Tuesday, June 9, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 18

தபால் துறைக்கு 326 புதிய அதிகாரிகள் நியமனம்!

0

அரச சேவையில் ஆட்சேர்ப்புகளின் போது எவ்வித அரசியல் தலையீடுகளோ அல்லது அமைச்சர்களின் பெயர்ப்பட்டியலோ சமர்ப்பிக்கப்படமாட்டாது என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கைத் தபால் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் – III தர தபால் சேவை அதிகாரி பதவிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 326 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (28) முற்பகல் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தபால் திணைக்களத்தின் 600 வெற்றிடங்களுக்காக சுமார் 20,000 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில், தகுதிகளைப் பூர்த்தி செய்த 326 பேர் முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த அதிகாரிகள், மாகாண மட்டத்தில் உள்ள தபால் பயிற்சி நிறுவனங்களில் இரண்டு வார கால விசேட பயிற்சியினைப் பெற்ற பின்னர், அந்தந்த தபால் அலுவலகங்களில் பணிக்காக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றிய அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ;

தற்போதைய அரசாங்கம் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமனங்களை வழங்குகிறது. பகிரங்க விண்ணப்பம் கோரல், போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றன.

2025 மார்ச் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரச சேவையில் இணைந்தவர்களுக்கு நிலவிய ஓய்வூதிய நிச்சயமற்ற தன்மை நீக்கப்பட்டு, அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் அவர்களுக்கான ஓய்வூதிய உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பல வருடங்களாக PL (Primary Level) பிரிவின் கீழ் பணியாற்றி, பல்வேறு காரணங்களால் நிரந்தர நியமனம் கிடைக்காதிருந்த பத்தாயிரக்கணக்கான ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கான அமைச்சரவை யோசனை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் தபால் சேவையை நவீனமயமாக்குவதற்காக அரசாங்கம் பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதன்படி:

  • புதிய கட்டிடங்களுக்காக 600 மில்லியன் ரூபாயும், பழைய கட்டிடங்களைப் புனரமைக்க மேலதிகமாக 600 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்த 590 மில்லியன் ரூபாய் செலவில் 10 லொறிகள் மற்றும் 20 குரூ-கப் (Crew Cab) வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
  • திறன் அபிவிருத்திக்காக 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆண்டு தபால் திணைக்களம் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை நோக்கிப் பயணிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், புதிய அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, அமைச்சின் மேலதிக செயலாளர் தீபா லியனகே, தபால் மா அதிபர் ருவன் சத்குமார மற்றும் பிரதி தபால் மா அதிபர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பதவி விலகும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா!

0

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். 

இன்று (28) பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ஷம்மி சில்வா 2019 ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதுடன், அன்று முதல் இதுவரையான 7 ஆண்டு காலம் அப் பதவியில் நீடித்தார். 

கடந்த காலங்களில் அவருக்கும் கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தைப் பதவியிலிருந்து விலகுமாறு அரசாங்கத் தரப்பு அறிவுறுத்தியுள்ளதாக அண்மையில் ஊடகச் செய்திகள் வெளியாகியிருந்தன. 

தற்போது பெரும் பேசுபொருளாக உள்ள கிரிக்கெட் வீரர்களின் முகாமையாளர் ஒருவர் மற்றும் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்கள் சிலர் உள்ளிட்ட குழுவினர், அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரைச் சந்தித்து தற்போதைய கிரிக்கெட் நிர்வாகம் குறித்துப் முறைப்பாடு அளித்திருந்த பின்னணியில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

0

நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடங்களைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரர் சந்தியோகு அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட ரீதியில் பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

குறிப்பாக, உயர்தரப் பாடநெறிகளான உயிரியல் (Bio), கணிதம் (Maths), வர்த்தகம் (Commerce), கலை (Arts), பொறியியல் தொழில்நுட்பம் (E-Tech), உயிரியல் தொழில்நுட்பம் (B-Tech) உள்ளிட்ட ஆறு வெவ்வேறு துறைகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

சாதனை படைத்த இந்த மாணவர்களின் கல்வி முயற்சியினை ஊக்குவிக்கும் வகையில், மன்னார் மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஜனாப் ஹக் முஹம்மது அரூஸ் அவர்களினால் பணப்பரிசில்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்வி உயரதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சாதனையாளர்களை வாழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய் நோயாளிகளுக்கு மரண அடி: முடங்கியது PET ஸ்கேன்!

0

இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் புற்றுநோய் கண்டறியும் கருவிகள் மற்றும் சிகிச்சை இயந்திரங்கள் செயலிழந்துள்ளதால், ஆயிரக்கணக்கான நோயாளிகள் மரணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிகிச்சைகளுக்காக நீண்ட காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகள், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ‘லீனியர் ஆக்சிலரேட்டர்’ (Linear Accelerator) கதிரியக்க இயந்திரங்கள் முறையாக இயங்காததே இந்த நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகும். தற்போது பயன்பாட்டிலுள்ள ஐந்து இயந்திரங்களில் இரண்டு முழுமையாக செயலிழந்துள்ளன. இதனால், கதிரியக்க சிகிச்சை (Radiation Therapy) பெறுவதற்காக நோயாளிகள் பல மாதங்கள், சில சமயம் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவிசாவளையைச் சேர்ந்த நோயாளி ஒருவர் தனது கவலையை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்:

“நான் கதிரியக்க சிகிச்சைக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்கிறேன். நாட்கள் செல்லச் செல்ல எனது நிலைமை மோசமடைந்து வருகின்றது. வைத்தியசாலைக்கு எத்தனை முறை சென்றாலும், எப்போது சிகிச்சை தொடங்கும் என்பதற்கு முறையான பதில் இல்லை. இது எனது குடும்பத்தை மன ரீதியாகவும் நிதி ரீதியாகவும் கடுமையாக பாதித்துள்ளது.”

முடங்கியுள்ள PET ஸ்கேன் சேவைகள்

கடந்த மார்ச் 27 ஆம் திகதி முதல் அரச வைத்தியசாலைகளில் PET ஸ்கேன் பரிசோதனைகள் முற்றாக முடங்கியுள்ளன. மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் இந்தப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

PET ஸ்கேன் பரிசோதனைக்கு அவசியமான ‘புளோரோடியோக்ஸிகுளுக்கோஸ்’ (FDG) என்ற கதிரியக்க இரசாயனப் பொருள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும்.

இந்தியாவிலிருந்து இதனை இறக்குமதி செய்யும் நிறுவனம், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையில் (NMRA) தனது பதிவை இன்னும் புதுப்பிக்கவில்லை. மருந்து வகையின் கீழ் இதனை மீண்டும் பதிவு செய்யுமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பேரில் மார்ச் 27 அன்று விண்ணப்பித்தும், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

அரசு வைத்தியசாலைகளில் PET ஸ்கேன் செய்ய 4 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ள நிலையில், தனியார் வைத்தியசாலைகளில் இதற்கு 300,000 ரூபாவிற்கும் அதிகமாக செலவாகிறது. தற்போது நிலவும் இரசாயனத் தட்டுப்பாடு காரணமாக தனியார் துறையிலும் இந்தச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அவல நிலைக்கு மத்தியில், நீண்டகாலமாக இழுபறியில் இருந்த ஐந்து ‘லீனியர் ஆக்சிலரேட்டர்’ இயந்திரங்களைக் கொள்வனவு செய்யும் பணிகளை NMRA துரிதப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு இயந்திரங்கள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளன. எஞ்சிய இயந்திரங்கள் அநுராதபுரம், பதுளை, குருநாகல், அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் நிறுவப்படவுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், புற்றுநோயைக் கண்டறிவதிலும் சிகிச்சையின் முன்னேற்றத்தை அளவிடுவதிலும் PET ஸ்கேன் முக்கியமானது என்பதால், நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நீக்கி உயிர்களைக் காக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை சார்ந்தோர் வலியுறுத்துகின்றனர்.

‘Rebuilding SriLanka’ சட்டபூர்வமானதா? – ஹர்ஷ கேள்வி!

0

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “இலங்கையை கட்டியெழுப்புவோம்” ‘Rebuilding Sri Lanka’ நிதியம் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை எனவும், அதன் இருப்பு குறித்து பாரிய சந்தேகம் உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தமது ‘X’ பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இந்த நிதி “பாதுகாப்பாக” இருப்பதாகக் தெரிவித்துள்ள கருத்தானது முற்றிலும் தவறானது எனவும், அவ்வாறானதொரு நிதி இதுவரை சட்டப்பூர்வமாக நிறுவப்படவே இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டிருந்த இந்தக் கூற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளின்படி அத்தகைய நிதி நடைமுறையில் இருக்க வாய்ப்பில்லை என ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் கீழ், நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சட்டரீதியான நிதியங்களைத் தவிர ஏனைய பல நிதியங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில், இந்த ‘நிதியம்’ நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் முறையாக உருவாக்கப்படவில்லை என ஹர்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்த நிதியம் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

2026 ஏப்ரல் 24 ஆம் திகதிய நிலவரப்படி, சுமார் 9,583 மில்லியன் ரூபாய் இதில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இது பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், இந்த நிதி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்க அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணான பதில்களையே வழங்கி வருவதாக ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுவரை பாராளுமன்றத்தின் ஊடாக அத்தகைய நிதி நிறுவப்படாத நிலையில், “பாதுகாப்பாக இருக்கிறது” என்று கூறப்படும் நிதி எது? என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிதியம் தொடர்பாக அதிகாரிகள் “பணியாற்றிக் கொண்டிருப்பதாக” (working on it) கூறுவதிலிருந்தே, இது இன்னும் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது என அவர் தெரிவித்தார்.

இல்லாத ஒரு நிதியைப் பற்றிப் பேசுவதை விடுத்து, நாட்டின் நிதி நிலைமை குறித்த உண்மைகளை வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திறைசேரி கொள்ளை வெறும் பணமல்ல, நாட்டின் பாதுகாப்பு!

0

இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தவறான தரப்பினருக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது ஒரு ‘சைபர் கொள்ளை’ எனத் தெரியவந்துள்ள நிலையில், இது நாட்டின் முழுப் பொருளாதாரத்திற்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கருத்திற்கொண்டு, இது குறித்து விசாரணை நடத்த உடனடியாக ஜனாதிபதி விசேட விசாரணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா, இது வெறும் பணத் திருட்டு மட்டுமல்ல, நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும் என்று சுட்டிக்காட்டினார்.

உலகின் அதியுயர் பாதுகாப்பு கொண்ட அமெரிக்காவின் ‘வெள்ளை மாளிகை’ கட்டமைப்புக்களே ஹேக்கர்களால் ஊடுருவப்படும் நிலையில், இலங்கையின் சைபர் பாதுகாப்பு முறைமைகளில் உள்ள பலவீனங்கள் குறித்து புத்திஜீவித்துவக் கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டிய தருணம் இதுவென அவர் குறிப்பிட்டார்.

இந்த பாரிய நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும், அவர்களின் அரசியல் அந்தஸ்து அல்லது கட்சி பேதமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். இதற்காக சர்வதேச ரீதியிலான தொடர்புகள் மற்றும் உயர் தொழில்நுட்ப அறிவு கொண்ட நிபுணர்களின் உதவியைப் பெறுவது அவசியமாகும்.

அத்துடன், நாட்டின் திறைசேரி போன்ற மிக முக்கியமான நிதி நிறுவனத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இழந்த நிதியை மீண்டும் மீட்பதற்கு எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் யோசனை முன்வைத்துள்ளார்.

இலங்கையின் வங்கி முறைமை மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் போன்ற முக்கிய நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப பாதுகாப்பு முறைகள் காலாவதியானவையா என்பதை உடனடியாகப் பரிசோதிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

தொழில்நுட்ப ரீதியிலான நிதிப் பரிமாற்றங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கலாநிதி ஹான்ஸ் விஜேசுரிய போன்ற துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய ‘ஜனாதிபதி விசேட விசாரணைக்குழு’ ஒன்றை உடனடியாக நியமிக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சைபர் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பக் குறைபாடுகள் குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, பலமான ‘ஃபயர்வால்’ அல்லது நவீன பாதுகாப்பு உத்திகளைப் புகுத்தாவிட்டால், இது தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.

இந்த வெளிப்பாடானது ஒரு சாதாரண செய்தி மட்டுமல்ல, நாட்டின் நிதி இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு எச்சரிக்கை மணியாகும் என்றும் பைசர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைக்கு அருகிலுள்ள பாலம் உடைந்து 6 மாதங்கள்: மக்கள் அவதி!

0

செய்தித் தொகுப்பு: ஜூட் சமந்த

மகாவெவ, சிவிராஜ விசேட தேவையுடையோர் பாடசாலைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்து வீழ்ந்து 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும், அதனை புனரமைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, மேல் மகாவெவ மற்றும் வீஹேன ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் “தம்வெல் அகார” கால்வாயின் குறுக்கே மூன்று சிறிய பாலங்கள் அமைக்கப்பட்டன.

அந்த வகையில் சிவிராஜ விசேட தேவையுடையோர் பாடசாலைக்கு அருகில் மூன்று பாலங்களில் ஒன்றான குறித்த பாலம் புகழ்பெற்ற ஓவியர் சோலியஸ் மென்டிஸ் அவர்களால் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடசாலைக்கு தினசரி ஏராளமானோர் வருகை தருவதோடு, அரச ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் இப்பாலத்தைப் பயன்படுத்தி வந்தனர்.

சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பயணித்த போது இந்தப் பாலம் திடீரென உடைந்து வீழ்ந்தது. விபத்துக்குள்ளான லொறியின் உரிமையாளர், பாலத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்காக சுமார் 6 இலட்சம் ரூபாயை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் செலுத்தி தனது வாகனத்தை விடுவித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நட்டஈடு அறவிடப்பட்ட போதிலும் பாலத்தைப் புனரமைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து சிவிராஜ விசேட தேவையுடையோர் பாடசாலையின் தலைவர் பிரின்ஸ்லி விக்ரமநாயக்க கருத்து தெரிவிக்கையில்:

“எமது பாடசாலையில் 28 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரும் இந்தப் பாலத்தின் ஊடாகவே வரவேண்டும். பாலம் உடைந்ததால் தற்போது கிராம மக்கள் தற்காலிகமாக ஒரு மரப்பாலத்தை அமைத்துள்ளனர். இதன் மூலம் வாகனங்கள் செல்ல முடியாது. இதனால் மக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் இதுவரை பலனில்லை,” என்றார்.

மேல் மகாவெவ சமூக பொலிஸ் குழுவின் தலைவர் மெக்மில்லன் பெர்னாண்டோ கூறுகையில்:

“உடைந்த நிலையில் உள்ள இந்தப் பாலம் தற்போது மிகவும் அபாயகரமாக உள்ளது. இரவு நேரங்களில் இப்பகுதி இருட்டாக இருப்பதால், பாதையை அறியாதவர்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம். ஏற்கனவே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின. இன்னும் ஒரு உயிர் பலி வாங்கும் வரை அதிகாரிகள் காத்திருக்கின்றனரா?” எனக் கேள்வி எழுப்பினார்.

வீஹேன கிராமத்தில் அதிகளவிலான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், எஞ்சியுள்ள ஏனைய இரண்டு பாலங்களும் பலவீனமடைந்து காணப்படுகின்றன. அவை உடைந்தால் இரண்டு கிராமங்களும் முழுமையாகத் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, இந்த பாலத்தை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரிஷாட் பதியுதீன் மேன்முறையீட்டில் தொடரும் திருப்பங்கள்!

0

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் உள்ள காடுகளை அழித்து மீள்குடியேற்றம் செய்தமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதிலிருந்து உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் இன்று (27) விலகியுள்ளார். 

ரிஷாட் பதியுதீனால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீடு, இன்று ஏ.எச்.எம்.டி. நவாஸ், சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மனு விசாரணையிலிருந்து தான் விலகுவதாக நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தெரிவித்தார். 

இதற்கமைய, இந்த மேன்முறையீட்டு மனுவை வேறு ஒரு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது. 

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகிலுள்ள காடுகளை அழித்து அங்கு மக்களைக் குடியேற்றியமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சுற்றுச்சூழல் நீதி மையம் 2015ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு (Writ) மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. 

அந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த பகுதிகளில் காடுகளை அழித்தமைக்கு முன்னாள் அமைச்சரே பொறுப்புக்கூற வேண்டும் என்றும், அதற்கமைய மீண்டும் காடுகளை வளர்ப்பதற்கான செலவை அவர் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

அதன்படி, மீண்டும் காடுகளை வளர்ப்பதற்காக முன்னாள் அமைச்சர் சுமார் 106 கோடி ரூபாய் பணத்தைச் செலுத்த வேண்டும் என வனப் பாதுகாப்புத் திணைக்களம் கணக்கிட்டிருந்தது. 

இந்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும், அதனை ரத்து செய்யுமாறு கோரியுமே ரிஷாட் பதியுதீன் உயர்நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டைத் தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனு விசாரணையிலிருந்து நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் ஏற்கனவே விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

PSL தொடரில் வரலாறு படைத்த குசல் மெண்டிஸ்!

0

பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) வரலாற்றில், ஒரு பருவகாலத்தில் (Season) 500 ஓட்டங்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் பெற்றுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குசல் மெண்டிஸ், இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம் சர்வதேச அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதற்கு முன்னர் பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்றிருந்த போதிலும், எவராலும் எட்ட முடியாத 500 ஓட்டங்கள் என்ற இலக்கை மெண்டிஸ் முதன்முறையாகக் கடந்துள்ளார்.

வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் ஒரு லீக் தொடரில் இலங்கை வீரர் ஒருவர் இவ்வாறானதொரு சாதனையைப் படைத்திருப்பது இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

முன்னதாக எந்தவொரு வெளிநாட்டு வீரரும் ஒரே பதிப்பில் 500 ஓட்டங்களை கடந்ததில்லை.

இதற்கு முன்பு, 2023இல் ரில்லே ரோசோவ் எடுத்த 453 ஓட்டங்களே ஒரு வெளிநாட்டு வீரரின் அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.

குறித்த தொடரில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள குசல் மெண்டிஸ் 500 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டீசல் இறக்குமதியில் பாரிய ஊழல்: கூட்டு எதிர்க்கட்சி முறைப்பாடு!

0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட டீசல் இறக்குமதியின் போது பாரிய ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளால் இந்த முறைப்பாடு இன்று திங்கட்கிழமை (27) சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த டீசல் இறக்குமதி நடவடிக்கையினால் அரசாங்கத்திற்கு பெருமளவிலான நிதி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பரிசீலிக்குமாறு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். 

இந்த கொடுக்கல் வாங்கலில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து கண்டறியப்பட வேண்டும் எனவும், இந்த நஷ்டத்திற்குப் பொறுப்பான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த முறைப்பாட்டில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.