Home Blog Page 19

2026இல் இதுவரையில் வீதி விபத்துக்களில் இத்தனை பேர் பலியா?

நாம் தினமும் காலையில் வீட்டை விட்டுப் புறப்படும்போது, மாலையில் பாதுகாப்பாகத் திரும்புவோமா என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நாட்டின் வீதி விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நொடிப் பொழுதில் உயிர்களைப் பறிக்கும் இந்த வீதிப் போரின் அண்மைய திடுக்கிடும் தரவுகளை இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இன்று (13) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர, இந்த ஆண்டின் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்களைப் பகிரங்கப்படுத்தினார். அதன்படி, 2026ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும் நாட்டில் 1,605 கொடூர வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 1,693 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்!

இந்த உயிரிழப்புகளின் பின்னணியில் உள்ள புள்ளிவிவரங்களை ஆராயும்போது, வீதியில் பயணிக்கும் சாமானிய மனிதர்களே அதிகளவில் பலியாகியுள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 555 பாதசாரிகளும், 603 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் அடங்குகின்றனர். அத்துடன், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த 119 பேரும், 115 மிதிவண்டி ஓட்டுநர்களும், 136 சாரதிகளும் மற்றும் 162 பயணிகளும் இந்த வீதிப் பலிபீடத்தில் உயிரைத் துறந்துள்ளனர்.

உயிரிழப்புகளைத் தாண்டி, வீதிகளில் இடம்பெறும் சேதங்களும் விபத்துக்களின் தீவிரமும் மக்களை உரைய வைக்கும் வகையில் உள்ளன. இதுவரையிலான காலப்பகுதியில் 3,125 பாரிய விபத்துக்களும், 6,477 சிறு விபத்துக்களும் பதிவாகியுள்ளதுடன், வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதத்தை ஏற்படுத்திய 2,388 விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும், இந்தப் பேரழிவுகளுக்கு மத்தியில் ஒரு சிறிய ஆறுதல் செய்தியையும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார். அதாவது, கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இம்முறை வீதி விபத்துக்களின் எண்ணிக்கை சற்றே குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறாயினும், வீதியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு நபரும் அவதானத்துடன் செயற்பட்டால் மட்டுமே இந்த மரண ஓட்டத்திற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியும்!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குள்ளே இடம்பெற்ற பெரும் மோசடி!

இஸ்ரேலில் ஹோட்டல் துறையில் சுடச்சுட வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, இலட்சக்கணக்கில் பணத்தை சுருட்ட முயன்ற பேரதிர்ச்சி சம்பவம் ஒன்று கொழும்பு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக வளாகத்திலேயே அம்பலமாகியுள்ளது. அரச காரியாலயத்தின் உள்ளேயே வைத்து அதிகாரிகளைப் போல நடித்து மக்களை ஏமாற்றி வந்த இருவரையே பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

புத்தள மற்றும் பெலியத்த பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிர்ச்சி தரும் விடயம் என்னவென்றால், புத்தளையைச் சேர்ந்த சந்தேகநபர் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு முன்னாள் பொலிஸ் அதிகாரி என்பதாகும்! இவர்கள் இருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் வேலை தேடுபவர்களின் விபரங்களைச் சேகரித்து, அவர்களைத் தொடர்புகொண்டு இந்த மோசடி வலையை விரித்துள்ளனர்.

பாதிக்கப்படுபவர்களுக்குச் சந்தேகம் வராதிருக்க, அவர்களை நேரடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கே வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அரச அலுவலகத்தின் உள்ளேயே வைத்துப் பேசுவதால், மக்கள் இதனை முழுமையாக நம்பி ஏமாந்துள்ளனர். ஆனால், இந்த நாடகத்தின் பின்னணியில் பெண் ஒருவர் முழு மோசடியையும் இயக்கியுள்ளமை தற்போதைய விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வெளியுறவு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கு கிடைத்த அதிரடி இரகசியத் தகவலையடுத்தே புலனாய்வு அதிகாரிகள் களத்தில் இறங்கினர். பணியகத்தின் முதலாம் மாடியில் வைத்து சந்தேகநபர்களை சுற்றிவளைத்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்த 7 கடவுச்சீட்டுகள் (Passports) மற்றும் போலியான இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தப் பத்திரங்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். போலி ஏஜென்ட்களின் மாய வார்த்தைகளை நம்பி வெளிநாட்டு விசாக்களுக்காகப் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களுக்குக் காரசார எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி அநுர – சட்டத்தரணிகள் சங்கம் இடையில் அதிரடி சந்திப்பு!

basl

நாட்டின் நீதித்துறை கட்டமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை சட்டத்துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இச்சந்திப்பு, சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக மிகவும் சுமுகமாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் பிரதான புள்ளியாக, நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமைந்திருந்தது. இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் தனது சுவாரஷ்யமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்க, சட்டத்துறை மேம்பாட்டிற்காக அரசாங்கம் வகுத்துள்ள பிரமாண்ட திட்டங்களை ஜனாதிபதி வெளிப்படுத்தத் தொடங்கினார்.

சந்திப்பின் தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சட்டத்தரணிகள் சங்கத்தினால் அன்றைய தினம் காலையிலேயே ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தமையை நினைவு கூர்ந்தார். இவ்வாறான சந்திப்புகள் இடம்பெறும்போது, பேச்சுவார்த்தையின் சாராம்சத்தை முன்னதாகவே வெளிப்படுத்துவது இரு தரப்புக்கும் இடையிலான திறந்த கலந்துரையாடலுக்கு தடையாக அமையக்கூடும் என்ற தனது நிலைப்பாட்டையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நீதியை நிலைநாட்டுவது என்பது வெறும் நீதிமன்ற அறைகளுக்குள் மட்டும் முடிந்துவிடும் ஒன்றல்ல என்பதை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது விசாரணைகள் முதல் வழக்குத் தாக்கல் வரை உள்ளடங்கிய ஒருங்கிணைந்த கட்டமைப்பு என்றார். இதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், லஞ்ச ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனிதவளத்தை அதிரடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்திற்கு கொண்டு செல்லவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் பரவலாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நீதிமன்றங்களை மிகவும் இலகுவாக அணுகும் வகையில், மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் பௌதிக வசதிகளையும் மேம்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. “நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் முடிவு எந்தவொரு தனிப்பட்ட நபரையும் இலக்காகக் கொண்டதல்ல, மாறாக நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட தூரநோக்கு தீர்மானம்” என ஜனாதிபதி இதில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இந்த தொலைநோக்கு திட்டங்களுக்கு பதிலளித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிப்பது தொடர்பாக தமக்கு கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினர். அத்துடன், இத்தீர்மானம் குறித்து மேலும் ஆராய்ந்து ஒரு பொதுவான இணக்கப்பாட்டிற்கு வருவது சிறந்தது என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.

இந்த விவகாரத்தில் சட்டத்தரணிகள் மத்தியில் நிலவும் கருத்துக்கள் பெரும்பான்மையானதா அல்லது சிறுபான்மையானதா என்பது விவாதத்திற்குரியது எனச் சுட்டிக்காட்டிய அவர், எவ்வித முன்முடிவுகளும் இன்றி திறந்த மனதுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதே தற்போதைய தேவையாகும் என ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜே.எம். விஜேபண்டார மற்றும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இம்ரான் கான் சிறைக்குள் உயிரிழந்துவிட்டாரா?

உலக அரசியல் அரங்கில் மீண்டும் ஒரு மிகப்பெரிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் பிரபலமான தலைவருமான இம்ரான் கான் சிறைச்சாலையிலேயே உயிரிழந்திருக்கலாம் என்ற செய்தி சர்வதேச ஊடகங்களில் தீயாக பரவி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த அதிர்ச்சி அலையை கிளப்பிவிட்டவர் அமெரிக்காவில் வசித்து வரும் பாகிஸ்தான் மூத்த ஊடகவியலாளர் வஜாஹத் சயீத் கான் ஆவார். சிறையிலிருக்கும் இம்ரான் கானுக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வந்ததாகவும், இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து அவர் சிறைக்குள்ளேயே உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் அவர் வெளியிட்ட செய்தி ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் உலுக்கியது.

இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே மேற்கத்திய மற்றும் இந்திய ஊடகங்களில் இது முதன்மை செய்தியாக மாறி காட்டுத்தீ போல் பரவியது. உலகம் முழுவதும் உள்ள இம்ரான் கானின் ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பிற்கு உள்ளாகினர்.

நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த பாகிஸ்தான் இராணுவம் உடனடியாக களத்தில் இறங்கியது. நேற்றைய தினம் (12) அவசர அறிக்கையொன்றை வெளியிட்ட இராணுவம், இம்ரான் கான் தொடர்பான அனைத்து செய்திகளும் முற்றிலும் வதந்தியே என மறுத்துள்ளது.

ராவல்பிண்டியிலுள்ள அடியாலா (Adiala) சிறையில் இம்ரான் கான் முழு ஆரோக்கியத்துடன், நலமாக இருப்பதாக இராணுவம் உறுதியாக தெரிவித்துள்ளது. அதேநேரம், இம்ரான் கான் சிறையில் இருக்கும் சில புதிய வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி!

நாட்டின் அரசியல் களத்தில் பரபரப்பான செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் மீதான விசாரணை வளையம் தற்போது மேலும் இறுகியுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைமையகத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார். இந்த திடீர் வருகை அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவர் எதற்காக அழைக்கப்பட்டார் என்பது தொடர்பான பின்னணி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான விசாரணைகளுக்கு அமைவாகவே, வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதிகாரிகளின் தீவிர கேள்விகளுக்கு பதிலளித்து அவர் வாக்குமூலத்தை பதிவு செய்து வருவதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த விசாரணைகளின் முடிவில் ஆணைக்குழு எடுக்கப்போகும் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளது.

வென்னப்புவையில் சட்டவிரோத மணல் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!

ஜுட் சமந்த

சுற்றுச்சூழலை அழித்து, சட்டத்தின் கண்களில் மண்ணை தூவி இயங்கிவந்த சட்டவிரோத நிழல் உலக வியாபாரம் ஒன்றிற்கு வென்னப்புவை பொலிஸார் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

வென்னப்புவை – போலவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில், எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி மணல் அகழ்வு மற்றும் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த அவசரத் தகவலையடுத்து, கடந்த 12ஆம் திகதி மாலையில் இந்த அதிரடி வேட்டை முன்னெடுக்கப்பட்டது.

திடீரென சம்பவ இடத்திற்குள் நுழைந்த பொலிஸ் குழுவைக் கண்டு அங்கிருந்த ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த முற்றுகையின் போது, குறித்த சட்டவிரோத நிலையத்தை நடத்திச் சென்ற உல்ஹிட்டிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய உரிமையாளர் மற்றும் அங்கு பணிபுரிந்த இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட 4 பேக்கோ (JCB) இயந்திரங்கள் மற்றும் மணல் சுத்திகரிக்கும் அதிநவீன இயந்திர தொகுதிகளையும் பொலிஸார் கைப்பற்றினர். இருப்பினும், கைப்பற்றப்பட்ட கனரக இயந்திரங்களை உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்வதில் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டதால், அவை பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அதே இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற சாட்சியத்திற்காக அங்கிருந்த மணல் மற்றும் மண் மாதிரிகளை பொலிஸார் சேகரித்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். வென்னப்புவை பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் சதசிரி தலைமையிலான குழுவினரே இந்தச் வெற்றிகரமான சட்ட நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

கல்பிட்டியில் அதிர்ச்சி: 1,764 வலம்புரிச் சங்குகளுடன் பெண் கைது!

kalpitty

ஜுட் சமந்த

கடலோர கிராமத்தின் நள்ளிரவு அமைதியை கிழித்துக்கொண்டு புகுந்த பொலிஸ் குழு, அங்கு கண்ட காட்சி அதிகாரிகளையே உரைய வைத்தது. கல்பிட்டி – மண்டலக்குடாவ பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய பெண் ஒருவரின் வீட்டில் நீண்டநாட்களாக நடந்துவந்த இரகசிய நிழல் உலக வியாபாரம் ஒரே அடியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புத்தளம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாசவிற்கு கிடைத்த துல்லியமான இரகசியத் தகவலே இந்த விசேட வேட்டையின் திருப்புமுனையாக அமைந்தது. இதனையடுத்து, புத்தளம் பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பெர்னாண்டோ தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆகஸ்ட் 12ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் குறித்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

வீட்டின் அறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 பொலித்தீன் பைகளை பரிசோதித்தபோது, அதற்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 1,764 சட்டவிரோத கடல் சங்குகள் கண்டெடுக்கப்பட்டன. சுற்றாடல் அமைப்பிற்கும் கடல்வளத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்தச் சங்குகளை சேகரித்து, சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு கடத்துவதே இவர்களின் முதன்மை திட்டமாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெண் மற்றும் கைப்பற்றப்பட்ட பெரும் அளவிலான சங்குத் தொகுதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச கடத்தல் பின்னணியில் இயங்கும் ஏனைய நபர்களை வலைவீசித் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

kalpitti
valamburi
kalpitty

ஈரான் வைக்கும் நிபந்தனைகளும் டொனால்ட் ட்ரம்பின் அதிரடி எச்சரிக்கையும்!

ஹோர்முஸ் நீரிணையில் உருவான ‘எஃகு சுவர்’: உச்சக்கட்ட பதற்றத்தில் மத்திய கிழக்கு!

மத்திய கிழக்கில் யுத்தப் பதற்றம் புதியதொரு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலைத் தடுத்து, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை வழியிலான முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் மிகத் தீவிரமான சமரச முயற்சியில் இறங்கியுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் 60 நாள் புரிந்துணர்வு ஒப்பந்தக் காலக்கெடு முடிவடையவுள்ள சூழலில், அமைதிப் பேச்சுவார்த்தையை எவ்வாறாயினும் சாத்தியமாக்கிவிட வேண்டும் என்பதில் பாகிஸ்தான் அரசு முழு மூச்சாக இயங்கி வருகிறது.

இந்த இராஜதந்திர நகர்வுகளின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி உடனடியாக தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலின் புதிய செயலாளரான மேஜர் ஜெனரல் மொஹ்சன் ரெசாயியை மஷ்ஹத் நகரில் சந்தித்துப் பேசியுள்ளார். பிராந்தியப் பிரச்சினைகளில் பாகிஸ்தானின் பங்களிப்பை வரவேற்ற ஈரான் தரப்பு, முஸ்லிம் நாடுகளிடையே கூடுதல் ஒற்றுமை அவசியம் என வலியுறுத்தியதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான வலுவான ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால், கள நிலவரமோ வேறொரு திசையில் மிக ஆக்ரோஷமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஹோர்முஸ் நீரிணை முழுமையாக அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். தங்கள் கடற்படை அமைத்துள்ள தடையை “இரும்பு சுவர்” என வர்ணித்துள்ள அவர், இதனை யாராலும் அசைக்க முடியாது எனவும், ஈரான் இதில் எதுவும் செய்ய இயலாது எனவும் தனது Truth Social தளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த எச்சரிக்கை வெறும் வார்த்தையோடு நின்றுவிடவில்லை; அது கடலிலும் வெடித்துள்ளது. எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு ஈரானிய துறைமுகத்தை நோக்கிப் பயணிக்க முயன்ற பனாமா நாட்டுக் கொடி தாங்கிய சரக்குக் கப்பல் ஒன்றின் சுக்கான் பகுதி மீது அமெரிக்கப் படைகள் இரண்டு ‘ஹெல்ஃபயர்’ ஏவுகணைகளை வீசி அதைச் செயலிழக்கச் செய்துள்ளன.

மறுபுறம், எஞ்சியுள்ள மிகக் குறுகிய காலக்கெடுவுக்குள் ஒப்பந்த நீடிப்பு குறித்துப் பேசுவதை விட, தமது நிபந்தனைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தெஹ்ரான் தீவிரமாக உள்ளது. குறிப்பாக அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முடக்கம் உடனடியாக அகற்றப்பட வேண்டும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டு நாட்டின் எதிர்காலப் பாதுகாப்பிற்குத் தெளிவான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் ஆகிய விடயங்களை ஈரான் பிரதான நிபந்தனைகளாக முன்வைத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் ஒருபுறமிருக்க, பாலஸ்தீன விவகாரத்திலும் புதிய இராஜதந்திர உரையாடல்கள் ஆரம்பித்துள்ளன. ரமல்லாவிலுள்ள பாலஸ்தீன அதிகார சபையின் வெளிவிவகார அமைச்சர் வார்சன் அகாபெக்கியன் ஷாஹின், பிரித்தானியாவின் புதிய மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான அமைச்சர் ஸ்டீபன் டௌட்டியுடன் தொலைபேசி வழி கலந்துரையாடலை மேற்கொண்டார்.

காஸாவில் நிலவும் பாரிய மனிதாபிமானப் பேரழிவு மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் புனிதத் தலங்கள் மீதும் பொதுமக்கள் மீதும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் முன்னெடுக்கப்படும் தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்து இதன்போது விரிவாகப் பேசப்பட்டது. அனைத்து நிலைகளிலும் பாலஸ்தீன அரசுக்குத் தமது முழுமையான ஆதரவு தொடரும் என்பதைப் பிரித்தானியா இதன்போது மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் அடுத்தடுத்து அரங்கேறும் இத்தகைய அதிரடி மாற்றங்கள், முழு உலக நாடுகளினதும் கவனத்தை அங்கு திருப்பியுள்ளது.

வவுனியா மேயர் தொடர்பில் ஆளுநரின் உத்தரவுக்கு நீதிமன்றம் போட்ட முட்டுக்கட்டை!

வவுனியா மாநகர சபை முதல்வர் காண்டீபனை அப்பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதற்கு வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை வவுனியா மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது.

மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய, சபை நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து ஜூன் மாதம் ஆளுநரால் இந்த அதிரடி நீக்க வர்த்தமானி வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து முதல்வர் காண்டீபன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த முக்கிய கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த காண்டீபன் தரப்பு வழக்கறிஞரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்தே அன்றைய முழுநேர விசாரணைகளும் அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டார். இதற்கு முன்னதாக பிரதிவாதிகள் தரப்பால் தடையை நீக்கக் கோரி ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்குரிய பதில் மனு காண்டீபனின் சட்டக் குழுவினால் முந்தைய நாளே தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கருத்திற்கொண்ட நீதிமன்றம், தமது இறுதி வாதங்களை ஆகஸ்ட் 28 ஆம் திகதிக்குள் எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளதுடன், இடைக்காலத் தடை தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது. அதுவரை ஆளுநரின் பதவி நீக்க வர்த்தமானி இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன், புதிய முதல்வரை நியமிக்கவோ அல்லது தேர்தல் நடத்தவோ விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்து அமுலில் இருக்கும்.

இந்த இடைக்கால உத்தரவு தொடர்பான முடிவு எட்டப்பட்ட பின்னரே பிரதான வழக்கின் முழுமையான விசாரணை ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஓர் அதிகாரியான வட மாகாண ஆளுநர், மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை வர்த்தமானி மூலம் பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் வடகிழக்கு அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. சாவகச்சேரி ஹர்த்தால் உட்பட பல தொடர் போராட்டங்கள் வெடித்த பின்னணியில், “மக்களால் தெரிவு செய்யப்படாத ஆளுநர்கள் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை மாற்றியமைக்க முடியாது” எனத் தமிழ் அரசியல் தரப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

குறிப்பாக, கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்து, தேர்தல்களும் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் ஒரேயொரு தேர்தல் ரீதியான பிரதிநிதித்துவமாக விளங்கும் உள்ளூராட்சி மன்றங்களையே குறிவைத்து இத்தகைய அதிகாரப் பிரயோகங்கள் முன்னெடுக்கப்படுவது பலத்த சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக நியமனத்தில் பகீர் முறைகேடு!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கைகள் துறையில் இடம்பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் நியமன நடைமுறைகளில் பாரிய முறைகேடுகள், சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் பக்கச்சார்பு நிலவியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், தகுதியான விண்ணப்பதாரிக்கு அப்பதவியை உடனடியாக வழங்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கைகள் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக (நிலை II) கடமையாற்றும் கலாநிதி இரோமி நிசங்சலா மாணிக்கே ஆரியரத்ன என்பவரால் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் தெரிவு நடைமுறையை எதிர்த்துத் தொடரப்பட்ட இந்த வழக்கை நீதிபதிகளான ஆர். குருசிங்க மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட அமர்வு தீவிரமாக விசாரித்தது.

விசாரணையின் போது, சிரேஷ்ட விரிவுரையாளர் நிலை I பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு தகுதியான விண்ணப்பதாரி கலாநிதி ஆரியரத்ன மட்டுமே என்பது வெளிச்சத்திற்கு வந்தது. பௌத்த கற்கைகளில் முதலாம் வகுப்பு சிறப்புப் பட்டம், முதுகலைத் தகுதி மற்றும் 12 ஆண்டுகளுக்கும் மேலான உயர் கல்விசார் அனுபவத்தைக் கொண்டிருந்த போதிலும், அவருக்கு நியமனம் மறுக்கப்பட்டிருந்தது நீதிமன்றத்தை வியப்பில் ஆழ்த்தியது.

தெரிவு நடைமுறைகளை முழுமையாக ஆராய்ந்த நீதிமன்ற அமர்வு, முழு விவகாரமும் நடைமுறை அநீதி, பக்கச்சார்பு மற்றும் தீய நோக்கங்களால் கறைபடிந்துள்ளதால் இதில் நீதித்துறை தலையிடுவது தவிர்க்க முடியாதது எனத் தீர்ப்பளித்தது. இதனடிப்படையில், கலாநிதி ஆரியரத்னவுக்கு சிரேஷ்ட விரிவுரையாளர் (நிலை I) பதவியை வழங்காத தீர்மானத்தை ‘செர்டியோராரி’ (Certiorari) மற்றும் ‘மண்டமஸ்’ (Mandamus) பேராணைகள் மூலம் நீதிமன்றம் இரத்து செய்தது.

அத்துடன், அவர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த 2022 செப்டம்பர் 22 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த சிரேஷ்ட விரிவுரையாளர் நிலை I பதவியை அவருக்கு வழங்குமாறு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்றம் கட்டளையிட்டது.

அதேவேளை, முறைகேடான தெரிவின் அடிப்படையில் 33ஆம் பிரதிவாதிக்கு வழங்கப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் நிலை II நியமனத்தை முற்றாக ரத்து செய்த நீதிமன்றம், 32ஆம் பிரதிவாதியான வணக்கத்திற்குரிய கலாநிதி திவுலபெல்லெஸ்ஸே விமலானந்த தேரரின் நியமனத்தை ஏற்றுக்கொண்டு, அதனையும் 2022 செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முன்தேதியிட்டு வழங்குமாறு பணித்தது.

மனுதாரர் கலாநிதி ஆரியரத்ன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவுடன் சட்டத்தரணி ரன்மலீ மீபாகல முன்னிலையாகியிருந்தார்.