Friday, June 19, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 53

வென்னப்புவ பாடசாலை மாணவிகள் மூவர் வைத்தியசாலையில்!

0

ஜூட் சமந்த

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் வழக்கத்திற்கு மாறான சுவையுடன் இருந்த நீர் அருந்தியதாகக் கூறப்படும் எட்டாம் தரத்தில் கல்வி பயிலும் 12 வயதுடைய மூன்று மாணவிகள், மேலதிக இரத்தப் பரிசோதனைக்காகச் சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் (JMO) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 3ஆம் திகதி பாடசாலை ஆரம்பமானபோது காலைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்த மூன்று மாணவிகளும், தமது வகுப்பறைக்குச் சென்று தண்ணீர் அருந்த முற்பட்டபோது அங்கு ஒரு மாணவியின் தண்ணீர் போத்தலில் அடையாளம் தெரியாத மாத்திரை போன்ற ஒரு பொருள் இருப்பதைக் கண்ட மற்றுமொரு மாணவி, வேறொரு மாணவியின் போத்தலில் இருந்த நீரை அருந்தியுள்ளார். எனினும், அந்த நீரும் வழக்கத்திற்கு மாறான சுவையுடன் இருந்ததை உணர்ந்த மாணவிகள், இது குறித்துத் தமது வகுப்பு ஆசிரியரிடம் உடனடியாகத் தெரிவித்துள்ளனர்.

வகுப்பு ஆசிரியர் அந்த மாணவிகளை மாரவில பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அவர்களைப் பரிசோதித்த வைத்தியர், மாணவிகளுக்கு எவ்வித ஒவ்வாமை அல்லது பாதிப்பு அறிகுறிகளும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். பின்னர் அன்று மாலை வீடுகளுக்குச் சென்ற மாணவிகள் இது குறித்துத் தமது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்துப் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கும் மாணவிகளைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர்களுக்குப் பாதிப்புகள் எதுவுமில்லை என்பதை உறுதிப்படுத்திய போதிலும், மேலதிக விசாரணைக்காக அவர்களது இரத்த மாதிரிகளைப் பெற்றுச் சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மாணவிகள் அருந்தியதாகக் கூறப்படும் நீரின் மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு (Government Analyst) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்!

0

ஜூட் சமந்த

கடலோர பாதுகாப்புப் படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவர்களைச் சுட்டுக் கொன்றுவிடுவோம் என அச்சுறுத்திய ஆறு பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் வென்னப்புவ – வெள்ளமங்கரையைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஆவார். இச்சம்பவம் கடந்த மார்ச் 4ஆம் திகதி மாலை வென்னப்புவ – சிந்த்ராத்ரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சிலாபம் முகாமில் பணிபுரியும், சிந்த்ராத்ரிய மா ஓயா கடலோர பாதுகாப்பு உப பிரிவைச் சேர்ந்த இரண்டு புலனாய்வு அதிகாரிகள் கடல் மார்க்கமாக இடம்பெறும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகள் குறித்துக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அங்கு வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர், அதிகாரிகளை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியதுடன், அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

அச்சுறுத்தல் விடுத்தவர்களில் ஒருவரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவர் வென்னப்புவ – வைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், ஏற்கனவே கடல் மார்க்கமாக சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்டதற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அதிகாரிகள் இது குறித்து வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதோடு, அவர் பயன்படுத்திய மோட்டார் கார் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள ஏனைய ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் தலைவரின் மறைவு: அரசின் மௌனம் குறித்து ஹக்கீம் கடும் விமர்சனம்!

0

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற சூழலில், ஈரானின் உச்ச தலைவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் கடைபிடிக்கும் மெத்தனப் போக்கை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஈரானியத் தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திடுவது மட்டுமே போதுமானதல்ல என்று தெரிவித்த ஹக்கீம், இலங்கைக்கு அனைத்து இக்கட்டான காலங்களிலும் உறுதுணையாக இருந்த ஈரானின் தலைவருக்கு நேர்ந்த இந்த துயரத்தை, சர்வதேச சட்ட மீறலாகக் கருதி அரசாங்கம் பகிரங்கமாகக் கண்டிக்கத் தவறிவிட்டது என்று மிகவும் கடுமையாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மீதான அச்சம் காரணமாகவே இலங்கை அரசாங்கம் இத்தகைய அமைதியைக் கடைபிடிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேபோன்ற ஒரு சூழல் இந்தியாவிலும் நிலவுவதாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இது குறித்து மௌனம் காப்பதாகத் தெரிவித்த ஹக்கீம், இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி, இது ஒரு “நடுநிலைமை அல்ல, மாறாக அடிமைத்தனம்” என்று விமர்சித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக முதல்வர் உள்ளிட்ட பல இந்திய மாநில முதல்வர்கள் இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தில் கூட இது குறித்து முறையான அறிக்கையை வெளியிடாதது வருத்தத்திற்குரியது எனத் தெரிவித்தார்.

சர்வதேச சட்டங்களை மீறி ஈரானிய தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்து வெளிவிவகார அமைச்சரிடம் இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பியபோது, தாம் ஈரான் தூதரகத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டதாக தெரிவித்த கருத்து வெக்கமான ஒரு செயல் என குற்றம் சாட்டினார்.

இலங்கை இக்கட்டான நிலையில் இருந்தபோதெல்லாம் உதவிய ஈரானுக்காக குரல் கொடுக்காமல், அமெரிக்காவின் மீதான அச்சம் காரணமாக அரசாங்கம் அமைதி காப்பதாக அவர் விமர்சித்தார்.

“அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிச்சலும், மனிதநேயமும் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீது உக்கிரமான தாக்குதல் – 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து சனிக்கிழமை தொடங்கிய தாக்குதல் இன்று ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் இஸ்ரேலிய விமானப்படை கடந்த ஒரே நாளில் மட்டும் ஈரானின் 31 மாகாணங்களில் 24 மாகாணங்கள் மீது 1,200-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானில் இதுவரை சுமார் 787 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தென்கிழக்கு ஈரானில் உள்ள மினாப் (Minab) நகரில் ஒரு சிறுமிகள் தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 180 குழந்தைகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவி வருகிறது. இதுவரை பஹ்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என ஒன்பது நாடுகளுக்கு இந்தத் தாக்குதல்கள் பரவியுள்ளன. மேலும், சைப்ரஸில் உள்ள பிரிட்டன் ராணுவத் தளத்தின் ஓடுபாதையையும் ஈரானின் ட்ரோன் தாக்கியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளின் பாதிப்பு

  • இஸ்ரேல்: ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் பெய்ட் ஷேமேஷ் (Beit Shemesh) பகுதியில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டெல் அவிவ் நகரில் குறைந்தது 40 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
  • லெபனான்: லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 246 பேர் காயமடைந்துள்ளனர். இதற்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் ஹைஃபா அருகே உள்ள ராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகம்: அமீரகத்தில் ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் ஒரு பாகிஸ்தானியர் மற்றும் ஒரு ஆசிய நாட்டவர் என இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். துபாய் மற்றும் பாம் ஜுமேரா பகுதிகளிலும் கட்டிடச் சேதங்கள் மற்றும் காயங்கள் பதிவாகியுள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 19 இடங்களில் அமெரிக்கா தனது ராணுவத் தளங்களை இயக்கி வருகிறது. தற்போது சுமார் 40,000 முதல் 50,000 அமெரிக்க வீரர்கள் கத்தார், பஹ்ரைன், குவைத், யுஏஇ மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தளங்கள் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றன.

அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து மோஜ்தபா கமேனி புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ள சூழலில், தற்போது நடைபெற்று வரும் இந்த உக்கிரமான போர் மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றியமைக்கும் என அஞ்சப்படுகிறது.

ஈரானில் அதிரடி திருப்பம்:புதிய உச்ச தலைவராக மோஜ்தபா கமேனி?

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் பெரும் அரசியல் மாற்றங்களும் ராணுவக் குழப்பங்களும் நிலவி வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில், ஈரானின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய உச்ச தலைவர் நியமனம்

ஈரான் சர்வதேச ஊடகங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, புரட்சிகர பாதுகாப்புப் படையினரின் (IRGC) கடும் அழுத்தத்திற்கு மத்தியில், அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி அடுத்த உச்ச தலைவராக ‘நிபுணர்கள் பேரவையால்’ (Assembly of Experts) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வழக்கமாக உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இந்தப் பேரவைக்கு இருந்தாலும், தற்போது வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அவர்களால் முறையாகக் கூட முடியவில்லை. இதன் காரணமாக, சட்ட ரீதியான நடைமுறைகளைத் தவிர்த்து, இந்த நியமனத்தை விரைந்து முடிக்க புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தீவிரமாக முயன்று வருகிறது.

ராணுவக் கட்டமைப்பில் சீர்குலைவு

அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரானின் பாதுகாப்பு மற்றும் ராணுவக் கட்டமைப்பில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்டளைத் தளபதிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், களத்தில் முடிவுகளை எடுப்பதிலும், ஒருங்கிணைந்து செயல்படுவதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன. மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களுக்குப் பயந்து, பல ராணுவ வீரர்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் தங்களின் தளங்களுக்குத் திரும்ப அஞ்சுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹமதி நெஜாத் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்ததாகத் தெரிகிறது. அவர் காயமின்றி தப்பியதாகவும், தற்போது பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இஸ்ரேலியத் தாக்குதலின் போது அவர் கொல்லப்பட்டதாகப் பரவிய செய்திகளுக்கு மத்தியில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் தற்போதைய நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என்று புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) பெரிதும் அஞ்சுகிறது. ஒருபுறம் வான்வழித் தாக்குதல்கள், மறுபுறம் உள்நாட்டுப் புரட்சி என ஈரான் அரசு தற்போது இருமுனை நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

இந்தச் சூழல் வரும் நாட்களில் ஈரானின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்பிட்டி பகுதியில் டித்வா நிவாரண கொடுப்பனவு இன்னும் இழுபறியில்!

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் தளுவை. நிர்மல்புர கிராம சேவையாளர் பிரிவில் டித்வா புயல் அனார்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண கொடுப்பனவு இன்னும் பலருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று தளுவையின் விகாராதிபதி தலைமையில் இடம்பெற்றது

இந்த கவனயீர்ப்பு போராட்டம் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது.

இதற்கு தலைமை தாங்கிய தளுவை விகாராதிபதி கருத்துத் தெரிவிக்கையில்;

டித்வா புயல் அனர்த்ததினால் தளுவை மற்றும் நிர்மல்புர கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மட்டுமே நிவாரண கொடுப்பனவு 25,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலருக்கு வழங்கப்படாமல் உள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.

மேலும் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் நிரந்தர பிரதேச செயலாளர் நியமிக்கப்படாமல் நீண்ட நாட்களாக அதற்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் அதன் காரணமாக பதில் கடமைபுரியும் கற்பிட்டி பிரதேச உதவிச் செயலாளர் பீ.ஜீ.எஸ் என் பிரியதர்ஷினி மற்றும் புத்தளம் மாவட்ட அத்தியட்சகர் ஆகியோரிடம் இது பற்றிய முறைப்பாடு முன்வைக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

இருப்பினும் அதற்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த வெயிலையும் பொருட்படுத்தாது தினசரி கூலித் தொழில் செய்யும் மக்களுக்காக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முனெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது விடயமாக கற்பிட்டி பிரதேச பதில் உதவிச் செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினியிட ம் வினவியபோது;

நிவாரண கொடுப்பனவுகள் ஜனவரியில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதுடன் கொடுப்பனவு பெறத் தகுதியற்றவர்களும் விண்ணப்பத்திருந்த நிலையில் தளுவை, நிர்மல்புர கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தகுதியானவர்களை தெரிவு செய்யும் முகமாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் அதிகாரிகளுடன் கிராம அனர்த்த குழுவினர் இணைந்து தகுதியானவர்கள் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அக்குழுவினரின் இறுதி அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை (03) காலையிலேயே கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் அந்த அறிக்கையின்படி தளுவை, நிர்மல்புர கிராமத்தில் இன்னும் 30 குடும்பங்களுக்கான 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வியாழக்கிழமை (05) வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் நடந்த பெரும் மோசடி அம்பலம்!

0

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) கையளித்துள்ளது. 

சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பான பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கை, குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் விடுத்த பணிப்புரைக்கு அமைவாக, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தலைமையிலான உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் பணிப்புரைக்கமைய, தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்திருந்தது. 

நிர்ணயிக்கப்பட்ட தரத்தை பூர்த்தி செய்யாத நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதால், பொதுமக்களுக்கு 1.8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். 

தரமற்ற நிலக்கரியானது நேரடி நிதி இழப்புகளை ஏற்படுத்தியது மட்டுமன்றி, மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாட்டுத் திறன் குறித்தும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அலிகாமெய்னியின் கொலை: தேசங்களின் இறைமைகளில் விழுந்த பேரிடி!

0

ஏகாபத்தியவாதிகள் ஈரான் மீது நடத்திய ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ,ஈரான் மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு பூரண ஆதரவளிப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அலிகாமெய்னி கொல்லப்பட்ட விடயம் ஆழ்ந்த அதிர்ச்சியளித்துள்ளது. இந்த துயரமிகுந்த தருணத்தில், ஈரானியர்களுக்கு இதயபூர்வமான அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.

இந்தக் கொலையானது, தனிப்பட்ட ஒரு தலைவரினதோ அல்லது தளபதிகளதோ கொலைகளல்ல. தேசங்களின் ஆள்புல ஒருமைப்பாடு, தனித்துவம் மற்றும் நாடுகளின் இறைமைக்கு எதிரான தாக்குதலாகவே உள்ளது.

இதனால்,மத்தியகிழக்கு நாடுகள் எதிர்பாராத ஸ்திரத்தை இழந்துள்ளதுடன் பாரிய குழப்பத்திலும் மூழ்கியுள்ளன. சர்வதேச ஒழுங்கு விதிகளையும் சட்டத்தையும் மீறி இக்கொடூரம் நடந்துள்ளது.

இந்நிலையில் தொடர்ந்தும் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளதா ல், மத்தியகிழக்கில் வன்முறைச்சூறாவளி  விஸ்வரூபமாடுகிறது. மட்டுமன்றி அங்குள்ள நாடுகள் பலவற்றை தீக்கிரையாகவும் இந்தக் கொந்தளிப்புகள் மாற்றியுள்ளன.சுதந்திர தேசத்தை இல்லாதொழிப்பதற் கான அப்பட்டமான அத்துமீறல்களே  இவை.இந்த அத்துமீறிய அராஜகங்கள் ஒருபோதும் நீதிக்கு முன்னால் நியாயப்படுத்த முடியாதவை.

ஒவ்வொரு நாடுகளதும் இறைமை மற்றும் ஒருமாப்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.எந்த நாடுகளும் சுதந்திர நாடொன்றில் அத்துமீறிச் செயற்படுவதை ஏற்க முடியாது. ஜனநாயகக் கட்டமைப்பில் முறையாக கட்டமைக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில்,இந்த அத்துமீறல்களை வன்மையாக கண்டிக்கிறோம். மத்தியகிழக்கிலும் அமைதியே அவசியம்.இந்நாடுகளின் உரிமைகள் மற்றும் இறைமைகளும் பாதுகாக்கப்படுவதே அமைதிக்கு அடித்தளமிடும்.

ஆதரவு என்ற போர்வையில், எல்லாவற்றையும் அள்ளிச்செல்லும் கபட அரசியலுக்கு, மத்தியகிழக்கு மண்டியிடவும் கூடாது.உரிமைகள் களவாடப்படுவது மற்றும் இறைமைகள் அடிமைப்படுத்தப்படுவதற்கு  ஜனநாயகத்தில் இடமில்லை.எனவே,மத்தியகிழக்கில் தீவிரமடைந்துள்ள வன்முறைகளை பேச்சுவார்த்தைகளூடாக தீர்த்து வைப்பதையே எமது கட்சி விரும்புகிறது.  

ஈரானின் ஒருமைப்பாடும் ஆள்புல எல்லைகளும் பாதுகாக்கப்படுவதற்கு எமது கட்சி பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும்.ஆக்கிரமிப்பு வெறித்தனம் மற்றும் படுகொலைகளால் சமாதானம்,ஸ்திரம் மற்றும் நியாயம் என்பவற்றை அடைந்திவிட  முடியாது.இவ்விடயத்தில் ஜனநாயகத்தை நேசிப்போர் தௌிவுடன் செயற்பட வேண்டும். என்றார் 

இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தல்!

0

மத்திய கிழக்கில் நிலவும் தீவிரமான போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்களைத் தொடர்ந்து, இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ள ஹோட்டல்களுக்குப் பாதுகாப்பை அதிகரிக்க இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பில் உள்ள முக்கிய வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் நடமாடும் இடங்களைப் பாதுகாக்குமாறு பொலிஸ் மா அதிபர் (IGP) அனைத்துப் பிரிவுகளுக்கும், குறிப்பாகச் சுற்றுலாப் பொலிஸ் பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளார். போராட்டக்காரர்கள் தூதரக வளாகங்களுக்குள் நுழைய முயல்வதைத் தடுப்பதிலும், வன்முறைப் போராட்டங்கள் வெடிக்காமல் கட்டுப்படுத்துவதிலும் பொலிஸார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள சாபாத் (Chabad) மையங்களுக்கு 24 மணி நேரப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையில், போதிய எண்ணிக்கையிலான பொலிஸ் அதிகாரிகள் இல்லாதது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்று வரும் “பிக் மேட்ச்” (Big Match) கிரிக்கெட் போட்டிகளுக்கான கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்காகப் பெருமளவிலான அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதே இதற்குக் காரணமாகும். இருப்பினும், கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்தவுடன், அந்த அதிகாரிகள் மீண்டும் தூதரகங்கள் மற்றும் ஹோட்டல்களின் பாதுகாப்பு வளையங்களை வலுப்படுத்த அனுப்பப்படுவார்கள் என்று பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

சர்வதேச சூழலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்க முயன்ற வன்முறைப் போராட்டங்களில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கையிலும் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், ஈரானில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால், உலகெங்கிலும் உள்ள தனது நாட்டு குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையின் விமான நிலையப் பாதுகாப்பு வழக்கம் போல் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பாக அவர்கள் தங்கியுள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பொதுப் பாதுகாப்பு அமைச்சு இந்த ஒட்டுமொத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கண்காணித்து வருவதாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பின் தூதரகப் பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பொலிஸாரின் நடமாடும் ரோந்துப் பணிகள் (Mobile Patrols) பகல் மற்றும் இரவு நேரங்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை அடுத்து, அங்குள்ள அனைத்து தூதரக சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கடல் கண்ணிவெடி அச்சுறுத்தலால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூதரகங்கள் மூடல் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

சவுதி அரேபியாவின் ரியாத், ஜித்தா மற்றும் தஹ்ரான் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தூதரகப் பணிகள் மார்ச் 3, 2026 அன்று முதல் காலவரையறையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. தூதரக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அங்குள்ள பணியாளர்கள் மற்றும் அமெரிக்க குடிமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு (Shelter in place) உத்தரவிடப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்காகக் கூட தூதரகப் பகுதிகளுக்கு வர வேண்டாம் என்று குடிமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க குடிமக்கள் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களை முறையாகப் பராமரிக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

மறுபுறம், ஈரானிய கடற்படையால் ஹார்முஸ் ஜலசந்தியில் வைக்கப்படக்கூடிய கடல் கண்ணிவெடிகள் (Sea mines) குறித்து அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு துணைச் செயலாளர் மைக்கேல் முல்ராய் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பாதை வழியாகவே உலகின் பெரும்பகுதி எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படுவதால், இது மிக முக்கியமான கடல்வழிப் பாதையாகக் கருதப்படுகிறது.

ஈரான் இந்தப் பாதையில் கண்ணிவெடிகளை வைப்பது எளிது என்றும், ஆனால் அவற்றை அகற்றி மீண்டும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யப் பல மாதங்கள் ஆகலாம் என்றும் முல்ராய் தெரிவித்துள்ளார். இதனால் கப்பல்களுக்கான காப்பீட்டு நிறுவனங்கள் அந்தப் பகுதிக்குச் செல்லும் கலன்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் போக்கு நீடித்தால் உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது:

  • எரிசக்தி தடை: ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டால், உலக நாடுகளுக்குச் செல்லும் எரிசக்தி விநியோகம் முற்றிலுமாக நின்றுவிடும்.
  • பொருளாதாரச் சரிவு: வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தில் இது ஒரு பேரழிவை ஏற்படுத்தும்.
  • விலையேற்றம்: ஏற்கனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், இந்தப் போக்குவரத்துத் தடை விலையை மேலும் உச்சத்திற்குத் தள்ளும்.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான நேரடித் தாக்குதல்களும், லெபனான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் நிலவும் பதற்றமும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஒரு பெரும் போர் முனையாக மாற்றியுள்ளன. சர்வதேச சமூகம் இந்த எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க மாற்று வழிகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.