!

0

“முழு நாட்டிற்குமான ஒரே தேசிய பணி” எனும் தொனிப்பொருளில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான புத்தளம் மாவட்ட செயல்பாட்டுக் குழுக் கூட்டம் நேற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதில் பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களின் தலையீடு மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், தற்போதைய போதைப்பொருள் ஒழிப்பு சிகிச்சை முறைகள், புனர்வாழ்வுத் திட்டங்கள், சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் மற்றும் மதுவரித் திணைக்களத்தின் அதிரடிச் சோதனைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

தேவையைக் குறைப்பதற்கான முக்கியத்துவம்:

போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு, அதன் தேவையைக் குறைப்பதற்கான (Reducing Demand) விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இக்கூட்டத்தில் விசேட முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இந்த முக்கியத்துவமிக்க ஆலோசனைக் கூட்டத்தில் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கயான் ஜனக உற்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமேல் மாகாண பிரதம அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எம். சி. கே. வன்னிநாயக்க, மேலதிக மாவட்ட செயலாளர் (அரசாங்கம்) திருமதி புபுதிகா எஸ். பண்டார, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திரு. சதுரக்க ஜயசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்:

இவர்களுடன் முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள், கல்வி மற்றும் சுகாதாரத் துறையினர், கடலோர பாதுகாப்புப் படையினர் மற்றும் அபாயகரமான மருந்துகள் கட்டுப்பாட்டு தேசிய சபை ஆகியவற்றின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

மேலும், புனர்வாழ்வு பணியகம், சமூக மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் தனியார் புனர்வாழ்வு நிலையங்களின் பிரதிநிதிகள் எனப் பல நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை வழங்கினர்.

இந்தியா, இஸ்ரேல் இடையே 27 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

0

இந்தியா, இஸ்ரேல் இடையே 27 முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானது. பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு அவரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பு கண்காட்சியை பார்வையிட்டார்.

தொடர்ந்து பிரதமர் மோடி, விஞ்ஞானிகள், தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் பல நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘காட்சிப்படுத்தப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள், புதுமை, தொடக்க நிறுவனங்கள் மற்றும் வணிக கூட்டாண்மைகளில் குறிப்பாக விவசாயம், நீர் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் இந்தியா-இஸ்ரேல் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு மகத்தான ஆற்றலைக்கொண்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம், சுகாதாரம், சைபர் பாதுகாப்பு, நீர்வளங்கள், விவசாயம் மற்றும் பல துறைகளில் இஸ்ரேலிய இளைஞர்களின் முன்னோடிப் பணிகளை பார்த்தேன். இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும், உற்பத்தி செய்யவும், தொழில்நுட்ப கூட்டாண்மைகளை உருவாக்கவும், உலகளாவிய சவால்களுக்கான தீர்வுகளை கூட்டாக உருவாக்குவதற்கு இந்தியாவின் திறமையான இளைஞர்களுடன் சேர்ந்து பணியாற்றவும் வாய்ப்புகளை ஆராய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்’ என்றார்.

சுரேஷ் சலேயின் கைது ஒரு அரசியல் சதி – பேராசிரியர் ரோஹன் குணரத்ன காட்டம்!

0

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளன.

இந்த நிலையில், புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை மற்றும் விசாரணைகளின் போக்கு குறித்து பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அரசியல் சதி என பேராசிரியர் ரோஹன் குணரத்ன சாடல்

நாட்டின் முன்னணி பாதுகாப்பு ஆய்வாளரான பேராசிரியர் ரோஹன் குணரத்ன, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையை ஒரு “அரசியல் சதி” என வன்மையாகக் கண்டித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பிற்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மிகவும் மரியாதைக்குரிய பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான சலே அவர்களைக் கைது செய்வது பாரிய அநீதியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய கைது நடவடிக்கையினால் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகளும், இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான சக்திகளும் மட்டுமே மகிழ்ச்சியடைவார்கள் என அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கொழும்பு ஆயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, இந்த விசாரணைகளை அரசியல்மயப்படுத்தாமல், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொள்ளும் விசாரணைகளைச் சுயாதீனமாக முன்னெடுக்க இடமளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

விசாரணைகள் குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

சுமார் 300 மனித உயிர்களைப் பலிகொண்ட இந்தத் தாக்குதலில் அனைத்து இன மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூரத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வருவதன் மூலமே, நாட்டில் சட்டம் மற்றும் நீதி சரியாகச் செயற்படுவதை பொதுமக்கள் உணர முடியும் எனவும், உண்மை கண்டறியப்படாவிட்டால், குற்றவாளிகள் சட்டத்திற்கு அஞ்சாமல் ஒளிந்திருக்க முடியும் என்ற தவறான முன்னுதாரணம் உருவாகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி விசாரணைகளைச் சீர்குலைக்க முயற்சிப்பதானது, தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் ஊனமுற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சி.ஐ.டி மேற்கொள்ளும் விசாரணைகளில் தர்க்கரீதியான முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பதே கத்தோலிக்க திருச்சபையினதும் பாதிக்கப்பட்ட மக்களினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, விசாரணைகளுக்குப் பல்வேறு வியாக்கியானங்களைக் கொடுத்து அதனைத் திசைதிருப்பாமல், சட்டம் தனது கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

2026 உலக கடல் புல் தின தேசியக் கொண்டாட்டம் கற்பிட்டியில்!

0

இலங்கையின் 2026ஆம் ஆண்டுக்கான உலக கடல் புல் தின தேசியக் கொண்டாட்டம், “கடல் புற்கள் சமுத்திர பல்லுயிர்த்தன்மை மற்றும் மீன்பிடித்தொழிலை வளப்படுத்துகின்றன” என்ற கருப்பொருளின் கீழ் கற்பிட்டியில் நடைபெறவுள்ளது.

மார்ச் மாதம் முதலாம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் உலக கடல் புல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விசேட நிகழ்வு கற்பிட்டி கடலோர சுற்றுச்சூழல் மையத்தில் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை இடம்பெறவுள்ளது.

முக்கிய பங்கேற்பாளர்கள் மற்றும் ஏற்பாடுகள்

சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் (CC&CRMD) இணைந்து இந்த தேசிய நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன. இதில் கௌரவ சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி அவர்கள் பிரதம அதிதியாகவும், சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவர்களுடன் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி. டெர்னி பிரதீப் குமார மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள், கடல்சார் விஞ்ஞானிகள், மீனவ சமூக பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கையில் புத்தளம் முதல் யாழ்ப்பாணம் வரையிலான வடமேற்கு கடற்கரைப் பகுதிகளில் சுமார் 15 வகையான கடல் புல் இனங்கள் பதிவாகியுள்ளன. இந்த நீருக்கடியில் உள்ள புல்வெளிகள் மீன்கள், ஆமைகள் மற்றும் அழிந்து வரும் நிலையில் உள்ள கடல் பசுக்கள் (Dugongs) போன்ற உயிரினங்களுக்கு அத்தியாவசிய வாழ்விடங்களை வழங்குகின்றன. அத்துடன், இவை வளிமண்டலத்திலுள்ள கார்பனை உறிஞ்சி சேமிக்கும் இயற்கை ‘கார்பன் தொட்டிகளாகவும்’ (Carbon sinks), கடற்கரை அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரண்களாகவும் தொழிற்படுகின்றன.

இந்த 2026 தேசிய வேலைத்திட்டத்தில்

  • மீனவ சமூகத்தினரிடையே கடல் புல் அமைப்புகளின் பொருளாதார மற்றும் சூழலியல் மதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கடல்சார் பாதுகாப்பு குறித்துக் கற்பித்தல்.
  • சுற்றுச்சூழல் சவால்கள் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை வெளிப்படுத்துதல்.
  • பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் சமூகப் பங்களிப்பை ஊக்குவித்தல்.

நிகழ்வில் நிபுணர்களின் விசேட உரைகள், கடல் புல் சூழலியல் மற்றும் மறைந்திருக்கும் நீருக்கடி உலகம் பற்றிய விளக்கக்காட்சிகள் இடம்பெறவுள்ளன.

மேலும், கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் இளைஞர்களுக்கான செயல்பாடுகள் மூலம் கடல் புல் பாதுகாப்பின் அவசியம் வலியுறுத்தப்படும். சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலை நம்பியிருக்கும் சமூகங்களின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆரோக்கியமான கடல் புல் படுக்கைகளைப் பாதுகாப்பது ஒரு பொறுப்பாகவும் தேவையாகவும் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொண்டாட்டமானது, கடல்சார் பல்லுயிர்த்தன்மை பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான இலங்கையின் தேசிய மற்றும் சர்வதேச அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

A.R.M. ஹலீம்
அலுவலகப் பொறுப்பாளர், கல்பிட்டி கரையோர சுற்றாடல் நிலையம், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் (CC&CRMD).
குடாவ, கல்பிட்டி.

இந்தியாவில் மறைந்திருந்த பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கைது!

0

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். 

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 

மும்பையில் இருந்து இன்று அதிகாலை 5.56 மணிக்கு வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான யுல்.எல் 142 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் அழைத்து வரப்பட்டிருந்தார். 

பலபிட்டிய நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட திறந்த பிடியாணையைத் தவிர்த்து, இந்தியாவிற்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பொடி லெசி இன்று காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) இரண்டு அதிகாரிகள் இன்று காலை குறித்த சந்தேக நபரை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வந்தனர்.

சந்தேக நபரின் பின்னணி மற்றும் குற்றச்சாட்டுகள்

இச்சந்தேக நபர் இலங்கையின் தென் மாகாணத்தில், குறிப்பாக மீட்டியகொட மற்றும் அம்பலாங்கொட பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் மேலதிக விசாரணைகளுக்காக காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாடுகளுக்கிடையிலான நாடுகடத்தல் சட்டங்கள், பரஸ்பர உடன்படிக்கைகள் மற்றும் நாடுகளுக்கிடையிலான நம்பிக்கையின் அடிப்படையில் இவரை இலங்கைக்கு கொண்டு வர முடிந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையானது பொதுப் பாதுகாப்பு அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நேரடி தலையீட்டின் கீழ் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச பொலிஸாரின் (Interpol) ‘சிவப்பு அறிவித்தல்’ (Red Notice) மூலம் இதுவரை 29 சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சிவப்பு அறிவித்தல் இன்றியே, அந்தந்த நாடுகளின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்ட மீறல்கள் மற்றும் இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் இன்றைய சந்தேக நபரையும் சேர்த்து மொத்தம் 14 பேர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

நாட்டில் போதைப்பொருள் விநியோகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் “நாடே ஒன்றிணைந்த தேசியப் பணி” (Rata Ma Ekata) எனும் வலுவான பொறிமுறையின் ஒரு அங்கமாகவே இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

தலைமறைவாக இருக்கும் ஏனைய குற்றவாளிகளையும் 2026 ஆம் ஆண்டிற்குள் இலங்கைக்குக் கொண்டு வர அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.