நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை குறித்த அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 356ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று காலை 12.03.2025 அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான இந்த அனர்த்தத்தினால் 4 லட்சத்து 48ஆயிரத்து 817 குடும்பங்களைச் சேர்ந்த 15 லட்சத்து 86ஆயிரத்து 329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 971 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 40,358 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 53ஆயிரத்து 758 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து ஆயிரத்து 875 பேர் 1,385 இடைத்தங்கல் நிலையங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கல்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் N.T.M. தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்ட முத்து முஹம்மத் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு மக்கள் காங்கிரஸ் ஊடாக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமாகிய N.T.M. தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
மாகாண சபையிலிருந்து பாராளுமன்றத்திற்கு சென்று அதனூடாக புத்தளம் மண்ணுக்கு தேவையான அபிவிருத்திகளை வழங்க புத்தளம் மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மக்கள் சந்தோசம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறானதொரு அனர்த்த நிலைமையில் புத்தளம் மக்கள் சார்பாக N.T.M. தாஹிர் அவர்களுக்கு பாராளுமன்ற நியமனம் வழங்கியமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு மக்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் N.T.M. தாஹிர் அவர்களுக்கு நாகவில்லு ACMC கிளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாக புத்தளம் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஜனாப் SM. ரிஜாஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் சேவையின் மூலம் புத்தளம் மாவட்டம் மேலும் பல அபிவிருத்திகளை காண உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் புத்தளம் மண்ணிலிருந்து தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லும் இரண்டாவது உறுப்பினர் N.T.M. தாஹிர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் புத்தளம் மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், புத்தளம் நாகவில்லு கிராமமும் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
புத்தளம் நாகவில்லு கிராமத்தில் சுமார் 1500இற்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்துவரும் நிலையில் 1000இற்கும் அதிகமான குடும்பங்கள் இந்த வெள்ள அனர்த்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்ட நாகவில்லு கிராமம், சுமார் 4 நாட்கள் சகல தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மாறியிருந்தது.
கடுமையான வெள்ள அனர்த்தத்தினால் சிக்கித்தவித்த சுமார் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள், பள்ளிவாசல்களிலும், பாடசாலையிலும் மற்றும் அயலவர்களின் வீடுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.
அடிப்படை வசதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, பசி பட்டினியுடன் தவித்த ஊர் மக்களுக்கு இன்றுவரை சமைத்த உணவுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், புத்தளம் பிரதேச சபை உறுப்பினருமான ஜனாப் லரீப் காசிம் அவர்களின் நெறிப்படுத்தலிலும், வழிகாட்டுதலிலும், வெள்ள அனர்த்தத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்ட நாகவில்லு கிராம மக்களுக்கான மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மின்சார துண்டிப்பினால் குடிப்பதற்கு குடி நீர் இன்றி தவித்த மக்களுக்கு இரண்டு தினங்களாக இலவச குடிநீர் விநியோகமும் இதன் ஒரு முக்கிய அங்கமாக இடம்பற்றது.
அரசாங்கத்தினால் குறிப்பிட்ட ஒரு தொகை நிவாரண உதவியாக கிடைக்கப்பெற்ற போதிலும், ஊர் தனவந்தர்கள், அபிமானிகளின் பூரண நிதி உதவியினால் இன்றுவரை ஊறவர்களுக்கான நிவாரண உதவிகள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை நாகவில்லு கிராமத்தில் பள்ளிவாசல் வளாகத்தில் காணப்பட்ட பழமையான புளிய மரம் ஒன்றும் புயலின் தாக்கத்தினால் பள்ளிவாசல் சுவரை உடைத்துக்கொண்டு, பாடசாலை வீதியை குறுக்கறுத்து பாடசாலை கூரையின் மேல் விழுந்து பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரிய சிரமத்திற்கு மத்தியில் குறித்த மரம் வெட்டப்பட்டு ஊரவர்கள் முயற்சியால் அகற்றப்பட்டதுடன், ஊரின் முக்கிய குறுக்கு வீதிகளும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருந்தன.
எனவே அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகவில்லு கிராமத்தின் முக்கிய குறுக்கு வீதிகளும் இன்றைய தினம் செப்பனிடப்பட்டு, புனரமைக்கப்பட்டு வருகின்றன.
குறித்த வெள்ள அனர்த்தத்தின்போது கட்சி வேறுபாடின்றி, சகல மக்களும் ஒன்றிணைந்து மனிதாபிமான உதவிகளை தயக்கமின்றி, நேரகாலம் பாராமல், பாரபட்சமின்றி வழங்கி இருந்தமை அனைவறினாலும் போற்றப்பட்டு வருகின்றது.
இதற்காக சகல வழிகளிலும் தியாகம் செய்த அனைவருக்கும் இறைவனின் உயர்வான பாக்கியங்கள் கிடைக்க எமது ஊடகம் சார்பாக பிரார்த்திக்கிறோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர்.
உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா முபத்தல் சைபுத்தீன் அவர்களின் சார்பாக இலங்கை தாவூதி போரா சமூகத்தின் தலைவர் இப்ராஹிம் சயினியினால் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இதற்கான காசோலை கையளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு போரா சமூக பிரதிநிதிகள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்ததோடு அதற்காக தமது நன்றியையும் தெரிவித்தனர்.
டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் நாடு பூராகவும் பாரிய இழப்புகளும் உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ள நிலையில் புத்தளம் மாவட்டமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தில் 432 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குற்பட்ட 73ஆயிரத்து 313 குடும்பங்களைச் சேர்ந்த 2லட்சத்து 71ஆயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 27 மரணங்கள் சம்பவித்துள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 44 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 735 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 10ஆயிரத்து 558 குடும்பங்களைச் சேர்ந்த 40ஆயிரத்து 821 பேர் இடைத்தங்கல் நிலையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வெள்ள அனர்த்தத்தில் புத்தளம் மாவட்டத்திலே அதிகளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் 68,857 குடும்பங்களும், கம்பகா மாவட்டத்தில் 53,473 குடும்பங்களும், மன்னார் மாவட்டத்தில் 37,569 குடும்பங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 22,594 குடும்பங்களும் அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கண்டி மாவட்டத்திலே அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் கண்டி மாவட்டத்தில் 88 மரணங்களும், பதுளை மாவட்டத்தில் 83 மரணங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 75 மரணங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 52 மரணங்களும், புத்தளம் மாவட்டத்தில் 27 மரணங்களும் அதிகளவாக பதிவாகியுள்ளதுடன், அனர்த்தத்தில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 410ஆக அதிகரித்துள்ளது.
மேலும் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 336 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நன்கொடைகள்
நாட்டில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து உதவிகளை ஏற்றி வருகை தந்த விமானம் இன்று (02) நாட்டை வந்தடைந்தது.
இந்த நன்கொடையில் உணவுப்பொருட்கள், கூடாரங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் பெருமளவில் அடங்குகின்றன.
இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ரஷீத் அலி அல் மஸ்ரூயி, வெளியுறவு அமைச்சகத்தின் (மத்திய கிழக்கு) பணிப்பாளர் சேவந்தி டி சில்வா, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுமேதா விஜேகோன் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேப்டன் தமிந்த ரம்புக்வெல்லா ஆகியோரின் பங்குபற்றலுடன் நிவாரண பொருட்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.
பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பாதுகாப்புப் பெட்டிகள் மற்றும் கூடாரங்கள் உள்ளிட்ட மிக அத்தியாவசிய மனிதாபிமானப் பொருட்கள் இந்த நன்கொடையில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
826 பேர் கொண்ட ஒரு பெரிய தன்னார்வலர்கள் குழு 5 நாள் நடவடிக்கையைத் தொடங்குகியுள்ளது.
பதுளை மாவட்டத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த 826 பேர் கொண்ட ஒரு பெரிய குழு நேற்று (01) பதுளைக்கு வருகை தந்துள்ளது.
பதுளை மாவட்டத்தை பாதித்த பேரிடர் சூழ்நிலைக்குப் பிறகு இந்த சகோதரத்துவ மனித நேய செயற்பாடு மிகவும் வலுவான சகோதரத்துவத்தின் பங்களிப்பை நாட்டுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.
சேதமடைந்த பகுதிகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் வந்த இந்த குழுக்கள், அடுத்த 5 நாட்களுக்கு பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பல முக்கிய பகுதிகளுக்கு தன்னார்வ பங்களிப்புகளை வழங்க உள்ளன.
அதன்படி, இந்த நடவடிக்கை பதுளை, லுனுகல, பசறை, சொரணத்தோட்ட, கண்டகெட்டிய, நெகஹகிவுல, வெலிமட, ஊவா பரணகம மற்றும் ஹாலி கால்வாய் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்காக வந்த மாத்தறை குழுவினர், தங்கள் உழைப்பை மட்டுமல்லாமல், பேக்கோ இயந்திரங்கள், எஸ்கவேட்டர்கள், செயின்சாக்கள் மற்றும் தண்ணீர் பவுசர்கள் போன்ற அத்தியாவசிய இயந்திரங்களையும் கொண்டுவந்துள்ளதுடன், நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்த எதிர்பார்த்துள்ளனர்.
அதற்கு மேலதிகமாக, தன்னார்வ குழுக்களுக்கு தேவையான அடிப்படை பராமரிப்பை வழங்கவும், தன்னார்வ குழுக்களின் சுகாதாரத்தை உறுதி செய்யவும், தேவையான பணித் திட்டத்தின்படி உபகரணங்களுடன் அவர்களை தேவையான பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
மாத்தறையில் இருந்து வந்த இந்த மிகப்பெரிய நிவாரணக் குழு, ஒரு கடினமான சூழ்நிலையில் பதுளைக்கு அவர்கள் வழங்கும் மிகப்பெரிய ஒரு ஆதரவாக இது கருதப்படுவதுடன், பதுளை மக்கள் அவர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை குறித்த அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 352ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று காலை 12.02.2025 அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான இந்த அனர்த்தத்தினால் 3 லட்சத்து 82ஆயிரத்து 651 குடும்பங்களைச் சேர்ந்த 13 லட்சத்து 73ஆயிரத்து 899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 432 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 15,688 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 57ஆயிரத்து 790 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 4ஆயிரத்து 597 பேர் 1,368 இடைத்தங்கல் நிலையங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு நன்கொடையாளர்களால் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் இன்றி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒரு பொறிமுறையை வகுத்துள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்குவதற்காக வெளிநாட்டு அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் விடுத்த வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டே இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவர்கள் நாட்டுக்கு அனுப்பும் பொருட்களின் உதவிகளை அனைத்து சுங்க வரிகள் மற்றும் கட்டணங்களில் இருந்து விடுவித்து விரைவாக விநியோகிப்பதற்காக இலகுவான நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்கொடைகள் தொடர்பான வழிகாட்டுதல்களுக்காக WWW.CUSTOMS.GOV.LK என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.
நன்கொடையாக வழங்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பொருட்களின் வகைகள் பற்றிய விரிவான தகவல்களை WWW.DONATE.GOV.LK என்ற இணையத்தளத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று (2) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.