Sunday, June 21, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 96

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு!

0

வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) விடுத்திருந்த அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளது. 

சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய, அனைத்து நபர்களும் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளை 2025 நவம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தது. 

எவ்வாறாயினும், ‘டித்வா’ புயலின் தாக்கம் மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, பல வரி செலுத்துவோர் மற்றும் அவர்களது முகவர்களால் குறிப்பிட்ட கால எல்லைக்குள் வருமான அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது. 

இந்நிலையை கருத்தில் கொண்டு, வரி செலுத்துவோர் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளை 2025 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பித்தால், தாமதமாக சமர்ப்பிப்பதற்கான அபராதம், மதிப்பீடுகளை வெளியிடுதல் அல்லது குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகாமல் அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும். 

அதற்கமைய, இதுவரை அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியாத அனைத்து வரி செலுத்துவோரும் வருமான அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள இந்த சலுகைக் காலத்தை பயன்படுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவில் சிக்கிய போதைப்பொருட்கள்!

0

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போதே, 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இதன்போது, 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் 14 கிலோ 802 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

குறித்த படகின் உரிமையாளர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் முன்னெடுத்து வருகிறது.

அரச உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் ரத்து!

0

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

நவம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக்க பண்டார அறிவித்துள்ளார். 

அதற்கமைய புதிய விடுமுறை விண்ணப்பங்கள் அல்லது விடுமுறை நீடிப்பு விண்ணப்பங்களை பொறுப்பேற்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த வேண்டும் என அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு குறித்த சுற்றறிக்கையின் மூலம் அறிவித்துள்ளார். 

சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சம் 5 வருடங்களுக்கு உட்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பொது நிர்வாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும் அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு விடுமுறையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்டுள்ள கால எல்லைக்கு அமைவாக மாத்திரம் அந்த விடுமுறையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுவரையில் விடுமுறைக்கான அனுமதியைப் பெற்று, அந்த விடுமுறையைக் கழிக்கத் தயாராக இருக்கும் உத்தியோகத்தர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்கு அமைய விடுமுறையைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியம் உள்ளதாக பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் வெளிநாட்டு விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள, அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்த புதிய விடுமுறை விண்ணப்பங்கள் மற்றும் விடுமுறை நீடிப்பு விண்ணப்பங்களுக்குப் புதிய சுற்றறிக்கையினால் பாதிப்பு ஏற்படாது. அதேவேளை தேவைகளைப் பூர்த்தி செய்யாத மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில் குறைபாடுகள் உள்ள விடுமுறை விண்ணப்பங்கள் மீள்பரிசீலனை இன்றி நிராகரிக்கப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் உள்நாட்டு விடுமுறைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடுமுறை விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607 ஆக உயர்வு!

0

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (05) மாலை 06.00 மணிக்கு வெளியிட்டுள்ளது. 

குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளதுடன், 214 பேர் காணாமல் போயுள்ளனர். 

இதில் அதிகளவாக கண்டி மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 232 பேர் உயிரிழந்துள்ளதுடன், நுவரெலியா மாவட்டத்தில் 89 பேரும், பதுளை மாவட்டத்தில் 83 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 61 பேரும் குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 25 மாவட்டங்களிலும் 5 லட்சத்து 86ஆயிரத்து 464 குடும்பங்களைச் சேர்ந்த 20 லட்சத்து 82ஆயிரத்து 195 பேர் குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் 1,211 இடைத்தங்கல் முகாம்களில் சுமார் 43ஆயிரத்து 715 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 52ஆயிரத்து 537 பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

சொத்து சேதங்களைப் பொறுத்தவரையில், 4ஆயிரத்து 164 வீடுகள் முழுமையாகவும், 67ஆயிரத்து 505 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தளவில வீதியில் வெள்ள நீரை அகற்றுமாறு மக்கள் போராட்டம்!

0

சஜாத் – பிராந்திய செய்தியாளர்

ஏற்பட்ட டித்வா சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் கல்பிட்டி – ஏத்தாளை பகுதியும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

நாட்டின் எல்லா பாகங்களிலும் வெள்ள நீர் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் கல்பிட்டி – ஏத்தாளை பகுதியில் உள்ள தளவில பிரதான வீதியில் சுமார் 500 மீட்டருக்கும் அதிக தூரத்திற்கு குறித்த வெள்ள நீர் தேங்கி நிற்பதால், குறித்த வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்களும் பெரும் அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குறித்த விடயம் அறியத்தந்தும் பாராமுகமாக செயற்படுவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதுடன், வெள்ள நீரை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

முறையான வடிகான் வசதி இல்லாததால் மழை காலங்களில் குறித்த பகுதியில் இவ்வாறு அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படுவதாகவும், வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான முறையான பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டு, வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

பல போராட்டங்களுக்கு மத்தியில் மின்சார வாரியத்தின் பவுசர் மூலம் நீரை அகற்றுவதற்கு தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், இதற்கான நிரந்தர தீர்வை கோரி பிரதேச மக்கள் போராட்டம் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பமாகும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி!

0

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

அதேநேரம் மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிக மழைவீழ்ச்சி!

0

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி நில்வளா கங்கையை அண்டிய அக்குரஸ்ஸ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். 

இன்று (5) காலை அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், அப்பிரதேசத்தில் 125 மி.மீ. இற்கு அண்மித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். 

எனினும், ஏனைய பல பிரதேசங்களில் சாதாரண மழைவீழ்ச்சியே பெய்துள்ளதாகவும், கங்கைகளின் நீர்மட்டங்களில் பெரிய அதிகரிப்பைக் காட்டவில்லை எனவும் அவர் கூறினார். 

அத்துடன் ஏனைய பிரதேசங்களில் மழை பெய்யாததினால் கங்கைகளின் நீர்மட்டங்களில் அதிகரிப்பு ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, குளங்கள் கட்டமைப்பில் அபாயகரமான வான் பாயும் நிலைமை இல்லை எனவும், பல குளங்கள் வான் மட்டத்திலோ அல்லது சாதாரண அளவிலோ வான் பாய்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

எனினும், மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும், அதனால் எதிர்காலத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப அந்தந்த கங்கைகளின் அளவீட்டு நிலையங்களின் தரவுகளைக் கருத்திற்கொண்டு மக்களுக்கு அறிவிப்பதாகவும் அவர் கூறினார். 

ஆகவே அச்சமடைவதைத் தவிர்க்குமாறும், உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தவிர வதந்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

ரணில் கூட்டிய அரசியல் கட்சித் தலைவர்களின் நேற்றைய கூட்டம்!

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகவும் பேரழிவு சூழ்நிலையை எந்த அரசாங்கமும் தனியாக எதிர்கொள்ள முடியாது என்பதால், எதிர்காலத்தில் அனைவரின் ஒற்றுமையின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று இலங்கையின் அரசியல் கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் நேற்று (03) தெரிவித்தனர்.

எட்டாவது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், கொழும்பு பால் சாலை அரசியல் கட்சி அலுவலகத்தில் நேற்று (03) மாலை கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது.

நாட்டில் பதிவுசெய்யப்பட்ட 35க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் அவற்றின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தக் கலந்துரையாடலில், “தித்வா” சூறாவளியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்முறையை வழிநடத்த அனைத்து மத, அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. முதல் கூட்டத்திற்குத் தலைமை தாங்க நான்கு மகாநாயக்க தேரர்களை அழைக்கவும் முன்மொழியப்பட்டது.

மேலும், நல்லிணக்க செயல்முறையை முன்னோக்கி எடுத்துச் செல்ல இந்து விவகார அமைச்சர், அமைச்சக செயலாளர் மற்றும் இந்து விவகார பணிப்பாளர் ஆகியோரை நியமிப்பது குறித்து இந்து பிரமுகர்களுடன் விவாதிக்கப்பட்டு கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

கட்சித் தலைவர்கள் தற்போது அரசியலமைப்பை மீறிச் செயல்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர்கள், பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி அரசியல் குழு இன்று அரச அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர்.

கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டு, பெலவத்தையிலிருந்து அதிகாரம் அகற்றப்பட்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு மாற்றப்படுவதை உறுதி செய்வதற்கான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

வடக்கின் நெற்செய்கையை முற்றாக அழித்த பேரிடர்!

வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை மாவட்ட அரசாங்கதிபர் பார்வையிட்டார்.

கடந்த 28ம் திகதி ஏற்பட்ட டித்வா புயல் தாக்கம் காரணமாக இரணைமடு குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வான் கதவு திறந்து விடப்பட்டமையால் தாழ் நிலப்பகுதிகளான பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை, பெரியகுளம் போன்ற பகுதிகளில் பல ஏக்கர் நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இவற்றை ஆராயும் நோக்கில் மாவட்ட அரசாங்கதிபர் பெரியகுளம் பகுதிக்கு சென்று அழிவடைந்த நெல் வயல் நிலங்களை பார்வையிட்டார். அரசாங்க அதிபருடன் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் உள்ளிட்டோர் குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டனர்.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் விவசாயிகள், ஏற்பட்ட அனர்த்தத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வெறும் 45 நாட்களில், கடந்த 28-ம் திகதி ஏற்ப்பட்ட வெள்ளம், இரணைமடு குளத்தின் நீர் வடிந்துதோடும் பகுதிகளில் உள்ள பல விவசாயிகளின் நெற்செய்கை முற்று முழுதாக அழிவை ஏற்படுத்தியதாகவும், இதற்கான கொடுப்பனவுகள் முற்று முழுதாக விவசாயிகளுக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும், தற்போதைய அரசாங்கம் எமக்கு ஏற்பட்ட அழிவுக்கான கொடுப்பனவை முற்றும் முழுதாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

குறித்த இழப்பீடு கிடைக்கப்பெறுமாயின் தொடர்ச்சியாக நெற்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலை உருவாகும் எனவும், இல்லையேல் விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

அபாயத்துடன் பாலத்தை கடக்கும் வடக்கு மக்கள்!

அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கிளிநொச்சி-முல்லைத்தீவு மாவட்டத்திற்க்கு இடைப்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்குனை பகுதியில் அமைந்துள்ள பாலம் முற்றாக சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இருப்பினும் மக்கள் அப்பாலத்தின் ஊடாகவே நடந்து தமது பிரயாணத்தை மேற்கொண்டு வருவதை அடுத்து தற்பொழுது இராணுவத்தினர் மக்களின் பாதுகாப்பிற்காக பாலத்தின் ஒரு பகுதியில் மக்கள் நடந்து தமது போக்குவரத்தை மேற்கொள்வதற்காக வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

அந்த வகையில் தற்பொழுது கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் புளியம்பொக்குனை பகுதி வரை தமது சேவையை முன்னெடுக்கின்றனர்.

அதேபோன்று முல்லைத்தீவு பகுதியில் இருந்து புளியம்பொக்குனை வரை பேருந்துகள் தமது சேவையை முன்னெடுத்துள்ளதுடன், இடைப்பட்ட பகுதியில் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பாலத்தைக் கடந்து தமது நாளாந்த தேவையினை பூர்த்தி செய்து வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.