சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதம சட்ட அதிகாரி (ஓய்வு நிலை), பாரிய நிதி மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சிற்குச் சொந்தமான “மெடி ஹவுஸ்” (Medi House) எனும் கட்டிடத்திற்கான குத்தகை உரிமையைப் பெற்றுக்கொள்வது மற்றும் அது தொடர்பான ஒப்பந்தங்களை முன்னெடுப்பதில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட இரகசிய விசாரணைகளின் முடிவிலேயே இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர் சுகாதார அமைச்சின் பிரதம சட்ட உத்தியோகத்தராகப் பணியாற்றிய காலத்தில், பல மோசடிகளில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது:
அந்த வகையில் “மெடி ஹவுஸ்” கட்டிடத்தின் குத்தகை காலத்தை நீட்டிப்பதற்காக, விதிகளுக்கு முரணாக மூன்று குத்தகை ஒப்பந்தங்களைத் தயாரித்து இந்த ஒப்பந்தங்களைத் தயாரிப்பதற்கான கட்டணமாக 4,134,887 ரூபா தொகையை அவர் கோரியுள்ளார்.
கோரப்பட்ட தொகையில் முதற்கட்டமாக 2,000,000 ரூபா (20 இலட்சம்) பணத்தைப் பெற்றுள்ளதுடன், எஞ்சிய தொகையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், “QIDIO ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்” எனும் நிறுவனத்தின் பெயரில் மக்கள் வங்கியில் வழங்கப்பட்ட 500,000 ரூபா பெறுமதியான காசோலையைப் பெற்று பணமாக்கியுள்ளமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
“அரச பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காகப் பெருந்தொகை பணத்தை இலஞ்சமாகக் கோரியமை மற்றும் பெற்றுக் கொண்டமை தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன,”
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத் துறையில் உயர்மட்ட அதிகாரி ஒருவர் இவ்வாறான குற்றச்சாட்டில் சிக்கியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



