பாஸ்கரன் கதீசன்
வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று (23) இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி வருகின்றார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ் தேவி கடுகதி புகையிரதத்துடன், தாண்டிக்குளம் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முச்சக்கரவண்டி மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையைப் பயன்படுத்திய போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
புகையிரதத்துடன் மோதிய வேகத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்து உருக்குலைந்தது.
முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
“குறித்த பகுதியில் சைகை விளக்குகளோ அல்லது முறையான பாதுகாப்புத் தடைகளோ இல்லாததே இவ்வாறான தொடர் விபத்துகளுக்குக் காரணமாகின்றது.” – அப்பகுதி மக்கள் கவலை.
தாண்டிக்குளம் பகுதியில் உள்ள இந்தப் பாதுகாப்பற்ற புகையிரத கடவை நீண்டகாலமாக அபாயகரமான ஒன்றாகவே இருந்து வருகின்றது. அடிக்கடி இவ்வாறான விபத்துகள் நிகழ்ந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.




