புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று (08) காலை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பிலும் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று(07) வத்திக்கானில் தொடங்கியது.
நேற்று மாலை நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுக்க முடியாததால் இன்று காலை மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்கெடுப்பைத் தொடர்ந்து வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெசிலிக்காவின் புகைபோக்கியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ள நிலையில், இது புதிய பாப்பரசரை இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைக் குறிக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று (08) பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
விமான நிலையம் அருகே உள்ள கோபால் நகர், நசீரா பாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியுள்ளதுடன், அடுத்தடுத்து பலத்த சத்தங்கள் கேட்டதால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறியதுடன், லாகூர் விமான நிலையத்திலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் பயணிகள் அச்சமடைந்ததாக கூறப்படுகிறது.
லாகூரில் குண்டு வெடிப்பு நடந்ததை அந்நாட்டு பொலிஸார் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானநிலையத்திற்கு அருகிலுள்ள வோல்டன் வீதியில் குண்டு வெடிப்பு நடந்தது என்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முன்னதாக நள்ளிரவில் லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியை மூடியதாக அறிவித்தது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில், லாகூர் மற்றும் இஸ்லாமா பாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட உறுப்பினர்கள், கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்திலும் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
வெற்றி தொடர்பாக ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கருத்து தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய இருப்புக்காக கிளிநொச்சி மக்கள் மிகப்பெரிய ஆணையை எமக்கு வழங்கியுள்ளனர். தூய கரங்களோடு, தூய நோக்க சிந்தனையோடு, அறத்தின் வழி கெளரவமான அரசியலை எமது மக்களுக்கு வழங்குவோம். அபிவிருத்தி பணிகளிலும் நிரந்தரமான அபிவிருத்தி பணிகளை செய்வதற்கும் அதற்குரிய முன்னேற்றத்தை காட்டுவதற்கும் இந்த காலம் பயன்பாடுடையதாக மாறும் என கருதுகிறோம்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கான எழுச்சிக்கான தேர்தலாக இந்த தேர்தல் அமைந்திருக்கிறது. தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மாற்றுக்கருத்துக்களை பிழைகளை விட்டிருந்தாலும் இந்த தேர்தலில் மிகத்தெளிவாக தமிழ்த்தேசியத்திற்கான தமது வாக்குகளை அளித்துள்ளனர். ஆகவே வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் அபிலாசை உள்ளது. இப்பொழுது உள்ள அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதி அனுர அரசாங்கத்திற்கு ஒரு செய்தியாக சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ் மக்களுடன் பேசி ஒரு அரசியல் தீர்வை காண போறீர்களா அல்லது வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய பொதுஜன வாக்கெடுப்பை நடாத்தப்போறீர்களா என்ற செய்தியைத்தான் சொல்லியிருக்கிறது.
சமாதானம் பற்றியும் அதிகாரப்பகிர்வு பற்றியும் மெத்தனப்போக்குடன் உரிய தூரநோக்கு சிந்தணையில்லாமல் இருக்கிற அரசாங்கத்திற்கு இந்த தேர்தல் வடக்கு கிழக்கு தமிழ் மக்களால் அரசியல் தீர்வு என்பது எவ்வளவு முக்கியம், எமக்கு நடந்தது இனப்படுகொலை இதற்கான நேர்மையான நீதியான விசாரணை பொறுப்புக்கூறலை இந்த அரசாங்கம் தர தவறினால் அவர்களுக்குரிய பாடம் கற்பிக்கப்படும் என்ற செய்தியை வடக்கு கிழக்கில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் தெளிவாக சொல்கிறது.
எதிர்காலத்தில் தமிழ் கட்சிகளோடு ஒன்றிணைந்து உள்ளூராட்சி மன்றங்களை கொண்டு செல்ல முடியும் என இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும் வார்த்தைகள், சதித்திட்டங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஆதரித்த மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நமது நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த முன்வந்து இந்தத் தேர்தலுக்கு ஒத்துழைப்பை நல்கிய நமது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அண்மையில் நடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் இரு பெரும் மக்கள் ஆணைகளைப் பெற்ற இந்த அரசாங்கம், 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற செய்தியை நாட்டு மக்கள் இத்தேர்தலின் ஊடாக முன்வைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலை கையாண்டது போலவே இந்த உள்ளூராட்சித் தேர்தலையும் ஜே.வி.பி கையாண்டது. தேர்தலுக்காக மதத்தைக் கூடப் இவர்கள் பயன்படுத்தினர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று (07) விசேட அறிக்கையை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கையிலயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டு மக்கள் இப்போது பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான தமது அங்கீகரித்தை வழங்கியுள்ளனர். பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பொய்களை முறியடித்து, உண்மையான பலம் வாய்ந்த மக்கள் சேவைக்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்புகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தின் அடிப்படையில் இந்த சவாலான பொறுப்பிற்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நபராக, நாங்கள் பொதுமக்களின் கருத்துக்கு தலைவணங்கி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைப்போம். அதன் ஊடாக வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், கொள்கை ரீதியானதுமான சிறந்த மக்கள் சேவையை பெற்றுத் தருவோம். இதற்கான தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என தெரிவித்தார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் பிரதேச சபை மற்றும் மன்னார் பிரதேச சபைகளில் எருக்கலம்பிட்டி மண்ணின் இரு மைந்தர்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று, வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
புத்தளம் பிரதேச சபை, பொத்துவில்லு வட்டாரத்தில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்ற திரு லரீப் காசிம் மற்றும் மன்னார் பிரதேச சபை, எருக்கலம்பிட்டி வட்டாரத்தில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்ற முன்னாள் மன்னார் பிரதேச சபை தலைவர் திரு இஸ்மாயீல் இஸ்ஸதீன் ஆகியோரே இவ்வாறு வெற்றிபெற்றுள்ளனர்.
புத்தளம் பிரதேச சபை, பொத்துவில்லு வட்டாரத்தில் முக்கிய நான்கு கட்சிகள் போட்டியிட்ட போதிலும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய மூன்று கட்சிகளே களத்தில் பலப்பரீட்சை நடத்தின.
அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 1398 வாக்குகளையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 938 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி 690 வாக்குகளையும் பெற்றுள்ளதுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை விட மேலதிக 460 வாக்குகளினால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பொத்துவில்லு வட்டாரத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் இதே வட்டாரத்தில் மிகவும் சொற்ப வாக்குகளினால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தோல்வியை சந்தித்திருந்தது.
இதேவேளை மன்னார் பிரதேச சபை, எருக்கலம்பிட்டி வட்டாரத்தில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்ற முன்னாள் மன்னார் பிரதேச சபை தலைவர் திரு இஸ்மாயீல் இஸ்ஸதீன் இம்முறையும் மன்னார் பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.
இத்தேர்தலில் இரண்டு பிரதேச சபைகளிலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற எருக்கலம்பிட்டி மைந்தர்களான திரு லரீப் காசிம் மற்றும் இஸ்மாயீல் இஸ்ஸதீன் ஆகியோர் வாக்களித்த கட்சி போராளிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வௌியாகியுள்ள நிலையில், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பலத்த போட்டி நிலவுகிறது.
குறிப்பாக, கொழும்பு மாநகர சபையின் பெரும்பான்மையை எதிர்க்கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
117 உறுப்பினர்களை கொண்ட கொழும்பு மாநகர சபையில் 48 உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் பெரும்பான்மைக்கு தேவையான 69 உறுப்பினர்களைப் பெற்றுள்ளன.
எவ்வாறாயினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 29 உறுப்பினர்களை வென்றுள்ளதோடு, ஆட்சியமைப்பதற்காக ஏனைய கட்சிகளின் உதவியை நாட வேண்டியுள்ளது.
அதேபோன்று 48 உறுப்பினர்களை கொண்டுள்ள தேசிய மக்கள் சக்திக்கும் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை கைப்பற்ற ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது.
எனவே, தற்போது பெரிதும் பேசும் பொருளாகியுள்ள கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றப்போகும் கூட்டணி எதுவென்பதை காலமே தீர்மானிக்கும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை நகர வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,260 வாக்குகள் – 9 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,397 வாக்குகள் – 5 ஆசனங்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 795 வாக்குகள் – 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 265 வாக்குகள் – 1 ஆசனங்கள்
சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லியனகேமுல்ல, சீதுவை பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்வதற்கு சீதுவை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லியனகேமுல்ல, சீதுவை பிரதேசத்திற்கு காரில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் மூன்று நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து சீதுவை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படங்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபரின் விபரங்கள் :
1.பெயர் – மொஹொமட் அஸ்மன் ஷெரிப்டின் 2. தேசிய அடையாள அட்டை இலக்கம் – 911013363V 3. முகவரி – இரத்தொலுகம, கட்டுவன வீதி, ஹோமாகம
இந்த புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் சீதுவை பொலிஸ் நிலையத்தின் 071 – 8591637 அல்லது 011 – 2253522 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.