Thursday, July 30, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 19

திடீர் திருப்பம்! இஸ்ரேல் – ஹெஸ்புல்லா இடையில் அவசர போர்நிறுத்தம்!

  • வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4:00 மணி முதல் (GMT 1300) இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையில் தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
  • அமெரிக்கா மற்றும் கட்டார் நாட்டு மத்தியஸ்தர்கள், ஈரானின் நேரடி ஒத்துழைப்புடன் இந்த முக்கிய உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
  • முழுமையான போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படாமல் வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர முடியாது என ஈரான் தங்களுக்குத் தெரிவித்திருந்ததாக ஹெஸ்புல்லா தரப்பு குறிப்பிட்டுள்ளது.

ரொய்ட்டர்: மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாகக் தணல் பறந்து கொண்டிருந்த போர் மேகங்களுக்கு மத்தியில், ஒரு முக்கிய அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், இந்த அமைதி அவ்வளவு இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த உடன்பாடு எட்டப்படுவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னர், லெபனான் எல்லைப் பகுதிகளில் இரவோடிரவாக உக்கிரமான குண்டுமழை பொழியப்பட்டது. லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மாத்திரம் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, தெற்கு லெபனானில் ஹெஸ்புல்லா நடத்திய பதில் தாக்குதலில் 4 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது இந்த யுத்தத்தில் இஸ்ரேலிய படைக்கு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்தக் குருதி சிந்திய மோதல்கள்தான், அமெரிக்காவும் ஈரானும் இணைந்து உருவாக்கிய சமாதான முயற்சிகளைப் பெரும் கேள்விக்குறியாக்கின. கடந்த புதன்கிழமை மாத்திரமே மத்திய கிழக்கின் பரந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்க-ஈரான் இடைக்கால உடன்படிக்கை கையெழுத்தானது. ஆனால், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் லெபனான் எல்லையில் வன்முறை வெடித்ததால், ஒட்டுமொத்த உடன்படிக்கையும் முறியும் அபாயம் ஏற்பட்டது.

இதற்கிடையில், ஈரானின் இராஜதந்திர காய்நகர்த்தல்களும் இங்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. “முழுமையான போர்நிறுத்தம் ஒன்று அமுலாகாமல், அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்க முடியாது” என ஈரான் தங்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்ததாக ஹெஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார். இதன் விளைவாகவே, அமெரிக்க மற்றும் கட்டார் நாட்டுப் பேச்சுவார்த்தையாளர்கள் ஈரானின் பின்னணி உதவியுடன் இந்த அவசர உடன்பாட்டைச் சாத்தியமாக்கியுள்ளனர்.

அமெரிக்கா, ஈரான் மற்றும் அவர்களின் கூட்டணி நாடுகள் அனைத்தும் லெபனான் உள்ளிட்ட அனைத்துப் போர்முனைகளிலும் தங்களது இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும், நிரந்தரமாகவும் நிறுத்த வேண்டும் என்பதே தற்போதைய பிராந்திய ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையாகும். வாரத்தின் தொடக்கத்தில் வன்முறைகள் ஓரளவு குறைந்திருந்தாலும், மீண்டும் வெடித்த உக்கிரப் போருக்குப் பின்னர் தற்போது அமுலாகியுள்ள இந்த போர்நிறுத்தம் நீடிக்குமா என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.

ஜெர்மன் அரசின் விசேட திட்டத்திற்கு தெரிவான அக்கரைப்பற்று மாநகர சபை!

0
அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சர்வதேச அங்கீகாரம்

நிருபர் – எம் என் முஹம்மது

அக்கரைப்பற்று மாநகர சபை, ஜெர்மன் அரசின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் சர்வதேச நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு தெரிவாகி, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

நேற்று (17) நடைபெற்ற அக்கரைப்பற்று மாநகர சபை அமர்வில், மாநகர முதல்வர் A.L.M. அதாஉல்லா அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானம் சபையின் ஏகமனதான அங்கீகாரத்தைப் பெற்றது.

இதன்படி, Engagement Global நிறுவனத்தினால் 2025 முதல் 2027 வரை நடைமுறைப்படுத்தப்படும் “Connective Cities Deep Dive Workshop – Water Resilience” எனும் சர்வதேச திட்டத்தில் பங்கேற்க அக்கரைப்பற்று மாநகர சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 84 முன்மொழிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 8 நகராட்சிகளில் ஒன்றாக அக்கரைப்பற்று மாநகர சபை இடம்பெற்றுள்ளதுடன், இலங்கையிலிருந்து தெரிவான ஒரே மாநகர சபையாகவும் திகழ்கிறது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த முன்மொழிவு, நகரின் நீர்வள முகாமைத்துவத்தை மேம்படுத்துவதையும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

திட்டத்தின் மூலம் வறட்சி மற்றும் வெள்ள அபாயங்களை சமாளிக்கும் நகரத்தின் திறன் மேம்படுத்தப்படுவதுடன், நீர்வள முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச சிறந்த நடைமுறைகள் பகிரப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளன. மேலும் மாநகர சபையின் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகத் திறன்கள் வலுப்படுத்தப்பட்டு, நிலையான நகர அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தழுவல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேவேளை, திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளைப் பெற்றுக்கொள்ளவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூத்த கல்வியாளர்கள் நிபுணத்துவ ஆலோசகர்களாக இணைக்கப்படுவதற்கும் மாநகர சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த சர்வதேச அங்கீகாரம் அக்கரைப்பற்று மாநகர சபை, அம்பாறை மாவட்டம், கிழக்கு மாகாணம் மற்றும் இலங்கை நாட்டிற்கு சர்வதேச அரங்கில் பெருமை சேர்க்கும் முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.

மேலும், இந்த வெற்றியானது அக்கரைப்பற்று மாநகர முதல்வரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான A.L.M. அதாஉல்லா அவர்களின் அபிவிருத்தி நோக்கு, நிர்வாக அனுபவம் மற்றும் தூரநோக்குச் சிந்தனையின் பிரதிபலிப்பாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நெல்லை வாங்க ஆளில்லை: அக்கரைப்பற்றில் கொதித்தெழுந்த விவசாயிகள்!

0

நிருபர் – எம் என் முஹம்மது

  1. அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் இறக்காமம் விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து நெல் கொள்வனவு கோரி பாரிய கவனயீர்ப்பு பேரணி.
  2. வெளிநாட்டு அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு விசேட மகஜர் கையளிப்பு.
  3. தற்போதைய நிர்ணய விலையான 120 ரூபாவுக்கே நெல்லை வாங்க மில் உரிமையாளர்கள் தயக்கம்; அடிமட்ட விலைக்கு விற்க நேரிடுவதால் விவசாயிகளுக்கு பாரிய நஷ்டம்.
நெல் கொள்வனவு நெருக்கடி: அம்பாறையில் வெடித்த விவசாயிகளின் போராட்டம்!

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக (யால) அறுவடை களைகட்டவுள்ள நிலையில், கிழக்கு மாகாண விவசாயிகளின் முகங்களில் மகிழ்ச்சிக்கு பதிலாக மரண பயமே குடிகொண்டுள்ளது.

தமது வியர்வையின் பலனுக்கு நியாயமான விலை கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் இறக்காமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று வீதியில் இறங்கியுள்ளனர். நெல் கொள்வனவு மற்றும் நியாயமான விலை நிர்ணயத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு பேரணியின் முடிவில், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் தமது உருக்கமான கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

இந்த மகஜர் நேரடியாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. எதிர்வரும் சிறுபோக அறுவடை நெல்லினை அரசாங்கம் உடனடியாகக் கொள்வனவு செய்ய வேண்டும், அத்துடன் ஒரு கிலோ நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை 140 ரூபாவாக நிர்ணயிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் அதிரடி கோரிக்கையாகும்.

இதற்குப் பின்னணியில் உள்ள கசப்பான உண்மை என்ன தெரியுமா? அரசாங்கம் ஏற்கனவே ஒரு கிலோ நெல்லுக்கு 120 ரூபா என விலை நிர்ணயித்துள்ள போதிலும், மில் உரிமையாளர்கள் அந்த விலைக்கு முழுமையாக நெல்லைக் கொள்வனவு செய்யத் தயங்குகின்றனர். இதனால், வேறு வழியின்றி தரகர்களிடமும், வியாபாரிகளிடமும் அடிமட்ட விலைக்கு தமது நெல்லை விற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நஷ்டம் தொடருமானால், எதிர்காலத்தில் எந்தவொரு இளைஞரும் விவசாயத் துறையை நோக்கி வரமாட்டார்கள் என்ற அபாய எச்சரிக்கையையும் அவர்கள் விடுத்துள்ளனர்.

பிரச்சினை விலை நிர்ணயத்துடன் மட்டும் முடிவடைந்துவிடவில்லை. உள்ளூர் களஞ்சியசாலைகளில் ஏற்கனவே நெல் மலைபோல் தேங்கிக் கிடக்கிறது. அதனை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதை அரசாங்கம் முற்றாக நிறுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் ஆவேசமாக கோரிக்கை விடுத்துள்ளனர். உள்ளூர் விவசாயி நஷ்டத்தில் தவிக்கும்போது, வெளிநாட்டு அரிசி எதற்கு என்பது அவர்களின் நியாயமான கேள்வியாக உள்ளது.

எவ்வாறாயினும், இது அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு அரசியல் போராட்டமும் அல்ல என்பதை பேரணியில் கலந்து கொண்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மாறாக, தேங்கிக் கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்வனவு செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதிக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் விடுக்கும் ஒரு ‘அவசர அபயக் குரல்’ இதுவாகும். ஜூலை மாத அறுவடைக்கு முன்னர் அரசாங்கம் இவர்களின் குரலுக்கு செவிசாய்க்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!

கற்பிட்டி துப்பாக்கிச் சூட்டுத் தளத்தில் நடந்த சம்பவ பின்னணியில் டிவிஸ்ட்!

0
  • கற்பிட்டி இராணுவப் பயிற்சித் தளத்தில் விமானப்படையினருக்கும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் திடீர் மோதல் நிலை.
  • அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த மூவரால் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சியில் கடும் இடையூறு.
  • விசாரணையில் பிடிபட்ட பொலிஸ் அதிகாரியும் இரு பொதுமக்களும் – தடித்த வார்த்தைகளால் முற்றிய வாக்குவாதம்.
  • சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க விமானப்படை தளபதியால் விசேட விசாரணைச் சபை நியமனம்.

டெய்லி மிரர்: கற்பிட்டியிலுள்ள விமானப்படைக்கு சொந்தமான துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித் தளத்தில் கடந்த 17ஆம் திகதி வழமையான இராணுவப் பயிற்சி ஒன்று போய்க்கொண்டிருந்தது. சும்மா சாதாரண பயிற்சி அல்ல, எந்நேரமும் வெடிக்கக்கூடிய ஆபத்தான வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் (Bomb Disposal Exercise) அதிமுக்கியமானதொரு ஒத்திகை அது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு தடைசெய்யப்பட்ட, அதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

விமானப்படை வீரர்கள் தங்களது கடமைகளில் தீவிரமாக இருந்த அந்த வேளையில்தான், யாரும் எதிர்பாராத விதமாக ஒரு ட்விஸ்ட் அரங்கேறியது. முறையான எவ்வித அனுமதியோ அல்லது முன்னறிவித்தலோ இன்றி, பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி மூன்று நபர்கள் திடீரென அந்த ஆபத்தான பகுதிக்குள் நுழைந்தனர். குண்டுகள் வெடிக்கும் பகுதியில் மனித நடமாட்டம் இருப்பதை அவதானித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக சுதாரித்துக்கொண்டனர்.

அங்கிருந்த விமானப்படை வீரர்களும், பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் (STF) சேர்ந்த அதிகாரியொருவரும் இணைந்து, அத்துமீறி நுழைந்த அந்த மூவரையும் இடைமறித்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். இதன்போதுதான் அந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்தது. பிடிபட்ட மூவரில் ஒருவர் சாதாரண சிவிலியன் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி என்பதும், மற்றைய இருவருமே அவருடன் வந்த பொதுமக்கள் என்பதும் தெரியவந்தது.

ஏன் இந்த பகுதிக்குள் வந்தீர்கள் என அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது, அங்கு நிலைமை கைமீறிப்போனது. இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, வார்த்தைப் போர் முற்றியது. ஆபத்தான வலயத்தில் மக்களின் உயிரைப் பாதுகாக்கவே தாங்கள் விதிகளைப் பின்பற்றி கடமையாற்றியதாக விமானப்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பாதுகாப்புத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மோதல் சம்பவம் குறித்து, தற்போது இலங்கை விமானப்படைத் தளபதி நேரடி கவனஞ்செலுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற மற்றும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, அவசர அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசேட விசாரணைச் சபை (Board of Inquiry) ஒன்றையும் அவர் அவசரமாக நியமித்துள்ளார். பாதுகாப்பு வலயத்தில் நடந்த இந்த அத்துமீறலின் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பது இந்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியான பின்னரே முழுமையாகத் தெரியவரும்.

அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்!

0

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இந்த வாரம் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் விமர்சித்து வரும் நிலையில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) இஸ்ரேலுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் ஈரானின் ஏவுகணைத் திட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஜே.டி. வான்ஸ், தற்போதைய உலகச் சூழலில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மட்டுமே இஸ்ரேலின் ஒரே சக்திவாய்ந்த நட்புசக்தி என்பதை இஸ்ரேல் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை ஜனாதிபதி வான்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை உறுப்பினர்கள் டொனால்ட் டிரம்ப் மீதும், இந்த அமைதி ஒப்பந்தம் மீதும் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவதை வன்மையாகக் கண்டித்தார்.

இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தும் மூன்றில் இரண்டு பங்கு பாதுகாப்பு ஆயுதங்கள் அமெரிக்க மக்களின் வரிப்பணத்திலும், அமெரிக்கர்களின் கரங்களாலும் உருவாக்கப்பட்டவை என்பதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்கா ஆண்டுதோறும் இஸ்ரேலுக்கு சுமார் 4 பில்லியன் டொலர் இராணுவ உதவியை வழங்கி வரும் நிலையில், தங்களின் உண்மையான பிரச்சினையை உணராமல் அமெரிக்க ஜனாதிபதியை இஸ்ரேல் அமைச்சர்கள் விமர்சிப்பது யதார்த்தமற்றது என்றும் அவர் சாடியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகமோ அல்லது அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகமோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தையும்; தெரிவிக்கவில்லை.

ஈரான் உடனான போர் காரணமாகப் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான இந்த ராஜதந்திர மோதல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தூக்கி அடிப்பன்: கஜேந்திரகுமார் எம்.பியை மிரட்டிய அர்ச்சுனா எம்.பி!

0

வலிகாமம் வடக்கு பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனா மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றமையினால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.  

குறித்த பிரதேச சபையின் அபிவிருத்திக்குழுக் கூட்டம் அதன் தலைவர் ஶ்ரீபவாநந்தராஜா தலைமையில் நேற்று (18) கூடியது.  

இதன்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதன் புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.  

இந்த யோசனைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது எதிர்ப்பை தெரிவித்தார்.  

அது தொடர்ந்தும் மாகாண சபை நிர்வாகத்தின் கீழேயே இயங்க வேண்டும் என தெரிவித்ததுடன், குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு அரசாங்கத்தினால் முறையாக நிதி ஒதுக்கப்படுவதில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.  

எவ்வாறாயினும் வைத்தியசாலையின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு அந்த வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என அர்ச்சுனா வலியுறுத்தினார்.  

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

இதனால் அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது அமைதியின்மை ஏற்பட்டது.  

இந்நிலையில் இன்றைய தினம் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், குறித்த வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான யோசனையை முன்வைக்க அபிவிருத்திக் குழு தலைவர் நேற்றைய தினம் தீர்மானித்தார்.  

ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அங்கு தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதியமைச்சர் முனீர் முளப்பருக்கு கடும் கண்டனம்!

0

முஸ்லிம் ஊடகங்கள் தொடர்பான பாராளுமன்ற உரைக்கு அதிருப்தி!

பிரதியமைச்சர் முனீர் முளப்பருக்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் கடிதம்!

முஸ்லிம் ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வோர் இனவாத சக்திகளுக்குத் துணை போவதாக சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் பிரதியமைச்சருக்கு 18.06.2026 திகதியிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 11.06.2026 அன்று பாராளுமன்றத்தில் தாங்கள் உரை நிகழ்த்திய போது, “முஸ்லிம் சமூக விவகாரங்களை அறிக்கையிடும் முஸ்லிம் ஊடகங்கள், தமது செய்தி அறிக்கையிடல்கள் மூலம் இனவாத சக்திகளுக்குத் துணைபோகும் வகையில் நடந்து கொள்கின்றன” எனக் குற்றம்சாட்டியிருந்தீர்கள்.

இந்த ஆதாரமற்ற பாரதூரமான குற்றச்சாட்டு தொடர்பில் எமது பலத்த அதிருப்தியையும் கவலையையும் தங்களுக்குத் தெரியப்படுத்தும் பொருட்டே இக்கடிதத்தை அனுப்புகிறோம்.

முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி இயங்குகின்ற ஏதேனும் ஊடகங்களோ அல்லது ஊடகவியலாளர்களோ அவ்வாறான பக்கச்சார்பான பின்னணிகளைக் கொண்டிருப்பின் அல்லது தமது செய்தி அறிக்கையிடல்களில் உண்மைக்குப் புறம்பான விடயங்களை உள்ளடக்கியிருப்பின், அவற்றை ஆதாரபூர்வமாக, உரிய தரப்பினரின் பெயரை குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டுவதே முறையானதும் பொருத்தமானதுமாகும்.

அதனை விடுத்து, முஸ்லிம் சமூக மற்றும் சமய விவகாரங்கள் தொடர்பில் ஊடக நெறிமுறைகளைப் பேணி, நடுநிலையாக அறிக்கையிட்டு வரும் ஒட்டுமொத்த ஊடகங்களையும் உள்ளடக்கும் வகையில் தாங்கள் முன்வைத்துள்ள இக்குற்றச்சாட்டு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்றாகும்.

அண்மைக்காலங்களில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து முஸ்லிம் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சமூகப் பொறுப்புணர்வுடன் மக்களை விழிப்பூட்டும் வகையில் செய்திகளை வெளியிட்டிருந்தனர். இது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்களின் இன்றியமையாத கடமையுமாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில், எவ்வித சான்றுகளுமின்றி பொதுப்படையாகத் தாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டு, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் மனவேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்விடயம் அமைப்பின் அங்கத்தவர்களால் எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, கடந்த 15.06.2026 அன்று நடைபெற்ற எமது செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இக்கடிதம் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான பாரதூரமான மற்றும் பொதுப்படையான குற்றச்சாட்டுக்களை பாராளுமன்றம் உள்ளிட்ட உயரிய சபைகளில் முன்வைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், தாங்கள் சபையில் முன்வைத்த மேற்படி கருத்தை திருத்திக் கொள்வதுடன், ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் ஊடகங்களின் சுயாதீன செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து, ஊடகவியலாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம் என்றும் அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவிங்களாம் பொறாமைக்காரங்க, இல்லாட்டி முட்டாளுங்க!

0
“அவிங்களாம் பொறாமைக்காரங்க, இல்லாட்டி முட்டாள்கள்!” – ஈரான் டீலை விமர்சித்தவர்களை ‘ட்ரூத் சோஷியலில்’ வச்சுச் செய்த டொனால்ட் ட்ரம்ப்!

ஈரானுடன் போடப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தத்தின் பின்னர், அமெரிக்காவிற்குள் ட்ரம்புக்கு எதிராக உள்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர். “ஈரான் விஷயத்தில ட்ரம்ப் ரொம்ப சாஃப்ட்டா போயிட்டார், அமெரிக்காவுக்கு இதனால என்ன லாபம்?” என்று வாஷிங்டன் அரசியல் வட்டாரத்தில் சலசலப்புகள் எழத் தொடங்கின. இந்த விமர்சனங்களால் கடுப்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வழக்கம் போல தனது பாணியில் சவுக்கடிப் பதிலடியை ஒற்றைப் பதிவில் கொடுத்து உலகையே அதிர வைத்துள்ளார்!

விமர்சகர்களின் வாயை அடைக்க ட்ரம்ப் கையில் எடுத்த ஆயுதம் தான், தற்போதைய அமெரிக்காவின் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள்!

“நான் ஈரான் விஷயத்தில் இன்னும் கடுமையாக நடந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த முட்டாள்கள், தற்போதைய நிலவரத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டும்” என்று ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார். தான் கொண்டு வந்த இந்த இராஜதந்திர நகர்வால் தான் அமெரிக்கப் பங்குச்சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றுச் சாதனை உச்சத்தைத் தொட்டுள்ளது என்றும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ‘மளமளவென’ சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்துள்ளார்.

பொருளாதாரத்தின் இந்த அதிரடி முன்னேற்றங்களை கண்முன்னே வைத்தும், தன் மீது பழி போடுபவர்களை ட்ரம்ப் வார்த்தைகளால் வெளுத்து வாங்கியுள்ளார்!

“அமெரிக்கப் பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும்போதும், எண்ணெய் விலை தலைகீழாகச் சரியும்போதும், நான் ஈரான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூச்சல் போடும் இந்த முட்டாள்கள்… ஒன்று என் மீது பொறாமை கொண்டவர்களாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் கெட்டவர்களாக அல்லது அப்பட்டமான முட்டாள்களாகத்தான் இருக்க வேண்டும்!” என டொனால்ட் ட்ரம்பின் அதிகாரப்பூர்வ ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) வாஷிங்டனுக்குக் கிடைத்த ஒரு முழுமையான வெற்றிதானா? என்று அமெரிக்காவின் முக்கிய கொள்கை வகுப்பாளர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்பி வரும் நிலையிலேயே ட்ரம்ப் இந்த அதிரடிப் பதிவை இட்டுள்ளார். வாஷிங்டனின் பாரம்பரிய அரசியல்வாதிகள் வழக்கம் போல போரை நீடிக்கவே விரும்புகிறார்கள் என்றும், ஆனால் ஒரு தொழிலதிபராகத் தான் அமெரிக்க மக்களின் பாக்கெட்டையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாத்துள்ளதாகவும் ட்ரம்ப் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்த அதிரடிப் பதிவு வெளியானதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் இந்த அமைதி ஒப்பந்தம் குறித்த விவாதங்கள் மேலும் சூடுபிடித்துள்ளன. ட்ரம்பின் இந்த ‘மாஸ்’ இராஜதந்திரம் உலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப் போகிறதா அல்லது உள்நாட்டு அரசியலில் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா என்பதை அடுத்தடுத்த 60 நாள் பேச்சுவார்த்தைகள் தான் தீர்மானிக்கப் போகின்றன!

இஸ்ரேல் உறவில் விரிசலா? லெபனான் எல்லையில் திக் திக் நிமிடங்கள்!

  • வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தானது:
  • ஹொர்முஸ் ஜலசந்தி திறப்பு & எண்ணெய் விலை வீழ்ச்சி:
  • லெபனானில் தொடரும் தாக்குதல்:
  • இஸ்ரேல் புறக்கணிப்பு & அமெரிக்காவுடன் மோதல்:
அமெரிக்கா – ஈரான் ‘டீல்’ ஓகே! உலக சந்தையில் அதிரடி மாற்றம்; ஆனால் லெபனானில் ஓயாத போர் முரசு!

உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருந்த அந்தப் பெரும் போருக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது! ஆமாம், உலகளாவிய எரிபொருள் விநியோகப் பாதையை முடக்கி, உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைத்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளனர். எதிர்பார்த்ததை விட இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது. இதன் நேரடி விளைவாக, சுமார் 6 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைச் சுமந்துகொண்டு 3 சவூதி அரேபிய சூப்பர் டேங்கர் கப்பல்கள் ஹொர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) ஊடாக வியாழக்கிழமை தடையின்றிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன.

ஆனால், இந்த உலகளாவிய நிம்மதிப் பெருமூச்சுக்கு மத்தியிலும் ஒரு பெரிய கேள்விக்குறி லெபனானில் தொங்கிக் கொண்டிருக்கிறது!

உலகப் பொருளாதாரத்தின் இதயமாகப் பார்க்கப்படும் ஹொர்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்ட அடுத்த சில மணித்தியாலங்களில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் (Brent crude) விலை மேலும் 2 வீதத்தால் சரிந்து, பேரல் ஒன்று 78 டொலருக்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. போர் தொடங்கிய காலத்திலிருந்து பதிவான மிகக் குறைந்த விலை இதுவாகும். போர்க்காலத்தில் தங்களின் இருப்பிடத்தை மறைப்பதற்காக ரேடார் சிக்னல்களை அணைத்துவிட்டுப் பயணித்த பன்னாட்டுக் கப்பல்கள், இப்போது தங்களின் சிக்னல்களை ஒளிரவிட்டு சுதந்திரமாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா விதித்திருந்த ஈரானிய துறைமுகங்களுக்கான கடற்படை முற்றுகையும் உடனடியாக நீக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளதால், உலக வர்த்தகம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இருப்பினும், இந்த ‘சமாதானப் புகைச்சல்’ இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கண்களைப் பழுக்க வைத்துள்ளது!

“ஈரானும் அமெரிக்கர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள், சரி… ஆனால் லெபனானில் இன்னும் எதுவும் ஓயவில்லை!”

“பெய்ரூட்டில் கூடார அடிவாரத்தில் அமர்ந்து, தனது மொபைல் திரையில் வரும் செய்திகளை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த லெபனான் அகதி முஹம்மது டொக்மனின் ஆதங்கக் குரல் இது”

காரணம், இந்த அமைதி ஒப்பந்தத்தில் லெபனான் போரை “நிரந்தரமாக நிறுத்த வேண்டும்” என்றும், அதன் “இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் அமெரிக்கா அப்பட்டமாக எழுதியுள்ளது. ஈரானின் பிரதான கோரிக்கைக்கு ட்ரம்ப் இணங்கியுள்ளதையே இது காட்டுகிறது. ஆனால், இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது! இதனால் ஆத்திரமடைந்துள்ள இஸ்ரேலிய படைகள், ஒப்பந்தம் கையெழுத்தான வியாழக்கிழமை காலையும் லெபனானின் தெற்குப் பகுதியில் கொடூர வான்வழித் தாக்குதல்களையும், எறிகணை வீச்சுகளையும் நடத்தியுள்ளன. பெய்ரூட் நகரின் வான்பரப்பில் இஸ்ரேலிய உளவு ட்ரோன்கள் இப்போதும் வட்டமிட்டுக் கொண்டிருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

நெருங்கிய நண்பர்களாக இருந்த ட்ரம்பிற்கும் நெதன்யாகுவிற்கும் இடையே இப்போது உருவாகியுள்ள இந்த விரிசல், வரலாற்றில் இல்லாத ஒரு பெரும் இராஜதந்திர மோதலாக வெடித்துள்ளது.

தெற்கு லெபனானில் உள்ள லிடானி ஆற்றின் தெற்குப் பகுதியை ஒரு பாதுகாப்பு வலயமாக மாற்றி, அங்கு தனது இராணுவத்தை தொடர்ந்து தக்கவைக்க இஸ்ரேல் ஒற்றைக்காலில் நிற்கிறது. இது தொடர்பாக வாஷிங்டனுடன் இஸ்ரேல் “பிடிவாதமான பேச்சுவார்த்தையில்” ஈடுபட்டுள்ளதாக நெதன்யாகுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலை மிரட்டிப் பணிய வைப்பாரா அல்லது நெதன்யாகுவின் பிடிவாதத்திற்கு இடம் கொடுப்பாரா என்பதில் தான் லெபனானின் அமைதி தங்கியுள்ளது.

“இஸ்ரேல் இப்போது ஒரு இக்கட்டான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது: ஒன்று இராணுவ அழுத்தத்தைத் தொடர்ந்து பிரயோகித்து ட்ரம்பின் இராஜதந்திர ஆதரவை இழப்பது, அல்லது ட்ரம்பின் குட்-புக்கில் நீடிப்பதற்காகப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது” என இஸ்ரேலிய ஊடகங்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளன. இறுதி உடன்படிக்கைக்கான 60 நாள் காலக்கெடு ஓடத் தொடங்கிவிட்ட நிலையில், லெபனான் மக்களின் நிம்மதி இன்னும் சில நாட்களுக்குத் தத்தளிப்பில் தான் இருக்கப் போகிறதா?

அக்கரைப்பற்று மாநகர சபையில் இரட்டை நிலைப்பாட்டு அரசியல்!

0

(எம் என் முஹம்மது)

அக்கரைப்பற்று மாநகர சபையில் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடைப்பிடித்து வரும் அரசியல் அணுகுமுறைகள் குறித்து மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.எம். நுஃமான் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்; சபைக்குள் ஆளுங்கட்சியுடன் இணக்கமாக செயல்பட்டு, தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கும் சில உறுப்பினர்கள், சபைக்கு வெளியே எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், சபையில் ஒரு நிலைப்பாடு, பொதுமக்கள் மத்தியில் மற்றொரு நிலைப்பாடு, சமூக வலைத்தளங்களில் வேறொரு நிலைப்பாடு என செயற்படுவது கொள்கை அரசியல் அல்ல என்றும், அது சந்தர்ப்பவாத அரசியலின் வெளிப்பாடாகும் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவம் என்பது அறிக்கைகள் அல்லது புகைப்பட அரசியலால் அளவிடப்படுவதில்லை என்றும், மக்களுக்காக எடுக்கப்படும் பொறுப்புணர்வான மற்றும் துணிச்சலான முடிவுகளின் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய காங்கிரஸின் மாநகர உறுப்பினர்களாகிய தாங்கள், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாகவும், அக்கரைப்பற்று மாநகர மேயரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான கௌரவ ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வின் வழிகாட்டுதலின் கீழ் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடும் இரட்டை நிலைப்பாட்டு அரசியலை மக்களிடம் வெளிப்படுத்துவோம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அக்கரைப்பற்று மக்கள் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள் என்பதுடன், உண்மையாக மக்களுக்காக செயற்படுபவர்களையும், தேர்தல் காலங்களில் மட்டும் குரல் கொடுப்பவர்களையும் வேறுபடுத்தி அறிந்திருப்பார்கள் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.