சமீபத்தில் வெளியிடப்பட்ட ரூ.2000 நினைவு நாணயத்தாள் படிப்படியாக அனுமதி பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும் என இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த ஒகஸ்ட் 29ஆம் திகதி ரூ.2000 நினைவு நாணயத் தாளை வெளியிட்டது.
புதிய நாணயத்தாள் சீராக ஏற்றுக்கொள்ளப்பட்டு விநியோகிக்கப்படுவதை எளிதாக்கும் வகையில், அனுமதி பெற்ற வணிக வங்கிகள் தங்கள் பணத்தைக் கையாளும் இயந்திரங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.
செயல்முறையின் வேகத்திற்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும்.
அளவீட்டு செயல்முறை முடிந்ததும், புதிய நாணயத்தாள் அனைத்து வங்கி வழிமுறைகளிலும் தடையின்றி பயன்படுத்தப்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் வங்கி உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க இணக்கம் வௌியிடப்பட்ட BYD வாகனங்களின் இயந்திரத் திறனைத் மதிப்பிடுவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அடுத்த சில வாரங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சட்டமா அதிபர் இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
தங்களால் இறக்குமதி செய்யப்பட்ட BYD வாகனங்களை இலங்கை சுங்கம் தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக ஜோன் கீல்ஸ் CG நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் இன்று (15) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.
விமானப்படையால் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பித்தல் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 425 மில்லியன் ஆகும், மேலும் மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறுகின்றமை ஒரு சிறப்பு நிகழ்வாகும்.
குறித்த புனரமைப்பின் கீழ், பேருந்து நிலையத்தில் புதிய கழிப்பறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் நிறுவப்படவுள்ளன.
புதுப்பித்தல் பணிகள் 08 மாத காலத்திற்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒருங்கிணைந்த நேர அட்டவணைகளைத் தவிர அனைத்து SLTB சேவைகளும் போதிராஜா மாவத்தையில் உள்ள 100 அடி சாலையில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படும்.
ஒருங்கிணைந்த நேர அட்டவணையின் கீழ் உள்ள பேருந்துகள் பாஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
2026 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதல் பள்ளி பருவம் ஜனவரி 01, 2026 முதல் பிப்ரவரி 13, 2026 வரை நடைபெறும், மேலும் முதல் கட்டத்தின் பள்ளி விடுமுறைகள் பிப்ரவரி 14 முதல் மார்ச் 22 வரை நடைபெறும். முதல் பருவத்தின் இரண்டாம் கட்டம் மார்ச் 23 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறும். இரண்டாம் கட்டத்தின் பள்ளி விடுமுறைகள் ஏப்ரல் 11, 2026 முதல் ஏப்ரல் 19, 2026 வரை நடைபெறும்.
முதல் பருவத்தின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 20, 2026 முதல் ஏப்ரல் 30, 2026 வரை நடைபெறும், மூன்றாம் கட்டத்தின் பள்ளி விடுமுறைகள் மே 01, 2026 முதல் மே 03, 2026 நடைபெறும்.
இரண்டாம் பருவத்தின் முதல் கட்டம் மே 04, 2026 முதல் மே 26, 2026 வரை நடைபெறும், மே 27, 2026 முதல் மே 31, 2026 வரை விடுமுறை நாட்கள் இருக்கும். இரண்டாம் பள்ளி பருவத்தின் இரண்டாம் கட்டம் ஜூன் 01, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை நடைபெறும்.
மூன்றாம் பருவத்தின் முதல் கட்டம் ஆகஸ்ட் 03, 2026 முதல் செப்டம்பர் 02, 2026 வரை நடைபெறும், செப்டம்பர் 03, 2026 முதல் செப்டம்பர் 06, 2026 வரை விடுமுறை நாட்கள் இருக்கும். மூன்றாம் பருவத்தின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 07, 2026 முதல் டிசம்பர் 12, 2026 வரை நடைபெறும்.
அனைத்து மாகாண தலைமைச் செயலாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாண கல்வி இயக்குநர்கள், வலயக் கல்வி இயக்குநர்கள், பரிவேணாதிபதி தேரர்கள், அதிபர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு இது தொடர்பாக சுற்றறிக்கை எண். 30/2025 அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் டிசம்பர் 05, 2025 வரை நடைபெறும். 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை பிப்ரவரி 2026 இல் நடைபெறும்.
COVID-19 தொற்றுநோய் காரணமாக இந்தத் தேதிகள் மாற்றப்பட்டிருந்தாலும், தேர்வு தேதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை, 2026 முதல் வழக்கம் போல் தேர்வுகளை நடத்த கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10, 2026 முதல் செப்டம்பர் 05, 2026 வரை நடைபெறும், 2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 09, 2026 அன்று நடைபெறும், 2026 ஆம் ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை டிசம்பர் 08, 2026 முதல் டிசம்பர் 17, 2026 வரை நடைபெறும். பொதுத் தகவல் தொழில்நுட்பம் அக்டோபர் 24, 2026 அன்று நடைபெறும்.
மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியும் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், அரச அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுவது ஜனநாயகத்துக்குப் பொருத்தமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.
எனினும், மாகாண சபைத் தேர்தலைப் பழைய தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய முறையில் நடத்துவதா என்பதே தற்போதுள்ள பிரச்சினை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தாலும் தேர்தலை நடத்தும் திகதியை நிச்சயமாகக் குறிப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டதன் பின்னர் தாமதமில்லாமல் மாகாணசபைத் தேர்தலை நிச்சயம் நடத்த முடியும் என்றும் அமைச்சர் சந்தன அபேரத்ன எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
இலங்கை பொதுஜன பெரமுனவின் புதிய அரசியல் திட்டமான “மகிந்த காற்றில் நாமலின் வாசனை” எனும் அதிரடியான அரசியல் உதயம் விரைவில் தொடங்கப்படும் என்று அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு மஹிந்த தலைமையிலான அரசு தோல்வியடைந்த பின்னர் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் “மகிந்த காற்று” தொடங்கியது போலவே, “மகிந்த காற்றில் நாமலின் வாசனை” எனும் அதிரடியான அரசியல் உதயம் இருக்கும் என இலங்கை பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இதேவேளை விரைவில் அரசியல் சூறாவளி ஒன்று உருவாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையைச் சேர்ந்த உயர் தரம் மற்றும் தரம் 5 மாணவர்கள் நேற்று கொழும்பின் முக்கிய இடங்களுக்கு ஒருநாள் கல்விச்சுற்றுலா சென்றனர்.
கொழும்பின் முக்கிய இடங்களான கொழும்பு துறைமுகம், நூதனசாலை, விக்டோரியா பூங்கா, காலி முகத்திடல், போர்ட் சிட்டி மற்றும் வன் கோல்பேஸ் ஆகிய இடங்களுக்கு இவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
சுமார் 90 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த கல்விச்சுற்றுலாவில் கலந்துகொண்டதுடன், இவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய ஒழுங்கு வசதிகளை சஹாப்தீன் லுக்மான் (சிரேஷ்ட துணை சுங்கத்திணைக்கள பணிப்பாளர்) மற்றும் ஐயூப் சபாஹி (தொழிலதிபர்) ஆகியோர் மேற்கொண்டனர்.
மேலும் குறித்த கல்விச்சுற்றுலாவில் பெரிதும் உதவிய குறித்த இருவருக்கும் பாடசாலை சமூகம் தமது நன்றிகளை தெரிவித்துள்ளதுடன், குறித்த சுற்றுப்பயணம் மிகவும் சிறப்பாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீதான தாக்குதலின்போது ரஷ்ய ட்ரோன்கள் நேட்டோ உறுப்பு நாடுகளான ருமேனியா மற்றும் போலந்தின் வான்பரப்பில் ஊடுருவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து, ருமேனியா எல்லையோர பகுதிகளில் அவ்வப்போது ரஷ்ய ட்ரோன்களின் பாகங்கள் விழுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த சூழலில், கடந்த வாரம் நேட்டோ உறுப்பு நாடான போலந்தின் வான்பரப்பில் ரஷ்ய ட்ரோன்கள் ஊடுருவியதாகவும், அவற்றில் சிலவற்றை சுட்டு வீழ்த்தியதாகவும் போலந்து ராணுவம் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக, தற்போது ருமேனியாவின் வான்பரப்பிலும் ரஷ்ய ட்ரோன் ஒன்று ஊடுருவியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது, இந்த ட்ரோன் ருமேனிய வான்பரப்பிற்குள் நுழைந்ததை ரேடாரில் கண்டறிந்ததாகவும், உடனடியாக இரண்டு எஃப்-16 ரக போர் விமானங்கள் விரட்டிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில்லா வெச்சே என்ற எல்லையோர கிராமத்தின் அருகே அந்த ட்ரோன் ரேடார் பார்வையில் இருந்து திடீரென மறைந்துள்ளது.
இந்த ட்ரோன் குடியிருப்பு பகுதிகள் மீது பறக்காததால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த ஊடுருவல் தற்செயலானது அல்ல என்றும், இது போரை விரிவுபடுத்த ரஷ்யா வெளிப்படையான முயற்சி செய்கிறது என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அந்த ட்ரோன் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் ருமேனியாவிற்குள் ஊடுருவி, நேட்டோ வான்பரப்பில் 50 நிமிடங்கள் வரை பறந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தொடர் ஊடுருவல் சம்பவங்களைத் தொடர்ந்து, நேட்டோ அமைப்பு தனது கிழக்கு எல்லையில் வான் பாதுகாப்பை பலப்படுத்த ‘ஈஸ்டர்ன் சென்ட்ரி’ என்ற புதிய பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன், எஃப்-16, ரஃபேல், யூரோஃபைட்டர் ரக போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் கிழக்கு ஐரோப்பிய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தங்கள் வான்பரப்பில் நுழையும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ருமேனியா நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி நிதியம் இப்போது 100% மக்களுக்காகச் செயற்படுகிறது.
வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களின் வரப்பிரசாதமாக மாற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதி நிதியம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 100% மக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2023 (2024) மற்றும் 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்வாங்கும் வகையில், ஒவ்வொரு பாடத்துறையின் கீழும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (14.09.2025) இடம்பெற்றது.
ஜனாதிபதி நிதியம் எடுத்த தீர்மானத்திற்கு அமைய, சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களைக் கௌரவிப்பதற்கான, மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
இதன்போது சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பிரதமர் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
2023 (2024) மற்றும் 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடத்துறையின் கீழும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், அவர்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பானது நாட்டின் எதிர்கால மாற்றத்திற்குத் தேவையான பங்களிப்பையும் தலைமைத்துவத்தையும் பெற்றுத்தரக் காரணமாக அமையும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
“ஜனாதிபதி நிதியம் பற்றிப் பேசும்போது அதைத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட விதம் பற்றியே அதிகம் கேள்விப்படுகிறோம். வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களது சலுகைகள் மற்றும் நலன்களை அதிகரித்துக்கொள்ளவே இந்த நிதியம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது.
ஆயினும் இன்று அந்த நிலைமை முற்றிலும் மாறி, ஜனாதிபதி நிதியத்தின் உண்மையான நோக்கத்திற்காக அதை 100% பயன்படுத்துவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிதியம் இப்போது மக்களுக்கு நெருக்கமாகி, மக்கள் தங்கள் பிரதேசத்திலேயே அதனை எளிதாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
அதேபோல், மனித வளத்தை மேம்படுத்துவதை அரசாங்கம் தனது முதன்மைப் பணியாக அடையாளம் கண்டுள்ளது. அந்த நோக்கத்துடனேயே நாம் கல்வியில் முதலீடு செய்கிறோம். அந்த முதலீடானது பண ரீதியில் மட்டுமன்றி ஏனைய அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மாறிவரும் உலகில் வித்தியாசமான விதத்தில் சிந்திக்கக்கூடிய, ஒரு விடயத்தின் அனைத்துப் பக்கங்களையும் பார்க்கக்கூடிய, உலகத்தை மாற்றக்கூடிய மனிதநேயம் மிக்க குடிமக்களை உருவாக்குவதற்கே நாம் முயற்சிக்கிறோம்.”
இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அவர்கள்,
“ஜனாதிபதி நிதியம் என்பது மக்களின் நிதியம், அதேபோன்று அது மக்களின் தனி உரிமையாகும். அதனை முறையாக மக்களிடம் ஒப்படைப்பதே நமது பொறுப்பு.
தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த ஜனநாயக ரீதியிலான மாற்றத்தின் கீழ், மனித வளத்தை அபிவிருத்தி செய்தல் மிகவும் அவசியமானதாகும். இலங்கை அதிக எண்ணிக்கையிலான இளம் வயதினரைக் கொண்ட ஒரு நாடாகும். ஆகையினாலே, அந்த மாற்றத்தை அடைய இந்த அரசாங்கம் உங்களுக்காக அந்த கல்விச் சூழலை உருவாக்கி வருகிறது” என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவலக பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்சக விஜேமுனி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை அதிகாரிகள், நிர்வாகத் துறை அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
நேற்று திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரம் ஆரம்பமாகியுள்ளது. நேற்று காலை 9 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு விஜய் வருகை தந்திருந்தார். அங்கிருந்து காலை 10 மணிக்கு மரக்கடைக்கு வந்து தனது பிரச்சாரத்தை விஜய் துவங்கி இருக்க வேண்டும்.
ஆனால், தொண்டர்கள் மற்றும் திருச்சி மக்களின் அமோகமான வரவேற்பின் காரணமாக விஜய்யின் பிரச்சார வாகனம் சொன்னபடி சரியான நேரத்திற்கு அங்கு வரமுடியவில்லை. மதியம் 2 மணிக்கு வந்த இடத்திற்கு வந்த நிலையில், கிட்டத்தட்ட 3 மணி அளவில் தான் விஜய் தனது பேச்சை தொடங்கினார்.
இந்த நிலையில், அவர் பேசியது பெரிதும் வைரலாகியுள்ளது. அங்கு பேசிய அவர்;
”எல்லோருக்கும் வணக்கம், போருக்கு செல்வதற்கு முன்பு உங்களை பார்க்க வந்துள்ளேன். அரசியலில் களம் இறங்க அண்ணா முடிவெடுத்த இடம் திருச்சி. பெரியார் வாழ்ந்த மண் திருச்சி. கல்வி மதச்சார்பின்மைக்கு பெயர் பெற்ற இடம் திருச்சி. திருச்சியில் தொடங்கிய அனைத்துமே திருப்பு முனையாகதான் அமையும் என சொல்லுவார்கள். ஜனநாயக போருக்கு முன் மக்களை பார்க்க வந்துள்ளேன். மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது பரவசமாகிறது. தவெக தொண்டர்களை பார்க்கும்போது பரவசமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் உள்ளது” என கூறினார்.
மேலும் “திமுக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. சொன்னீர்களே, செய்தீர்களா..” என கேள்வி எழுப்பிய விஜய், ”டீசல் விலை ரூ. 3 குறைப்பு, மாணவர்கள் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% சதவீதம் இட ஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அரசுப்பணியில் இரண்டு லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? நம்ம கேள்வி கேட்டுகிட்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரப்போவதில்லை” என அவர் தெரிவித்தார்.
“கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பில் சட்ட பிரச்சனைகளில் நோ காம்ரமைஸ். நடைமுறைக்கு எது சாத்தியமோ, அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை, நன்றி வணக்கம்” என கூறி தனது உரையை நிறைவு செய்தார்.