Home Blog Page 18

சுட்டெரிக்கும் வெயில்: இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் காலநிலை மாற்றங்களுக்கு மத்தியில், பொதுமக்கள் அனைவரும் மிக அவசியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய வானிலை முன்னெச்சரிக்கை ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டின் 7 முக்கிய மாவட்டங்களில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பச் சுட்டெண்’ (Heat Index) ‘எச்சரிக்கை’ மட்டம் (Caution Level) வரை உயர்வடைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் இந்த அசாதாரண வெப்பநிலை தாக்கம் தீவிரமடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடலில் நிலவும் அதிக வெப்பநிலையுடன் ஈரப்பதனும் (Humidity) ஒன்றாக இணையும்போது, இயல்பான வெப்பநிலையை விடவும் மனித உடலுக்கு அதிகளவிலான வெப்ப அசௌகரியமும் சோர்வும் ஏற்படும் வாய்ப்புக்கள் பல மடங்கு அதிகரிக்கின்றன.

இதனால் குறித்த பகுதிகளில் வாழும் மக்கள், குறிப்பாகப் பகல் வேளையில் வெளிக்கள மற்றும் உடலுழைப்பு சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடும்போது மிகக் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்ப்பதுடன், போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை எப்போதும் நீரேற்றமாக (Hydrated) வைத்திருப்பது இன்றியமையாதது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

850 இலட்சம் சொத்துக்களுடன் சிக்கிய ஹெரோயின் கடத்தல்காரி!

போதைப்பொருள் கடத்தல் மூலம் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்து வந்த பாதாள உலகப் பெண் புள்ளியொருவரின் சட்டவிரோத சாம்ராஜ்யத்திற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய கறுப்புப் பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக கையகப்படுத்திய குற்றச்சாட்டில், ‘பொட்டி’ என அழைக்கப்படும் விந்தனிய சூரியாரச்சி என்ற பெண் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருந்தார்.

சிஐடியின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தீவிர தடுப்புக் காவல் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இவர், இன்று (14) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

14 வருட கடத்தல் பின்னணி:

குறித்த பெண் கடந்த 14 வருடங்களாக ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை நடத்தி, அதன் மூலம் 850 இலட்சம் ரூபாவிற்கும் (8.5 கோடி) அதிகமான பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சேர்த்துள்ளமை விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, போதைப்பொருள் பணத்தில் கொழும்புக்கு அருகாமையில் வாங்கிக் குவிக்கப்பட்ட மூன்று சொகுசு வீடுகள், மூன்று வர்த்தக நிலையங்கள் (கடைகள்) மற்றும் ஆறு வங்கிக் கணக்குகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது முழுமையாகத் தடை செய்து முடக்கியுள்ளது.

நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளதால் விரிவான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எனவே சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் கோரினர்.

பொலிஸாரின் சான்றுகளையும் சமர்ப்பணங்களையும் கவனத்தில் கொண்ட கொழும்பு நீதவான் நீதிமன்றம், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குறித்த பெண் சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கடலில் தத்தளிக்கும் அமெரிக்கப் படை: கப்பலில் இருந்து கடலில் குதிக்கும் மாலுமிகள்!

மத்திய கிழக்கு போர்க்கள நிலவரம்: சூடுபிடிக்கும் அமெரிக்க-ஈரான் மோதல்; கடலில் சிக்கும் போர் வீரர்கள்!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானுக்கு எதிரான தனது அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு எரிபொருள் விலையை ஸ்திரமாக வைத்திருப்பதும், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை அடியோடு தடுப்பதுமே தங்களது பிரதான நோக்கம் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், வரலாறு இதுவரை கண்டிராத வகையிலான கடுமையான பொருளாதாரத் தடைகள் ஈரான் மீது திணிக்கப்படவுள்ளதாக அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசன்ட் எச்சரித்துள்ளார்.

ஆனால், கள நிலவரம் சர்வதேச வர்த்தகப் பாதையை ஸ்தம்பிக்க வைக்கும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. ஹோமுஸ் ஜலசந்தியில் அமெரிக்கா காலவரையறையற்ற முற்றுகையை முன்னெடுக்க முடியும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறினாலும், ஈரானின் நேரடி அனுமதி பெறாமல் எந்தவொரு கப்பலும் இந்தப் பாதையைக் கடக்க முடியாது என அந்நாட்டு இராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால், அங்கு தினசரி கப்பல் போக்குவரத்து பாரிய சரிவைச் சந்தித்துள்ளதுடன், மாற்றுப் பாதையான பாப் அல்-மந்தேப் ஊடான பயணங்களும் பதற்றத்துடனேயே தொடர்கின்றன.

இதற்கிடையே, ஓமானின் கடல்சார் சரணாலயப் பகுதிக்கு அருகில் தாக்குதலுக்குள்ளான ரஷ்ய கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் கரையோரங்களை அடைந்து பெரும் சூழலியல் அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வான் பரப்பிலும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈராக்கின் எர்பில் வான்வெளியில் இடைமறித்து அழிக்கப்பட்ட ட்ரோன்களின் சிதறல்கள் குடியிருப்புப் பகுதிகளில் வீழ்ந்துள்ளன. தெற்கு லெபனானின் காப்ரா பகுதியிலும் இஸ்ரேலிய ட்ரோன் குண்டுவீச்சுத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

இருப்பினும், இந்தப் போர் தீவிரத்தின் மறுபக்கத்தில் அமெரிக்காவின் சொந்தப் படைகளே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அதிர்ச்சித் தகவல் தற்போது வொஷிங்டனில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலைகொண்டுள்ள ‘USS ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கி கப்பல், எந்தவொரு துறைமுக தரிப்பும் இன்றி தொடர்ந்து 7 மாதங்களுக்கும் மேலாகக் கடலிலேயே நிலைகொண்டுள்ளது. தொடர்பு முடக்கம், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, தாக்குதல் அச்சம் காரணமாக சில மாலுமிகள் கப்பலிலிருந்து கடலில் குதிக்க முயன்ற அதிர்ச்சித் தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் புளூமெந்தால் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்டகாலப் போர்க்காலக் கடற்பயணம் கப்பலின் நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதுடன், வீரர்களின் மன உறுதியையும் வெகுவாகப் பாதிக்கும் என மூத்த கடற்படை ஆய்வாளர் ஹார்லன் உல்மேன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான இக்கட்டான சூழலுக்கு மத்தியிலும், காசா விவகாரம் தொடர்பான முக்கிய இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்காக டொனால்ட் ட்ரம்பின் தூதுவர் ஜாரெட் குஷ்னர் மற்றும் டோனி பிளேயர் ஆகியோர் அடுத்த வாரம் இஸ்ரேல் மற்றும் எகிப்திற்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒளிஞ்சிருந்து வண்டி மறிக்கக் கூடாது! – ட்ராஃபிக் பொலிஸாருக்கு அதிரடி!

நீங்கள் வீதியில் வாகனம் ஓட்டிச் செல்லும்போது, திடீரென புதருக்குப் பின்னாலிருந்தோ அல்லது மரத்தின் மறைவிலிருந்தோ ஒரு பொலிஸ் அதிகாரி பாய்ந்து வந்து உங்கள் வாகனத்தை மறித்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? இனி அப்படிச் செய்யவே முடியாது!

போக்குவரத்துக் குற்றங்களுக்காக வாகனங்களை நிறுத்தும் போது, பொலிஸ் அதிகாரிகள் வீதியில் செல்லும் ஏனைய மக்களுக்குத் தெளிவாகத் தெரியும் வகையில், மிகவும் வெளிப்படையாகவும் தொழில்முறையுடனும் மட்டுமே செயற்பட வேண்டும் என்றும், மறைவிடங்களிலோ அல்லது புதர்களுக்குப் பின்னாலோ ஒளிந்திருந்து வாகனங்களை மறிக்கக் கூடாது என்றும் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) டபிள்யூ.பி.ஜே. சேனாதீர அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஆனால், இந்த உத்தரவுக்குப் பின்னால் சமூக வலைத்தளங்களை உலுக்கிய ஒரு பரபரப்பான சம்பவம் ஒளிந்திருக்கிறது!

சமீபத்தில் தம்புள்ளை அதிவேகப் பிரிவுப் பொலிஸ் அதிகாரி ஒருவர் சாரதி ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி உடனடியாகப் போக்குவரத்து கடமைகளிலிருந்து நீக்கப்பட்டு வேறு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்கீழ் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்தே, அனைத்துப் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் திணைக்களச் சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை DIG சேனாதீர நினைவுபடுத்தியுள்ளார்.

“பொலிஸ் அதிகாரிகள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தவோ அல்லது சாரதிகளிடம் பணம் பறிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் வீதிச் சோதனைகளை நடத்தவோ கூடாது. பஸ் நிறுத்துமிடம் அல்லது பொதுமக்கள் பார்க்கும் வகையிலான வெளிப்படையான இடங்களில் மட்டுமே வாகனங்களை மறிக்க வேண்டும். தேவைப்பட்டால், பொலிஸ் அடையாளமும் நோக்கமும் தெளிவாகத் தெரியும் வகையில் வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்லலாம்” என அவர் விளக்கமளித்தார்.

அத்துடன், சாரதிகளுக்கும் ஒரு முக்கியமான எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்: பொலிஸ் அதிகாரிகளிடம் வீதியில் வைத்து நேரடியாகப் பணம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை! தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் பட்சத்தில், சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற அஞ்சல் நிலையங்கள் போன்ற வழிகள் மூலமாகவே தண்டப் பணத்தை (Fine) செலுத்த வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையை மீறி வீதியில் வைத்து பொலிஸாருக்குக் கொடுக்கப்படும் பணம் ‘லஞ்சமாகக்’ கருதப்பட்டு, கொடுப்பவர் மற்றும் பெறுபவர் இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். “எந்தவொரு சூழ்நிலையிலும் லஞ்சம் கேட்கவோ அல்லது பெறவோ பொலிஸ் அதிகாரிகளுக்கு உரிமையில்லை. நேர்மையாகக் கடமையாற்றும் பெரும்பான்மையான பொலிஸாரின் பெயரைக் கெடுக்கும் வகையில் ஒரு சிலர் நடப்பதை அனுமதிக்க முடியாது” என்றும் லஞ்ச ஊழலுக்கு எதிராக பொலிஸ் திணைக்களம் மிகக் கடுமையான ‘பூச்சிய சகிப்புத்தன்மை’ கொள்கையைக் கையாளும் என்றும் DIG சேனாதீர அழுத்தமாகக் கூறியுள்ளார்.

றத்மல்யாயவில் விடிவு: சமுர்த்தி நிதியில் புதிய வீட்டுத் திட்டத்திற்கு அடிக்கல்!

சொந்தமாக ஒரு பாதுகாப்பான கூரை என்பது ஒவ்வொரு மனிதனினதும் அடிப்படை உரிமை மட்டுமல்ல; அவனது வாழ்நாளின் மிகப்பெரிய கனவுமாகும். பொருளாதார நெருக்கடிகளால் தத்தளித்து, சொந்த வீடு என்ற எண்ணமே எட்டாக்கனியாக மாறியிருந்த புத்தளம் பகுதி எளிய குடும்பம் ஒன்றிற்கு தற்போது விடிவு பிறந்துள்ளது!

புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட றத்மல்யாய கிராம அலுவலர் பிரிவில், தெரிவு செய்யப்பட்ட பயனாளி குடும்பத்திற்கான புதிய வீட்டுத் திட்ட நிர்மாணப் பணிகளுக்கான உத்தியோகபூர்வ அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் (10.08.2026) மிகவும் விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை பிரதான இலக்காகக் கொண்டு இயங்கும் ‘சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின்’ முழுமையான நிதியுதவியுடன் இந்த வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது. பொருளாதார ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்துவரும் எளிய குடும்பங்களின் வீடமைப்புக் கனவை நனவாக்கும் உறுதியான உந்துசக்தியாக இந்த முயற்சி மாறியுள்ளது.

பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த தற்காலச் சூழலில், நலிவடைந்த குடும்பங்கள் சொந்தமாக வீடு கட்டுவது என்பது பெரும் சவாலாக உள்ளது. இத்தகைய தருணத்தில் முன்னெடுக்கப்படும் இந்த வீட்டுத் திட்டமானது அக்குடும்பத்திற்கு நிரந்தரப் பாதுகாப்பான வசிப்பிடத்தை உறுதிப்படுத்துவதுடன், அவர்களது எதிர்கால சந்ததிக்கான நிலையான முதலீடாகவும் அமையவுள்ளது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சகோதரர் எம்.ஜே.எம்.பைசல் அவர்களும், புத்தளம் பிரதேச சபையின் றத்மல்யாய வட்டார உறுப்பினரும் பிரஜா சக்தி தலைவருமான சகோதரர் கியாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அவர்களுடன் புத்தளம் பிரதேச செயலாளர் விதானகே , புத்தளம் சமூர்த்தி வங்கியின் தலைமை முகாமையாளர்,
பாலாவி சமூர்த்தி வங்கியின் முகாமையாளர், புத்தளம் சமூர்த்தி வங்கியின் முகாமையாளர் மற்றும் கிராம அரச உத்தியோகத்தர்களும் இத்திட்டத்தின் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.

சொந்தக் காணி! கல்பிட்டியில் 1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு காணித் தீர்வு!

“நமது சொந்த மண்ணில் நமக்கு முழுமையான உரிமை இருக்கிறது” என்ற நிம்மதியை விட ஒரு மனிதனுக்கு வேறு என்ன பெரிய மகிழ்ச்சி இருந்துவிட முடியும்? நீண்டகாலமாகக் காணி உரிமைகளுக்காகவும், சட்டப் சிக்கல்களுக்காகவும் அலையாய் அலைந்து கொண்டிருந்த கல்பிட்டி மக்களுக்கு நேற்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்வு கிட்டியுள்ளது!

அரச காணிகளின் உரிமையை முறையான ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தி, மக்களின் “அழகான வாழ்க்கைக்கான” அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கில், கல்பிட்டி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த “அருணெல்ல” சிறப்பு நடமாடும் சேவை நேற்று (2026.08.13) மிகவும் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டது.

சாதாரண நாட்களில் அரச அலுவலகங்களுக்குச் சென்று மாதக்கணக்கில் காத்திருக்கும் மக்களுக்கு, ஒரே கூரையின் கீழ் அனைத்துச் சேவைகளையும் கொண்டு வந்து சேர்ப்பதுதான் இந்த நடமாடும் சேவையின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். கல்பிட்டி பிரதேச செயலாளரின் நேர்த்தியான தலைமத்துவத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஜே.எம்.பைசல் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க முனவந்தார்.

அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி, மக்களுக்கான சேவையைத் தங்குதடையின்றி வழங்க அரச இயந்திரமே அங்குக் கூடியிருந்தது என்றால் அது மிகையல்ல! கல்பிட்டி பிரதேச சபையின் உப தலைவர் சமன் குமார ஹேரத், பிரதேச சபை உறுப்பினர் W.R. சஞ்சீவ பெர்னாண்டோ ஆகியோருடன், மாகாண காணி ஆணையாளர், மாகாண பிரதி காணி ஆணையாளர்கள் மற்றும் காணி திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் களத்தில் நின்று மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்தனர்.

கூடவே, காணி விவகாரங்களில் எழும் சட்ட ரீதியான சந்தேகங்களைத் தீர்ப்பதற்காகக் கல்பிட்டி மற்றும் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும், பிரதேச செயலகப் பணியாளர்களும் தீவிரமாகச் செயற்பட்டனர். இதன் பலனாக, பல வருடங்களாக இழுபறியில் இருந்த காணிச் சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டதோடு, தகுதியான பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வ காணி அனுமதிப்பத்திரங்களும் கௌரவமாக வழங்கி வைக்கப்பட்டன.

ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நடமாடும் சேவையின் மூலம் நேரடிப் பயன்பெற்று, தங்களது சொந்த நிலத்திற்கான உரிமையோடு முகத்தில் புன்னகையோடு வீடு திரும்பினர். மக்களின் தேவையை அறிந்து அரச இயந்திரம் கிராமத்திற்கே சென்று சேவை வழங்கிய இந்த “அருணெல்ல” முயற்சி, கல்பிட்டி வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது!

நீதித்துறைச் சுதந்திரமா அல்லது வழக்குத் தாமதத்திற்குத் தீர்வா? ஓர் அலசல்!

65 ஆ அல்லது 67 ஆ? – சுடச்சுடக் கிளம்பியுள்ள அரசியலமைப்பு விவாதம்!

இலங்கையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு உயர்த்த அரசாங்கம் எடுத்துள்ள முடிவு, வெறும் சட்டத் திருத்தம் சார்ந்த விவாதமாகத் தோன்றினாலும், அதற்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கேள்விகள் ஒளிந்துள்ளன. “பொது நலன்” என்ற பெயரில் அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த 22வது அரசியலமைப்புத் திருத்தம், உண்மையில் நாட்டின் நீதித்துறைச் சுதந்திரத்தைப் பாதுகாக்குமா அல்லது ஆட்சியாளர்களின் அதிகார எல்லைகளை விரிவுபடுத்துமா?

அரசாங்கத்தின் காரசாரமான தர்க்கம்: வழக்குத் தாமதத்திற்கு இதுதான் மருந்தா?

அரசாங்கம் வைக்கும் வாதம் மிகவும் எளிமையானது: “நாட்டில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன; அனுபவமிக்க நீதிபதிகள் ஓய்வுபெறும்போது அந்த அனுபவத்தின் பலனை நீதித்துறை இழக்கிறது. எனவே, சேவைக்காலத்தை நீடிப்பதன் மூலம் வழக்குகளை விரைந்து முடித்து ‘பொது நலனை’ உறுதி செய்ய முடியும்.”

கேட்பதற்கு இது நியாயமாகத் தோன்றினாலும், இங்குதான் ஒரு பெரிய கேள்விக்குறி எழுகிறது. நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதற்கு நீதிபதிகளின் பற்றாக்குறை மட்டும்தான் காரணமா? காவல் துறை விசாரணைகளில் ஏற்படும் தாமதம், அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வைப்பது, சட்டத்தரணிகளின் ஒத்திவைப்பு கோரிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளின்மை எனப் பல்வேறு கட்டமைப்புச் சிக்கல்கள் இருக்கும்போது, ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது மட்டுமே ஒட்டுமொத்தப் பிரச்சனைக்கும் தீர்வாகிவிடுமா?

“பொது நலன்” – அரசாங்கத்தின் அதிகாரமா அல்லது ஜனநாயகத்தின் பாதுகாப்பா?

ஜனநாயகத்தில் பெரும்பான்மை பலம் அல்லது மக்கள் ஆணை இருக்கிறது என்பதற்காக, அரசாங்கம் எதனை வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. “பொது நலன்” என்பது அரசாங்கம் மட்டுமே வரையறுக்கும் ஒன்றல்ல. நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையே அதன் அஸ்திவாரம். ஒருவேளை, குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்குச் சலுகை வழங்கவே இந்தச் திருத்தம் கொண்டுவரப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துவிட்டால், அது நீதித்துறையின் சுயாதீனத்தையே கேள்விக் குறியாக்கிவிடும். எனவே, தனது நோக்கம் தூய்மையானது என்பதைத் தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்கள் மூலம் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.

அதேவேளையில், அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்வையும் “அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று மட்டுமே கூறி எதிர்க்கட்சிகள் தப்பித்துவிட முடியாது. வழக்குத் தாமதத்திற்கு அவர்களிடம் உள்ள மாற்றுத் திட்டம் என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 2024 ஆம் ஆண்டு புதிய மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கட்டிலில் ஏறிய அரசாங்கத்திடம் மக்கள் எதிர்பார்ப்பது வெளிப்படைத்தன்மையை மட்டுமே!

உண்மையில் இலங்கைக்குத் தேவை அரசாங்கத்திற்குச் சாதகமான நீதிமன்றமோ அல்லது எதிர்க்கட்சிக்குச் சாதகமான நீதிமன்றமோ அல்ல; சட்டத்திற்கு மதிப்பளிக்கும், சுவடித் தாமதங்கள் இல்லாத, திறன்மிக்க சுயாதீன நீதிமன்றமே ஆகும். ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதுடன் நின்றுவிடாமல், நீதிமன்றங்களை டிஜிட்டல் மயமாக்கல், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொலிஸ் புலனாய்வுச் சீர்திருத்தம் ஆகியவற்றை ஒருங்கிணைந்த ஒரு முழு வடிவமாக செயல்படுத்தினால் மட்டுமே, இந்த 22வது திருத்தம் உண்மையான “பொது நலனை” மக்க பெற்றுத்தரும்!

(பேராசிரியர் அதுளசிரி சமரக்கோன்)
Digital creator
Lecturer at Open University of Sri Lanka
Former Teaching assistant at University of Colombo

A/L பௌதிகவியல் வினாத்தாள் கசிவா? திணைக்களம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கலக்கம் வேண்டாம்! உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களையும் பெற்றோர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய “வினாத்தாள் கசிவு” வதந்திகளுக்குப் பரீட்சை திணைக்களம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இன்றைய தினம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அவசர விளக்கமளித்துள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்திய அந்தச் சம்பவம் இதுதான்— அம்பலாங்கொடை பகுதியிலுள்ள உயர்தரப் பரீட்சை மையம் ஒன்றில், இன்றைய தினம் (14) நடைபெறவிருந்த ‘பௌதிகவியல் முதலாவது வினாத்தாள்’ அடங்கிய 6 பொதிகள் வினாத்தாள் கொள்கலனில் காணப்பட்டதைத் தொடர்ந்து, வினாத்தாள் கசிந்துவிட்டதாகத் தகவல்கள் காட்டுத்தீ போல் பரவின.

இந்த விவகாரம் குறித்து உண்மை நிலையைத் தெளிவுபடுத்திய பரீட்சை ஆணையாளர் நாயகம், எந்தவொரு வினாத்தாள் பொதியும் எந்தவொரு நிலையிலும் சட்டவிரோதமாகத் திறக்கப்படவோ அல்லது ஒருங்கிணைப்பு மையங்களில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படவோ இல்லை என்பதைத் தீர்க்கமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

எனவே, இணைய வழியில் பரப்பப்படும் போலித் தகவல்களைக் கண்டு மாணவர்கள் எவ்வித அச்சமும் அடை தேவையில்லை என வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் குறித்துரைக்கப்பட்ட கால அட்டவணையின்படி நாட்டின் அனைத்து மையங்களிலும் பரீட்சைகள் தடையின்றி நடைபெறும் என்பதால், பரீட்சார்த்திகள் அனைவரும் எவ்வித பதற்றமும் இன்றி உரிய நேரத்திற்குப் பரீட்சை மையங்களுக்குச் சென்று பரீட்சைக்குத் தோன்றுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாதம் 17,592 ரூபா இல்லையா? நீங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே?

இன்றைய பொருளாதார நெருக்கடிச் சூழலில், இலங்கையில் ஒரு தனிமனிதன் தனது வயிற்றுப்பசியைப் போக்கி, அடிப்படைத் தேவைகளுடன் உயிர் வாழ மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் தெரியுமா? இதற்கான விடையை மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய திடுக்கிடும் தரவுகள் அம்பலப்படுத்தியுள்ளன.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கணக்கீட்டின்படி, கடந்த ஜூன் மாதத்திற்கான வறுமைக் கோடு (Poverty Line) 17,592 ரூபாவாக அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு நபர் உணவிற்காகவும், தலைசாய்க்கும் இடம் மற்றும் அடிப்படை ஆடை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காகவும் மாதமொன்றிற்குச் செலவிட வேண்டிய குறைந்தபட்சத் தொகையே இதுவாகும்! இந்தத் தொகையைக் கூட ஈட்ட முடியாதவர்கள் நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களாகவே வகைப்படுத்தப்படுகின்றனர்.

இன்னும் சொல்லப்போனால், கடந்த மே மாதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஜூன் மாதத்தில் மட்டும் இந்த வறுமைக் கோட்டின் அளவு 277 ரூபாவால் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் எந்தளவிற்குச் சாமானிய மக்களின் பாக்கெட்டுகளைப் பதம் பார்க்கிறது என்பதற்கு இந்தத் தொகையே சாட்சியாகும்.

இதில் கொடுமை என்னவென்றால், நீங்கள் வாழும் மாவட்டத்தைப் பொறுத்து இந்த வாழ்க்கைச் செலவு மேலும் எகிறுகிறது! நாட்டின் வர்த்தகத் தலைநகரான கொழும்பில் வாழும் ஒரு நபருக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மாதம் 18,973 ரூபா தேவைப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் 18,876 ரூபாயாக இந்த வறுமைக் கோடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களின் நிலைமையைக் கவனித்தால், நுவரெலியா மாவட்டத்தில் ஒரு நபருக்கு மாதம் 18,500 ரூபாவும், மன்னார் மாவட்டத்தில் 18,019 ரூபாவும் தேவைப்படுகிறது. கிழக்கின் மட்டக்களப்பில் 17,688 ரூபாவாகவும், யாழ்ப்பாணத்தில் 17,169 ரூபாவாகவும், கிளிநொச்சியில் 16,996 ரூபாவாகவும் இந்த வறுமைக் கோட்டின் அளவு பதிவாகியுள்ளது.

அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் 17,671 ரூபாவாகப் பதிவாகியுள்ள நிலையில், நாட்டிலேயே மிகக் குறைந்த வறுமைக் கோடு மொனராகலை மாவட்டத்திலேயே (16,821 ரூபா) பதிவாகியுள்ளது. ஐந்து பேரைக் கொண்ட ஒரு சராசரிக் குடும்பம் இலங்கையில் கண்ணியமாக வாழ வேண்டுமாயின், மாதம் சுமார் 90,000 ரூபாவிற்கும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம்!

முன்னாள் பெண் எம்.பி.யின் படகுகளுக்குக் கடனாக அடித்த டீசல்!

அரச அதிகாரமும் அரசியல் செல்வாக்கும் இருந்தால், துறைமுகத்திற்கே சென்று கடனாக டீசல் அடித்துவிட்டுப் பணத்தைக் கொடுக்காமல் நழுவிவிட முடியுமா? ஆம், அப்படியொரு அதிர்ச்சிச் சம்பவம் இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் கணக்கு வழக்குகளைக் கிளறியபோது அம்பலத்திற்கு வந்துள்ளது.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவரின் மீன்பிடிப் படகுகள் மற்றும் சொகுசு வாகனங்களுக்குக் கோட்பே (Cod Bay) மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து தாராளமாகக் கடனுக்கு டீசல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்காகப் பெறப்பட வேண்டிய சுமார் 14 இலட்சம் ரூபா பணம் இதுவரையிலும் வசூலிக்கப்படவே இல்லை எனும் கசப்பான உண்மை தேசிய தணிக்கை அலுவலகத்தின் அறிக்கையில் போட்டு உடைக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளின் இந்த இலவச டீசல் கூத்து ஒருபுறமிருக்க, தொழில்நுட்பக் குளறுபடிகளால் கடலில் கொட்டப்பட்ட எரிபொருளின் கதையைக் கேட்டால் இன்னும் இரத்தம் உறைந்துவிடும். ஹேந்தல, டிக்கோவிட்ட (Dikowita) துறைமுகத்தின் வடக்குப் முனையத்தில் நிலத்தடி எரிபொருள் குழாய்களைப் பொருத்தியபோது ஏற்பட்ட பயங்கரக் கசிவு காரணமாக, சுமார் 2,700 லீட்டர் டீசல் வீணாக விரயமாக்கப்பட்டுள்ளது.

இங்குதான் அதிகாரிகளின் அலட்சியத்தின் உச்சக்கட்டம் அரங்கேறியுள்ளது! குறித்த குழாய்களைப் பொறுப்பற்ற முறையில் பொருத்திய தனியார் நிறுவனத்திடமிருந்து இந்த இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2019ஆம் ஆண்டிலேயே இந்த குழாய் பொருத்தும் பணி இடம்பெற்றிருந்தும், இத்தனை ஆண்டுகளாக இந்த நஷ்டத்தை யார் தலையிலோ கட்டிவிட்டு அதிகாரிகள் நிம்மதியாக இருந்துள்ளனர்.

மக்களின் வரிப்பணமும் நாட்டின் வளமும் இப்படி கண்டமேனிக்கு வீணடிக்கப்பட்ட கதைகள் அனைத்தும், இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் 2024ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தேசிய தணிக்கை அறிக்கையிலேயே தப்பும் தவறுமின்றி வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அரச சொத்துக்களைச் சூறையாடியவர்கள் மீது இனிமேலாவது நடவடிக்கை பாயுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.