Tuesday, May 5, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 97

ஹுஸைன் அஹமட் பைலா பிணையில் விடுதலை!

0

ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பைலா என்பவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளும், சந்தேகநபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த சமர்ப்பணங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

2015 ஆம் ஆண்டில் குறித்த கூட்டுத்தாபனத்திற்குப் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மீறி, தேவையில்லாத நிலையில் 50 தற்காலிக களஞ்சியசாலைகளை (கொட்டகைகள்) இறக்குமதி செய்ததன் மூலம், கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 99,679,799.70 நட்டம் ஏற்படுத்தியதாகவும், அத்துடன் அதே மதிப்புள்ள நன்மையை வெளித்தரப்பினருக்கு வழங்கியதன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இவரைக் கைது செய்திருந்தது.

நிகழ்வில் இணைந்த மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்!

0

“போதைப் பொருளுக்கு இல்லை என்று சொல்லுங்கள், வாழ்க்கைக்கு ஆம் என்று சொல்லுங்கள்” என்னும் கருப்பொருளில் இலங்கை முழுவதும் போதை அற்ற சமுதாயத்தை உருவாக்கும் செயற்திட்டத்தின் அங்குராபண நிகழ்வு மேன்மை தங்கிய ஐனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்றது.

மேலும் இன் நிகழ்வில் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அலுவலர்கள் என பலரும் காணொளி மூலம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

அந்த வகையில் மன்னார் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களும் காணொளி மூலம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

நிகழ்வின் போது போதைப் பொருளுக்கு எதிரானவன் நான் எனவும், போதைப் பொருள் ஒழிப்பு செயற்பாடுகளுக்கு இலங்கை பிரஜை என்ற அடிப்படையில் ஆதரவு தருவேன் என சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

0

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த சங்கம் இதனை அறிவித்துள்ளது. 

நேற்று (30) இரவு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ (தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு), சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இடையே நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சுகாதார அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையை மீறி, தன்னிச்சையாக நடைமுறைப்படுத்த முயற்சித்த வைத்தியர்களின் இடமாற்றங்களை இடைநிறுத்தவும், அதற்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையின் மூலம் ஒரு கால அட்டவணையுடன் வைத்தியர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்தவும் இணக்கம் ஏற்பட்டதாக அந்த சங்கம் தெரிவிக்கின்றது. 

அத்துடன், இந்த இணக்கங்கள், இன்று நடைபெறும் சுகாதார அமைச்சின் நிர்வாக வைத்தியர்களின் விசேட கலந்துரையாடலில் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, அந்த இணக்கங்களை கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சின் நிர்வாக வைத்தியர்களின் கலந்துரையாடலில் குறித்த இணக்கங்கள் உறுதிப்படுத்தப்பட்டு எழுத்துப்பூர்வமாக கிடைக்கும் வரை, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையால் அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தத்தை இன்று நண்பகல் 12.00 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அந்த இணக்கங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், எந்த நேரத்திலும் மீண்டும் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

வெளியாகியது சனத்தொகை கணக்கெடுப்பு விபரம்!

0

இலங்கையில் நடாத்தப்பட்ட சனத்தொகை  கணக்கெடுப்பு தொடரில், 15வது கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 என மதிப்பிடப்பட்டுள்ளது. 

“சனத்தொகை  மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2024” இன் கணக்கெடுப்புப் பணிகள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி இரண்டாவது வாரம் வரை மேற்கொள்ளப்பட்டன. 

இந்தக் கணக்கெடுப்பின் கணக்கெடுப்பு நேரமாக, 2024 டிசம்பர் 19 ஆம் திகதி அதிகாலை 00:00 மணி குறிப்பிடப்பட்டுள்ளது. 

2012 ஆம் ஆண்டின் சனத்தொகை  மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில் பதிவான மொத்த மக்கள் தொகையை விட, இந்த முறை மக்கள் தொகை 1,403,731 அதிகமாக பதிவாகியுள்ளது. 

2001-2012 இடைப்பட்ட கணக்கெடுப்புக் காலப்பகுதியில், மக்கள் தொகையின் சராசரி வருடாந்த வளர்ச்சி வீதம் 0.7% ஆக பதிவாகி இருந்தது. 

தற்போதைய 2012-2024 இடைப்பட்ட கணக்கெடுப்புக் காலப்பகுதியில், மக்கள் தொகையின் சராசரி வருடாந்த வளர்ச்சி வீதம் 0.5% ஆக பதிவாகியுள்ளது. 

இதன்படி, நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைந்துள்ள போதிலும், மக்கள் தொகை தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பது தெளிவாகிறது. 

மாகாண ரீதியான மக்கள் தொகை பரம்பல்: 

இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 28.1% உடன் மேல் மாகாணமே அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 

மிகக் குறைந்த மக்கள் தொகையான 5.3% வடக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர். 

மாவட்ட மட்டத்தில் மக்கள் தொகை பரம்பலை எடுத்துக்கொண்டால்: 

கம்பஹா மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகை வாழ்கிறது. அதன் மக்கள் தொகை 2,433,685 ஆகும். 

அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பு மாவட்டத்தின் மக்கள் தொகை 2,374,461 ஆகும். 

2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டுமே வசிக்கின்றனர். 

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களைத் தவிர, கடந்த கால கணக்கெடுப்புகளைப் போலவே, இந்த முறையும் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்கள் பின்வருமாறு பதிவாகியுள்ளன: 

குருநாகல் (1,760,829) கண்டி (1,461,269) களுத்துறை (1,305,552) இரத்தினபுரி (1,145,138) காலி (1,096,585) 

இந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை பதிவாகியுள்ளது. 

முந்தைய கணக்கெடுப்புகளைப் போலவே, இந்த முறையும் நாட்டின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434), மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் பதிவாகியுள்ளன. 

வளர்ச்சி வீதம்: 

அதிகபட்ச சராசரி வருடாந்த வளர்ச்சி வீதமான 2.23% முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 

மிகக் குறைந்த சராசரி வருடாந்த வளர்ச்சி வீதமானது வவுனியா மாவட்டத்தில் 0.01% ஆகப் பதிவாகியுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை வேலை நிறுத்தம்!

0

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (31) காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகும் வகையில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. 

நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளும் என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, அனைத்து தினசரி சிகிச்சை சேவைகளும் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். 

எவ்வாறாயினும், சுகாதார அதிகாரிகள் நியாயமான தீர்வினை வழங்கினால், வேலைநிறுத்தம் குறித்து மீளப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

அரச வைத்திய அதிகாரிகள் அரசுக்கு 1,277 மில்லியன் கடன்!

0

சேவையை விட்டு விலகிய அரச வைத்திய அதிகாரிகளிடமிருந்து, அரசாங்கத்துக்கு ரூபாய் 1,277 மில்லியனுக்கும் அதிகமான பணம் நிலுவையில் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. 

பதவிகளை விட்டு விலகிய வைத்திய அதிகாரிகளிடமிருந்து, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு அரசினால் அறவிடப்பட வேண்டிய பிணை முறி, தண்டப் பணம் மற்றும் கடன் முன்பண நிலுவைகள் ஆகியவற்றின் மொத்தத் தொகை ரூபாய் 1,277 மில்லியன் ஆகும் என்று அந்தக் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

சேவையை விட்டு விலகிய வைத்திய அதிகாரிகளிடமிருந்து அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய நிலுவைகள் மற்றும் வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற விசேட வைத்திய அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

தற்போது, முதுகலை பட்டப்படிப்புப் பயிற்சிக்காகவும், வெளிநாடுகளில் வேலை செய்வதற்காகவும், மற்றும் ஏனைய காரணங்களுக்காகவும் வெளிநாடு செல்லும் வைத்திய அதிகாரிகள் சேவையை விட்டு விலகுவது மற்றும் சேவையை கைவிடுவது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காட்டுவதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

மேலும், இந்த அதிகாரிகள் பிணை முறி மற்றும் தண்டப் பணத்தை செலுத்தாமல் இருக்கும் போக்கு அதிகரித்துள்ளதாகவும், அவற்றை அறவிடுவதற்கான நடவடிக்கைகளில் பல பலவீனங்கள் இருப்பதாகவும் கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 

2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு இறுதி வரை மொத்தம் 705 வைத்தியர்கள் ஒப்பந்தத்தை மீறியுள்ளதும் இந்த கணக்காய்வின்போது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை மீட்ட இலங்கை காவல்படை!

மிரிஸ்ஸ கடலில் நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மீட்ட இலங்கை காவல்படையின் உயிர்காக்கும் குழு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

மாத்தறை, மிரிஸ்ஸ கடல் பகுதியில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு (04) வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கடலோரப் பகுதியில் உயிர்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர காவல்படையின் உயிர்காப்பாளர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, ​​கடற்கரையில் பணியில் இருந்த உயிர்காப்பாளர்கள் நான்கு பேர் நீரில் மூழ்குவதைக் கவனித்து, உடனடியாக அவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், மீட்கப்பட்ட வெளிநாட்டினர் 13 முதல் 55 வயதுக்குட்பட்ட இரண்டு ரஷ்ய பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ரணில்,மகிந்தவை கொண்டுவருவது தங்கள் சுகபோக வாழ்க்கைக்கு!

பண்முகப்படுத்தப்பட்ட பதினைந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இரணைமடு குளத்தில் நன்னீர் மின்பிடியில் ஈடுபடும் இரண்டு மீனவ சங்கங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு கரைச்சி பிரதேச செயலகத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கலந்து கொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வில் பிரதேச செயலக திட்டமிடல் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வழங்கியிருந்தார்.

மக்களுடைய வரிப்பணத்தில் திறைசேரிக்கு செல்லும் நிதி மூலமே மக்களுக்கான வாழ்வாதாரம் வழங்கியுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் செழிப்பான ஆண்டாக மாற்றுவோம் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து முதலமைச்சர் வேட்பாளரை நியமிப்பதற்கான முயற்சி தொடர்பாகவும் இதன்போது கருத்து தெரிவித்தார்.

இவர்களின் நோக்கம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது அல்ல, திரும்பவும் ரணில் மகிந்தவை கொண்டு வந்து தாங்கள் சுகபோக வாழ்க்கை அனுபவிப்பதற்கு என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கற்பிட்டி மற்றும் ஜெர்மன் பிரதேச சபைகளுக்கிடையில் ஒப்பந்தம்!

கற்பிட்டி பிரதேச சபை மற்றும் ஜெர்மனியின் பெர்லின் பிரதேச சபை ஒப்பந்தம் கைச்சாத்து

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச சபை மற்றும் ஜெர்மனியின் பெர்லின் பிரதேச சபை என்பவற்றுக்கிடையிலான நான்கு (2025-2029) வருட கால அபிவிருத்தி திட்டத்திற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கற்பிட்டி பிரதேசத்தை நிலைத்துறை வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் பசுமை சுற்றுலா மேம்பாடு ஆகிய துறைகளில் முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச சபை தலைவர் ஏ.எஸ்.எம் றிகாஸ், உப தலைவர் சமன் குமார் ஹேரத் மற்றும் பெர்லின் பிரதேச சபையின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஒப்பந்த ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.

இது கற்பிட்டி மக்களின் எதிர்காலத்திற்கான ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கமாகும் என கற்பிட்டி பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் இனி GovPay ஊடாக போக்குவரத்து அபராதம்!

வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பிக்கப்பட்டது.

அரசாங்கத்தினால் பொது சேவை வழங்கலில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப் பட்டது.

இந்த முயற்சியின் மூலம், GovPay ஊடாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதியை செயல்படுத்தும் இலங்கையின் மூன்றாவது மாகாணமாக வட மாகாணம் திகழ்கின்றது

இவ் உத்தியோகபூர்வ நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

பொலீஸ் அத்தியட்சகர் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலீஸ்மா அதிபர் (DIG) திலக் சி ஏ தனபால, வன்னிப்பிரிவுக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் எச்.ஏ.கே.ஏ இந்திக்க ஹப்புகொட, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் ஜே.ஏ சந்திரசேன, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் ஜி.எச் மாரப்பன, வவுனியா பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் [SSP) டபிள்யூ.ஏ சோமரத்ன ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

வட மாகாணத்தில் உள்ள 6 போக்குவரத்து பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள பொலீஸ் உத்தியோகஸ்தர்களுக்கான தொடர் விழிப்புணர்வு அமர்வுகளும் நடைபெற்றுவருகின்றது. அதன்படி அக்டோபர் 26 அன்று வவுனியாவிலும், அக்டோபர் 27 அன்று கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திலும் நடத்தப்பட்டன. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay உடன் இணைந்து இலங்கை காவல்துறை ஏற்பாடு செய்த இந்த அமர்வுகளில் சுமார் 400 போக்குவரத்து பொலீஸ் உத்தியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.

இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வட மாகாணத்தில் உள்ள வாகன சாரதிகள் தற்போது GovPay உடன் இணைக்கப்பட்ட எந்தவொரு இணையத்தள அல்லது மொபைல் வங்கி செயலி அல்லது டிஜிட்டல் கட்டண செயலி மூலமாக, குறித்த இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களை வசதியாகவும், பாதுகாப்பாகவும், உடனடியாகவும் செலுத்த முடியும்.

தற்போது, 14 வங்கிகளின் இணையவழி மற்றும் மொபைல் வங்கி தளங்கள் மற்றும் 6 FinTech செயலிகள் மூலம் போக்குவரத்து அபராதத்தை செலுத்தலாம். இதில் BOC FLEX செயலி, சம்பத் விஸ்வா, HNB டிஜிட்டல் வங்கி மற்றும் SOLO, NSB Pay. Peoples’ Pay, ComBank Digital, DFCC , Nations Direct வங்கி NDB Neos இணையத்தள வங்கி, NSB இணையவழி வங்கி, பான் ஏசியா இணையவழி வங்கி, SDB இணையவழி வங்கி Seylan இணையவழி வங்கி, LB Finance CIM, WEBXPAY, FriMi, Genie, Helakuru L iPay மூலம் போக்குவரத்து அபராதத்தை செலுத்தலாம்.

ஏப்ரல் 2025 இல் ஸ்தலத்திலான போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை அறிமுகப் படுத்தப்பட்டதிலிருந்து, GovPay வழியாக 23,539 ஸ்தல அபராதங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, இது ரூ.31 மில்லியனுக்கும் அதிகமானதாகும்.

பெப்ரவரி 2025 இல் தொடங்கப்பட்ட GovPay என்பது இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay இன் ஒரு கூட்டு முயற்சியாகும். இது டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. GOVPAY போக்குவரத்து அபராதத் திட்டம் போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள டிஜிட்டல் பணிக்குழுவால் முன்னெடுக்கப்படுகிறது. பொதுமக்களை அரச சேவைகளுக்கான பணத்தினை

ஒன்லைனில் மிகவும் இலகுவாகவும் பாதுகாப்பகவும் உரிய நேரத்தில் செலுத்த ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்க சேவை வழங்கும் திறனை மேம்படுத்துவதே இந்த தளத்தின் நோக்கமாகும்.

GovPay மூலம் இன்றுவரை, 2,700 அரச சேவைகளில் ரூ. 407 மில்லியனுக்கும் அதிகமான சுமார் 35,000 டிஜிட்டல் கொடுப்பனவுகள் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் கொடுப்பனவுகளை மேற்கொள்ள பொது மக்களை ஊக்கப்படுத்தி, நாட்டின் டிஜிட்டல் மாற்ற பயணத்திற்கு வலுசேர்த்து, அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் GovPay தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.