Saturday, June 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 19

கதறும் மகாராஷ்டிரா: வெப்பத்தின் பிடியில் 100-க்கும் மேற்பட்டோர் பலி!

0

மராட்டிய மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவகின்றன. 

மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1, 2026 முதல் ஏப்ரல் 20 வரை வெப்பத்தாக்கத்தால் 39 நேரடி பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. 

இதனுடன், மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தம் 109 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 

அக்கோலா, நந்துர்பார் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் அதிகப்படியான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

மும்பை மாநகராட்சிப் பகுதியில் நேரடி வெப்பத்தாக்கங்கள் புதிதாக இல்லை என்றாலும், வெப்பம் தொடர்பான பிற உடல்நலக் குறைபாடுகளால் 108 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 3.34 லட்சத்திற்கும் அதிகமானோர் வெப்பம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். 

இந்த அபாயகரமான நிலையை முன்னிட்டு, மாநில சுகாதாரத் துறை அனைத்து மாவட்ட மருத்துவமனைகளும் தயார்நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

வெப்பத்தாக்க நோயாளிகளுக்கென தனிப்படுக்கைகள், போதுமான அளவு ஓஆர்எஸ் (ORS) பாக்கெட்டுகள் மற்றும் குளிர்ந்த குடிநீர் வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும், தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும், அதிகளவில் தண்ணீர் குடித்து உடல் நீர்ச்சத்தை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உழ்ஹிய்யா விவகாரத்தில் ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை!

0

வெசாக் – ஹஜ்ஜுப் பெருநாள், இரண்டு சமயக் கடமைகளும் சமூகத்தில் மிக முக்கிய நிகழ்வுகள் என, ஜனாதிபதியிடமும் அவரது செயலாளரிடமும் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா சுட்டிக் காட்டியுள்ளார்.

உழ்ஹிய்யா விவகாரம் தொடர்பில் அவசரமாகவும் அவசியமாகவும் சுமூகமான தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுக்குமாறும், பைஸர் முஸ்தபா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொலைபேசி ஊடாகவே பைஸர் முஸ்தபா, இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இம்முறை வெசாக் வாரத்தை அரசாங்கம் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே மாதம் 28 ஆம் திகதி முஸ்லிம்கள் புனித ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.

முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றுவதற்கான காலம், ஹஜ்ஜுப் பெருநாள் தினமான “அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் பிறை 10) மே மாதம் 28 முதல், (துல்ஹஜ் பிறை 13) மே மாதம் 31 அஸர் தொழுகை நேரம் வரையிலாகும். இக்காலப் பகுதியிலேயே வெசாக் வாரமும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலப் பகுதியில் இறைச்சிக்கான பிராணிகளை அறுப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கூடாது என, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் பொது நிர்வாக அமைச்சு விசேட வர்த்தமானி மூலம் அறிவுறுத்தியுள்ளது. இதனடிப்படையில், இக்காலப் பகுதியில் உழ்ஹிய்யாவுக்காக ஆடு மாடுகளை அறுப்பதும் தடை செய்யப்பட்டதாகக் கருத வேண்டியுள்ளது.

இதன் பின்னணியில், உழ்ஹிய்யாக் கொடுப்பது தொடர்பான பலரினதும் பல்வேறு கருத்துக்கள், தற்போது சர்ச்சையாக உருவாகியும் கேள்விக் குறியாகவும் மாறியுள்ளன.

எனவேதான், உழ்ஹிய்யா விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.

வெசாக் – ஹஜ்ஜுப் பெருநாள், இரண்டு சமயக் கடமைகளும் சமூகத்தில் மிக முக்கிய நிகழ்வுகளாக இருப்பதால், வெசாக் போயா தினமல்லாத ஏனைய நாட்களில் குறித்த விவகாரம் தொடர்பில் அவசரமாகவும் அவசியமாகவும் சுமூகமான தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுக்குமாறும், பைஸர் முஸ்தபா இருவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(ஐ. ஏ. காதிர் கான்)

402 ஆயுர்வேத பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கல்!

0

பயிற்சிகளை நிறைவுசெய்த ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகள் 402 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (28) கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டப்படிப்பு பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு மருத்துவ பீடம், கம்பஹா விக்ரமாராச்சி உள்நாட்டு மருத்துவ பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடம், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடங்களில் ஐந்தாண்டு கால மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கே குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இவர்கள் 2017–2018 ஆம் கல்வியாண்டுகளில் கல்விப் பொதுத்தராதரப் பத்திரப் படிப்பை மேற்கொண்டவர்களாவர். தெரிவு செய்யப்பட்ட 402 பட்டதாரிகளில் 249 பேர் ஆயுர்வேதத் துறையையும், 109 பேர் சித்த மருத்துவத் துறையையும், 44 பேர் யுனானி மருத்துவத் துறையையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டதாரிகள் போதனா வைத்தியசாலைகள், ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் ஓராண்டு காலத்திற்கு உள்ளக பயிற்சியைப் பெறு உள்ளனர். விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் முதலாம் தர வைத்தியர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் இப்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

பயிற்சிக் காலத்தின் போது, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் இவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதுடன், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் அதிகாரிகள், ஆயுர்வேத மருத்துவ சபையில் தங்களை ஆயுர்வேத வைத்தியர்களாகப் பதிவு செய்துகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, வளர்ந்து வரும் ஒரு நாடாக இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல கடுமையான நிதி ஒழுக்கம் அவசியம் என வலியுறுத்தினார்.

‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க திறைசேரியினால் 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுகளுக்காக வரலாற்றில் மிக அதிக தொகையான 2000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

உயர்கல்வி அமைச்சினால் வழங்கப்படும் அனைத்துப் பட்டதாரிகளையும் சுகாதார அமைச்சு நேரடியாக உள்வாங்கும் நிலை இனி இருக்காது என அமைச்சர் தெளிவுபடுத்தினார். தற்போது மேற்குலக மருத்துவப் பட்டதாரிகளுக்கும் வெற்றிடங்கள் குறைந்து வருவதால், எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட பொறிமுறையின் ஊடாகவே சேவையில் இணைய வேண்டிய சூழல் ஏற்படும் என அவர் எச்சரித்தார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமந்தி ரணசிங்க, ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தீப்தி சுமனசேன மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இரு முறை வைப்பிலிடப்பட்ட பணம்!

0

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்ட சில தரப்பினருக்கு தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட இரட்டைப் கொடுப்பனவுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து அமைச்சர் மேலும் விளக்குகையில்:

இலங்கை வங்கிகளுக்கு இடையிலான கொடுப்பனவு கோப்புகளை (Interbank Payment Files) பரிமாற்றம் செய்தபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒப்பந்தக்காரர்கள் உட்பட சில வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு ஒரே கொடுப்பனவு இரண்டு முறை வரவு வைக்கப்பட்டுள்ளது.

வங்கி முறைமையில் இவ்வாறான தவறான கொடுப்பனவுகள் இடம்பெறும் போது, அவற்றை மீண்டும் அறவிடுவதற்கு முறையான மற்றும் நிலையான பொறிமுறை ஒன்று ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அந்தப் பொறிமுறையின் ஊடாக, தவறுதலாக வைப்பிலிடப்பட்ட பணத்தை மீளப் பெறுவதற்கான சாதாரண நடவடிக்கைகளை வங்கிகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளன.

இந்தச் சம்பவத்தினால் அரசாங்கத்தின் கணக்குகளுக்கோ, நிறுவன ரீதியான கணக்குகளுக்கோ அல்லது தனிப்பட்ட நபர்களின் கணக்குகளுக்கோ எவ்வித நிதி இழப்பும் அல்லது பாதிப்பும் ஏற்படவில்லை என அமைச்சர் உறுதியளித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கோ அல்லது வேறு கணக்கு உரிமையாளர்களுக்கோ இதனால் எவ்வித நஷ்டமும் ஏற்படாது எனவும், மேலதிகமாகச் சென்ற பணத்தை மீளப் பெறும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது இலங்கை வங்கி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து இந்த நிலைமையை சீர்செய்வதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

திறைசேரியைத் தொடர்ந்து தபால் திணைக்களத்திலும் கைவரிசை!

0

ஆஸ்திரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிலையத்திற்கு வழங்கப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, திறைசேரியில் இருந்து காணாமல் போன விவகாரம் நாடளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மற்றுமொரு பாரிய நிதி மோசடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க தபால் சேவைக்கு வழங்கப்பட வேண்டிய 625,000 அமெரிக்க டொலர் நிதி காணாமல் போயுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

இலங்கை தபால் திணைக்களத்தினால் அமெரிக்க தபால் சேவைக்கு செலுத்துவதற்காக விடுவிக்கப்பட்ட 625,000 டொலர் நிதி, உரிய தரப்பைச் சென்றடையவில்லை. தங்களுக்குரிய பணம் கிடைக்கப்பெறவில்லை என அமெரிக்க தபால் சேவை விடுத்த முறைப்பாட்டையடுத்தே இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.

இது தொடர்பில் தபால் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. குறித்த பணம் இரண்டு கட்டங்களாக விடுவிக்கப்பட்ட போதிலும், அவை எங்கே சென்றன என்பது குறித்து தீவிர தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது.

ஆஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய நிதியில் இடம்பெற்ற மோசடிக்கும், இந்தச் சம்பவத்திற்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

“நிறுவன ரீதியாக இவ்வாறான சம்பவங்கள் அறிக்கையிடப்படும் போது, அவை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அனைத்து விடயங்களும் அமைச்சரவையில் விவாதிக்கப்படுவதில்லை. எனினும், இந்த மோசடிகளில் தொடர்புடைய அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்படும்,” என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்தார்.

அரசின் முக்கிய திணைக்களங்களில் இருந்து தொடர்ச்சியாக இவ்வாறு நிதி காணாமல் போவது மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தபால் துறைக்கு 326 புதிய அதிகாரிகள் நியமனம்!

0

அரச சேவையில் ஆட்சேர்ப்புகளின் போது எவ்வித அரசியல் தலையீடுகளோ அல்லது அமைச்சர்களின் பெயர்ப்பட்டியலோ சமர்ப்பிக்கப்படமாட்டாது என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கைத் தபால் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் – III தர தபால் சேவை அதிகாரி பதவிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 326 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (28) முற்பகல் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தபால் திணைக்களத்தின் 600 வெற்றிடங்களுக்காக சுமார் 20,000 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில், தகுதிகளைப் பூர்த்தி செய்த 326 பேர் முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த அதிகாரிகள், மாகாண மட்டத்தில் உள்ள தபால் பயிற்சி நிறுவனங்களில் இரண்டு வார கால விசேட பயிற்சியினைப் பெற்ற பின்னர், அந்தந்த தபால் அலுவலகங்களில் பணிக்காக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றிய அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ;

தற்போதைய அரசாங்கம் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமனங்களை வழங்குகிறது. பகிரங்க விண்ணப்பம் கோரல், போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றன.

2025 மார்ச் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரச சேவையில் இணைந்தவர்களுக்கு நிலவிய ஓய்வூதிய நிச்சயமற்ற தன்மை நீக்கப்பட்டு, அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் அவர்களுக்கான ஓய்வூதிய உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பல வருடங்களாக PL (Primary Level) பிரிவின் கீழ் பணியாற்றி, பல்வேறு காரணங்களால் நிரந்தர நியமனம் கிடைக்காதிருந்த பத்தாயிரக்கணக்கான ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கான அமைச்சரவை யோசனை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் தபால் சேவையை நவீனமயமாக்குவதற்காக அரசாங்கம் பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதன்படி:

  • புதிய கட்டிடங்களுக்காக 600 மில்லியன் ரூபாயும், பழைய கட்டிடங்களைப் புனரமைக்க மேலதிகமாக 600 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்த 590 மில்லியன் ரூபாய் செலவில் 10 லொறிகள் மற்றும் 20 குரூ-கப் (Crew Cab) வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
  • திறன் அபிவிருத்திக்காக 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆண்டு தபால் திணைக்களம் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை நோக்கிப் பயணிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், புதிய அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, அமைச்சின் மேலதிக செயலாளர் தீபா லியனகே, தபால் மா அதிபர் ருவன் சத்குமார மற்றும் பிரதி தபால் மா அதிபர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பதவி விலகும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா!

0

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். 

இன்று (28) பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ஷம்மி சில்வா 2019 ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதுடன், அன்று முதல் இதுவரையான 7 ஆண்டு காலம் அப் பதவியில் நீடித்தார். 

கடந்த காலங்களில் அவருக்கும் கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தைப் பதவியிலிருந்து விலகுமாறு அரசாங்கத் தரப்பு அறிவுறுத்தியுள்ளதாக அண்மையில் ஊடகச் செய்திகள் வெளியாகியிருந்தன. 

தற்போது பெரும் பேசுபொருளாக உள்ள கிரிக்கெட் வீரர்களின் முகாமையாளர் ஒருவர் மற்றும் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்கள் சிலர் உள்ளிட்ட குழுவினர், அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரைச் சந்தித்து தற்போதைய கிரிக்கெட் நிர்வாகம் குறித்துப் முறைப்பாடு அளித்திருந்த பின்னணியில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

0

நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடங்களைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரர் சந்தியோகு அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட ரீதியில் பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

குறிப்பாக, உயர்தரப் பாடநெறிகளான உயிரியல் (Bio), கணிதம் (Maths), வர்த்தகம் (Commerce), கலை (Arts), பொறியியல் தொழில்நுட்பம் (E-Tech), உயிரியல் தொழில்நுட்பம் (B-Tech) உள்ளிட்ட ஆறு வெவ்வேறு துறைகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

சாதனை படைத்த இந்த மாணவர்களின் கல்வி முயற்சியினை ஊக்குவிக்கும் வகையில், மன்னார் மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஜனாப் ஹக் முஹம்மது அரூஸ் அவர்களினால் பணப்பரிசில்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்வி உயரதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சாதனையாளர்களை வாழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய் நோயாளிகளுக்கு மரண அடி: முடங்கியது PET ஸ்கேன்!

0

இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் புற்றுநோய் கண்டறியும் கருவிகள் மற்றும் சிகிச்சை இயந்திரங்கள் செயலிழந்துள்ளதால், ஆயிரக்கணக்கான நோயாளிகள் மரணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிகிச்சைகளுக்காக நீண்ட காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகள், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ‘லீனியர் ஆக்சிலரேட்டர்’ (Linear Accelerator) கதிரியக்க இயந்திரங்கள் முறையாக இயங்காததே இந்த நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகும். தற்போது பயன்பாட்டிலுள்ள ஐந்து இயந்திரங்களில் இரண்டு முழுமையாக செயலிழந்துள்ளன. இதனால், கதிரியக்க சிகிச்சை (Radiation Therapy) பெறுவதற்காக நோயாளிகள் பல மாதங்கள், சில சமயம் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவிசாவளையைச் சேர்ந்த நோயாளி ஒருவர் தனது கவலையை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்:

“நான் கதிரியக்க சிகிச்சைக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்கிறேன். நாட்கள் செல்லச் செல்ல எனது நிலைமை மோசமடைந்து வருகின்றது. வைத்தியசாலைக்கு எத்தனை முறை சென்றாலும், எப்போது சிகிச்சை தொடங்கும் என்பதற்கு முறையான பதில் இல்லை. இது எனது குடும்பத்தை மன ரீதியாகவும் நிதி ரீதியாகவும் கடுமையாக பாதித்துள்ளது.”

முடங்கியுள்ள PET ஸ்கேன் சேவைகள்

கடந்த மார்ச் 27 ஆம் திகதி முதல் அரச வைத்தியசாலைகளில் PET ஸ்கேன் பரிசோதனைகள் முற்றாக முடங்கியுள்ளன. மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் இந்தப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

PET ஸ்கேன் பரிசோதனைக்கு அவசியமான ‘புளோரோடியோக்ஸிகுளுக்கோஸ்’ (FDG) என்ற கதிரியக்க இரசாயனப் பொருள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும்.

இந்தியாவிலிருந்து இதனை இறக்குமதி செய்யும் நிறுவனம், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையில் (NMRA) தனது பதிவை இன்னும் புதுப்பிக்கவில்லை. மருந்து வகையின் கீழ் இதனை மீண்டும் பதிவு செய்யுமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பேரில் மார்ச் 27 அன்று விண்ணப்பித்தும், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

அரசு வைத்தியசாலைகளில் PET ஸ்கேன் செய்ய 4 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ள நிலையில், தனியார் வைத்தியசாலைகளில் இதற்கு 300,000 ரூபாவிற்கும் அதிகமாக செலவாகிறது. தற்போது நிலவும் இரசாயனத் தட்டுப்பாடு காரணமாக தனியார் துறையிலும் இந்தச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அவல நிலைக்கு மத்தியில், நீண்டகாலமாக இழுபறியில் இருந்த ஐந்து ‘லீனியர் ஆக்சிலரேட்டர்’ இயந்திரங்களைக் கொள்வனவு செய்யும் பணிகளை NMRA துரிதப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு இயந்திரங்கள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளன. எஞ்சிய இயந்திரங்கள் அநுராதபுரம், பதுளை, குருநாகல், அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் நிறுவப்படவுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், புற்றுநோயைக் கண்டறிவதிலும் சிகிச்சையின் முன்னேற்றத்தை அளவிடுவதிலும் PET ஸ்கேன் முக்கியமானது என்பதால், நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நீக்கி உயிர்களைக் காக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை சார்ந்தோர் வலியுறுத்துகின்றனர்.

‘Rebuilding SriLanka’ சட்டபூர்வமானதா? – ஹர்ஷ கேள்வி!

0

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “இலங்கையை கட்டியெழுப்புவோம்” ‘Rebuilding Sri Lanka’ நிதியம் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை எனவும், அதன் இருப்பு குறித்து பாரிய சந்தேகம் உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தமது ‘X’ பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இந்த நிதி “பாதுகாப்பாக” இருப்பதாகக் தெரிவித்துள்ள கருத்தானது முற்றிலும் தவறானது எனவும், அவ்வாறானதொரு நிதி இதுவரை சட்டப்பூர்வமாக நிறுவப்படவே இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டிருந்த இந்தக் கூற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளின்படி அத்தகைய நிதி நடைமுறையில் இருக்க வாய்ப்பில்லை என ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் கீழ், நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சட்டரீதியான நிதியங்களைத் தவிர ஏனைய பல நிதியங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில், இந்த ‘நிதியம்’ நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் முறையாக உருவாக்கப்படவில்லை என ஹர்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்த நிதியம் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

2026 ஏப்ரல் 24 ஆம் திகதிய நிலவரப்படி, சுமார் 9,583 மில்லியன் ரூபாய் இதில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இது பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், இந்த நிதி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்க அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணான பதில்களையே வழங்கி வருவதாக ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுவரை பாராளுமன்றத்தின் ஊடாக அத்தகைய நிதி நிறுவப்படாத நிலையில், “பாதுகாப்பாக இருக்கிறது” என்று கூறப்படும் நிதி எது? என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிதியம் தொடர்பாக அதிகாரிகள் “பணியாற்றிக் கொண்டிருப்பதாக” (working on it) கூறுவதிலிருந்தே, இது இன்னும் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது என அவர் தெரிவித்தார்.

இல்லாத ஒரு நிதியைப் பற்றிப் பேசுவதை விடுத்து, நாட்டின் நிதி நிலைமை குறித்த உண்மைகளை வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.