Tuesday, June 9, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 16

நிதி மோசடியில் ஈடு ஈடுபட்ட 120 வெளிநாட்டவர்கள் கைது!

0

ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் உள்ள இடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சுமார் 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரிவினரிடையே சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து ஏராளமான கணினிகள் மற்றும் கைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மெத வெலிக்கடை வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பல மாடிகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, இவர்கள் இந்த மோசடி நடவடிக்கையை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது நடவடிக்கையின் போது இவர்களில் ஒரு குழுவினர் தப்பியோடியுள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்காக வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கணினி குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 36 வெளிநாட்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 37 பேர் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், நேற்று சனிக்கிழமை (02) மாலை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மற்றும் தலங்கம பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்!

0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2026 மே 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவித்துள்ளது.

புதிய எரிபொருள் விலையின் அடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 410.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 470.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 392.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 458.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் புதிய விலை ரூ. 265.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 10 ரூபாயால் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி: நிஷாந்தவின் மரணம் தற்கொலையா? திட்டமிட்ட சதியா?

0

திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பினருக்குக் கைமாறிய சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்சவின் மரணம் குறித்து உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ‘தினன தகுன’ அமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக கோரியுள்ளார். 

இந்த நிதி மோசடி குறித்து நிதி அமைச்சின் செயலாளர் 4 மாதங்களாகத் தகவல்களை மறைத்திருப்பது கடுமையான சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, இது குறித்து ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரிடம் உளவியல் ரீதியான மரணப் பரிசோதனையை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாக ஷிரால் லக்திலக இதன்போது தெரிவித்துள்ளார். 

நிதியமைச்சின் அதிகாரியின் மரணம் ஒரு தற்கொலை என சட்ட வைத்திய அதிகாரிகள் குழு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இலங்கையில் தற்கொலைகள் மற்றும் மரணங்கள் தொடர்பான வைத்திய அறிக்கைகள் குறித்த ஒரு மோசமான வரலாறு இருப்பதை நாம் அறிவோம். 

தாஜுதீனின் மரணம் தொடர்பிலும் இவ்வாறான உத்தியோகபூர்வ அறிக்கைகள் வந்தன, ஆனால் அவை சரியானவை அல்ல என்பது பின்னரே தெரியவந்தது. 

எனவே, இந்த மரணப் பரிசோதனை அறிக்கை நல்லது, ஆனால் மருத்துவ அறிவியலில் இதற்கு அடுத்த கட்டமாக உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை ஒன்று உள்ளது. அதனை முன்னெடுக்குமாறே நாம் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரிடம் கோருகிறோம். 

உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை என்பது மூன்று விடயங்களை ஆராயும். தற்கொலைக்கான காரணம் என்ன? அவரது மனநிலை எவ்வாறு இருந்தது? அந்த மரணம் எவ்வாறு சம்பவித்தது? மரணத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்களை ஆராய வேண்டும். 

ஹர்ஷ டி சில்வா கூறுவது போல் இது ஒரு திருட்டு. நிதிச் செயலாளர் 4 மாதங்களாக இதனை மறைத்ததில் எமக்கு சந்தேகம் உள்ளது. 

உயிரிழந்த அதிகாரியின் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு செயல்பாடு இதன் பின்னணியில் இருந்திருக்கலாம். 

இது எனது தவறு அல்ல என்ற அடிப்படையிலேயே இந்தத் தற்கொலை நடந்திருக்க வேண்டும் என நாம் கருதுகிறோம். 

ஒன்பது தடவைகள் இது தவறுதலாக நடக்கவில்லை என்றால், அதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அவருக்கு அந்தச் சூழலை உருவாக்கியது யார்? என்பது தொடர்பில் வௌிப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது; ஒன்றிணைந்து பயணிப்போம்!

0

தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் ஊழல்களைக் கடுமையாகச் சாடியுள்ள நாட்டின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் ஒன்றிணைந்த பயணத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் மக்கள் வழங்கிய ஆணையைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக ரணில் விக்கிரமசிங்க தனது மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, திறைசேரியில் இருந்து 25 இலட்சம் அமெரிக்க டொலர்கள் முறைகேடாகக் கையாளப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மக்களுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்றும், வாழ்க்கைச் செலவு விண்ணைத் தொட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் குரல் ஒடுக்கப்படுவதாகவும், ஜனநாயக விழுமியங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் நாடாளுமன்றக் குழுக்களுக்கு சமூகமளிக்க மறுத்தமை மற்றும் மக்களின் எதிர்ப்பின் பின்னரே அவர் இணங்கியமை போன்ற விடயங்கள் ஜனநாயகப் பின்னடைவைக் காட்டுவதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், அரசாங்கம் பௌத்த மத உரிமைகளை மீறி வருவதாகவும், கத்தோலிக்கப் பாடசாலைகள் விவகாரத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் கவலையளிப்பதாகவும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

1977 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கைத்தொழில், சுற்றுலா மற்றும் கட்டுமானத் துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இவ்வருடம் வெசாக் பண்டிகை மற்றும் மே தினம் ஒரே காலப்பகுதியில் வருவதைக் குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, சமய வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து மே தின நிகழ்வுகளை மாற்றியமைத்த கடந்த கால முன்னுதாரணங்களை நினைவூட்டியுள்ளார். 2018 ஆம் ஆண்டு வெசாக் வாரத்தை முன்னிட்டு மே தின ஊர்வலங்கள் மே 7 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், இம்முறை மே 1 ஆம் திகதியே பேரணிகளை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள முடிவை அவர் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பயணிப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று அந்தப் பேரணியில் கலந்துகொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில், “பாவ் மடுவத் ஹோரா” (Pavu Maduwat Hora) போன்ற வாசகங்களை கிராம மட்டத்திற்குக் கொண்டு செல்வது சிறந்தது என அவர் யோசனை தெரிவித்துள்ளதோடு, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

சிலாபம் கடற்பரப்பில் 2000 கிலோ பீடி இலைகளுடன் 10 பேர் கைது!

0

இலங்கை கடற்படையினர் சிலாபம் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 2000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடத்த முயன்ற ஒரு இந்தியப் படகு மற்றும் மூன்று இலங்கை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது நான்கு இந்தியர்கள் உட்பட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2026 ஏப்ரல் 28 அன்று, சிலாபம் கடற்பரப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்று, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நான்கு படகுகளை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தியது.

இதன்போது, கடலில் வைத்து இந்திய மீன்பிடிப் படகிலிருந்து மூன்று உள்ளூர் டிங்கி படகுகளுக்கு பொதிகளை மாற்றிக் கொண்டிருந்தமை கண்டறியப்பட்டது. கடற்படையினர் நடத்திய தீவிர சோதனையில், அந்தப் படகுகளில் இருந்து 54 பெரிய பைகளில் அடைக்கப்பட்டிருந்த 2000 கிலோவுக்கும் அதிக எடையுள்ள பீடி இலைகள் மீட்கப்பட்டன.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்:

இந்திய மீன்பிடிப் படகில் இருந்த 18 முதல் 50 வயதுக்குட்பட்ட நான்கு (04) சந்தேக நபர்கள் மற்றும் கடத்தலுக்கு உதவியாகச் செயற்பட்ட கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 21 முதல் 42 வயதுக்குட்பட்ட ஆறு (06) சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இந்திய மீன்பிடிப் படகு, மூன்று உள்ளூர் டிங்கி படகுகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் கடல் எல்லை ஊடாக இடம்பெறும் இவ்வாறான சட்டவிரோதக் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படையினர் தொடர்ச்சியான கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் பலர் சிறைக்கு செல்வார்கள் – ஜனாதிபதி உறுதி!

0

இந்த வருடத்திற்குள் அதிகளவானவர்கள் சிறைக்கூடம் செல்வார்கள் என்பது உறுதி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தராதரமும் பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம். 1000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

வழக்கு விசாரணைகளுக்கு அமைய விரைவாக ஊழல்வாதிகளும் குற்றங்களில் ஈடுபட்டவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர். சிறைக்கு சென்றவண்ணமுள்ளனர். இதன் காரணமாகவே சில தரப்பினர் அஞ்சுகின்றனர்.

அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான மக்கள் ஆணையை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். அந்த ஆணையை நிறைவேற்றுவதற்காகவே நாம் செயற்படுகின்றோம்.

மக்களும், அரசாங்கமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கும் அரசாங்கமாக இது அமைந்துள்ளதால், மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தமது சேவை அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!

0

இலங்கையின் பல மாவட்டங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது.

பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள் மேலும், தென் மாகாணத்தின் கரையோரப் பகுதிகள் மற்றும் களுத்துறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாலை வேளையில் பயணங்களை மேற்கொள்பவர்கள் மற்றும் மலையகப் பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள், அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் அதிக பனிமூட்டம் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய அபாயமும் காணப்படுவதால், பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு நேற்று இரவு ஜித்தா பயணம்!

0

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட முதலாவது குழு நேற்று (01) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. 

இதனையொட்டி கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் விசேட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி மற்றும் இலங்கை ஹஜ் குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

சவூதியா ஏர்லைன்ஸ் விசேட விமானம் ஒன்றில் இந்த முதலாவது ஹஜ் குழு பயணம் மேற்கொண்டுள்ளது.

எஸ்.வி.- 839 (SV-839) இலக்கத்தைக் கொண்ட அந்த விமானம் நேற்று (01) இரவு 09.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜித்தாவிற்குப் புறப்பட்டது. 

2026 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக இலங்கை முஸ்லிம் சமூகத்திலிருந்து 3,500 பேர் இம்முறை ஹஜ் யாத்திரை செல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் சவூதியா ஏர்லைன்ஸ் தவிர, கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் மூலமாகவும் சவூதி அரேபியாவின் மக்காவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அநுரவின் உணர்வுப்பூர்வமான மே தினச் செய்தி

0

உலகளாவிய ரீதியில் நிலவும் போர்ச் சூழல்கள் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இலங்கை ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில் இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில், நாட்டின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் மற்றும் உழைக்கும் மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நலன்புரித் திட்டங்கள் குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ரீதியில் அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, மத்திய கிழக்கு போர்ச் சூழல் மற்றும் உள்நாட்டில் ‘டித்வா’ சூறாவளி போன்ற பாரிய சவால்கள் ஏற்பட்ட போதிலும், இலங்கையின் தனித்துவமான அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அவர் தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய பொருளாதார மைல்கற்கள்:

  • குறைந்த பற்றாக்குறை: 1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதிவான மிகக்குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 2025 இல் பதிவாகியுள்ளது.
  • அதிகூடிய வருமானம்: 2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் அதிகூடிய அரச வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
  • ஏற்றுமதி சாதனை: பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி வருமானம் 17 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது.
  • நிதி மேலாண்மை: முதன்மைக் கணக்கில் மேலதிக இருப்பைப் பேணியதுடன், வரலாற்றில் முதல்முறையாக அரச வருமான இலக்குகளை விஞ்சிய ஆண்டாக இது பதிவாகியுள்ளது.
உழைக்கும் மக்களுக்கான சலுகைகள்

தொழிலாளர்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் அரசாங்கம் பல காத்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். குறிப்பாக:

  • அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிப்பு.
  • 2016 இற்குப் பின் பணியில் இணைந்த அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய உரிமை மீள வழங்கப்பட்டமை.
  • பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை.
  • மாணவர்களின் ‘மஹபொல’ புலமைப்பரிசில் கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு.

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு வரலாற்றில் இதுவரை வழங்கப்படாத அதிகூடிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ‘Rebuilding Sri Lanka’ திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“மக்களின் கண்ணீருக்குப் பதிலாகப் பாதுகாப்பான பொருளாதாரத்தையும், பிள்ளைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்குவதே எமது நோக்கம்” என அவர் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டை நவீனமயப்படுத்தும் நோக்கில் கல்விச் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம், ‘Clean Sri Lanka’ மற்றும் ‘சமூக சக்தி’ போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், “வளமான நாடு – அழகான வாழ்க்கை” எனும் இலக்கை அடைய உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு தோல்வியுறாத பயணத்திற்காகத் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம் என்ற உறுதிமொழியுடன், நாட்டின் அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களுக்கும் ஜனாதிபதி தனது மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இன்று சர்வதேச உழைப்பாளர் தினமாகும்!

0

இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல. 

19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து கிடைத்ததே இந்த சர்வதேச மே தினமாகும். 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் வளர்ச்சி, 18ம் நூற்றாண்டில் துரிதமானது. 

வளர்ச்சியடைந்த நாடுகளில் 24 மணிநேரத்தில் 12 முதல் 18 மணித்தியாலங்கள் வரை வேலை செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். 

1886 ஆம் ஆண்டு மே மாதத்தில் சிகாகோவின் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் 8 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்வைத்து நடந்த போராட்டத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடுதான் மே தினத்தின் வித்தாக அமைந்தது. 

இந்த அலை உலகெங்கும் பரவி, 1889-ல் பெரிஸில் நடந்த சர்வதேச சோசலிச மாநாட்டில் மே 1-ஆம் திகதி தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 

உலக வரலாற்றோடு பின்னிப் பிணைந்த இந்த மே தினத்திற்கு இலங்கையில் ஒரு நீண்ட மற்றும் உணர்ச்சிகரமான வரலாறு உண்டு. 

இலங்கையின் மே தின வரலாற்றில் ஏ.ஈ. குணசிங்கவின் பங்கு மிக முக்கியம் இடம் வகிக்கின்றது. 

இலங்கை தொழிற்சங்க இயக்கத்தின் தந்தை என அறியப்படும் இவர், 1927-ஆம் ஆண்டில் இலங்கையில் முதன்முதலாக மே தினத்தைக் கொண்டாடினார். 

1933-ல் ஏ.ஈ. குணசிங்கவின் தலைமையில் கொழும்பு பிரைஸ் பூங்காவிலிருந்து காலி முகத்திடல் வரை ஒரு பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற தொழிலாளர்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, வாத்தியங்கள் முழங்க நடனங்களுடன் அணிவகுத்துச் சென்றனர். 

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த முதல் பேரணியில் அரசியல் முழக்கங்கள் எதுவும் எழுப்பப்படவில்லை. 

அது முழுக்க முழுக்க உழைப்பின் கொண்டாட்டமாகவே இருந்தது. 

1935-ல் லங்கா சமசமாஜக் கட்சி உருவான பிறகு, மே தினம் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்தது. 1956-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மே 1-ஆம் திகதியை அரச விடுமுறை தினமாக அறிவித்தார். 

இது தொழிலாளர் உரிமைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். 1960-களில் கொழும்பு வீதிகள் இடதுசாரி கட்சிகளின் சிவப்பு நிறக் கொடிகளால் நிறைந்திருந்தன, இது ‘சிவப்பு மே தினம்’ என்று அழைக்கப்பட்டது. 

1993 மே 1. கொழும்பு ஆமர் வீதி சந்தியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணியில், அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டது இலங்கையின் மே தின வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கறுப்பு நாளாக அமைந்தது. 

ஒரு நாட்டின் தலைவரே மே தின ஊர்வலத்தில் கொல்லப்பட்டமை உலக மே தின வரலாற்றிலேயே ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வாகும். ​

தோட்டத் தொழிலாளர்கள் முதல் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வரை இன்றும் இலங்கையின் பொருளாதாரத் தூண்களாகத் திகழும் உழைப்பாளர்களுக்கு இந்த நாள் ஒரு கௌரவமாகும். 

இந்த நாளானது உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையையும், மனித மாண்பையும் பறைசாற்றும் ஒரு வரலாற்றுச் சாசனமாகும். 

முதலாளித்துவ வர்க்கத்தின் அடக்குமுறைகளை அடக்குவதற்கு உழைப்பாளர்கள் அன்று வீதியில் இறங்கினார்கள். உயிர்த் தியாகமும் செய்தார்கள் அவர்களை நினைவுகூறும் அதேவேளை அவர்கள் வென்றெடுத்த உரிமைகளை தொடர்ந்தும் பாதுகாத்து முன்னொக்கி செல்ல வேண்டும் என்பதே இந்த நாள் உணர்த்தும் முக்கிய செய்தியாக அமைந்துள்ளது. 

2026 ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருளாக ஆரோக்கியமான உளவியல் சமூகப் பணிச்சூழழை உறுதி செய்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது மன அழுத்தம் மற்றும் பணிச்சுமை போன்ற நவீன பணிச்சூழல் சார்ந்த சிக்கல்களை கையாள்வதில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது. 

இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் அத தெரண சார்பில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.