காட்டு யானைகள் சில மக்களுக்கு பயன்தரும் பல தென்னை மரங்களை நேற்றிரவு நாசம் செய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மணியங்குளம் கிராமத்திற்கு இரவு வேளைகளில் காட்டு யானைகளால் மக்களின் பயன் தரு தென்னை மரங்கள் தொடர்ச்சியாக அழித்து வருகின்றன.
நேற்றிரவு புகுந்த காட்டு யானை 13ற்கு மேற்பட்ட தென்னை மரங்களை அழித்துள்ளது. குறித்த கிராமத்தில் ஒரு மாதத்தில் மாத்திரம் 80ற்கு மேற்பட்ட தென்னைகளை அழித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
உரிய அதிகாரிகள் யானை வேலி அமைத்து தர வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது மனித வளத்தை மதிப்பும் கேள்வியுமுள்ள மனித வளமாக மாற்றும் பொறுப்பு எமக்கு உள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நிறுவப்பட்டதன் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்டு நிறைவு விழா 2025.11.15 அன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, ” தேச எல்லைகளைக் கடந்து – இலங்கையர்களை வலுவூட்டல்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.
இந்த நிகழ்வுடன் இணைந்ததாக, புலம்பெயர் சமூகத்தின் நலனுக்காக புலம்பெயர் சமூகத்திற்கு வசதிகளை வழங்குவதற்காக ஒரு மொபைல் செயலி (Mobile app) அறிமுகப்படுத்தல், ஒரு தொழிலாளி இறந்தால் குடும்ப உறவினர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 40,000 லிருந்து ரூ. 100,000 ஆக உயர்த்துதல், பணியகத்தின் புதிய 24/7 அழைப்பு மைய சேவைகளை ஆரம்பித்தல், வணிகத் துறைகளில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை பாராட்டுதல், நீண்டகால வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை பாராட்டுதல் மற்றும் புலம்பெயர் பிள்ளைகளுக்கான நிதி உதவித் திட்டத்தைத் தொடங்குதல், ஒரு தொழிலாளி இறந்தால் காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை 6 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக அதிகரித்தல், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தைத் தொடங்குதல், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீட்டுக் கடன்களை 10 மில்லியனாக அதிகரித்தல், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலம்பெயர் குடும்பங்களுக்கு நன்மைகளை வழங்குதல் போன்ற பல வசதிகள் செயற்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், புலம்பெயர் சமூகத்தினரிடமிருந்து பொருளாதாரத்திற்கு நிதி பங்களிப்பு, புதிய தொழில்முனைவோர் வாய்ப்புகளுக்கு அவர்கள் வழங்கும் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தொழிலாளர் பங்களிப்பு ஆகியவற்றைப் பாராட்டினார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
40 ஆண்டுகால வரலாற்றில், இந்தத் துறையில் நாம் இப்போது நவீன மற்றும் சிறந்த காலகட்டத்தை அடைந்துள்ளோம்.
வெளியுறவு விவகாரங்கள் பற்றி குறிப்பிடும் போது இனி முன்பிருந்த பழைய பிம்பத்தை காணமாட்டோம். மாறாக, அது இப்போது ஒரு முற்போக்கான, நியாயமான, நிலையான மற்றும் பொருளாதார ரீதியாக பங்களிக்கும் துறையாக உருவாகி வருகிறது.
பயிற்றப்பட்ட, பாதுகாப்பான மற்றும் நெறிமுறைசார் புலம்பெயர் பணியாளர்களை உருவாக்குவதன் முக்கியத்துவம் மற்றும் பொறுப்பை பிரதமர் இதன் போது வலியுறுத்தினார். எமது மனித வளத்தை மதிப்பும் தேவுயம் உள்ள மனித வளமாக மாற்றும் பொறுப்பும் நமக்கு உள்ளது என்று பிரதமர் கூறினார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகங்கள் வழங்கும் ஆதரவை குறிப்பாகப் பாராட்டிய பிரதமர், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் சமூகத்தின் நலன், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு தூதரகங்களிடமிருந்து மேலும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், புலம்பெயர் தொழிலாளர்களை முறையாக வெளிநாடுகளுக்கு அனுப்புதல், அவர்களின் பாதுகாப்பு மற்றும் சம்பளத்தை உறுதி செய்தல், சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டால் தேவையான பொறிமுறைகளை ஒழுங்குபடுத்துதல் உட்பட, அவர்களின் வேலைகள் மற்றும் உயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொறுப்பு மற்றும் வகைகூறல் பற்றி விளக்கினார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், இலங்கையர்களுக்கு வெளிப்படையான, நியாயமான மற்றும் நெருக்கமான சேவையை வழங்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
100% பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே எங்கள் முயற்சியும் குறிக்கோளும் ஆகும். இலங்கையர்களை உயர் மட்ட வேலைகள் மற்றும் தொழில்சார் வேலைகளுக்கு அனுப்புவது எங்கள் குறிக்கோள் மற்றும் பொறுப்பாகும்.
இலங்கை வரலாற்றில் அதிக அந்நியச் செலாவணியைக் கொண்டு வந்த ஆண்டு 2025 என்று நாம் பெருமையுடன் கூறலாம். இந்த 40வது ஆண்டு நிறைவை, அதிக மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் கொண்டாடுகிறோம். ஆனால் நாட்டின் குறிக்கோள், வலுவான உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்குவதும், நாட்டிற்குள் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும், அனைவரும் வாழ விரும்பும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதுமாகும். அந்த நோக்கத்தை மனதில் கொண்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, புலம்பெயர் சமூகத்தின் நலனுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தியதோடு, வெளிநாட்டு தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வதற்காக ஒரு அரசாங்கமாக மேற்கொண்டுவரும் செயற்பாடுகளையும் விளக்கினார்.
இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, தூதுவர்கள், மேல் மாகாண ஆளுநர் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், வெளிநாட்டு சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்குபற்றினர்.
மின்சார வாரிய ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து, வீட்டில் இருந்த ஒரு பெண்ணின் கை, கால்களைக் கட்டி, ரூ.620,000 மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்ற இருவர் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மாதம்பே காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று 15 ஆம் தேதி மாலை இந்தக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாதம்பே, பொதுவில பகுதியைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்செலகே சோமாவதி (வயது 72) என்ற பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.
சம்பவம் நடந்த நேரத்தில் தனது கணவரும் மகளும் வீட்டில் இல்லை என்றும், மின்சார வாரிய ஊழியர்கள் என்று கூறி மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆண்கள் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்து தப்பிச் சென்றதாகவும் புகார்தாரர் போலீசாரிடம் தெரிவித்தார்.
கொள்ளையர்களை தனக்குத் தெரியாது என்றும் புகார்தாரர் கூறினார்.
மாதம்பே காவல்துறை மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
சிங்கள பேச்சுப்போட்டியில் அல் அக்ஸா மாணவி நயீம் ஆயிஷா மனால் தேசிய மட்டத்தில் தங்கம் வென்றார்
இரண்டாம் மொழி சிங்கள பேச்சுப் போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் தரம் எட்டில் கல்வி பயிலும் மாணவி நசீம் ஆயிஷா மனால் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்று தங்கம் பதக்கம் வென்றார்.
தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு இடையிலான இரண்டாம் மொழியான சிங்கள மொழிப் போட்டி நிகழ்ச்சிகளில் சிங்களப் பேச்சுப் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவியான நசீம் ஆயிஷா மனால் பங்கேற்றிருந்தார்.
இவர் கோட்ட மட்டம், வலய மட்டம், மாவட்ட மட்டம் மற்றும் மாகாண மட்டங்களில் முதல் இடத்தினைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியிருந்தார்.
இந்நிலையில் இன்று (15) கல்வி அமைச்சில் இடம்பெற்ற தேசிய மட்டப் போட்டியிலும் முதல் இடத்தினைத் தனதாக்கிக் கொண்டார் நசீம் ஆயிஷா மனால். அதற்கமைய முதலிடத்தினைப் பெற்றுக் கொண்ட அவருக்கு தங்கப் பதக்கத்துடன் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வாறு வரலாற்று சாதனை படைத்து பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் இதுவரை கால வரலாற்றில் காணப்பட்ட தேசிய கனவை நனவாக்கிய மாணவிக்கும், வழிகாட்டிய பாடசாலையின் அதிபர் அமீர் மற்றும் பயிற்றுவித்த சிங்களப் பாட ஆசிரியைகளான பவானி, சந்தமாலி தனுஜா மற்றும் இணைப்பாளர் ஆசிரியை பரீன் இல்ஹாம் மற்றும் பெற்றோருக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புகையிரத சாரதிகள் மற்றும் ஒழுங்குமுறை பதவிகளுக்கான தகுதியான நபர்களுக்கு நியமனக் கடிதங்கள்
இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் வெற்றிடமாகவுள்ள
புகையிரத சாரதி மற்றும் ஒழுங்கு முறைப் பதவிகளுக்காக திறந்த போட்டிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, நேற்று (14) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் நடைபெற்றது.
புகையிரதத் திணைக்களத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட சாரதி பதவிகளுக்காக 85 புதிய சாரதிகள் மற்றும் 06 கட்டுப்பாட்டாளர்களுக்காக இதன் போது பிரதி அமைச்சரினால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தற்கொலை செய்துகொள்வதாக மனைவியை மிரட்டுவதற்காக கழுத்தில் மாட்டப்பட்டிருந்த சுருக்கு கழுத்தில் இறுக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கழுத்து இருக்கியா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (15) அதிகாலை உயிரிழந்தார்.
உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஜெ. சுரேந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த எட்டாம் திகதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சுரேந்தன், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் முரண்பட்டதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்னர் அவர் ஒரு கதிரையில் அமர்ந்துகொண்டு, கழுத்தில் சுருக்கிட்டவாறு தான் தற்கொலை செய்யப்போவதாக மனைவியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே மதுபோதையில் அவர் உறங்கிவிட்டார்.
பின்னர் அவரது சகோதரன் அங்கு சென்று பார்த்தபோது, அவர் கழுத்தில் சுருக்குடன் குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்தார்.
உடனடியாக சகோதரன் அவரது கழுத்தில் இருந்த கயிற்றை அகற்றிவிட்டு, அவரைத் தரையில் படுக்க வைத்தபோது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு காணப்பட்ட சகல தடைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது பைசல் தெரிவித்துள்ளார்.
ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக வலையமைப்பிற்கு இது தொடர்பில் தொலைபேசி மூலம் வழங்கிய தகவலின்போதே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
புத்தளம் தள வைத்தியசாலை நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமலும், தரமுயர்த்தப்படாமலும், காணப்படுவதால் வைத்திய தேவை கருதி நாடும் பொதுமக்கள் பெரும் அசெளகரியத்திற்கு முகம் கொடுப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தெரிதலின்போதும், பொதுத்தேர்தல் நடவடிக்கையின்போதும் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தலின்போதும் புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவது தொடர்பில் உரிய தரப்பினருடன் தொடர்ச்சியாக பேசி இருந்ததாகவும், அதன் நிமித்தமாக தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி அவர்கள் பல சந்தர்ப்பங்களில் புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தி தருவதாக வாக்குறுதி வழங்கி இருந்ததாகவும் தெரிவித்தார்.
அதன்படி பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் இது குறித்து ஜனாதிபதியுடன் சுமார் 15 நிமிடங்களுக்கும் அதிக நேரம் பேசியதாகவும், அதனைத் தொடர்ந்து புத்தளம் தள வைத்தியசாலை விடயத்தில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் சுகாதார அமைச்சரிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும் குறித்த சந்திப்பின்போது ஜனாதிபதி அவர்களுடன் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர், பிரதி நிதி அமைச்சர் மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோர் உடனிருந்ததாகவும் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்கும் தருணத்தில், ஜனாதிபதியிடம் புத்தளம் வைத்தியசாலை விடயத்தை பேசக்கிடைத்தமையால் உரிய தீர்வு உடனே கிடைத்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
எனவே புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை வைத்தியசாலை விடயம் குறித்து சமூக தளங்களில் சில முரண்பட்ட பதிவுகளை தமக்கு காணக்கிடைத்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படை, கடந்த 2025 நவம்பர் 11, அன்று கல்பிட்டி, கப்பலடி மற்றும் ரெட்பானா கடற்கரைகளில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு போக்குவரத்துக்கு தயார் செய்யப்பட்ட எண்ணூற்று நாற்பது (840) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சவர்க்காரக் கட்டிகளுடன் கெப் வண்டியொன்றும் (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
அதன்படி, கல்பிட்டி கப்பலடி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்று (01) சோதனையிடப்பட்டது. அங்கு சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்லப்பட்டு போக்குவரத்துக்கு தயார்படுத்தப்பட்ட சுமார் எண்ணூற்று நாற்பது (840) கிலோகிராம் பீடி இலைகள் அடங்கிய கையிருப்புடன் கெப் வண்டி ஆகியன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
அத்துடன், கல்பிட்டி ரெட்பானா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு, அப்பகுதியில் உள்ள புதருக்குள் ஏழு (07) பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பது (1980) சவர்க்காரக் கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கெப் வண்டி (01), பீடி இலைத் தொகுதி மற்றும் சவர்க்காரக் கட்டிகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் விசேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
அனர்த்த அவசரநேர உபகரணங்கள் கடற்படைக்கு வழங்கி வைப்பு
வடமத்திய கடற்படை பிரிவிற்கு, அனர்த்த அவசரநேரங்களில் மக்களை பாதுகாக்கவும், மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தேவையான அவசரகால உபகரணங்கள் நேற்று வழங்கிவைக்கப்பட்டது.
நேற்று காலை 10.00 மணிக்கு, மன்னார் மாவட்ட செயலாளர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர், கடற்படை பொறுப்பு அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் மற்றும் பிற அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.