Thursday, July 30, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 17

புத்தளத்தில் நெஞ்சை உலுக்கும் துயரம்: 15 மாத சிசுவுடன் உயிரிழந்த யானை!

0

நிருபர்: அசாருதீன்

  • புத்தளம், செல்லக்கண்டல் வனப்பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றின் சடலம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க இந்த யானையின் பிரேதப் பரிசோதனையில், அதன் வயிற்றில் நன்கு வளர்ச்சியடைந்த 15 மாத குட்டியொன்றும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • சுமார் 8 அடி உயரமான இந்த யானை, பல மாதங்களாக இப்பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில் காலில் காயங்களுக்காக சிகிச்சை பெற்றுள்ளது.

புத்தளம், செல்லக்கண்டல் வனப்பகுதியில் இயற்கை ஆர்வலர்களை மட்டுமன்றி, மனிதநேயம் கொண்ட அனைவரையும் கண் கலங்க வைக்கும் ஒரு துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது. காட்டின் கம்பீரமாக வலம்வந்த தாய் யானை ஒன்று, அநாதரவாக உயிரற்ற சடலமாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. இந்த யானையின் மரணம் வெறும் இயற்கையான ஒன்றல்ல; இதன் பிரேதப் பரிசோதனையின் போது வெளிவந்த தகவல் காண்போரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மீட்கப்பட்ட இந்த யானைக்கு சுமார் 35 முதல் 40 வயது இருக்கலாம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். சுமார் 8 அடி உயரமான இந்த கம்பீரமான உயிரினத்தின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே அந்த நெஞ்சை உலுக்கும் தகவல் வெளிவந்தது. ஆம், அந்த தாய் யானையின் வயிற்றில் 15 மாதங்களான, நன்கு வளர்ச்சியடைந்த குட்டி யானையொன்றின் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமிக்கு வரக் காத்திருந்த ஒரு சிசுவும் தாயோடு சேர்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

உண்மையில் இந்த யானை அதிகாரிகளுக்குப் புதியதல்ல. இந்த தாய் யானை கடந்த பல மாதங்களாக இதே பகுதியிலேயே சுற்றித்திரிந்துள்ளது. அதுமட்டுமன்றி, பல சந்தர்ப்பங்களில் இந்த யானையின் கால்களில் ஏற்பட்டிருந்த காயங்களை அவதானித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், அதற்குப் பல தடவைகள் சிகிச்சைகளும் அளித்துள்ளனர். இவ்வளவு கண்காணிப்பில் இருந்த யானைக்கு திடீரென என்ன நடந்தது? அதன் மரணத்துக்கான உண்மையான காரணம் என்ன என்ற கேள்வி தற்போது வலுவாக எழுகிறது.

யானையின் கால்களில் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளன. அந்த துப்பாக்கிச் சூட்டு காயங்கள் ஊடாக உடலில் ஏற்பட்ட கொடிய கிருமித்தொற்றே (விஷம் ஏறியதால்) இந்த தாய் மற்றும் குட்டியின் மரணத்திற்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த துயரச் சம்பவம் தொடர்பான முழுமையான பிரேதப் பரிசோதனைகளை நிக்கவெரட்டிய மிருக வைத்திய காரியாலயத்தின் வைத்திய அதிகாரி செல்வி ஏ.எம்.பி.எம். அசாசூரிய தலைமையிலான மருத்துவக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். மனிதர்களின் இரக்கமற்ற செயலுக்கு மீண்டும் ஒரு தாயும் சேயும் பலியாகியுள்ளமை சமூக வலைத்தளங்களிலும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வென்னப்புவவில் கோர விபத்து: முதியவர் சம்பவ இடத்திலேயே பலி!

0

ஜூட் சமந்த

வென்னப்புவ: வென்னப்புவ கிரிமட்டியான பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற ஒரு பயங்கர விபத்து, வீதியில் சென்றவர்களை உறைபனியாய் உலுக்கியெடுத்துள்ளது. லொறியொன்றுடன் நேருக்கு நேர் மோதிய த்ரீவீலர் ஒன்று, கண் இமைக்கும் மூடித் திறப்பதற்குள் வீதியில் பம்பரமாகச் சுழன்று பலமுறை குடைசாய்ந்து உருக்குலைந்துள்ளது. இந்த விபத்தின் கோரத்தாண்டவத்தில், அதன் சாரதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியாகியுள்ளார்.

அப்படியென்றால், அந்தப் பாதசாரிகள் கண்முன்னே சில நொடிக் கணத்தில் அரங்கேறிய அந்த அதிர்ச்சிச் சம்பவம் எப்படி நடந்தது?

கிரிமட்டியான பகுதியிலிருந்து வென்னப்புவ நோக்கி ஒரு த்ரீவீலர் வழமை போல பயணித்துக் கொண்டிருந்தது. திடீரென, யாரும் எதிர்பாராத விதமாக அந்த த்ரீவீலர் தனது கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் வலது பக்கமாகத் திசைமாறி அசுர வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அதேநேரம் அதற்கு நேர் எதிரே ஒரு லொறி வந்துள்ளது. அடுத்த நொடி… காதைப்பிளக்கும் பெரும் சத்தத்துடன் அந்த த்ரீவீலர் லொறியின் முன் பக்கத்தில் (Face to Face) பயங்கரமாக மோதியது.

லொறியின் வேகத்தோடு மோதிய த்ரீவீலர், வீதியிலேயே பல தடவைகள் தூக்கி வீசப்பட்டு, குடைசாய்ந்து உருண்டது. இந்த மிகக் கொடூரமான அதிர்வில், த்ரீவீலரைச் செலுத்திக் கொண்டிருந்த முதியவர், அதன் பக்கவாட்டுப் பகுதியினூடாக வீதிக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு கடினமான தார் வீதியில் அபாண்டமாக விழுந்துள்ளார். தலையிலும் உடலிலும் ஏற்பட்ட மிகக் கடுமையான காயங்கள் காரணமாக, மீட்புக் குழுவினர் அங்கு வருவதற்கு முன்பாகவே, அந்த இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

விசாரணையில் தெரியவந்த அந்தப் பரிதாபத்துக்குரிய முதியவர் யார் தெரியுமா?

விபத்தில் பலியானவர் தங்கொடுவ, மெத கோனவில பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஜயசிங்க ஆரச்சிகே தொன் பொலிகாப் அப்புஹாமி எனப் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த வயதிலும் அவர் தனது வாழ்வாதாரத்திற்காக த்ரீவீலரைச் செலுத்தினாரா அல்லது தனிப்பட்ட தேவைக்காகச் சென்றாரா என்பது இன்னும் முழுமையாகத் தெரியவரவில்லை. தற்போது அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் (Marawila Base Hospital) வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் கொஸ்வத்த பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் உடனடியாகக் களத்தில் குதித்தனர். விபத்துக்குக் காரணமான லொறியைத் தமது பொறுப்பில் எடுத்துள்ள பொலிஸார், அதன் சாரதியைச் சம்பவ இடத்திலேயே வைத்துக் கைது செய்துள்ளனர். விபத்துக்கான உண்மையான காரணம் என்ன, த்ரீவீலரின் பிரேக் துண்டிக்கப்பட்டதா அல்லது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவா என்பது குறித்து கொஸ்வத்த பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் அதிஉச்சத்தை தொட்ட டெங்கு: 5,000 பேருக்கு வழக்கு!

0

ஜூட் சமந்த

  • இலங்கையில் டெங்கு காய்ச்சல் மிக மோசமான ‘அதி-தொற்று’ (Hyper-epidemic) நிலையை எட்டியுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIs) எச்சரித்துள்ளது.
  • டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை அசுத்தமாக வைத்திருந்த 5,000 இற்கும் மேற்பட்டோருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
  • டெங்கு நோயாளர்களின் வருகை சடுதியாக அதிகரித்துள்ளதால், நாட்டின் பல பிரதான வைத்தியசாலைகள் தங்களின் கொள்ளளவை மீறி நிரம்பி வழிகின்றன.

கொழும்பு: “கொரோனாவுக்குப் பிறகு இலங்கை சந்திக்கும் அடுத்த பெரிய ஹெல்த் எமர்ஜென்சி இதுதான்!” என்று சொல்லுமளவுக்கு நிலைமை விபரீதமாக மாறியிருக்கின்றது. நாடளாவிய ரீதியில் கொட்டித்தீர்க்கும் பருவமழைக்கு மத்தியில், டெங்கு காய்ச்சல் இப்போது இலங்கையில் கட்டுப்பாட்டை மீறி அதி-தொற்று நிலையை எட்டியுள்ளது. அரசாங்கமும் சுகாதாரப் பிரிவினரும் தங்களின் அன்றாட கடமைகளை அப்படியே ஓரம் கட்டிவிட்டு, இரவும் பகலும் வீதிகளில் இறங்கி வேலை செய்தும் கூட, டெங்கு அரக்கனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த ஒட்டுமொத்தப் போராட்டத்துக்கும் பின்னணியில் இருக்கும் ஆகப்பெரிய வில்லன் யார் தெரியுமா?

பொதுமக்களில் ஒரு சாராரின் பொறுப்பற்றத்தனமே இந்த நிலைக்குக் காரணம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் அதிகாரிகள் வீதி வீதியாக நடத்திய அதிரடிச் சோதனைகளில், நுளம்புகள் முட்டையிட்டுப் பெருகுவதற்குத் தாராளமாக இடமளித்த 5,000 இற்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அந்தந்தப் பிரதேச நீதிமன்றங்களில் உடனடியாக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டின் பிரதான ஆஸ்பத்திரிகள் அனைத்தும் டெங்கு நோயாளர்களால் முற்றாக ‘ஹவுஸ்புல்’ ஆகியுள்ளன. அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை வைத்தியசாலைகளின் கொள்ளளவை விடவும் பல மடங்கு அதிகரித்துள்ளதால், பல இடங்களில் கட்டில்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, தரைகளிலும் நோயாளர்களைப் பராமரிக்க வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது. நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தும், உங்கள் வீட்டுத் தோட்டத்தில் தேங்கி நிற்கும் ஒரு மூடித் தண்ணீரே அடுத்த உயிரைப் பறிக்கும் ஆயுதமாக மாறக்கூடும் என்பதைப் பலர் உணர்வதாக இல்லை.

அப்படியென்றால், இந்தத் தொற்று இவ்வளவு வேகமாக பரவுவதற்கு வீடுகள் மட்டும்தான் காரணமா? அதிகாரிகளின் புலனாய்வில் வெளிவந்த உண்மை இதோ…

நகர்ப்புறங்களில் சத்தமில்லாமல் டெங்குவை வளர்த்து வரும் பிரதான ‘சைலண்ட் கில்லர்கள்’ யார் என்பதை அதிகாரிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் போன்ற பிரதான நகரங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிறு நகரங்களில் பூட்டப்பட்டு, பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ள பிரம்மாண்டமான கட்டிடங்களே இந்தத் தொற்றின் பிறப்பிடங்களாக மாறியுள்ளன. உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருக்கும் அல்லது வழக்குக் காரணங்களால் கைவிடப்பட்டுள்ள இந்த வர்த்தகக் கட்டிடங்களின் மொட்டை மாடிகளும், நிலத்தடி நிலவறைகளும் இன்று கோடிக்கணக்கான டெங்கு நுளம்புகளின் சொகுசு விடுதிகளாக மாறியுள்ளன.

“இனிமேல் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” என கறாராகக் கூறியுள்ளார் உபுல் ரோஹண. உங்களுக்குச் சொந்தமான பாழடைந்த கட்டிடங்கள் இருந்தால், இந்த நிமிடமே அதனைத் துப்பரவு செய்ய முனையுங்கள். தவறும்பட்சத்தில், கட்டிட உரிமையாளர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தின் மூலம் அதியுயர் தண்டனை பெற்றுத்தர சுகாதாரப் பிரிவு தீர்மானித்துள்ளது. நீங்கள் விழிப்புடன் இல்லாவிட்டால், அடுத்த முறை உங்கள் வீட்டு வாசலில் நிற்பது டெங்கு நுளம்பு மட்டுமல்ல, நீதிமன்ற பிடியாணையும்தான்!

மாதம்பையில் நடைபெற்ற “Agricultural Revival 2026” விவசாயக் கண்காட்சி!

0

ஜூட் சமந்த

மாதம்பே: புத்தளம் மாவட்டத்தின் தென்னந்தோப்புகளுக்கு இடையால் வீசும் சோளகக் காற்றுக்கு மத்தியிலும், மாதம்பே பகுதி நேற்று முதல் ஒரு பசுமைப் புரட்சிக் கூடாரமாக மாறியிருந்தது. வயம்ப (வடமேல்) மாகாண விவசாயத் திணைக்களம் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்த “Agricultural Revival 2026” விவசாயக் கண்காட்சி, மாதம்ப வாராந்த சந்தை பொது மைதானத்தில் கடந்த 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் மிகக் கோலாகலமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.

வழமையான கண்காட்சிகள் போலன்றி, இம்முறை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பல அதிநவீன தொழில்நுட்பங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டதே மக்கள் கூட்டத்தை அலைமோதச் செய்தது.

கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணி விஜேசிங்க மற்றும் வயம்ப மாகாண விவசாயப் பணிப்பாளர் கலாநிதி ஏ.எம்.பி.டப்ளியூ அபேசிங்க ஆகியோரின் முதன்மைத் தலைமையில், மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. “பாரம்பரிய விவசாய முறைகளை விடுத்து, தொழில்நுட்பத்தை கையில் எடுத்தால் மட்டுமே உலகச் சந்தையை நாம் பிடிக்க முடியும்” என இதன்போது பிரதம அதிதிகள் சுட்டிக்காட்டினர்.

அங்காடிக்குள், நவீன விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் (Drip Irrigation), புதிய ஒட்டுரகப் பயிர்கள் மற்றும் இயற்கை வழியிலான உரப் பயன்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதுமட்டுமன்றி, அண்மைக்காலமாக புத்தளம் மாவட்ட விவசாயிகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியிருந்த பயிர் நோய்கள் மற்றும் பூச்சித் தாக்கங்களுக்கு, நவீன ஆய்வுகூடங்கள் மூலம் எவ்வாறு உடனடி சிகிச்சை அளிப்பது என்ற நேரடிச் செய்முறைகளும் செய்து காட்டப்பட்டன.

இதனால், வெறும் பார்வையாளர்களாக வந்த விவசாயிகள் பலரும், தங்களின் விவசாயப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளோடு அரங்கை விட்டு வெளியேறியதை அவதானிக்க முடிந்தது.

இருப்பினும், இம்முறை கண்காட்சியின் பிரதான ஈர்ப்பாக அமைந்தது முற்றிலும் வேறொரு விடயம். அண்மைக்காலமாக இலங்கையில் பெரும் லாபம் ஈட்டித் தரும் சுயதொழிலாக மாறிவரும் ‘தேனீ வளர்ப்பு’ (Bee keeping) தொடர்பான விழிப்புணர்வே அதுவாகும். சிறிய இடத்தில், குறைந்த முதலீட்டில் தேன் மெழுகு மற்றும் தூய தேன் மூலம் எவ்வாறு மேலதிக வருமானத்தைப் பெறுவது என நிபுணர்கள் விளக்கியபோது, இளைஞர்கள் மற்றும் பெண்கள் கூட்டம் அந்த அரங்கைச் சூழ்ந்துகொண்டது.

சுற்றுசூழல் சமநிலையைப் பேணவும், வீட்டுப் பொருளாதாரத்தை உயர்த்தவும் இத்தொழில் எவ்வாறு உதவும் என்பதைப் பலரும் மிக ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

மாதம்ப உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலய அதிகாரிகளின் அயராத உழைப்பில், மிக நேர்த்தியான திட்டமிடலுடன் இந்த “Agricultural Revival 2026” கண்காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. புத்தளம், சிலாபம், நாத்தாண்டியா போன்ற சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பாடசாலை மாணவர்கள், விவசாய ஆர்வலர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் மாதம்ப நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இவ்வாறானதொரு வழிகாட்டல் தமக்குக் கிடைத்தமை பெரும் பாக்கியம் என இப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

வெனிசுலாவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்: 32 பேர் பலி!

0
  • தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஒரு நிமிட இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
  • தலைநகர் கராகஸ் (Caracas) மற்றும் லா குவைரா (La Guaira) ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து வீழ்ந்ததில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதோடு, 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
  • நாட்டின் நிலவரம் மோசமடைந்துள்ளதால் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.

கராகஸ்: ஒரே ஒரு நிமிட இடைவெளிதான்! ஒட்டுமொத்த நாடே குலுங்கி, மரண ஓலம் எழுப்பத் தொடங்கியுள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை உலுக்கியெடுத்த அடுத்தடுத்த இரண்டு மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், அங்குள்ள பல அடுக்குமாடி கட்டிடங்களை சில நொடிகளில் தரைமட்டமாக்கியுள்ளன. இதுவரை உத்தியோகபூர்வமாக 32 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், இடிபாடுகளுக்குள் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருப்பதால் இந்த எண்ணிக்கை பல ஆயிரங்களாக உயரக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) எச்சரித்துள்ளது.

இந்த பேரழிவின் அதிர்வலைகள் தலைநகர் கராகஸை மட்டுமன்றி, அண்டை நாடான பிரேசிலின் அமேசான் காடுகள் வரை உணரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியூட்டும் தருணத்தில், மக்கள் வீடுகளை விட்டும், வர்த்தக நிலையங்களை விட்டும் அலறியடித்தபடி வீதிகளுக்கு ஓடி வந்துள்ளனர். கராகஸ் நகருக்கு மேற்கே 168 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மொரோன் (Moron) பகுதியை மையமாகக் கொண்டு முதலில் 7.2 ரிக்டர் அளவிலும், அடுத்த சில நொடிகளில் அதே பகுதியில் 7.5 ரிக்டர் அளவிலும் இந்த இரட்டை நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன. வீதிகள் பிளந்து, கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்ததில், வீடுகளுக்குள் இருந்த தளபாடங்கள் வீதிகளில் செல்வோருக்கு அப்படியே தெரியும் அளவுக்கு சேதம் மிகக் கொடூரமாகக் காணப்படுகிறது.

“எனது வாழ்நாளில் இப்படியொரு நடுக்கத்தை நான் பார்த்ததே இல்லை; குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த பொருட்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டன” என 56 வயதுடைய கராகஸ் நகரவாசி ஒருவர் கண்ணீருடன் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.

தற்போது நாட்டின் நிலைமை மிக மோசமடைந்துள்ளதால், தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் உடனடியாக நாடு முழுவதும் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். குறிப்பாக, ‘லா குவைரா’ (La Guaira) மாநிலமே இந்த இயற்கைச் சீற்றத்தினால் ஆகக் கூடுதலாகப் பாதிக்கப்பட்டு, ஒரு சிதைந்த சுடுகாடு போலக் காட்சியளிப்பதாக அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார். அங்குள்ள பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகின்றன.

சுரங்கப்பாதை (Metro) சேவைகள் மற்றும் எரிவாயு விநியோகங்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், மீட்புப் பணிகளுக்கு இடையூறாக அலைபேசி மற்றும் மின்சாரக் கட்டமைப்புகளும் செயலிழந்துள்ளன.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் உயிர்களைக் காப்பாற்ற தங்களது உயிரையும் பணயம் வைத்து ‘அசுர வேகத்தில்’ போராடி வருகின்றனர். நாட்டின் பிரதான சர்வதேச விமான நிலையமான சைமன் பொலிவார் விமான நிலையத்தின் ஓடுதளங்கள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால் அது தற்காலிகமாக மூடப்பட்டு, விமானச் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையைப் போல பொருளாதார நெருக்கடிகளால் ஏற்கனவே தத்தளித்துக் கொண்டிருக்கும் வெனிசுலாவுக்கு, இந்த இயற்கை பேரிடர் “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல” அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் அவதானிகள் கவலை வெளியிடுகின்றனர்.

இந்நிலையில், வெனிசுலா மக்களின் துயர் துடைக்க சர்வதேச சமூகமும் மனிதாபிமான அடிப்படையில் கரம் கோர்க்கத் தொடங்கியுள்ளது. உலகப் புகழ்பெற்ற ஸ்பானிய-அமெரிக்க சமையல் கலைஞரும் சமூக ஆர்வலருமான ஜோஸ் ஆண்ட்ரெஸ் (Jose Andres), தனது ‘லாங்கர் டேபிள்ஸ் ஃபண்ட்’ (Longer Tables Fund) ஊடாக முதற்கட்டமாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவசர நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இவர் ஏற்கனவே காசா போர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ போன்ற உலகளாவிய பேரிடர்களின் போது ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெனிசுலாவிலும் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய இவருடைய குழு களமிறங்கியுள்ளது.

டெங்கு அரக்கனுக்கு இரையான பல்கலைக்கழக மாணவி: மாத்தறையில் அதிர்ச்சி!

0

ருகுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர், டெங்கு காய்ச்சல் காரணமாக துரதிர்ஷ்டவசமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு அகால மரணமடைந்தவர் மாத்தறை, தெனியாய பகுதியைச் சேர்ந்த, ருகுணு பல்கலைக்கழகத்தின் 46ஆவது மாணவர் குழுவைச் சேர்ந்த சந்தலி தாரகா என்ற மாணவியாவார்.

அவர் உயிரிழப்பதற்கு முன்னர் தனது நெருங்கிய தோழி ஒருவருக்கு வட்ஸ்எப் மூலம் அனுப்பிய செய்தியில், “இறக்காமல் இருந்தால் வருவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது அவர் தனது தோழிக்கு அனுப்பிய கடைசிச் செய்தியாகும் என்பதுடன், அவரது மறைவு பல்கலைக்கழகம் முழுவதையும் பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சந்தலியின் மறைவு குறித்து அவரது சக மாணவ, மாணவிகள் சமூக வலைத்தளங்களில் உருக்கமான பதிவுகளை இட்டு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருவதுடன், இதுபோன்ற அகால மரணம் இனிவரும் காலங்களில் ஏற்படக் கூடாது என்றும் பிரார்த்தித்துள்ளனர்.

இன்னுமொரு மாணவரின் உயிர் டெங்கு நோய்க்கு பலியாகும் வரை காத்திருக்காமல், பல்கலைக்கழக வளாகங்களுக்குள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை உடனடியாக அமல்படுத்துமாறு பல்கலைக்கழக மாணவர்கள் அதிகாரிகளிடம் பலத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது மாத்தறை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியும் டெங்கு நோய் பரவும் அதிக அபாய வலயப் பகுதியாகக் காணப்படுவதால், தங்களது பிள்ளைகள் மற்றும் அன்பானவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக சுற்றியுள்ள சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகம் தடை: நாடாளுமன்றில் சட்டமூலம்!

0
  • 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
  • நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவினால் இந்த “சமூக ஊடக குறைந்தபட்ச வயது சட்டமூலம்” கையளிக்கப்பட்டுள்ளது.
  • தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் நியமிக்கப்படும் விசேட ஆணையாளர் ஊடாக இந்தச் சட்டம் கண்காணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

இலங்கையில் டிஜிட்டல் தலைமுறையின் எதிர்காலத்தை மாற்றியமைக்கக்கூடிய மிக முக்கியமானதொரு சட்ட நகர்வு நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஸ்மார்ட்போன்களுக்குள்ளும் சமூக ஊடக மாயைக்குள்ளும் மூழ்கிக்கிடக்கும் சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில், புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அரசாங்கம் தயாராகி வருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவினால், “சமூக ஊடக குறைந்தபட்ச வயது சட்டமூலம்” (Social Media Minimum Age Bill) இன்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. இணைய உலகிலுள்ள ஆபத்தான பக்கங்களில் இருந்தும், தீங்கிழைக்கும் உள்ளடக்கங்களில் இருந்தும் நமது நாட்டுச் சிறுவர்களைப் பாதுகாப்பதே இச்சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும்.

அமைச்சருக்குக் கிடைக்கும் அதிரடி அதிகாரம்!

இனிவரும் காலங்களில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக் போன்ற சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைத் தடுப்பதற்கான கடுமையான விதிமுறைகளை வகுக்கும் அதிகாரம் உரிய அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளது. இதுமட்டுமன்றி, சிறுவர்கள் ஒரு நாளில் எவ்வளவு நேரம் (Screen Time) சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம் அல்லது எந்தெந்த நேரங்களில் மட்டுமே பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன. இதனால், பிள்ளைகளின் இணையப் பயன்பாட்டைப் பெற்றோரால் மாத்திரமன்றி, சட்ட ரீதியாகவும் கட்டுப்படுத்த வழி பிறக்கவுள்ளது.

கண்காணிக்கப் போவது யார்?

இந்தச் சட்டம் வெறும் காகிதத்தோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை. இதனைத் தீவிரமாகக் கண்காணித்து நடைமுறைப்படுத்துவதற்காக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் விசேட ‘அங்கீகரிக்கப்பட்ட ஆணையாளர்’ ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். இவரினூடான கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலமே சட்டத்தை மீறுபவர்கள் மீதான நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.

விதிமுறைகளில் உள்ள முக்கிய தெளிவுபடுத்தல்:

இச்சட்டமூலம் அமுலாக்கப்படும் போது, அதன் சிங்கள மற்றும் தமிழ் பதிப்புகளுக்கு இடையே ஏதேனும் மொழிபெயர்ப்பு முரண்பாடுகள் அல்லது சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில், சிங்கள மொழியிலான உரையே மேலோங்கி நிற்கும் (இறுதியானதாகக் கருதப்படும்) என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இணைய உலகிற்கு அடிமையாகி வரும் இன்றைய சிறுவர் சமூகத்தை, இந்த புதிய சட்டமூலம் எவ்வாறு நல்வழிப்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தேங்காய்த் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி!

0

இலங்கையர்களின் சமையலறைகளில் அத்தியாவசிய அங்கமாக விளங்கும் தேங்காய்க்கு, எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் புதிய செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் (Chilaw Plantations) மற்றும் தென்னை பயிர்ச்செய்கையாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து இந்தத் தீர்மானமிக்க நடவடிக்கையை எடுத்துள்ளன.

இலங்கையில் தற்போதுள்ள பெரும்பாலான தென்னந்தோட்டங்கள் முதுமையடைந்து வருவதால், அவற்றிலிருந்து எதிர்பார்த்த அளவு தேங்காய் மகசூலைப் பெற முடிவதில்லை என்ற கசப்பான உண்மையை தென்னை பயிர்ச்செய்கையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் ஷகில விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

“குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய புதிய தென்னம்பிள்ளைகளை நடுவது மட்டுமே இதற்குள்ள ஒரே தீர்வு. தற்போதுள்ள வயதான மரங்களுக்குப் பதிலாக புதிய பயிர்ச்செய்கைகளை அவசரமாக ஆரம்பிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் அதிரடி சவால்

விவசாயிகளின் இந்த நீண்டகாலத் தேவையைத் தம்மீதான சவாலாக ஏற்றுக்கொண்டு களமிறங்கியுள்ளது சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம். இது குறித்து கருத்து வெளியிட்ட நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி சன்ன திஸாநாயக்க:

“எமது பிரதான தோட்டங்களில் இதற்கான தரமான தென்னம்பிள்ளை நாற்றுமேடைகளை ஏற்கனவே வெற்றிகரமாக அமைத்துள்ளோம். இந்த உயர்தர தென்னம்பிள்ளைகள் மூலம் விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவதுடன், நாட்டின் நுகர்வுத் தேவையை எம்மால் தாராளமாகப் பூர்த்தி செய்ய முடியும்” என நம்பிக்கையூட்டினார்.

ஐந்து ஆண்டுகளில் பிறக்கும் புதிய விடியல்

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த சில மாதங்களுக்குள் சங்கத்தின் உறுப்பினர்களுக்குத் தேவையான நாற்றுகள் தடையின்றி விநியோகிக்கப்படவுள்ளன. இதன் நற்பலனாக, இன்னும் 5 வருடங்களில் இலங்கையில் தேங்காய்த் தட்டுப்பாடு என்ற சொல்லுக்கே இடமிருக்காது என அதிகாரிகள் சூளுரைத்துள்ளனர்.

இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வில் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் பொது மேலாளர் ஜினேஷ் மடவல, பிரதிப் பொது மேலாளர் (பெருந்தோட்டம்) அநுர கருணாதுங்க மற்றும் தென்னை பயிர்ச்செய்கையாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் பிரசன்ன அமரதுங்க உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தித் தொகுப்பு: ஜூட் சமந்த

கஞ்சா வேட்டைக்குச் சென்ற பொலிஸாருக்கு மண்வெட்டியால் அடி!

0

செய்தியாளர் ஜூட் சமந்த

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள பின்னணியில், கஞ்சா கடத்தல் காரர்களை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் நேற்று (22) சாலியவெவ பகுதியில் பதிவாகியுள்ளது.

சாலியவெவ பொலிஸ் நிலையத்தின் தற்காலிக பொறுப்பதிகாரியின் உத்தரவின் பேரில், வெவ்வேறு முறைப்பாடுகள் தொடர்பான கள விசாரணைகளுக்காக பொலிஸ் சார்ஜன்ட் உபுல் (34911) என்பவர் தனது உத்தியோகபூர்வ மோட்டார் சைக்கிளில் மூனமல்கஸ்வெவ பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தனது வழக்கமான கடமைகளில் ஈடுபட்டிருந்தபோதே, அவரது தொலைபேசிக்கு அந்த ‘இரகசிய’ அழைப்பு வந்துள்ளது.

ஒற்றன் கொடுத்த ‘ஸ்பாட்’ தகவல்:

“சேர், மூனமல்கஸ்வெவவில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீடொன்றுக்கு பெருமளவிலான கஞ்சாத் தொகை கொண்டுவரப்பட்டிருக்கு…” – தனிப்பட்ட ஒற்றன் வழங்கிய இந்தத் தகவலைக் கேட்டு சார்ஜன்ட் உபுல் சும்மா இருக்கவில்லை. உடனடியாக சாலியவெவ பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்கு விபரத்தை முன்கூட்டியே அறிவித்துவிட்டு, சந்தேகத்துக்கிடமான அந்த வீட்டை நோக்கித் தனது மோட்டார் சைக்கிளை முடுக்கியுள்ளார். ஆனால், அங்கு தனக்காகக் காத்திருந்த விபரீதத்தை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

பொலிஸ் அதிகாரி வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து விசாரிக்க முற்பட்ட கணமே, ஆவேசமடைந்த வீட்டு உரிமையாளர் கையில் மண்வெட்டியுடன் பாய்ந்துள்ளார். கண் இமைக்கும் நேரத்திற்குள் பொலிஸ் அதிகாரி மீதும், அவரது மோட்டார் சைக்கிள் மீதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த பிறிதொரு நபர், காயமடைந்த பொலிஸ் அதிகாரியைச் சமயோசிதமாக மீட்டெடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான சார்ஜன்ட் உபுல், உடனடியாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குத் தகவல் வழங்கியதை அடுத்து, அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நொச்சியாகம மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரச அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து, கொலைவெறித் தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளார். தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைச் சட்டத்தின் முன் நிறுத்த சாலியவெவ பொலிஸார் விசேட வலைவீச்சு வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

எரிபொருள் மானியத்தில் மோசடி: நங்கூரமிட்டு நிற்கும் 2,500 ஆழ்கடல் படகுகள்!

0
  • எரிபொருள் மானியம் வழங்குவதாகக் கூறி படிவங்கள் நிரப்பப்பட்டு ஒன்றரை மாதங்கள் கடந்தும், இதுவரை மீனவர்களுக்கு எவ்வித மானியமும் கிடைக்கவில்லை.
  • அதிகரித்துள்ள எரிபொருள் செலவு காரணமாக, இலங்கையிலுள்ள 5,000க்கும் மேற்பட்ட ஆழ்கடல் படகுகளில் சுமார் 2,500 படகுகள் தொழிலுக்குச் செல்லாமல் துறைமுகங்களிலேயே முடங்கிக்கிடக்கின்றன.
  • சர்வதேச சந்தையில் ஏனைய நாடுகள் தங்களது மீனவர்களுக்கு மானியம் வழங்குவதால், அவர்களுடன் போட்டியிட முடியாமல் இலங்கை மீன்களுக்கான சர்வதேச கேள்வி சரிவடைந்து வருகிறது.

செய்தியாளர் ஜூட் சமந்த

ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கான எரிபொருள் மானியம் வழங்கப்படும் என்று அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி, வழமை போல மீனவர்களை ஏமாற்றும் மற்றுமொரு ‘பொய் வாக்குறுதியாகவே’ முடிந்துள்ளதாக அகில இலங்கை ஆழ்கடல் படகு உரிமையாளர்கள் சங்கம் கடுமையாக சாடியுள்ளது. வென்னப்புவ – வெல்லமங்கர மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (23) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மீனவ பிரதிநிதிகள் இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

முடங்கும் படகுகள்: பின்னணியில் உள்ள பேராபத்து!

இலங்கையில் சர்வதேச கடற்பரப்பிற்குச் சென்று மீன்பிடிக்கும் 5,000க்கும் மேற்பட்ட ஆழ்கடல் படகுகள் உள்ளன. ஆனால், இன்று அதில் பாதியளவான 2,500 படகுகள் துறைமுகங்களிலேயே முடங்கிக் கிடக்கின்றன. இதற்குக் காரணம் தட்டுப்பாடு அல்ல, மாறாக ஒருமுறை கடலுக்குச் சென்று வருவதற்குத் தேவையான எரிபொருளுக்காக படகு உரிமையாளர்கள் அள்ளிக்கொட்ட வேண்டியிருக்கும் மலைப்பொலிவான பணம்தான் என்று சுட்டிக்காட்டுகிறார் சங்கத்தின் செயலாளர் ருவன் பெர்னாண்டோ.

“சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது எரிபொருள் செலவு 100% அதிகரித்துள்ளது. ஆனால், மீனின் விலை உயரவில்லை. ஏனென்றால் மீன் விலையை நாங்களோ அரசாங்கமோ தீர்மானிப்பதில்லை; வாங்குபவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக நட்டத்தைத் தாங்கிக்கொண்டு தொழிலை நடத்தினோம், ஆனால் இனி இது சாத்தியமே இல்லை” என அவர் மேலும் விவரித்தார்.

படிவங்கள் நிரப்பியே ஒன்றரை மாதம்: ஏமாற்றிய அரசு!

கடந்த முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டபோது மீனவர்கள் குரல் எழுப்பினர். அதற்குத் தீர்வாக மானியம் தருவதாகக் கூறி அரசாங்கம் சகல படிவங்களையும் (Forms) அவசரமாக நிரப்பி வாங்கியது. ஆனால், ஒன்றரை மாதங்கள் கடந்தும் இன்னும் ஒரு சதம் கூட மீனவர்களின் கைக்கு வந்து சேரவில்லை. ஏற்கனவே விவசாயிகள், கரவலை மீனவர்கள் என நாட்டின் வருவாயை ஈட்டித்தரும் பல தரப்பினர் வீதிக்கு வந்துவிட்ட நிலையில், பட்டினியால் வாடும் ஆழ்கடல் மீனவக் குடும்பங்களும் அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் வீதிப் போராட்டத்தில் குதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் சரிவடையும் இலங்கை: காரணம் என்ன?

இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பிரதான தொழில்களில் இதுவும் ஒன்று. ஆனால், சர்வதேச சந்தையில் இலங்கை மீன்களுக்கான தேவை (Demand) படிப்படியாகக் குறைந்து வருவதாக சங்கத்தின் தலைவர் டிரோன் மென்டிஸ் கவலை வெளியிடுகிறார்.

இதற்குக் காரணம், சர்வதேச கடற்பரப்பில் இலங்கையுடன் போட்டியிடும் ஏனைய நாடுகள் தங்களது ஆழ்கடல் படகுகளுக்கு பெருமளவு மானியங்களை வாரி வழங்குகின்றன. இதனால் அவர்களின் உற்பத்திச் செலவு குறைவடைந்து, சர்வதேச சந்தையில் குறைந்த விலைக்கு மீன்களை விற்க முடிகிறது. ஆனால், எவ்வித மானியமும் இன்றி அதிக செலவு செய்து மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களால் விலையைக் குறைக்க முடிவதில்லை.

அரசாங்கம் உடனடியாக தலையிட்டு முறையான எரிபொருள் மானியத்தை வழங்காவிட்டால், இலங்கையின் ஆழ்கடல் மீன்பிடித் துறை ஒட்டுமொத்தமாக அழிந்துபோகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதே தற்போதைய யதார்த்தமாகும்.