Thursday, July 30, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 16

வனாத்தவில்லு தோட்டத்தில் கொழுந்துவிட்டு எரிந்த போதைப்பொருட்கள்!

0

ஜூட் சமந்த

மினுவாங்கொடை மற்றும் நீர்கொழும்பு பிராந்தியங்களை அதிரவைத்த பெரும்போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பல கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் தொகையொன்று புத்தளம் – வனாத்தவில்லுவ, லக்டோ வத்தையில் அமைந்துள்ள பிரத்தியேக தகன உலை வளாகத்தில் வைத்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

  • நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.
  • புத்தளம் – வனாத்தவில்லுவ, லக்டோ வத்தையில் அமைந்துள்ள பிரத்தியேக தகன உலை வளாகத்தில் வைத்து இவை ஜூன் 27ஆம் திகதி எரியூட்டப்பட்டன.
  • அழிக்கப்பட்டவற்றுள் 14 கிலோவிற்கும் அதிக “ஐஸ்” (Ice) போதைப்பொருளும், 39 கிலோவிற்கும் அதிக “குஷ்” (Kush) கஞ்சா வகைகளும் முதன்மை பெறுகின்றன.

நீர்கொழும்பு நீதிமன்ற பாதுகாப்பறையில் பல வருடங்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த அந்த அபாயகரமான போதைப்பொருள் பொதிகள், நேற்று ஜூன் 27ஆம் திகதி காலை பலத்த ஆயுதமேந்திய பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வெளியில் எடுக்கப்பட்டன. கொழும்பையும் நீர்கொழும்பையும் உலுக்கிய பிரதான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டு, வழக்கு விசாரணைகள் முற்றாக நிறைவடைந்த பொருட்களே இவ்வாறு புத்தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.

நீர்கொழும்பிலிருந்து புத்தளம் – வனாத்தவில்லுவ “லக்டோ வத்தை” பகுதியில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள உயர் வெப்பநிலை தகன உலை வளாகத்திள் வைத்து இந்த நச்சுப் பொருட்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன.

சாம்பலான போதைப்பொருள் பட்டியல்: மலைக்க வைக்கும் எடைகள்!

நீதிமன்றத்தின் முன்னிலையில் ஒவ்வொன்றாக எடையிடப்பட்டு, உத்தியோகபூர்வமாக எரியூட்டப்பட்ட போதைப்பொருட்களின் விபரம் இதோ:

போதைப்பொருள் வகைஅழிக்கப்பட்ட அளவு
ஐஸ் (Ice – Methamphetamine)14 கிலோ கிராம் 97 கிராம்
குஷ் (Kush – வீரியம் கூடிய கஞ்சா)39 கிலோ கிராம் 710 கிராம்
ஹெரோயின் (Heroin)01 கிலோ கிராம் 02 கிராம்
கஞ்சா மற்றும் ஹாஷிஷ் (Hashish)04 கிலோ கிராம் 139 கிராம்
மண்டி (Mandi)01 கிலோ கிராம் 200 கிராம்
கொகெய்ன் (Cocaine)02 கிலோ கிராம் 30 கிராம்
போதை மாத்திரைகள் (Narcotic Pills)26,262 மாத்திரைகள்
உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் விழுந்த முற்றுப்புள்ளி

இந்த முழுமையான அழிப்பு நடவடிக்கையானது சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படுவதற்காக, நீர்கொழும்பு பிரதான நீதவான் திலினி பெரேரா நேரடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து கண்காணித்தார். அவருடன் இணைந்து அரசாங்கத்தின் சிரேஷ்ட இரசாயன பகுப்பாய்வாளர், ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் உதவிப் பணிப்பாளர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் ஆகியோர் முன்னிலையிலேயே அனைத்துப் பொதிகளும் தகன உலையினுள் தள்ளப்பட்டு, சில நிமிடங்களில் சாம்பலாக்கப்பட்டன.

இலங்கையின் எதிர்காலச் சந்ததியைச் சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு, நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை ஒரு பலமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை.

பொசொன் தன்சல்களுக்கு அதிரடி உத்தரவு: மீறினால் சட்ட நடவடிக்கை!

0

ஜூட் சமந்த

இலங்கையில் பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தன்சல்கள் (அன்னதானங்கள்) தொடர்பில் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIs) மிக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கடந்த வெசாக் பண்டிகையை விடவும், இம்முறை பொசொன் காலத்தில் நாடளாவிய ரீதியில், குறிப்பாக வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பெருமளவிலான தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தும் டெங்கு: பிளாஸ்டிக்குக்கு தடை விழுமா?

“தற்போது நாம் மிகத் தீவிரமான டெங்கு பரவல் காலப்பகுதியில் இருக்கிறோம் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது” என எச்சரிக்கும் உபுல் ரோஹண, கடந்த வெசாக் தன்சல்களின் முடிவில் டன் கணக்கில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் சூழலில் கொட்டப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, கோப்பி மற்றும் குளிர்பான தன்சல்களில் பிளாஸ்டிக் கோப்பைகளின் பயன்பாடு சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் இம்முறை மக்காத பொருட்களை சூழலில் வீசுவதை முற்றாகத் தவிர்க்குமாறு ஏற்பாட்டாளர்களுக்கு விசேட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

களத்தில் 2000 PHI அதிகாரிகள்: தராதரம் பார்க்க மாட்டோம்!

பொசொன் தினத்திற்கு முன்னரே அனைத்து தன்சல் ஏற்பாட்டாளர்களுக்குமான ஆலோசனைகளும் ஆரம்பக் கட்டப் பரிசோதனைகளும் நிறைவடைந்துள்ளன. பொசொன் தினத்திலும் அதற்கு அடுத்த நாட்களிலும் 2,000 இற்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். இதன்போது, ஏற்பாட்டாளர்களின் பதவியோ அல்லது அந்தஸ்தோ பார்க்கப்பட மாட்டாது; மக்களின் சுகாதார பாதுகாப்பு மட்டுமே முதன்மையாகக் கருதப்படும் என சங்கம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

பக்தர்களுக்கு உணவு வழங்குவது புண்ணியமான காரியம் என்றாலும், அது சூழலையோ அல்லது மக்களின் ஆரோக்கியத்தையோ சீரழிப்பதாக அமையக் கூடாது. விதிகளை மீறி சுகாதார சீர்கேடுகளுடன் தன்சல்களை நடத்துவோருக்கு எதிராக எவ்வித தயக்கமும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கல்பிட்டியை அதிரவைத்த மாபெரும் படகுப் போட்டி 2026!

0

கல்பிட்டி: இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் சாகச விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்ற கல்பிட்டி மண், இன்று மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டுத் திருவிழாவிற்கு சாட்சியமாகியுள்ளது.

வன்னி முந்தல் கடல் அலைகளைக் கிழித்துக்கொண்டு, அதிவேகப் படகுகள் சீறிப்பாய்ந்த “WANNIMUNDAL SEA LIONS KALPITIYA BOAT RACE 2026” படகு ஓட்டப் போட்டி இன்று (27.06.2026) சனிக்கிழமை வன்னி முந்தல் கடற்பரப்பில் மிக வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

கரையோரம் எங்கும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில், கடல் அலைகளின் வேகமும், மனிதர்களின் வீரமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சிகள் பார்ப்போரைக் சிலிர்க்க வைத்தன.

எல்லைகளைக் கடந்த மோதல்!

வன்னி முந்தல் ‘ஸீ லயன்ஸ்’ (Wannimundal Sea Lions Sports Club) விளையாட்டுக் கழகத்தினர் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியானது, வெறும் உள்ளூர் போட்டியாக மட்டும் சுருங்கிவிடவில்லை.

கல்பிட்டியின் கடல் சவால்களை எதிர்கொள்வதற்காக சிலாபம், நீர்கொழும்பு மற்றும் மன்னார் ஆகிய கடல்சார் மாவட்டங்களிலிருந்து வருகை தந்திருந்த திறமைவாய்ந்த மாலுமிகளும், அதிவேகப் படகோட்டிகளும் களமிறங்கியிருந்தனர்.

இதனால் ஆரம்பம் முதலே போட்டியில் அசாத்திய விறுவிறுப்பும், அட்ரினலின் எகிறும் சாகசங்களும் நிறைந்திருந்தன.

களமிறங்கிய முக்கிய புள்ளிகள்: இலங்கையின் பாரம்பரிய மற்றும் நவீன படகோட்டுக் கலையை ஊக்குவிக்கும் நோக்கில் அமைந்த இந்நிகழ்விற்கு, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கல்பிட்டி அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ M.J.M. பைசல் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அவருடன் கல்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் சகோதரர் A.R.M. றிகாஸ் மற்றும் முன்னாள் தவிசாளர் சகோதரர் A.M. இன்பாஸ் ஆகியோரும் கலந்துகொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தியதோடு, வெற்றியாளர்களுக்கான கௌரவிப்புகளையும் வழங்கினர்.

சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்கும் கல்பிட்டி!

தற்போது இணையத்தில் இந்தப் படகுப் போட்டியின் வான்வழி (Drone) காணொளிகளும், அலைகளுக்கு நடுவே படகுகள் பறந்து செல்லும் அதிரடிப் புகைப்படங்களும் #KalpitiyaBoatRace2026 என்ற ஹேஷ்டேக்குடன் ட்ரெண்டாகி வருகின்றன.

சுற்றுலாப் பயணிகளையும், விளையாட்டுப் பிரியர்களையும் ஒரே புள்ளியில் இணைத்த இந்த வன்னி முந்தல் படகு ஓட்டப் போட்டி, கல்பிட்டி பிராந்தியத்தின் விளையாட்டுச் சுற்றுலாத்துறையை (Sports Tourism) அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தேசமே ஒன்றிணைவோம்’ ஆபரேஷனில் சிக்கிய 2 லட்சம்பேர்!

0

இலங்கையை உலுக்கிக் கொண்டிருக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் அட்டகாசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் மனிதாபிமான வேட்டை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

‘தேசமே ஒன்றிணைவோம்’ (The Nation Together) என்ற மகுட வாசகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய நடவடிக்கை, தற்பொழுது குற்றவாளிகளின் சிம்மசொப்பனமாக மாறியுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த அதிரடி ஆபரேஷன், நேற்று முன்தினம் (ஜூன் 25) வரை தங்குதடையின்றி தொடர்ந்துவரும் நிலையில், இக்காலப்பகுதிக்குள் மாத்திரம் முப்படையினரின் ஒத்துழைப்புடன் நாடு தழுவிய ரீதியில் 215,526 பிரம்மாண்ட சுற்றிவளைப்புத் தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திடுக்கிடும் திருப்பமாக, இந்த சுற்றிவளைப்புகளின் போது இதுவரை 214,333 சந்தேகநபர்கள் கூண்டோடு தூக்கப்பட்டு உள்ளார்கள்.

கைதானவர்களில் சாதாரண குற்றவாளிகள் மட்டுமன்றி, சர்வதேச போதைப்பொருள் வலைப்பின்னல்களுடன் தொடர்புடைய பெரும் புள்ளிகளும் அடங்குவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மிக முக்கியமாக, 3,112 பேருக்கு எதிராக தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவு (Detention Orders) பெறப்பட்டு, இரகசிய இடங்களில் வைத்து வலைப்பின்னல்கள் குறித்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக, குற்றவாளிகளின் முதுகெலும்பை உடைக்கும் வகையில், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 360 நபர்களின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், இந்த கொடிய போதைப் பயன்பாட்டினால் சீரழிந்து போன 2,188 போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிந்து, அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகப் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பும் மனிதாபிமான நடவடிக்கைகளும் இணையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த ஒட்டுமொத்த ஆபரேஷனின் அதிரவைக்கும் பின்னணி என்னவென்றால், பொலிஸார் கைப்பற்றியுள்ள போதைப்பொருட்களின் மலைக்கவைக்கும் அளவுகள் தான். நாட்டின் எதிர்காலத் தலைமுறையையே அழிக்கவிருந்த பின்வரும் போதைப்பொருட்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன:

ஹெரோயின்:1,963 கிலோகிராம் 863 கிராம் ஐஸ் (Meth):2,119 கிலோகிராம் 629 கிராம் கொக்கையின்:288 கிலோகிராம் 864 கிராம் கஞ்சா:5,817 கிலோகிராம் 714 கிராம் (மேலும் 12,899,201 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன)

குஷ் (Kush):479 கிலோகிராம் 246 கிராம் ஹாஷிஷ் (Hashish): 312 கிலோகிராம் 291 கிராம்.

இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மிக உக்கிரமான போராக இது பார்க்கப்படுகிறது. இந்த சுற்றிவளைப்புகள் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை எனவும், நாட்டின் மூலை முடுக்கெங்கும் உள்ள போதைப்பொருள் வலையமைப்புகள் வேரறுக்கப்படும் வரையில் ஆபரேஷன் தொடரும் எனவும் பொலிஸ் உயர்மட்ட வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

நீதித்துறைக்குள் கை வைக்கிறதா அரசாங்கம்? பொங்கி எழுந்த ரவூப் ஹக்கீம்!

0

அரசியலமைப்பு மீறல்கள் மற்றும் நீதித்துறைச் சுதந்திரம்: பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

பாராளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை(24) இடம்பெற்ற விவாதத்தின் போது, அரசாங்கம் சமர்ப்பித்துள்ள ‘தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம்’ மற்றும் நாட்டின் நீதித்துறை நியமனங்களில் நிலவும் சீர்கேட்டை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடுமையாக விமர்சித்தார். அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை மீறும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நீதித்துறையின் மூப்பு உரிமையை அலட்சியப்படுத்தும் விதம் குறித்து அவர் தெளிவான கருத்துக்களை முன்வைத்தார்.

‘தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம்’ அரசியலமைப்பின் 154-G பிரிவை அப்பட்டமாக மீறுவதாக ரவூப் ஹக்கீம் அங்கு சுட்டிக்காட்டினார். மாகாண சபைகள் இயங்காத தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, முறையான ஆலோசனைகளைத் தவிர்த்து, வலுக்கட்டாயமாக இந்தச் சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் எத்தனிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார். இது மாகாணங்களின் அதிகாரத்தை மத்திய மயப்படுத்தும் ஒரு திட்டமிட்ட முயற்சி என்றும், ‘திவி நெகும’ போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது கையாளப்பட்ட அதே ஜனநாயக விரோத முறையே இப்போதும் பின்பற்றப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சட்டமூலத்திற்குச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கம் முன்வைக்கும் வாதத்தை அவர் முற்றாக நிராகரித்தார். சட்டமா அதிபர் திணைக்களம் கூறுவது மட்டுமே இறுதி உண்மை என்று கருத முடியாது என்பதையும் அவர் வலியுறுத்தினார். நிதி பரிவர்த்தனை ஒழுங்குமுறைகள் மற்றும் நிதி மோசடி தடுப்புச் சட்டம் தொடர்பான விவாதங்களின் போது, மத்திய வங்கி ஆளுநர் தனது பொறுப்பிலிருந்து விலகியிருந்த சந்தர்ப்பத்தில், சட்டத்தின் பிரிவுகளின்படி அவர்கள் பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயம் இருப்பதை தான் சுட்டிக்காட்டியதாக அவர் நினைவுபடுத்தினார். அந்தச் சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளால் விளக்கம் அளிக்க முடியாமல் மௌனம் காத்தது, அவர்களது சட்ட ஆலோசனைகள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நீதித்துறை தொடர்பான விடயங்களில் அரசாங்கத்தின் தலையீடுகள் மிகவும் ஆபத்தானவை என எச்சரித்த ஹக்கீம், நீதிபதிகளின் நியமனங்களில் ‘மூப்பு நிலை’ (Seniority) திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் கவலை வெளியிட்டார். உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்துவது, நீதிபதிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே பார்க்கப்படுகிறது. மூத்த நீதிபதிகளை அமர்வுகளுக்கு நியமிக்கும் மரபு கைவிடப்பட்டுள்ளதாகவும், தகுதியான நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி கடமைப்பட்டிருந்தும் அதனைத் தவிர்ப்பது, நீதிபதிகளுக்கு ஒருவித அழுத்தத்தை-லஞ்சம் கொடுக்கும் செயலாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீதித்துறை நியமனங்களில் மூப்பு நிலையின் முக்கியத்துவம் பற்றி விளக்க, இந்திய உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளை ரவூப் ஹக்கீம் சிறந்ததோர் உதாரணமாக எடுத்துக் காட்டினார். இந்தியாவில் பதவி உயர்வு வழங்குவதில் அரசியல் தலையீடு இல்லை என்றும், மூப்பு நிலை மிகத் துல்லியமாகப் பின்பற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.

“தற்போதைய இந்திய தலைமை நீதியரசர் சூர்ய காந்த், 27ஆம் திகதி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்கிறார். அவரைத் தொடர்ந்து நீதியரசர் விக்ரம் நாத் பிப்ரவரி 27 முதல் செப்டம்பர் 27 வரை பதவியில் இருப்பார். அதன்பிறகு பெண் நீதியரசர் பி.வி. நாகர்த்ன தலைமை நீதியரசராக வருவார். அவர் 36 நாட்கள் மட்டுமே தலைமை நீதியரசராக இருப்பார். இவ்வளவு துல்லியமாக மூப்பு நிலைக்கு மதிப்பளிக்கும் ஜனநாயக முறை அங்கு உண்டு,” என்றார்.

இத்தகைய வெளிப்படைத்தன்மை கொண்ட நியமன முறையே ஜனநாயகத்தின் பலம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எத்தகைய சட்டமூலத்தையும் அல்லது அரசியலமைப்பு விதிகளுக்கு முரணான நடவடிக்கைகளையும் தமது கட்சி ஆதரிக்காது என்று மு.கா. தலைவர் ஹக்கீம் திட்டவட்டமாகத் தெரிவித்ததோடு, நாட்டின் நீதி நிர்வாகத்தில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் இத்தகைய முறைகேடான தலையீடுகள் எதிர்காலத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.

மேலும் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்களைக் கட்டிக் காக்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்திக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

(விருட்ச வேந்தன்)

ஹரக் கட்டா 120 மில்லியன் ‘டீல்’: அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்கள்!

0
  • பிரபல பாதாள உலகத் தலைவர் ‘ஹரக் கட்டா’வை தப்பவைக்க, முன்னாள் நீதி அமைச்சரின் மகன், சஜித்தின் உதவியாளர் உட்பட மூவர் அதிரடியாகக் கைது.
  • ஹரக் கட்டாவின் மனைவியிடம் துபாயில் வைத்து 500 மில்லியன் ரூபா கோரப்பட்டு, பின்னர் 120 மில்லியன் ரூபா முன்பணமாக கைமாறியுள்ள அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது.
  • கைது செய்யப்பட்ட விவிஐபிக்கள் ‘ஸ்லீப் அப்னியா’, இருதய நோய் போன்ற மருத்துவ காரணங்களை காட்டி பிணை கோரியபோதும் நீதிமன்றம் அதனை அதிரடியாக மறுத்துள்ளது.

கொழும்பு: இலங்கை அரசியல் மற்றும் பாதாள உலக வட்டாரங்களை ஒரே நேரத்தில் உலுக்கியுள்ள மெகா லஞ்ச ஊழல் விவகாரம் ஒன்று தற்போது கொழும்பில் அம்பலமாகியுள்ளது. பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனான நதுன் சிந்தக எனப்படும் ‘ஹரக் கட்டா’வை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பிடியிலிருந்து சொகுசாக மாற்றிக் கொடுப்பதற்காக, இலங்கையின் விவிஐபிக்கள் (VVIPs) சிலர் நடத்திய 120 மில்லியன் ரூபா ‘மெகா டீல்’ அம்பலமாகியதை அடுத்து, அவர்கள் தற்போது கம்பி எண்ணும் நிலை உருவாகியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைகளின்படி, இந்த ஆபத்தான விளையாட்டின் பின்னணியில் இருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். முன்னாள் நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நெருங்கிய உதவியாளரும் எஸ்.ஜே.பி (SJB) கட்சியின் ஹொரண தொகுதி அமைப்பாளருமான சரித் அபேசிங்க மற்றும் விமான நிலைய நிறுவனத்தின் (AASL) முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சதுரங்க ஆகிய மூவருமே லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) இவ்வாறு வளைக்கப்பட்டுள்ளனர்.

துபாயில் நடந்த ‘டீல்’ & பில்லியன் கணக்கான லஞ்சப் பின்னணி

இந்தத் திரைமறைவு நாடகம் 2023 ஆம் ஆண்டிலேயே துபாயில் அரங்கேறியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் சிஐடி காவலில் இருந்த ஹரக் கட்டாவை, அங்கிருந்து சாதாரண கைதியாக மாற்றுவதற்கும், அதிஉயர் பாதுகாப்புடைய பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து சாதாரண சிறைக்கு மாற்றி சொகுசு வசதிகளை செய்து தருவதற்கும், மேலும் பொலிஸாரால் அவர் சுட்டுக்கொல்லப்படுவதைத் தடுப்பதற்கும் இந்த விவிஐபிக்கள் டீல் செய்துள்ளனர்.

முதலில் ஹரக் கட்டாவின் மனைவி மிர்துஷிகா மதுவந்தியிடம் துபாயில் வைத்து 500 மில்லியன் ரூபா (50 கோடி) கோரப்பட்டுள்ளது. பின்னர், நீண்ட பேரம்பேசுதலுக்குப் பின் அது 200 மில்லியனாகக் குறைக்கப்பட்டு, முதற்கட்டமாக 120 மில்லியன் ரூபா (12 கோடி) முன்பணமாகப் பெறப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.

நீதிமன்றில் அரங்கேறிய ‘மருத்துவ’ நாடகம்!

கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கூண்டில் நின்ற விவிஐபிக்கள் தப்பிக்கப் போட்ட திட்டங்கள் நீதிமன்றையே அதிரவைத்தன. எப்படியாவது பிணையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களது ஜாம்பவான் சட்டத்தரணிகள் இங்கிலாந்து பாணி மருத்துவக் காரணங்களை அடுக்கத் தொடங்கினர்.

SJB அமைப்பாளர் சரித் அபேசிங்கவிற்கு ஏற்கனவே இதயத்தில் 3 ஸ்டெண்டுகள் (Stents) பொருத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 பொருத்த வேண்டியுள்ளதால் சிறையில் சிகிச்சை பெற முடியாது என வாதிடப்பட்டது. அதேநேரம், முன்னாள் அமைச்சரின் மகன் ரகித ராஜபக்ஷ, தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் ‘ஸ்லீப் அப்னியா’ (Sleep Apnea) என்ற தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மூத்த சட்டத்தரணி அனில் சில்வா வாதிட்டார். ஆனால், இந்த “விவிஐபி நோய்களை”க் கண்டு மசியாத லஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றத்தின் பாரதூரமான தன்மையைக் கூறி பிணையை கடுமையாக எதிர்த்தது. இறுதியில் நீதவான் பிணையை மறுத்து, ஜூலை 03 ஆம் திகதி வரை மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

திடீர் ட்விஸ்ட்: ஐஜிபியிடம் மாட்டிய துபாய் டீல்!

இந்த வழக்கின் ஆகப்பின்னணியில் உள்ள புதிய அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், வாங்கிய 120 மில்லியன் ரூபா முன்பணத்தை, இடையில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் மூலமாக ஹரக் கட்டாவின் மனைவிக்கே திருப்பித் கொடுக்க இந்த விவிஐபி டீலர்கள் முயன்றுள்ளனர்.

பணம் கைமாறியது மற்றும் மிரட்டல்கள் காரணமாக ஆத்திரமடைந்த ஹரக் கட்டாவின் மனைவி, நேரடியாகவே பொலிஸ் மா அதிபரிடம் (IGP) புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே சிஐடியும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் ரகசிய விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன. இதற்கிடையே, சிறையில் இருக்கும் ஹரக் கட்டாவிடமும் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். தன்னிடம் தடுத்து வைப்பு உத்தரவை நீக்க இவ்வாறு பெருந்தொகை பணம் கோரப்பட்டதை அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அரசியல் களத்தில் நிலநடுக்கம் – தப்புமா விவிஐபி தலைகள்?

மகன் கைதான செய்தி கேட்டு பதறியடித்த முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, உடனடியாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். மறுபுறம், தேர்தல் களம் சூடாக இருக்கும் நிலையில், இந்த ஊழல் கறை தங்கள் மீது படிந்துவிடக் கூடாது என்பதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தீவிரமாகச் செயற்பட்டுள்ளது. கைதான சில மணித்தியாலங்களிலேயே சரித் அபேசிங்கவை கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும், உறுப்பினர் தகுதியிலிருந்தும் நீக்குவதாக நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதேவேளை, “அரசியல் பின்னணி இருந்தால் தப்பித்துவிடலாம் என யாரும் நினைக்க வேண்டாம்” என தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் அதிரடி காட்டியுள்ளது. குற்றவாளிகள் எவ்வளவு பெரிய அரசியல் பின்புலம் கொண்டவர்களாக இருந்தாலும், சட்டம் தன் கடமையை பாரபட்சமின்றி செய்யும் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளன. ஜூலை 03 ஆம் திகதி லஞ்ச ஊழல் ஆணைக்குழு சமர்ப்பிக்கவுள்ள மேலதிக விசாரணை அறிக்கையில், மேலும் பல அரசியல் தலைகளின் பெயர்கள் சிக்கும் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளன.

போன் பண்ணா எடுக்க மாட்டாராம் ஜனாதிபதி! தயாசிறி போட்ட வெடி!

0
போன் பண்ணா எடுக்க மாட்டாராம் ஜனாதிபதி! நாடாளுமன்றத்தில் தயாசிறி போட்ட வெடி: ‘அவங்க அப்படி இல்லை’ என ஆதங்கம்!

இலங்கை அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாபிக் (Hot Topic) இதுதான். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஒன்று இணையவாசிகள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது.

ரிங் போய்க்கொண்டே இருக்கு… ஆனா எடுக்க மாட்டாங்க!

பொதுவாகவே அரசியல்வாதிகள் என்றாலே எப்போதும் போனும் கையுமாக, விசுவாசிகளுடனும் அதிகாரிகளுடனும் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்பதுதான் நம் எல்லோருடைய நினைப்பும். ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பாணி முற்றிலும் வேறாக இருக்கிறதாம். “அவருக்கு போன் பண்ணா எடுக்கவே மாட்டார்” என்று நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி எம்பி தயாசிறி ஜயசேகர நேரடியாகவே ஒரு போடைப் போட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் மக்கள் தேவைகள் குறித்து பேச அழைக்கும் போது, ஜனாதிபதி தரப்பில் இருந்து சரியான ரெஸ்பான்ஸ் (Response) கிடைப்பதில்லை என்பதுதான் இப்போதைய பிரதான குற்றச்சாட்டு.

‘அவங்க அப்படி இல்லைப்பா…’ – முன்னாள் தலைவர்களை இழுத்த தயாசிறி!

ஜனாதிபதி அநுரவின் இந்த அணுகுமுறையை விமர்சித்த தயாசிறி ஜயசேகர, முன்னாள் ஜனாதிபதிகளின் “போன் கலாச்சாரத்தை” நாடாளுமன்றத்தில் நினைவுபடுத்தி ஒப்பிட்டுப் பேசியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் எம்பீக்கள் எப்போது போன் பண்ணினாலும், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் மிஸ் பண்ணாமல் பேசுவார்கள் என்றும், ஒருவேளை எடுக்காவிட்டாலும் பிறகு ‘கோல் பேக்’ (Call back) பண்ணுவார்கள் என்றும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.

அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், மக்கள் பிரதிநிதிகளின் அழைப்புகளுக்கு மதிப்பளிப்பது முன்னைய தலைவர்களின் வழக்கமாக இருந்தது என்பதை அவர் இங்கே கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இது ‘புதிய அரசியல் கலாச்சாரமா’ அல்லது ‘தொடர்பாடல் இடைவெளியா’?

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, வீண் ஆடம்பரங்கள் அற்ற, பழைய அரசியல் மரபுகளை உடைக்கும் ஒரு “புதிய கலாச்சாரத்தை” பின்பற்றி வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், எம்பீக்களின் போன்களை அவர் தவிர்ப்பது, தேவையற்ற அரசியல் டீலிங்குகளை (Deals) தவிர்ப்பதற்கான ஒரு உத்தியா? அல்லது மக்கள் பிரதிநிதிகளை புறக்கணிக்கும் செயலா? என்ற விவாதம் தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.

நாட்டின் மிக முக்கியமான தலைவர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள முடியாமல் போனால், அது நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த போன் கால் விவகாரத்திற்கு ஜனாதிபதி தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்.. முதலமைச்சர் விஜய் பங்கேற்பு!

0

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார்.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் உறுதிமொழி ஏற்றார். ‘நான் போதைப்பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்’ போன்ற வாசகங்கள் அடங்கிய உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். ‘போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை தருவேன்’, ‘தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை வேரறுக்க துணை நிற்பேன்’ என முதல்வர் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை முதல்வர் விஜய் உள்ளிட்டோர் ஏற்றுக்கொண்டனர். முன்னதாக, நிகழ்ச்சி மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விழிப்புணர்வு வாசகம் எழுதி முதல்வர் விஜய் கையொப்பமிட்டார். போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய் விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கிவைத்து மக்களோடு மக்களாக முதல்வர் விஜய் பங்கேற்றுள்ளார்

இதேவேளை சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, “போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்” 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிநிறமை குறிப்பிடத்தக்கது.

நூற்றுக்குப் பின் ஓர் ஊற்று: வெள்ளி விழா காணும் மக்கொனை அஹதிய்யா!

0

களுத்துறை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்விப் பாரம்பரியத்தில் மற்றுமொரு மகுடம் சூடும் தருணம் கனிந்திருக்கிறது. “நூற்றுக்குப் பின் ஓர் ஊற்று” எனும் கம்பீரமான மகுட வாசகத்துடன், மக்கொனை அஹதிய்யா அறநெறிப் பாடசாலை தனது 25 வருட காலப் பயணத்தை நிறைவு செய்து, வரலாற்றுப் பதிவாக “வெள்ளி விழா” காணத் தயாராகிவிட்டது.

இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக மற்றும் அறநெறிக் கல்வியில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ள இப்பாடசாலையின் இந்த உத்தியோகபூர்வ வெள்ளி விழா நிகழ்வுகள், எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, மக்கொனை அல்ஹஸனியா மஹா வித்தியாலய பிரதான மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை மிகவும் பிரம்மாண்டமான முறையில் அரங்கேறவுள்ளது.

விருதுகளால் நனையப் போகும் சாதனையாளர்கள்!

ஒரு பாடசாலையின் இருப்புக்கு பின்னால் இருக்கும் உழைப்பைக் கௌரவிப்பதே இந்த விழாவின் பிரதான நோக்காக மாறியிருக்கிறது. அந்தவகையில், தற்போது அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வரும் 25 ஆசிரியர்கள் மற்றும் கடந்த 2024-2025 காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய 10 ஆசிரியர்கள் என மொத்தம் 35 ஆசிரியப் பெருந்தகைகள் இதன்போது விசேட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இவர்களுடன் தோளோடு தோள் நின்று உழைத்த அஹதிய்யா அபிவிருத்திச் சங்கத்தின் 15 உறுப்பினர்களுக்கும் விசேட விருதுகள் வழங்கப்படவுள்ளதோடு, பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்த 19 மாணவக் கண்மணிகளும் இதன்போது மேடையில் ஏறிப் பரிசில்களைத் தட்டிச் செல்லவுள்ளனர்.

விழா மேடையை அலங்கரிக்கும் முக்கிய பிரமுகர்கள்

மக்கோனை அஹதிய்யா பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் ஜ.எம்.எம் உவைஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், நாட்டின் மிக முக்கிய ஆன்மீக, கல்விப் பிரமுகர்கள் ஒன்றுகூடவுள்ளனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக பேருவளை ஜாமியா நளீமியாக் கலாபீட முதல்வர் அஷ்-ஷேக் ஏ.சீ. அகார் முஹம்மட் கலந்துகொள்ளவுள்ளதுடன், கௌரவ அதிதிகளாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் அர்கம் நூராமித் மற்றும் ஹாசிம் உமர் பவுண்டேசனின் தலைவர், கொடைவள்ளல் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோரும் சிறப்பிக்கவுள்ளனர்.

இவர்களுடன் விசேட அதிதிகளாக பிரதமரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ரிப்லான் ஹஸன், களுத்துறை வலயக் கல்விப் பணிப்பாளர், அகில இலங்கை அஹதிய்யா மத்திய சம்மேளனம் மற்றும் களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

வெளியாகிறது “ரிஹ்லத் அன் நூர்” நினைவு மலர்!

இந்த வெள்ளி விழாவின் வரலாற்று மைல்கல்லாக, மக்கொனை அஹதிய்யா அறநெறிப் பாடசாலையின் கால் நூற்றாண்டு காலப் பயணத்தையும், அதன் சாதனைகளையும் தாங்கி, “ரிஹ்லத் அன் நூர்” (ஒளியின் பயணம்) எனும் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா நினைவு மலர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

அறநெறிக் கல்வியூடாக ஒழுக்கமுள்ளதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப மக்கொனை மண்ணில் உதித்த இந்த “ஊற்று”, வெள்ளி விழாவைக் கடந்து இன்னும் பல்லாண்டு காலம் சமூகத்திற்கு ஒளியூட்ட ஊர் மக்கள், நலன்புரிவோர், பழைய மாணவர்கள் என அனைவரையும் இந்த வரலாற்று நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு மக்கொனை அஹதிய்யா பாடசலையின் செயலாளர் ஜிப்ரியா இப்றாஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

விமான நிலையத்தில் வசமாக மாட்டிய “மாட்டியா”

0

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் மலேசியாவில் தங்கியிருந்த போது அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதன் பின்னர், நேற்றிரவு (25) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

42 வயதான குறித்த சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தலும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து, ‘பஸ்பொட்டா’ எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரையும் அவருடன் இருந்த மற்றொருவரையும் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் அங்கு நின்றிருந்த மேலும் பலரைச் சுட்டுக் காயப்படுத்தியமை ஆகியவை இவர் மீதான பிரதான குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளது.