Sunday, March 22, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 78

சீரற்ற காலநிலையால் 42 ரயில் சேவைகள் இரத்து!

0

மலையக ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டமை காரணமாக இன்று (21) கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிடப்பட்டிருந்த கண்டி, மாத்தளை மற்றும் பிராந்திய ரயில் சேவைகள் உட்பட 22 பயணிகள் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை மற்றும் நானுஓயா வரை இயக்க திட்டமிடப்பட்ட 4 ரயில் சேவைகள் கண்டி ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த சேவைகள் திட்டமிட்ட நேரத்தில் கண்டி ரயில் நிலையத்திலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேலும், நானுஓயா மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படும் 04 ரயில் சேவைகள் பேராதனை மற்றும் கண்டி வரை பயணிக்கவுள்ளன. 

மலையக ரயில் பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் இந்த மூன்று நாட்களில் இரத்து செய்யப்பட்ட மொத்த ரயில் சேவைகளின் எண்ணிக்கை 42 ஆகும்.

புத்தளம் மாவட்டத்தில் 16 குடும்பங்கள் பாதிப்பு!

0

தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை சுமார் 16 குடும்பங்களை சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம் (NDRSC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களை சேர்ந்த 62 பேர் குறித்த சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்கொடுவ, மஹவெவ, நவகத்தேகம மற்றும் நாத்தாண்டி பிரதேச செயலகங்களுக்கு உற்பட்ட 16 குடும்பங்களை சேர்ந்த 62 பேர் இவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நவகத்தேகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட இங்கினிமிட்டி கிராம சேவகர் பிரிவில் உள்ள ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாத்தாண்டிய பிரதேச செயலகத்தின் தெற்கு முது கட்டுவ பிரிவில் உள்ள கால்நடை அலுவலக வளாகம் நீரில் மூழ்கியுள்ளதுடன், பல மாடி கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

YMMA பேரவையின் 75வது ஆண்டு மாநாடு கொழும்பில்!

0

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கங்களின் பேரவையின் (YMMA) 75வது ஆண்டு மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு.

ஒக்டோபர் 20ஆம் திகதி கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற, அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கங்களின் பேரவையின் (YMMA) 75வது ஆண்டு மாநாட்டில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்துகொண்டார்.

முன்னாள் அரச சிவில் உத்தியோகத்தரும் செனட்டருமான கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட YMMA, இளைஞர்களின் சமூக ஈடுபாட்டின் மூலம் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நிறுவப்பட்டதாகும். பல ஆண்டுகளாக இந்த நோக்கு பேணப்பட்டு வருகின்றது. பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டு, ஒரு தொண்டு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள YMMA, சமூக நலன் மற்றும் சமூக மேம்பாட்டின் தூணாக விளங்குகின்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

“கல்வி, இளைஞர் அபிவிருத்தி, அனர்த்த நிவாரணம் , உதவிகள் தேவைப்படுகின்ற பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு வலுவூட்டுதல், சமூக நலன்புரி சேவை ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் செயல்திட்டங்கள் மூலம், இந்த அமைப்பு ஆயிரக்கணக்கான தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் ஆதரவளித்து வருகின்றது.

இளம் முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் (YWMA) ‘பெண்களை வலுவூட்டல் திட்டம், ‘மீண்டும் பாடசாலைக்குத் திட்டம்’ போன்ற முயற்சிகள் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவளிப்பதில் YMMA முக்கியப் பங்காற்றி வருகின்றமை பாராட்டத்தக்கது. இவ்வாறான செயல்திட்டங்கள் தனி மனித வளர்ச்சிக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைகின்றன.

உங்களது உறுப்பினர்கள் மற்றும் கிளைகளின் இந்த வருடாந்த அங்கீகாரமானது, மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காகத் தமது நேரத்தையும், ஆற்றலையும், வளங்களையும் வழங்கியவர்களின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

75 ஆண்டுகால சேவையைப் பற்றி நாம் சிந்திக்கும் போது, எதிர்காலத்தைப் பற்றியும் பார்க்க வேண்டும். வேலையின்மை மற்றும் சமூகப் புறக்கணிப்பு உட்பட இளைஞர்கள் இன்று எதிர்கொள்ளும் சவால்களுக்கு, அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் YMMA போன்ற அமைப்புகளுக்கு இடையில் வலுவான கூட்டுறவுத் தேவைப்படுகின்றன.

குறிப்பாக சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை முடித்த பின், பெண் பிள்ளைகளுடன் ஒப்பிடுகையில் ஆண் பிள்ளைகளில் பெருமளவானோர் உயர் கல்வியை விட்டு விலகிக் கொள்கின்றமை தரவுகள் அடிப்படையில் பார்க்கின்ற பொழுது தெரிய வருகின்றது. இதனால் இளம் வயதில் இருக்கும் ஆண்கள் உயர் கல்வி மற்றும் தொழில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆகையினால் அவர்களுக்கான வழிகாட்டுதல், ஊக்குவித்தல் ஆகியன மூலம் இளைஞர்களுக்கு அவர்களது கல்விப் பயணத்தைத் தொடர ஆதரவளிக்க வேண்டியது கட்டாயத் தேவையாக இருக்கின்றது.

ஆகையினால் பொறுப்பும், திறமையும் மிக்க இளைஞர் சமுதாயத்தினை உருவாக்குவதில் YMMA இன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நான் பாராட்டுகிறேன். இந்த முயற்சிகளின் மூலமே சமத்துவம், புரிதல் மற்றும் சம வாய்ப்புகள் மிக்க சமூகத்தை உருவாக்குதல் சாத்தியமாகும், எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் , பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், YMMA உறுப்பினர்கள் உள்ளிட்ட விசேட அதிதிகளும் கலந்துகொண்டனர்.

முன்னாள் அமைச்சர் ஹரினுக்கு விஷேட பதவி!

0

உடன் அமலுக்கு வரும் வகையில் முக்கிய பதவி ஒன்றை முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஐக்கிய தேசிய கட்சி வழங்கியுள்ளது. 

அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட பதவியின் பொறுப்பு, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவற்றை ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுத்துவதாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்யும் 1,000 கூட்டங்களுக்கும் ஹரின் பெர்னாண்டோவே பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!

0

கடும் காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த எச்சரிக்கை அறிவிப்பானது எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள குறித்த அறிக்கையில் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 

நாட்டின் கிழக்கே உள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் தற்போது குறைந்த அழுத்தப் தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. 

இது மேலும் வலுவடைந்து இலங்கைக்கு அருகே வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றானது (55–65) கிமீ வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும். 

இதேவேளை கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிங்கிரிய பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான விபத்து!

0

(உடப்பு க.மகாதேவன்)

சிலாபம் வாரியபொல வீதியில் பிங்கிரிய நகரில் இன்று செவ்வாய்க்கிழமை
(21) லொறி ஒன்றுடன் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நாட்டில் மிக மோசமான காலநிலை நிலவிவரும் நிலையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில், வேன் சாரதி கவனக்குறைவாக வண்டியை செலுத்தியதில் தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் சாரதிகள் இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ள நிலையில் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பிங்கிரிய போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தப்போவ நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் திறப்பு!

0

ஜூட் சமந்த

பெய்து வரும் அதிக மழை காரணமாக, தப்போவ நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் இன்று 21 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு தலா 01 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டதாக புத்தளம் நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்தார்.

திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து வெளியேறும் நீர் மீ ஓயாவில் சங்கமிக்கின்றது.

தெதுரு ஓயாவின் 04 வான் கதவுகள் தலா 06 அடி உயரமும், 02 வான் கதவுகள் தலா 02 அடி உயரமும் திறக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து தெதுரு ஓயாவில் வினாடிக்கு 16,900 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்றும் நீர்ப்பாசனத் துறை கூறுகிறது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் தலா 06 அடி உயரமும் திறக்கப்பட்டுள்ளன. இந்த வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 6832 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதற்கிடையில், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் தலா 06 அடி உயரமும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 2898 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீர் கலா ஓயாவில் வெளியேற்றப்படுவதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமாக இருக்குமாறு புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

முக்கிய விருது பெற்ற கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ்!

இன்று (20), Cinnamon Life – City of Dreams வளாகத்தில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் (All Ceylon YMMA Conference) 75வது ஆண்டு மாநாட்டில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.

சமூகத்திற்கும் நாட்டிற்கும் விலைமதிப்பற்ற மற்றும் பெறுமதியான சேவைகளை வழங்கியதற்கான அங்கீகாரமாக, “The Y Personality of the Year 2025” என்ற விருதை இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

— ஊடகப் பிரிவு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

0

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அறிமுகமாகிறது புதிய வடிவிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

0

பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டாததால் பல இடங்களில் கேலரிகள் காலியாகக் கிடக்கும் நிலையில் இளையோர் பட்டாளத்தை ஈர்க்கும் வகையில், புதிய டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் அறிமுகமாகிறது.

பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட்டைக் காண மைதானங்களில் கூட்டம் குறைந்துவிட்ட நிலையில், 13 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்களை ஈர்க்கும் ஒரு புதிய முயற்சியாக ‘டெஸ்ட் டுவென்டி’ வடிவம் அறிமுகமாகியுள்ளது.

இது பாரம்பரிய ஆட்டத்தின் ஆழத்தையும், டி20-யின் அதிரடியையும் கலந்து கட்டிய ஒரு சூப்பர் வடிவமாக இருக்கும் என கருதப்படுகிறது. இது மொத்தமே 80 ஓவர்களை கொண்ட ஆட்டம். ஒவ்வொரு அணியும் தலா 20 ஓவர்களைக் கொண்ட இரண்டு இன்னிங்ஸ் விளையாட வேண்டும். ஒரேநாளில் விறுவிறுவென நான்கு இன்னிங்ஸ்களும் நிறைவடையும். டெஸ்ட் கிரிக்கெட்டின் மிக முக்கிய அம்சமான ஃபாலோ-ஆன் விதி இங்கும் உண்டு. முதல் இன்னிங்ஸில் 75 ரன்களைக் குறைவாகப் பெறும் அணி ஃபாலோ-ஆன் விளையாட நேரிடும்.

ஆட்டம் வழக்கமான டெஸ்ட் கிரிக்கெட் போலவே வெள்ளை உடையில், சிவப்புப் பந்துடன் நடைபெறும். கேப்டன்களுக்குச் சவால் விடுக்கும் வகையில், ஒரு போட்டியில் அதிகபட்சமாக ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒவ்வொருவரும் அதிகபட்சம் 8 ஓவர்கள் வீச முடியும். ஆட்டத்தின் முடிவில் வெற்றி, தோல்வி, சமன், மற்றும் டிரா என நான்கு முடிவுகளும் சாத்தியம். இந்தப் புதிய வடிவத்தை விளையாட்டுத் தொழில்முனைவோர் கௌரவ் பஹிர்வானி உருவாக்கியுள்ளார்.

இதற்குப் பின்னால் ஜாம்பவான்கள் பட்டாளமே உள்ளது. சர் கிளைவ் லாயிட், ஏபி.டி.வில்லியர்ஸ், மேத்யூ ஹேடன், ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆலோசனைக் குழுவில் உள்ளனர்.

முதல் சீசன் ஜனவரி 2026இல் இந்தியாவில் தொடங்குகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட ஆறு சர்வதேச அணிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெற்றால், பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் என்னவாகும்? இது காலத்திற்கேற்ப கிரிக்கெட்டைத் தகவமைத்துக்கொள்ளும் தொலைநோக்குத் திட்டமா அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கும் முன்னெடுப்பா என்பதற்கு காலம் பதில்சொல்லும்!