Home Blog Page 86

அதிரடியாக எரிபொருள் வரி நீக்கத்தை அறிவித்தது வியட்நாம்!

ஈரான் மீதான போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகின்றன. இந்த விலை உயர்விலிருந்து உள்நாட்டு நுகர்வோர்களைப் பாதுகாக்கவும், பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் வியட்நாம் நிதி அமைச்சு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

உள்நாட்டுச் சந்தையில் எரிபொருள் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக, குறிப்பிட்ட சில வரிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருட்கள் மீதான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி மற்றும் விசேட கொள்வனவு வரி ஆகியவற்றை வியட்நாம் நிதி அமைச்சு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. 

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, இந்த வரி விலக்கு நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும், எதிர்வரும் ஏப்ரல் 15-ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் நிதி அமைச்சின் உத்தியோகபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈரான் மீதான போரினால் உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், வியட்நாம் தமது உள்நாட்டு சந்தையை ஸ்திரப்படுத்துவதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உலக நாடுகள் பலவற்றிலும் பணவீக்கத்தை அதிகரித்துள்ளன. இந்த இக்கட்டான சூழலில், வியட்நாமின் இந்த வரி குறைப்பு நடவடிக்கை அந்நாட்டு போக்குவரத்து மற்றும் விமானத் துறைக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி நீதிமன்றில் ஆஜர்!

இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, தற்போதைய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலப்பகுதியில், தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சட்டவிரோதமான முறையில் இலாபம் அல்லது சலுகைகளைப் பெற்றுக்கொடுத்ததன் மூலம், இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றத்தைப் புரிந்ததாக இவருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அக்காலப்பகுதியில் குமார ஜயகொடி உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் மற்றும் இறக்குமதி பிரிவின் முகாமையாளராகப் பணியாற்றியுள்ளார். இதன்போது, குறித்த கூட்டுத்தாபனத்தின் ஹுனுப்பிட்டிய களஞ்சிய வளாகத் தரையில் கார்பட் இடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் செயல்முறையிலேயே முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேகநபருக்கு எதிராக இந்தக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யத் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நிலக்கரி மோசடி தொடர்பிலும் பாரிய பிரச்சினை எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் அரசியல் மற்றும் பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் மகனை கோடரியால் வெட்டிக்கொன்ற தந்தை!

ஜூட் சமந்த

ஆணமடுவ – சொஹன்கல்ம பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை கோடாரியால் தாக்கி படுகொலை செய்துள்ளதாக மஹகும்புக்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சோகமான சம்பவம் நேற்று 26 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ஆணமடுவ – சொஹன்கல்ம பகுதியைச் சேர்ந்த ராஜகருணா ஹேரத் முடியன்சேலாகே திலீப மதுசங்க (26 வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த மகனுக்கும் சந்தேகநபரான தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நடந்த சமயத்தில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவருமே மது அருந்தியிருந்ததாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தக் கொலையைச் செய்த பின்னர், 63 வயதுடைய சந்தேகநபரான தந்தை அப்பகுதியிலிருந்து தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாகியுள்ள தந்தையைக் கைது செய்வதற்கான விசேட விசாரணைகளை மஹகும்புக்கடவல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடைபெறவுள்ள நிலையில், மஹகும்புக்கடவல பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நுகர்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வால் முட்டை ஒன்றின் விலை 40 ரூபா வரையிலும், தோல் உடனுள்ள குளிரூட்டப்பட்ட (Frozen) கோழி இறைச்சி ஒரு கிலோகிராமின் விலை 100 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.

முட்டைகளின் புதிய விலை விபரம்:

  • சிறிய அளவிலான முட்டை – 37 ரூபா.
  • நடுத்தர அளவிலான முட்டை – 39 ரூபா.
  • பெரிய (சிவப்பு) முட்டை – 40 ரூபா.

அதேவேளை, பண்ணைகளிலிருந்து சந்தைக்கு விநியோகிக்கப்படும் தோல் உடனுள்ள கோழி இறைச்சி ஒரு கிலோகிராமின் விலை தற்போது 1,200 ரூபா முதல் 1,250 ரூபா வரை உயர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையேற்றம் கோழிப்பண்ணை தொழிலை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளதாக இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச். குணசேகர தெரிவித்துள்ளார்.

கோழிப்பண்ணைகளில் உள்ள சிறிய குஞ்சுகளை வெப்பப்படுத்துவதற்கு எரிவாயு பயன்படுத்தப்படுவதாகவும், தற்போதைய எரிபொருள் விலை உயர்வு இத்தொழில்துறையை அசாதாரணமான முறையில் பாதித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு வருகிறது ரஷ்யாவின் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்!

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். 

தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அவர் இந்த இணக்கப்பாட்டை வௌியிட்டுள்ளதாக மயூர நெத்திகுமாரகே குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி, சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் என்பன விரைவில் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்குக் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு:

எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கத்தினால் இலங்கையின் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தற்போது கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பருப்பு, நெத்திலி மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற பல அடிப்படைப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகப் புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில், நுகர்வோர் அநீதிக்குள்ளாவதைத் தடுப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சில வியாபாரிகள் அத்தியாவசியப் பொருட்களை மறைத்து வைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, விலைகளை நியாயமற்ற முறையில் உயர்த்துவதாகவும் அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் சந்தையில் இடம்பெறக்கூடிய முறைகேடுகளைத் தடுப்பதற்காக, அதிகாரசபையின் அனைத்து விசாரணை உத்தியோகத்தர்களும் வார இறுதி நாட்கள் மற்றும் அரச விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு இழைக்கப்படும் அநீதிகள் அல்லது சந்தை முறைகேடுகள் தொடர்பான புகார்களைச் சமர்ப்பிக்க 1977 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தெஹிவளை துப்பாக்கிச் சூடு: பொலிஸாரின் முக்கிய தகவல்!

2025 மே மாதம் 19 ஆம் திகதியன்று தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெபிலியானா வீதி, நாதிமால பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வழங்கப்பட்ட தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், அங்கிருந்த கடை ஒன்றிற்குள் புகுந்து நபர் ஒருவரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவரைக் கொலை செய்துள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற குற்றச் செயல் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இக்கொலைச் சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சந்தேக நபரான 41/14, ஓபேத் பேதசம் தெஹிவளை முகவரியை சேர்ந்த, சேனாரத்னகே தனஞ்சய கெளசல்ய பெரேரா என்பவரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காகப் பொலிஸார் தற்போது பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளனர்.

இது தொடர்பாகச் சந்தேக நபரின் தகவல்கள் மற்றும் வரைபடங்கள் அடிப்படையில் பொலிஸார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பான நிழற்படம் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இவரைப் பற்றிய ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களைப் பொதுமக்களுக்குக் கொண்டு செல்லுமாறு ஊடக நிறுவனங்களுக்குப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சந்தேக நபர் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள 071 859 6065/ 011 280 9077 தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

எதிர்கால மின்வெட்டுக்கு ஜனாதிபதியே பொறுப்பு!

இலங்கையில் இனிவரும் காலங்களில் ஏற்படவுள்ள மின்வெட்டுக்கு ஈரான் போர் காரணம் அல்ல என்றும், அதற்கு தற்போதைய ஜனாதிபதி அணுர குமார திசாநாயக்கவே பொறுப்பேற்க வேண்டும் என்றும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் பாடலீ சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்,.

நாவலப்பிட்டி ஸ்ரீ கவிஸ்வர வேலுவனாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘டிட்வா’ சூறாவளியினால் சேதமடைந்த நாவலப்பிட்டி விகாரையின் பாதுகாப்புச் சுவரை புனரமைப்பதற்காக, போதாகம சந்திம தேரரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ‘தம்மச்சக்க’ அறக்கட்டளை ஊடாக 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதி உதவி வழங்கும் நிகழ்விலேயே அவர் இந்த கருத்துக்களை முன்வைத்தார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்னவும் கலந்து கொண்டிருந்தார்.

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் பாரிய தவறுகளை இழைத்துள்ளதாக சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார். குறிப்பாக, வீடுகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிப்பதற்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்காததே அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறு என்று அவர் குறிப்பிட்டார்.

சுனாமி அனர்த்தத்தின் போது அரசாங்கம் வீடுகளையோ அல்லது தேவாலயங்களையோ கட்ட வேண்டிய தேவை இருக்கவில்லை, தன்னார்வ நிறுவனங்களே அனைத்தையும் செய்தன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும், அதற்கான காணிகள் கூட இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

“சமூக ஊடகங்களில் இந்த அனர்த்தம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுவிட்டதாகக் காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் மக்கள் இன்னும் கூடாரங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

8 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு!

ஜூட் சமந்த

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 8,63,680 ‘Pregab’ ரக வலிநிவாரணி மாத்திரைகளை கொஸ்வத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட இந்த மருந்துப் பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கல்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கி உலர்ந்த கருவாடு ஏற்றிச் செல்லும் போர்வையில், லொறி ஒன்றில் இந்த மாத்திரைகள் கொண்டு செல்லப்படுவதாக அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) கல்பிட்டி பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கல்பிட்டியிலிருந்து கொழும்பு வரையான பாதையிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் இது குறித்து உஷார்படுத்தப்பட்டன.

கடந்த 25ஆம் திகதி அதிகாலை, நந்தாண்டியா – கொட்டராமுல்ல பகுதியில் உள்ள ஒரு கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக இந்த லொறி நிறுத்தப்பட்டிருந்தது. லொறியை ஓட்டி வந்தவர்கள் அதனை அங்கேயே விட்டுச் சென்றதாக நிலைய உரிமையாளர் தெரிவித்தார். எவரும் லொறியை உரிமை கோரி வராத நிலையில், 26ஆம் திகதி அதிகாலை கொஸ்வத்தை பொலிஸார் அந்த லொறியைத் தங்கள் பொறுப்பில் எடுத்தனர்.

பொலிஸார் லொறியைச் சோதனையிட்ட போது, மேலோட்டமாகத் தெரிவது போல் 12 கருவாடு பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எனினும், அவற்றின் உள்ளே மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 பெட்டிகளில் இந்த சட்டவிரோத மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

புற்றுநோய் மற்றும் நரம்புப் பாதிப்புகளால் ஏற்படும் கடுமையான வலியைக் குறைக்க மட்டுமே இந்த ‘Pregab’ மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நிபுணத்துவ மருத்துவரின் பரிந்துரை இன்றி இதனை எவரும் வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது சட்டவிரோதமானது என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது லொறியின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர். சிலாபம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் பெரேரா மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக ஹப்புகொட ஆகியோரின் ஆலோசனையின் கீழ், கொஸ்வத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் வர்ணகுல உள்ளிட்ட குழுவினர் இந்தச் சோதனையை வெற்றிகரமாக முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராக ஐநா-வில் வெடித்த ஒருமித்த கண்டனம்!

பிராந்திய இறையாண்மை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல்:

ஈரானுக்கு எதிரான ஐநா தீர்மானம் குறித்து சவுதி வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை.

சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஓமான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு எதிராக ஈரான் நடத்திய தூண்டப்படாத தாக்குதல்கள் மற்றும் அதனால் மனித உரிமைகளில் ஏற்படும் தாக்கங்கள் குறித்த தீர்மானத்தை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டதை சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வரவேற்கிறது.

மனித உரிமைகள் பேரவையின் 61-வது அமர்வின் போது, அதன் உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது ஈரானிய தாக்குதல்களை சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து நிராகரிப்பதையும், இந்த கொடூரமான செயல்களை மனித உரிமைகளின் கடுமையான மீறலாகக் கருதி கண்டனம் செய்வதையும் பிரதிபலிக்கிறது என்று அமைச்சகம் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சவுதி அரேபியா மற்றும் பிராந்திய நாடுகளுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்கள், நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் செயலாகும் என்றும், இது சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் தெளிவான மீறல் என்றும் சவுதி அரேபியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

மோதலில் ஈடுபடாத நாடுகளை இலக்காகக் கொள்வது ஒரு அப்பட்டமான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்றும், அதை நியாயப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியாது என்றும் அமைச்சகம் வலியுறுத்துகிறது.

சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம்
25 மார்ச் 2026 / 06 ஷவ்வால் 1447